சாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்

Kejriwal-dharna
தில்லிக்குத் தேவை நாடக நடிகர் அல்ல- முதல்வர்!

அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தில்லியில் எதிர்பாராத வெற்றியை அறுவடை செய்ததன் மூலமாக, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், பலரும் எதிர்பார்ப்பதுபோல தான் ஒன்றும் தூய அவதாரம் அல்ல என்பதை குறுகிய காலத்தில் நிரூபித்துவிட்டார். தில்லித் தெருவில் போராளியாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டு இவர் நடத்திய நாடகங்களைப் பார்த்த தில்லிவாசிகள், இவருக்கு வாக்களித்ததன் கஷ்டகாலத்தை எண்ணி பெருமூச்செறிகிறார்கள்.

காலத்தின் கோலம்:

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் திடீர் வரவால், புதிய மாற்றத்தை எதிர்பார்த்த பல இளம் தலைமுறை வாக்காளர்கள் ஆ.ஆ.க-யை இரண்டாவது கட்சியாகத் தேர்வு செய்தனர். அதுவே தில்லியில் யாருக்கும் பெரும்பான்மை கிட்டாத நிலையை உருவாக்கியது. ராஜஸ்தான், ம.பி. சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றபோதும், பாஜகவை விமர்சிக்கத் துடித்த மதச்சார்பற்ற ஊடகங்களின் வெறும் வாய்க்கு மெல்ல அவலாகக் கிடைத்தார் கேஜ்ரிவால். கேஜ்ரிவால் தில்லியில் பெற்ற இரண்டாமிடம், பாஜக அங்கு பெற்ற முதலிடத்தை விடப் பெரிது என புளகாங்கிதம் அடைந்தனர், காங்கிரஸ் தோற்றதை நம்ப முடியாத அறிவுஜீவிகள்.

Yogendra yadav
நரம்பில்லா நாக்கு எப்படியும் பேசும்!

தில்லி தேர்தலின்போது, பாஜக, காங்கிரஸ் இரண்டையும் எதிர்ப்பதாக முழங்கிய கேஜ்ரிவால், தேர்தல் முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை மாற்றினார். மக்களிடம் கருத்துக் கேட்டு இந்த முடிவை எடுத்ததாகக் கூறி, காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வரானார். அப்போதே பாஜக அதனை விமர்சித்தது. பாஜகவின் கண்டனம் சரியானதே என்பதை கேஜ்ரிவாலின் தொடர்ந்த நடவடிக்கைகள் நிரூபித்து வருகின்றன.

முதலாவதாக, ஆ.ஆ.க. அரசமைத்தவுடன், தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தலில் பிரசாரம் செய்தார் கேஜ்ரிவால். தன்னிடம் அதற்குத் தேவையான 390 பக்க ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைத்தவுடன், அது பற்றிய பேச்சையே காணோம். இதுபற்றி பத்திரிகையாளர்கள் சிலர் நினைவுபடுத்தியபோது, ஷீலா தீட்சித் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரம் இருந்தால் கொடுக்குமாறு பாஜக-வை அவர் கோரினார். அதன்மூலம், வாய்ச்சவடால் அடிப்பதில் தமிழகத் தலைவர் கருணாநிதியையும் மிஞ்சிவிட்டார் கேஜ்ரிவால்.

அதுமட்டுமல்ல, அரவிந்த் கேஜ்ரிவாலின் காங்கிரஸ் சார்பு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் துவங்கி உள்ளது. அவரது அரசியல் குரு யோகேந்திர யாதவ, ராகுல் காந்தியின் முன்னாள் அரசியல் ஆலோசகர் என்பதும் தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்திற்காக இவருடன் போராடியதாகக் கூறப்படும் அருணா ராய் சோனியாவின் முக்கியமான ஆலோசகர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

காங்கிரஸ்- பி அணி:

உண்மையில் தில்லியில் ஆ.ஆ.க. போட்டியிட்டது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை திசைதிருப்பி, வாக்குகளைப் பிரிப்பதன் வாயிலாக எதிர்க்கட்சியான பாஜகவின் வெற்றிப் பயணத்தைத் தடுப்பதே. காங்கிரஸ் கட்சியின் கண்ணசைவிற்கேற்பவே, ஆ.ஆ.க. அங்கு போட்டியிட்டது. ஆனால், காங்கிரஸ் அங்கு பெற்றிருந்த மிக மோசமான ம்திப்பால், ஆ.ஆ.க. இரண்டாமிடம் பெற்று 8 இடங்களுடன் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இதை ஷீலாவோ, கேஜ்ரிவாலோ எதிர்பார்க்கவில்லை. யாருக்கும் பெரும்பான்மை கிட்டாத நிலையில் கேஜ்ரிவாலை ஆளவிட்டு, பாஜகவின் வெற்றியை மங்கச் செய்ய, இதையே காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது. காங்கிரஸ்- பி அணியின் (ஆ.ஆ.க.) தலைவரான கேஜ்ரிவால் முதல்வரானார்.

கடைசி நேரத்தின் கேஜ்ரிவால் மறுத்த ஆடம்பர பங்கலா இதுவே!
கடைசி நேரத்தில் கேஜ்ரிவால் மறுத்த ஆடம்பர பங்களா இதுவே! (ஹர்ஷவர்த்தனுக்கு நன்றி)

தான் தில்லி முதலவரானவுடன், தில்லி மக்களுக்கு தலா 700 லிட்டர் தண்ணீர் இலவசம் என்று கூறிய கேஜ்ரிவால், இப்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் அளவுமாணி பொருத்திக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 18,000 லிட்டர் தண்ணீர் இலவசம் என்றும், அதற்கு மேற்பட்ட தண்ணீருக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் சமயோசிதமாக அறிவித்திருக்கிறார் கேஜ்ரிவால். இதைத் தானே முந்தைய ஷீலா அரசும் செய்தது? எந்த ஒரு குடும்பத்திற்கும் 18,000 லிட்டர் தண்ணீர் ஒரு வாரத்திற்கே போதாது. எனவே அனைவரும் கட்டணம் செலுத்த வேண்டும்- முன்போலவே. வருவாய்த் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர் அல்லவா? மக்களிடம் எப்படி வசூலிப்பது என்று தெரிந்திருக்கிறார்.

மின்கட்டண உயர்வை எதிர்த்து ஷீலா அரசுக்கு எதிராக நாடகமாடிய கேஜ்ரிவால் முதல்வராகி ஒரு மாதம் ஆகும் நிலையில், இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு,  மாதந்தோறும் 400 யூனிட்களைத் தாண்டினால் முழுக் கட்டணம்  என்று அறிவிப்பது, வாக்காளர்களை ஏமாற்றுவது அல்லாமல் வேறென்ன? ஆட்சிக்கு வந்தவுடன் ஜன லோக்பால் மசோதாவை தில்லியில் நிறைவேற்றுவேன் என்று மார்தட்டிய அவர், இப்போது அதுபற்றி மூச்சே விடுவதில்லை.

ஆ.ஆ.க. ஆட்சிக்கு வந்தால் அரசு வழங்கும் வசையான வீடுகளில் குடியேற மாட்டோம் என்றார். இன்று அவரது எம்.எல்.ஏ.க்கள் பலரும் வசதியான வீடுகளில் குடியேறிவிட்டார்கள். கேஜ்ரிவாலுக்கே கூட இரண்டு பங்களா வீடுகள் அருகருகே இருக்குமாறு பார்க்கப்பட்டது. அவரும் அங்கு குடிபெயரத் தயாரானார். அதற்குள் அவரது முன்னாள் சபதத்தை பாஜகவின் ஹர்ஷவர்த்தன் ஞாபகப்படுத்தவே, உடனே பின்வாங்கினார். ஆடம்பர வாகனங்களில் தங்கள் எம்.எல்.ஏ.க்கள் செல்ல மாட்டார்கள்; அரசு வாகனங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றெல்லாம் சொன்னவர் கேஜ்ரிவால். இன்று அனைத்து ஆ.ஆ.க. தலைவர்களும் செல்லும் கார்கள் வி.ஐ.பி.க்களுக்கென ஒதுக்கப்பட்ட பதிவெண்களுடன் தான் உள்ளன. சிவப்பு விளக்கு மட்டும் தான் இல்லை. அதுவும் நீதிமன்ற உத்தரவால் நாடு முழுவதுமே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை என்று குதித்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மீது நடவடிக்கையும் எடுத்தார்; பல அதிகாரிகளை பந்தாடினார். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே அதிகாரிகளுடன் சமரசமாகிவிட்டார். இதைத் தானே காங்கிரஸ், பாஜக கட்சிகள் செய்துவந்தன? இப்போதேனும் ஆட்சி நிவாகம் என்பது வெறும் வாய்ச்சொல் விளையாட்டல்ல என்பதை கேஜ்ரிவால் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், நாடு முழுவதும் 300 இடங்களில் லோக்சபா தேர்தலில் ஆ.ஆ.க. போட்டியிடும் என்ற அறிவிப்பின் மூலமாக, மக்களை தொடர்ந்து முட்டாளாக்க முடியும் என்று அவர் நம்புவதாகவே தெரிகிறது.

கேஜ்ரிவாலுக்குக் கிடைத்துள்ள் ஊடக வெளிச்சம் எவ்வாறு உண்மைக்குப் புறம்பாக உள்ளது என்று இதுவரை பார்த்தோம். இந்த நேரத்தில், எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அற்புதமான பணிகளைச் செய்துவரும் பாஜக முதல்வர்கள் குறித்து இதேபோன்ற ஊடக வெளிச்சம் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பானதே.

முதன்மை முதல்வர்கள்:

கோவா முதல்வராக உள்ள மனோகர் பாரிக்கர், மிகவும் எளிமையானவர்- மிதிவண்டியில் அலுவலகம் செல்லும் அளவிற்கு. இவர் குடியிருப்பது தனக்குச் சொந்தமான பழைய வீட்டில். அரசு இவருக்கு அளித்த ஆடம்பரமான பங்களாவை மறுதலித்து, சாதாரணமான கட்டடத்தில் தனது முதல்வர் அலுவலகத்தை நடத்துகிறார். இவருடன், இரட்டை பங்களாவுக்கு ஆசைப்பட்டுக் குட்டுப்பட்ட கேஜ்ரிவாலை ஒப்பிடவே முடியாது.

உடனிருந்த சகாவெ சொல்லும் உறுதியான சாட்சியம்- பின்னி
உடனிருந்த சகாவே சொல்லும் உறுதியான சாட்சியம்- வினோத்குமார் பின்னி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அவருடன் இருப்போர் ஒரு சமையல்கார்ர், இரு உதவியாளர்கள் மட்டுமே. சிலசமயம், சமையல்காரருக்கு உதவியாக மோடியே சப்பாத்தி சுடுவார். அவரது வீட்டிற்கு அவரது அம்மா, சகோதர சகோதரிகள் எவருமே வருவதில்லை. குடியரசுத் தலைவர் மாளிகையையே கேலிக்கூத்தாக்கிய முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுடன் தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை நூறுக்கு மேல். ஆனால், மோடியின் எளிமையைப் புகழ நமது ஊடகங்களுக்கு மனமே வராது.

சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், ராஜபுதன பரம்பரையைச் சார்ந்த ஆயுர்வேத மருத்துவர். இரண்டாவது முறையாக முதல்வராகியுள்ள இவரை மக்கள் எந்நேரமும் பார்க்கலாம். எளிமை என்றால் என்ன என்று ரமண்சிங்கிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவரைவிட, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மிகவும் எளிமை. மக்கள் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்க எந்நேரமும் தயாராக இருப்பவர். அதற்காக ஊடக வெளிச்சத்தில் ஜனதா தர்பார் நடத்துபவர் அல்ல. இவர் மக்களைச் சந்திப்பது பிரச்னைகளைத் தீர்க்கவே ஒழிய, தான் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள அல்ல. அதனால் தான் ஜனதா தர்பார் நடத்துவதாக அறிவித்து மக்கள் குவிந்தவுடன் கட்டுப்படுத்த முடியாமல் அந்த இடத்திலிருந்தே ஓட்டமெடுத்த கேஜ்ரிவால், சௌகானிடம் பாடம் கற்க வேண்டி இருக்கிறது.

ராஜவம்சத்தைச் சார்ந்த ராஜஸ்தான் முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியாவோ, எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி ஊழலற்ற ஆட்சி நடத்துகிறார். ஆனால், ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிய கேஜ்ரிவாலோ ஆட்சி நடத்தாமல் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். இவரது  சக அமைச்சர் சோம்நாத் பார்த்தி, தான் ஆஜராகும் வழக்கில் சாட்சியத்தைக் குலைக்க முயன்றதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. சட்டத்தை மீறும் இவர் தான் தில்லி சட்ட அமைச்சர்!

இவை அனைத்தையும் விட, ஆ.ஆ.க.யின் எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னியின் கடுமையான குற்றச்சாட்டுகள் கேஜ்ரிவால் மீதான மதிப்பை ஆட்டம் காணச் செய்துள்ளன.  “அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி; சுயநலவாதி; அண்ணா ஹஸாரே முதல் கிரண் பேடி வரை பலரையும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது கேஜ்ரிவாலுக்கு கைவந்த கலை” என்று குற்றம் சாட்டி இருக்கிறார் பின்னி. அமைச்சர் பதவி கிடைக்காததால் பின்னி அவதூறு பரப்புவதாக இதைப் புறம்தள்ளுகிறார் கேஜ்ரிவால். ஆனால், நெருப்பில்லாமல் புகையாது என்பதை மக்கள் உணர்ந்தே உள்ளனர்.

சட்டத்தை மீறும் முதல்வர்:

இப்போது தில்லியில் இவர் நடத்திய இரண்டுநாள் (ஜனவரி 20, 21) போராட்ட நாடகம் கண்டு, இவரை இதுவரை ஆதரித்தவர்களும் கூட தலையில் கைவைத்துக் கொண்டு யோசிக்கிறார்கள்.

சட்டத்தை மீறிய தில்லி சட்ட அமைச்சர் சோம்நாத்துக்கு மக்களின் எதிர்ப்பு
சட்டத்தை மீறிய தில்லி சட்ட அமைச்சர் சோம்நாத்துக்கு மக்களின் எதிர்ப்பு

தெற்கு தில்லியில் உகாண்டா நாட்டுப் பெண்கள் தங்கியிருந்த பகுதிக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து நடத்திய ஆய்வு என்ற பெயரில் அத்துமீறலால் தனது சக அமைச்சர் சோம்நாத் பார்த்தி  மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதை அறிந்துகொண்டு கேஜ்ரிவால் நடத்திய நாடகம் தான் தில்லி தெருவில் இறங்கிய போராட்டம்.

தனது ஆய்வின்போது உகாண்டா நாட்டுப் பெண்களை நிற ரீதியாகவும், பாலின ரீதியாகவும் விமர்சித்ததுடன் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் சோம்நாத் பார்த்தி.  அவர்கள் போதைப்பொருள் விற்றதாகவும், விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறும் சோம்நாத் தில்லியின் சட்ட அமைச்சர். அதற்காக, தானே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அவர் ஆடிய ஆட்டத்தை ஏற்க முடியாது. மேற்படி உகாண்டா பெண்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை தேவை என்று அவர் முரண்டு பிடித்ததும் கிறுக்குத்தனமானது. சட்டம் அறியாத ஒருவரை சட்ட அமைச்சராகப் பெற்றுள்ள தில்லி மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள்!

இவரைக் காக்கவே, தில்லி மாநில அரசுக்கு போலீஸ் துறை மீது அதிகாரம் வேண்டும் என்று கோரியும், அமைச்சர் சொற்படி செயலபடாத போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக் கோரியும் தெருவில் இறங்கிப் போராடினார் கேஜ்ரிவால். இப்போது சோம்நாத் பார்த்தி மீதும், தில்லியில் போலீஸாரை எதிர்த்து போராடியோர் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதுவும், குடியரசு தின விழா நடைபெற சில தினங்களே உள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தை (நார்த் பிளாக்)   ‘கெரோ’ செய்யப்போவதாக அறிவித்து, தில்லியின் பிரதானப் பகுதியில் இவரும் இவரது ஆதரவாளர்களும் நடத்திய போராட்டம் பெரும் கேலிக்கூத்து. கேஜ்ரிவால் முதல்வர் என்பதால் கைதாகாமல் தப்பினார். இவருக்கு ஆதரவளித்ததன் பலனை காங்கிரஸ் இப்போது நன்கு புரிந்துகொண்டிருக்கிறது.

ஆ.ஆ.க.யின் அரசு அமைந்து (டிசம்பர் 28, 2013)  ஒரு மாத காலத்திற்குள் கவிழும் நிலையை அடைந்திருப்பது நன்றாகவே தெரிகிறது. இவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறத் தயாராகி வருகிறது காங்கிரஸ்! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது;  எது  நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

தேச விரோத கருத்துக்கள்:

முதல்வர் கேஜ்ரிவால் தனது தில்லித் தெருப்  போராட்டத்தின் போது உதிர்த்த முத்துக்கள், அவரது உண்மையான நிறத்தை வெளிப்படுத்திவிட்டன. தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில், குடியரசுதின அணிவகுப்பு நடைபெறும் சாலையில் மக்களைத் திரட்டி,  விழா கொண்டாட்டங்கள் நடக்க விடாமல் தடுப்போம் என்றும் கூட மிரட்டல் விடுத்தார் கேஜ்ரிவால்.

Lathi charge
வன்முறையாக மாறிய ஆம் ஆத்மி கட்சியின் புதுதில்லி தெருப் போராட்டம்

 ‘குடியரசு தின அணிவகுப்பு வெறும் பொழுதுபோக்குத் தான்’ என்றும் கூறி இருக்கிறார் கேஜ்ரிவால். நாட்டின் கௌரவத்திற்குரிய ஒரு நிகழ்வை ஆ.ஆ.க. எவ்வாறு கருதுகிறது என்பதே கசப்பான அதிர்ச்சி அளிக்கும் உண்மையாக உள்ளது.  காஷ்மீர்ப் பிரிவினைவாதிகளுடனும் கூடங்குள அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாருடனும் குலவும் ஒரு கட்சியிடமிருந்து இதைத் தவிர வேறெதை எதிர்பார்க்க முடியும்?

இதைவிடக் கொடுமை, மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே மீதான கேஜ்ரிவாலின் அபாண்டமான குற்றச்சாட்டு.  ‘தில்லி போலீஸார்  வசூலிக்கும் லஞ்சப் பணத்தில் ஒரு பங்கை மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவுக்கு கொடுக்கிறார்கள்’ என்ற கேஜ்ரிவாலின் புகார் மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல, நாகரிகமற்றதும் கூட. ஷிண்டே யோக்கியமானவராக இல்லாமல் இருக்கலாம்- ஆனால், அவர் நாட்டின் உள்துறை அமைச்சர். அவரைக் கேவலப்படுத்துவதென்பது நமது முகத்தில் நாமே  கரி பூசிக் கொள்வது தான்.

அது மட்டுமல்ல, சட்டங்களை மறுப்பதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம் என்றும் கூறி இருக்கிறார் கேஜ்ரிவால்.  இவர் முதல்வராக பதவிப்பிரமாணம் ஏற்றபோது செய்த உறுதிமொழியில் முக்கியமானது  ‘சட்டத்தின் ஆட்சியைக் காப்பேன்’ என்பது.  இப்போது சட்டத்தை ஏற்க முடியாது என்று மாநில முதல்வரே கூறுவதை என்னென்பது?

இவரது கட்சியின் இன்னொரு  பிரமுகரான குமார் விஸ்வாஸ், கேரள நர்ஸ்கள் கறுப்பர்களாக இருப்பதால் தான் அவர்களை சிஸ்டர்ஸ் (சகோதரிகள்) என்று அழைப்பதாக,  நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பிதற்றி இருக்கிறார். இப்போது மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.  ஆ.ஆ.க.யின் பிரதான தலைவரான பிரஷாந்த் பூஷனோ, ஜம்மு காஷ்மீரிலிருந்து  பாதுகாப்புப் படைகள் விலக வேண்டும் என்று கூறி, சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அரசு நிர்வாகம் தெருக்கூத்தல்ல:

தன்னை இதுவரை ஆதரித்த ஊடகங்களிடமும்,  பெருவாரியான தில்லி மக்களிடமும் ஏற்பட்ட மனநிலை மாற்றத்தை உணர்ந்துகொண்ட அரவிந்த் கேஜ்ரிவால், தனது கோமாளித்தனமான 10 நாள் தெருப் போராட்டத்தை இரண்டு நாளில் வாபஸ் பெற்றார் (ஜன. 21);  தில்லி துணைநிலை ஆளுனர் அளித்த உறுதிமொழியை ஏற்று  தனது தர்னாவை வாபஸ் பெறுவதாகக் (!) கூறி நழுவினார். அதுமட்டுமல்ல, உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையிலும் சேர்ந்துவிட்டார். இவரை சமூக சேவகர் அண்ணா ஹஸாரே ஏன் கழற்றிவிட்டார் என்பது இப்போது தெளிவாகவே புரிகிறது.

ஆ.ஆ.க.யின் அராஜகப் போக்கிற்கு முன்னாள் சகாவின் எச்சரிக்கை- கிரண் பேடி
ஆ.ஆ.க.யின் அராஜகப் போக்கிற்கு முன்னாள் சகாவின் எச்சரிக்கை- கிரண் பேடி

கேஜ்ரிவால், இப்போதேனும்,  ஆட்சி நிர்வாகத்தை நடத்தவே தன்னை முதல்வராக்கினர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  ஆட்சி நடத்துவது என்பது விளம்பர வெளிச்சத்திற்காக நடத்தப்படும் மேடைக் கூத்துகளல்ல என்பதை அவர் உணர வேண்டும்.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும் கேஜ்ரிவாலின் முன்னாள் தோழருமான கிரண் பேடி, கேஜ்ரிவாலின் அற்ப நாடகங்களை கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.  “தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏன்தான் வாக்களித்தோம் என்று வாக்காளர்கள் கவலை கொள்ளும் வகையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் செயல்பாடு அமைந்துள்ளது. பிரதேச முதல்வரான பிறகும் அவரால் வீதிக்கு வந்து போராடித் தான் கோரிக்கையை வலியுறுத்த முடிகிறது. இதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. தில்லி வாக்காளர்களை நினைத்து வருத்தப்பட மட்டுமே முடிகிறது. முதல்வருக்கான தகுதி, மரியாதை, மதிப்பு ஆகியவற்றைப் பற்றி எல்லாம் அரவிந்த் கேஜரிவால் உணர்ந்துள்ளாரா என்ற கேள்வியும் எனக்கு எழுகிறது. அவரது நோக்கம் சரியாக இருந்தாலும் அவருடைய பாதை மிகவும் ஆபத்தானது. முதல்வருக்குரிய பொறுப்புடன் கேஜரிவால் நடந்து கொள்ள வேண்டும் என நானும் தில்லி வாக்காளர்களும் எதிர்பார்க்கிறோம்’ என்றார் கிரண் பேடி.

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியவர்கள் நாடகங்களில் இறங்கினால், மக்கள் சரியான நேரத்தில் கூத்தாடிகளுக்கு பாடம் கற்பிப்பார்கள்.  ஆட்சிக்கலையும் அரசியலும் ராஜதந்திரமும் ஒன்றோடொன்று பிணைந்தவை. குறுகிய சுயலாபத்திற்காக கேஜ்ரிவால் அரசியல் நாடகம் ஆட முயன்றால், விரைவிலேயே ஆ.ஆ.க.யின் சின்னமான துடைப்பத்தாலேயே அடி வாங்க வேண்டியது தான்.

ஈயம் சிலகாலம் வெள்ளி போலப் பளபளக்கலாம். ஆனால், விரைவில் கறுத்து நிறம் மங்கும்போது அதன் சாயம் வெளுத்துவிடும். அதுபோலவே, ஆட்சிக்கு வந்து சில வாரங்களிலேயே அரவிந்த் கேஜ்ரிவாலின் சாயமும் வெளுக்கத் துவங்கி இருக்கிறது. இனிவரும் நாட்களில் இவரது வேடம் முழுவதும் கலைவதை தேசம் காணத் தான் போகிறது.

.

தொடர்புடைய சில பத்திரிகை செய்திகள்:

1. கைகொட்டி சிரிப்பார்கள்! (தினமணி- தலையங்கம்- 22.01.2014)

2. Shun Street Protests and Focus on Governance (TNIE- Editorial- 21.01.2014)

3. அரசியல் கூத்து (தி இந்து- தலையங்கம்- 23.01.2014)

4.  The antics of a Chief Minister (THE HINDU- Editorial – 22.01.2014)

5.  Grammar of anarchy: Being chief minister and chief protester is not a tenable proposition in any democracy (ToI- Article – 23.01.2014)

6. The agitation by Kejriwal and party made life really difficult for aam aadmi (Hindustan Times – Editorial- 21.01.2014)

.

.

9 Replies to “சாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்”

  1. இந்த தேசத்தின் தலை எழுத்து! :(((( இப்படியான கோமாளிகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயம். இவரையும் ஆதரிக்கும் நபர்களும் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. 🙁

  2. KEJRIVAL WAS TELLING HOW H.M SHINDE CAN SLEEP WHEN DELHI WOMEN ARE NOT SAFE.
    BY SENDING THREE COPS ON LEAVE (WHO SAVED AFRICAN GIRL FROM THE MOB), KEJRIVAL CAN SLEEP PEACEFULLY.
    HE TOLD DELHI POLICE SHOULD COME UNDER DELHI GOVT AND THERE IS NO COMPROMISE ON ISSUE.HOW HE COMPROMISED?
    I NEVER SAW ANY TV CHANNEL IS ASKING DIRECT QUESTIONS TO KEJRI. UNTIL OUR TV CHANNELS SUPPORT AND CONGRESS’S INDIRECT SUPPORT, THIS MENACE CAN NOT BE REMOVED FROM POLITICS.

  3. நரேந்திர மோடி பாரத பிரதமரானதும், உடனடியாக செய்ய வேண்டிய காரியம், கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் மற்றும் உதய குமார் முதாலானோரை பின்னாலிருந்து இயக்கும் அந்நிய சக்திகளை கண்டுபிடித்து, மக்களிடம் அம்பலப்படுத்துவதோடு, சட்டப்படி கடும் நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.

  4. சொற்குற்றம் => சாயம் வெளுக்கும் 🙂

  5. முஸ்லிம், மற்றும் கிறிஸ்துவ மக்கள் பா.ஜா.கவுக்கு வாக்களிக்க மாட்டார்கள், ஆனால் ஹிந்துக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மோடிக்கு வாக்களித்து இந்தியாவை காப்பாற்றுவது ஓவ்வரு ஹிந்துவின் கடமை. அனைவரும் ஒன்று படுவோம். ஜைஹிந்த் நமோ நாம.
    க.இரவி

  6. EMPTY VESSEL MAKES GREATEST NOISE!!! He is activated by enemies of India and he is just an instrument in their hands. I pray to (NaMo Narayana) HIM that People of Bharat wake up soon to dismantle such chains on Bharat Mata.

  7. இரண்டு விஷயங்கள்

    தில்லியில் ஆஃப்ரிக்க தேசத்தினர் பலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பது ரகசியம் அல்ல.

    எல்லா ஆஃப்ரிக்கர்களும் சட்டவிரோதிகள் என்ற நிலைப்பாடு தேவையில்லை என மனித உரிமை பற்றி நமக்குப் பாடம் எடுக்கும் அமேரிக்கர்கள் சொல்வர். ஆனால் ஹிந்துஸ்தானத்திலிருந்து ஷாருக்கான் அல்லது ஸல்மான் கான் — ஏன் அப்துல் கலாம் — என்று முஹமதிய பெயர் தொனிக்கும் யார் சென்றாலும் — இவர்கள் முஹமதியர்கள் என்றாலே — உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பரிசோதனை செய்வது என்பது — stereotyping பற்றி ஊருக்கு உபதேசம் செய்யும் அமேரிக்கர்கள் செய்யும் காரியம்.

    கிர்க்கி காவ் பகுதியில் அந்தப்பகுதி குடிமக்கள் அங்கு குடியிருக்கும் ஆஃப்ரிக்கர்களால் உள்ளாகும் தொல்லைகள் சொல்லிமாளாது. அந்தப்பகுதியில் வீட்டை வாங்கி வெளி தேசத்தவருக்கு வாடகையில் வீடு கொடுப்பவர் கொழுத்த வாடகைப்பணத்தை அனுபவிப்பவர்கள். தொல்லைகளுக்கு உள்ளாவது அந்தப்பகுதி மக்கள். மாணவர்கள் என்று அறியப்படும் விதேசத்தவர்கள் உள்பட பலபேர் பகலில் தூங்கி இரவில் —- மிகப்பெரும் சத்தத்துடன் தங்கள் கேட்ஜெட்டுகளில் பாடல் போட்டு குடித்து கும்மாளம் போடுவது……………… போதைப்பொருள் வ்யாபாரத்தில் ஈடுபடுவது ………….. இதெல்லாம் வெகுவாக நடக்கும் விஷயம்.

    ஸ்ரீ சோம்நாத் பாரதி சட்டத்தைத் தன் கையில் எடுத்து சாமியாடுவது என்பது அதிகப்படி என்று சொல்லலாம். ஆனால் இந்த விதேசத்து அடாவடிக்கும்பல் அடிக்கும் கூத்தும் குறைந்தது இல்லை. அந்தப்பகுதி மக்கள் இப்படி ஒருத்தர் தங்களுக்காக குரல் எழுப்ப முனைந்ததைக் கூட ஒரு ஆறுதலாகவே கருதுகிறார்கள். ஆஃப்ரிக்கர்களும் கொஞ்சம் அடக்கி வாசிக்க முனைவதாகவும் (அஞ்சுவதாகவும்) கேழ்வி. ஆப்புக்கு ஆதரவு பெருகியதா இல்லையா தெரியாது. கிர்கி காவ் மக்களுக்கு டெம்பரரியாகவே ஆயினும் சரி சற்றே சாந்தி கிட்டியிருக்கிறது என்றால் மிகையாகாது.

    இதை எப்படிக் கையாள்வது ———– பெரும் கலாசார இடைவெளியால் வரும் ப்ரச்சினைகளை எப்படி சரிசெய்வது —- இந்த ஆஃப்ரிக்கர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது — விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் (விஷயத் தெளிவுடன் – வெளிதேச உறவுகளுக்குக் குந்தகம் இல்லாத படிக்கு). சமயம் கிடைக்கும் போதெல்லாம் பல ஆஃப்ரிக்க தூதர்கள் ஹிந்துஸ்தானத்தை கிண்டிப்பார்ப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம்.

    அர்விந்த் கேஜ்ரிவால் – சுஷில்குமார் ஷிண்டே

    ஸ்ரீ அஜய் மாக்கன் அவர்கள் அ.கே வயதில் மூத்த ஷிண்டே அவர்களை “ஜி” என்று அழைக்காதது அடாவடி என்று சொல்லியுள்ளார். ஷிண்டே அவர்கள் அ.கே வை மராட்டி ஸ்லேங்கில் “யேடா முக்யமந்த்ரி” – பித்துக்குளி முக்யமந்த்ரி என்று சொல்லியுள்ளார். காங்க்ரஸின் ஆஸ்தான விதூஷகரான திக்விஜய்சிங்க் அவர்களோ கேழ்க்கவே வேண்டாம். பாபா ராம்தேவ் அவர்களை “டக்”- ஏமாற்றுப்பேர்வழி என்றும் ஒஸாமாவை – ஒஸாமா ஜி என்றும் சொல்லும் தகைமை படைத்தவர். இவர்களது தலை – இத்தாலி ராஜமாதா அவர்கள் ஹிந்து ஹ்ருதய சாம்ராட்டான நரேந்த்ரபாய் மோடி அவர்களை “மௌத் கா சௌதாகர்” என்று சொல்லி குஜராத்தில் வாங்கிக்கட்டிக்கொண்டவர். ஹிந்துவிரோத – தேசவிரோதப் பதரான மணிசங்கர் ஐயர் கேழ்க்கவே வேண்டாம். மோடி அவர்களை பிஎம் ஆகவே முடியாது – வேண்டுமானால் காங்க்ரஸ் கூட்டத்தில் சாய் விற்கலாம் என்று கிண்டலடித்த பேர்வழி.

    இதுகளெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

  8. வெளுப்பது ஏ கேவின் சாயம் மட்டுமல்ல. படித்த சில நண்பர்களின் சாயமும் தான்.

    இவ்வளவு வருமாக சில நண்பர்கள் ,ஊடகங்களை தெய்வம் போல் நம்பி வந்தவர்கள். , இப்போது காங்க்ரேஸ் திருந்தது என்று அவர்கள் உணர ஆரம்பித்துவிட்டாலும், காவி நிறமா! ஐயோ! என்ற “நிறவெறிக்” கொள்கையால் கேஜ்ரியை ஆதரிக்கிறார்கள்.காரணம் AAP யை உவந்தேத்தும் ஊடகங்கள் தான்.

    கேட்டால் அவர் நன்கு படித்தவராம். அப்படியானால் மனோகர் பரிக்கர்? இவர்கள் உவந்தேத்தும் IIT உயர் படிப்பு அவரும் படித்திருக்கிறார்.

    ஏன் நம்மூரில் ஆங்கிலம் படிக்காத, ஆனால் வாழ்க்கையைப் படித்த, ஊழலற்ற பெருந்தலைவர்கள் முதல்வர்கள் இருந்தது இல்லையா?

    படித்தவர்கள் பல விதங்களில் தங்கள் படிக்காத சகோதரர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

    எனக்கு தெரிந்த ஒருவர்-நன்கு படித்தவர்.நல்லாத் தான் இருந்தார் – தனது பணம் மற்றும் தனது முன்னோர்கள் சொத்தை இந்த மாங்காய் கட்சிக்கு தாரை வார்க்கத் தெரிந்தார்.

    ” எலெக்ஷன்ல AAP சார்பில நிக்கப் போறேன்!” என்றார் .கடைசி நிமிடத்தில் அவர் வீட்டு பெரியவர்கள் ரகளை செய்யவே தப்பித்தார்.

    அவர் போன்றோருக்கு உண்மை என்று தான் விளங்குமோ.

    சாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *