தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்

பட்ட காலிலேயே படும்… கெட்ட குடியே கெடும் என்ற பழமொழி தான் தி.மு.கவின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. திகார் சிறையில் வாடும் கனிமொழியை நினைக்குந்தோறும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. ஆனால், அதிகார மமதையில் அவரும் திமுக.வினரும் ஆடிய ஆட்டங்களை நினைத்தால், இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

spectrumcartoonமாநிலத்தில் ஆட்சியும் மத்திய ஆட்சியில் பங்கும் இருந்த காலத்தில் கருணாநிதியின் வாரிசுகள் நிகழ்த்திய அத்துமீறல்களுக்கு அளவில்லை. அவற்றில் ஒன்றுதான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, அரசுக்கு வர வேண்டிய வருவாயில் ஏப்பம் விட்டு,  தகுதியற்ற நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகளைத் தாரை வார்த்து அதன் மூலமாக பல்லாயிரம் கோடி லஞ்சமாகப் பெற்ற தி.மு.க.வினர், இன்று அதற்கான பலனைப் பெற்று வருகிறார்கள். ஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை  அடித்தவர்கள்  சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது?

அலைக்கற்றை ஊழல் அரசல்புரசலாக வெளிவந்தபோதே, அதற்குக் காரணம் கட்சியில் ஒதுக்கிவைக்கப்பட்ட தயாநிதி மாறன் தான் என்று தெரிந்தது. உடனடியாக அரசு கேபிள் முயற்சிகளை மூட்டை  கட்டி வைத்துவிட்டு, கழகக் (கலக?) குடும்பங்களை ஒன்றுபடுத்தினார் தமிழினக் காவலர் கருணாநிதி. ஸ்டாலின், அழகிரி, மாறன் குடும்பங்கள் இணைந்து புகைப்படத்திற்கு தரிசனம் தந்தன. ‘இதயம் இனித்து; கண்கள் பனித்தன’ என்று கூறிய கருணாநிதி, ‘ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முடிந்துபோய் விட்டது’ என்றார். கழகக் குடும்பங்களுக்குள் நிகழ்ந்த கலகமே ஊழல் வெளியாக காரணம் என்று உணர்ந்த தமிழக சாணக்கியரின் வாக்குமூலம் அது. அத்துடன் பிரச்னை முடிந்துபோய்விடும் என்று அவர் எதிர்பார்த்தது  தான் தப்புக் கணக்காகிவிட்டது.

தயாநிதி மாறனிடம் பறிக்கப்பட்ட தொலைதொடர்புத் துறை அமைச்சர் பதவி ஆ.ராசா வசம் ஒப்படைக்கப்பட்டவுடனேயே, மாறனின் தில்லுமுல்லுகளை அவர் அம்பலப்படுத்தத் துவங்கிவிட்டார். மாறன் தொலைதொடர்பு  அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 323  ஐ.எஸ்.டி.என் இணைப்புகளுடன் இலவச தொலைபேசி இணைப்பகம் நடத்தி அதனை தனது சன் தொலைகாட்சி அலைவரிசைகளுக்கு பயன்படுத்தியதை போட்டுக்கொடுத்து சி.பி.ஐ விசாரணைக்கு வழிவகுத்தார் ராசா. அதன் விளைவாகவே மாறன் சகோதரர்கள் குடும்ப ஒற்றுமை ஒப்பந்தம் செய்ய வழிக்கு வந்தார்கள். அத்துடன் சிபிஐ வசமிருந்த மாறன் தொடர்பான முறைகேடு வழக்கு கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. (அதைத்தான் அண்மையில் தூசு தட்டினார் எஸ்.குருமூர்த்தி).

ஆ.ராசா மிகவும் புத்திசாலி. தனக்கு முன் அமைச்சராக இருந்த மாறன் என்ன வகையில் ‘சம்பாதித்தார்’ என்றெல்லாம் கண்டுகொண்ட ராசா, அதை, மாறனைவிட வேகமாகச் செய்யத் துவங்கினார். அதில் கிடைத்த லாபத்தில் கருணாநிதி குடும்பத்திற்கு பங்கும் கொடுத்தார். சொந்தப் பேரனும் கூட பங்கு கொடுக்காமல் ஏமாற்றிய நிலையில் ஒரு ‘தலித்’ தொண்டர் தனக்கு இப்படி கோடிகளைக் கொட்டித் தந்ததை திமுக தலைவரால் நம்ப முடியவில்லை. அவர்களுக்குள் பாசப் பிணைப்பு அதிகரித்தது. தந்தைக்கு ஏற்ற மகளான கனிமொழியும் ராசாவுடன் குலாவினார். இந்த இரட்டைக்குழல் துப்பாக்கி கண்டு அதிசயிக்காத கழக உறுப்பினரோ, கழகக் குடும்ப உறுப்பினரோ இருக்கவில்லை.

இவ்வாறு ‘சம்பாதிக்க’ ராசா கையாண்ட வழிமுறைகளில் ஒன்றுதான் ஸ்பெக்ட்ரம் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடத்திய முறைகேடுகள். இதைப்பற்றி பலமுறை பல வகையில் எழுதி புளித்துவிட்டது. முறையான ஏலமின்றி, தனக்கு ‘வேண்டப்பட்டவர்களுக்கு’  முறைகேடான வழிமுறையில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வாரி வழங்கினார் ராசா. அதற்கான பலனை கோடிகளில் பெற்றார். அந்தப் பணத்தில் வெளிநாடுகளில் கழகக் குடும்பங்கள் சொத்துகளை வாங்கிக் குவித்தன. தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவதுபோல, அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்ட ராசா, அளவுகடந்த துணிச்சலுடன் தானே ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தை பினாமியாகத் துவங்கி அதற்கும் அலைக்கற்றைகளை வழங்கி அதையும் பல மடங்கு விலைக்கு விற்று, தான் தேர்ந்த வர்த்தகர் என்பதை நிரூபித்தார்.

இவை அனைத்தையும் ‘பிரதமர் அறிந்தே செய்தேன்; எனக்கு முன் இருந்த அமைச்சர்கள் காட்டிய வழியிலேயே சென்றேன்; முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதையே கடைபிடித்தேன்’ என்று கிளிப்பிள்ளை போல கூறிக்கொண்டே  செய்தார் ராசா. அப்போது பிரதமர் அர்த்தமுள்ள அமைதி காத்தார்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அதிருப்தி தெரிவித்த நிதி அமைச்சகமும் (ப.சி.தான் அப்போது நிதி அமைச்சர்) பிறகு அமைதியானது. ஆரம்பத்தில் அறிவுரை கூறிய பிரதமர் மன்மோகனும், யாருக்கோ காய்த்திருக்கிறது   புளித்த மாங்காய் என்பது போல மௌனசாமி ஆனார். காங்கிரஸ் கட்சிக்கும் ‘பட்டுவாடா’ நடந்துவிட்டதை அந்த சம்பவங்கள் காட்டின. காங்கிரஸ் தலைவியின் வெளிநாட்டுத் தங்கைகளின் வங்கிக் கணக்குகளுக்கு  பல்லாயிரம் கோடி ரூபாய் மடை மாற்றப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுவரை யாரும் அதை மறுக்கவில்லை.

இந்நிலையில் தான் சுப்பிரமணியம்சாமியின் பொதுநல வழக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பிரதான எதிர்க்கட்சியான பாஜக.வும் இடதுசாரி கட்சிகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பிய தர்ம சங்கடமான கேள்விகளை கேலி செய்த காங்கிரஸ் தலைவர்கள்,  நீதிமன்ற  வழக்கால் அரண்டார்கள். அதற்கேற்ப, நியாயம் தவறாத  நீதிபதிகளும் வழக்கு விசாரணைகளில் மத்திய அரசை பிடி பிடியென்று பிடித்தார்கள்; சி.பி.ஐயை கடுமையாக விமர்சித்தார்கள். நீதிபதிகளின் கடும் கண்டனங்களையும்  உத்தரவுகளையும்  தொடர்ந்து,  நீதிமன்ற வழிகாட்டுதலில் சி.பி.ஐ இயங்க வேண்டி வந்தது. அதன் விளைவாக முதலில் ஆ.ராசாவும் அவரது ஊழல் கூட்டாளிகளும், பிறகு ராசாவின் நிழலான கனிமொழியும் கைதானார்கள். அடுத்து தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ கண் வைத்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அவரும் கைதாகலாம்.

karunanidhi_kanimozhi_maranஆரம்பத்தில் வீர வசனம் பேசிய ராசா சிறை சென்று நான்கு மாதங்களாகி விட்டன. ‘சட்டப்படி என்மீதான வழக்கை சந்திப்பேன்; பிணை பெற மாட்டேன்’  என்று சொன்ன கனிமொழியின் பிணை மனுக்கள் பலமுறை தள்ளுபடி  செய்யப்பட்டுவிட்டன. மகன் ஆதித்யாவை கவனிக்க பிணை கேட்டும்,  கனிமொழிக்கு உச்சநீதி மன்றத்திலும் பிணை கிடைக்கவில்லை. இப்போதைக்கு அவர் திகாரிலிருந்து வெளிவருவதாகத் தெரியவில்லை.

இதன் காரணமாக கருணாநிதியின் இரு குடும்பங்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல். கலைஞர் டிவிக்கு ரூ. 200  கோடி பரிமாற்றம் தான் இப்போதைய வழக்கின் துருப்புச்சீட்டு. அந்த டிவியில் 60  சதவிகித  பங்கு  வைத்துள்ள  தயாளுவை விட்டுவிட்டு, வெறும் 20  சதவிகித பங்குகள் வைத்துள்ள  கனிமொழியை கைது செய்ததென்ன நியாயம்? என்று கேட்கிறார் ராசாத்தி. சபாஷ், சரியான போட்டி! ஆ.ராசாவுக்காக அதிகாரத் தரகர் நீரா ராடியாவிடம் அமைச்சர் பதவி கேட்டு கெஞ்சியது கனிமொழிதான், தயாளு அல்ல என்பதை ராசாத்தி  மறந்துவிட்டார் போல!

ராசாவுடன் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைதான ஆசிஸ் பல்வா உள்ளிட்ட பல நிறுவன அதிகாரிகள், தங்களை  மட்டும் விடுவித்துக்கொள்ள அடுத்தவர் மீது பழிபோடத் துவங்கி இருக்கின்றனர். கனிமொழிக்காக தில்லி உயர்நீதிமன்றத்தில் வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ‘ஸ்பெக்ட்ரம் மோசடியில் ராசாவுக்கு மட்டுமே தொடர்புள்ளது. எனவே கனிமொழியை பிணையில் விடுவிக்க வேண்டும்”  என்று வாக்குமூலம் அளித்ததையும் கண்டோம். கருணாநிதியின் ‘தலித்’ பாசத்தை மகள் பாசம் வென்றதன் அறிகுறி அது. ஆயினும் தில்லி நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணைகளின்போது ராசாவின் மனைவியும் கனிமொழியும் நெக்குருக ஒருவருக்கொருவர் ஆதரவு கூறிக்கொள்வதைப் பார்த்தால், கல்  மனமும் உருகிவிடும்.

இத்தனை நடந்த பின்னரும், மத்திய கூட்டணியை விட்டு வெளியேற முடியாமல் தத்தளிக்கிறது கருணாநிதியின் ராசதந்திரம். ஸ்பெக்ட்ரம் ஊழலே தமிழக சட்டசபை தேர்தலில் திமுக.கூட்டணியின் படுதோல்விக்குக் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்களே கூறும் நிலையில், ”கூடா நட்பு கேடாய் முடியும்” என்று பஞ்ச தந்திர வசனம் பேசுகிறார், கருணாநிதி. ஆயினும் திமுக.வின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் ‘காங்கிரசுடன் கூட்டணி தொடரும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றுகிறார். இவரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை மக்களால்!

திமுக.வின் இந்த முடிவுக்கு  என்ன காரணம்? இப்போதைக்கு மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இழந்துள்ள நிலையில் மத்தியிலுள்ள  அமைச்சர் பதவிகளும் போய்விட்டால் இருக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையும்  காணாமல் ஆகிவிடும்  என்ற எச்சரிக்கை உணர்வா? மத்திய அரசில் பங்கிருந்தால்தான் ஊழல்  வழக்குகள் அதிகரிக்காமல் மூடி மறைக்க முடியும் என்ற ஞானோதயமா? அதிமுகவுடன் காங்கிரஸ் குலாவினால் முகவரி இழந்து விடுவோம் என்ற அச்சமா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுக் களவாணியாக விளங்கிப் பெற்ற  பல கோடி பணத்திற்கு காங்கிரஸ் நன்றி காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பா? காரணம் எதுவாகிலும் திமுக இப்போது நிற்பது முட்டுச்சந்து என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஊழ்வினைகள் உறுத்துவந்து ஊட்டுகின்றன.

raja-kanimozhi-karunanidhiதிமுக இப்போது நம்பி இருப்பது கலைஞர் டி.விக்கு வந்த பணம் ரூ. 200  கோடியும் கடனாகப் பெற்று திரும்ப அளிக்கப்பட்டுவிட்டது என்ற தங்கள் வாதம் நீதிமன்றத்தில் நிலைநாட்டப்பட்டுவிடும் என்பதுதான். சி.பி.ஐ.யும் அதற்கேற்ற வகையில் வழக்குகளில் முடிச்சுகளைப் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கே, பல்லாயிரம் கோடிகள் லஞ்சமாகப்  புழங்கிய மாபெரும் முறைகேட்டை மறைக்க மத்திய அரசு நடத்தும் நாடகம் என்ற கருத்தும் உள்ளது.

ஸ்பெக்ட்ரம்  ஊழலில் பெற்ற முறைகேடான பணத்தை அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர். அவை குறித்தோ, ராசாவின் பினாமி நிறுவனம் நடத்திய மாபெரும் முறைகேடு குறித்தோ, இந்த ஊழலில் பெருநிறுவனங்களின் பங்கு குறித்தோ விசாரிக்க சி.பி.ஐ இதுவரை முற்படவில்லை.   ஆ.ராசாவுக்கு முன்  மாறன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் குறித்தும், அதற்கு பிரதமர் அளித்த கண்மூடித்தனமான ஆதரவும் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ப.சி, மாறன், ஆ.ராசா, கருணாநிதி, சோனியா, கனிமொழி போன்ற அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, பல பெரிய தொழில் நிறுவனங்களின்  அதிபர்களின் சாயமும்  ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெளுக்க வாய்ப்புள்ளது. ஆனால், சி.பி.ஐ அதற்கான முன்முயற்சிகளில் இறங்குவதாகவே  தெரியவில்லை.

ஆசிஸ்  பல்வாவின் நிறுவனம் கலைஞர் டிவிக்கு கொடுத்த பணம் மட்டுமே சி.பி.ஐ நடத்தும் வழக்கின் ஆதாரமாக இருக்கிறது. இதையும் கடனாகப் பெற்று திருப்பி அழைத்ததாக திமுக தரப்பு நிரூபித்துவிட்டால், வழக்கு அதோகதியாகிவிடும். இதைத்தான் திமுக நம்பி இருக்கிறது. மத்திய அரசு ஊழல் வழக்குகளை மேலும் கிளறாமல் இத்தோடு நிறுத்திக்கொள்ளவும், திமுகவுக்கு கூட்டணி அவசியம். இதுவரை மிக சிக்கலான வழக்குகள் தொடராமல் ரூ. 200  கோடியில் மட்டும் சி.பி.ஐ கவனம் செலுத்துவதற்கு காங்கிரஸ் அரசின் நன்றி உணர்வே காரணம் என்று கலாகார் நம்புவதும், கூட்டணி முறியாமல்  இருக்கக் காரணம் என்கிறார்கள். நெருப்பு இல்லாமல் புகையுமா என்ன?

மத்திய கணக்கு தணிக்கை ஆணையர் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த மோசடியால் அரசுக்கு ஏறப்பட்ட இழப்பு  ஒரு லட்சத்து 76  ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறியுள்ள நிலையில், சி.பி.ஐ, இழப்பின் மதிப்பை குறைத்து மதிப்பிடுகிறது; 30,984 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வழக்கை முடிக்கும் தறுவாயில், தொழில்நுட்பப் பிரச்னைகளைக் காரணம் காட்டி, ஊழலே நடக்கவில்லை என்று சி.பி.ஐ கவிழ்ந்தடிக்கவும் வாய்ப்புள்ளதை இந்த மதிப்பீட்டுக் குறைவு சுட்டிக்காட்டுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் லாபம் பெற்றவர்கள் திமுகவினரும் காங்கிரஸ் காரர்களும் சில தொழில் நிறுவனங்களும் தான். இத்தகைய நிலையில் திமுகவை கைவிடுவது ஆபத்து என்பதை காங்கிரசும் உணர்ந்துள்ளது; திமுகவை கைகழுவினால் ராசா, கனிமொழி,  கருணாநிதி   ஆகியோரின் வாக்குமூலங்கள் மாறலாம்; அதன்மூலமாக மறைமுகமாக அரசாளும் சோனியாவுக்கே சிக்கல் நேரலாம் என்பதால், இப்போதைக்கு வழக்கு போக்குகளைக் காட்டியபடியே காலம் கடத்தவே காங்கிரஸ் விரும்பும். இதே நிலையில் தான் திமுகவும் தத்தளிக்கிறது.

எனினும் நாட்டில் கிளர்ந்தெழுந்து  வரும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிலி ஏற்படுத்தி இருக்கின்றன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை தற்போதைய அரசு நீடிப்பதே கேள்விக்குறி ஆகிவருகிறது. எனவே எதிர்காலத்தில் எதுவும் நிகழலாம். நாட்டின் மீது அக்கறையற்ற சோனியா எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சியைக் கூட கைகழுவலாம். அண்மையில் யாருக்கும் தெரியாமல் சோனியாவும் ராகுலும் வெளிநாடு சென்றது பல சந்தேகங்களை எழுப்புகிறது. ஆகவே, இப்போதைக்கு திமுக மத்திய அரசில் கூட்டணியில் இருந்தபடியே இல்லாமல் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டணியில் திமுக இருப்பது விருப்பத்தால் அல்ல; கட்டாயத்தால். இந்த கட்டாயமும் திமுவின் கட்டாயத்தால் அல்ல; காங்கிரஸ் கட்சியின் நிர்பந்தத்தால்.

sonia-singh-karuna

எதற்கு இருக்கட்டும் என்று அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு நூல்விட்டுப்  பார்க்கிறது காங்கிரஸ். நல்லவேளையாக இந்த வலையில் சிக்காமல் காங்கிரசின் மூக்கறுத்து இருக்கிறார் ஜெயலலிதா. ”ஏழு மாதங்களுக்கு முன் காங்கிரசுக்கு ஆதரவு  தெரிவித்தது உண்மையே. அன்றைய நிலை வேறு. இப்போதைய நிலை வேறு. இப்போது யாருக்காது எனது ஆதரவு வேண்டுமென்றால் அவர்கள் தான் என்னிடம் வந்து கேட்க வேண்டும்” – இப்படி சவுக்கடி கிடைக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்திருக்காது. எப்படியோ,  கருணாநிதி சிறிதுகாலத்திற்கு   நிம்மதியாக இருக்கலாம்.

கருணாநிதியின் தற்போதைய தள்ளாட்டத்திற்கு, வாஜ்பாய்க்கு அவர் செய்த துரோகமும் காரணம் என்று கூற முடியும். 2004 ல் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தொழில்துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் காலமானார். முன்னதாக அவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் இருந்தபோது, அவரது இடத்திற்கு தயாநிதி மாறனை நியமிக்குமாறு கருணாநிதி வாஜ்பாய்க்கு நெருக்குதல் கொடுத்தார். வாஜ்பாய் அதனை ஏற்கவில்லை. அதனால்தான், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார் கருணாநிதி.

அப்போது, மத்தியில் வாஜ்பாய் அரசில் திமுகவினர் அமைச்சர்களாக இருந்தபோதே, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சிலும் கருணாநிதி ஈடுபட்டார். விரைவில் கூட்டணியிலிருந்தும் அரசிலிருந்தும் வெளியேறிய திமுக, – பாஜக.வின் மதவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி-  காங்கிரஸ் கூட்டணிக்கு தாவியது. பிறகு நடந்த அரசியல் மாற்றங்கள் அனைவரும் அறிந்ததே.

தனது அமைச்சரவையில் இருந்த கூட்டணித் தோழர் ஒருவர் நீண்ட நாட்களாக உடல்நலமின்றி இருந்தபோதும் அவரை அமைச்சர் பதவிலிருந்து விலக்காமல் நாகரிகம் காத்த வாஜ்பாய்க்கு கருணாநிதி அன்று கொடுத்த பரிசு, நன்றியில்லா சுயநலத்தை வெளிப்படுத்தியது தான். அதற்கு கிடைத்துள்ள பரிசு தான் தற்போதைய திமுகவின் திரிசங்கு நிலை. பண்ணிய பாவம் சும்மா விடாது என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

வாஜ்பாய்க்கு கருணாநிதி செய்த துரோகத்திற்கு  பரிசு திமுகவின் தற்போதைய திரிசங்கு  நிலை. அரசுக்கு ஆ.ராசா அமைச்சராக பல கோடி இழப்பு ஏற்படுத்தியதற்கு கிடைத்த பரிசு ராசா, கனிமொழி கைது உள்ளிட்டவை. தமிழக மக்களை ஏமாற்றியதற்கு திமுகவுக்கு தேர்தலில் பாடம் கிடைத்துவிட்டது. எல்லாம் சரி, தர்மம் நின்று கொள்வதெல்லாம் திமுக வுக்கு மட்டும் தானா? காங்கிரசுக்கு எப்போது ஆப்பு?

17 Replies to “தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்”

  1. Highly biased writings. Why this web site is always against MK? When JJ does any mistake, is this same web site going to write this type of articles? During her last 2 periods, she and her frined looted TN in many ways. Why that time there was no article?

  2. சரவ்
    கருணாநிதி முழுக்க முழுக்க தன் குடும்பத்தை உயர்த்தவே ஊழலில் ஈடுபட்டார். மக்களுக்கு இலவசங்கள் என்ற பெயரிலும் சம்பாதித்தார். அவருடைய குடும்பமே அராஜகம் செய்தது. அவருடைய கட்சிக்காரர்கள் என்ன குற்றங்கள் செய்தாலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார். சிறுபான்மையினர் ஓட்டுக்களுக்காக இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டார். காமராஜரும் கக்கனும் பிறந்த தமிழ் நாட்டில் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருந்தார். ஊழலில் ஜெயலலிதாவுடன் கருணாநிதியை ஒப்பிட்டால் கருணாநிதி இமயமலை. ஜெயலலிதா மடு. இந்து சமயத்தின் கோடரிக்காம்பு. மதமாற்றம் சிறப்பாக நடைபெற சிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்கினார். தமிழ் கலாச்சாரம் என்பது இந்து கலாச்சாரம். இந்துக்கள் அனைவரும் இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்துக்கும் மதம் மாறி சென்று விட்டதாக கற்பனை செய்து பாருங்கள். பொங்கலும் தீபாவளியும் கொண்டாடப்படாது. இப்போதே வேட்டி, புடவையை தமிழன் கைகழுவிக்கொண்டு இருக்கிறான். அந்த நிலை ஏற்பட வேண்டுமா? நிச்சயமாக ஜெயலலிதா கருணாநிதியைப் போல மோசம் இல்லை.

  3. அன்புள்ள சரவ் ,

    சில அடிப்படையான உண்மைகளை புரிந்துகொள்ளாமல் தங்கள் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டது சில ஆண்டுகளுக்கு முன்னர் தான்.( பிப்ரவரி 2008 முதல் ) எனவே நாட்டு மக்களை பாதிக்கும் பல விஷயங்களையும் இங்கு எழுதி , விவாதித்து வருகிறார்கள்.

    மஞ்சள் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தால் நம்முடைய பார்வை சரியாக இருக்காது. முந்தைய ஆட்சிக்காலங்களில் இந்த தளம் இருந்திருந்தால் , இதே போன்ற விமரிசனங்கள் தேவையான நேரங்களில் வந்திருக்கும்.

    கழகங்கள் ஊழலுக்கு புதியவை அல்ல. ஊழலுக்கு அகராதி எழுதியவராவார்கள். ஆனால் முந்திய திமுக ஊழல்களுக்கும், தற்போதைய திமுக இரண்டு ஜி ஊழலுக்கும் ஒரு பெரியவேறுபாடு உள்ளது. அளவில் மட்டுமல்ல. வேறுசில அடிப்படையான விஷயங்களிலும். அவை என்ன?

    திமுக முன்னர் இரண்டாயிரத்து ஒன்று வரை செய்த ஊழல்கள் எல்லாமே , மாநில அரசின் நிதியிலிருந்து செய்யப்படும் செலவுகளில் தான் அந்த ஊழல்பட்டியல்கள் இருந்தன.அதனால் பாதிக்கப்பட்டது தமிழகம் மட்டுமே. ஆனால் இந்தமுறை, காங்கிரசு கொள்ளையர்களுடன் சேர்ந்துகொண்டு, நாடு முழுவதற்கும் சேர வேண்டிய மிகப்பெரிய தொகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது .இதனால் நம் நாடு முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. கலைஞரின் குடும்ப ஊழல்களும், சர்வாதிகாரமும் எந்த அளவுக்கு சென்றன என்பது சாதாரண மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. பட்டியல் இடின், ஒரு புதிய புத்தகமே எழுதவேண்டி இருக்கும்.

    திமுகவினரின் கொள்ளைகளுக்கு உடந்தையாயிருந்த காங்கிரசு கொள்ளையர்கள் இந்த நாட்டு மக்களால் மிக விரைவில் தூக்கி எறியப்படுவார்கள். காங்கிரசு கட்சிக்குள்ளும் கூட சில நல்லவர்கள் இருக்கிறார்கள். கட்சியை விட நாடு பெரியது என்பதை உணர்ந்தவர்கள் உள்ளார்கள். எதிர்காலத்தில், இந்தியா இருக்கும். ஆனால், காங்கிரசு என்று சொல்லிக்கொண்டு திரியும் இப்போதைய அரசியல் கட்சி இருக்காது. திமுக ஒரு தமிழின, தமிழ் மொழி, தமிழ் கலாசார விரோதி இயக்கம். கருணாவின் குடும்பத்தை முழுவதுமாக கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, வேறு புதிய தலைமையை கொண்டு கட்சி நடத்தினால் , அது தேறும். இல்லையெனில், திமுக வுக்கு இனி தமிழகத்தில் இடமில்லை. திமுக மட்டுமல்ல, திமுகவின் சொம்புகளான இந்திரா காங்கிரசு, வீரமணி குழு , ஆகிய அசிங்கம்பிடித்த கேடர்களும், கெடுமதியாளர்களும் , மக்களால் புறக்கணிக்கப்பட்டு குப்பை தொட்டிக்கு வீசப்படுவர்.

  4. சோனியா காந்தியும் கருணாநிதியும், எப்பொழுது உச்ச நீதி மன்ற தற்சமய நீதிபதிகள் மாறி கே ஜி பாலக்ருஷ்ணன் போன்ற இணக்கமான நீதிபதிகள் வருவார்கள், வழக்கை ஊத்தி மூடலாம் எனக் காத்திருக்கிறார்கள், காங்கிரசுக்கு அறுபது சதம் தி மு க விற்கு நாற்பது சதம் என்ற 2 ஜி கொள்ளைக்கணக்கை, கருணாநிதி தனக்கு 60 சதம்,சொநிஆவிற்கு 40 சதம் என மாற்றியதன் விளைவே இது. ஆனால், கருணாநிதியை மிரட்டி 20 சதத்தை வாங்குவதற்குள், சுப்ரமணியன் சுவாமியின் அயரா உழைப்பால், விஷயம் கைமீறிப்போக, காங்கிரசும் ஸொநிஆகாந்ட்ஹியும் தற்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி தன சொற்ப முடியைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார். கட்டுரையில் சுப்ரமணியன் சுவாமியின் நடவடிக்கையை மறைக்காமல் மறக்காமல் எழுதியது நேர்மையின் அடையாளம். இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஐபிஎல் லில், சென்னை சூப்பர் கிங்சில் 2G கொள்ளையை கருணாநிதி சார்பில் கொட்டி எப்போதுவேண்டுமானாலும், மாட்டிக்கொள்ளத் தயாராய் இருக்கின்றார். எந்திரன் போன்றவற்றின் மூலம் ரஜினிகாந்த்தும் 2G கொள்ளையில் பங்கு கொண்டு, அநியாயமாக நியாத்திற்கு பெயர்வாங்கும், சிங்கப்பூரில் மாட்டிக் கொண்டுள்ளார். மன உளைச்சலுடன் உடல் உபாதையை வேறு சினிமா ஸ்டையிலில் தாங்கவேண்டி உள்ளது. எல்லாரும் திருட்டுப் பேர்வழிகள்.

  5. இராவணனையும் கும்பகர்ணனையும் போல இருங்கள் என்று கலைஞர் திருவாய் மலர்ந்தருளினார். தன்னுடைய இரு மகன்களாகிய அழகிரி, ஸ்டாலின்,ஆகிய இருவரையும் பார்த்து அறிவுரை வழங்கிய லட்சணம் தான் இந்த சொற்கள்.

    கும்பகர்ணன் தன் அண்ணன் இராவணனுக்காக உயிரை தியாகம் செய்தவன். அவன் நல்லவனே. ஆனால் அவனும் கடைசி வரை , சீதை விவகாரத்தில் இராவணன் செய்தது தவறு என்பதை சுட்டிக்காட்ட தவறவில்லை. மேலும் இராமபிரானிடம் சீதையை ஒப்படைத்துவிடுவது நல்லது என்று சொல்லி பார்த்தும், அவனது அறிவுரைகள் இராவணனிடம் எடுபடவில்லை. செஞ்சோற்று கடனுக்காக அவன் இராவணன் தரப்பில் போரிட்டான்.

    இராவணனோ, மாற்றான் மனைவியை அவள் சம்மதமின்றி திருட்டுத்தனமாக கடத்தி சென்று தன்னுடைய அளவுகடந்த சக்தியையும், பெற்ற வரங்களையும் வீணாக இழந்தவன். நாட்டு மக்களால் தலைவர்கள் என்று நம்பப்பட்ட கலைஞர் போன்றவர்கள் மக்களுக்கு நல்வழி காட்ட கடமைப்பட்டவர்கள். நல்ல வழி காட்டாவிட்டாலும் பரவாயில்லை, தீய வழி காட்டக்கூடாது. சாதாரணமான ஒரு நபர் பேசும் பேச்சுக்கும், தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பேசும் பேச்சுக்கும் வித்தியாசம் உள்ளது. நமது நாட்டில் இராவணனைப்போல, பிறன் மனைவியை கவர்ந்து சென்று வாழவேண்டும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்தால், சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கு என்ன ஆகும்?

    இராவணன் பற்றிய பேச்சுத்தான் கலைஞரின் தோல்விக்கு ஒரு பெரிய காரணம். இதனுடன், மின் வெட்டு, விலைவாசி உயர்வு எல்லாம் சேர்ந்து இவரை பதவி இறக்கம் செய்ய துணை புரிந்தன. இராவனங்கள் நம் நாட்டுக்கு வேண்டாம் என்று மக்கள் இந்த தீய சக்திகளை தூக்கி எறிந்து விட்டனர்.

  6. வட்டம் வரைய ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பமாகிவிட்டது, அதுவும் சரியான இடத்திலிருந்து தான் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. ஆரம்பப் புள்ளியில் சேர்த்தால் தான் வட்டம் முடிவடையும். எப்படியும் கூடிய சீக்கிரம் வரையும் வட்டம் நிறைவு செய்யப்படும்.

  7. சன் பிக்சர்ஸ் மாறன்களின் மஹா வெற்றிகள் லீலைகள் – https://devapriyaji.activeboard.com/t43156954/topic-43156954/
    ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!
    https://devapriyaji.activeboard.com/t35211542/topic-35211542/
    M Karunanidhi DMK Government Achievements
    https://devapriyaji.activeboard.com/t34846042/m-karunanidhi-dmk-government-achievements/?page=20

  8. சமசீர் கல்வி ஜெயா கையில் அகபட்டடை பற்றி கொஞ்சம் எழுதுங்களேன் ……………

    ஆந்திரா வுக்கு சென்று விட்ட செயின் திருடர்கள் என்று சொன்ன சூழ் உரைத்த ஜெயா வை பற்றி எழுதுங்கள் ///////////////////////////

    நன்றி

  9. reality,

    இன்னும் மற்றவங்களை ஏன் விட்டு விட்டீர்கள்? சண் டிவியில் சீரியல் தயாரிப்பவர்கள், சண் டிவி பார்ப்பவர்கள், சண் கேபிள் கனெக்ஷன் கொடுப்பவர்கள், ஸ்பைஸ் ஜெட்டில் சகாய விலையில் பயணம் செய்தவர்கள், ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி எழுதி பத்திரிகை விற்பவர்கள், வேட்டைக்காரன் படத்தில் நடித்த விஜய், இன்னும் சண் படங்களில் நடித்தவர்கள் சண் டிவி ஷேரை வாங்கி விற்பவர்கள், எல்லோரையும் சேருங்கள்…

    உருப்படும்..

  10. அன்புள்ள சம்போ,

    சமச்சீர் கல்வி பற்றி தங்கள் கருத்தை எழுதும் முன்னர், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டதையும், ஏற்கனவே அமலிலுள்ள சி பி எஸ் இ , மற்றும் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் வழக்கில் உள்ள கணிதம், அறிவியல் ( இயற்பியல், வேதியியல், மற்றும் உயிரியல், தாவரவியல், விலங்கியல் ) பாடங்களையும் ஒப்புநோக்கி விட்டு எழுதவும்.

    சமச்சீர் கல்வி என்ற பெயரில் கருணா அவர்களின் குடும்ப அரசு வெளியிட்ட பாடப்புத்தகங்கள் , சி பி எஸ் இ மற்றும் மெட்ரிகுலேஷன் பாடங்களை விட குறைவாகதான் உள்ளன . சமச்சீர் கல்வி என்பது என் சி இ ஆர் டி / சி பி எஸ் இ சிலபஸ்ஸை விட அதிகம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை, அதற்கு சமமாகவாவது இருக்கவேண்டும்.

    எனவே, தரமான பாடங்களை சேர்த்து, பாடப்புத்தகங்களை வெளியிட போதிய காலம் இல்லை என்று ஜெயா அவர்கள் கூறியது முற்றிலும் சரியே. அரைகுறையாக சமைத்த உணவை உண்டால் ஏற்படும் நோய்கள் போல, கருணாவின் அரைகுறை மற்றும் மோசடியான சமச்சீர் கல்வி அமுல் செய்யப்பட்டிருந்தால், அது ஒரு வேதனையாக அமைந்து, மாணவர்கள் வாழ்வில் இருளடைய செய்திருக்கும். திரு முத்துக்குமரன் அவர்கள் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையில் ஏராளமான பரிந்துரைகள் கருணாவால் ஏற்கப்படவில்லை என்று , அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்பது வேறு பிரச்சினை, ஆனால் சி பி எஸ் இ மற்றும் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை விட, கருணா குடும்ப அரசின் சமச்சீர்கல்வி சிலபஸ் மிக மிக குறைவு என்பது வெள்ளிடைமலை. எனவே, ஒரு விஷயத்தை பற்றி கருத்து தெரிவிக்கும்முன் , தயவு செய்து சரிபார்த்துவிட்டு எழுதவும் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  11. வியாபாரப்போட்டிகளுக்காக வியாபாரிகள் பல தந்திரங்களை கையாளுகிறார்கள். அது குற்றமல்ல. ஆனால் தாத்தா முதன் மந்திரி என்பதால்,

    ஒன்று:- தங்களுடைய வீடியோ இதழை வாங்க சொல்லி , வீடியோ விற்பனையாளர்களை கட்டாயப்படுத்தி, பயமுறுத்தி, வாங்கத்தவறினால் , நீலப்படம் விற்றதாக பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவோம் என்று சொல்லி மிரட்டியவர்கள் இவர்கள்.

    இரண்டு:- டாட்டாவையும் மிரட்டி , DTH பங்குகளை தங்களுக்கே விற்றுவிடும்படி மிரட்டினார்.

    மூன்று:- கேபிள் தொழிலில் போட்டியாளர்களான ஹாத்வே கம்பெனியின் கேபிள்களை வெட்டி வீழ்த்தி, அவர்களை மிரட்டி, தொழிலைவிட்டு ஓட செய்தனர்.

    நான்கு:- சிவசங்கரனை மிரட்டி அவரது கம்பெனி பங்குகளை வெளிநாட்டு , வேண்டியவருக்கு விர்கவைத்தனர்.

    ஐந்து:- அரசு கேபிளை வெட்டி, அதனையே இவர்களின் தத்தா உதவியுடன் செயலிழக்க வைத்தனர்.

    ஆறு:- இரவோடு இரவாக, நூற்றுக்கணக்கான தினமலர் ஊழியர்களை, தங்கள் பத்திரிக்கைக்கு இழுக்க, பல தகாத செயல்களை செய்தவர்கள் இவர்கள்.

    ஏழு:- டூ ஜியின் பிதாமஹர்கள். ஆரம்பித்து, வைத்து, ராசாவுக்கு நல்வழி காட்டியவர்கள்.

    எட்டு:- தினகரன் ஊழியர்கள் மதுரையில் மூன்று பேர் உயிருடன் எரிக்கப்பட்டு , கொடுமையான சம்பவம் நடைபெற்றபிறகு, தங்கள் சுயநலன்களுக்காக, மீண்டும் கருணாவுடன் ஒன்று கூடி , ஊழல்கள் மற்றும் கொலைகளை மூடி மறைக்க உதவினர். கொலை செய்யப்பட ஊழியர்களின் உயிரை , அவமதித்தனர்.

    ஒரு தனிப்புத்தகமே எழுதலாம். நமக்கு நேரமும், இடமும் இல்லை. இவர்கள் திகாருக்கு என்று போய் , கனியின் பக்கத்து அறையில் ,அல்லது, இராசாவின் பக்கத்து அறையில் அடைக்கப்படுகிறார்களோ, அந்தநாளே ஒரு பொன்னாள் ஆகும்.

  12. எல்லா நாட்டு மக்களுக்கும் என்றுமே உலகில் அடிப்படை தேவையாக இருப்பது கீழ்க்கண்டவை ஆகும்.

    உணவு,
    உடை,
    இருப்பிடம்,
    மருத்துவவசதி,
    கல்வி வசதி,
    போக்குவரத்து வசதி,
    தகவல் தொடர்பு வசதி , மற்றும்
    உலகில் பல நாட்டு மக்களுடனும் தொடர்பு கொள்ள தேவையான முக்கியமான சில அந்நிய மொழிகளில் அன்றாடம் உபயோகப்படும் சுமார் இருநூறு சொற்களின் அறிவு .

    உலகில் எதிர்காலத்தில், சீன, இந்தி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் கற்பது மிக அவசியம் ஆகும். கற்பது என்பதற்கு இலக்கியம், இலக்கணம், கவிதை என்று போட்டு யாரும் தயவு செய்து குழப்பிக்கொள்ள வேண்டாம். நான் மேலே சொல்லியபடி அன்றாடம் உபயோகிக்கும் இருநூறு சொற்கள் போதுமானவை.மேற்கூறிய நாலு மொழிகளை பேசும் மக்களின் எண்ணிக்கை உலகில் முன்னூற்று ஐம்பது கோடி ஆகும். எனவே தன்னுடைய தாய் மொழி மட்டும் போதும் என்று வாழும் தலைமுறை எதிர்காலத்தில் மிக குறைந்து விடும்.

    திமுகவினர் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஐந்தில் செய்த இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ஒரு தவறான செயல். மேடைகளில் முழங்கும்போது , இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம் என்று சொல்லினர். ஆனால், தமிழனுக்கு இந்தியை கற்கும் வாய்ப்பு இலவசப்பாடமாக கூட , மறுக்கப்பட்டு , அரசு பள்ளிகளில் இருந்த இந்தி ஆசிரியர்களும், இந்தி வகுப்புகளும் ஒழித்து கட்டப்பட்டன.

    அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், மற்றும் கருநாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பள்ளியில் இந்தி கட்டாயப்பாடமாக உள்ளது. அவர்கள் திராவிடர்கள் இல்லையா? பின்னர் ஏன் இந்தி படிக்கின்றனர்? சுமார் நூற்று பத்து கோடி மக்களுடன் தொடர்பு கொள்ள , இந்தி உதவும். எனவே தான் தமிழனை விட, ஆந்திர, கேரளா, கருநாடக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் போது, சிரமப்படாமல் வாழ்கிறார்கள். ஆனால் தமிழக மாணவர்களில் இந்தி படிக்காத மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நாடு முழுவதும் உருவாக்கியபோது, எல்லா மாநிலங்களும் அந்த சலுகைகளை அனுபவித்தன. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணா அவர்களின் அரசு தமிழனுக்கு அந்த சலுகை கிடைக்காமல் செய்துவிட்டது. இன்றைய உலகில் , எந்த நாடுமே தன்னிறைவு பெற்ற நாடு அல்ல. எந்த நாட்டிலும் சில பொருட்கள் உபரியாகவும், சில பொருட்கள் தட்டுப்பாடாகவும் உள்ளன. எனவே ஒரு நாடு தன்னுடைய தட்டுப்பாட்டை போக்கிக்கொள்ள பிற நாடுகளுடன் தொடர்பு கொள்வது அவசியமானதாக போய்விட்டது. எனவே, இனியாவது, இந்தி எதிர்ப்பு மற்றும் இந்தி திணிப்பு என்று சொல்லி திரியாமல் , தமிழக அரசின் பள்ளிகளில் விருப்பப்பட்டவர்க்கு இந்தி படிக்க வசதி செய்வது , தமிழக மாணவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது. தமிழ் நாட்டில் நல்லது நடக்குமா ?

  13. Mu.Ka is paying for his past sins.

    Lakhs of tamil families were masacerred by the sri lankan army & he did not react to that.

    Their curses will not go in vain.

    Deivam Nindru kollum.

  14. கலைஞர் புத்திசாலித்தனமாக காங்கிரசையும், ராமதாசு, சிறுத்தை ஆகியோரையும் கழட்டிவிட்டு, தான் தான் முக்கிய எதிர்கட்சி என்பதை நிலை நாட்டி விட்டார். உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த இந்த அந்தஸ்தை அவர் தக்க வைத்து கொள்ள வேண்டு மென்றால் , மத்திய காங்கிரசு அரசிலிருந்து உடனே விலக வேண்டும். அடுத்த பார்லிமெண்டு தேர்தல் வரை மத்திய பதவியை அனுபவித்தால், மக்கள் காங்கிரசுடன் சேர்த்து இவரையும், இவர் குடும்பத்தையும் வங்காள விரிகுடா கடலில் வீசிவிடுவார்கள்.

    ஜெயாவும் விஜயகாந்த், கம்யூனிஸ்டுகளை கழட்டி விட்டுள்ளார். இதுவும் ஒரு வகையில் நல்லதே.தங்களுக்கு பெரிய அளவு வாக்கு வங்கி இருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த ராமதாசு, சிறுத்தை , காங்கிரசு ஆகிய உதிரிகளின் சாயம் வெளுத்து விட்டது.

  15. கனிமொழியின் மீதும் இதர சில டூ ஜி குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதும் கூடுதலாக இ பி கோ; நானூற்று ஒன்பது பிரிவின் கீழ் டெல்லி சி பி ஐ விசாரணை நீதி மன்றத்தில் கூடுதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    நம்பிக்கை மோசடி என்ற பிரிவு உள்ளதால் ஜாமீன் கிடைப்பது கடினம் என்று பலரும் கருதுகிறார்கள்.. மோசடி பணம் முழுவதும் எங்கு சென்றது என்பதும், கலைஞர் தொலைக்காட்சியின் சார்பில் கடன் வாங்க யார் ஏற்பாடு செய்தது என்ற முழு உண்மை விவரங்களையும் சி பி ஐ க்கு தெரிவிக்காதவரை கனி தப்பிக்க முடியாது. கனியின் முன்னோர்களில் யாரோ செய்த கொடிய தீ வினைகளும் சேர்ந்து கனியை தாக்குகிறது. மேலும் கனியும் ஒன்றும் தெரியாத பாப்பா அல்ல. உண்மையை கோர்டில் சொல்லி, குறைந்த தண்டனை பெறுவதே அவருக்கு அழகு. இல்லையெனில் மிக கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *