தேர்தல் 2021: யாருக்கு வாக்களிப்பது?

(தமிழ்ஹிந்து தளத்தில் எழுதும் கட்டுரையாசிரியர்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த சில கருத்துக்களைத் தொகுத்து அளிக்கிறோம்).

ஹரன்பிரசன்னா:

நான் யாருக்கு வாக்களிக்கச் சொல்லப் போகிறேன்? யாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லப் போகிறேனோ அதில் இருக்கிறது பதில். புதிதாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஹிந்துக்களை மட்டம் தட்டிய, ஹிந்துக்களைக் கிண்டல் செய்த, ஹிந்துக்களை கேவலப்படுத்திய திமுகவுக்கு எக்காரணம் கொண்டு வாக்களிக்கக் கூடாது. அப்படி வாக்களிக்காமல் திமுகவைத் தோற்கடிக்க வேண்டுமானால், ஒரே வழி, அதிமுகவைத் தேர்ந்தெடுப்பதுதான். அதிமுக புனிதமான கட்சியா என்ற கேள்விக்கு நிச்சயம் என்னிடம் நேர்மையான பதில் கிடையாது. ஆனால் இன்றைய நிலையில், நம் எண்ணம் திமுகவைத் தோற்கடிப்பதாகவே இருக்கவேண்டும். ஒரு கட்சியைத் தோற்கடிப்பதா தேர்தல் என்ற கேள்வி எழலாம். எக்காரணம் கொண்டும் பாஜக உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்று ஒரு பெருங்கூட்டமே கொள்கை வகுக்கும்போது, திமுகவைத் தோற்கடிப்பதை லட்சியமாகக் கொள்வதில் பிழை ஏதுமில்லை. இனிமேல் எழுதப் போவதை எல்லாம் இதை மனதில் கொண்டே வாசிக்கவும்.

2019 தேர்தலில் ஸ்டாலின் பெற்ற பெரிய வெற்றி, திமுக உடைந்து போகும் என்னும் எண்ணத்தை முற்றிலுமாகத் தவறு என்றாக்கிவிட்டது. அப்படியும் ஒரே ஒரு நன்மை நடந்தது. அப்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஸ்டாலின் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இது, ஸ்டாலின் முதல்வர் ஆவதை மக்கள் விரும்பவில்லை என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய வழிவகுத்தது. இன்று அதிமுக இருக்கும் ஒரே முக்கியமான அஸ்திரம், இடைத் தேர்தல்களில் ஸ்டாலினை மக்கள் ஆதரிக்கவில்லை என்பது. இவை போக இன்னும் சில நேர்மறை விஷயங்கள் அதிமுக பக்கம் இருக்கின்றன.

முதலாவது, சசிகலா ஒதுங்கிக் கொண்டது. இதனால் அதிமுகவின் அசைக்கமுடியாத ஒரு தலைவராக ஈபிஎஸ் ஆகிவிட்டார். பிரசாரமும் அவரைச் சுற்றியே நடக்கிறது. அடுத்து, ஓபிஎஸ் ஈபிஎஸ் பிணக்குகள் இப்போதைக்குத் தலை தூக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு வரலாம். ஆனால் தேர்தலில் அது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அடுத்து, சென்ற 2019 தேர்தலைப் போல, எடப்பாடி தன்னை முதலில் நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்கிற தவிப்பில் இல்லை. எனவே அவரால் இயல்பாகவே பிரசாரம் செய்ய முடிகிறது.

சென்ற 2019 தேர்தலில் எடப்பாடி மட்டுமே சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அவரவர் தொகுதியோடு நின்று கொண்டார்கள். அத்துடன், அவர்களுக்குள் ஒரு இணக்கம் இல்லை. 2019 தேர்தலின் அதிமுக கூட்டணி தோல்விக்கு முக்கியக் காரணமே இதுதான். ஆனால் இந்த முறை இந்த விலக்கம் குறைந்திருக்கிறது. எல்லாருமே கொஞ்சம் தெளிவாக, முனைப்பாகப் பிரசாரம் செய்வதைப் பார்க்கமுடிகிறது. இவை எல்லாம் அதிமுகவின் ப்ளஸ்கள்.

தனது பதவிக் காலத்தின் முதல் மூன்று ஆண்டுகளை, தன்னைத் தலைவராக நிலை நிறுத்துவதிலேயே கழித்துவிட்டார் எடப்பாடி. பின்னர் கொரானா காலம். கடைசியாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு மளமளவென பல அறிவிப்புகள். இவை எல்லாம் எந்த அளவுக்கு அவருக்குக் கை கொடுக்கும்? என்னைப் பொருத்தவரை, கடைசியில் வரிசையாகச் செய்யப்பட்ட அறிவிப்புகள் அவருக்குப் பெரிய அளவில் உதவாது என்றே நினைக்கிறேன்.
திமுகவின் வாக்குகள் சிதறாமல் இருக்க, அதிமுகவின் வாக்கு, சொற்பமே என்றாலும் அமமுகவுக்குக் கொஞ்சம், தேமுதிக பிரிந்ததால் கொஞ்சம் என்று சிதறும் வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கப் போவதில்லை. இவையெல்லாம் பெரிய சோதனைகள்.

எடப்பாடி மீது அதிருப்தி இல்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு முதல் காரணம், அவர் ஜெயலலிதா போலவோ கருணாநிதி போலவே செல்வாக்கு கொண்ட தலைவர் அல்ல. எனவே அவர் மேல் எதிர்பார்ப்பும் இல்லை, அதனாலேயே அதிருப்தியும் இல்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற இடத்தில் இருந்து தேர்தலை எதிர்கொள்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக, பாமக, பாஜக என்ற கட்சிகள் ஒன்றிணைந்து அவரவர்கள் வாக்கு வாங்கியை நம்பியே இத் தேர்தலைச் சந்திக்கின்றன. அந்த வாக்கு வங்கி அப்படியே சிதறாமல் கிடைப்பது கடினம். மநீம, நாம் தமிழர், அமமுக என்று பல கட்சிகள் வாக்குகளைப் பிரிப்பதால், அது திமுகவுக்கு சாதகமாகும் வாய்ப்பு இருக்கிறது. அது நடக்காமல் இருக்க வேண்டுமானால், ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதோடு ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கவேண்டும் என்ற பிரசாரமும் அதே அளவுக்கு ஈடாக செய்யப்பட வேண்டும்.

பார்க்க: தமிழகத்துக்கு நயவஞ்சகம் இழைத்தாரா நரேந்திர மோடி?


சுந்தர் ராஜ சோழன்:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு கூடியிருக்கிறது. பத்து வருட ஆட்சி மக்களுக்கு முன்னால் இல்லை, எடப்பாடியின் ஆட்சி மட்டும்தான் மூளையின் பதிவில் உள்ளது அதுதான் நடப்பு ஆட்சிக்கு எதிரான மனநிலை (Anti incumbency) இல்லாததற்கு முக்கியக் காரணம். அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இரண்டு கட்சியுமே தன் முந்தைய பலத்தை விட இன்னும் மேலே ஏறியுள்ளது. 2006ல் ஜெயலலிதா செய்ய தவறிய கூட்டணிகளை இந்த முறை அதிமுக சரி செய்திருக்கிறது. 2019 ல் ஓங்கி தரையிலடிக்கப்பட்ட பந்து அதிமுக கூட்டணி. வானத்தை நோக்கி வீசப்பட்ட பந்து திமுக கூட்டணி. வானத்தில் உச்சத்திற்கு போன பந்து பூமியை நோக்கி வருகிறது. அதுபோல தரையிலடித்த பந்து எழும்பி வானத்தை நோக்கி போகிறது. இது இரண்டும் எவ்வளவு தூரம் போகும் என்கிற பரிசோதனை தான் இந்த தேர்தல்.

“உனக்கு நல்ல சாவே வராது. உங்கம்மாவ விட நீ மோசமா சாவ, உன்னோட பிறப்பு நியாயமானதா?” – முதல்வர் எடப்பாடியை நோக்கி வீசப்படும் இந்த வசைகளெல்லாம் அடிவயிற்றில் இருந்து எழும் வெறுப்பை தவிர வேறேதும் இல்லை. எங்கிருந்தோ திடீரென வந்து தங்கள் வெற்றியை தடுக்க நிற்கிறானே ஒருவன்? என்கிற காழ்ப்புதான் இது. அன்று மோடியை நோக்கி மணிஷங்கர் ஐயரும், இன்று எடப்பாடியை நோக்கி ஆ.ராஜாவும் கக்கிய வார்த்தை விஷமானது. தோல்வியை ஜீரணிக்க முடியாததில் விளைந்தது.

திரும்பத்திரும்ப “எடப்பாடியின் அரசியல் வளர்ச்சி குறித்த விமர்சனம் அது, எனவே தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றே முட்டுக் கொடுக்கிறார்கள் திமுக காரர்கள். ஆனால் பிரச்சனையே அப்படியென்றால்தான் இன்னும் அதிகமாக உள்ளதாக பொருள்.

நபும்ஸகன், கூனர், அங்கஹீனன் அதிகாரத்துக்கு வரக்கூடாது என்று பழைய முடியாட்சி கால நீதியை நிலைநாட்ட ஆ.ராசா பேசுகிறாரா என புரியவில்லை. குறைப்பிரசவத்தில் பிறந்தால் என்ன? கள்ள உறவில் பிறந்தால் என்ன? ஒருவன் ஆண்மையற்றவனாக இருந்தால் என்ன? ஜனநாயகம் இவர்களுக்கான வாய்ப்பை வழங்குகிறதா இல்லையா அரசியல் செய்ய? இப்போது ஆ.ராசாதான் மனுநீதியை பின்பற்றி நல்ல உறவில் வந்தவன் நாடாள வேண்டும் என்ற அளவீடை பொருத்துகிறார். இதுதான் திராவிட பகுத்தறிவு என்றால் சிரித்துவிட்டு நகருவதை தவிர வேறு வழியில்லை.


ஜடாயு:

உதயநிதி ஸ்டாலின் என்ற இந்த நபர் தான் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து விட்டு பிறகு ஏதோ கொலைக்குற்றம் செய்துவிட்டது போல தயங்கி, கூனிக்குறுகி “அம்மா பூஜை செஞ்சாங்க நான் செய்யல” என்று மென்று விழுங்கி தத்துப்பித்து விளக்கமெல்லாம் கொடுத்தது. தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கும் ஒரு ஏழைப்பாட்டி கூட தனது பிள்ளையார் பூஜையை பெருமிதத்துடன் பறைசாற்றுவார். ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் இளவல் அதற்கு ஆயிரம் மழுப்பல்கள் செய்ய வேண்டிய இடத்திற்கு திமுக தமிழர்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

அந்தப் புகைப்படத்திற்காக 50 வருட திராவிட இயக்க வரலாற்றையே அழித்து விட்டார், தாம் தூம் என்று குதித்த திமுக “ஆதரவு” கூட்டங்களிடமிருந்து இந்தப் புகைப்படத்திற்கு விளக்கம் கேட்டு ஒரு சிறு முனகல் கூட வெளிப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்.

ஒரு பக்கம் தங்கள் கட்சியை ஆணையிட்டு ஆட்டிவைக்கும் கிறிஸ்தவ ஆண்டைகளாலும், கருணாநிதி குடும்ப ஆண்டைகளாலும், மறுபுறம் அதைப்பற்றிய பிரக்ஞையும் சொரணையும் கூட இல்லாமல் ஏதோ தாங்கள் பெரிய முற்போக்கு புடுங்கிகள் பகுத்தறிவாளர்கள் என்ற சுய ஏமாற்றத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவற்ற ஆட்டுமந்தைக் கொத்தடிமைகளாலும் இயக்கப் படும் கட்சி திமுக.

தமிழ்நாட்டை கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு சிறிதும் தயக்கமின்றி அடகு வைப்போம் என்று திமுக பிரகடனம் செய்வதையே இந்தக் காட்சி குறியீட்டு ரீதியாக உணர்த்துகிறது. தமிழ்நாட்டில் இந்திய தேசிய உணர்வு, இந்து வாழ்வுரிமை பாதுகாக்கப் படவேண்டும் என்றால் திமுக ஒழியவேண்டும். இது ஒன்றையே மனதில் கொண்டு 2021 தேர்தலில் வாக்களியுங்கள்.


“திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒரு 2ஜி ஏவுகணையை வீச ஆரம்பித்துள்ளது. அது பெண்களை இழிவுபடுத்துவது ஆகும். மரியாதைக்குரிய முதல்வரின் தாயாரை இழிவு செய்யும் அளவுக்கு போய்விட்டது. இறைவா! இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக பெண்களுக்கு யார் பாதுகாப்பு தருவார்கள் இவர்களிடம் இருந்து? திமுகவுக்கும், காங்கிரஸிற்கும் பெண்களை இழிவுபடுத்துவதே நோக்கம். திண்டுக்கல் லியோனி என்ற திமுக பேச்சாளர் பெண்களை இழிவுபடுத்தி பேசியதை திமுக தலைவர் கண்டிக்கவில்லை. அதுமட்டுமல்ல, மூத்த திமுக தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு அதன் இளவரசராக எழுந்திருப்பவர் அருவருக்கத்தக்க வகையில் பெண்களைத் தாக்கி பேசி வருகிறார். நாம் ஒரு நாளை மறக்கக்கூடாது. அது 25 – மார்ச் – 1989 ஆகும். அந்த நாள் தான் நம் மரியாதைக்குரிய தலைவி செல்வி.ஜெயலலிதாவை சட்டமன்றத்துக்குள் திமுக தலைவர்கள் தாக்கிய நிகழ்வு நடந்த நாள். இதுதான் திமுகவின் கலாச்சாரம். இதன் தலைவர்கள் எப்போதும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள்..”

பிரதமர் நரேந்திர மோடி, தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில் (30 மார்ச் 2021)

தேர்தல் 2021 பதிவுகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *