ரமணரின் கீதாசாரம் – 6

ரமண மகரிஷி ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4 | பகுதி 5

தேகம் வேறு, ஆன்மா வேறு என்று அறிவதையே பகுத்தறிவு என்றும், அதனைத் தொடர்ந்து எவரும் ஆற்ற வேண்டியவைகளையே புண்ணியச் செயல்கள் என்றும் முன்பு பார்த்தோம். அருச்சுனன் அவ்வாறு அல்லாது தன் முன் நிற்பவர்களை தேக அளவில் மட்டும் பார்ப்பதாலேயே குழப்பத்திற்கு உள்ளாகி நிற்கிறான் என்றும் நாம் அறிந்தோம். அதனால் பகவான் கிருஷ்ணர் அவனுக்கு ஆன்மாவைப் பற்றிச் சொல்லிவிட்டு, அந்த பகுத்தறிவை அடைபவன் தனது உயர் சாம்ராஜ்யமான மோக்ஷத்தை அடைகிறான் என்றும், அதனை அடைந்து அனுபவத்தில் உணர்ந்தவன்   அதனின்றும் மீளுவதில்லை என்றும் சொன்னார். அப்படிப்பட்டவர்களை நாம் உலகில் பார்க்க இயலுமா, அவர்களின் குணாதிசயங்கள் என்ன என்பதை மேலும் விளக்குகிறார்.

15-5

निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामा: |
द्वन्द्वैर्विमुक्ता: सुखदु:खसंज्ञैर्गच्छन्त्यमूढा: पदमव्ययं तत् ||

மானமிலார் மோகமிலார் மாற்றினார் சார்பாசை
தாநிலைத்தார் எக்காலும் தன்னிலே – ஊனசுக
துக்கமெனும் தொந்தம் தொலைந்தவரா ஞானியர் அவ்
வக்கர வீடாளும் அவர்

பொருள்:  தேகத்தின் மேல் அபிமானம் இல்லாதவராய், உலக இயக்கங்களில் மையல் கொண்டு மயக்கம் அற்றவராய், மனதில் உருவாகும் பலவிதமான ஆசைகளையும் அகற்றியவராய், எப்போதும் ஆன்மாவினிலேயே தானாக நிலை பெற்றவராய், சரீரம் சம்பந்தப்பட்ட சுகதுக்கம் எனும் இரட்டைகளை ஒழித்தவராய் உள்ள விவேகிகளாகிய அவர்கள் அந்த அழிவற்ற மோக்ஷ வீட்டினை ஆளும் ஞானியர் ஆவார்கள்.

தேகம் இருக்கும், ஆனால் அவர்களுக்கு அதன் மேல் அபிமானம் இருக்காது. உலகம் இருப்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள், ஆனால் அவர்கள் அதன் விதவிதமான தோற்றங்களில் மயக்கம் அடைந்து தன்னிலை தளர மாட்டார்கள். எண்ணமும் எழலாம், அதனைத் தொடர்ந்த ஆசைகளும் கிளைத்து எழலாம். ஆனாலும் எண்ணக் குவியல்களாம் மனதில் எளிதாகப் பற்றக் கூடிய பலவிதமான ஆசைகளைத் தவிர்த்தவர்களாக  இருப்பார்கள். எண்ணங்களையும், ஆசாபாசங்கள் கிளர்ந்து எழுவதையும் ஒரு நீர்ப்பரப்பின் மேல் எழுந்து மறையும் நீர்க்குமிழிகளைப் போலப் பார்த்துக்கொண்டு அவைகளால் எந்த விதமான சலனங்களும் இல்லாது அமைதியாக இருப்பார்கள். எப்போதும் தனது இயல்பாக “உள்ள நிலையான” ஆன்மா ஒன்றிலேயே அவர்கள் லயித்து நிற்பார்கள், அல்லது அப்படி இருக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் தேகம் என்ற எண்ணம் இல்லாதவர்கள் ஆதலால் அதனினும் வேறான உலகம் என்பதைக் காணாததினால், அதனை ஒட்டிய இன்பம்-துன்பம் போன்ற பலவகையான இரட்டைகளை அவர்கள் ஒழித்தவர்களாய் காணப்படுவார்கள். அத்தகைய விவேகிகளாக இருக்கும் அவர்களே எனது இறுதி நிலையாகிய மோக்ஷ பதத்தை அடைந்த ஞானியர்கள் ஆவார்கள் என பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்.

மானம் என்னும் சொல்லுக்கு அளவு என்றொரு பொருள் உண்டு. இங்கு ஒருவன் தன்னை தனது உடல் அளவில் சுருக்கிக் கொள்வதற்கு அந்தச் சொல்லைப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாமே அறியாத ஏதோ பல காரணங்களினால் நாம் இந்த உடலெடுத்துப் பிறந்திருக்கிறோம். நம்மைப் போலவே நம்மைச் சுற்றியுள்ள புல், பூண்டு, செடி, கொடி முதலான தாவரங்களும் பிறந்து வளர்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆனாலும் அவைகள் இருக்கும் இடத்தை விட்டு நகராமல் அங்கேயே இருப்பதையும் காண்கிறோம். அவை தவிர ஊர்வன, நகர்வன, பறப்பன ஆகிய மிருக வகைகளும் அதே போன்று பிறந்து வளர்ந்து, நம்மைப் போன்று இங்கங்கு செல்லும் இனங்களையும் நாம் காண்கிறோம். இதற்கும் மேலாக நம் கண்ணுக்கே தெரியாத நுண்ணிய இனங்களும் அதே போன்று இருக்கின்றன என்றும் நாம் அறிகிறோம். ஆனாலும் அந்த இனவகைகளில் எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் சில வழிகளில் நம்மை விட உயர்ந்தோ தாழ்ந்தோ இருந்தாலும், மனித இனத்துக்கே உள்ள சிறப்பான சிந்தனை-செயல் வழிகளில் அவை யாவுமே நம்மை விட சிறந்து வளர இயலாது இருப்பதையும் நாம் அறிகிறோம். அதற்குக் காரணமாக  நமது உடல் தவிர எண்ணம், மனம், புத்தி என்று பலவாறாக நாம் வளர்ந்துள்ளோம் என்று சொல்லப்படுகிறது.

நமது இந்த வளர்ச்சியானது புற உலகைப் பற்றியே பெரும்பாலும் இருக்கிறது. தன்னுள் ஆழ்ந்து தன்னிலே தானாய் இருந்து அக உலகைக் கண்டு, அதுவே புற உலகின் மூலம் என்பதை அறிய முயற்சிப்பவர்கள் வெகுச் சிலரே. அப்படியே எண்ணங்கள் புற உலகைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் இருந்தாலும் வெகு சிலருக்கே மற்றவர்களுக்கும் நம்மைப் போலவே பல விதத்திலும் உரிமை உண்டு  என்ற எண்ணம் வருகிறது. அப்படிப்பட்ட எண்ணம் வராதவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களைத் துன்புறுத்தும் விதமாகவே நடந்து கொள்கின்றனர். அதற்குக் காரணம் நான்-எனது என்ற எண்ணங்களினால் ஏற்படும் மோகமும், மற்றவர்களின் மேல் ஏற்படும் வெறுப்பு மனப்பான்மையுமே.

மாறாக தன்னைப் போலவே பிறரையும் மதிக்கும் எவருமே அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாகவே நடந்து கொள்கின்றனர். ஏனெனில் தான்-பிறர் என்று பார்ப்பவர்களுக்கு மற்றவரையோ, மற்ற பொருளையோ தனதாக்கிக் கொள்ளும் எண்ணம் வரும். அதுவே மோகம், ஆசை எல்லாவற்றுக்கும் மூல காரணமாகும். அதிலிருந்து பிறப்பதே மற்ற எல்லா எண்ணங்களும் என்று கீதாசாரியன் வேறோர் இடத்தில் கூறுவான். ஆனால் தான்-பிறர் என்று ஒராதவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் வளராது.

அப்படிப் பிறரை மதித்தல் என்பதும் அவர்கள் அறியாமலேயே அவர்களும் தானும் ஒன்றே என்பதன் அடிப்படையில்தான். அப்பேர்பட்ட எண்ணம் வருவதன் காரணமே அனைவரும் ஆன்ம சொரூபம் என்ற ஒரு அடிப்படையில்தான். அந்த எண்ணம் மற்ற மனிதர்களிடம் மட்டும் அல்லாது அனைத்து சீவராசிகளிடமும் ஒருவனுக்குக் காணப்படும்போது அவன் ஞானத்தின் ஆரம்ப நிலையில் உள்ளான் என்று கொள்ளலாம். அது மேலும் வலுக்கும் போது தான்-பிறர் என்ற எண்ணம் கூட முற்றும் உணர்ந்த ஞானிக்கு வராது.

தன்னுள் ஆழ்ந்து தன்னிலே தானாய் இன்புற்று இருப்போனுக்கு நேராக அந்த ஞான நிலை கிட்டுகிறது. அதை உணர்ந்தவனும் தான்-பிறர் என்று பார்ப்பதில்லை, புற உலகும் அக உலகின் வெளிப்பாடு என்னும் அறிவு அவனுக்குத் தானாய் அமைகிறது. அவர்களுக்கு சுக-துக்கம், விருப்பு-வெறுப்பு போன்ற இரட்டைகள் எதுவும் இருக்காது. அத்தகையவர்களே எனது மோக்ஷ வீட்டை அனுபவிப்பவர்கள் என்று கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.

16-23

य: शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारत: |
न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम् ||

எவனூல் விதியை இகத்து இச்சை ஏவும்
அவவழி தன்னை அடுப்பான் – அவன் என்றும்
சாரானே சித்தியொடு சாந்தி சுகத்தினையும்
சேரானே முக்திச் சிறப்பு

பொருள்: எவனொருவன் சாஸ்திர விதிப்படி நடப்பதைத் தவிர்த்து, ஆசையினால் தூண்டப்பட்டு, மனம் போன போக்கில் தகாத வழியை அடுத்து நடப்பானோ அவன் ஒருநாளும் பெறுதற்கரிய லாபமான சாந்தியையோ, இகத்தில் உள்ள சுகத்தையோ அடைய மாட்டான். சிறப்பான முக்தியையும் அடைய மாட்டான்.

ஒருவன் செய்ய வேண்டிய செய்கைகளையும், முறைகளையும் விதிகளாக வகுத்தும், அதேபோல செய்யக் கூடாதவைகளைத் தவிர்ப்பதையும் சொல்வது சாஸ்திரம். செய்யக் கூடியவைகளை தர்ம காரியங்கள் என்றும், தவிர்க்கப்பட வேண்டியவைகளை அதர்ம காரியங்கள் என்றும் பொதுவாகச் சொல்வார்கள். அவைகள் வேதத்தையே பிரமாணமாகக் கொண்டு பெரும்பாலும் செவி வழியே வந்தவை. காலத்தின் மாற்றங்களினால் எங்கு ஐயங்கள் வருகின்றனவோ அங்கெல்லாம் நம் முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அல்லது எதைச் செய்தார்களோ அதைப் பின்பற்றி நடப்பதும் சாஸ்திரத்தை ஒட்டி நடப்பதாகவே கொள்ளப்படும்.

ஒருவன் தன்னையும், மற்றவர்களையும் பிரித்துப் பார்க்கும் பழக்கம் இருக்கும் வரை இந்த வகையான பாகுபாடுகளும், விதிகளும் அவனுக்கு இன்றியமையாத தேவையாக அமைகின்றன. அப்போது அவனுக்கு தர்ம வழியில் செல்வதற்கு ஒரு நல்ல வழிகாட்டியும் தேவைப்படுகிறது. என்னதான் ஒருவன் நல்ல விதமாக இருக்க முயற்சித்தாலும், அவ்வப்போது வரும் சங்கடங்களைப் புரிந்து கொள்ளவும், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும் அந்த வழிகாட்டி உறுதுணையாக அமைகிறார். இங்கும் ஒருவனது நல்வினைப்படியே அவனுக்குத் துணை அமைகிறது என்பது வேறு விஷயம். உண்மையில் நமது ஒரே வழிகாட்டி இறைவன்தான். ஆனாலும் நமக்கு இறைவன் காட்டுவதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வளரும் வரை நம்முடனேயே வாழும் அல்லது வாழ்ந்த ஒரு நல்லாசிரியனைத் துணை கொள்வது நன்மை பயக்கும்.

அதை விடுத்து ஒருவன் தன் விருப்பப்படி நடந்து கொள்வானேயானால், பெரும்பாலும் அவனுக்குச் சொல்லப்பட்ட அந்த நல்வழி அவனுக்குப் பிடித்தமாக அமையவில்லை என்பதும், அவன் வேறு ஏதோ ஆசைகளினால் உந்தப்பட்டுள்ளான் என்றுதான் பொருள். அப்படி தனக்குத் தோன்றிய வழியில் செல்பவன் வேதங்கள் சொல்லும் உன்னத நிலையான பரம பதத்தினை அடையமுடியாது, அவன் உலக இயக்கங்களில் வெகுவாக ஈடுபட்டு மனச் சாந்தியையும் இழக்கிறான், மன அமைதியினால் கிடைக்கக் கூடிய சுகத்தையும் இழக்கிறான். அதையெல்லாம் புரிந்து கொண்டு திருந்துவதற்கும் காலம் இல்லாது போனால், அவனது வினைப் பயன்களின்படி மேலும் பிறவிகள் பல எடுத்து அவை அனைத்தையும் அறிந்து, தெளியும் வரை சம்சாரச் சாகரச் சுழலில் சிக்கிக் கொள்கிறான்.

அவனுக்கு எனது பரம பதமான மோக்ஷப் பதவியும் கூடிய விரைவில் கிட்டாது தள்ளிப் போகிறது என்று கண்ணன் அருச்சுனனுக்குச் சொல்கிறார்.
மன அமைதியற்றுப் போனதால் இம்மையில் கிடைக்க வேண்டிய சுகத்தையும் இழக்கிறான், மறுமையில் கிடைக்க வேண்டிய முக்திப் பதவியையும் இழக்கிறான். அப்படி அவர் சொல்லும் போது அவர் வேதப் பிரமாணத்தைத் தான் சொன்னதாகச் சொல்லாமல், சாஸ்திரப் பிரமாணமாகவே சொல்கிறார்.

13-27

समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं |
विनश्यत्स्वविनश्यन्तं य: पश्यति स पश्यति ||

எல்லா உயிர்களில் ஒத்து ஏகனாய் நாசம் உறும்
எல்லாவற்றும் பொன்றாது ஏய்ந்தோனாய் – எல்லோரும்
பார்ப்பதற்கு ஒண்ணாப் பரமேச்சுரனை எவன்
பார்ப்பான் அவனே பார்ப்பான்

பொருள்: சகல விதமான உயிர்களினுள்ளும் இயைந்த ஒரே சொரூபமாக உள்ளவனாய், அழியக்கூடிய எல்லா பூதங்களிடத்தும் பொருந்தியிருந்தும் அழிவற்றவனாய், (அப்படி எல்லாம் இருந்தும்) அனைவரின் பார்வைக்கும் எட்டாதவனாகிய அந்த பரமேஸ்வரனை எவன் உணருகின்றானோ அவனே (உள்ளதைக்) காண்பவன் ஆவான்.

எது எது பிறக்கிறதோ அது அது அழியும் தன்மை உடையதே. அழியாமல் இருக்க வேண்டுமென்றால் பிறவாது இருக்க வேண்டும். இந்த நியதி பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும். நம்மைப் போன்று பிறக்கும் சீவராசிகளுக்கு மட்டுமல்லாது, பிறப்பிற்குப் பொறுப்பான பிரமனுக்கும் இந்த விதி பொருந்தும். அப்போது பிறப்பிற்கு வேறொரு பிரமன் வருவான் என்று சொல்லப்படும். இப்படிப்பட்ட நிலையில் பிறவாது, அதன் காரணமாகவே அழியாமல் இருப்பது ஆத்மா ஒன்றே. இப்படி அழியக்கூடிய எல்லாவற்றினும் ஆன்மா இசைந்து இருந்தாலும், அவைகள் அழியும் போது ஆன்மா அழிவதில்லை என்பதால் ஆன்மா பிறப்பதில்லை என்றே ஆகிறது.

தோற்றமும் ஒடுக்கமும் உள்ள சீவராசிகள் தோற்ற-ஒடுக்கம் இல்லாது என்றும் நிலைத்திருக்கும் இறைவனை நாடுகின்றன. அப்படி நாடும்போது தனது நிலையாமையை உணர்ந்து இறைவன் அருளைத் தேடி, அவனுடன் ஐக்கியமாகி, அவனது “என்றும் உள்ள தன்மையை” அடையவே முயல்கின்றன. அப்போதுதான் உடல் அழிந்தாலும், அதனுள்ளே உறையும் ஆன்மாவே தான் என்ற எண்ணமாவது ஒருவனுக்கு வரும். அப்படி எண்ணம் வரும்போது, தான் தவிர மற்றெல்லா சீவனின் நிலையும் அதுவே, சிலர் அதனை அறிந்துள்ளனர் வேறு பலரோ அதை அறியாதுள்ளனர் என்றும், அறியாதிருந்தாலும் அனைவரும் ஆன்மாவேதான் என்று அனைவரையும் சமமாகப் பார்க்கும் பார்வையும் வளரும். அதுவே சரியான பார்வை. மற்றபடி சீவராசிகளுள் பேதங்களைப் பார்ப்பது விபரீதமான பார்வை. மேலும் பேதங்களைப் புகுத்துவதோ ஒரு மகா பாவச் செயலே.

யாவற்றுள்ளும் உறையும் இறைவனைப் பார்க்கும் பார்வையே சரியான பார்வை. அதுவே உள்ளதை உள்ளதாகப் பார்க்கும் பார்வை. இருவர் நன்கு உறங்கும்போது அவ்விருவருக்கும் எந்த வித வேற்றுமையும் இல்லை அல்லவா, அது போன்றதே இப்பார்வையும். ஆனால் உறக்கத்தில் அந்த நிலை அறியாமையில் மூழ்கியுள்ளது. அப்படியல்லாது அது அறிவுடன் விளங்குவதே அப்பார்வையின் இலக்கணம்.
music-iconரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.

(தொடரும் …)

One Reply to “ரமணரின் கீதாசாரம் – 6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *