தலபுராணம் என்னும் கருவூலம் – 3

முந்தைய பகுதிகள்:

காஞ்சிப் புராணம் – வேதக் கருவூலம் (தொடர்ச்சி…)

நான்மறைப் பொருளாய்க் கதைக்கெலாம் இடனாய் நாற்பயன் உதவும்ஏ கம்பன்
மேன்மையுங் காம நோக்குடை இறைவி மேன்மையும் விளக்குவ திதுவே
நூன்முறை வருண நிலைகளின் ஒழுக்கம் நுண்ணிதின் தெரிப்பதும் இதுவாம்
பான்மையாற் காஞ்சிப் புராணமே நாளும் பயில்வுறக் கேட்பது மரபால்
(ஒழுக்கப்படலம் 30)

sandhyaa-vanthanamமாதவச் சிவஞான முனிவர் இந்தப் புராணத்தில் வைதிக சைவ ஒழுக்கங்களைப் பழங்காலத்தில் அவை கடைப்பிடித்தவாறே கூறுகின்றார். இந்த புராணத்தைக் கற்றவருக்கு எந்த வைதிக நூல்களிலும் கூறப்பட்ட ஒழுக்கங்கள் தெரிந்துவிட வேண்டும் என்பது இந்நூலாசிரியர் கருத்து.

வைதிக சைவ நித்திய கன்மானுஷ்டானங்களை, சனற்குமாரர் என்னும் முனிவர்மேல் வைத்து சனற்குமாரப் படலம் என்னும் பகுதியில் விளக்குகிறார்.

நித்திய கன்மானுஷ்டானங்களைச் சந்தி என்றும் கூறுவர். வைதிகர்கள் செய்வது ‘வைதிக சந்தி’ என்றும் சைவர்கள் செய்வது ‘சைவ சந்தி’ என்றும் கூறுவர். சிவவழிபாடு உடைய அந்தணர்கள் இந்த இரண்டு வகைச் சந்திகளையும் கலந்து செய்வதுண்டு.

சந்தியின்போது செய்கின்ற கன்மங்களில் பஞ்சப்பிரம மந்திரம், ஷடங்கமந்திரம் ஆகியன தற்காலத்தில் வைதிக சைவர்களால் உச்சரிக்கப்படுகின்றன. அவற்றோடு, ஆசிரியர், ‘அக்னிமீளே‘ எனத்தொடங்கும் மந்திரம், ஜாபாலமந்திரம் ஏழாலும் அதர்வமந்திரம் ஆறினாலும் திருநீற்றை மந்திரிப்பதையும், திருவைந்தெழுத்தோடு திரியம்பக மந்திரத்தையும் கூறி ஆசமனம் செய்வதையும் திரியாயுஷ மந்திரமும் திரியம்பக மந்திரமும் கூறித் திருநீறை அணிவதையும் கூறுகின்றார். இங்கு இவர் கூறும் அனுட்டானம் இப்பொழுது சைவத்தில் இல்லை; வைதிகத்திலும் இல்லை என்று கூறப்படுகின்றது.

இக்காலத்தில் வைதிகர்கள் சந்தியின்போது வேதமந்திரங்களுக்குப் பதிலாக, அங்கநியாசம், கரநியாசம் முதலியன செய்யும்போது திருமாலின் பெயர்களாகிய ‘அச்சுதா அனந்தா கோவிந்தா’ முதலிய திருநாமங்களையே உச்சரிக்கின்றனர் என அறிகிறேன். (அறிந்தவர் திருத்துக).

காலச்சூழ்நிலைகளின் காரணமாகச் சமயப் புறவொழுக்கங்களில் மாறுதல்கள் அவ்வப்பொழுது நிகழ்கின்றன. சிவஞானமுனிவர் அத்தகைய மாற்றங்களைக் கண்டு அவற்றை இப்புராணத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். வைதிகசைவத்தின் கன்மானுசார வரலாற்றை எழுதுவோருக்கு இப்பதிவு பெரிதும் துணை செய்வதாகலாம்.

kayathri-japamசிவபூசையில் அந்தரியாகம் அல்லது அகப்பூசை என்பது ஒரு முக்கிய அங்கம். இப்பூசையில் சாதகன் தன்னுடைய ஆன்மாவையே இலிங்கமூர்த்தியாகவும் அதனில் சிவனை மூர்த்திமானாகவும் பாவித்து, புறத்தே செய்கின்ற வழிபாடுகள் அனைத்தையும் அகத்தே செய்வதாகும்.

இதனைச் சனற்குமாரர் செய்ததைக் காஞ்சிப் புராணம் கூறுகின்றது.

சனற்குமாரர் காயத்ரி மந்திரத்தை ஆயிரத்தெட்டு உரு கணித்தபின் யோக சித்தியின் பொருட்டு கணபதியை முன்பு பூசித்து, பின் ‘அங்குட்ட ரூபியாஞ் சிவனை’ வரன்முறை அருச்சனை செய்தார் என்று கூறுகின்றது. இப்படிக் கூறுவதால் இரண்டு செய்திகளை புராண ஆசிரியர் உணர்த்துகின்றார்.

இறைவனை ‘அங்குட்ட’ ரூபியாக பாவித்தல் வேதத்தில் உள்ள செய்தி. தமிழ்நூல்களுக்கு இது புதியவரவு. இது ஒன்று.

lingam-stone

”ச’ரீர-ப்ராதே³ஸா²ங்கு³ஷ்ட மாத்ர மணோரப்யண்யம் த்⁴யாத்வாத: பரமதாங்க³ச்ச²தி”

என்பது மைத்ராயண்யுபநிஷத் வசனம்.

இதன் பொருள், “சரீரத்தின் இருதயத்திற் பெருவிரல் வடிவாயுள்ள (ஒளி) வடிவில் அணுவுக்கணுவா யிருக்கின்றதைத் தியானித்துப் பரம்பொருளை அடைகின்றனன்,” என்பதாகும். இதுவே ஆத்மலிங்கம் எனப்படும்.

இதயக் கமலத்தில் அங்குட்ட வடிவில் கண்டு சாதகன் அகத்தே தியானிக்கும் பொருள்தான் புறத்தே திருக்கோவில்களின் கருவறையில் உள்ள சிவலிங்கமாகும். ஆவுடையாரே அகத்தாமரை. இது இரண்டாவது செய்தி.

இவ்வாறு அகப்பூசை செய்த சனற்குமாரன் சிவபரம்பொருளின் திருநாமங்களை உச்சரித்துத் துதிக்கின்றான். அவற்றுள் பல வேத மந்திரங்களுல் பயிலப்பெறுவன.

முக்கணன் புட்டி வருத்தனன் நீலப் பொன்மயன் முதிர்கறை மிடற்றன்
தக்க ஈசானன் வன்னிரே தாநற் சத்தியன் அருவினன் உருவன்
புக்கசீர்ப் புருடன் விச்சுவ ரூபன் புருட்டுதன் சிவன்புரு கூதன்
வைக்குமெய்ச் சத்துப் பராபரம் பரமான் மாமகத்துயர்பரப் பிரமம்

இப்பாடலில் வேத மந்திரங்களான,

த்ர்யம்ப³கம் யஜாமஹே ஸுக³ந்தி⁴ம் புஷ்டிவர்த⁴னம் |
உர்வாருகமிவ ப³ந்த⁴னான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ||

ரு«தம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்க³லம் |
ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் விச்’வரூபாய வை நமோ நம: ||

என்பதிலுள்ள பல திருநாமங்கள் தமிழ்ப்படுத்தி வந்துள்ளமை காண்க.

[முக்கணன்– திரியம்பகன்
புட்டி வருத்தனன்– புஷ்டிவர்த்தனம் (அடியாருக்கு ஆற்றலை மிகச் செய்பவன்)
நீலப் பொன்மயன்– கிருஷ்ண பிங்களம் (சக்திபாகமாகிய இடப்பக்கத்தில் கருநிறமும் சிவமாகிய தன் வலப்பாகத்தில் பொன்னிறமும் உடையவன்)
ஊர்த்வரேதம்– இது வன்னிரேதா எனவும் கூறப்படும். வன்னி என்றால் நெருப்பு. நெருப்பு மேல்நோக்கி எழுவதைப்போல மேல்நோக்கி எழும் விந்துவை உடையவன் என்பது பொருள். யோகிகள் தம் யோகத்தால் இவ்வாறு ஆக்கிக் கொள்வர். சிவன் மகாயோகி. ஆதலால் இவனுக்கு இது இயல்பாக அமைந்தது.
புருட்டுதன்– புருஷன் (ஆன்மாவால் துதிக்கப்படுப்பவன்).
புருகூதன்– முன் அழைக்கப்படுபவன்.]

சிவஞான முனிவர் இப்புராணத்தில், கதாபாத்திரங்களின் உரையாடல்களாக உபநிடத வாக்கியங்களை மொழிபெயர்த்து அமைத்துள்ளார்.

நந்தி தேவரை அணுகி சனற்குமார முனிவர் தம்மை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகின்றார். தமக்கு இறைவனைக் காணும் உபாயத்தை அறிவிக்க வேண்டுகிறார். அப்பொழுது சிவனின் அனுக்கிரகத்தின் இன்றியமையாமையை,

மானிடன் விசும்பைத் தோல்போற் சுருட்டுதல் வல்லோனாயின்
ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடும் எய்தும்
மானமார் சுருதி கூறும் வழக்கிவை

என்று சனற்குமார முனிவர் கூறுகின்றார்.

இதேபோன்று, வயிரவேசப் படலம் என்னும் பகுதியில், ‘யானே முதல்வன்‘ எனத் தருக்கிய பிரமனை நோக்கி வேதங்கள் சிவபரத்துவத்தின் உண்மையைக் கூறுவதாக அமைந்த பகுதியில், அதர்வ வேதம்,

வளிதாழ் விசும்பைப் பசுந்தோலிற் சுருட்ட வல்லோர்
உளரேல் புடைவீங்கி எழுந்து திரண்டுருண்ட
இளவெம்முலை பங்கனை யன்றியும் இன்ப முத்தி
அளவிற் பெறலாம் என விண்டது அதர்வ வேதம்

[பசுந்தோலின்- பசியதோலைச் சுருட்டுவதைப் போல. ஆகாயத்தை ஒருவன் சுருட்ட வல்லனாயின், சிவனருளையின்றி ஒருவன் இன்ப முத்தி பெறலாம் என்பது இப்பாடல்களின் கருத்து. விசும்பைச் சுருட்டவும் முடியாது. சிவனருளையின்றி முத்தி பெறவும் இயலாது என்பது இவற்றின் கருத்து.]

என்று கூறியதாக ஆசிரியர் கூறுகின்றார்.

இப்பாடல்கள்,

யதா² சர்மவதா³காஸ²ம் வேஷ்டயிஷ்யந்தி மானவா: |
ததா² சி’வ மவிஜ்ஞாய துக்க²ஸ்யாந்தோ ப⁴விஷ்யதி ||

எனும் அதர்வசிரோபநிஷத் வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு.

இந்த வேத வசனத்தைக் கந்தபுராணத்திலும், பிரமன் கூற்றாக,

பரமசிவன் உணர்ச்சியின்றிப் பல்லுயிர்த்தொகையும் என்றும்
விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல்
உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே
பெருமறை இயம்பிற் றென்னில் பின்னுமோர் சான்றும் உண்டோ

என்று கச்சியப்ப சிவாச்சாரியார் மொழிபெயர்த்துள்ளார்.

அறிவுபோல் அடர்ந்து எழும் அறியாமையினது வலியால் ஒருமுறை வியாசர் பொய் கூறி சிவாபராதத்துக்கு ஆளானார். வியாசருக்குப் புத்தி புகன்ற விஷ்ணு,

“ஏனை யாரையும் அறத்துறந்து யாவரும் என்றும்
பான்மையில் தியானஞ்செயப் படுமொரு முதல்வன்
மேன்மை கூர்சிவன் ஒருவனே” எனவிரித் தன்றே
நான்மறைத்தலை யாமதர் வச்சிகை நவிலும்

என்று உரைத்ததாக சார்ந்தாசயம் என்னும் படலத்தில் ஆசிரியர் கூறுகின்றார். அதர்வசிகை என்றது, அதர்வசிகோபநிஷத்தை..

kasi_vishwanathவியாசரிடம் மாதவர்கள் சென்று எமக்குச் சுருதி நூல் முடிபு இதுவெனத் தொகுத்துரை என்றனர். வியாசர் “அறிவு நூலெலாம் பன்முறை ஆயினும் தெளியப் பெறுவது ஒன்று, அது நாரணனே பரப்பிரமம்,” என்றனர். மாதவர் இதனைக் காசியில் விசுவநாதர் சந்நிதியில் நின்று சொல்லுக என்றனர். விசுவநாதர் சந்நிதியில் நின்று வியாசர், “நாரணனே பரப்பிரமம்,” என்றபோது, எல்லாப் பெயரும் ‘தன்பெயர் எனும் மறை வழக்கால்’ விசுவநாதன் வெகுளாமல் வெறிமலர்க்குழல் உமையொடும் மகிழ்ந்து வீற்றிருந்தனன் என்று பாடுகின்றார்.

இங்கு குறிக்கப்பட்ட மறை சுவேதாசுவதார உபநிஷத். நாராயணன் முதலிய எல்லாப் பெயர்களும் காரணப் பெயராகவும் ஆகுபெயராகவும் சிவபெருமானையே உணர்த்தி நிற்கும் எனவும் எல்லாப் பெயரும் பரமசிவன் பெயரென்பதே வேதத்தின் துணிபு என்பது சுவேதசுவதார உபநிடதத்திற் கூறப்பட்டதென்றும் சிவஞான முனிவர் தம்முடைய சிவஞானமாபாடியத்துள்ளும் கூறினார்.

“புருஷோவை ருத்³ரஸ் ஸன் மஹோ நம:”

என்னும் வேத வாக்கியத்தை,

‘சீர்ப் புருடனாம் கண்ணுதல் தலைவன்’

எனத் தமிழ்ப்படுத்தியுள்ளார்.

மகா நாராயணோபநிடத வாக்கியமான,

ஈசா’ன: ஸர்வ வித்³யாநாம் ஈச்’வர: ஸர்வ பூ⁴தாநாம் ப்³ரஹ்மாதி⁴பதிர் ப்³ரஹ்மணோதி⁴பதிர் ப்ரஹ்மா சி’வோ மே அஸ்து ஸதா³சி’வோம்”

என்பதை,

“எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும் ஈசன் என்னத்,
தக்கமுதல் பரப்பிரமம் சதாசிவன் ஓம்”

என மொழிபெயர்த்து ஆண்டுள்ளார்.

காஞ்சிப் புராணத்தில் திருவேகம்பப் படலம், தழுவக் குழைந்தபடலம் என்னும் இரு படலங்கள் மிகச் சிறப்பானவை. இவற்றைச் சார்ந்தே பிற படலங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனலாம்.

அவற்றுள் திருவேகம்பப் படலம் உலகத்தை ஒடுக்கிய இறைவனே அவற்றை மீளத்தோற்றுவித்தலைக் கூறுகின்றது. ஒடுங்கிய சங்காரத்தினின்றும் மீளத் தோன்றும் எனும் சைவ சித்தாந்தக் கோட்பாட்டை விளக்குவது இப்படலம். இப்படலத்தில் வேதங்களின் பெருமைகளையும் இறைவன் வாக்கில் கூறுகின்றார்.

sri-lalitha

உலகத்தைப் படைக்கத் திருவுளங்கொண்ட இறைவன், பகுப்பின்றிச் சூக்கும வாக்காகிய பரநாதமாக நின்ற வேதங்களை ஒற்றைமாமரமாக நிற்கும்படிப் பணித்தான். வேத சாகைககள் முதலியன பூ, அரும்பு, மென்தளிர், கனி, புதுமலர்களாகச் செறிந்து வேதம் நிழல்தரும் பெருமரமாக ஓங்கி நின்றது. அதன்கீழ் வீற்றிருந்து இறைவன் தன் இடப்பாகத்தில் இலளிதை என்னும் தேவியைத் தோற்றுவித்தான். தன் பணி யாது எனக் கேட்ட இலளிதயை நோக்கி இறைவன், “நீள் உலகுக்கு உபாதானம் (முதற்காரணம்) நீ; நிமித்த காரணம் யாம். கரந்த வையகத்தைப் நின் பேரெழில் வடிவில் மீண்டும் தோன்றச் செய்!” எனக் கூறினான்.

இலளிதை தன் வலக்கண்ணில் அயனையும் இடக்கண்ணில் அரியையும் , நடுக்கண்ணில் நெற்றியிற் கண்ணுடைய உருத்திரனையும் முத்தொழில் நடக்க ஈன்றாள். மற்றும் முகம் முதலிய உறுப்புக்களில் சொற்பிரபஞ்சம் பொருட்பிரபஞ்சங்களைத் தோற்றுவித்தாள்.

யாகத்துக்கு உரிய அக்கினிதேவன், காயத்திரி வேதம், அத்தியயனப் பயிற்சியின் போது அறிவதான காயத்திரி சந்தங்கள், சாமம், இரதந்திரம், தோமம், திருஷ்டுப் முதலியனவற்றையும் இலளிதை படைத்தாள்.

kanchi-kamatchi-amman-templeமும்மூர்த்திகளும் இறைவனைப் பணிந்து க, அ, ம, என்னும் அயன், அரி, உருத்திரன் ஆகிய எங்களைக் கண்களிற் படைத்த இலளிதையாகிய இவ்வம்மையார் காமாட்சி எனப் பெயர் பெறவும் இம்மாவடியில் நீங்கள் என்றும் இருக்கவும் வேண்டும் என்று வரம் வேண்டினர். இறைவன் அவ்வரத்தை அளித்ததோடு வேதம், வேதமந்திரங்கள் ஆகியவற்றின் பெருமைகளையும் கூறியருளினான்.

தழுவக் குழைந்த படலத்தில், ருத்திர காயத்திரியின் இரு வடிவங்களின் சிறப்பை ஒரு கதை நிகழ்ச்சியின் வாயிலாகக் கூறுகின்றார்.

தத்புருஷாய வித்³மஹே மஹாதே³வாய தீ⁴மஹி
தந்நோ ருத்³ர: ப்ரசோத³யாத்

என்பது ஒரு ருத்ர காயத்ரி.

மற்றொரு ருத்ர காயத்ரி மந்திரம்,

ஸஹஸ்ராக்ஷஸ்ய புருஷஸ்ய வித்³மஹே மஹாதே³வஸ்ய தீ⁴மஹி
தந்நோ ருத்³ர: ப்ரசோத³யாத்

என்பது.

“புருஷோவை ருத்ரஸ் ஸன்மஹோ நம:” என்றதால் புருஷநாமம் சிவனைக் குறிக்கும் என்பது பெறப்பட்டது.

‘தத்புருஷாய‘ என்ற முதல் மந்திரத்தில், புருஷனுக்கு என நான்காம் வேற்றுமையில், “தற்புருடனாகிய சிவனுக்கு (எம் நினைவு) பொருந்த நினைகுதும். எமக்கு அவர் அருளுக” என்பது பொருளாம்.

இரண்டாவது மந்திரத்தில், ‘புருஷஸ்ய’ என்பது ஆறாம் வேற்றுமை உடைமைப்பொருளில், “புருஷனுடைய (சிவனுடைய) சத்தியையும் எம் நினைவு பொருந்த” எனப் பொருள்படும். சிவனும் சிவனுடைய சத்தியும் எமக்கு அருள்க என்பது கருத்து.

ஒரு கர்ப்பகாலத்தில், உறங்கி எழுந்த பிரமன், அகிலமெல்லாம் படைக்கும் வண்ணம் யாது என மயங்கியபோது இறைவன் உருத்திர காயத்ரியுடன் அழகிய குமரவடிவில் தோன்றி அளித்த பெருவரம் நினைவுக்கு வந்தது. அந்தக் குமார வடிவினை மனத்தில் நினைந்து, “தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ரப் ப்ரசோதயாத்” எனத் துதித்து, பின் படைக்கத் தொடங்கினான். படைத்தவையெல்லாம் ஆணாகவே இருந்தன. பெண்மையும் படைக்க முயன்றும் இயலவில்லை.

lord-shiva-with-shakthiநான்காம் வேற்றுமைப்பொருள் தரும் பொருளை காயத்திரியை விலக்கி, ‘சகத்திர நயனப் புருடன் தன்னுடைப் பேரருள் நினைகேம் உருத்திரப் பிரான் எமக்கு அருள்புரிக’ என்னும் பொருளுடைய “ஸஹஸ்ராக்ஷஸ்ய புருஷஸ்ய வித்மஹே மஹாதேவஸ்ய தீமஹீ தந்நோ ருத்ரப்ரசோதயாத்” எனத் துதித்துப் படைத்தபோது, அவனால் ஆண்மை, பெண்மை இரண்டையும் படைக்க முடிந்தது. இறைவனுடைய பேரருளே அம்பிகை எனப்படுகின்றது. சிவனையும் சத்தியையும் சேர்த்துத் துதித்தபோது இறைவன் அம்மையப்பராய்த் தோன்றிப் பிரமன் விரும்பியவாறு ஆண்மை பெண்மைகளைப் படைக்கும் ஆற்றல் பெற்றான் என இக்கதை கூறுகின்றது.

சிவ வழிபாட்டில் அட்டபுஷ்பம் சார்த்தித் தொழும்போது, “ப⁴வாய தே³வாய நம:” என இறைவனோடு, “ப⁴வஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம:” என அம்பிகையையும் சேர்த்துப் போற்றுதல் மரபு.

(தொடரும்)

பின்குறிப்பு:

சம்ஸ்கிருத பதங்களை சரியான உச்சரிப்பின் படி தமிழில் எழுத Superscripted முறை பயன்படுத்தப் பட்டுள்ளது.  உதாரணமாக  क (ka) , ख (kha) , ग (ga) , घ (gha) என்ற எழுத்துக்கள் முறையே க, க², க³, க⁴ என்று  வரும்.  இதே போன்று  ச, ட, த, ப வர்க்கத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும் எழுதப் படும். சிவன் என்பதில் உள்ள ‘श’ என்ற எழுத்து  சி’ என்று குறிக்கப் பட்டுள்ளது.  முழுப் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

205 Replies to “தலபுராணம் என்னும் கருவூலம் – 3”

  1. முறையான பொருள் தெரியாமல் பல வடமொழி மந்திரங்களை நான் அறிந்து உள்ளேன். ஆனால் அவற்றுக்கு உரிய தமிழ் பொருளை இப்போது உணர்ந்தேன். அதை விட அதற்கு ஈடான ஏன் சொல்நயம் உயர்ந்த காஞ்சி புராணம் செய்யுளைப் பற்றி அறிய அருமையான வாய்ப்பு கிடைததது. பொருளுடன் இந்த நூல் எங்கே கிடைத்தாலும் நான் உறுதியாகப் படிப்பேன். கட்டுரையைத் தொடருங்கள். ஞான ரசத்தைப் பருகக் காத்திருக்கிறேன். நன்றி.

  2. Pingback: Indli.com
  3. // இக்காலத்தில் வைதிகர்கள் சந்தியின்போது வேதமந்திரங்களுக்குப் பதிலாக, அங்கநியாசம், கரநியாசம் முதலியன செய்யும்போது திருமாலின் பெயர்களாகிய ‘அச்சுதா அனந்தா கோவிந்தா’ முதலிய திருநாமங்களையே உச்சரிக்கின்றனர் என அறிகிறேன். (அறிந்தவர் திருத்துக). //

    ஸ்மார்த்த-ஸ்ரீவைஷ்ணவ-மத்வ பாகுபாடின்றி அனைவரும் “அச்சுதா, அனந்தா, கோவிந்தா” என்ற நாமங்களையும், கேசவ, நாராயண, முதலிய பன்னிரு திருநாமங்களையும் சொல்லி ஆசமனத்தை (மூன்று முறை நீரை அருந்துதல்) அனைவரும் செய்து வருகின்றனர். மத்வர்கள் இப்பன்னிரு நாமங்களுடன் சேர்த்து சங்கர்ஷண-வாசுதேவ-ப்ரத்யும்ன-அனிருத்த வியூஹ மூர்த்திகளின் நாமத்துடன், புருஷோத்தமன், ஜனார்த்தனன், நாரசிம்மன் முதலிய நாமங்களையும் சேர்த்து இருபத்தி நான்கு நாமங்களையும் சொல்லி இந்த சடங்கைச் செய்து வருகின்றனர்.

    //
    நாராயணன் முதலிய எல்லாப் பெயர்களும் காரணப் பெயராகவும் ஆகுபெயராகவும் சிவபெருமானையே உணர்த்தி நிற்கும் எனவும் எல்லாப் பெயரும் பரமசிவன் பெயரென்பதே வேதத்தின் துணிபு என்பது சுவேதசுவதார உபநிடதத்திற் கூறப்பட்டதென்றும்…
    //

    நாராயண நாமத்தை ஆகுபெயராகக் (யௌகிகம் என்று சமஸ்கிருதத்தில் இதற்குப் பெயர்) கொள்வதற்கு சமஸ்கிருத இலக்கணம் சிறிதும் இடம் தரவில்லை. “பூர்வபதாத் சம்ஜ்ஞாயாம் அகஹ” (அஷ்டாத்யாயி, 8.4.3) என்னும் பாணிணி சூத்ரத்தை நோக்க வேண்டும். இந்த விதியைத் தமிழில் விளக்க முயல்கிறேன்:

    (1) இரண்டு பதங்கள் புணர்ந்து ஒரே பதமாக இருந்தால்,
    (2) அந்தப் பதம் (ஆகுபெயரல்லாத) பெயரைக் குறிப்பதாக இருந்தால்,
    (3) சேரும் பதங்களில் முதற்பதத்தில் “र”-காரமோ, “ष”-காரமோ இருந்தால்,
    (4) முதற்பதம் “ग”-காரத்தில் முடியாமல் இருந்தால்,
    (5) சேரும் பதங்களில் இரண்டாவது பதத்தில் உள்ள “न” காரமானது, பதங்கள் சேர்ந்தவுடன் “ण” காரமாக மாறும்.

    ஆகையால், நாராயண பதத்தை அப்பதத்தால் பிரசித்தமாகச் சொல்லக்கூடிய (இதற்கு சம்ஸ்கிருதத்தில் “ரூடி” என்று பெயர்) விஷ்ணுவைத் தான் குறிப்பதாகக் கொள்ள இடம் உண்டு. ஆகுபெயராக, “ஜீவ கோடிகளுக்கு (நார) புகலிடமாக (அயந) இருப்பவன்” என்ற பொருளில் நாராயண நாமத்தை எடுக்க இடமே இல்லை. “நாராயந” என்று இருந்தால் அப்படிப் பொருள் கொண்டு எடுக்கலாம்; ஆனால் வேத மந்திரங்களிலோ, உபநிஷத்துக்களிலோ எங்குமே அப்படி இல்லை. இதனால் தான் லிங்கபுராணத்தில் வரும் சிவ ஸஹஸ்ரநாமத்தில் நாராயண நாமம் இல்லை. இங்கே பார்க்கவும் – https://www.shaivam.org/ssshivasahasralinga.htm. நாராயணப்பிரிய (நாராயணனுக்குப் பிரியமானவர் / நாராயணனிடம் பிரியம் கொண்டவர்) என்ற பெயர் தான் உள்ளது.

    ஆகையால், “நாராயண” பதத்தை ஆகுபெயராகக் கொள்ள இடம் இல்லை.

    இன்னொரு உதாரணம்– “சூர்ப்பணகா (சூர்ப்பணகை – இராவணன் தங்கை)” என்ற பெயர். இந்தப் பெயரானது, “சூர்ப்ப+நகா” என்ற பதங்களின் சேர்க்கையால் விளைந்த ஒன்று. இதன் அர்த்தம் – “முரம் போன்ற பெரிய நகங்களை உடையவள்” என்று. ஆயின், பதங்கள் சேர்ந்த பொழுது பின் பதத்தில் உள்ள “ந” காரம் “ண” காரமாக மாறியுள்ளதால், இதை ஆகுபெயராக எடுக்க முடியாது. அதாவது, முரம் போன்ற பெரிய நகங்களை உடைய வேறொரு பெண்ணை “சூர்ப்பணகா” என்று சொல்ல முடியாது. அது அப்பெண்ணுக்கு வைத்த பெயராக இருந்தால் தான் அப்படி அழைக்க இடமுண்டு. அப்பெண்ணை “சூர்ப்பநகா” என்றே சொல்ல முடியும்.

  4. சிவன் பெரியவரா, நாராயணன் பெரியவரா என்ற சர்ச்சைக்குரிய வாதத்தில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை, எனக்கு அவ்வளவாக தெரியவும் தெரியாது.

    ஆனால், ஆசிரியர் கூறிய சில எனக்கு சரியாகப் படவில்லை. “சிவனே பரதெய்வம்” எனும் நம்பிக்கைகூட அதற்வவேதத்தின் சிலபாகங்களில் உள்ளன, ஆனால் “சிவபெருமான் வேறு, ருத்திரர் வேறு” எனும் கொள்கை முற்றிலும் வேதத்திற்குப் புறம்பானது.

    ஏன் என்று எனக்குத் தெரிந்த சிலவற்றை கூறுகிறேன்:-

    1. சைவர்களின் மிகமுக்கியமான வேதமந்திரமான யசூர் வேதத்தின் ‘ஸ்ரீ ருத்திரம், சமகம்’ இல் ‘சிவா’ மற்றும் ‘ருத்ரா’ இரண்டு பெயர்களும் கலவையாக (interchangeable) ஆக உள்ளது பலருக்குத் தெரியும்.

    2. சிவபெருமான் திரிபுராசுரர்களை கொன்று உலகங்களைக் காப்பாற்றியதை சைவர்கள், வைணவர்கள், வைதீகர்கள், சாக்தர்கள், ஸ்மார்த்தர்கள் அனைவரும் ஒருசேர ஒப்புக்கொள்ளும் ஒரு கதைதான். ஏனெனில் அது புராணங்களில் மட்டும்வராது யசூர் வேதத்திலுமுள்ளது. சிவபெருமான் மிகுந்த சீற்றத்துடன் இருந்ததால், அவரின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் துளிகள் பூமியில் எங்கெல்லாம் விழுந்தனவோ அங்கெல்லாம் மரங்கள் முளைத்தது, அம்மரங்களின் கனிகளே ருத்ராட்சங்கள் என்பதும் யாவரும் அறிந்ததே! ருத்திரரின் கண்கள் (அக்ஷம்). எனவே ருத்ராக்ஷம். இந்த ருத்ராட்ச மாலைகள் நாயன்மார்கள் முதல் இன்று வரை பல இந்துக்கள், குறிப்பாக சைவர்கள் அணிவதும் எவராலும் மறுக்கமுடியாது! வைணவர்களுக்கு எப்படி துளசிமாலையோ, அவ்வாறே சைவர்களுக்கு ருத்ராட்சம். நீங்கள் சொல்வதுபோல சிவபெருமான் வேறு, ருத்திரர் வேறென்றால், ஏன் ருத்ராட்சத்தை அணிகிறீர்கள்? ஏன் சிவாட்சம் (சிவாக்ஷம்) என்று எதுவுமில்லையா???

    இறுதியாக, யசூர் வேதத்தில் வரும் நாராயண உபநிஷதத்தில் “நாராயணா பிரம்மோ ஜாயதே, நாராயணா ருத்ரோ ஜாயதே, பிரம்மச்ச நாராயணஹா, சிவச்ச நாராயணஹா…” என்கிறது. இதன் பொருள் என்னவாக இருந்தாலும்,முதல் பதத்தில் பிரம்மதேவரின் பெயருக்குப்பிறகு ருத்திரரின் பெயர் வருகிறது, இரண்டாம் பதத்தில் பிரம்மதேவரின் பெயருக்குப் பிறகு சிவனாரின் பெயர் வருகிறது. இரண்டும் வெவ்வேறேன்றால் இரண்டு பதங்களிலும் இரண்டு பெயர்களும் வரவேண்டுமல்லவா??

  5. முனைவர் ஐயா,

    // இக்காலத்தில் வைதிகர்கள் சந்தியின்போது வேதமந்திரங்களுக்குப் பதிலாக…
    காலச்சூழ்நிலைகளின் காரணமாகச் சமயப் புறவொழுக்கங்களில் மாறுதல்கள் அவ்வப்பொழுது நிகழ்கின்றன. //

    தற்போது வைதிகர்கள் ‘வேத மந்திரங்கள் இருந்த இடத்தில்’ திருமாலுடைய நாமங்களை இட்டு வருகின்றனர் என்று கூறுகிறீர்களே, இதற்கு ஒரு சான்றும் இல்லை. மாறாக, பல ஸ்மிருதிகளில் வைதிகர்களின் ஆசமனமும், சந்தியாவந்தனத்தில் உள்ள ஏனைய சடங்குகளும் பல ஸ்மிருதிகளில் நன்றாக விளக்கியுள்ளதைப் படித்துள்ளேன். (இப்பொழுது நினைவிற்கு வரவில்லை).

    நன்றி

  6. பாலாஜி அவர்கள் சொன்னது போல, பார்வதி தேவியின் கணவராகிய சிவபெருமானையே “ருத்ர” என்று வேதம் அழைக்கிறது. வேதங்களில் சிவனைத் தவிர வேறு ஒரு ஸம்ஹார தேவதை உண்டு என்று எங்குமே கூறப்படவில்லை. சங்கரரும் ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தில் (1-4-11) “பசுபதியான ருத்திரர்” என்றே “ருத்ர” சப்தத்திற்கு வியாக்கியானம் பண்ணியுள்ளார். “முருகன் ருத்ரருக்கு மகனாகப் பிறந்தார்” என்று பிரம்ம சூத்திரத்தில் செய்துள்ளார் (3.3.32). கேநோபநிஷத்தில் உமையைப் பற்றிய குறிப்பு வந்த இடத்தில் சங்கரர் “ருத்ர பத்னி உமா” என்று தான் (வாக்யபாஷ்யத்தில், பதபாஷ்யத்தில் அல்ல) விளக்கம் செய்துள்ளார்.

    மேலும், “நமச்சிவாய” (நம: சிவாய ச சிவதராய ச) என்னும் மந்திரமும் நமக-சமகங்கள் அடங்கிய ருத்ர பிரச்னத்தில் தானே வருகிறது?

    இது தவிர, கட்டுரையிலேயே இன்னும் சில பிழைகள் (factual errors) உள்ளன.

    //
    மற்றொரு ருத்ர காயத்ரி மந்திரம்,

    ஸஹஸ்ராக்ஷஸ்ய புருஷஸ்ய வித்³மஹே மஹாதே³வஸ்ய தீ⁴மஹி
    தந்நோ ருத்³ர: ப்ரசோத³யாத்
    //

    இம்மந்திரத்தின் சரியான பாடம் “புருஷஸ்ய வித்³ம ஸஹஸ்ராக்ஷஸ்ய மஹாதே³வஸ்ய தீ4மஹி தந்நொ ருத்³ர: ப்ரசோத³யாத்”

    மேலும், இம்மந்திரத்தை “காயத்ரி” என்று அழைக்கலாகாது. ஒரு மந்திரத்தை “காயத்ரி” என்று அழைக்க, அதில் 24 அசைவுகளே (அதாவது syllables, மாத்திரைகள் என்பது வேறு) இருக்க வேண்டும். “தத் புருஷாய…” என்று தொடங்கும் மந்திரத்தில் 24 அசைவுகளே உள்ளன. வைதிகர்கள் அனைவருக்கும் பொதுவான காயத்ரியாகிய “தத் ஸவிதுர்…” என்று தொடங்கும் மந்திரத்திலும் 24 அசைவுகளே உள்ளன. மேலே சுட்டிக் காட்டியதில் 24-க்கும் மேற்பட்ட அசைவுகள் உள்ளன. இதே போல, கணேச காயத்ரியிலும், கருட காயத்ரியிலும். எண்ணிப்பார்த்தால் தெரியும்.

    (இன்று “மஹா நாராயண உபநிஷத்” என்று பெயர் பெற்று வரும் தைத்திரீயவுபநிஷத்பாகமாகிய நாராயண அநுவாகித்தில் இம்மந்திரம் வருகிறது. இதில் இரண்டு பாடங்கள் உண்டு. இரண்டு பாடங்களிலும் இம்மந்திரம் உண்டு. வைணவரல்லாத ஸாயணரும், வைணவராகிய ரங்கராமானுஜரும் ஆதரித்துள்ள பாடம் முதற்பாடம். இவர்கள் ஆதரிக்காத வேறு ஒரு பாடம் ராமகிருஷ்ணா மிஷனின் “மந்த்ரபுஷ்பம்” என்ற புத்தகத்தில் உள்ளது. ஸாயண-ரங்கராமாநுஜ பாடத்தில் இல்லாத சில பிழைகளும், இல்லாத பல வாக்கியங்களும் ஏனோ இந்த புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது).

    // “புருஷோவை ருத்ரஸ் ஸன்மஹோ நம:” என்றதால் புருஷநாமம் சிவனைக் குறிக்கும் என்பது பெறப்பட்டது. //

    இதுவும் சரியன்று. புருஷ சப்தம் யௌகிகமாக (ஆகுபெயராக) உடலுள்ள ஜீவான்மா யாரையும் குறிக்கலாம் (புருஷ = உடலிலே வசிக்கிறவன்). பரமான்மாவையும் குறிக்கலாம் (இதையத்தில் உள்ளதால்). ரூடியாக (இயற்கையாக உள்ள பெயராகக்) கொண்டால் “புருஷ” சப்தம் நாராயணனாகிய திருமாலையே குறிக்கும் என்பது சாஸ்திர பிரஸித்தம். இதை ஸாயணர் முதலிய வேத பாஷ்யகாரர்கள் புருஷஸூக்தத்தின் அவதாரிகையில் கூறியுள்ளனர். நாராயண சப்தம் ஆகுபெயராக சிவனைக் குறிக்காது என்பதையும் முன்பு வேறு மறுமொழியில் குறிப்பிட்டிருந்தேன்.

  7. ஹிந்து மதத்தில் அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம், சுத்த அத்வைதம், சிவாத்வைதம், சைவ சித்தாந்தம், வீர சைவம் என்று தத்தவார்த்த ரீதியாகச் சில பிரிவுகள் உள்ளன. ஒன்றுடன் ஒன்று சம்பிரதாய ரீதியாகவும் சிறு சிறு வேறுபாடுகளோடு இவை இயங்குகின்றன. முனைவர் ஐயா அவர்கள் சைவ சித்தாந்தம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகளைப்படைத்து வருகிறார். இவற்றில் கூறப்படும அனைத்துக் கருத்துக்களோடு எல்லாச் சித்தாந்திகளுக்கும உடன்பாடு வருவது துர்லபமே. எனவே தத்தமக்கு இருக்கும் கருத்தின் அடிப்படையில் வியாக்கியானங்களை வைத்து பிற சித்தாந்தக் கருத்துக்களைக் குறை கூறுதல் முறையற்றது மட்டுமல்ல, நமக்கிடையேயான ஒற்றுமைக்கும் ஊறு விளைக்கும். ஒரு சொல்லை எப்படி வேண்டுமானாலும் பிரித்துப் பொருள் கொள்ளும் வகையில் சமஸ்கிருதமும் தமிழும் அமைந்துள்ளமையை நாம் நமது ஒற்றுமையை வளர்க்கப் பயன்படுத்தவேண்டுமே அல்லாது, குலைப்பதற்குப் பயன்படுத்தக் கூடாது.

  8. பெருமதிப்பிற்குரிய முனைவர் ஐயா அவர்களுக்கு

    மீண்டும் ஒரு சிறந்த கட்டுரையை அளித்தமைக்கு நன்றி.

    இப்போதும் சுக்ல யஜுர் வேதத்தைப் பிரயோகிக்கும் ஸ்மார்த்தர்கள் தமது நித்ய அனுஷ்டானங்களிலும் கூட சிவத்தையே பிரதானமாக உள்ள மந்திரங்களை மட்டுமே உச்சரிக்கிறார்கள் என்பது ஒரு தகவல்.

    ஆதி சங்கர பகவத் பாதர் எல்லா பக்தர்களையும் உள்ளடக்கிய சனாதன தருமத்தை நிலை செய்தார். இதனைப் பின்னாளில் வந்தவர்களில் சிலர் தத்தமக்குச் சரியென்று பட்ட வழியில் அங்கங்கே மாற்றி அமைத்தாலும், பொதுவாக ஸ்மார்த்தர்கள் விநாயக, முருக, சிவ, சக்தி, விஷ்ணு, சூரிய வழிபாட்டைப் பரவலாகக் கடைப்பிடிப்பதால், எல்லா இறை மூர்ததங்களையும் குறிக்கும் மந்திரங்கள் ஆங்காங்கே உச்சரிக்கப் படுகின்றன என்பதே உண்மை.

  9. அன்பர்திரு பாலாஜி அவர்களுக்கு, பஸ்மஜாபாலோபநிஷதம், ” அத்வைதம் சதுர்த்தம் ப்ரஹ்மவிஷ்ணுருத்ராதீத, மேகமாசஸ்யம் பகவந்தக் சிவம்” ர்ன்று கூறுகின்றது.இதன் கருத்து பிரம்ம விஷ்ணு ருத்ரர்களுக்கு அதீதமாக நான்காவது தெய்வம் சிவம் என்பதாகும். “சதுர்த்தம்’ என்ற பதமும் அதற்குச் சிவம் என்ற பொருளும் கூடியஉபநிடத வாக்கியங்கள்:” ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மந்யந்தே” மாண்டூக்யோபநிஷதம்., நிருஸிஹ்ம பூர்வதாபிந்யுபநிஷத், நாரத பரிவ்ராஜகோபநிஷத், ராமோத்தரதாபிநியோபநிஷத் ஆகியவற்ரிலுள்ளதாகக் கூறப்படுகின்றது. மூவரிலொருவனாகிய ருத்திரன் குணருத்திரன் எனப்படுவான். ம்காருத்திரன் எனப்படும் சிவம் வேறு. திருமுறைகளிலும் பிரம்ம விஷ்ணு ருத்திரர்களுக்கு மேலானவன் சிவபிரான் எனப் பல இடங்களில் கூறப்பட்டுள்லது. “தேவர்கோ வறியாத தேவதேவன், செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை,மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி”, மூவரு முப்பத்து மூவரு மற்றொழிந்த, தேவருங் காணாச் சிவபெருமான்”, ” மூவராலுமறியொணா முதலாய -னந்த மூர்த்தியான்”, என்பன முதலான திருமுறைகளில் அறியப்பட்ட சிவன் மூவரில் ஒருவனாய ருத்திரன் அல்லன். திரிகுண ரஹிதன் என்னும் நிர்குண சிவனுக்கும் உருத்திரன் என்னும் பெயர் வேதம் முதலிய பிரமாணங்களில் காணப்படுகின்றது. அந்தப் பிரமாணங்களின் பொருள் இன்னதெனக் கந்தபுராணம்தெளிவாகக் கூறுகின்றது. ” இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கும் ஆற்றால், உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்றான்” என்னும் கூற்றின்படி, சமுசாரத் துன்பத்தில் கிடந்து உழன்று துன்பப்படும் உயிர்களைத் திருவருள் என்னும் தெப்பத்தில் ஏற்றி முத்திக்கரை சேர்ப்பவன் உருத்திரன் என்ற பொருள் பெறப்படுகின்றது. இந்த ருத்திரன் சத்துவகுணமுள்ளவன். அதனல் உருத்திராட்சம் அவனுடைய கண்ணோட்டத்தைக் குறிக்கும்.

  10. உமாசங்கர் அவர்களே,

    // எனவே தத்தமக்கு இருக்கும் கருத்தின் அடிப்படையில் வியாக்கியானங்களை வைத்து பிற சித்தாந்தக் கருத்துக்களைக் குறை கூறுதல் முறையற்றது மட்டுமல்ல, நமக்கிடையேயான ஒற்றுமைக்கும் ஊறு விளைக்கும். //

    சரியாகத்தான் சொன்னீர்கள். கண்டிப்பாக அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டியதே. ஆனால், கட்டுரையாசிரியர் வைதிகர்களுடைய தற்கால “அச்யுதாய நமஹா; ஆனந்தாய நமஹா; கோவிந்தாய நமஹா” என்னும் ஆசமனவிதியை அவைதிகம் என்னும் பொருள்பட எழுதியுள்ளாரே? நீங்களே கூறுங்கள். “திருவைந்தெழுத்தோடு திரியம்பக மந்திரத்தையும் கூறி ஆசமனம் செய்வதையும் கூறுகின்றார்” என்றும் , “இங்கு இவர் கூறும் அனுட்டானம் இப்பொழுது சைவத்தில் இல்லை; வைதிகத்திலும் இல்லை என்று கூறப்படுகின்றது” என்றும் எழுதி விட்டிருந்தால் சரி. இத்துடன் சேர்த்து எதற்கு “இக்காலத்தில் வைதிகர்கள் சந்தியின்போது வேதமந்திரங்களுக்குப் பதிலாக திருமாலின் நாமங்களைச் சொல்லி…” என்று எழுத வேண்டும்?

    “நாராயண” நாமத்தை ஆகுபெயராக எடுப்பது வெறும் கருத்துச் சுதந்திர விஷயம் அல்ல; அது இலக்கணப்பிழை. இத்துடன் விட்டுவிடுகிறேன்.

    த்வைத-விசிஷ்டாத்வைத பாஷ்யங்கள் மட்டுமின்றி, அத்வைத சங்கர பாஷ்யங்க்களில் கூட எங்குமே சிவ-ருத்ர வேறுபாடு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினேன். வேத பாஷ்யம் செய்த சாயணர் கூட அப்படி வித்தியாசம் இருப்பதாக எங்குமே கூறவில்லை. இதை மட்டும் தான் கூற வந்தேன். ருத்ர-சிவ வேறுபாடு மற்ற சம்பிரதாயங்களில் (சைவ சித்தாந்தத்தைத் தவிர) சர்ச்சைக்குரிய சிக்கலான விஷயம். அதை விட்டுவிடுவோம்.

  11. கந்தர்வன் அவர்களே

    //“நாராயண” நாமத்தை ஆகுபெயராக எடுப்பது வெறும் கருத்துச் சுதந்திர விஷயம் அல்ல; அது இலக்கணப்பிழை.//

    இது உங்கள் கருத்து. அவ்வளவே. பிறிதொருவர் இதே சொல்லுக்கு வேறு விதமாகப் பகுத்து வேறு பொருள் கூறக்கூடும். இது இலக்கணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. தத்துவம், நம்பிக்கை இரண்டும் கலந்த விஷயம். ஒருவரது சித்தாந்தம் மற்றவருக்கு ஏற்புடையதாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. நீங்களே கூட இதை எடுப்பதன் காரணம் இலக்கணத்தின் மீதுள்ள நாட்டத்தை விட சித்தாந்த ரீதியான உங்கள் நம்பிக்கைதான் என்பது உங்களுக்கே தெரியும். நமது மதம் சார்ந்த தத்துவ விசாரணைகளிலும், ஆத்மா விசாரணைகளிலும், பிரம்மா விசாரணைகளிலும் அவரவர் சித்தாந்தத்தை அவரவர் விளக்கும்போது மற்றவர் அதைத் தம் சித்தாந்தப் பார்வையில் அலசுவதும் விவாதம் செய்வதும் நிச்சயமாக முறையற்றதுதான். இதை நான் கூறக் காரணம் என்னைப்பொருத்தமட்டில் நான் நம்மிடையே இருக்கவேண்டிய ஒற்றுமைக்கு பிரம்மனுக்கு சமமான முக்கியத்தைகூடத் தரவேண்டும் என்று கருதுவதுதான்.

  12. திரு உமாசங்கர் அவர்களே,

    //
    இது உங்கள் கருத்து. நீங்களே கூட இதை எடுப்பதன் காரணம் இலக்கணத்தின் மீதுள்ள நாட்டத்தை விட சித்தாந்த ரீதியான உங்கள் நம்பிக்கைதான் என்பது உங்களுக்கே தெரியும்.
    //

    அப்படிப் பிரித்து அர்த்தம் கூறுவதற்குத் தான் இடமில்லை என்றேன். சமஸ்கிருத பாஷை அறிந்த நடுநிலையாளர் இருந்தால் அவரவர்கள் கேட்டுத் தெரிந்துக்கொள்ளட்டும்.

    //
    நீங்களே கூட இதை எடுப்பதன் காரணம் இலக்கணத்தின் மீதுள்ள நாட்டத்தை விட சித்தாந்த ரீதியான உங்கள் நம்பிக்கைதான் என்பது உங்களுக்கே தெரியும்.
    //

    இப்படிக் கூறுவது சரி அல்ல. ஒரு கருத்தை ஒருவர் சொன்னால் அந்த கருத்தில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்துப் பார்க்கவேண்டுமே ஒழிய, அவர் இன்ன தரப்பைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அவர்கள் கூறுவதை நிராகரித்து விடுவது நியாயமான வழி அல்ல.

  13. //
    இக்காலத்தில் வைதிகர்கள் சந்தியின்போது வேதமந்திரங்களுக்குப் பதிலாக, அங்கநியாசம், கரநியாசம் முதலியன செய்யும்போது திருமாலின் பெயர்களாகிய ‘அச்சுதா அனந்தா கோவிந்தா’ முதலிய திருநாமங்களையே உச்சரிக்கின்றனர் என அறிகிறேன். (அறிந்தவர் திருத்துக).

    காலச்சூழ்நிலைகளின் காரணமாகச் சமயப் புறவொழுக்கங்களில் மாறுதல்கள் அவ்வப்பொழுது நிகழ்கின்றன.
    //

    முதலில் அச்யுத அனந்த கோவிந்த நாமங்கள் ஆசமநத்தின் போதே சொல்லப்படுவன அங்க ந்யாசம் கேசவாய, மாதவாய என்று ஆரம்பிக்கும்

    இது இக்காலமா எக்காலமா என்று அறிய சில பிரமாணங்கள்

    வியாசர் – போதாயன தர்மம்

    அப்ரயதோ பிஹிஸிக்தஹ ….. ஆசம்யா (எல்லா வைதீக காரியத்தின் முன்னும் ஆசமநம் சேய்ய வேண்டும்)

    வ்யாசர் இந்த நாமங்களை பற்றி கூறுவதாவது – அச்யுத aஅணந்த கோவிந்த நாமா உச்சாரண பேஷஜத் நாச்யந்தி சகல ரோக: சத்யம் சத்யம் வதாம்யஹம்.
    இது தமிழ் வாக்கை போலவே உள்ளதால் மொழி பேயர்ப்பு தேவை இல்லை என்றே நிணைக்கிறேன். இந்த ஆசமநத்திற்க்கு வேத ப்ராமானம் இங்கே

    த்ரி: ஆசமேத், த்வி: பரிம்ரிஜ்ய, சாக்ரித் உபாஸ்ப்ரிஸ்யா, ஷிர
    சக்ஷுஷீ நசிகே ஷ்ரோத்ரே ஹ்ரிதயம் ஆலப்ய (ஆசமநம் செய்யும் முறை இங்கு விளக்கப்படுகிறது)

    ச்ம்ரிதி சந்த்ரிகை சொல்லுவதாவது
    ய: க்ரிய குருதே மோஹத் அநாசம்ய ஏவ …. (ஆசமநம் செய்யாமல் எந்த கர்மாவயும் தொடங்கலாகாது)

    – இந்த அச்யுத அணந்த கோவிந்த நாமங்களை சொல்லி ஆசமநம் செய்வது குறைந்த பட்சம் வ்யாசரின் காலத்திலிருந்து எண்று தெரிகிறது. என்வே இது காலச்சூழ்நிலைகளின் நிற்பந்த்தங்ளையும் தாண்டி வழி வ்ழியாக நல்ல முறையில் கடைபிடிக்கப்பட்டு வறுகிறது

    ஏன் இந்த நாமாக்களை சொல்ல வேண்டும், இதற்க்கும் “3 levels of conciousness” என்பதற்க்கும் என்ன தொடர்பு, அது காயத்ரியுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதெல்லாம் வேரு கதை.

  14. நமது நாட்டம், சரியான ஒன்றை சுட்டிக்காட்டிய போதும் அது இல்லை என்று நமது கண்களையும் மறைக்கும் – தவறு ஒரு பக்கம் இருக்க அதை ஒத்துக்கொள்ளாமலும் அதை களையாமலும் நாம் குறை கூறுவதோ வேறொன்றை – வேறோருவரின் என்னத்தை

    இங்கு முனைவர் அய்யா சைவ சித்தாந்தப்படி சிவ பெருமானையே பரமாத்வாவாக உரைப்பதில் யாருக்கும் வேறு எண்ணம் ஏற்படவில்லை – அப்படி செய்கையில் சில விஷயங்கள் சமஸ்க்ரித இலக்கனத்திற்க்கோ, அல்லது வராலாற்று நிகழ்வுகளுக்கோ முரணாக இருக்குமாயின் அதை எடுத்துச்சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்- இதை முனைவர் அய்யாவும் ஏற்றுக் கொள்வார் என்றே நம்புகிறேன்

    மேலும் பற்பல விஷயங்களை அறிந்த முனைவர் அய்யாவும் என அறிகிறேன். (அறிந்தவர் திருத்துக).என்றே தான் சொல்லியுள்ளார்.

  15. //
    வ்யாசர் இந்த நாமங்களை பற்றி கூறுவதாவது – அச்யுத aஅணந்த கோவிந்த நாமா உச்சாரண பேஷஜத் நாச்யந்தி சகல ரோக: சத்யம் சத்யம் வதாம்யஹம்.
    இது தமிழ் வாக்கை போலவே உள்ளதால் மொழி பேயர்ப்பு தேவை இல்லை என்றே நிணைக்கிறேன். இந்த ஆசமநத்திற்க்கு வேத ப்ராமானம் இங்கே
    //

    இதந் அர்த்தம் –

    “அச்சுதன், அனந்தன், கோவிந்தன் என்னும் திருநாமங்களை உச்சரிப்பதாகிற மருந்தினால், எல்லா வியாதிகளும் நாசமடைகின்றன. ‘உண்மை; உண்மை’ என்று இருகால் சத்தியம் செய்து சொல்வேன் நான்”.

    இந்த சுலோகம் விஷ்ணுதர்மம் என்னும் புராணத்தில் பதினெட்டாம் அத்தியாயத்தில் உள்ளது. இப்புராணத்தில் இது சௌநக மஹரிஷியின் வாக்கியமாக அமைந்துள்ளது. ஆதி சங்கரர் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்திலும், வைணவ ஆச்சாரியாரான பெரியவாச்சான்பிள்ளை தொண்டரடிப்பொடியாழ்வாரின் “திருமாலை” பிரபந்த வியாக்கியானத்திலும் இந்நூலிலிருந்து குறிக்கோள்களைக் காட்டியுள்ளனர்.

  16. //“நாராயண” நாமத்தை ஆகுபெயராக எடுப்பது வெறும் கருத்துச் சுதந்திர விஷயம் அல்ல; அது இலக்கணப்பிழை//
    தமிழும்வடமொழியும்நன்கு கற்ற ஒருவரிடம் கேட்டபொழுது அவர் தந்த விளக்கம்.1.நாராயணன் என்பது அவயவப்பொருள் பற்றிக் காரணப் பெயராய் நின்றே பரமசிவனை உணர்த்தும்(அவயவப்பொருளாவது பகுதி,விகுதி முதலியனவாக வரும் பகுபத உறுப்புக்கள். 2. நாராயணன் என்பது ஒருமொழியாய் உயிர்த் தொகுதியை ஒத்து நிற்பவன் என்னும் பொருளுடையதாய்க் காரணப் பெயராய்ப் பரமசிவனையே குறிக்கும். 3. நரர் என்பது உயிர்களின் தொகுதிப் பெயராய் நிற்கும். 4. நரர் + அண் எனத் தொகுதிப்பொருள் பற்றி அண் விகுதி வரும். 5. இதன்மேல் யகர விகுதி வரும். இது விகுதிமேல் விகுதி. 6. இவையனைத்தும் சேர நர என்பது முதல் நீண்டு நாராய் என ஒருபகுதியாய் நிற்கும். இதன்மேல் வினைமுதற்பொருள் உணர்த்தும் யு என்பது வரும்.7. இந்த யு அநஎனத்திரியும். இப்பொழுது நாராய் அந எனச்சொல்வடிவம் கிடைக்கும். 8. வினைப்பெயர் விகுதியில் நின்ற நகரம் ணகரமாய்த் திரியும் என்பது விதி இதனால் நாராயண எனச் சொல்வடிவம் கிடைக்கும். 9. இது யுகர விகுதியை உடைய சொல்லாய் இருப்பதனால் நாராயண என்னும் ஆண்பால் சொல்லுக்கு நாராயணீ என்னும் பெண்பாற்சொல் அமைகின்றது. யு விகுதியாய் இல்லையாயின் இங்ங்அனம் பெண்பாற்சொல் அமையாது. 10. இங்ங்அனம் நர என்னும் பகுதியுடன் விகுதிமேல் விகுதி சேர்த்துப் புணர்வதனால் நாராயண என்னும் சொல்வடிவம் கிடைக்குமென்பது வடமொழி இலக்கண விதி. இதற்கு உரியைலக்கணவிதிகள்: 1. நர என்னும் தொகுதிப்பெயர் அண் விகுதி பெறுதற்கு “தஸ்ய சமூஹ பி க்ஷாட்ய்ஹிப்ய அண்” என்பது விதி. 2. நர என்பது நார எனமுதல் நீளுவதற்கு “அத உபாதாய” என்பது விதி. 3. இதன் மேல் யகர விகுதி வந்து புணர்ந்து நாரய் எனவருவதற்கு ” உபமாநாத் ஆசாரோ” , ” கர்து க்யங் ஸ லோபஸ்ய ” என்பன விதி. இது நாராயு எனநிற்கும். 4. நாராய் என்பதில் உள்ள ர – ரா என நீளுதற்கு ” அக்ருத் சார்வ தாதுகயோ” என்பது விதி. 5. நாராயு என்பதில் உள்ள யு அந எனத் திரியும். இதற்கு விதி “யுவோ நா கெள” என்பது. இது கருத்தாப் பொருளை உணர்த்தும் இங்ஙனம் நாராயந என்பது வரும். 6. இந்த நாராயண என்பது நாராயணஎனவருவதற்கு “ரஷாப் நோணச மான பதே” என்பது விதி. இவ்வாறு நாராயண என்பது காரணப் பெயராகவரும்.இதனால் உயிர்களோடு ஒத்து நிற்பவன் என்னும்காரணம் பற்றி நாராயணன் என்னும் நாமம் பரமசிவனொருவனுக்கே உரியது என வியாகரணவிதியால் பெறப்பட்டது. இங்குக் காட்டப்பட்ட சூத்திரங்கள் பாணிணியுடையவை.பாணிணியின் “அஷ்டத்யாயி”என்பது தமிழ்ப்பல்கலைக் கழகத்தினரால்மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்லது. நாராயணன் என்னும் பெயரைத் திருமாலுக்கு மட்டுமுரியதாகக் கூறஎந்த இலக்கணமிடம்தருகின்றதோ அதேஇலக்கணம் சிவனுக்கெஉரியதாகக் கூற உரிமைதருகின்றது. திருநெல்வேலிச் சைவர்கள் நாராயணன் என்றபெயரைச் சூட்டிக்கொள்வதற்கு இதுவேகாரணம்..

  17. //
    தமிழும்வடமொழியும்நன்கு கற்ற ஒருவரிடம் கேட்டபொழுது அவர் தந்த விளக்கம்
    //

    அவர் கட்டாயமாக வியாகரணம் கற்கவில்லை என்பது தெளிவு நாராயந என்பதை தான் நீங்கள் கூறுவது போல பிரிக்க முடியும் – இப்படி திரியுமாயின் நாராயந என்ற வார்த்தைக்கே அவசியம் இல்லாமல் போகிடும்.

    மேலும் இந்த வாக்கு வேடிக்கையாகிடும் – நாராயணத் பிரம்ம ஜாயதே நாராயணத் ருத்ரோ ஜாயதே – அதெப்படி நாராயண என்ற சொல்லால் அறியப்படும் பரம சிவன் பிரம்மனை படைத்தார், ருத்ரனை படைத்தார் ஆனால் விஷ்ணுவை படைத்ததாக சொல்லவில்லை ?

    வேதத்தில் இது போல பல விஷயங்கள் அனர்த்தமாகும் அபாயம் வரும்

  18. /. புருஷ சப்தம் யௌகிகமாக (ஆகுபெயராக) உடலுள்ள ஜீவான்மா யாரையும் குறிக்கலாம் (புருஷ = உடலிலே வசிக்கிறவன்). பரமான்மாவையும் குறிக்கலாம் (இதையத்தில் உள்ளதால்). ரூடியாக (இயற்கையாக உள்ள பெயராகக்) கொண்டால் “புருஷ” சப்தம் நாராயணனாகிய திருமாலையே குறிக்கும் என்பது சாஸ்திர பிரஸித்தம். இதை ஸாயணர் முதலிய வேத பாஷ்யகாரர்கள் புருஷஸூக்தத்தின் அவதாரிகை “யில் கூறியுள்ளனர்./ “புருஷோவை ருத்ரஸ் ஸன்மஹோ நம:” எனும் இந்த வேத வசனத்தில் ருத்திரநாமம்வந்துள்ளது. இதற்குப்பொருள்யாது.? “தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹீ| தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்|| என்னும் வேதமந்திரத்தில் தெளிவாகப் புருஷன் நாமம் சிவனுக்கு உரியதாகத் தெரிகின்றது.. புருஷசப்தம் விஷ்ணு காயத்ரியில் இல்லை என்று சொல்லப்படுகின்றது. புருஷன் சிவன் என்னும் கருத்தால் தான் ஸ்ரீருத்ரத்துடன் புருஷசூக்தமும் சிவன் திருமுன் சைவ அந்தணர்களால் ஓதப்படுகின்றது. ஸ்ரீசூக்தம், புருஷசூக்தம் இரண்டிலும் சுமார்த்தர்கள்பாடம் ,வைணவர்கள் பாடம் என்று இருவகை இருப்பதாகத் தெரிகின்றது. மாத்துவர்கள் பாடமும் இருக்கின்றதா அல்லது இந்த இருபாடங்களில் ஒன்றையேஅவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்களா, தெரியவில்லை.

  19. //
    தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹீ| தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
    //

    தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹீ| தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்|| என்னும் வேதமந்திரத்தில் தெளிவாகப் புருஷன் நாமம் சிவனுக்கு உரியதாகத் தெரிகின்றது..

    அந்த ருத்ரன் தான் மௌன வ்யாகத்தினாலேயே ஞானத்தை பெருக்கும் பரமசிவ பெருமான் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்

    //
    .. புருஷசப்தம் விஷ்ணு காயத்ரியில் இல்லை என்று சொல்லப்படுகின்றது.
    //

    ஆம் இல்லை தான்- ஆனால் விஷ்ணு காயத்ரியில் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ விஷ்ணுப் ப்ரசோதயாத் என்று நாராயண மற்றும் வாசுதேவன் என்னும் பெயர் விஷ்ணுவுக்கு உரியதாக சொல்கிறது

  20. முனைவர் அவர்களே,

    // “ரஷாப் நோணச மான பதே” //

    இதன் சரியான version: “ரக்ஷாப்யாம் நோண ஸமாநபதே”. இது அஷ்டாத்யாயி 8.4.1 சூத்ரமாகும். இந்தவிதிப்படியும், “நாராயந” என்னும் ஆகுபெயர் “நாராயண” என்று திரிய வாய்ப்பில்லை. ஏன் என்று பார்ப்போம். முதலில் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் தமிழ் மொழிபெயர்ப்பும்:

    After र् and ष् , the ण् is the substitute for न् , if they occur as compound letters of the same word

    ‘ர்’ மற்றும் ‘ஷ்’ எழுத்துக்களுக்கு அடுத்ததாக உள்ள ‘ந்’ சப்தம், அவ்விரண்டு எழுத்துக்கள் சேர்ந்து ஒரே எழுத்தாக ஒரே பதத்தில் வருமாயின் ‘ண்’ சப்தமாக மாறும்.

    இந்த விதிப்படி, “க்ருஷ்ணன்”, “கர்ணன்” முதலிய சொற்கள் வரும். இதில் ‘ஷ்ண’, ‘ர்ண’ என்னும் எழுத்துக்குழு ஸம்ஸ்கிருதத்தில் ஒரே எழுத்தாகக் கருதப்படுகிறது (conjunct consonant with vowel modifier ‘a’). “நாராயந” என்று வருவதில், ‘ர’-வுக்கும் ‘ந’-வுக்கும் இடையே ஒரு ஆ-காரமும் யகாரமும் உள்ளது.

    இதற்கு அடுத்த (8.4.2) விதியின்படியும் ‘ந’ காரம் ‘ண’ காரமாக மாற இடமில்லை. இந்த விதியும், முன்விதியும் பகாபதத்திற்கே உரியது. ஆகையால்,

    खाञ्जारायन, पुनरायान, बद्रायन,

    என்னும் சொற்களில் நகாரம் ணகாரமாகத் திரியாமல் நகாரமாகவே நின்றது.

    கடைசியாக, மூன்றாவது விதியின்படி தான் நகாரம் ணகாரமாக மாறும். இந்த விதியே நான் காட்டியது: “பூர்வபதாத் ஸம்ஜ்ஞாயாம் அகஹ” (8.4.3). இந்த விதிப்படி, ஆகுபெயரல்லாத சிறப்புப்பெயராக இருந்தால் தான் நகாரம் ணகாரமாக மாறும்.

    ஆகையால், நாராயணன் என்னும் பெயரை காரணப்பெயராகவும் ஆகுபெயராகவும் எடுக்க வாய்ப்பில்லை.

  21. புருஷ என்னும் பெயர்–

    ருத்ர காயத்ரியின் படி “தத் புருஷாய” என்று மட்டும் வைத்துக்கொண்டு பார்த்தால், அதற்கு அடுத்து வரும் கருட காயத்ரியிலும் “தத் புருஷாய” என்று வருகிறது:

    தத் புருஷாய வித்மஹே சுவர்ண பக்ஷாய தீமஹி தந்ந கருட ப்ரசோதயாத்)

    அப்படியானால் திருமாலுடைய வாகனமாகிய கருடனுக்கும் “புருஷ” என்னும் பெயர் பொருந்துமெ? ஆகையால், இங்கு “தத் புருஷாய” என்பதை வைத்து “புருஷ” சப்தம் ஒருவருக்கு மட்டுமே அஸாதாரணமாகிய பெயர் என்பதை ஏற்க இடமில்லை. புருஷ ஸப்தம் திருமாலைக் குறிக்கும் என்பது பாத்ம புராணத்தில் உள்ளது.

    // ஸ்ரீசூக்தம், புருஷசூக்தம் இரண்டிலும் சுமார்த்தர்கள்பாடம் ,வைணவர்கள் பாடம் என்று இருவகை இருப்பதாகத் தெரிகின்றது. மாத்துவர்கள் பாடமும் இருக்கின்றதா அல்லது இந்த இருபாடங்களில் ஒன்றையேஅவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்களா, தெரியவில்லை. //

    ஒரு மாறுபாடும் இல்லை. மேலும், ஸ்மார்த்த, வைணவ, மாத்வர்கள் எல்லோரும் விஷ்ணுவுக்குத்தான் புருஷ ஸூக்தம் இட்டுள்ளனர். வைணவரல்லாத ஸாயணரும், அவர் காலத்திற்கும் முன் வைணவரல்லாத பட்ட பாஸ்கரரும் புருஷ ஸூக்தத்திற்கு “நாராயணனை உபாஸிக்கும் சூக்தம்” என்றே பாஷ்யமிட்டுள்ளனர். இப்படியே முத்கலசாகையைச் சேர்ந்த புருஷ ஸம்ஹிதையும், வேதத்தை ஏற்போர் அனைவரும் ஏற்கும் சௌநகரின் மிகப்பிராசீனமான ரிக்-விதானமும், சௌநக ஸ்மிருதியும், பாகவத புராணமும், விஷ்ணு புராணமும், மேலும் பல ஸ்மிருதிகளும் புருஷ ஸூக்தத்தில் படிக்கப்படுபவன் “நாராயணன், விஷ்ணு, வாஸுதேவன் என்னும் பெயர்களால் படிக்கப்படும் திருமாலே” என்று அருதியிடுகின்றன.

    எந்த இதிஹாஸ-புராண-ஸ்மிருதி நூலிலும் புருஷ ஸூக்தத்தில் படிக்கப்படுவது சிவன் என்று சொல்லப்படவில்லை. புருஷ ஸூக்தத்தின் இரண்டாம் அநுவாகத்திலேயே “ஹ்ரீச்ச லக்ஷ்ச்ச தே பத்ன்யௌ” என்று திருமகளுக்கு கணவனாகிய விஷ்ணுவைத்தான் சொல்லுகிறது.

    காலங்காலமாக இப்படி வைதிக மரபில் அனைவரும் புருஷ ஸூக்தம் திருமாலுக்கே என்று மொழிந்திருக்க, அதை சிவனுடையது என்று சொல்வது நவீனமான ஒரு கண்ணோட்டம்.

  22. என்னுடைய கட்டுரைகளையும் மறுமொழிகளையும் அக்கறையுடன் படித்துத் தம் கருத்துக்களை வழங்கி வரும் கந்தருவனுக்கும் மற்றையோருக்கும் என் நன்றி.

  23. // இதன் சரியான version: “ரக்ஷாப்யாம் நோண ஸமாநபதே”. இது அஷ்டாத்யாயி 8.4.1 சூத்ரமாகும். //

    மன்னிக்கவும்; “ரஷாப்யாம் நோ ண: ஸமானபதே” என்று மாற்றிக் கொள்ளவும்.

  24. திரு கந்தர்வன் அவர்கள் புருஷசுக்தத்திற்கும் ஸ்ரீசுக்தத்திற்கும் கொடுத்துள்ள விளக்கத்தின்படி அவை முறையே விஷ்ணுவுக்கும் இலட்சுமிக்கும் உரியனஎன அறிகின்றேன். எங்கள் ஊரில் உள்ள சிவன்கோவிலில் பர்சாரகர்கள் முதல் வேதம் ஓதுபவர்கள் வரை சிவன்கோவில் நிவந்தங்கள் பெற்றுக் கொண்டு ஊழியம் செய்பவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள். இங்கு புருஷசூக்தத்தையும் ஸ்ரீசுக்தத்தையும் சிவனுக்கு முன்னும் அம்பிகைக்கு முன்னும் ஓதுவது தவறல்லவா? இவர்கள் பெருமாளுக்கு முன் ஸ்ரீருத்திரம் பாராயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்களா? இந்தக் கேள்வியை அவர்களிடமல்லவா கேட்கவேண்டும் எனக் கூறலாம். இது எங்கள் ஊரில் உள்ள சிவன்கோவிலில் மட்டுமல்ல , தமிழகம் முழுவதும் உள்ள நிலை. தென்னாடுடைய சிவனுக்கு உரிய திருமுறைகளை புறத்தே நிறுத்திவைத்து, சிவனுக்கு உரியதல்ல என்றும் , விஷ்ணுவுக்குவே உரியன எனக் கூறப்படும் மொழிகளைச் சிவனுக்கு முன் ஓதுவது அபத்தம் அல்லவா? இந்தப் பிழைக்கு யார் பொறுப்பு? தமிழ் இந்து வாயிலாக விளக்கம் பெற விரும்புகின்றேன்.

  25. // இங்கு புருஷசூக்தத்தையும் ஸ்ரீசுக்தத்தையும் சிவனுக்கு முன்னும் அம்பிகைக்கு முன்னும் ஓதுவது தவறல்லவா? இவர்கள் பெருமாளுக்கு முன் ஸ்ரீருத்திரம் பாராயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்களா? இந்தக் கேள்வியை அவர்களிடமல்லவா கேட்கவேண்டும் எனக் கூறலாம். இது எங்கள் ஊரில் உள்ள சிவன்கோவிலில் மட்டுமல்ல , தமிழகம் முழுவதும் உள்ள நிலை. தென்னாடுடைய சிவனுக்கு உரிய திருமுறைகளை புறத்தே நிறுத்திவைத்து, சிவனுக்கு உரியதல்ல என்றும் , விஷ்ணுவுக்குவே உரியன எனக் கூறப்படும் மொழிகளைச் சிவனுக்கு முன் ஓதுவது அபத்தம் அல்லவா? இந்தப் பிழைக்கு யார் பொறுப்பு? //

    கேட்பது தவறானால் மன்னிக்கவும் — சைவ ஆதீனங்களில் உள்ள சமயத் தலைவர்கள் இவ்விஷயத்தைப் பற்றி என்ன கூறுகிறார்கள்?

  26. முனைவர் அய்யா,

    அப்படி கந்தர்வன் அவர்கள் விளக்கம் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன் – அவரே சொன்னபடி புருஷ சூக்ததிற்கு பாஷ்யம் எழுதிய பல நடு நிலையாளர்கள் கூறியதாக சொல்கிறார்.

    எனக்கு தெரிந்த விளக்கம் ஒன்று ஒரு த்ருஷ்டாந்ததின் மூலம் சொல்ல விரும்புகிறேன் –

    “சேவிக்க வேண்டும் அய்யா சிதம்பரம்” என்று ஒரு பாடல் உள்ளது அதை முதல் சரணம் முடியும் வரை அப்படியே நடராஜருக்கும் பொருத்தி பாடலாம், தில்லை கோவிந்தராஜருக்கும் பொருத்தி பாடலாம் – இரண்டாம் சரனத்தில் தான் சிங்காரமான சிவ கங்கையில் மூழ்கி, சிவகாமி சந்நிதி முன்பாகவே வந்து என்று சிவ-பார்வதி நாமங்கள் எடுக்கப்படுகின்றன

    முதல் சரணம்

    “சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம் தேவாதி தேவன் திரு சந்நிதி வந்து”

    இரண்டாவது சரணம்

    “சிங்காரமான சிவ கங்கையில் மூழ்கி, சிவகாமி சந்நிதி முன்பாகவே வந்து பாங்ககவே பிரதக்ஷினமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவுடனே தொழ”

    சரியான விளக்கம் தான என்று தெரியவில்லை அனால் பொருத்தமான த்ருஷ்டாந்தம் என நம்புகிறேன்.

  27. முனைவர் சார், நீங்கள் செய்வது ஆரோக்கியமான வாதமாகத் தெரியவில்லையே? நீங்கள் சமயவாதியாகப் பேசலாம் தவறில்லை, ஆனால் அதுவே வேறு யாராவது, அதிலும் ஒரு வைணவர், அதிலும் குறிப்பாக வெகுவாக வெறுக்கப்படும் கந்தர்வன் அவர்கள் கூறினால் உடனே அவரை ‘சமயவாதி’, ‘சாதிவெறியன்’, ‘வடமொழி வெறியன்’ என்றெல்லாம் முத்திரை குத்துவது நியாயம்தானா??

    சமயரீதியாக வாதாட முடியவில்லை என்றால் உடனே சமஸ்க்ருத-தமிழ் சர்ச்சை, மொழிப்ரச்ச்சனை என்று எதையாவது தொடங்கிவிடுகிரீர்களே. கந்தர்வன் ஒன்றும் சமஸ்க்ுத வெறியரல்லவே, தேவையான அளவு ஆழ்வார்களின் பாசுரங்கள், சங்க இலக்கியங்கள் எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டுகிறாரே!

    நான் ஒரு வெக்கம் கெட்டவன், இந்த தளத்தில் மறுமொழி எழுதக்கூடாது என்று நினைத்தாலும், மீண்டும் மீண்டும் எழுதுகிறேன்…

  28. //அவதாரிகை “யில் கூறியுள்ளனர்./ “புருஷோவை ருத்ரஸ் ஸன்மஹோ நம:” எனும் இந்த வேத வசனத்தில் ருத்திரநாமம்வந்துள்ளது. இதற்குப்பொருள்யாது.? “தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹீ| தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்|| என்னும் வேதமந்திரத்தில் தெளிவாகப் புருஷன் நாமம் சிவனுக்கு உரியதாகத் தெரிகின்றது.//

    முனைவர் சார், நீங்கள் எனக்கு எழுதிய மறுமொழியை சற்று படியுங்கள், அதில் “ருத்திரர் வேறு, சிவனார் வேறு” என்று ஜாபாலோபநிஷதம், திருமுறைகள் என்று எண்ணற்ற சான்றுகளை அளித்தீர்கள்.

    இப்பொழுது இங்கு நீங்கள் எழுதியதையும் சற்று படியுங்கள், இங்கு ருத்திர காயத்ரி சிவனுக்குப் பொருந்தும் என்கிறீர்கள். நீங்கள் முன்னால் சொன்னபடி “ருத்திரர் வேறு, சிவபெருமான் வேறு” என்றால் “தன்னோ சிவ ப்ரஜோதயாது” என்று (ஏதாவது காயத்ரி மந்திரம் இருந்தால்) அதைத்தானே ‘சிவ காயத்ரி’ ஆக ஏற்கவேண்டும்.. இது ‘ருத்திர காயத்ரி’ ஆயிற்றே!

    தேவைப்படும்பொழுது, சிவனும் ருத்திரரும் ஒன்று, மற்ற நேரம் இருவரும் வெவ்வேறு! எப்படிசார் இது சாத்தியம்??

  29. இறுதியாக, கந்தர்வன் அவர்கள் வெகுவாக வேதங்கள் மற்றும் இதர சமஸ்க்ருத இலக்கியங்களிலிருந்து சான்று அளிப்பதால் அவரை “சாதி வெறியர்”, “வடமொழி வெறியர்” “தமிழை வெறுப்பவர்” என்றீர்கள்.

    வேதங்கள் “சிவபெருமான் ஒருவரே பரம்பொருள்” என்று சொல்லியிருந்தால், நீங்கள் திருமுறைகளை (ஏன் தமிழையே) சீண்ட மாட்டீர்கள் போலிருக்கிறதே!

  30. All of us forget the hindu religion i.e. the sanathana dharma is an evolved religion and because of this a national integration by way of a synthesised culture and not on the basis ostpolitics achieved,The rest are all sectarian and propagated by intellectuals or acharyas based on the understanding and interpretation of some specific wordsEven Adhi Sankar Bhagvathpadha did not inject sectarianism in his hymns.This sectarianism is the byproduct of division of labour and everyone was allowed to have his own god(Devatha)These controvercy only goes to prove whatProf.VV John said in his Plato”s India that Indians arecontentious people and see how they have produced numerous religions based on the same three books.
    It is better to leave this as an instance of academic discussion and not to allow it to destry individual beliefs.

  31. இன்னொரு கேள்வி…

    பரம்பரை-பரம்பரையாக வரும் ஆதி-சைவ குருக்களுக்குத் தான் சிவாலயங்களில் பூஜை நடத்த உரிமையுநண்டு என்று சைவ ஆகமங்கள் கூறுகின்றனவே? இங்கு ஸ்மார்த்தர்கள் எங்கிருந்து வந்தனர்?

  32. // பரம்பரை-பரம்பரையாக வரும் ஆதி-சைவ குருக்களுக்குத் தான் சிவாலயங்களில் பூஜை நடத்த உரிமையுநண்டு என்று சைவ ஆகமங்கள் கூறுகின்றனவே? இங்கு ஸ்மார்த்தர்கள் எங்கிருந்து வந்தனர்? //

    கந்தர்வன், இதையே இன்னும் கொஞ்சம் நீட்டி ”கோவில்களூக்குள் தலித்கள் இன்னும் பல சாதிகள் வரக்கூடாது என்று சைவ/வைணவ ஆகமங்கள் கூறுகின்றனவே” என்றெல்லாம் கூட வாதம் செய்யலாம் என்பதை மறந்து விட வேண்டாம்..

    இத்தகைய சிடுக்குகளில் இருந்து விடுபட்டு எல்லா ஆலயங்களிலும் பக்தி உணர்வுள்ள பயிற்சி பெற்ற எல்லா தரப்பு மக்களும் பூஜை செய்ய உரிமை வரவேண்டும் என்று நாம் பாடுபடுவோம்.. அதுவே நமது கனவாகவும், கொள்கையாகவும் இருக்கவேண்டும்.

    பீகாரின் பல புராதன ஆலயங்களில் இப்போது தலித்கள் பூஜை செய்கிறார்கள்.. கேரளத்தில் மாதா அம்ருதானந்தமயி அமைக்கும் கோயில்களில் பெண்கள் மிகுந்த சிரத்தையுடன், பக்தியுடன் பூஜை செய்கிறார்கள்.. சுதந்திர உணர்வுள்ள எல்லா இந்துக்களும் இந்த ஆலயஙக்ளில் சென்று வழிபடவும் செய்கிறார்கள். ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை..

    நீங்கள் என்னடாவென்றால், பரம்பரையாக வேதம் கற்று வேள்வி, பூஜை செய்து வரும் இரு அந்தணர் குழுக்களுக்கிடையே வேறுபடுத்தி, இதில் யாருக்கு உரிமை என்று சிண்டு முடியும் வேலை செய்கிறீர்கள்.. கொடுமை!

  33. பரம்பரை-பரம்பரையாக வரும் ஆதி-சைவ குருக்களுக்குத் தான் சிவாலயங்களில் பூஜை நடத்த உரிமையுநண்டு என்று சைவ ஆகமங்கள் கூறுகின்றனவே? இங்கு ஸ்மார்த்தர்கள் எங்கிருந்து வந்தனர்?

    திருமேனியை முப்போதும் தொட்டு வழிபாடு நிகழ்த்தும் உரிமை சிவாச்சாரியர்களுக்கும் வேதமோதுமுரிமை வைதிகர்களுக்கும் திருக்கோவில்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருகாலகட்டம்வரைக்கும் வைதிகர்கள் வைதிகசைவர்களாகவும் இருந்துள்ளனர். இந்தநிலைமாறியது வேறு வரலாறு. /இப்பொழுது இங்கு நீங்கள் எழுதியதையும் சற்று படியுங்கள், இங்கு ருத்திர காயத்ரி சிவனுக்குப் பொருந்தும் என்கிறீர்கள். நீங்கள் முன்னால் சொன்னபடி “ருத்திரர் வேறு, சிவபெருமான் வேறு” என்றால் “தன்னோ சிவ ப்ரஜோதயாது” என்று (ஏதாவது காயத்ரி மந்திரம் இருந்தால்) அதைத்தானே ‘சிவ காயத்ரி’ ஆக ஏற்கவேண்டும்.. இது ‘ருத்திர காயத்ரி’ ஆயிற்றே!

    தேவைப்படும்பொழுது, சிவனும் ருத்திரரும் ஒன்று, மற்ற நேரம் இருவரும் வெவ்வேறு! எப்படிசார் இது சாத்தியம்?? நீங்கள் என்னுடைய இடுகையை முழுமனத்தோடுபடிக்கவில்லை எனத் தெரிகின்றது. படிக்கும்பொழுதே ஒருமனத்தடையுடன்படித்துள்ளீர்கள். தயவுசெய்து நானெழுதியுள்ள 25 ஜூலை யில் எழுதியுள்ள பகுதியைப் படிக்கவும். அன்பரே! நான்வடமொழிவெறுப்பாளனாகவோ தமிழ்வெறியனாகவோ இருந்தால் இந்தத் தள்த்துக்கு வந்திருக்கவும்மாட்டேன். எழுதவும்மாட்டேன். தமிழ்ச் சான்றோர்கள் வைதிகத்தையும் தமிழையும் சைவத்தையும் ஒன்றிணைத்து தேசியநீரோட்டத்தில்முன்னெடுத்துச்செல்ல செய்த அருமையான முயற்சிகளையே என் கட்டுரைகளில் எழுதிச் சென்றுள்ளேன். புருஷன் என்றசொல் சிவனைக் குறிக்கும், இலட்சுமி என்றசொல் செல்வங்களில் எல்லாம் பெருஞ் செல்வமாகிய வீட்டின்பத்தை அருளும் திருவருளைக்(புருஷாகாரம்?) குறிக்குமென்பதால்தான் சைவ ஆதீனங்கள் ஸ்ரீசூக்தத்தையும் புருஷசூக்தத்தையும் மரபுவழிஓத அனுமதிக்கின்றனர். நாராயணன் என்றபதத்திற்குச் சைவர்கள் கொள்ளுகின்ற இலக்கணம் இது, என்றுநான் கூறினால்,அதற்கு மறு மொழியாக, நாங்களிந்தப்பதத்திற்குக் கூறிகின்ற இலக்கணம் இது, பொருள் இது என்றுகூற்வது தான் பொருந்தும். இவர்வியாகரணமேபடித்ததில்ல்,பார்த்ததில்லை என்று மறுப்பது அகந்தையே ஆகும். எனக்கு வடமொழி தெரியாது என்றாலும் எனக்கு அந்தக் கருத்தை அளித்தவர் வியாகரண பண்டிதர். அறிஞர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர்.அத்துவிதமென்றசொல்லினிலக்கணத்தால் அந்தணர்கள் மூவர் பிரிந்து நிற்கவில்லையா? / திருமுறைகளை நான் சீண்டமாட்டேனா என்ற உங்களையத்திற்கு என்னுடைய ஜுலை 25 தேதியில் இட்ட மறுமொழியே பதில் சொல்லும். /முனைவர் சார், நீங்கள் செய்வது ஆரோக்கியமான வாதமாகத் தெரியவில்லையே? நீங்கள் சமயவாதியாகப் பேசலாம் தவறில்லை, ஆனால் அதுவே வேறு யாராவது, அதிலும் ஒரு வைணவர், அதிலும் குறிப்பாக வெகுவாக வெறுக்கப்படும் கந்தர்வன் அவர்கள் கூறினால் உடனே அவரை ‘சமயவாதி’, ‘சாதிவெறியன்’, ‘வடமொழி வெறியன்’ என்றெல்லாம் முத்திரை குத்துவது நியாயம்தா
    அன்பரே! என்னுடைய மறுமொழிகள் எதிலும் யாரையும் இது போன்ற வார்த்தைகளால் தாக்கியதில்லை. ஆனால் அவருடைய வியக்கத் தக்க வடமொழிப் புலமை பிற கருத்துக்களை ஏற்றுக் கொள்ளத் தடையாக இருப்பதுபோலத் தோன்றுகின்றது. அவர்தம்முடைய அறிவுத் திறத்தை ஈட்டுரைகளிலுள்ள நயத்தையும் ஆசாரியஹ்ருதயம் போன்றநூல்களில் அமைந்து கிடக்கும் பக்திநயங்களையும் எடுத்துக் காட்டுவதாக அமையின் நன்றியுடையனாவேன்

  34. /// இங்கு புருஷசூக்தத்தையும் ஸ்ரீசுக்தத்தையும் சிவனுக்கு முன்னும் அம்பிகைக்கு முன்னும் ஓதுவது தவறல்லவா? இவர்கள் பெருமாளுக்கு முன் ஸ்ரீருத்திரம் பாராயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்களா? //

    முனைவர் ஐயா மற்றும் கந்தர்வன் அவர்களுக்கு,

    இறையியலை மட்டும் விடுத்து வரலாற்று, தத்துவப் பார்வையும் சேர்த்து இதனைப் பற்றீ விவாதிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான எண்ணம்.

    பூஜைகளில் அபிஷேக, ஆவாஹன, ஸ்தாபன மந்திரங்கள் ஜலதேவதைகளுக்கும், வருணனுக்கும், இந்திரனுக்கும் மற்ற பல தேவதைகளுக்கும் உரியன.. தூப, தீப, கற்பூர நீராஜன மந்திரங்கள் அக்னிக்கு உரியவை.. ”ராஜாதி ராஜாய” என்ற மந்திரம் குபேரனுக்கு உரியது.. இவற்றையெல்லாம் சிவ / விஷ்ணு பூஜைகளில் ஏன் ஓதுகிறார்கள் என்றும் கேள்வி எழலாமே! இந்த மந்திரங்களின் பொருளைப் பார்த்தால் அவை அனைத்தும் பூஜையின் அந்தந்த அம்சங்களுக்கு மிக அழகாகப் பொருந்துவதாகவும், பரஞ்சோதியான இறைவனையே குறிப்பதாகவும் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம் – இவை வெறும் சடங்கு ஓதல்கள் அல்ல *வேறு வேறு* தனித்தனி தெய்வங்களைக் குறித்தனவும் அல்ல.

    உதாரணமாக, “ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்:” என்ற அழகிய உபனிஷத் மந்திரம் எல்லா ஒளிக்கும் ஒளியான பரம்பொருளைக் குறித்தது.. வழக்கமாக தீபாராதனை முடிந்த பின் இதனை ஓதுவார்கள்..

    அங்கு சூரியன் ஒளிர்வதில்லை
    நட்சத்திரங்களும், சந்திரனும், மின்னலும் இல்லை
    அப்போது சிறு அக்னிக்கு எங்கே இடம்?
    எவனது பேரொளியினால் இவையனைத்தும் ஒளிர்கின்றனவோ
    அந்த ஒளிப்பொருளே உலகனைத்தும் எதிரொளிக்கிறது.

    தீபாரதனை என்னும் எளிய சடங்கின் தத்துவார்த்த மையத்தைக் கவித்துவமாகத் தீண்டிச் சென்று விடுகிறது இந்த மந்திரம்!

    வரலாற்றுக் கண்ணோட்டத்தில், வேத மரபின் தொடர்ச்சி புராண ரீதியான வழிபாட்டு மரபில் எப்படி இயைந்து இடம் பெற்றது என்பதற்கான சாட்சியங்கள் இவை. இந்த வலிமையான பண்பாட்டுத் தொடர்ச்சியே இந்துமதம் என்பதற்கான பொதுத் தன்மையை நமக்கு அளிக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு சமயத்தின் ஆகம வழிபாட்டு முறைகளை உருவாக்கியவர்களும் வேத சம்ஹிதைகளில் உள்ள மந்திரங்களை அவற்றில் அழகுற இணைத்தார்கள். எல்லா சமயப் பிரிவுகளுக்கும் பொதுச் சொத்தாக இருப்பவை இந்த வேத மந்திரங்களே.

    குறிப்பிட்டுச் சொன்னால், புருஷ சூக்தம் சிருஷ்டியின் ஆதிகாரணனாகிய இறைவனைப் பற்றிப் பேசும் மிக முக்கியமான மந்திரம்.. இது “விஷ்ணு” என்ற குறிப்பிட்ட தெய்வத்தை மட்டும் குறிப்பதல்ல, அது பிற்காலத்திய சமயரீதியான விளக்கம். கந்தர்வன் குறிப்பிடும் பகுதி, இதன் இரண்டாம் பாகமான ”உத்தர நாராயணம்” என்ற சேர்க்கையில் வருகிறது. புருஷ சூக்தத்தின் பூர்வ,உத்தர பாகங்கள் இரண்டையும் நோக்கினால், எப்படி விஷ்ணு என்ற தெய்வ உருவகம் evolve ஆகி வருகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

    அதே போன்று, ஸ்ரீருத்ரமும் பரமாத்ம ஸ்வரூபத்தையே குறிக்கிற்து.. அதன் கடைசி வாக்கியம் “நமோ ருத்ராய *விஷ்ணவே* ம்ருத்யுர்மே பாஹி” என்பது. பெருமாள் கோவில்களில் திருமஞ்சனத்தின் போது அதனை ஓதுவதில்லை ஆயினும், வேத பாராயணம் நிகழ்கையில் அது சிவபரமான மந்திரம் ஆயினும் வேதத்தின் ஒரு பகுதி ஆகையினால் ஓதுவார்கள். ஆஞ்சநேயருக்கும், நரசிம்மருக்கும் அபிஷேகம் செய்கையிலும் ஸ்ரீருத்ரம் ஓதுவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ஸ்ரீசூக்தம் செல்வ வளத்தை வேண்டி ஓதப் படுவது.. அது “வைஷ்ணவ” மந்திரம் என்பது பிழைபட்ட புரிதல்.. வாகனங்களுக்கும், ரதங்களுக்கும், திருமாங்கல்யத்திற்கும், வீடுகளுக்கும், பசுக்களுக்கும் பூஜை செய்யும்போதெலலம் இந்த மந்திரத்தை பாரத தேசம் முழுதும் ஓதிவருகிறார்கள். செல்வ வளம் வேண்டிப் பாடிய ஆதி ரிஷியின் பிரார்த்தனை அது. சிவன் கோயில்களின் முகப்பிலும் கஜலக்ஷ்மி உருவத்தைத் தான் பொறித்தார்கள் என்பதையும் இதனுடன் சேர்த்து எண்ணிப் பாருங்கள்.

    // தென்னாடுடைய சிவனுக்கு உரிய திருமுறைகளை புறத்தே நிறுத்திவைத்து, சிவனுக்கு உரியதல்ல என்றும் , விஷ்ணுவுக்குவே உரியன எனக் கூறப்படும் மொழிகளைச் சிவனுக்கு முன் ஓதுவது அபத்தம் அல்லவா? இந்தப் பிழைக்கு யார் பொறுப்பு?//

    திருமுறைகள் மீது தங்களுக்கு உள்ள பற்று புரிகிறது. ஆனால் அதற்காக பூஜையில் ஓதும் வேத மந்திரங்களின் context ஐப் புரிந்து கொள்ளாமல் அவற்றை அவமதிக்கவோ, புறந்தள்ளவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவை பூஜையில் இருப்பது “அபத்தமோ” “பிழையோ” அல்ல. மேலே சொன்னபடிக்கு அற்புதமான சமன்வயமும், பண்பாட்டுத் தொடர்ச்சியும் ஆகும்.

    வேதகோஷமும், திருமுறை தெய்வப் பனுவல்களும் இணைந்து ஆலயங்கள் தோறும் ஒலிக்க வேண்டும், அவை ஒன்றுக்கொன்று விரோதமல்ல.

  35. அன்புள்ள ஜடாயு அவர்களுக்கு, உங்களுடைய கருத்தே முழுக்க முழுக்க என்னுடையகருத்தும். நாளும் நான் செய்யும் வழிபாட்டிலும் திருக்கோவில் வழிபாட்டிலும் உரிய இடங்களில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வேத மந்திரங்களையும் திருமுறைகளையும் ஓதி வழிபடுவது மட்டுமன்றி, மற்றவ்ர்களையும் மொழி வேற்றுமையின்றி வழிபடச் செய்து வருகின்றேன். வடமொழிமேல் அல்லதுவேதமந்திரங்களின்மேல் வெறுப்பிருந்தால் இந்தக் கட்டுரை எழுத வாய்ப்பேஇருந்திருக்காது. வேத மந்திரங்களைப் புராண வாயிலாகத் தமிழ் மட்டுமே அறிந்த மக்கள் அறியும் வகையில் எடுத்துக் கூறும் தமிழ்த்தல புராண ஆசிரியர்களின் முயற்சியும் அதனால் இந்து ஒற்றுமை உருவாக்கப்படுதலும் எடுத்துக் காட்டுவது என் கட்டுரைகளின் குறிக்கோள். ஸ்ரீசுக்தம் மற்றும் புருஷசுக்தம் இரண்டும் சிவன் திருக்கோவில்களிலும் எங்கள் கோவிலும் ஏன் ஓதப்படுகின்றன என்பது குறித்து என்னுடைய மறுமொழியில் கூறியுள்ளேன். அவை விஷ்ணுவுக்கே உரியன, புருஷ நாமம் விஷ்ணுவுக்கே உரியது என்று சாதிப்பதைத் தான் மறுக்கின்றேன். வேதம் இந்துக்களுக்குப் பொது என்றால் அதில் உள்ள மந்திரங்களும் பொதுதானே. புருஷ்ன் என்ற பதத்திற்குச் சைவர்கள் எப்பொருள் கொள்ள வேண்டும் என மாதவச் சிவஞான முனிவர் இப்புராணத்தில் கூறியுள்ளார். அதனை நானெடுத்துக் காட்டியுள்ளேன். . இம்மந்திரங்கள் விஷ்ணுவுக்கே உரியன எனக் கொண்டால்தான் ,சிவன்முன்னிலையில் இவை ஓதுவது அபத்தம் எனக் கூறினேன். புருஷ சூக்தத்தில் சர்ச்சைக் குரிய ஒரு மந்திரத்திற்குச் சிவஞான முனிவர் எவ்வளவு சிறப்பான விளக்கத்தை அளித்துள்ளார் என்பதை முந்திய கட்டுரை ஒன்றில் விள்க்கியுள்ளேன். தாங்கள் க்ண்டிருக்கக் கூடும். அதைப் படித்தபின்னும் நான்காமவர் முதல்மூவர்க்கும் ஊழியம் செய்யப் படைக்கப்பட்டவரே, இதுதான்சரியான பொருள் என்று மறுமொழி வரையத் துணிந்த அன்பரின் வேதப் பற்றினை என்னென்பது? மீண்டும்கூறுகின்றேன். இந்து சமுதாய ஒற்றுமை,இணக்கம் குறித்து நீங்கள்கொண்டுள்ள கொள்கையே என்னுடைய கொள்கையும். ஐயம்வேண்டாம்

  36. //வைதிக மரபில் உழவுத் தொழில் (இதைத் தவிர ஆநிரைகளை மேய்ப்பதும் காப்பதும், வணிகமும் ஆகிய மூன்றும்) வைஷ்யர்களின் (மூன்றாவது வரனத்தவர்களின்) தர்மமாகும். நான்காவது வரனத்தவர்களின் தருமம், முதல் மூன்று வர்ணத்தவர்களுக்குக் கைங்கர்யம் புரிவதே. இவற்றை கீதை (18.44-45), மனு முதலிய ஸ்மிருதிகள் கூறுகின்றன.//

    என்னுடைய முந்தியகட்டுரையின் மறுமொழியில் கூறப்பட்டுள்ள இந்த வாசகத்தை இன்றுயார் ஏற்றுக் கொள்வார்கள்.? கைங்கரியம் என்று முலாம் பூசப்பட்டுள்ள சொல் கொடுமையானது. இப்பொருள் வேதத்துக்கோ மநுஸ்மிருதுஇக்கோ ஏற்றம் தருவது ஆகாது. இந்த மனப்போக்கு இந்து ஒற்ருமைக்கூலை வைக்கும்.

  37. ஜடாயு அவர்களே,

    // இத்தகைய சிடுக்குகளில் இருந்து விடுபட்டு எல்லா ஆலயங்களிலும் பக்தி உணர்வுள்ள பயிற்சி பெற்ற எல்லா தரப்பு மக்களும் பூஜை செய்ய உரிமை வரவேண்டும் என்று நாம் பாடுபடுவோம்.. அதுவே நமது கனவாகவும், கொள்கையாகவும் இருக்கவேண்டும். //

    // நீங்கள் என்னடாவென்றால், பரம்பரையாக வேதம் கற்று வேள்வி, பூஜை செய்து வரும் இரு அந்தணர் குழுக்களுக்கிடையே வேறுபடுத்தி, இதில் யாருக்கு உரிமை என்று சிண்டு முடியும் வேலை செய்கிறீர்கள்.. கொடுமை! //

    பிறப்பு அடிப்படையை ஒருபுறம் விட்டுவிடுவோம், இப்பொழுது அதைப்பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை. அது என் நோக்கமும் அல்ல. நான் சொல்லவந்தது சித்தாந்த விஷயத்தைப் பற்றி. சைவ ஆலயங்களில் சைவசித்தாந்த-சிவாகம விதிப்படியே சடங்குகளை நடத்துவதுதான் இந்து ஒற்றுமைக்கு நல்லது என்பதைத் தான் சொல்ல வந்தேன். விஷயம் என்னவென்றால், “சிவாகமங்களின் படி, சைவசமயத் தலைவர்களின் படி புருஷ சூக்தமும் ஸ்ரீசூக்தமும் சிவாலயங்களில் ஓதுவது சரியா?” என்ற கேள்வியே. முனைவரும் இதற்குப் போதுமான விளக்கம் கூறிவிட்டார். அதனாலேயே,

    // கேட்பது தவறானால் மன்னிக்கவும் //

    என்று முன்பே வேண்டியிருந்தேன். சைவ சமய அர்ச்சகர்களும் கோயில் அதிகாரிகளும் தத்தமக்கு உகந்த வழிபாட்டு முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும், காலத்திற்கேற்ப அதை மாற்றிக் கொள்வதும், அவர்களது இஷ்டம். இந்த decision-making process-இல் பொதுமக்களைச் சேர்த்துக் கொள்வதும் கொல்லாததுவும் அவர்கள் சுதந்திரமே. இது அவர்கள் மத சுதந்திர விஷயம்.

    ஒரு குழுவில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரப்படும் வழிமுறைகளை புரட்சியின் பெயரில் (பலாத்காரமாக) மாற்றுவது சரி அன்று. [கோயிலில் அர்ச்சகராய் இருப்பதை ஒரு “privilege”-ஆகப் பார்ப்பது சரி அன்று. கட்டுப்பாடுகளுடன் கூடிய மிகக் கடின வாழ்க்கை முறை அது!] மேலும், சட்டரீதியாக யார் வேண்டுமானாலும் தனியாக ஒரு கோயில் ஆரம்பித்து அவரவர்களுக்குப் பிடித்த வழியில் வழிபாடு நடத்தலாம்; அவரவர்களுக்குப் பிடித்த சடங்குகளைச் செய்யலாம். இதற்கும் யாரும் தடை விதிக்கக்கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதில்லை.

    இந்து ஒற்றுமைக்கு இவ்விருவகைச் சுதந்திரங்களும் அவசியம். This model alone, in my opinion, is the time-tested, natural, and organic process of integrity. எல்லோரும் ஒரே விதமான சடங்குகளைச் செய்ய வேண்டும் என்பது அவசியமற்றது.

    // இது “விஷ்ணு” என்ற குறிப்பிட்ட தெய்வத்தை மட்டும் குறிப்பதல்ல, அது பிற்காலத்திய சமயரீதியான விளக்கம். //

    இது உண்மையன்று. கீழ்க்கண்டதைப் பார்த்து நீங்களே கூறுங்கள் 🙂

    * சதபத பிராம்மணத்தில் புருஷசூக்தத்தை விளக்கும் இடத்தில், “புருஷனாகிய நாராயணன் ‘நானே எல்லாமாக ஆகக்கடவேன்’ என்று சங்கல்பித்தார்” (சதபத பிராம்மணம், 13.6.1.1) என்று நாராயண சப்தத்தை இட்டுக் கூறுகிறது.

    * உத்தர நாராயணீயம் “பிற்காலத்தில் ஏற்பட்டது” அன்று. யசுர்வேத தைத்திரீய ஆரண்யகத்தின் மூன்றாம் பிரச்னம் பதிமூன்றாம் அத்தியாயத்தில் உள்ளது. இதற்கு முன்பிருக்கும் அனுவாகத்தில் ரிக்வேதத்தில் உள்ள X.90-இல் உள்ள புருஷ சூக்த மந்திரங்கள்.

    * அதே தைத்திரீய ஆரண்யகத்தில் உள்ள பத்தாம் பிரச்னம், பதினோராம் அனுவாகமாகிய “நாராயண சூக்தத்தில்”, புருஷ சூக்தத்தை ஒட்டியே “சஹாஸ்ரசீர்சம் தேவம் விஷ்வாக்ஷம் விஸ்வசம்புவம்…” என்று தொடங்குகிறது.

    * முத்கல சாகையைச் சேர்ந்த புருஷ சம்ஹிதை (இன்று முத்கலோபநிஷத் என்று வழங்கப்பட்டு வருகிறது) புருஷ சூக்தத்தை விஷ்ணு-நாராயண-வாசுதேவனாகிய கண்ணனைக் குறித்தது என்று வருகிறது.

    * பரிபாடலில் உள்ள திருமாலைப் பற்றி வரும் மூன்றாம் பாடலில் புருஷ சூக்தத்தையே ஒட்டி வருகிறது என்பது தெளிவு.

    “பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!
    ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
    பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
    நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!”

    முத்கல சாகையில் “ஆயிரம் (சஹாச்ர) என்பது எண்ணிலடங்காமையைக் குறிக்கும்” என்று விளக்கியதும் நினைவிற்கு வரும்.

    * மகாபாரதத்தின் பகுதியாகிய விஷ்ணு சஹஸ்ரநாம அத்தியாயத்தில், “சஹாச்ர-மூர்தா … சஹாஸ்ராக்ஷ சஹாஸ்ரபாத்” என்ற நாமங்கள் புருஷசூக்தத்தில் உள்ளதைப் போல அடுத்தடுத்து வருகின்றன.

    ஆக, தொன்றுதொட்டு புருஷ சூக்தம் விஷ்ணுவையே குறிப்பதாக விளக்கப்பட்டு வருகிறது.

  38. முனைவர் அவர்களே,

    //
    ஆனால் அவருடைய வியக்கத் தக்க வடமொழிப் புலமை பிற கருத்துக்களை ஏற்றுக் கொள்ளத் தடையாக இருப்பதுபோலத் தோன்றுகின்றது.
    //

    சொந்த காரணங்களுக்காக எனக்கு சைவத்தின்மேல் ஈடுபாடு இல்லை. ஆனால், சைவ-வைணவ ஒற்றுமைக்கும், சைவ சமயம் தழைத்து விளங்குவதற்கும், சிவாலய-ஆகம சம்ரக்ஷனத்திற்கும் நான் நூறு சதவிகிதம் support செய்யத் தயார். கன்னநிடமோ, சிவபெருமானிடமோ, முருகனிடமோ ஈடுபாடு கொள்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் இருக்கவேண்டும். அப்படிச் சிவபெருமானிடம் ஈடுபடும் தமிழர்கள் திருமுறையிலும் அதில் கூறியுள்ள values-ஐயும் கடைப்பிடித்து ஒங்க வேண்டும் என்பதே என் கருத்து. அதே சமயம் tamilhindu போன்ற பொதுவிடங்களில் மற்ற சம்பிரதாயங்களைக் கிண்டலடிப்பதும் அவற்றுக்கு எதிராக விமர்சிப்பதும் தவறு. அப்படிச் செய்தால் தான் நான் மறுமொழிகளை இட ஆரம்பிக்கிறேன்.

    இந்தக் கட்டுரையைப் பற்றிய விஷயத்திற்கு வருவோம்.

    (1) ஸ்மார்த்த-மத்வ-ஸ்ரீவைஷ்ணவ பாகுபாடின்றிக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தற்போதைய வைதீக சந்தியாவந்தன விதியை “காலச்சூழ்நிலைகளின் காரணமாக மாறியுள்ளது” என்று கூறுவது முறையற்றது என்றும் உண்மைக்கு மாறுபட்டது என்று கருதியும்;

    (2) ‘நாராயண’ பதத்திற்கு இதுவரை கேள்விப்படாத, எந்த பண்டைய சைவ நூலிலும் இல்லாத (‘ஆறு கோடி நாராயண ரங்ஙனே’ என்று திருமுறைகளில் கூறியிருப்பது சிவனையா திருமாலையா?), அதுவும் (குறைந்த பட்சம் என் கண்ணோட்டத்தில்) சமஸ்கிருத இலக்கணப் பிழையுடன் கூடிய ஒரு அர்த்தத்தை ஆதரிப்பது சைவத்திற்கும், சைவ-வைணவ ஒற்றுமைக்கும் அவ்வளவு நல்லதில்லை என்று கருதியும்

    இவ்விரண்டு காரணங்களினால் தான் மறுமொழிகளை இட ஆரம்பித்தேன். அதையும் வெறும் academic discussion-ஆகவே செய்தே வருகிறேன். இந்த விஷயத்தில் தலையிட்டது தவறானால் மன்னிக்கவும்.

  39. முனைவர் அவர்களே,

    // அதைப் படித்தபின்னும் நான்காமவர் முதல்மூவர்க்கும் ஊழியம் செய்யப் படைக்கப்பட்டவரே, இதுதான்சரியான பொருள் என்று மறுமொழி வரையத் துணிந்த அன்பரின் வேதப் பற்றினை என்னென்பது? //

    // என்னுடைய முந்தியகட்டுரையின் மறுமொழியில் கூறப்பட்டுள்ள இந்த வாசகத்தை இன்றுயார் ஏற்றுக் கொள்வார்கள்.? //

    விவாதத்திற்குப் புறம்பான விஷயத்தை இங்கு வைக்கிறீர்கள். நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லை! நான் கூற வந்தது, ஒரு technical point. அவ்வளவே.

    அந்தக் கட்டுரை வேதசூக்தத்தைப் பற்றியும், அதன் விளக்கத்தைப்பர்ரியும் ஆகையால், “வேதத்திலும் ஸ்மிருதிகளிலும் நான்கு வர்ணங்களுக்கு உரிய தொழில்களாகக் கூறப்படுபவை யாவை?” என்ற கேள்விக்கே பதிலுரைத்தேன்.

    “பிறப்பின் அடிப்படையில் தான் பிராமணர்” என்று நான் எங்குமே கூறவில்லை. நான் எங்கும் “நான்காமவர் முதல்மூவர்க்கும் ஊழியம் செய்யப் படைக்கப்பட்டவரே” என்று கூறவே இல்லை. மேலும் அந்தக்கட்டுரையிலேயே,

    // நம்மாழ்வாரையும், பாணர் குலத்தவரான திருப்பாணாழ்வாரையும், கள்ளர் குலத்தவரான திருமங்கை ஆழ்வாரையும் கொண்டாடுகிறது. தொண்டரடிப் போடி ஆழ்வாரின் பாசுரமும், பிறப்பை பொருட்படுத்தாமல், பக்தி உள்ளவர்களை குல உயர்வு தாழ்வு பாராமல், “தொழுமினீர் கொடுமின் கொண்மின்” (அவர்களை வணங்குங்கள், அவர்களுக்குக் கல்வி ஞானம் தாருங்கள், அல்லது அவர்களிடமிருந்தும் கல்வி ஞானம் பெறுங்கள்) என்று கருட புராண சுலோகத்தை ஒட்டி பாடியுள்ளார். //

    // சர்வேச்வரனின் அடிகளும், அவன் அடிப் பொடியும், அவனுடைய பாதத்தைக் கழுவிய ஸ்ரீபாத தீர்த்தமும் புனிதத்திலும் புனிதம் என்று அனைவரும் இசைந்திருக்க, ‘வேளாளர்கள் அவன் பாதத்திலிருந்து தோன்றியவர்கள்’ என்பதை வைத்து அவர்களுக்கு தாழ்வைக் கற்பிக்க இடமே இல்லை. இது பரம வைதீகம். //

    // வேதத்தைத் தொகுத்துத் தந்த வியாசரும், “நான்கு வர்ணங்களில் சூத்திரர்களே சிறந்தவர்கள், ஆண்-பெண்களில் பெண்ணே சிறந்தவள், நான்கு யுகங்களில் கலியுகம் தான் சிறந்தது” என்று அறுதியிடுகிறார். //

    என்று அடியேன் கூறியிருந்தது ஏனோ உங்கள் கண்ணுக்குப் படவில்லை போலும்!

    அடியேனை அற்பபுத்தியுள்ளவனாகக் காட்டவேண்டும் என்பது தானே உங்களது எண்ணம்? என்னிடம் கேட்டிருந்தால் நானே கூறியிருப்பேன்–

    “அடியேன் ஒரு மூடன். அற்ப புத்தி உடையவன். ஆசார்ய-பகவத்-பாகவத அபசாரங்கள் நிறைய செய்தவன். செய்யத்தகாததைச் செய்வதையும் செய்ய வேண்டியதைச் செய்யாமலும் நேரம் கழிக்கும் கரவன். இது சத்தியத்திலும் சத்தியம்.”

  40. மதிப்பிற்குரிய முனைவர் அய்யா அவர்களுக்கு,

    உங்களை தூற்றவேண்டும், அவமதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் அம்மறுமொழிகளை எழுதவில்லை. நீங்கள் அப்படி நினைத்தால் என்னை மன்னிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…நீங்கள் கூறிய சிலவற்றை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மேலும், நீங்கள் இதற்குமுன் எழுதிய கட்டுரையில் (தலபுராணம் எனும் கருவூலம்-2) இல், “பிறப்படிப்படையில் பெருமை பேசிக்கொள்வோர் எழுதியுள்ள உரைகளில் இக்கருத்தைக் காண இயலாது” என்ற கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது! இராகவேந்திரர் ‘பிறப்படிப்படையில்’ மட்டும் அந்தனரல்லவே, குணம், கர்மானுஷ்டானங்கள் எல்லாவற்றாலும் அந்தணராக இருக்க யோக்யதை படைத்தவர். சாதி பாகுபாடு பார்பவர்கள் அனைத்து சமயங்களிலும் உள்ளனர், மத்வ சமயத்தில் மட்டுமல்ல. நந்தனாரை தில்லை கோவிலுக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்த அந்தணர்கள் ஆதிசைவர்கள் தானே? இராமானுஜரை கொல்லனினைத்த அந்தணர்கள் வைணவர்கள், சைதன்ய மகாபிரபுவை பூரி தலத்தில் கொன்றுவிடவேண்டும் என்று எத்தனித்த அந்தணர்கள் ஸ்மார்த்தர்கள்! இவாறு, அனைத்து சமயத்தில் உள்ள அந்தணர்கள் பலர் சாதிவெரியராகத் தான் இருந்திருக்கிறார்கள். அப்படியும், மாத்வ மதத்தில் தலைசிறந்து விளங்கிய வியாசராஜர் குருபர் சாதியைச் சேர்ந்த கனகதாசரை தனது சீடராக ஏற்றுக்கொண்டார். எனவே, புருஷ சூக்த உரையில் நீங்கள் நினைப்பதைப்போல இராகவேந்திரர் எழுதவில்லை என்பதற்காக அவரை ‘சாதி வெறியர்’, ‘பிறப்பால் பெருமை பேசுபவர்’ என்றெல்லாம் இகழ்வது சரியா என்பதை உங்கள் மனசாட்சியையே கேட்டுப்பாருங்கள்.

    முனைவர் அய்யா, நீங்கள் வயதில் முதிர்ந்தவர், பல நூல்களையும் தத்துவங்களையும் படித்து ஆராய்ந்தவர். மிகுந்த தமிழ் புலமை உடையவர். உங்கள் கல்வி, புலமை ஆகியவற்றிற்கு முன்பு நான் தெரிந்துவைத்துக்கொண்டவை ஏணி வைத்தால் கூட எட்டாது. இதை நான் முன்பே அறிவேன்.. ஆயினும் “ஆத்திரக்காரனுக்கு புத்தியில்லை” எனும் பழமொதிக்கு சான்று அளிப்பதுபோல, கோவம் கண்களை மறைத்தவனாய் பேசக்கூடாத வார்த்தைகளை மறுமொழிகளாக எழுதிவிட்டேன்…

    மூவரில் அறியப்படும் குணருத்திரன் வேறு, மகாருத்திரன் எனப்படும் சிவபெருமான் வேறு என்று நீங்கள் கூறினீர்கள். மாத்வர்கள் அதேபோல தேவர்களிலிருக்கும் வாயுதேவன் வேறு, அவர்கள் சொல்லும் ‘முக்கியப்ராணர்’ வாயுதேவர் வேறு. அவர் பிரம்மதேவருக்கு நிகரானவர், சிவனாரை விட பெரியவர் என்று கூறுகிறார்கள். கல்பத்தின் தொடக்கத்தில் திருமால் வராக அவதாரமெடுத்து பூமியை மீட்டெடுத்தார் என்று அனேக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த வராகம் வேறு, மச்சம், கூர்ம அவதாரங்களைத் தொடர்ந்து இரண்யாட்சன் என்ற அரக்கனைக் கொல்ல எடுத்த வராக அவதாரம் வேறு என்று கூறுகிறார்கள். அதேபோல, அப்பைய தீட்சிதரும் “சிவபெருமான் தலையிலிருக்கும் கங்கை வேறு, நாராயணரின் கால்களிலிருந்து புறப்பட்ட கங்கை வேறு” என்கிறார். ஆனால் இருப்பதென்னவோ ஒரே கங்கை, ஒரே ருத்திரர், ஒரே வாயு, ஒரே வராகம்தான். நான் கூறுவது என்னவென்றால் வேதங்கள், புராணங்கள் மற்ற எல்லா நூல்களும் தெளிவாக ஒன்றைத்தான் விளக்குகின்றன. ஆனால் பலர் (எல்லா சமயத்தவர்களயும்தான்) அதற்க்கு விளக்கம் கூறுகிறேன் என்ற பெயரில் “அது வேறு, இது வேறு”, “இவற்றில் இரண்டு வகை உண்டு” என்றெல்லாம் தத்தமது சமயத்திற்குத் தகுந்ததுபோல மாற்றிக்கூரியதால்தான் இன்று பிறமதத்தவர், திராவிட இனவெறியர்கள், தனித்தமிழ் பேசியவர்கள் மற்றும் பல இந்து விரோதிகளுக்கு இந்துமதம் என்றாலே “வெறும் கட்டுக்கதை” என்று கேலிக்கூத்து செய்யும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம். சுவாமி விவேகானந்தர் தாம் ஆற்றிய உரை ஒன்றில் “பிரம்ம சூத்திரங்களுக்கு உரை எழுதுகிறேன் என்ற பெயரில் எல்லா ஆசாரியர்களும் தத்தமது கொள்கைப்படி தெரிந்தே பொய் கூறியுள்ளனர்” என்று சொல்லியுள்ளார் (Each commentator has been a conscious liar). இதற்காக விவேகானந்தர் இந்து மதத்தை பரிகசித்தார் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது, அவர் சொன்னதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை ஆராயவேண்டும்…

    இந்துமதத் தத்துவங்களையும், இலக்கியங்களையும் மேற்க்கத்திய நாடுகளிலுள்ள விஞ்ஞான மேதைகள் கூட பாராட்டியுள்ளனர். ஆனால் இங்கிருக்கும் புளுத்திகள் தங்களுக்குதான் பகுத்தறிவு உண்டு, மற்றவர்களெல்லாம் முட்டாள்கள் என்பதுபோல “இந்துமதமே புளுக்கு” என்று கூறும்போது பல சமயம் சிரிப்பாக இருந்தாலும், சில சமயம் ஆத்திரம் வருகிறது.

    நான் கூறியது என்மேல் உங்களுக்கு இருக்கும் சீற்றத்தை சற்று தனித்திருக்கும் என்று நம்புகிறேன். இல்லை, நான் கூறியது தவறுதான் என்று நீங்கள் எண்ணினால், மீண்டும் ஒருமுறை மன்னிக்கவேண்டுகிறேன்.

    நன்றி, வணக்கம்!

  41. // ஜடாயு அவர்களே

    தகவலுக்காக மட்டும் –

    தலித்கள் (யாரும்) வரலாம் என்று தான் பஞ்சாராத்ரா ஆகமம் சொல்கிறது – இதனால் தான் ராமானுஜர் விடாபிடியாக பல கோவில்களை பஞ்சாராத்ரா ஆகமத்திற்கு மாற்ற முயற்சித்தார்

    //ராஜாதி ராஜாய// இது வைணவ திருவாரதனத்தில் ஓதப்படுவதில்லை – தத் விஷ்ணோ பரமம் படம் அல்லது “உத்தீபச்ய” என்பது தான்.

    //
    வேத பாராயணம் நிகழ்கையில் அது சிவபரமான மந்திரம் ஆயினும் வேதத்தின் ஒரு பகுதி ஆகையினால் ஓதுவார்கள்.
    //
    முற்றிலும் உண்மை – நானும் கேட்டிருக்கிறேன்

    //
    புருஷ சூக்தம் சிருஷ்டியின் ஆதிகாரணனாகிய இறைவனைப் பற்றிப் பேசும் மிக முக்கியமான மந்திரம்.. இது “விஷ்ணு” என்ற குறிப்பிட்ட தெய்வத்தை மட்டும் குறிப்பதல்ல //

    உண்மை தான் – ரிக் வேத சூகதத்தில் யாரும் தெளிவாக குறிப்பிடப் படவில்லை. ரிக் வேத பத்தாம் பாடமே பின் சேர்க்கை என்று சில வைணவர்கள் கூட ஒப்பு கொள்கின்றனர்

    //
    புருஷ சூக்தத்தின் பூர்வ,உத்தர பாகங்கள் இரண்டையும் நோக்கினால், எப்படி விஷ்ணு என்ற தெய்வ உருவகம் evolve ஆகி வருகிறது என்று புரிந்து கொள்ளலாம்.
    //
    இதை evolution என்று கூற வேண்டாம் என நினைக்கிறேன் – பினால் வரும் சூக்தம் விஷ்ணுவை அங்கே பொருத்துகிறது என்பது சரியாக இருக்கும், இல்லையேல் இவை அனைத்தும் வெறும் கர்பானா சக்தியால் விளைந்தவை என்று முடிவு கட்ட நேரிடும் – சிலர் அப்படியே கூட நினைக்கலாம்!

    ரிக் வேதத்திலேயே தீர்காத்மா அவுசாத்ய ரிஷி ராமானுஜர்/சைதன்யர் காலத்து பக்தியை காட்டுகிறார் – வெறும் ஞான மரபாக, குறியீடாக நின்று விடவில்லை

    யஸ்ய ஸ்ரீ பூர்ணா ம்தூனா – அவனது மூன்றடிகளும் அமுதமானவை (இது திரிவிக்கிரம அவதாரத்தை குறிப்பதல்ல)

    ஸ்ரீ் சூக்த வரிகல் – முழுதும் படித்தால் வெரும் செல்வத்திர்காக அல்ல என்பது தெறிகிறது
    ஹிரன் மயீம் லக்ஷ்மீம் பத்மே ச்தித amஅமலம் ஜெஷ்டம் அலக்ஷ்மிம் ஜெஷ்டை என்னும் மூதேவி) a

    aஇதை பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிறிக்கிரோமா?

    //
    வேத மரபின் தொடர்ச்சி புராண ரீதியான வழிபாட்டு மரபில் எப்படி இயைந்து இடம் பெற்றது என்பதற்கான சாட்சியங்கள்
    //
    வேதத்தின் தொடர்ச்சியே புராணம் (அதாவது ஒன்று முன் நிகழ்ந்த தர்சனம், மற்றொன்று பின் நிகழ்ந்த கற்பனை ) என்று முழுவதுமாக ஏற்க முடியவில்லை – மூன்றடி அளந்தது, திரிபுரம் எரித்தது போன்ற விஷயங்கள் வேதத்திலும் உண்டு – உபநிஷத்தில் வேதம், அங்கம், இதிஹாசம், புராணம் இவை அத்தனையும் ஒருவன் கற்க வேண்டும் என்று வருகிறது – வேத மந்திரங்களில் பாட முறையால் இடைச்சொருகல்கள் இருக்க வாய்ப்பில்லை

    //
    நீங்கள் என்னடாவென்றால், பரம்பரையாக வேதம் கற்று வேள்வி, பூஜை செய்து வரும் இரு அந்தணர் குழுக்களுக்கிடையே வேறுபடுத்தி, இதில் யாருக்கு உரிமை என்று சிண்டு முடியும் வேலை செய்கிறீர்கள்.. கொடுமை!
    .//

    கந்தர்வன் அவர்களுக்காக நான் பதில் அளிப்பது தேவை இல்லை தான் 🙂 – அப்புறம் என்னை யாராவது advocate என்பார்கள் – இருந்தாலும் இது சிண்டு முடியும் கேள்வியாக எனக்கு தோன்றவில்லை – முனைவர் அவர்கள் சமர்த்த பிராமணர்கள் என குறிப்பாக கூறி இருந்ததால் எழுந்த கேள்வி தான் அது – அவருக்கு அது முக்கியாமாக இருக்கலாம்?

  42. munaivar ayya,

    //
    இவ்வாறு நாராயண என்பது காரணப் பெயராகவரும்.இதனால் உயிர்களோடு ஒத்து நிற்பவன் என்னும்காரணம் பற்றி நாராயணன் என்னும் நாமம் பரமசிவனொருவனுக்கே உரியது என வியாகரணவிதியால் பெறப்பட்டது.
    //

    nenநீங்கள் சொன்னதை வைத்து தான் நான் எழுதினேன். nenநீங்கள் சொல்பவர் பண்டிதராகவே இருக்கலாம் – அவர் எடுத்துள்ள் முடிவு வ்யாகர்ந முடிவல்ல சமய முடிவு

  43. சந்தியாவந்தனம் அவ்வவ்ப் போது வெவ்வேறு கால கட்டத்திலே மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கக் கூடும் என்பதே என் தாழ்மையான கருத்து.

    சாந்தி வழிபாட்டின் முக்கிய பகுதிகள் பிராணாயாமமும், காயத்ரி வழிபாடும், சூரிய வழிபாடும் ஆகும்.

    இதிலே பிராணயாமாம் ஓங்காகாரமே எல்லாமுமாக இருப்பதாக சொல்க்றது. பிரணயாமம் ஒரே நேரத்திலே மனக் குவிப்பையும், மூச்சுப் பயிர்ச்சியையும் தரும் வகையிலே உள்ளது. காயத்ரி மந்திரம், அறிவைத் தூண்டும் ஒளிக்கு நன்றி சொல்லி, வழிபடுவதாக உள்ளது. உலகிலே அறிவைத் தூண்டச் சொல்லிக் கேட்பவனாக இந்து இருப்பது மகிழ்ச்சியே.

    மற்றபடி பெரும்பாலான இந்துக்கள் சிவன் , நாராயணன் உட்பட எல்லோரையும் வழிபடுபவர்களாக இருக்கின்றனர். இதிலே சிவனைக் குறிக்கும் சொற்கள் சந்தியாவந்தனத்தில் இல்லாதது ஒரு ஆச்சரியமாக இருந்தாலும், ஓம் என்பது சைவர்களுக்கு மிக முக்கியமான ஒரு அக்ஷரம் என்றே நான் கருதுகிறேன். எனவே ஓங்காரமே எல்லாமாக இருக்கிறது என்பதை பலமுறை சொல்லுவதை நாம் நினைவு கூற வேண்டும்.

    சந்தியாவந்தனத்தில் சில சேர்ப்புகளை செய்து கொள்வது பெரிய தவறாகி விடாது. அதாவது //அச்சுதா, அனந்தா, கோவிந்தா, கேசவா, நாராயணா…//வை விட்டு விடாமல், அதையும் வைத்துக் கொண்டு, அதோடு முனைவர் ஐயா சொல்லுவது போல தகுதியான சிவ மந்திரங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏற்ககனவே சந்தியாவந்தனம் வெவ்வேறு வகையாக செய்யப் பட்டு வருகிறது.

    சந்தியாவந்தனம் மனதுக்கு அமைதியைத் தருகிறது என்பதும் , அது ஆன்மீக முயர்ச்ச்யின் ஆரம்ப கட்டமாக இருக்கிறது என்பதும் வாஸ்தவமே. உலகில் உள்ள எல்லா மக்களும் சந்தி செய்வது நல்லதே. அதற்க்கு உலக மக்கள எல்லோருக்கும் உரிமை உண்டு, தகுதியும் உண்டு.

    ஆனால் இன்றைய கால கட்டத்திலே எத்தனை பேர் சந்தி செய்கின்றனர்? சாஸ்திரிகள் என சொல்லப் படும் புரோகிதர், வயதான புரோகிதர்கள் கூட சாயந்திரம் டி .வி சீரியலில் உட்கார்ந்து விடுகின்றனர். எனவே சந்தியை ஒரு சடங்காக அவசரம் அவசரமாக செய்யாமல், விடுமுறை நாட்களிலாவது பொறுமையாக செய்து, அது மன அமைதியை அளிக்கக் கூடியது என்பதை சிறுவர்களை உணர செய்ய வேண்டும்.

    சந்தியில் பகுத்தறிவுக்கு அதிக இடமும் நம்பிக்கைக்கு ஓரளவு இடமும் உள்ளது. அறிவை வளர்க்க வேண்டும் என்று கருதுவது, நூற்றுக்கு நூறு பகுத்தறிவு பாதையே.

    சந்தியை முடித்து விட்டு பூசனையில் அமர்ந்தால் மனக் குவிப்புக்கு சரியாக இருக்கும் என்பது அறிங்கர்கள் கருத்து. பூசனை என்பது நம்பிக்கை பாதை எனக் கருதப் பட்டாலும் அது தனி மனிதனின் ஆன்மீக நிலையை உயர்த்தும் முயற்ச்சியே. உருவ வழிபாட்டு பூசனையின் மூலம் , நீண்ட நேர மனக் குவிப்பும், வேகமான ஆன்மீக முன்னேற்றமும் சாத்தியம் ஆகிறது. வழி படும் மூர்த்தியின் கொள்கைகளை நினைவு படுத்தி உள்வாங்கும் செயலாகவும் பூசனை இருக்கிறது. காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பவன், ஒரு நொடியாவது அவருடைய தியாகத்தையோ, அஹிம்சையையோ நினைவு கூறுவான் என்று கருதலாமா?

    சந்தியிலே யமாய தர்மராஜாய … என்று தினமும் மூன்று வேலை வேண்டினாலும், மரணம் வருவதை நிறுத்த முடிவதில்லை. அது யமன் என்று சொல்லப் படுபவர் உயிரை எடுக்கிறாரோ, அல்லது எப்படியோ மொத்திலே உயிர் போகிறது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் மாறாத ஒரு நிலைக்கு நமது மனதை உயர்த்த முடியுமானால், மாறாத ஒன்றாக நமது உயிரை மாற்ற முடியுமானால், அல்லது மாறாத ஒன்றுடன் நமது உயிர் கலக்குமானால் அப்போது நமக்கு மரணம் பற்றிக் கவலை இல்லை. அதுதான் மார்க்கண்டேயன் செய்தது. கலங்கும் மனதையே யமன் பற்றி இழுத்து செல்லுகிறான் , கலங்கா மனதை அவன் இழுத்துப் பார்த்து விட்டு விட்டுப் போய் விட்டான் என்கிறார். எனவே சித்திர குப்தாயை வை நம என்பதோடு நிறுத்தாமல் மார்க்கண்டேயனின் உயிரை கலங்காத நிலைக்கு உயர்த்திய மூலப் பொருளோடு கலப்பதே தற்காப்புச் செயல் ஆகும் என்பது அறிங்கர்கள் கருத்து.

  44. முனைவர் ஐயா, சாரங்,கந்தர்வன் – நன்றி.

    // ஆக, தொன்றுதொட்டு புருஷ சூக்தம் விஷ்ணுவையே குறிப்பதாக விளக்கப்பட்டு வருகிறது.//

    ஸஹஸ்ராக்‌ஷ: ஸஹஸ்ரபாத் என்பது ஒரு வேத படிமம். பிந்தைய புராண இலக்கியங்களில் அது இந்திரனைக் குறீத்தது. ரிக்வேத இலக்கியத்தில் தெய்வத்தின் விராட் ரூபத்தைப் பொதுவாகக் குறித்தது. இந்த சொல்லடுக்கு விஷ்ணு சகஸ்ரநாமத்தில் மட்டுமல்ல,லலிதா சகஸ்ரநாமத்திலும் உண்டு என்பதைக் கவனிக்கவும்.

    பொதுவான வேத மந்திரங்கள் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை *மட்டுமே* குறித்தன என்பது முழுமையான கருத்து அல்ல. அந்த மந்திரங்கள் தெய்வங்கள் முகிழ்க்கும் ஒரு மாபெரும் விளைநிலமாக,canvass ஆக இருந்தன. ரிஷிகளின் அனுபூதியில் விளைந்த அந்த மந்திரச் சொற்களின் அடிப்படையிலேயே பின்னர் ந்மது சமயங்கள் அனைத்தும் கட்டமைக்கப் பட்டன. உதாரணமாக, அக்னியின் வேத உருவகம் சிவனாரின் செஞ்சடை, முக்கண், நந்தி (யாகத் தடியை சுமந்து செல்லும் எருது), சிவலிங்கம் (யூபஸ்தம்பம்) ஆகியவையாக விரிகிறது.. இது போன்றே இந்திரனின் பல உருகவங்கள் விஷ்ணுவினுடையதாக.. (ரிக்வேதத்தில் பூமியும், ஸ்ரீயும் இந்த்ர-பத்னீ என்றே அழைக்கப் படுகின்றனர்). எனவே வேத மந்திரங்களை rigid ஆன சமயவாத சட்டகத்தில் அடக்கினால் பல சமயங்களில் அனர்த்தங்கள் தோன்றவும் வாய்ப்பு உண்டு.

    கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த தெய்வ பரிணாம வளர்ச்சி ஒரு synthetic process அல்ல. பல நூற்றாண்டுகளாக அகமுக விகசிப்பின் விளையாகத் தோன்றிய ஒரு organic process. இது பற்றி ஸ்ரீஅரவிந்தர் விரிவாக எழுதியுள்ளார்.

    ஸ்ரீசூக்தத்தில் லக்‌ஷ்மி என்ற தெய்வ உருவம் தெளிவாகவே குறிப்பிடப் படுகிறது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அது “வைஷ்ணவ” சமயரீதியான உருவகம் அல்ல என்று தான் சொன்னேன். துர்கா, லக்‌ஷ்மி,சரஸ்வதியை எல்லா சமயத்தவரும் வணங்குகிறார்கள்.சைவ, வைணவ பிணக்குகள் உருவாவதற்கும் முந்தைய காலத்திய தேவி வழிபாட்டு மரபின் தொடர்ச்சியே அது.

  45. ஜடாயு அவர்களே

    உங்களின் அழகிய விளக்கத்திற்கு நன்றி

    இரண்டே விஷய்னகள் பற்றி ஒரு விளக்கம்

    இந்திரா பத்னி – இந்த்ராணி என்பது இந்திரனாரின் பத்னியை குறிப்பதல்ல – “இந்த” என்பது புருஷன் வலது கண்ணை குறிக்கும் – இந்த பத்னி இந்த்ராணி என்பது ஜீவாத்மாவை குறிக்கும் (இடது கண்) – இந்த விளக்கம் ப்ரிஹுதாரண்யா உபநிஷத்தில் உள்ளது முண்டக உபநிஷத்திலும் உள்ளது

    ஆகா இந்திராநாறும் இந்த (இந்த்ர என திரிந்தது) வேறு என்பது யாஞவல்கரின் வாக்கு

    ஸ்ரீ சூக்தம் பற்றி – அதில் முக்கியாமாக மாற தேவியரிடமிருந்து பிரித்துக் காட்டுவது ஜேஷ்டை – ஜேஷ்டை என்பது லக்ஷ்மியின் அக்காலான மூதேவியை குறிக்கும் (சேட்டை தன் மடிஅகத்து செல்வம் பார்த்திருக்கின்நீரே திருமாலை ) – ஜேஷ்டை யை விட்டு விட்டு திருமால் அவளது தங்கையை மணந்தார் என்பது பிரசித்தம்

    சைவ – வைணவ பிணக்கு வருவதன் முன்னேயே வேடமும் ஸ்ரீ என்னும் லக்ஷ்மியை விஷ்ணு பத்னி என்றே காட்டுகிறது

    இதோ லக்ஷ்மி காயத்ரி

    “மஹா தேவை ச வித்மஹி விஷ்ணு பத்னைய தீமஹி
    தன்னோ லக்ஷ்மிஹி ப்ரசோதயாத்”

    கந்த த்வாராம் துரா…. நித்ய புஷ்டம் கரிஷிநிம் – நித்யம் பசுவில் வசிப்பவள் – இது ஒரு தேவியை தான் குறிக்கும் என நினைக்கிறேன்

    இதில் வரும் ஒரு வாக்கியம் (குபேரனை குறிக்கும் தேவ சஹா ) இது பார்வதி தேவியை குறிக்கவே இயலாத படி செய்து விடுகிறது

  46. திரு பாலாஜி //“பிறப்படிப்படையில் பெருமை பேசிக்கொள்வோர் எழுதியுள்ள உரைகளில் இக்கருத்தைக் காண இயலாது” என்ற கருத்து மிகவும் /கண்டிக்கத்தக்கது!// “சொல்லிய பாட்டின் பொருளறிந்து சொல்லுவார் செல்வர்” என்ற மணிவாசகரின் கருத்துக்கு ஏற்ப நாள்தோறும் வழிபாட்டில் சொல்லிவரும் வடமொழி மந்திரங்களுக்குப் பொருள் தேடி வந்தபோது இராமகிருஷ்ண மடத்து வெளியீடான ‘அண்ணா’ அவர்களின் நூல்கள் ஓரளவு துணை செய்தன. அடிக்குறிப்புக்களுடன் கூடிய ஸ்ரீருத்திரத்தின் உரை திருமுறைகளுடன் ஒப்பிட்டுப் படிக்கப் பெரிதும் உதவின். அந்தளவுக்கு வருணபூஜையின்போது பாராயணம்செய்யப்படும் பவமானசூக்தம் முதலியவற்றுக்குக்குத் தமிழிலோ ஆங்கிலத்திலோ பொருள் கூறும் நூல்கள் கிடைக்கவில்லை. பாம்பன் சுவாமிகள் நூல்களில் 108 உபநிடதங்களிலும் சிவபரமான, சைவசித்தாந்தக் கோட்பாடுகளுக்கு வலுவூட்டும் வேதமந்திரங்களின் பாடமும் உரைவிளக்கமும் கிடைத்தன. இந்தத் தேடலில் புருஷ சூக்தமும் ஸ்ரீசுக்தமும் அடங்கும். காஞ்சிப் புராணம் படிக்கும்போது சர்ச்சைக்குரிய புருஷ சூக்தத்தின் வரிகளுக்கு எப்படிப் பொருள்கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதல் கிடைத்தது. வலைதளத்தில் இரண்டு தளங்கள் கிடைத்தன . ஒருதளம் பிற வரிகளுக்கு எல்லாம் பொருள் கூறி விட்டு நான் பொருள் தேடிய வரிகளுக்கு நேரடியாக விளக்கம் தராமல், இதற்குப் பொருள் தருவது விவாதத்துக்கு இடமாகி விடும், மூலபாடமே போதிய விளக்கத்தைத் தந்து விடும் என்று கூறி ஒதுங்கிவிட்டது. இன்னோரு தளம் எதுவுமே கூறாது இருந்துவிட்டது. அந்தத் தளம் புருஷசூக்தத்திற்கு ஒரு பெரியவர் தரும்விளக்கமாகப் பரிந்துரைக்கப்பட்டது. இவ்வாறு வேதத்தின் இந்தப் பகுதிகளுக்கு இவர்கள் உறுதியான தெளிவானபொருள் விளக்கத்தை இவர்களினுரைகளில் காணக் கிடைக்காதபோது என்செவிப்பறை கிழியுமாறு நெஞ்சில் ஆழப்பதியுமாறு , நீங்காத வடு உண்டாகுமா று வீரமணி கோஷ்டியினரும் மாற்றுச் சமயத்தினரும் கூறும் கருத்துக்களே தங்கின. இந்த மெளனத்தை எடுத்துக் காட்டி , இந்தப் பகுதிகளுக்குக் காஞ்சிப்புராணத்தின் சிவஞான முனிவர் தந்த விள்க்கத்தைத் தந்தேன். இதில் எந்தப்பகுதியிலாவது நீங்கள் கண்டித்துள்ள வாக்கியங்கள் வெளிப்படையாகவோ அல்லது suggestive ஆகவோ உள்ளனவா என்று பாருங்கள். உரை கூற வேண்டிய பகுதிகளுக்கு உரை கூறாமல் மழுப்புவதும் மெள்னமாக இருப்பதும்தான் கண்டிப்பதற்கு உரியன. தமிழ் இந்து , வலைதளம் தமிழும் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள தத்துவஞானங்களும் இந்து என்னும் பொதுக் கோட்பாட்டுக்கு அந்நியமானவை அல்ல என்ற கருத்தை வலியுறுத்த , வாசகர்களிடத்தில் ஊன்ற நிறுவப்பட்டதென்பதை நன்கு உணர்ந்து, அதில் நம்பிக்கை உடைய நான் எழுதி வருகின்றேன்.

  47. I remember to have read long back that the word Nara in sanskrit also means water and the word Narayana means the first creator of all living organisms and hence most of the scriptural references are an indication of that.(Scientifically it means the single cell organism that came out of the water,vivisected itself and multiplied into various living organisms ending at the stage of homosapiens.even the ten avcatars of vishnu can also be symbolic representation of the same)Secondly it is an accepted fact that both Sankara and Ramanuja went to Kashmir to theBodhayana vritti based on which they built yp the darsanas,While inNorth India Karthikeya iunmarried and Vinayaka is with two Devis inthe South the lore is contrary.Mrs,Suvra Jaiswall and few others have opined the religion as suchis syncronied one ,while philosophical treatises deal withthe soul and human development,(Origins of vaishnavism in India)Even in Gayathri the word “BURGA: has benn interpreted to mean vishnu sivs and surya”Pynganadu Ganapati sastrigals Gayathri Bashyam and SandhyavandanBashyam of sri Kanchi Kamakotipeetam)In view it is better to set at rest the claims supremacy which was done long by the tamil proverb”Harium sivanumonnu.idhai ariyadhavan vaail mannu”.

  48. //(1) ஸ்மார்த்த-மத்வ-ஸ்ரீவைஷ்ணவ பாகுபாடின்றிக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தற்போதைய வைதீக சந்தியாவந்தன விதியை “காலச்சூழ்நிலைகளின் காரணமாக மாறியுள்ளது” என்று கூறுவது முறையற்றது என்றும் உண்மைக்கு மாறுபட்டது என்று கருதியும்;// சைவ சந்திக்கு ஒரு பயன் கூறப்படுகின்றது. ஆன்மா மாயாமல காரியங்களாகிய தத்துவங்களிடமிருந்து பிரிந்து சிவத்தைத் தியானிக்கவும் சிவோஹம் பாவனை செய்யவும் ஏதுவாகும்படி, முதலில் ஆன்மதத்துவ ஸ்வதா, வித்யாதத்வ சுவதா ,சிவதத்துவ சுவதா என்று ஆசமனமும் பின்னர் பஞ்சப்பிரமமந்திரம் ஷடங்க மந்திரங்களால் அங்கநியசம் கரநியாசம் சகளீகரனம் செய்ய வேண்டுமென ஆகமங்கள் விதிக்கின்றன. சிவஞான முனிவர் காஞ்சிப்புராணத்தில் சனற்குமாரப் படல்த்தில் இந்த ஆகம முறை அல்லாத வேதமந்திரங்கள் உச்சரித்துச் சந்தி செய்யும் முறையைக் கூறுகின்றார். காஞ்சிப்புராணம் வடமொழியிலிருந்து தமிழ்மொழியாக்கம் செய்யப்பட்டதெனக் கூறப்படுகின்றது. எனில், காஞ்சிப்புராணம் கூறும் சந்தி முறை சிவஞான முனிவர் காலத்திலோ அல்லது வடமொழியில் இந்தப் புராணம் தோன்றிய காலத்திலோ நடைமுறையில் இருந்திருக்க வேண்டும். இத்னைக் கூறிவிட்டு என் கட்டுரையில் நான் இன்று வைதிகமுறை சந்தி காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ள சந்தி முறைக்கு வேறாக உள்ளதே, இந்த மாற்றம் ஏதாவது ஒரு காலத்தில் செய்யப்பட்டதா, அறிந்தவர் திருத்துக எனப் பணிவோடு விண்ணப்பித்திருந்தேனே ஒழிய வைதிகமென்றோ வேறு சொற்களாலோ கருத்தொன்றையும் தெரிவிக்க வில்லை. கிண்டலுக்கோ கேலிக்கோ இங்கு இடமில்லை. உயர்ந்த பொருளைச் சிந்திக்கும்போது , அதனை இழிவுபடுத்தல் கீழ்மக்கள் செயல்.

  49. முனைவர் அவர்களே,

    // உரை கூற வேண்டிய பகுதிகளுக்கு உரை கூறாமல் மழுப்புவதும் மெள்னமாக இருப்பதும்தான் கண்டிப்பதற்கு உரியன. //

    இது முற்றிலும் தவறான கண்ணோட்டம். இராமானுசர், தேசிகர் மற்றும் ஏனைய வைணவ ஆசிரியர்களும், வாடிராஜர், இராகவேந்திரர் போன்ற மத்வ ஆச்சாரியார்களும், மற்ற ஏனைய ஆசிரியர்களும், அனுஷ்டானத்தின்மூலம் காட்டிய உயர்வு-தாழ்வு பாராமையை, உரையிலே எழுதிக்காட்டத் தேவையே இல்லை.

    உரை எழுதும்பொழுது context-க்குப் பொருந்துமாறு சொல்லவேண்டிய விஷயத்திற்குப் பதிலாக, focussed-ஆக இல்லாமல் இங்கும் அங்கும் tangential-ஆக தாவி வேறு விஷயங்களுக்குச் செல்வது உரைநூல்களின் இலட்சணம் அன்று. புருஷ சூக்தத்தில் விளக்கவருவது சிருஷ்டியின் பல்வேறு வகைகளை. அவ்வளவே. “இவர் உயர்ந்தவரா, தாழ்ந்தவரா?” என்ற கேள்விக்கெல்லாம் அங்கு இடமில்லை. விராட்புருஷனின் கண்ணிலிருந்து சூரியனும், மனசிலிருந்து சந்திரனும், தோன்றியதைத் தொடர்ந்து, “பிராம்மணர்கள் முகத்திலிருந்து பிறந்தனர்; க்ஷத்திரியர்கள் தோள்களிலிருந்து பிறந்தனர்; வைசியர்கள் வயிற்றிலிருந்து பிறந்தனர்; சூத்திரர் கால்களிலிருந்து பிறந்தனர்” என்று வருவதில் நான்கு விதமான வர்ணங்களுக்கு உரிய தொழில்களைச் சொல்ல வந்தன. அவ்வளவே.

    புருஷசூக்த மந்திரத்தை சர்ச்சைக்குரியது என்று கருதுவது அண்மையில் புதிதாக விளைந்த ஒன்று. இதற்குக் காரணம் சுவிசேஷ சூழ்ச்சியும், ஆரிய-திராவிட அரசியலும், இடதுசாரிகளின் அருவருக்கத்தக்க அரசியலும்தான். விக்கிரக-அர்ச்சாவதார வழிபாட்டை “சாத்தான் வழிபாடு” என்று கூறும் கிறித்தவ-இசுலாமிய அறிவிலிகளுக்குப் பெருமாளின் அந்த திவ்விய விக்ரஹத்தின் இனிய பதங்களைத் தாழ்வாகத் தான் எண்ணத் தோணும். அதன் தாக்கத்தில்தானோ என்னவோ, இன்று புருஷ சூக்த வாக்கியத்தைச் “சர்ச்சைக்குரியது” என்று எண்ணத்தோன்றுகிறது?

    நீங்கள் இதை என் சர்ச்சைக்குரியது என்று கூறுகிறீர்? கால்களைத் தாழ்ந்ததாக நினைப்பதால்தானே? நீங்கள் கண்டிக்கும் உரையாசிரியர்கள் பரமவைணவ ஏகாந்திகள். அவர்களுக்கு இறைவனின் பாதங்களைக் கனவில் கூட தாழ்ந்ததாக நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அவர்களுக்கு அங்கு சாதி உயர்வு/தாழ்வு சம்பந்தப்பட்ட விளக்கத்தை அளிக்கத் தேவையிருப்பதாகத் திருவுள்ளங்களில் தோன்றியிருக்கவே வாய்ப்பில்லை. இப்படி இருக்க, அதில் “நான் தேடும் விளக்கம் இருக்கிறதா?” என்று நீங்கள் அதை அணுகுவது தவறான கண்ணோட்டம். இன்னும் சொல்லலாம்-

    திருப்பாணாழ்வார் அமலனாதிப்பிரான் பிரபந்தத்தில் திருமாலின் கால்களை முதலில் சேவித்துவிட்டு படிப்படியாக திருத் தொடைகளையும், திருவுதரத்தினையும், திருமார்பையும், திருக்கண்களையும் சேவிக்கிறார். வேங்கடேச கராவலம்ப தோத்திரம் ஏழுமலையானுடைய கிரீடத்தில் ஆரம்பித்து மெது மெதுவாக நெற்றி, முகம், கண்கள், கழுத்து, தோள்கள், கரங்கள், திரு உதரம், தொடைகள், கால்கள், என்று இறுதியில் அவனது “அனைத்து லோகங்களையும் உருகச்செய்யும் திருப்பாதங்களைச்” சேவிக்கிறது (ஜங்காத்வயேன பரிமோஹித சர்வலோக ஸ்ரீ வேங்கடேச மம தேஹி கராவலம்பம்).

    இத்தகு மனநிலையுடன் வாழ்ந்து உரை எழுதவந்த உரையாசிரியர்களுக்கு, “எதிர்காலத்தில் மக்கள் இந்த மந்திரங்களை சர்ச்சைக்குரியதாக நினைத்து உயர்வு-தாழ்வு அடிப்படையில் தப்பர்த்தம் பண்ணுவார்களோ” என்று ஐயமுற்று, அந்த உயர்வு-தாழ்வு அடிப்படையிலான விளக்கத்தை எடுத்துக்கழிக்க அவசியமே இருக்கவில்லை என்று கூறுவேன்.

  50. //தமிழ் இந்து , வலைதளம் தமிழும் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள தத்துவஞானங்களும் இந்து என்னும் பொதுக் கோட்பாட்டுக்கு அந்நியமானவை அல்ல என்ற கருத்தை வலியுறுத்த , வாசகர்களிடத்தில் ஊன்ற நிறுவப்பட்டதென்பதை நன்கு உணர்ந்து, அதில் நம்பிக்கை உடைய நான் எழுதி வருகின்றேன்.//

    தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. உங்கள் பணி பயன் மிக்கது; பாராட்டுக்கு உரியது; இறைவர் திருவருள் என்றும் துணைநிற்கும்.

  51. ஜடாயு அவர்களே,

    // சைவ, வைணவ பிணக்குகள் உருவாவதற்கும் முந்தைய காலத்திய தேவி வழிபாட்டு மரபின் தொடர்ச்சியே அது. //

    பௌத்த-சமண மதங்களின் தாக்குதல் எங்குமே காணப்படாததால், அம்மதங்களுக்கும் முந்தையதான பரிபாடல் முதலிய சங்கநூல்களில் தெளிவாகத் திருமாலை லக்ஷ்மியின் கணவராகக் காட்டப்பட்டுள்ளது. எந்த சங்கநூலிலாவது “திருமாலுடன் சம்பந்தமில்லாத லக்ஷ்மி என்னும் தேவி” என்று உள்ளதா?

    “சைவ-வைணவப் பிணக்குகள் இல்லாத முந்தைய காலத்தில்” என்று எந்தக் காலத்தைச் சொல்கிறீர்கள்? “சைவ-வைணவ பிணக்குகள் இல்லாத இந்து மதம்” என்பது என்ன? அது எத்தகையது? திருமாலைக் குறித்து வரும் பாடல்களில் முழுக்க முழுக்க தற்கால வைணவக் கோட்பாடுகள் நிறைந்த பரிபாடலுக்கும் முந்தியதா?

    // ஆனால் அது “வைஷ்ணவ” சமயரீதியான உருவகம் அல்ல என்று தான் சொன்னேன். //

    வைஷ்ணவ சமயரீதியான உருவகம் என்பது யாது? வைஷ்ணவ சமயரீதிக்குள் அடங்காத உருவகம் யாது?

  52. தமிழ் இந்தியர் (தமிழர் ) வழி பட்ட கடவுள்களை வட இந்தியரும் வழி பட்டு வழி பட்டு வந்தனர், தமிழ் சமுதாயம் வேள்விக்கு வடமொழியை உபயோகப் படுத்தி இருக்கிறது. வேள்விக்கு முக்கியத்துவம் குடுத்த வட இந்தியர்களிடம் முழுமையாக உருவ வழிபாட்டில் அதிக கவனம் செலுத்த வைத்தது தமிழரே.

    தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்து வழிபட்ட சுப்பிரமணியர் வழி பாடு, மாலவன் வழி பாடு ஆகியவற்றை சேர நாட்டுத் தமிழரான ஆதி சங்கரர் வடக்கிலேயும் இந்திய முழுவதுக்கும் பிரபலப் படுத்தினார். ஆதி சங்கரரின் தத்துவம் ஞானத்தின் மூலமே விடுதலை , இரண்டற்ற அத்வைதம் ஆகியவனவாக இருந்தாலும் அந்த நிலையை அடைய அவர் சிறந்த முறையாக கூறியது, கடவுள் வழிபாடே, குறிப்பாக உருவழிபாடே.. பஜ கோவிந்தம் ..!

    இந்து மதம் வட மொழி என்று கூறப் படும் சமஸ்கிருதத்தையோ, அல்லது வேறு எந்த மொழியையோ நம்பி இல்லை. இந்து மதம் உண்மையைத் தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

    “உண்மையே வெல்லும்” என்ற உண்மையின் அடிப்படையிலேயே உண்மையைத் தேடும் வழியே இந்து மதம்.

    உண்மையை உயிருக்கு புரிய வைப்பதன் மூலம், அந்த உயிரை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து சென்று, உயிரை அடிமை நிலையில் இருந்து விடுதலை நிலைக்கு உயர்த்துவதே இந்து மதத்தின் நோக்கம்.

    தமிழில் இந்து மதத்தின் எல்லா உண்மைகளும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், சமஸ்கிருதத்தையும் மிஞ்சிய வகையில் இந்து மதத்தின் உண்மைகள், தமிழிலும், பிற திராவிட மொழியிலும் உண்டு!

    இந்தியாவைப் பொருத்த அளவில் ஆன்மீகம் என்பது, மனிதனின் அறிவை உயர்த்தி, அவன் உயிரை விடுதலை அடையச் செய்வது என்பதுதான்!
    உண்மை – அதை எந்த மொழியில் சொன்னாலும் அது (உண்மை) ஒன்றாகத்தான் இருக்க முடியும்!

    “உலகம் உருண்டையானாது” என்று சொன்னாலும், “EARTH IS ROUND” என்று
    சொன்னாலும், பொருள் ஒன்றுதான்!

    மனித உயிர் பற்றீய ஆராய்ச்சியில் கிருட்டிணர்,

    ” கதாஸூன், அகதாஸூன், ந அனுசோசந்தி பண்டிதா” -என்று கூறியுள்ளார்.
    “சான்றோர் இங்கே இருப்பவர்களைப் பற்றீயோ, இறந்தவர்களைப் பற்றீயோ எண்ணிக் கலங்குவதில்லை” என்று பொருள்!

    அதையே பட்டினத்தார்
    ” செத்த பிணத் தருகே இனிச் சாம்பிணம் கத்துதையோ ” என்று பாடியுள்ளார்!

    “காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
    தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
    போம்பிணம் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டினிமேற்
    சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்கரனே”.

    மேலும் கிருட்டிணர்,

    “நத்வே வாஹம், ஜாது நாசம், ந த்வம் னேமே ஜனாதிபா” என்றும்,

    “வாசாம்சி ஜீர்ணானி யதா விஹாய

    நவானி க்ருஹ்ணாதி நரோபராணி

    ததா சரீராணி விஹாய ஜீர்ணான்

    யன்யானி ஸ‌ம்யாதி நவாணி தேஹீ ” என்றும்,

    கூறியுள்ளதையே பட்டினத்தார்,

    “அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?

    அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?

    பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?

    பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?

    முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?

    மூடனாயடி யேனும றிந்திலேன்,

    இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?

    என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? ”

    என்று பாடியுள்ளார்!

    எனவே, எந்த மொழியில் சொன்னாலும், உண்மை ஒன்றுதான்.

    எந்த மொழியில் சொன்னாலும் உண்மை ஒன்றுதானே- பின்ன என்னதுக்கு சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று கேட்கலாம். சில விஷயங்கள் ஒவ்வொரு மொழியில் தெளிவாக சொல்லப் பட்டு உள்ளன!

    உதாரணமாக, “எழுமின், விழிமின் குறி சேரும் வரை நில்லாது செல்மின்” என்ற வாக்கியம் சம்ஸ்கிருத வாக்கியமான, “உத்திஸ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதித” என்ற வட மொழி வாக்கியத்தின் மொழி பெயர்ப்பு. இதில் குறிப்பிடப்பட்டுள்ள, ” ஜாக்கிரத” என்ற வார்த்தையை தமிழில் “விழிமின்” என்று எழுதியுள்ளனர். ஆனால், இந்த வார்த்தை “ஜாக்கிரத” மிக முக்கியமானது. “ஜாக்கிரத” என்ற வார்த்தையால் உணரப்படும் ஜாக்கிரதை, “விழிமின்” “என்ற வார்த்தையால் உணரப்படுமா- என்பது சந்தேகம்!”ஜாக்கிரதை”யை கைவிட்டு விட்டதால் தான், இன்றைக்கு மக்கள், ஆன்மீக விஷயத்தில் ஏமாந்து நிற்கின்றனர்!

    எனவே பிற மொழியில் சிறிது புலமை பெறுவது தவறு இல்லை.

    “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்

    திண்ணியர் ஆகப் பெறின்”

    இதை மூல மொழியான தமிழ் மொழியில் பயிலும் போது கிடைக்கும் “திண்ணியம்” மொழி பெயர்ப்பில் கிடைக்காது என்பது அறிந்ததே.

    ஆனால் யாரையும் வட மொழி பயிலச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை. கட்டாயப் படுத்துவது என்பது இந்து மதத்தில் இல்லை.

    வடமொழி அறியாமலேயே இந்து மதத்தைப் நன்கு புரிந்து கொள்ளவும், சிறப்பாக பின்பற்றவும் முடியும்.

  53. மதிற்பிற்குரிய முனைவர் அய்யா அவர்களுக்கு, உங்கள் ஆதங்கம் எனக்கு நன்கு விளங்குகிறது. இதற்க்கு விளக்கம் தெரியாமல் நானும் பல காலம் தவித்திருக்கிறேன். நீங்கள் அளித்த காஞ்சி புராணத்தின் விளக்கம் அருமை. ஆனால், மாத்வ ஆசாரியர்கள் பிறப்படிப்படையில் பெருமை பேசிக்கொள்பவர்கள் என்பது ஒப்புக்கொள்ள இயலாத ஒன்று. இதற்க்கு சான்றாக கவுடிய-இஸ்கான் அமைப்பினர் வெளிநாட்டில் கிறித்தவ குடும்பத்தில் பிறந்த வெள்ளையர்களைக்கூட அந்தணர்கள் ஆகலாம் என்று அவர்களுக்கும் யக்நோபவீதம், சந்தியாவந்தனம் முதாலனவற்றைக் கற்றுக்கொடுத்து அவர்களும் அனுஷ்டானங்களின் படி அந்தணர்களாக வாழ்கின்றனர். சில மாத்வ இளைஞர்கள் அவர்களை “பிரப்படிப்படயில்தான் பிராமணத்துவம் வரும், கர்மம், குணம் அனுஷ்டானம் எல்லாம் செல்லாது” என்று வம்புக்கிழுத்தபோழுது, இஸ்கான் ஆசாரியர்கள் வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் மாத்வ ஆசாரியர்களின் உரைகள் மூலம் “அந்தணன் ஆவதற்கு அந்தணனாக பிறக்கவேண்டும் என்றில்லை” என்று நிலைநாட்டியுள்ளனர். அன்றே, அந்த சுட்டியை உங்களுக்குத் தந்தேன், நீங்கள் படிக்கவில்லை போலும். இதோ, தயவு செய்து தாரதம்யத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு முழுமனதுடன் படித்துப் பாருங்கள். இஸ்கான் ஆசாரியர்களே “மாத்வ ஆசாரியர்கள் எவருமே தங்கள் உரைகளில் பிறப்புத் தகுதி அவசியம் என்று கூறவில்லை” என்று தக்க சான்றுகளுடன் நிலைநாட்டியுள்ளனர்:-

    https://gosai.com/writings/the-ontological-position-of-the-vaishnava-over-the-brahmana

    தயவு செய்து நீங்கள் முழுவதுமாகப் படிக்கவும்.

    மேலும், என் சிற்றறிவுக்கு எட்டியதுபோல நான் புரிந்துவைத்துள்ளதைப்போல ஆர்கூட் (Orkut) என்ற தளத்தில் Hinduism என்ற community- இல் புருஷ சூக்தம் மற்றும் மனுஸ்மிருதியைப் பற்றி எழுதியுள்ளேன். சற்று படிக்கவும்:-

    I request all of you to read this topic and give your suggestions/criticisms. This is a doubt I have got for a few days.

    Purusha Suktha and Manusmrithi say that Brahmanas came from the mouth/face of Brahman (the Supreme Purusha), Kshatriyas from His shoulders, Vaishyas from His thighs and Shudras from His feet.
    Seeing this, many anti-Hindu propagators have spread venom against Hinduism. But the following is my own interpretaion, please forgive me if it seems wrong:-

    It also says:- From His mind was born the moon. From His two eyes was born the sun. From His mouth were born Indra and Agni. From His breath was born the air. From (His) navel was produced the antariksha (the space between the earth and the heavens). Dyuloka (or heaven) came into existence from His head. The bhumi (the earth) evolved out of His feet, and deek (or spacial directions) from His ears. Similarly (the demigods) produced the worlds (too).

    You can see that this Earth was also evolved from His feet? Then people of all four Varnas live in this same Earth, right? If then, can we take all people are equal? Even Bhagavan incarnated Himself only in this Earth, right?
    Moreover, even though from different parts, all people are said to have come from that Purusha only, right? It may look wrong if it said Shudras or people of any other Varnas came from another source! But Purusha Suktha clearly says all people came from God, right?
    Today unfortunately all Varnas and Castes have got mixed up and eventually all are grouped into two categories:- Brahmins (Brahmanas) and Non-Brahmins (all other Varnas). People have almost forgot Kshatriyas and Vaishyas. Now isn’t it true that one who sees the feet of the Lord are blessed? Then Shudras are blessed people, right?

    For example, in the Mahabharata, before the Kurukshetra war, when Arjun and Duryodhana go to ask for help from Sri Krishna, the Lord is asleep. Duryodhana sits beside the head of the Lord, and Arjun humbly sits near the feet of the Lord.

    When Krishna wakes up, he sees Arjun first (as anyone lying down will see their feet first), and eventually Arjun (and other Pandavas) wins the war! He also had the fortune of hearing the Gita from the Lord Himself!!
    So I think the Non-Brahmins (that is people who are said to have come from the feet of the Purusha) are more blessed that those said to have come from His face or other parts.
    What do you think?

    இதை நான் எழுதியது ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ஆண்டு- 2009.

    உங்களுக்கு அக்கவுன்ட் இருந்தால், நீங்களும் இதை வசித்து பார்க்கலாம்.

    https://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=21896160&tid=5371966346015382652&kw=purusha

    அதாவது, நீங்கள் அளித்த காஞ்சி புராண உரையை படிப்பதற்கு முன்பே இறைவன் கருணையால் ஓரளவு சரியாகப் புரிந்துகொண்டேன் என்று எண்ணுகிறேன் (இதை அகந்தை என்று எண்ணவேண்டாம்).

    நன்றி, வணக்கம்!

  54. முனைவர் அவர்களே,

    முதலில்,

    //
    சிவஞான முனிவர் காஞ்சிப்புராணத்தில் சனற்குமாரப் படல்த்தில் இந்த ஆகம முறை அல்லாத வேதமந்திரங்கள் உச்சரித்துச் சந்தி செய்யும் முறையைக் கூறுகின்றார்.
    //

    நீங்கள் இப்பொழுது சொல்வது குழப்பமாக இருக்கிறது. எல்லா வைதிகர்களும் சந்தியின்போது வேத மந்திரங்கள் உச்சரிக்கின்றனர். இதில் சந்தேகம் இல்லை. அத்துடன் ஆச்சமனத்திலும் அங்க நியாசத்திலும் திருமாலுடைய நாமங்கள் உண்டு. இதைத் தான் தற்காலத்தில் மாறியுள்ளது என்று நீங்கள் கூறுவதாகக் கட்டுரையில் எழுதியதை வைத்து நினைத்தேன். சந்தியில் எந்த பகுதி மாறுதல் அடைந்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். அத்தோடு, நீங்கள் கூறும் காஞ்சிப்புராண மேற்கோளையும் தயவு செய்தி மறுமொழியில் இடுங்கள். மேற்கொண்டு அதைத் தெளிவுபடுத்தத் தயார்.

    இரண்டாவதாக,

    மாதவ சிவஞான முனிவர் காலம் 18-ஆம் நூற்றாண்டு தானே? நீங்கள் இக்கட்டுரையில் கீழ்க்கண்டபடி குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் 16-ஆம் நூற்றாண்டு அப்பையா தீட்சிதர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது தெளிவாக உள்ளது:

    //
    சிவதத்துவ விவேகம் அப்பைய தீட்சிதர் அவர்களால் இயற்றப்பட்ட நூல். இது திராவிட மாபாடிய கர்த்தர் மாதவச் சிவஞானயோகிகளால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
    //

    18-ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு வைதிகர்களைப் பரவலாகத் திருமாலுடைய நாமங்களை யாரோ சொல்லவைத்திருக்கிறார்கள் என்பது சாத்தியமில்லை. சௌனகரின் பிராசீனமான ரிக்விதான நூலுக்கு, மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களின் படி கூட, 9-ஆம் நூற்றாண்டு முதல் பல பாஷ்யங்கள் இன்று கிடைக்கிறது. ரிக்வேத சடங்குகளை விளக்கும் அந்த ரிக்விதானத்தில், தற்போதைய வைதீக சந்தியில் உள்ள அங்க நியாசத்தில் வரும் திருமாலின் பன்னிரு பெயர்களும் வரிசை மாறாமல் சேர்த்துப் படிக்கப்படுகிறது.

    இன்னொரு விஷயம் — பதினெட்டாம் நூற்றாண்டில் காஞ்சிப்புராணம் என்று ஒரு சமஸ்கிருத நூல் இருந்திருந்தால் அது கண்டிப்பாக இன்று கிடைத்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அதிலிருந்து ஓரிரு மேற்கோள் கிடைத்திருக்க வேண்டும். தெளிவுபடுத்துக.

  55. திருபாலாஜிஅவர்கள்/ உங்களுடைய் ஜூலை 2ஆம் தேதியிட்டமறுமொழியில் சுவாமீராகவேந்திரரின் புருஷசூக்தவிய்க்யானம் என்ற லின்க் காணப்பட்டது. வியக்க்யானம் என்பது நூல் முழுவதற்கும் தரப்படும் விளக்கம்தான் வியாக்யானம் எனப்படும். அதில் புருஷசூக்தத்தின்மூலமும் இராகவேந்திரர் ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதத்தை பற்றிய விவரணமே காணப்பட்டது. பொருள் அறியாதவனுக்குப் பொருளை விளக்கி உணர்த்துவதற்குத்தான் வியாக்கியானம் எழுதப்படும். இந்தலிங்க் இராவேந்திரரின் அற்புதங்கள் என்று தலைப்பிட்டிருந்தீர்களாயின் பொருத்தமாயிருந்திருக்கும். வியாக்கியானம் என்ற தலைப்பு என்னைத் தவறான இடத்தில் தேடவைத்துவிட்டது. திருக்கோவிலில் உள்ள மூர்த்தத்தைத் திருவடி தொடங்கி உச்சி வரை தரிசிப்பதும்,பாதாதி கேசாந்தவருணனையும் சர்ச்சைக்குரிய அடிகளின் பொருள் ஆகா. அந்த லிங்க் புருஷசூக்தத்தின் மூலமே அன்றிவியாக்கியானம் அல்ல. தவறான இடத்தில் பொருளைத் தேடிக் குழம்பியது தவறுதான். பாஷ்யம்,வியாக்கியானம்,காண்டிகை , குறிப்புரை இவையெல்லாம் உரைவகைகள். முதலிரண்டும் மிக விரிவாக அமையும்.

  56. // “சைவ-வைணவப் பிணக்குகள் இல்லாத முந்தைய காலத்தில்” என்று எந்தக் காலத்தைச் சொல்கிறீர்கள்? “சைவ-வைணவ பிணக்குகள் இல்லாத இந்து மதம்” என்பது என்ன? அது எத்தகையது?//

    அன்புள்ள கந்தர்வன்,

    ‘ஆதியில் வார்த்தை இருந்தது’ என்று பைபிள் சொல்வது போல நீங்கள் ‘ஆதியில் சைவ வைஷ்ணவ சண்டை இருந்தது’ என்று சொல்லும் கட்சி போல :))

    நான் சொல்வதெல்லாம், உங்கள் theological frameworkல் இருந்து வெளிவந்து, சிறிது வரலாற்று/தத்துவக் கண்ணோட்டத்தையும் இணைத்து இது சமயக் கொள்கைகளப் பயிலுங்கள், விவாதியுங்கள். இதற்கு உங்களைப் போன்ற ஒரு சமயவாதி தயாராக இல்லாத பட்சத்தில், உங்களிடம் விவாதம் செய்வதால் எனக்கோ, உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ எந்த பயனும் இல்லை.

    இன்னொன்று. இந்து மதத்திற்கான வெளி தமிழகம் மட்டுமல்ல, பாரதம் முழுமையும், அதற்கு வெளியிலும்கூடத் தான். எனவே இந்தப் பரந்த வெளியில் ஏற்பட்ட பற்பல சமய, சித்தாந்த போக்குகளையும் கணக்கில் கொண்டே ஒரு அறிவுத் தேடல் கொண்ட மாணவன் இந்து சமயக் கோட்பாடுகளை பொதுத் தளத்தில் விவாதிக்க முடியும். அதற்கு ஒரு குறிப்பிட்ட சம்பிரயதாயத்தின் சட்டகத்திற்கு உள்ளே நின்று, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் சமயப் பூசல் வாதங்களையே திரும்பத் திரும்ப அரைப்பது உதவாது.

    சில உதாரணங்கள். குப்தர் கால கலை, இலக்கிய, சமய வளர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த காலகட்டத்திய சம்ஸ்கிருத இலக்கியங்களில் சைவ-வைணவ பிணக்குகள் எதுவும் காணப் படுவதில்லை. ரகுவம்சம் எழுதிய மகாகவி அடிப்படையில் சைவர், காளி உபாசகர். சிலப்பதிகாரத்தில் சைவ, வைணவ,சமண, பௌத்த பூசலின்றி எல்லா தெய்வங்களையும் ஒருவர் பாடியிருக்கிறார். பிணக்குகள் உருவான போதும்சரி, அதற்கு முன்னும் பின்னும் சரி, சமன்வயத்தைப் பேசக்கூடிய கவிகள், ஞானிகள், தத்துவ வாதிகள் இருந்தனர், இருக்கின்றனர் என்பதைத் தான் இது காட்டுகிறது.

    // வைஷ்ணவ சமயரீதியான உருவகம் என்பது யாது? வைஷ்ணவ சமயரீதிக்குள் அடங்காத உருவகம் யாது? //

    உங்களுக்கே தெரியும். ஸ்ரீசூக்தத்தின் ஸ்ரீ/ல‌ஷ்மி என்ற தெய்வப் பரிமாணத்தை விளக்க நாம் எந்த வைஷ்ணவ சித்தாந்தத்திற்கும் போக வேண்டியதில்லை (சாரங்க் குறிப்பிடும் “லக்‌ஷ்மி காயத்ரி” அந்த சூக்தத்தின் அங்கம் அல்ல, ஓதும்போது கூறப்படும் பிற்சேர்க்கை). அது ஒரு வேதப் பாடலாக தன்னளவில் முழுமையானது. மேலும், வைஷ்ணவ மரபில் மட்டுமலல், சாக்த மரபின் வழிபாடுகளிலும் அந்த சூக்தம் முக்கியமான ஒன்று.

    எனவே பிற்காலத்திய வைஷ்ணவ விளக்கங்கள் அந்த சூக்தத்தைப் பற்றீய *ஒரு பார்வையாக* கொள்லலாமே அன்றி அவை அதன் *அடிப்படை* அல்ல. அது அடிப்படை என்று நீங்கள் வாதிட்டால், விமர்சனத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் எடுக்கப் பட்டது என்றூ சொல்வது போலாகும்.

  57. பாலாஜி அவர்களே

    நீங்கள் சொல்வதை போலத்தான் நானும் அந்த வாக்யதிர்க்கு அர்த்தம் கொண்டேன் – சமய வெறி இல்லாத எவர்க்கும் அந்த அர்த்தமே கைப்படும் – சாதிக் கொடுங்கோலோருக்கும் பிராமண நிந்தையில் காசு பார்போருக்கும் தான் புருஷ சூக்த வாக்கியத்தை அசிங்கமாக பார்க்கத்தோன்றும்

    “அடியார் கிடந்தியங்கும் படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே” என்று வாழ்வோருக்கு புருஷ சூக்தம் என்ன சொல்கிறது என்று தேவையும் இல்லை அதற்க்கு நூறு பக்க வியாக்யானம் செய்யம் அவசியமும் இல்லை – பாதம் என்ன – தேசிகர் பாதுகை பற்றி ஒரு ஆயிரம் பாடல் எழுதி உள்ளார் – இவர்கள் வெறும் வியாக்யானம் மட்டும் செய்ய வில்லை வாழ்ந்து காட்டியவர்கள் – இதற்காக வ்யாக்யாம் செய்தவர்களை குறை சொல்ல வில்லை

    ராமன் பாதுகை வைத்துக்கொண்டு தானே பரதன் ராம ராஜ்ஜியமே செய்தான்

    புருஷ சூக்தத்தில் இந்த பூமி அவனது பாடம் என்கிறது, சூரியன் அவனது கண் என்கிறது – பூ தேவிக்கு தான் வைணவர்கள் பூஜை செய்கிறார்கள் சூரியனுக்கு அல்ல

    இதை முக்கியமாக வைத்துக்கொண்டு சிலரை அனாவசியமாக வெய்வது கண்டிப்பது, சிலரை ச்லாகிப்பதும் பெரிது படுத்தும் விஷயம் தான்

    ஆயிரம் வாக்கியங்களுக்கு பலர் மௌனம் சாதிக்கிறார்கள் – சிலரால் போற்றப்படும் ஸ்வாமிகள் வைணவர்களை இழி குலத்தவர் (தாழ்ந்த குலத்தவர்) என்றும் காமப்ப்ரியர்கள் என்றும் – அவரை பற்றி படித்துவிட்டு, அவரை பற்றி ச்லாகித்துவ்ட்டு அவர் சொன்னடயல்லாம் பார்த்துவிட்டு நாம் என்ன அவரை கண்டித்தோமா இல்லையே

    ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு value judgement செய்யாமல் நடப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதே சிறந்தது

  58. அன்புள்ள ஜடாயு அவர்களே,

    “அன்புள்ள” என்று தொடங்கி மறுமொழி எழுதினால் மட்டும் சரியான வார்த்தை ஆகிவிடாது. “சமயவாதி” என்று name-calling பண்ணுவதும், பைபிளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கிண்டலடிப்பதும் சரியன்று.

    நான் கேட்டது சில கேள்விகளை. அதற்கு, “கேள்வி 1-க்கு விடை இது”, “கேள்வி 2-க்கு விடை இது” என்று பதிலளிக்காமல் வ்யக்திநிந்தைக்குச் சென்றுவிட்டீர்கள். இதற்காக எனக்கு உங்கள்மேல் கோபம் என்று அர்த்தம் இல்லை 🙂 . நீங்கள் பதிலெழுதியிருக்கும் பாணியைக் கண்டு நடுநிலையாளர்கள் நகைக்கக்கூடும் 🙂 . அதற்குத் தான் சொல்கிறேன். Points are points. Either you address them, or you say “I do not want to address these questions for reasons I do not want to mention”.

    சைவ-வைணவ பிணக்கு, சைவ-வைணவ பிணக்கு என்று மீண்டும் மீண்டும் ஜபம் செய்கிறீர்கள். பிணக்கைப் பற்றி இங்கு யாரும் கூற வரவில்லை. நான் கேட்ட கேள்வி இவ்வளவே:

    பரிபாடல் முதலிய சங்க இலக்கியங்களில் எப்படி முழுக்க முழுக்க தற்காலத்து வைணவ மதக் கொள்கைகளே காணப்படுகின்றன, அதுவும் வேத மந்திரங்களை ஒட்டியே அமைந்து வருகின்றன? இதிலிருந்து வேதாந்தத்திற்கு தற்போதைய வைணவ மரபின் விளக்கங்கள் சங்க காலத்திலேயே தொடர்ந்து இருந்து வந்தந என்பது படவில்லையா?

    மேலும், நீங்கள் “சைவ-வைணவ பிணக்கு” குப்தர் காலத்திற்கும், சிலப்பதிகாரத்திற்கும், காளிதாசன் காலத்திற்கும் பிற்பட்டதே என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியானால், புருஷ-சூக்தம் முதலிய வேத சூக்தங்களுக்கு வைணவர்கள் கூறும் விளக்கமெல்லாம் புதிய கற்பனையாக இருக்கவேண்டும். ஆனால், ஸம்ஸ்கிருத நூல்களைப் புரட்டிப் பார்க்கையில் அப்படி இல்லை. Overwhelmingly காளிதாசனுக்கும் முற்பட்ட பல பிராசீன நூல்கள் (ரிக்விதானம், விஷ்ணு புராணம், முதலியவை) புருஷ சூக்தத்தைத் தெளிவாக விஷ்ணுபரமாகவே விளக்கியுள்ளனவே? அக்கால நூல்கள் எவற்றிலும் விஷ்ணு அல்லாத வேறு தெய்வத்திற்கு உபப்பிரம்மணமாக புருஷ சூக்தத்தை விளக்கவில்லையே?

    இதற்குப் பதில் இருந்தால் கூறுங்கள்.

  59. நன்றி திரு பாலாஜி. நான் குறிப்பிட்டுள்ள பகுதி கட்டுரை யின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது. சனற்குமாரப்படலத்தின் மூலபாடத்தையும் தருகின்றேன். 1. “வைகறை எழுந்து கங்கைநீ ராடி வானவர் முனிவர்தென் புலத்தார் செய்கடன் உவப்பத் தெண்புனல் இறைத்து நியாசமுந்தியானமும் ஆற்றிப் பொய்களை விரசை அங்கியின் விதியாற் பூத்தநீ றங்கையின் எடுத்து நைகரந் தீர்த்த அன்பொடு நியாச நடைபெறு தியான முன்னாக” 2.”அடைவுறு பஞ்சப் பிரமமந் திரத்தால் அங்கியென் றற்றொடக் கத்தான் முடிவில் சாபால மனுக்கள் ஏழாற்றான் மூவிரண்டு அதர்வமந் திரத்தால் வடிவுறும் இடக்கை வைத்துமுன் முக்கால் மந்திரித்து அறவினால் குழைத்துக் கடிகெழு சென்னி முதல்அடி கறும் பிரமம் ஓரைந்தையும் கழறி” 3. “நிறைய உத்தூளஞ் செய்துபின் திரியம் பக்ங்களால் நிகழ்த்து ம்ஞ்செழுத்தால் அறலின் ஆசமித்துப் பின்னரும் திரியா யுடந் திரி யம்பக மனுவான் முறையின் அஞ்செழுத்தால் புண்டரம் மூன்றும் முச்சுடர் முக்குணம் மும்மை மறைகள் மூவுலகு முந்நிறம் முத்தீ வடிவெனச் சிந்தையிற் கண்டு” 4. “ஐந்துமூ விடத்தும் அழகுற அணிந்தாங்கு அருக்கற்குச் சந்திநீர் உதவி இந்திர திசையை நோக்குபு மோனம் எய்திநல் லாதனத் தும்பர்ப் பந்தமில் சுகஞ்சேர் இருக்கையன் ஆகிய பஞ்சபூ தத்தை ஒன்றொன்றின் உந்துற ஒடுக்கி ஆவியைப் பிரம ரந்திரத்து ஒடுக்கிய பின்னர் ” 5. “பாதகக் குழிசிப் புலைஉடல் தொடக்கைப் பவனபீ சத்தினால் உணக்கிப் போதர வன்னி பீசத்தால் வேவப் பொடித்தது வாரிபீசத்தால் சீதமா நனைத்துத் தரணிபீ சத்தால் திரட்டிவேறு உறுப்பெலாம் பகுத்து மேதகச் சத்தி பீசத்தால் நிறைத்து மேயபின் விதியுளி உயிரை 6.”ஆசுதீர் உடம்பின் முன்புபோல் இருத்தி அங்கண் ஆதார பங்கயத்துத் .தேசுறும் வன்ன ரூபியாய் நிறைந்த தேவியை முறைவழா தமைத்துப் பேசிரு பத்தோ ராயிரத் தறுநூ றுயிர்ப் பினைப் பிரித்தச பையினான் மாசறும் ஆனைமுகப் பிரான் முதலோர் மகிழ்வுறும் படியவர்க் குதவி ” 7. “ஆவியாம் இலின்கத் தந்தரியாக அருச்சனை விதியுளி யாற்றி மேவிய பின்னர்ப் புறத்தினும் சென்னி முகமுதல் விளம்புறுப் பெல்லாந் தேவியை ஐம்பான் எழுத்துரு வான செல்வியை நலம்வர அமைத்துப் பாவுறும் பிராணா யாமங்கள் முறையிற் செய்தபின் பரிதிகாண் அளவும்” 8.” அருமறை காயத் திரிப்பெரு மனுவை ஆயிரத் தெட்டுருக் கணித்துக் கருதிய யோக சித்தியின் பொருட்டுக் கணேசனை முன்புபூ சித்துப் பரிதிமண் டிலத்தும் தண்டிலந் தனினும் பகர்தரும் இலிங்க மூர்த்தியினும் மருவும் அங்குட்ட ரூபியாம் சிவனை அருச்சனை புரிந்து” பூர்வாங்கமாக இந்த அனுஷ்டானங்களைச் செய்தபின் சனற்குமாரர் அந்தரியாக பூசையாகிய யோகினைப் புரிகின்றார். சிவஞான முனிவர் குறித்துத் தாங்கள் கூறிய செய்திகள் சரியே. புராணத்தின் பாயிரத்தில் இந்நூல் மொழிபெயர்ப்பே எனாஅசிரியரே கூறியுள்ளார். இதன் வடமொழி மூலமிப்பொழுது கிடைக்குமாஎனத் தெரியவில்லை. உங்களுடைய உதவீக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். மந்திரங்களை மட்டும் அடையாளம் கண்டு சொன்னாற் போதும். கிரியைகளை நானே அறிந்து கொள்ளுவேன்.

  60. ஜடாயு அவர்களே

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

    //
    (சாரங்க் குறிப்பிடும் “லக்‌ஷ்மி காயத்ரி” அந்த சூக்தத்தின் அங்கம் அல்ல, ஓதும்போது கூறப்படும் பிற்சேர்க்கை
    //

    இதை நான் ஸ்ரீ சூக்தத்தின் அங்கமாக சொல்லவில்லை என்று தெளிவுபடுத்துகிறேன். மொத்தம் பதினைந்து சூக்தம் கொண்டது தான் ஸ்ரீ் சூக்த்தம்

    ஸ்ரீ சூக்தத்தில் சொல்லப்படும் லக்ஷ்மி யார் என்று பார்க்க லக்ஷ்மி காயத்ரி என்று ஒன்றில் தான் பதில் கிடைக்கும் – எல்லா கடவுளுக்கும் காயத்ரி இருக்கிறது – கணபதி,ஸ்கந்தன் யார் என்று தெரிந்துகொள்ள காயத்ரி உதவுகிறது

    வேறு எந்த தேவிக்கும் லக்ஷ்மி என்று வாக்கியமிட்டு காயத்ரி வரவில்லை – வேறு யாருக்கு மூதேவி அக்காள் இல்லை அதானாலேயே இப்படி முடிவு செய்ய வேண்டி உள்ளது என்பது தான் என் கருத்து
    – இதை சமயத்தில் ஆழ்ந்து நின்று நான் சொல்லவில்லை
    – நீங்கள் வரலாற்றை பார்ப்பது போல நான் ஒரு logician ஆக அதை பாரிகிறேன் – உங்களுக்கு வரலாற்று அடிப்படையில் பார்ப்பது போல எனக்கு தர்க்க அடிப்படையில் பார்ப்பது பிடித்திருக்கிறது

    மற்றபடி லக்ஷ்மியை விஷ்ணு பத்னி இல்லை என்று சொலவதற்கு எந்த தத்துவமும் வரலாறும் இடம் தராது என்பதே எனது கருத்து

    ஸ்ரீ சூக்தம் வைனவர்களுக்குதான் சொந்தம் என்று நான் அறுதி இடவில்லை – ஸ்ரீ ருத்ரம் எப்படி சைவர்களுக்கு மட்டும் தான் சொந்தம் இல்லையோ, எப்படி ஸ்ரீ ருத்ரத்தை வைணவர்கள் ஓதுகிறார்களோ அப்படியே தான் ஸ்ரீ சூக்தமும் – அதற்காக ஸ்ரீ ருத்ரம் கிருஷ்ணனை குறிக்கலாமே என்று நான் சொல்ல மாட்டேன் – அது கட்டாயமாக ருத்ரனைத்தான் குறிக்கும்

    வெறும் வரலாற்று பார்வையில் பார்த்தல் ஸ்ரீ சூக்தத்தில் வரும் வரிகளுக்கு ஒரு தவரான முடிவே எடுக்க வேண்டி வரும்

    மஹா யோகிகளன ரிஷிகள் ஏன் அற்பமாக காசு கேட்கிறார்கள், ஏன் ஆடு மாடு கேட்கிறார்கள், ஏன் நீர்வளம் நில வளம் கேட்கிறார்கள், குதிரைகள் கேட்கிறார்கள், வேலைகாரகளை கேட்கிறார்கள்? இவர்கள் எல்லோரும் ஒரு வேலை கொஞ்சம் சோறு உண்டு வாழ்ந்தார்கள் என்று அறிகிறோம்! வேலையே சேய்யாத இவர்கள் வேலைக்கு ஆள் அமர்தமாட்டர்கள் என்று அறிகிறோம்?

    வரலாற்று பார்வையில் இதை பார்ப்பவர் – ஓஹோ அவர்கள் பணத்தில் இவ்வவளவு ஆசை வைத்திருந்தார்கள என்று தான் நினைப்பார்கள்

    ஸ்ரீ சூக்ததை வெறும் பணம் காசு வேண்டி பாடினார்கள் என்று முடிவு கட்ட லாஜிக் இடிக்கிறது

    வேத மந்திரங்களுக்கு பொருள் பல உபநிஷத்களில் உள்ளது – அதையும் சேர்த்து பார்த்தல் சரியான பொருள் தரும் – வரலாற்று பார்வையும் தேவை, அது மட்டுமே சரி அல்ல. தர்க்கம் வேதாந்தம் அதன் விரிவுறைகள், வரலாற்றுப் பார்வை, இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றெ மிகச்சறியானதான பொருளை தரும் என நம்புகிரேன்

  61. //
    அது ஒரு வேதப் பாடலாக தன்னளவில் முழுமையானது. மேலும், வைஷ்ணவ மரபில் மட்டுமலல், சாக்த மரபின் வழிபாடுகளிலும் அந்த சூக்தம் முக்கியமான ஒன்று.

    எனவே பிற்காலத்திய வைஷ்ணவ விளக்கங்கள் அந்த சூக்தத்தைப் பற்றீய *ஒரு பார்வையாக* கொள்லலாமே அன்றி அவை அதன் *அடிப்படை* அல்ல. அது அடிப்படை
    //

    saakthசாக்த வழிபாட்டில் ஸ்ரீ் சூக்தம் உள்ளதில் எந்த தவறும் இல்லை – லக்ஷ்மி அர்சசனையில் மஹா காலியாய நமஹ என்று வருவதால் இருவரும் ஒன்று என்று சொல்லமுடியாது – ஸ்ரீ் சூக்ததை வைத்துக்கொண்டு வைஷ்னவத்தில் எந்த அடிப்படை முடிவுகளும் எடுக்கப்படவில்லை – அதே சமயத்தில் அது வெரும் பார்வையுமல்ல – ஸ்ரீ் சூக்தம் தன் அலவில் முழுமையானது என்பதால் அது விஷ்னு பத்நியை கூறிக்கவில்லை என்று முடிவெடுப்பது சரியல்ல. சூக்தம் என்பதே பொதுவாக ஒருவரை குறித்து பாடப் பெற்றது தான் -எதை வேண்டுமாநாலும் குறிக்கும் வரிகல் அல்ல –ஸ்ரீ் சூக்தம் விஷ்நு பத்த்நியை குறிக்காமல் போனாலும் எந்த தவறும் இல்லை

  62. முனைவர் ஐயா அவர்கள் கூறுவதைப்போல ஒற்றுமைக்கு உலை வைக்கும் விஷயங்களைக் கவனமாகக் கையாளவேண்டும் என்று நான் கூறி வந்திருக்கிறேன்.

    அறிவு என்பது ஞானமாகப் பரிமளிக்கவேண்டும். அறிவுடன் விவேகம் சேரும்போதுதான் அது ஞானம் என்ற நிலையை எட்டும். விவேகம் என்பது காரண காரியங்களை அறிந்து, இடம் பொருள் ஏவல் அறிந்து செயலாற்றுதலும் பேசுதலும் எழுதுதலுமே ஆகும்.

    முனைவர் அவர்கள் சைவ சித்தாந்தத்தைக் குறித்த கட்டுரைகளைப்படைக்கும்போது அதன் அடிப்படையில்தான் எழுதமுடியுமே அல்லாது வேறொரு சித்தாந்தத்தின் அடிப்படையில் எழுத அல்லது விளக்க முடியாது. இந்தப் புரிதல் அவசியமான அடிப்படை ஆகும். இதுபோக நமது மதத்தில் இருக்கும் சற்றே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சித்தாந்தங்களை ஒன்றோடொன்று உரசிப்பார்க்காமல் அவை அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பக்குவம் விவேகத்தின் முதல் படிக்கட்டு.

    முனைவர் அவர்கள் அவைஅடக்கத்துடன் தவறிருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன் என்று சொன்னால் அதைக் கொச்சைப் படுத்தும் விதமாக எழுதுதல் முறை ஆகாது. வயதிலும் அனுபவத்திலும் அறிவார்ந்த ஆராய்ச்ச்யிலும் முதியவர்களுக்கே உரிய அவையடக்கத்தை நாமும் பின்பர்ருதலே அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் ஆகும். ‘எனக்கு நிறைய அறிவும ஞானமும் இருக்கிறது, உங்களுக்கும் அதுபோல ஞானம் கிட்ட இறைவனை வேண்டுகிறேன்’ என்ற ரீதியில் சொல்ல, எழுதக் கூடியவர்கள் மலிந்திருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு அறிஞர் அவையடக்கத்துடன் தவறிருந்தால் சுட்டுங்கள் என்று சொல்கிறார் என்றால், அதிலிருந்து நாம் நல்லதைக் கற்க வேண்டும்.

    ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

    ஒரு பெரிய பண்டிதர், வேதம், வியாகரணம், இலக்கணம், இலக்கியம், புராணம், தர்க்கம், உபநிஷத்துக்கள் எல்லாம் கற்றறிந்தவர். ஒரு நாள் கங்கையின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு ஒரு படகில் சென்றார். படகோட்டி ஏழை, அதிகப் படிப்பில்லாதவர். அவரிடம் பண்டிதர், “உனக்கு வேதம் தெரியுமா வியாகரணம் தெரியுமா, இலக்கணம் தெரியுமா” என்று ஒவ்வொன்றாகக் கேட்க அவரும் “இல்லை” என்றே பதில் கூறினார். பண்டிதர் எள்ளி நகையாடி “உன் வாழ்வில் பெரும் பகுதியை இப்படி வீணடித்து விட்டாயே” என்றார். சிறிது நேரம் சென்றது. ஆற்றில் பெருவெள்ளம் வந்தது, படகு சுழலில் சிக்கியது. மூழ்கும் நிலையில் படகோட்டி பண்டிதரைக் கேட்டார் “உஙகளுக்கு நீந்தத் தெரியுமா?” பண்டிதர் தெரியாது என்றார். படகோட்டி, உங்க‌ள் முழு வாழ்க்கையையும் இப்படி வீணடித்து விட்டீர்களே? இப்போது படகு மூழ்கப போகிறது. இந்தச் சுழலில் என்னால் நான் மட்டுமே நீந்திக் கரைஏற முடியும்” என்று கூறி ஆற்றில் குதித்துத் தப்பினார்.

    இதைப்போலவே நாமும் வெறும் ஏட்டுச் சுரைக்காய் வைத்துக் கறி சமைக்க முடியும் என்று எண்ணக் கூடாது.

    ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
    மழை என்று தாளில் எழுதிப் பிழிந்தால் நீர் கிட்டாது.

    ஒற்றுமைக்கு ஊறு விளைக்கும் எந்த வியாக்கியானமும் பிழை பட்டதே. சொற்குற்றம், பொருள் குற்றம் போல இடக் குற்றம், ஏவல் குற்றம் முதலியவும் பார்க்கப் படவேண்டும்.

    இங்கே கூறப்பட்ட ஒரு (சந்திக்கான) விளக்கம் நுனி மரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டும் விதமாக அமைந்துள்ளது. இதனை உடைத்துப் பொருள் கூறினால், இதன் ஆழம் இதுவரை புரியாதவருக்கும் புரிந்துவிடும் என்பதால் சொல்லவில்லை. இத் தகைய விளக்கங்கள் நமது மதத்துக்கே உலை வைக்கும் என்பதை மட்டும் சொல்கிறேன். நேரில் சந்திக்கும் வாய்ப்பு வந்தால் மட்டுமே சொல்லமுடியும். இப்படி நான் முன்னரும் சொல்லி வந்திருக்கிறேன் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

    ஒற்றுமைக்கு ஓறு விளைக்கும் எந்த வியாக்கியானமும் பிழை பட்டதே. சொற்குற்றம், பொருள் குற்றம் போல இடக் குற்றாம், ஏவல் குற்றம் முதலியவும் பார்க்கப் படவேண்டும்.

  63. திரு கந்தர்வன் அவர்கள் ஜடாயு அவர்களிடம் கேட்கும் சைவ‍‍வைணவப் பிணக்குக்கான சரித்திர ரீதியான பதில் இருக்கிறது, ஆனால் ஒற்றுமை கருதிச் சொல்ல விரும்பவில்லை. நேரில் வந்தால் ஒரே வரியில் அல்லது ஒரே கேள்வியில் இருக்கிறது அந்தப் பதில்.

  64. ஹிந்து மதத்தின் வேரில் வென்னீர் பாய்ச்சும் எண்ணத்தில் மாற்று மதத்தாரும், நாத்திக வாதத்தாரும் சொல்லிவரும் கோயபல்சிய பொய்களில் ஒன்று ‍ தமிழ்ச்சைவம் வேதம் சார்ந்ததல்ல என்பதும் சிவ வழிபாடு திராவிடம் சார்ந்தது, விஷ்ணு வழிபாடு ஆரியம் சார்ந்தது என்பதும் ஆகும்.

    இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முனைவர் அவர்கள் தமது கட்டுரைகளைப் படைத்து வருகிறார்கள். ஆனால் இம்முயற்ச்சியில் ஒவ்வொரு முறையும் நம்மவர்களே “குறுக்கு சால் ஓட்டுவது மனதுக்கு வருத்தம் தருகிறது.

  65. முனைவர் அவர்களே,

    நீங்கள் இப்பொழுது காட்டிய மேற்கொளிளிருந்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது.

    18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான யோகியாரின் புராணத்தின்படி சந்தியில் ஆசமனம் செய்யும்பொழுது ஒரு சிலர் சிவனாமங்களையும் மந்திரங்களையும் சொல்லி வந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், காஞ்சிபுராணத்தில் அவ்வாறு இருப்பதை வைத்துக்கொண்டு, “வைதிக சந்தியில் 18-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன” என்று முடிவுகட்ட வாய்ப்பில்லை. ஏனெனில் 13-ஆம் நூற்றாண்டில் மத்வர் சந்த்யாவந்தனத்திற்கு ஒரு பாஷ்யம் செய்துள்ளார். அதில் உள்ள ஆச்சமான விதியில் விஷ்ணு நாமங்கள் உள்ளன. இது “சந்த்யா பாஷ்ய சமுச்சயம்” என்னும் நூலில் உள்ளது.

    இது தவிர, நான் படித்த சந்த்யா பாஷ்ய நூலில் “ஒரு சிலர் சிவ நாமங்களைச் சொல்லி ஆசமனம் செய்கின்றனர் என்று தெரிகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

    ஸ்மார்த்த சம்பிரதாயத்தில் வளர்ந்த எனக்கு ஸ்மார்த்த சாச்திரியரால் கற்றுக்கொடுக்கப்பட்ட சந்தியில் உள்ள ஆசமன விதியே தற்போது ச்மார்த்தர்களால் பெரும்பாலும் அனுஷ்டிக்கப்படுகிறது. எங்கள் வீட்டருகில் உள்ள கோயிலில் வருடா வருடம் நடக்கும் யசுர் உபாகர்மாவில் கிட்டத்தட்ட 150-200 ஸ்மார்த்தர்கள் கலந்துக் கொள்கின்றனர். அதில் அனைவரும் சேர்ந்து “அச்சுதாய நமஹா, ஆனந்தாய நமஹா, கோவிந்தாய நமஹா” என்று ஆச்சமானம் செய்கின்றனர். அத்துடன் அங்கநியாசத்தில் திருமாலின் பன்னிரு நாமங்களும் அப்படியே உள்ளன. ஸ்மார்த்தர்களின் அனைத்து சந்த்யா விளக்கப் புஸ்தகங்களிலும் இந்த விதியே உள்ளது.

    மேலும், நீங்கள் காட்டிய காஞ்சிப்புரானத்தின் சனத்குமாரப் படலத்தில், “சூர்யமண்டலத்தின் நடுவில் இருக்கும் சிவபெருமான்” என்று வருகிறது. ஆனால், ஸ்மார்த்த விதியில் சூர்யமண்டலத்தின் நடுவில் இருப்பவராக ஸ்மார்த்தர்கள் திருமாலையே வணங்குகின்றனர். ஏனெனில் ஸ்மார்த்தர்கள் அனைவரும் இந்த சுலோகத்தை காயத்ரி ஜெபத்திற்குப் பிறகு உச்சரிக்கின்றனர்: “த்யேய சதா சவித்ரு மண்டல மத்யவர்த்தி நாராயண சரசிஜாச சந்நிவிஷ்டாஹ் கேயூரவான் மகர-குண்டலவான் கிரீடீஹாரி ஹிரண்மய-வபுர் திரத சங்க-சக்ராஹ்
    சங்க-சக்ர-கதா பாணே த்வாரகா நிலயாச்சுதா கோவிந்தம் புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்”.

    இதையே தான் வைணவ-மாதவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.

    நீங்கள் சொல்வது படி பார்த்தால் 150 வருடங்களுக்குள் ஸ்மார்த்தர்கள் வைணவ சந்த்யா விதியைப் புதிதாகக் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர் என்று பொருள்படும்.வரலாற்று ரீதியில் பார்த்தால் இது சாத்தியமே இல்லை.

  66. // மேலும், நீங்கள் காட்டிய காஞ்சிப்புரானத்தின் சனத்குமாரப் படலத்தில், “சூர்யமண்டலத்தின் நடுவில் இருக்கும் சிவபெருமான்” என்று வருகிறது. ஆனால், ஸ்மார்த்த விதியில் சூர்யமண்டலத்தின் நடுவில் இருப்பவராக ஸ்மார்த்தர்கள் திருமாலையே வணங்குகின்றனர். //

    Wrong.

    In the Nyasa for Sri Rudram, it says “yo saavadityaH paramapurshaH tayeshu rudro devata”. In the famous Rudra Ekadashi ceremony of the smartas, in which 11 priests chant Rudram 11 times, the central deity invoked is “Adityatmaka Rudra”.

    Just like the “dhyeyaH sada” sholka you mentioned, there is another equally famous shloka which is chanted in Surya Namaskara worship of the smartas.

    saura mandala madhyastham saambam samsaara bheshajam
    neelagreevam viroopaaksham namaami shivam avyayam

    this directly idenitifies Lord shiva at teh centre of Surya mandala.

    The fact is that In all Smarta traditions, both Shiva and Vishnu are worshipped and invoked harmoniously at various ceremonies. If you look at all the ceremonies and traditions wholistically, there is absolutely no “bheda” between these divinites. Dont just pick one thing like achamanan and try to portray it in a skewed manner. Its not clear as to why you have a vested interest in mis-representing the smartha tradition.

  67. Bala,

    I am not implying anything about Smartha sampradAya here, and your point is not relevant to the discussion. The discussion is simply about this question: “Is the Achamana vidhi of the current Vaidika Smarthas a version introduced after the 18th Century?”. All that I said is *in the sandhyavandana procedure* for Smarthas, Aditya-maNDala madhyavarti is clearly shown as Lord Vishnu, whose form is clearly mentioned. In the other version of Sandhya that Munaivar si talking about, that is not the case. That’s all.

    You can just take it as an academic discussion without attributing any intentions on anyone’s part. Thank you.

  68. ///இங்கே கூறப்பட்ட ஒரு (சந்திக்கான) விளக்கம் நுனி மரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டும் விதமாக அமைந்துள்ளது.///
    நான் இவ்வாறு கூறியது கட்டுரை ஆசிரியர் முனைவர் அவர்களின் விளக்கம் குறித்து அல்ல. திரு கந்தர்வன் அவர்கள் அளித்த ஒரு விளக்கம் குறித்தே. தெளிவ்வ்கக் குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும்.

  69. ///இங்கே கூறப்பட்ட ஒரு (சந்திக்கான) விளக்கம் நுனி மரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டும் விதமாக அமைந்துள்ளது.///

    திரு உமாசங்கர் அய்யா,

    எதைக் கூறுகிறீர்கள் என்று தெளிவு படுத்தினால், இனிவரும் மறுமொழிகளில் சர்ச்சையைத் தவிர்க்க எப்படி எழுதக்கூடாது என்பது தெளிவாகும். அந்த மறுமொழியையும் வாக்கியத்தையும் சுட்டிக்காட்டுங்கள். சிவபெருமானைச் “சிறுதெய்வம்” என்று ஒருவர் இகழ்ந்ததை நான் கண்டிரித்திருந்தேன். நான் சாதிக்க முயல்வது நடுநிலையே.

  70. என்னுடைய கடவுள் தான் ஜீவனுள்ள மெய்யான தேவன் என்று சொல்வதற்கும் இதற்கும் என்ன வித்யாசம்?

    என்னவோ நாமே நேரில் போய் பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலையும், கைலாயத்தில் இருக்கும் சிவ பெருமானையும் பார்த்து விட்டு வந்தது போலவும் ஒருவர் தான் நடுவில் இருக்கிறார், இன்னொருவர் சுத்தி வருகிறார், அல்லது கீழே இருக்கிறார் என்பது போலவும் இகழ்ச்சிப் பிரச்சாராம் நடத்துவது தேவை இல்லாதது.

    நாராயணன் லவுகீக தத்துவத்தை சிறப்பாக உணர்த்துகிறார், சிவன் யாக்கை நிலையாமை தத்துவத்தை சிறப்பாக உணர்த்துகிறார். இங்கே அடித்துக் கொள்ளுவதை விட இருவரின் தத்துவங்களிலும் கவனம் செலுத்தி இருவரையும் மரியாதை செய்வது ஆன்மீக முன்நீர்ரத்துக்கு பலன் அழைக்கும். ஏகம் சத்விப்ரா பஹுதா வதந்தி என்று ரிக் வேதத்தில் சொன்னது யாருக்காகா? முதலில் எத்தனை பேர் சந்தி செய்கிறார்கள் என்று பாருங்கள்!

  71. மாலிக்காபூர் தென்னிதியாவிர்க்கு வந்த போது சில கோவில்கள் சேதாரம் அடைந்ததாகவும் , அப்போது இரண்டு பிரிவினரவும் வருத்தப் பட்டுக் கொண்டே இருந்த போதிலும் ஒரு பிரிவினரைப் பார்த்து உன் சாமி சிலை இரண்டாய் உடைந்ததே என்றும், இன்னொரு பிரிவினர் உன் சாமி சிலை சுக்கு நூறாகி விட்டதே என்று பரஸ்பரம் கேலி பேசிக் கொண்டாதாகவும் சிலர் கூறக் கேட்டு இருக்கிறேன்.

    இந்து மதம் அழிந்தாலும் பரவாயில்லை, எனக்கு என் மத வெறிதான் முக்கியம் என்று செயல் படும் போக்கே இது.

    எத்தை கோரிகள் வந்தாலும், எத்தனை கஜினிகள் வந்தாலும் நாம் திருந்த மாட்டோம். அடிமையாக வாழ்ந்தே பழக்கப் பட்டு விட்டோம் நாம்.

    உலகிலே இந்து தெய்வங்களை குறி வைத்து இழிவு படுத்துவது யார் என்று பார்த்தால் அதில் முதல் இடம் வகிப்பது மத நம்பிக்கையுள்ள ஆத்திக இந்துக்கள் தான் என்னும் நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள் போல் இருக்கிறது.

    மத வெறி உடையவன், சகிப்புத் தன்மை இல்லாதவன், தன கடவுள் மட்டுமே மெய்யான கடவுள், எல்லாருக்கும் மேலான கடவுள் என்று எந்த எந்தஆதாரமும் இல்லாமல் சாதிக்க விரும்புபவன், இவர்கள் இந்து மத்ததை உளிருந்தே கெடுப்பவர்கள், என்பதி சொல்லியே ஆக வேண்டியுள்ளது.

  72. திரு கந்தர்வன் அவர்களே

    நீங்கள் எழுதிய சந்திக்கான் எல்லா விளக்கங்களையும் படித்துப் பார்த்தல் உங்களுக்கே அது தெரியவரும். எது என்று நான் குறிப்பிடுதல் மாற்று மதத்தினருக்கும நாத்திகவாதிகளுக்கும் இனிப்பு தந்தது போல் ஆகும். செய்யமாட்டேன். வற்புறுத்தாதீர்கள்.

  73. இங்கு சந்தியின் விளக்கத்தை பற்றி யாரும் விவாதிக்கவில்லை – நமக்கு மட்டும் தான் சந்தியின் விளக்கம் தெரியும் என்று நினைத்துக்கொள்வதும் தவறு

    அச்சுதா (indestructibleinde) அனந்த (infinite) கோவிந்தா(manifestation of knowledge) என்று சொல்வது வெறும் பஜனை மந்திரமல்ல – இந்த மூண்ரும் மூண்று நிலயை குறிப்பவை – சத் சித் அனந்தத்தை குறிப்பவை – இவை முறயே ஒரு மனிதன் அடயும்Ÿ அல்லது கடக்கும் வாக் மானோ காயம் என்னும் (த்ரிதன்டமான்) மூன்று நிலையை குறிக்கும் (physical mental and super spiritual consciousness)

    இது வெறும் ஆசமநத்திற்கான விளக்கம் தான் முழு சந்தியில் ஒரு க்யாந ரீதியிலான விஷ்யத்தை கர்ம நிஷ்டையாக eஎப்படி நடைமுறை செய்வது என்பது பொதிந்துள்ளது

    சந்தியை பற்றியும் புருஷ சூக்ததை பற்றியும் விவாதித்தால் – ஏன் உடனே சைவ-வைஷ்ணவ சண்டை என்று சிலருக்கு தோன்றுகிறது – ஏதோ சிலர் மட்டும் தான் தவறாக எழுதுவதாக திரு உமாஷங்கர் நினைக்கிறார்.

    யாரும் வுயதுக்கு மரியாதை தர மறுக்கவில்லை – சைவ நூல்களை மட்டுமே வைத்துக்கொண்டு வைதீக சாந்தி திடு திடுப்புன்னு மாறி விட்டது என்று சொல்வதை தவறு என்று சொல்லக்கூடாதா – இதை வரலாற்று ஆதாரத்துடன் தான் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது

    ருத்ர காயத்ரியில் வரும் புருஷ நாமத்தை வைத்துக் கொண்டு ருத்ரன் தான் பரம புருஷன் என்று முடிவு கட்ட இயலாது என்பதற்கு கருட காயத்ரியை சுட்டிக் காட்டி அதாரம் தரப்பட்டுள்ளது – விவாதங்கள் ஆதாரத்துடன் தான் நடக்கின்றன. மேலும் ருத்ரன் வேறு சிவ வேறு என்று மனைவர் அவர்களே கூறின படியால் – இந்த காயத்ரியை அதற்க்கு ஆதாரம் எடுக்க இயலாது – அதே போல நாராயண என்பது சிவனையே குறிக்கும் என்று சொல்லிவிட்டு – விஷ்ணு காயத்ரியில் புருஷ சப்தம் இல்லை என்று முனைவர் சொன்னார் (இப்படி solvatharkellaam என்ன அர்த்தம் என்பதற்குள் நான் புக வில்லை) – நாராயண நாம சிவனை குறிக்கும் என்றால் விஷ்ணு காயத்ரியில் நாராயண நாம வருகிறதே என்று மறு கேள்வி எழுகிறது?

    முனைவர் அவர்கள் புருஷ் சூக்தமும், ஸ்ரீ சூக்தமும் சிவ பெருமான் ஆலயங்களிலும் ஓதப்படுகிறது என்று ஆதாரம் காட்டினார் – அதை பற்றி கொஞ்சம் விவாதம் நடந்தது – ஜடாயு அவர்களும் historical perspective தந்து விவாதித்தார் – கந்தர்வன் அவர்கள் நாடு நிலையாளர்கள் செய்த வ்யாக்னங்களை கொண்டு விவாதம் செய்தார் – எனக்கு தெரிந்த ஒரு பாடலின் மெல்லாம் திரிஷ்டாந்தம் தந்தேன்.

    இப்படி இருக்கையில் ஒரு விஷயத்தையும் முன் வைக்காமல் கந்தர்வனை மட்டும் வெய்யும் உமாசங்கர் அவர்கள் சொல்ல வருவது நினைப்பது தான் என்ன – கூடவே நான் சொல்வேன் ஆனால் சொல்லப்போவதில்லை என்றால் எனக்கு ஒன்றும் புரியவில்லை -சொல்லப்போவதில் விஷயம் இறுந்தால் சொல்வதற்க்கு தயக்கம் என்ன சொல்லுஙல் நட்பு முறயில் விவாதிப்போம். ஏட்டூச் சூரக்காய் கறிக்கு உதவாது – முதலில் நான் சூரக்காய் சாப்பிடுவதில்லை – மேலும் இதில் யாரை எல்லாம் உல்லடக்குகிறீர்கள். nநீங்கல் சொன்ன கதை அனைவரும் அறிந்தததே – சும்மா இங்கே டமாரம் அடித்து விட்டு யாரும் தனியே டிஸ்கோ டீவீ சினிமா என்று அலைந்து கொண்டு இறுக்கவில்லை – அனைவரூம் ஒரு நாளின் பெறும் பகுதியையை விஷ்யத்திற்காக ஒதுக்கி நடந்தும் காட்டுபவரே. மறறவரை கீழாக என்னும் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்

    சைவத்தை பற்றி வரும் கட்டுரைகளில் சிவத்தை பற்றி பேசுவது தான் முறை – அதற்காக ஒரு முரன்பான விஷயத்தை சொன்னால் அதை சுட்டிக் காட்டுவது முறை தான் – ராகவேந்திரரை பற்றி குறைவாக சொன்னால் அதை சுட்டிக்காட்டுவது முறை தான்

    சிவ பெருமானுக்கு பெறுமை சேற்க்க வேன்டி நமது பாரம்பரியம் தழைக்க்க பரோபகாரம் செய்த வ்யாசரை குறை சொல்லாமல் இருக்கக் கூடாதா … இது தான் ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்கும் செயல் – ஒற்றுமயை பிளக்கும் எந்த செய்தியும் ஊரு விளைவிக்கும் அதாலால் அதில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவதே மேல் – அடுத்த முறை அந்த தவறு நிகாழாது பாருங்கள்

  74. திருகந்தர்வன் அவர்களுக்கு, தற்சமயம் வைதிக சந்தியில் சிவஞானமுனிவர் பதிவு செய்துள்ள சந்தி முறையும் நடைமுறையில் உள்ள சந்தியும் என இருவகை உள்ளன என்ற அளவில் திருப்தி கொள்ளுவோம். காஞ்சிப்புராணம் கூறும் வேதமந்திரங்கள் உறுதியாக “சந்தியா பாஷா சமுச்ச்ய”த்திற்கு முந்தியது.அது அவைதிகமாகஇருக்க முடியாது.
    சிவ பூசையில் சூரிய வழிபாடுஒரு அங்கம் ஆகும். அப்பொழுது சொல்லப் படுகின்ற காயத்ரி மந்திரம் “தத்ச்விதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீதியோ யோந: பிரசோத யாத்” என்பது. இம்மந்திரத்த்ற்குப் பொருளாகக் கூறப்படுவது, ‘எது எங்கள் ஞான இச்சை கிரியைகளைச் செலுத்து கின்றதோஅந்தத் தேவ சவிதாவினுடைய ஒளியைத் தியானிக்கின்றோம்” என்பது. இதில் தேவ சவிதா என்பச்து ‘சிவன்(சூரியன்) என்றும் ‘பர்கஸ்’ என்னும் சூரிய ஒளி சிவனுக்கு அபின்னையாகிய ‘சிவசத்தி’ என்றும் சைவர்கள் கொள்வர். ‘பர்கஸ்’ என்பதற்கு ஆகமங்களில் இன்னும் சற்று விரிவாகப் பொருள் கொள்வர். பர்க்கஸ் என்பது சிவசத்தியின் வேறாகாத சிவனுக்குப் பெயர் . இதனால், ” எந்தச் சிவசூரியனுடைய ஞானேச்சாகிரிய சத்தியாகிய ஒளியானது எங்கள் ஞானேச்சாக்கிரியா சத்திகளை செலுத்துகின்றதோ அந்த முக்கியப் பொருளை அதாவது, பராசத்தியொளியைத் தியானிக்கின்றோம்” என்பது காயத்திரிக்குச் சைவர்கள் கொள்கின்ற பொருள். ஹரதத்தர் அருளிய ‘பஞ்ச சுலோக்ம்’ என்னும் நூலின் மொழிபெயர்க்கில்,”உயர் காயத்திரிக்கு உரிப்பொருளாகளின்” என வந்துள்ளது. அதாவது, காயத்ரிக்கு உரிப்பொருள் சிவன் என்பது. சிவ்சூரிய் மண்டலத்தில், அச்சூரியனுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருக்கும் சிவனைத் தியானியாது, சூரியனை மட்டும் தியானிப்போரை நோக்கி நாவுக்கரசர் பெருமான், “அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில், அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ, இருக்கு நான்மறை ஈசனையே தொழும் கருத்தினை நினையார்கள் மனவரே” என அறிவுறுத்தினர். சூரியனை சிவனின் அட்ட மூர்த்தங்களில் ஒன்றாகக் கொண்டு சைவர் வழிபடுவர்.. புற இருளைப் போக்குகின்ற சூரிய்னை அக இருளாகிய அறியாமையைப் போக்குகின்ற சிவ்னுக்கு உவமையாகக் கொள்வர்.”இன்றெனக் கருளி இருள்கடிந்து என்னுள் எழுந்த ஞாயிறே போன்று” என்பது திருவாசகம். எனவே, சிவசூரிய வழிபாடும் தொன்மையதே..

  75. திரு உமாசங்கர்,

    அதாவது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால், சிவனைத் திருமாலை விட உயர்த்திக்காட்ட என்ன வேணும் என்றாலும் சொல்லலாம், அது ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காது. ஆனால், வைணவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அது ஒற்றுமைக்கு ஊறு. பேஷ் பேஷ்!

    வைணவ சித்தாந்தத்தில் ஊறியுள்ள நான், “சிவன் ஒரு ஊளையிடும் சிறுதெய்வம்” என்று ஒருவர் கட்டுரை பதிப்பித்தபொழுது ஒரு க்ஷணமும் தாமதிக்காமல் வேதத்திலிருந்து “ஜேஷ்டாய ச்ரேஷ்டாய” முதலிய வாக்கியங்களைக் காட்டி அவர் உயர்வைக் காட்டினேன். என்னைக் கோடரிக்காம்பு என்கிறீர்கள்.

    மேலும், நான் கூறிய சந்தி விளக்கத்தை எல்லாம் நான்கு முறை அலசிப்பார்த்து விட்டேன். அதில் சிவபெருமானுக்கோ வேறு தேவதைகளுக்கோ அவதூறாக எதுவும் இல்லை. நடுநிலையாளர்கள் (இங்கு அதற்கு பூதக்கண்ணாடி போட்டுத் தேட வேண்டியிருக்கிறது) யாராவது இருந்தால் தெளிவுபடுத்தட்டும்.

  76. //
    மாலிக்காபூர் தென்னிதியாவிர்க்கு வந்த போது சில கோவில்கள் சேதாரம் அடைந்ததாகவும் , அப்போது இரண்டு பிரிவினரவும் வருத்தப் பட்டுக் கொண்டே இருந்த போதிலும் ஒரு பிரிவினரைப் பார்த்து உன் சாமி சிலை இரண்டாய் உடைந்ததே என்றும், இன்னொரு பிரிவினர் உன் சாமி சிலை சுக்கு நூறாகி விட்டதே என்று பரஸ்பரம் கேலி பேசிக் கொண்டாதாகவும் சிலர் கூறக் கேட்டு இருக்கிறேன்.
    //

    நன்பரே நீங்கள் மறுபடியும் சீரஙத்து காக்கை கதைக்கு வந்து விட்டீர்கள். இது வெறும் அற்ப புத்தி கொண்ட மனிதர்கள் செய்வது தான் இதற்காக generalize செய்யவேன்டாம் என்று பனிவன்புடன் விண்ணப்பிக்கிரேன். இந்த மாதிரி சன்டை உலகெங்கும் ப்ரசித்தம் என்ன் செய்வது –அதற்காக நான் நாம் சன்டை போட்டுதான் ஆகனும் என்று சொல்வதாக நினைக்க வேண்டாம், போடாமல் இருப்பதே நல்லது.

    editor களுக்கு எற்படக்கூடிய சிரமம், அவர்களுக்கு எற்படக்கூடிய எரிச்சலை, இவங்கள மாத்தவே முடியாதா என்ற ஏக்கம் கருதி நான் இத்துடன் முடித்த கொள்கிறேன். இந்த கட்டுறயில் வறலாற்று முரன்பாடு இறுந்ததாலும், வ்யாகர்ந விதியின் படி சில விஷ்யம் எடுபடாது என்று நான் நினைத்ததாலும் தான் பதில் எழுத முயன்றேன்

  77. திரு முனைவர் அவர்களே,

    // காஞ்சிப்புராணம் கூறும் வேதமந்திரங்கள் உறுதியாக “சந்தியா பாஷா சமுச்ச்ய”த்திற்கு முந்தியது.அது அவைதிகமாகஇருக்க முடியாது. //

    எந்த வேத மந்திரத்தையும் “அவைதீகம்” என்று சொல்வது அடியேனுடைய நோக்கம் அன்று. அது பெரிய அபசாரமும் கூட. விசாரம் சந்திச் சடங்கைப் பற்றித்தான். அதில் வரும் வேத மந்திரங்களைப் பற்றி அல்ல. காஞ்சிப்புரானத்தை விட பண்டையதான சந்தியா பாஷ்யங்களிலும், ஸ்மிருதி அர்த்த விசார நூல்களிலும் “அச்சுதா, ஆனந்தா, கோவிந்தா” ஆச்சமான விதி நன்றாகவே விளக்கப்பட்டுள்ளது.

    பலர் பலவிதமாகச் சந்தி பண்ணுவதை எதிர்க்கவும் இல்லை, அதை deny செய்யவும் இல்லை.

    காயத்ரி மந்திரமானாலும் சரி, ஏனைய மந்திரமானாலும் சரி, வெவ்வேறு சம்பிரதாயம் வெவ்வேறு விதமாக விளக்குகின்றன என்பதை மட்டும் அறிவது அனைவர்க்கும் நல்லது. அவரவர்க்குத் திருப்தியான விளக்கங்களை அவரவர் ஏற்றுக்கொள்வர். ஆனால், அதை வேறு சம்பிரதாயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, ‘எங்கள் நூலில் இப்படி உள்ளதே, ஆனால் நீங்கள் இப்படிச் செய்கிறீர்களே?’ என்று கேள்வி எழுப்பினால், கண்டனங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

    இறுதியாக, வியாசரால் ஐந்தாம் வேதமாகிய மகாபாரதத்தில் ஹரிவம்சத்தில் கூறப்பட்டுள்ள ஒரு வாக்கியத்தை “அஜ்ஞானத்தினால் அவர் சொன்னார்” என்ற விஷயம் மிகவும் கண்டிக்கத்தக்கது. பாரதம் ஐந்தாம் வேதம் என்று நான் தனியாக முடிவுகட்டவில்லை. சங்கரர் சொல்கிறார், சாந்தோக்ய உபநிஷத் பாஷ்யத்தில், நாரத-சனத்குமார உரையாடல் வரும் இடத்தில்.

    இக்கட்டுரை குறித்து கடைசி மறுமொழியாக இதை இடுகிறேன்.

  78. திரு சாரங் , நீங்கள் புதிதாக ஒருசெய்தீ சேர்க்கிறீர்கள். என் கட்டுரையில் நான் எங்கும் இராகவேந்திரரைப் பற்றியோ அல்லது அவரது கொள்கைகளைப் பற்ரியோ எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.. புருஷசூக்தவியாக்கியனம் என்ற பகுதியில்வியாக்கியானமேஒன்றுமில்லைஎன்றுதான் குறிப்பிட்டிருந்தேன். Allyour comments are coloured with some pre conceived notions about me. திரு பாலாஜி அவர்களுக்கு நீங்கள் அனுப்பிய gosai – vaishnava லிங்க் ப்டித்தேன்.. சர்ச்சைக்குரிய விஷயத்தில் பெரும்பாலும் நம், ஆம், நம் கருத்தை ஒத்திருந்ததைக் கண்டுமகிழ்ந்தேன். குருநாதனிடம் தீட்சை பெற்று மகாமந்திரத்தை ஓதும், செபிக்கும் தகுதி பெற்றவர்கள் அனைவரும் துவிஜர்களாகிய இரு பிறப்பாளர்களே. வேதத்தை நம்பி ஒழுகுபவர்கள் அனைவரும் வைதிகர்களே.வைதிகசைவம் என்ற பதமிதனைத்தான் உணர்த்துகின்றது. பிறப்பால் அந்தணன் என்பதையோ,வைதிகன் என்பதையோ, புரோகிதத் தொழிலால் வைதிக னென்பதையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இது 25 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. என் சகோதரியார், , தம்முடைய பிறந்த நாள்ன்று, எங்களூர் சிவன் கோவிலில் அம்பிகைக்குச் சந்தனக்காப்பு அபிஷேகம் சிறப்பாகச் செய்துவழிபடுவார். அன்று அவருக்கு ஸ்ரீல்லிதா ஸகஸ்ரநாமம் சொல்லி அருச்சனை செய்யலாம் என்ற ஆசை வந்துவிட்டது. குருக்களுக்கு அது பாடம் இல்லை. என் சகோதரியாரும் நானும் நாங்கள் சொல்கிறோம் என்றோம். அவர் அது ஆகாது என்று மறுத்துவிட்டு, வெளியில் இருந்து ஒரு பிராமணனை (அந்தணன் என்று சொல்ல மாட்டேன்) அழைத்து வந்தார். அவர் கையில் நாங்கள் வைத்திருந்ததைப் போலவே லிஃப்கோ புத்தகமொன்று கந்தலாக இருந்தது. அவர் உள்ளே நுழையும்போதே வெண்சுருட்டு மணம் கம்ழ்ந்தது. அவர் உள்ளூர்க்காரர்; ஆற்றுமேட்டில் அந்திமக்கிரியை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர். ஆதலால் நன்குஅறிவேன்.வாயைக் கொப்பளித்து விட்டாவது வரக்கூடாதா? என்று கேட்டேன். ஓரளவுவைதிகநெறியில்வாழும் எங்க்ளுடைய சகஸ்ரநாம ஒலியைக் கேட்க மறுத்த மரகதவல்லித்தாயார் அன்று சிகரெட் மணத்துடன் கூடிய நாமத்தை அனுபவித்தாள். அன்று கோவிலுக்குப் போன நான் இன்று வரை அதன் தலைவாசலை மிதிக்கவில்லை. மற்றொரு நிகழ்ச்சியும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். திருக்கோவிலில் அபிஷேகத்தின்போது, இராமகிருஷ்ண மடத்து வெளியீடான ஸ்ரீருத்ரம் புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். உள்ளூர் சாஸ்திரிகள் ஒருவர், அவரும் எனக்குத் தெரிந்தவர்தான். நீங்கள் தேவார திருமுறைகள் ஓதலாமே, ஏன் இதனைவைத்துப் படித்துக் கொண்டிருக்கிறீர? என்றார். அதற்கு நான் தமிழிலே புத்தகம் போட்ட அண்ணாவையும் கேச்ட்போட்டகம்பனியியும் போய்க் கேளுங்கள். என்றுசற்றுக் கடுமையாகவே கூறினேன். ஆனால் அதனை எனக்குக் கூறிய அறிவுரையாகவே கொண்டேன். நான் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்திலேயே சிவன் கோவில் ஒரு பெரியவர் துணையுடன் அமைத்து வைதிகசைவ முறைப்படிவழிபாடு செய்துவருகிறோம். பூசை செய்ப்வர் பிராமணர் அல்லர். ஆனால் இந்த அமைப்பில் பல்பிராமணக் குடும்பங்கள் எந்தவித மனச்சிடுக்கும் இன்றிகலந்துகொள்கின்றன. என்னுடைய முயற்சிகளுக்குத் துணையாகவும் அவர்கள் இருக்கின்றனர்..சமூகங்கள் மாறி வருகின்றன. ஓதுதலும் ஓதுவித்தலும் நான்காம் வருணத்தவன் செய்கின்றான். அடிமைத் தொழிலில் அந்தணன் சிறந்துவிளங்குகின்றான். இன்றைய சமுதாயத்தில் சாதிகளும் வருணங்களும் பொருளற்றன. ஆனால் வைதிக தருமம் அழியாது. தமிழ்ச்சைவம் இருவகையான அடிப்படை வாதிகளிடமிருந்து தப்பி இன்றும் பொருளுடையதாக இருப்பதையே என் கட்டுரைகளில் கூறியிருக்கின்றேன்.

  79. சாரங் அவர்களே

    ///சைவத்தை பற்றி வரும் கட்டுரைகளில் சிவத்தை பற்றி பேசுவது தான் முறை – அதற்காக ஒரு முரன்பான விஷயத்தை சொன்னால் அதை சுட்டிக் காட்டுவது முறை தான் ///

    சைவ சித்தாந்ததின் அடிப்படியில் வரும் கட்டுரைகளில் சிவன்தான் பரம் என்றிருக்கும் என்று கூட எழுதக் கை வரவில்லையே தங்களுக்கு, “சிவத்தைப் பற்றிப் பேசுவதுதான் முறை” என்றல்லவோ எழுதுகிறீர்கள்? சைவ சித்தாந்தத்தில் சிவம்தான் பரமன். அந்த அடிப்படையில எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் அதை மறுத்து எழுதிக் கொண்டே இருந்தால் அதற்குப் பெயர் நடுநிலையா? இதை திரு ஜடாயு அவர்கள் சமயவாதம் என்று சொல்வதில் என்ன தவறு. அது சரியானதுதானே.

    சிவன்தான் பரமன் என்பது நடு நிலை இல்லை.
    விஷ்ணுதான் பரமன் என்பதும் நடு நிலை இல்லை.
    இவர்கள் இருவருமே பரமன் என்பதும் நடு நிலை இல்லை. ஏனெனில் சாக்தர்களுக்கு சக்திதான் பரம். பராசக்தி.
    கணாபத்தியருக்கோ முழுமுதற்கடவுள் வினாயகர்தான்.
    கௌமாரருக்கோ முருகனே பிரணவம்.

    இப்படியெல்லாம் இருக்க யார் நடுநிலையாளர்?

    “பரமன் என்பவன் பக்தனின் மனதில் அவன் எண்ணியவண்ணம் வீற்றிருப்பவனே” என்று கூறுபவர் எவரோ அவரே நடுநிலையாளர்.

    எந்த சித்தாந்தமானாலும் சரி, அதை ஏற்கிறேன் என்று சொல்பவரே நடுநிலையாளர்.

    ஆனால் இங்கே என்ன நடக்கிறது? எப்போது சைவ சித்தாந்தக் கட்டுரை வந்தாலும் அதைக் குறை கூற மல்லுக்கட்டி நிறபதல்லவோ நடக்கிறது. இதுதான் ஒற்றுமைக்கு கேடு விளைக்கும் இதைச் சொல்லுதல் எனது கடமையாகப் பட்டதால்தான் சொன்னேன்.

    தாங்களும் திரு கந்தர்வன் அவர்களும் தங்கள் வேத, வியாகரண, சம்ஸ்கிருத பாண்டியத்தின் அடிப்படையில் திவ்வியப் பிரபந்தம், வேதம் , புருஷ சூக்தம் முதலியன பற்றியும், பாணினியின் இலக்கணம் குறித்தும் கட்டுரை எழுதினால் அனைவரும் பயன் பெறுவோமே. அதை விட்டுவிட்டு ஒவ்வொரு முறையும் சிவன் இல்லை பரமம், விஷ்ணுதான் என்று எழுதுவது சிறிதும் ஒற்றுமைக்கு வழி செய்யாது.

    திரு கந்தர்வன் எழுதியவற்றில் உள்ள பிழை பற்றி நான் ஏன் சொல்ல முடியாது என்று காரணத்தைச் சொல்லிவிட்டேன். தாங்கள் கூட மீண்டும் ஒருமுறை அவர் எழுதிய விளக்கங்களைப் படித்தால் புர்நிது கொள்வீர்கள். அப்படியிருக்க தனியாக் பொதுவில் எழுத எனக்கு விவேகமாகப் படவில்லை. அவ்வளவுதான். இடம் பொருள், ஏவல் என்றால் என்ன தங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

  80. திரு கந்தர்வன் அவர்களே

    ///மேலும், நான் கூறிய சந்தி விளக்கத்தை எல்லாம் நான்கு முறை அலசிப்பார்த்து விட்டேன். அதில் சிவபெருமானுக்கோ வேறு தேவதைகளுக்கோ அவதூறாக எதுவும் இல்லை. நடுநிலையாளர்கள் (இங்கு அதற்கு பூதக்கண்ணாடி போட்டுத் தேட வேண்டியிருக்கிறது) யாராவது இருந்தால் தெளிவுபடுத்தட்டும்.///

    அந்த சந்தி விள‌க்க‌த்தில் அவதூறு பரமசிவனுக்கு இல்லை, விஷ்ணுவுக்குத்தான் செய்திருக்கிறீர்க‌ள், ஆதார‌ம் நீங்க‌ளே கொடுத்ததுதான்.

    இத‌ற்குத்தான் நான் விவேக‌ம் வேண்டும் என்று சொன்னேன்.

  81. உமாசங்கர் அவர்களே

    //
    சைவ சித்தாந்ததின் அடிப்படியில் வரும் கட்டுரைகளில் சிவன்தான் பரம் என்றிருக்கும்
    //

    உங்களின் உண்மையான நோக்கம் புரிந்து விட்டது 🙂

    //
    என்று கூட எழுதக் கை வரவில்லையே தங்களுக்கு
    //

    இதோ உங்களுக்காக – சைவ சித்தாந்ததின் அடிப்படியில் வரும் கட்டுரைகளில் சிவன்தான் பரம் என்று இருக்கும்

    மேலும் – நான் எங்காவது ஒரு தடவை விஷ்ணு தான் பரம் என்று சொன்னதாக/உணர்தியதாக காட்ட முடியுமா – அல்லது சிவ பெருமான் பரம் இல்லை என்று சொன்னதாக/உணர்தியதாக காட்ட முடியுமா?

    //
    அந்த அடிப்படையில எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் அதை மறுத்து எழுதிக் கொண்டே இருந்தால் அதற்குப் பெயர் நடுநிலையா? இதை திரு ஜடாயு அவர்கள் சமயவாதம் என்று சொல்வதில் என்ன தவறு. அது சரியானதுதானே
    //
    எல்லா கட்டுரையிலும் என்பது மிகத்தவறு மறுத்து எழுதினேன் என்பதும் தவறு. இந்த கட்டுரையில் நான் முன் சொன்னது போலவே வந்ததால் மட்டுமே எழுதினேன் (that too after too much of deliberations)

    -சமயவாதம்? 🙂
    //
    விட்டுவிட்டு ஒவ்வொரு முறையும் சிவன் இல்லை பரமம், விஷ்ணுதான் என்று எழுதுவது சிறிதும் ஒற்றுமைக்கு வழி செய்யாது.
    //
    வேடிக்கையாய் உள்ளது – நாராயண என்பது சிவன் தான் அதனால் அவர் தான் பிரம்மம் என்று சொல்வது 🙂 சிவன் ருத்ரன் அல்ல அனால் ருத்ர காயத்ரி சிவனை குறிக்கும் என்பது – நான் சமய வாதம் பேசவில்லை, யார் என்பது உங்களுக்கே தெரியும் – அப்படி என்ன, எல்லாவற்றையும் திருத்துவிட்டு பரம் நிர்ணயம் செய்ய வேண்டும் – நீங்களோ வேதம் ப்ராமானாக தேவை இல்லை என்கிறீர்கள் அப்புறம் அதை ஏன் எடுப்பானேன்? அதை மறுத்து இந்த இடத்தில் இப்படி போரும் கொள்ள இயலாது என்பதை பற்றி மட்டும் தான் இங்கு பேச்சு நடக்கிறது

    முனைவர் அவர்கள் இந்த கட்டுரையில் எழுதிய எல்லா வரிகளுக்குமா மறுப்பு இருக்கிறது – எவ்வளவோ வரிகளில் சிவனார் தான் பரம் என்கிறார் – அதில் உள்ள கருத்தாழத்தையும் படித்து மகிழ்கிறோம் – இதை எல்லாம் யோசிக்கவே மாட்டீர்களா

    நீங்கள் இங்கு விவாதத்திற்கு வைக்கப்பட்ட விஷயத்திற்கு பதில் இருந்தால் எழுதுங்கள் – நீங்கள் இப்பொழுது எடுக்கும் முயற்சி விஷயத்தோடு விவாதிக்க வேறு ஏதும் இல்லை – சரி சும்மா இவன் த்வேஷி என்று பெரிது படுத்தி கூறுவோம் என்பது போலத்தான் உள்ளது

    இங்கு முன் வைக்கப்பட்ட இரண்டு விஷயம் – அதற்க்கு உங்களிடம் கருத்து இருக்கிறதா

    – அச்சுதா … நாமாக்கள் அங்க நிசத்தில் இல்லாமல் ஆச்சமனத்தில் உள்ளது இது குறைந்தது வியாசர் காலத்திளுர்ந்தே புழக்கத்தில் இருந்தது – இதற்காக அப்போது சிவ பெருமான் நாமங்களை சொல்லி ஆச்சமன் இருந்திருக்காது என்று சொல்ல வில்லை – இதற்க்கு உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஏதாவது
    இருக்கிறதா?

    – நாராயண (இந்த விதியின் கீழ் வரும் எந்த பெயராகவும் இருக்கலாம்) என்பது ரூடி சப்தம் – இதற்க்கு வ்யாகர்ண நிர்ணயமும் பல நிர்ணயமும் உள்ளது – உங்களுக்கு இதில் மாற்றுக் கருத்து உள்ளதா

    – உபரியாக வந்த விவாதம் – புருஷ சூக்தம் யாரை குறிக்கும் (யாரை வேண்டுமானாலும் குறிக்கட்டும் அது ஒரு அழகான சூக்தம்) லக்ஷ்மி என்பது யாரை குறிக்கும் – இதில் ஒரு விஷயத்தில் கூட நீங்கள் பங்கு கொள்ளவில்லை – வேண்டும் என்றில்லை – வெய்ய மட்டுமே அதுவும் ஒரு மா பெரும் bias உடன் சிலரை மட்டுமே வெய்ய நீங்கள் மருமொழி இடுகிறீர்கல் – அதற்காக எல்லோறயும் திட்டச்சொல்ல வில்லை – தயவு செய்து விஷ்யத்திற்க்கு சார்ந்து பதில் இடுங்க்ள் வெரும் புகயை மட்டும் kilappa கிலப்ப வேண்டாம் – இதே தோதில் உங்களிடம் இவ்விஷயமாக மேற்க்கொண்டு விவாதம் செய்ய நான் விரும்பவில்லை –வேரு ஒரு பதிவில் பரிமாரிக்கொள்வோம்

  82. திரு திருச்சிக்காரன் அவர்களே

    /// உலகிலே இந்து தெய்வங்களை குறி வைத்து இழிவு படுத்துவது யார் என்று பார்த்தால் அதில் முதல் இடம் வகிப்பது மத நம்பிக்கையுள்ள ஆத்திக இந்துக்கள் தான் என்னும் நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள் போல் இருக்கிறது. ///

    எனக்கும் இந்த பயம் வந்துவிட்டது.

    /// மத வெறி உடையவன், சகிப்புத் தன்மை இல்லாதவன், தன கடவுள் மட்டுமே மெய்யான கடவுள், எல்லாருக்கும் மேலான கடவுள் என்று எந்த எந்தஆதாரமும் இல்லாமல் சாதிக்க விரும்புபவன், இவர்கள் இந்து மத்ததை உளிருந்தே கெடுப்பவர்கள், என்பதி சொல்லியே ஆக வேண்டியுள்ளது.///

    உண்மை. உடன்படுகிறேன்.

  83. // வேத மந்திரங்களுக்கு பொருள் பல உபநிஷத்களில் உள்ளது – அதையும் சேர்த்து பார்த்தல் சரியான பொருள் தரும் – வரலாற்று பார்வையும் தேவை, அது மட்டுமே சரி அல்ல. தர்க்கம் வேதாந்தம் அதன் விரிவுறைகள், வரலாற்றுப் பார்வை, இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றெ மிகச்சறியானதான பொருளை தரும் என நம்புகிரேன் //

    சாரங், சரியாக சொன்னீர்கள். இதனுடன் உடன்படுகிறேன். பொதுவான வேத மந்திரங்களுக்கு சமயரீதியாக rigid ஆன பொருள் கூறி, இது மட்டுமே சரியான பார்வை என்பதனை மட்டுமே நான் விமர்சிக்கிறேன்.

    // அதற்குத் தான் சொல்கிறேன். Points are points. Either you address them, or you say “I do not want to address these questions for reasons I do not want to mention”.//

    கந்தர்வன், நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தை இப்படி மறுமொழிகளில் துணுக்குகளாக விவாதிக்க முடியாது. வேத இலக்கியத்தில் பாண்டித்யமும், ஆய்வு நோக்கும், நிறைய நேரமும் தேவைப் படும் விஷயம் அது. நான் தந்த உதாரணங்களை (காளிதாசன், சிலப்பதிகார) வைத்து நீங்கள் மறுபடி சிலம்பம் சுழற்ற ஆரம்பித்து விட்டீர்கள் – அது நம்மை எங்கும் இட்டுச் செல்லாது.

    இன்னொன்று. வேத இலக்கியம் பற்றி உங்களுக்கு தனித்துவமுள்ள ஒரு பார்வை இருக்குமானால், அதனை விளக்கி நீங்கள் தெளிவான, விரிவான கட்டுரைகளாக எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் (முன்பு ஒருமூறையும் இப்படி சொன்னதாக ஞாபகம்). ஏனென்றால் அப்போது தான் உங்களது முழு perspective என்ன என்பது தெரியவரும்.. நீங்கள் இதுவரை செய்து வருவது மறுமொழிகளில் துணுக்குகளாக ஆட்சேபங்கள் தெரிவிப்பது மட்டுமே.

    உமாசங்கரும் இப்போது இதையே கோரியிருக்கிறார். தாங்கள் செய்யலாமே .

  84. ‘திரு கந்தர்வன் அவர்கள் எழுதியது //எங்கள் நூலில் இப்படி உள்ளதே, ஆனால் நீங்கள் இப்படிச் செய்கிறீர்களே?’ என்று கேள்வி எழுப்பினால், கண்டனங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.//
    என்னுடைய கட்டுரையில் உள்ள பகுதி”:
    இக்காலத்தில் வைதிகர்கள் சந்தியின்போது வேதமந்திரங்களுக்குப் பதிலாக, அங்கநியாசம், கரநியாசம் முதலியன செய்யும்போது திருமாலின் பெயர்களாகிய ‘அச்சுதா அனந்தா கோவிந்தா’ முதலிய திருநாமங்களையே உச்சரிக்கின்றனர் என அறிகிறேன். (அறிந்தவர் திருத்துக).

    //காலச்சூழ்நிலைகளின் காரணமாகச் சமயப் புறவொழுக்கங்களில் மாறுதல்கள் அவ்வப்பொழுது நிகழ்கின்றன. சிவஞானமுனிவர் அத்தகைய மாற்றங்களைக் கண்டு அவற்றை இப்புராணத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். வைதிகசைவத்தின் கன்மானுசார வரலாற்றை எழுதுவோருக்கு இப்பதிவு பெரிதும் துணை செய்வதாகலாம். //என்னுடைய பதிவில் எங்காவது கந்தருவன் கூறுவது போலப் பழிப்பிருக்கின்றதா? அறிந்தவர்விளக்கினால் வைதிகசைவ கன்மானுஷ்டான வரலாற்றை அறியத் துணை செய்யும் எனக் கேட்க, கண்டனங்களளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க எச்சரிக்கை வருகின்றது. எனக்குக் கண்டனம் வேண்டாம் சரியான செய்தியைக் கொடுத்தால் போதும். கண்டன்ம் என்னைத் தாக்காது. ஏனெனில் நான் செய்தியைத்தான் விரும்புகின்றேன். நான் வாதம் செய்ய முனையவில்லை.ஒருசெய்தியைச் சொல்லி,இன்னொன்றுமிருப்பதாக அறிகிறேன் அறிந்தவர்விளக்குக என்றுகேட்டால், கண்டனத்திற்குத் தயாராக இருங்கள் என்பதற்கு வாதத்தில்விதண்டாவாதம் என்பது பெயர். கண்டனத்தை என்மேல் விட் வேண்டாம். அதனால் பயனில்லை . உங்கள் கண்டனம் நாத்திகத்துக்கும் இந்து தர்மத்திற்கும் எதிராக்கக் கூர்மைப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்துள்ளசெய்திகளுக்கு நன்றி. ஆனால் இது போதுமானதாக இல்லை.

  85. Munaivar swamin,

    my tansliteration is not working – so doing this in english
    //
    திரு சாரங் , நீங்கள் புதிதாக ஒருசெய்தீ சேர்க்கிறீர்கள். என் கட்டுரையில் நான் எங்கும் இராகவேந்திரரைப் பற்றியோ அல்லது அவரது கொள்கைகளைப் பற்ரியோ எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.. புருஷசூக்தவியாக்கியனம் என்ற பகுதியில்வியாக்கியானமேஒன்றுமில்லைஎன்றுதான் குறிப்பிட்டிருந்தேன். Allyour comments are coloured with some pre conceived notions about me
    //

    i have good respect for you and i am not saying this just for the sake of it. About Shri Ragavendirar – it was not in this article it was not in the earlier one – i seek your pardon for saying that you had said something lowly about Shri Ragavendirar – it should have been like this – you had inadvertently said something about the Purush Sookta bashya which could have been interpreted as though Ragavendirar was a casteist (which certainly he is not)

    I certaily do not have any colored opinions – i just go by logic. I will still say that as a person with deep knowledge and experience you need not have compared these two bashyams. When we compare one thing with the other, we do it with a purpose and to derive inferences from it. It is like leaving something for other’s interpretation.

    When i talk about Shankara geetha baashya and look at it with awe, i will not say, see Ramanuja has not delved deep in to this in this geetha baashya. If i say that, then 1) i am inferring something and forming a knowledge about it and i also want the hearer/onlooker to infer and form a knowledge about it.

    this is how subject matters that deal with inference and comparions conclude – Nyaya system has concluded that all comparions are Inference only.

    though i say this, i seem to think that your intent was to only show the Shaiva baashyam in higher pedestal and not to debase the baashyam by Ragavendirar – but for the onlooker it might look very different.

    about the earhtly practice called toeing with Brahmins alone – i know of several examples and it is really painful – the so called brahmins employ a Brahmin parijaataka (cook) for Shraddam – who will come fully drunk and cook – we won’t know if while cooking he drinks and some alcohol gets in to the food he cooks 🙂 – but still these so called andanars are hell bent on employing brahmins only and they call they follow aaaaachaaaaram:-)

  86. //உங்கள் கண்டணத்தை நாத்திகத்துக்கும் இந்து தருமப் பகைவர்களுக்கும் எதிராகக் கூர்மைப்படுத்திக் கொள்ளுங்கள்” // எனத்திருத்திப் படிக்கவும்

  87. ஜடாயு அவர்களே,

    //
    இன்னொன்று. வேத இலக்கியம் பற்றி உங்களுக்கு தனித்துவமுள்ள ஒரு பார்வை இருக்குமானால், அதனை விளக்கி நீங்கள் தெளிவான, விரிவான கட்டுரைகளாக எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் (முன்பு ஒருமூறையும் இப்படி சொன்னதாக ஞாபகம்). ஏனென்றால் அப்போது தான் உங்களது முழு perspective என்ன என்பது தெரியவரும்.. நீங்கள் இதுவரை செய்து வருவது மறுமொழிகளில் துணுக்குகளாக ஆட்சேபங்கள் தெரிவிப்பது மட்டுமே.
    //

    🙂

    நீங்கள் கூறுவதுபோல நான் எனக்குத் தெரிந்த சித்தாந்தத்தைப் பற்றி எழுதத்தொடங்கினால், அதைப் பலர் “அவதூறு” என்று சொல்வார்கள். பெரிய கட்டுரைகளாக எழுதுவதற்கும் எனக்கு அவகாசமும் இல்லை.

    ஸ்ரீ்வைஷ்ணவ சித்தாந்தத்தைப் பற்றியும், சம்பிரதாயப்படி தர்க்க ரீதியான வேத விளக்கங்களையும் உங்களுக்கு தெரிய ஆசையிருந்தால் அதற்குப் பல ஸ்ரீவைஷ்ணவ வித்வான்கள் உள்ளனர். அவர்களை நேரே அணுகிக் கேள்விகளைக் கேட்டால் முகமலர்ச்சியுடன் உங்களை வரவேற்று, சந்தேகந்தீர தர்க்க ரீதியிலும், வரலாற்றுப் பார்வையுடனும் விளக்குவார்கள். இதைச் செய்தீர்களானால், என்னுடைய perspective புரிய வரும்.

    ஆனால், ஒரே ஒரு எச்சரிக்கை. அப்படி அணுகுவீர்களானால், அதற்குமுன் ஒரு நடுநிலையான neutral எண்ணத்துடன் அணுகுங்கள். அங்கு சொல்லி இருப்பது முழுவதையும் படிக்காமல் ஒரு judgement-க்கு வந்து விடாதீர்கள். “இவர்கள் சமயவாதிகள்” என்ற மனநிலையில் இருப்பீர்களானால், தயவு செய்து மேற்கூறியவர்கள் பக்கம் போகவே போகாதீர்கள்; நீங்கள் இருக்கிறபடி ஆநந்தமாக இருக்கலாம். 🙂

    முடிந்தவரையில் இந்தத் தளத்தில் கிறித்தவ-இசுலாமிய வெறியர்கள் எவரேனும் வந்து நமது தெய்வங்களையோ, பண்பாட்டையோ இகழ்ந்து தமது காட்டுமிராண்டி வெறி மதத்தைப் பிரகடனப்படுத்தினால், அதை எதிர்க்க நான் எனக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து எழுதத் தயார். அத்துடன், நம்மவர்களே

    //
    அறிவுபோல் அடர்ந்து எழும் அறியாமையினது வலியால் ஒருமுறை வியாசர் பொய் கூறி சிவாபராதத்துக்கு ஆளானார். வியாசருக்குப் புத்தி புகன்ற விஷ்ணு,
    //

    என்று எல்லாம் எழுதத் தொடங்கினால் மட்டும் எதிர்க்கிறேன். சைவர்கள்-சாக்தர்கள் உட்பட அனைத்து ஹிந்துக்களையும், ஏன் நல்ல கிறித்தவர் இசுலாமியர் எவர் இருந்தாலும் அவர்களை நண்பர்களாகவும், நெருங்கிய உறவினராகவும் பாவிக்கிறேன்.

  88. சாரங் அவர்களே

    //சைவ சித்தாந்ததின் அடிப்படியில் வரும் கட்டுரைகளில் சிவன்தான் பரம் என்றிருக்கும்//
    உங்களின் உண்மையான நோக்கம் புரிந்து விட்டது ///

    வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடும் இல்லை, வழக்கமும் இல்லை என்பது தங்களுக்குத் தெரிந்ததே. ஆனாலும், தாங்கள் கூறியிருப்பதுபோன்ற உள்நோக்கம் என்றும் கிடையாது. ஒற்றுமை ஒன்றையே உள்ளும் வெளியும் நோக்கமாக நான் எழுதினேன். வரிகளுக்கிடையில் வாதம் செய்ய எனக்குத் தெரியாதென்றில்லை, நான் விரும்புவதில்லை. அவ்வளவே. நீங்கள் வரிபிளந்து உள்நோக்கம் கற்பித்தாலும் அதே வரிகளின் தொடர்ச்சியாக நான் எழுதிய நடு நிலை குறித்து ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? அத்தகு நடுநிலைதானே என் நோக்கம் என்று நான் வெளிப்படுத்தியதாலா?

    ///இங்கு முன் வைக்கப்பட்ட இரண்டு விஷயம் – அதற்க்கு உங்களிடம் கருத்து இருக்கிறதா ///
    ///வெய்ய மட்டுமே அதுவும் ஒரு மா பெரும் bias உடன் சிலரை மட்டுமே வெய்ய நீங்கள் மருமொழி இடுகிறீர்கல் – அதற்காக எல்லோறயும் திட்டச்சொல்ல வில்லை – தயவு செய்து விஷ்யத்திற்க்கு சார்ந்து பதில் இடுங்க்ள் வெரும் புகயை மட்டும் kilappa கிலப்ப வேண்டாம் – ///

    உசுப்பி விட்டு என்னிடமிருந்து “வாயைப பிடுங்கி” எப்படியாவது அந்த சந்தி பற்றிய “நுனிமர அடிமர” விஷயம் என்ன என்று என்னை எழுத வைக்கும் எந்த முயற்சியும் பலிக்காது. இப்படிப்பட்ட முயற்சிகளை நான் கடந்து வந்து பல வருடங்கள் உருண்டோடிவிட்டன. எங்களுக்கெல்லாம் கிஞ்சித்தும் தெரியாத தங்களுக்கு மட்டுமே தெரிந்த சம்ஸ்கிருத, இலக்கண, வியாகிருத வியாக்கியானங்களை வைத்துக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அவ்வளவே.
    விவேகம் குறித்த எனது கருத்தில் எந்த மறுத்தாலும் இல்லை.

    ///இதே தோதில் உங்களிடம் இவ்விஷயமாக மேற்க்கொண்டு விவாதம் செய்ய நான் விரும்பவில்லை –வேரு ஒரு பதிவில் பரிமாரிக்கொள்வோம்///

    புரிதலுக்கு மிக்க நன்றி.

  89. திரு மோகன ரங்கன் அவர்கள் இதே தளத்தில் இட்ட கட்டுரையிலிருந்து

    //
    ஆனால் இங்கு ஹிந்துமதம் என்பதைப்பற்றிப் பேசாமல் இருப்பதுதான் மதச்சார்பற்ற தன்மை என்பது போன்ற மூளைச் சலவையில் அறிவுஜீவிகளின் கூட்டம் சிக்கித் தவிக்கிறது. பல பல்கலைக கழகங்களிலும் மத ஆய்வுகள் என்பதற்கே ஆஸனங்கள் உண்டா என்பதே சந்தேகம்தான். ஸ்ரீவைஷ்ணவம் பற்றியோ, சைவம் பற்றியோ, சாக்தம், சமணம், பௌத்தம் இவைபற்றியோ ஒரு ஹிந்து படிக்க வேண்டும் என்றால் மரபு ரீதியான சாலைகளுக்கோ, மடங்களுக்கோதான் போயாக வேண்டும். கல்விக்கழகங்களின் முக்கிய பாட்டையில், மதக்கல்வி என்பதே மூடநம்பிக்கை, மதச்சார்பின்மைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியது, மதச் சண்டைகளை ஏற்படுத்தக் கூடியது என்ற அபிப்ராய மூட்டத்தில், மதங்களைப் பற்றிப் படித்தல் கைகழுவப் படுகிறது.
    //

    கிட்ட தட்ட இந்த நிலையை தான் இங்கு காண முடிகிறது – ஒரு விஷயத்தை பற்றி விவாதித்தால் ஏன் மத சண்டை, இஸ்லாமிஸ்டு என்ன நினைப்பான், ஒருதலைபட்ச நோக்கு என்றெல்லாம் பயந்து ஒதுங்குகிறோம்.

    முனைவர் அய்யாவையோ, உமாசங்கர் அய்யாவையோ, ஜடாயு அவர்களையோ, திருச்சிகாரர் அவர்களையோ சந்திக்க நேர்ந்தால் கை எடுத்து வணங்க யோசிக்கக் கூட மாட்டேன் – அதே போல் எல்லோரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பும் மரியாதையும் வைக்கத் தெரிந்தவரே – நாம் விவாதிக்கும் போது விஷ்யத்தை விட்டு வெறுமையை பேசினால் தான் தவறு – ஒரு பார்வை தவறெனில், அது ஏன் தவறு என்று சுட்டிக்காட்டுவது தான் சிறந்தது

    நமது பாரம்பரியம் விவாதத்தினால் தான் வளர்ந்தது – சங்கரர் சான்க்யர்களையும், பௌத்தர்களையும் கடுமையாக தாக்குகிறார் எதைக் கொண்டு அவன் கண்டு பிடித்த லாஜிக் என்பதை கொண்டு – நையாயிகர்களுடனும், சான்கயர்களுடனும், வைசெசிகர்களுடனும் நாம் வாதம் செய்ததன் மூலமே அவர்களின் கருத்தை அறிந்து கொண்டோம் – அதையும் சேர்த்து தான் இன்று ஹிந்து மதம் என்கிறோம் – விவாதத்தினால் தான் பரஸ்பரம் கருத்து பரிமாற்றம் உண்டானது – இப்படி விவாதம் நடக்கையில் ஒரு சான்கயனோ, நையாயிகனோ, வேதாந்தியை பார்த்து நீ சமயவாதி என்றோ bias உள்ளவன் என்றோ சொல்லவில்லை – ந்யாயம் கற்றதால் தான் சங்கரரால் அற்புதமாக வாதிட முடிந்தது, வாதிட்டு வேதாந்தம் தழைத்திட செய்ய முடிந்தது

    அதலால் இங்கு நடக்கும் அனைத்தும் வெறும் சமய வாதம் என்று ஒதுக்கித் தள்ளி விட வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்

  90. //சைவ சித்தாந்ததின் அடிப்படியில் வரும் கட்டுரைகளில் சிவன்தான் பரம் என்றிருக்கும்//
    உங்களின் உண்மையான நோக்கம் புரிந்து விட்டது ///

    ஒற்றுமையை பேணும் நீங்கள் இதை ஏன் கேட்டு வாங்க வேண்டும் – நான் எழுதியதை bias இல்லாமல் படிக்கலாமே – என்னிடம் சிறு சமய சிந்தனை இல்லை – bias என்னிடம் இல்லை எங்கு என்பது இதிலிருந்து திண்ணம்

    //
    உசுப்பி விட்டு என்னிடமிருந்து “வாயைப பிடுங்கி” எப்படியாவது அந்த சந்தி பற்றிய “நுனிமர அடிமர” விஷயம் என்ன என்று என்னை எழுத வைக்கும் எந்த முயற்சியும் பலிக்காது. இப்படிப்பட்ட முயற்சிகளை நான் கடந்து வந்து பல வருடங்கள் உருண்டோடிவிட்டன. எங்களுக்கெல்லாம் கிஞ்சித்தும் தெரியாத தங்களுக்கு மட்டுமே தெரிந்த சம்ஸ்கிருத, இலக்கண, வியாகிருத வியாக்கியானங்களை வைத்துக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அவ்வளவே.
    விவேகம் குறித்த எனது கருத்தில் எந்த மறுத்தாலும் இல்லை
    //

    இதை நான் என்ன சொல்ல – கந்தர்வன் அவர்கலன்றோ உங்களை உசுப்பி விட முயற்சிக்க வேண்டும் – இப்படிப்பட்ட அசாதாரணமான புரிதலுக்கு (யோசனைக்குதான்) தான் விவேகம் என்று பெயரா

    நான் உங்களை கந்தர்வன் என்ன சொன்னார் அதை சுட்டிக் காட்டுங்கள் என்றா சொன்னேன் – பொதுவாக இந்த கட்டுரையில் வைக்கப்படா விஷயத்திற்கு உங்கள் கருத்து என்ன என்றேன் அதில் புருஷ் சூக்தம், புர்ஹ்ச சப்தம், வ்யாகர்ணம் எல்லாம் அடங்கும் – சந்தியை மட்டும் பிடித்துக்கொண்டு நீங்கள் பதில் சொல்வது வெறும் வாயுமயமாக்குதல் முயற்சி தான்

  91. திரு கந்தர்வன் அவர்களே

    /////அறிவுபோல் அடர்ந்து எழும் அறியாமையினது வலியால் ஒருமுறை வியாசர் பொய் கூறி சிவாபராதத்துக்கு ஆளானார். வியாசருக்குப் புத்தி புகன்ற விஷ்ணு,
    //
    என்று எல்லாம் எழுதத் தொடங்கினால் மட்டும் எதிர்க்கிறேன். ///

    இதனை நீங்கள் கட்டுரை ஆசிரியரின் கருத்தென்றா எண்ணினீர்கள்?

    ///அறிவுபோல் அடர்ந்து எழும் அறியாமையினது வலியால் ஒருமுறை வியாசர் பொய் கூறி சிவாபராதத்துக்கு ஆளானார். வியாசருக்குப் புத்தி புகன்ற விஷ்ணு,
    “ஏனை யாரையும் அறத்துறந்து யாவரும் என்றும்
    பான்மையில் தியானஞ்செயப் படுமொரு முதல்வன்
    மேன்மை கூர்சிவன் ஒருவனே” எனவிரித் தன்றே
    நான்மறைத்தலை யாமதர் வச்சிகை நவிலும்
    என்று உரைத்ததாக சார்ந்தாசயம் என்னும் படலத்தில் ஆசிரியர் கூறுகின்றார். ///

    என்று மொத்தத்தயும் சேர்த்துப் படித்தே பொருள் கொள்ளவும், மேற்கோள் கொள்ளவும் வேண்டும்.

    அப்படி நோக்கும்போது, இது சைவ சித்த்டாந்தத்தின் அடிப்படையில் மாதவச் சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில் கூறியது. அதை முனைவர் அவர்கள் எடுத்து ஆண்டிருக்கிறார். அவ்வளவே. இதைத்தான் நான் கூறினேன். தங்களுக்கு சைவ சித்தாந்தக் கருத்துக்களில் உடன்பாடில்லாமல் இருப்பதில் தவறில்லை. அது இயல்பே ஆகும். ஆனால் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் என் கண்ணில் படும்படி யாரும் எழுதக் கூடாது என்ற போக்கில் அத தகு கட்டுரைகளில் எல்லாம் மீண்டும் மீண்டும் ஒரே கருத்தையே எழுதும்போதுதான் பிரச்சினை எழுகிறது. அவரவர் சித்தாந்தம் அவருக்கு என்று விட்டுவிட்டு போவதில் என்ன தவறு. தங்களுக்கு ஏற்புடைய சித்தாந்தத்தை மட்டுமே எழுதவேண்டும் என்று நினைப்பதும எழுதுவதும் நமது திருச்சிக்காரர் சொல்வதுபோல “ஆபிரஹாமிய சிந்தனை” அல்லவா?
    சித்தாந்த ரீதியிலான மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிமளித்து வரும் நமது மதத்தில் இப்படி இன்னமுமா மாற்று சித்தாந்தங்களை யாரும் எழுதவிடமாட்டேன் என்ற ரீதியில் எண்ண வேண்டும்? அது ஆக்க பூர்வமான செயல் அல்லவே.

    தங்கள் இளம் வயதில் இருக்கும் ஆர்வத்தை நான் முன்னமேயே மெச்சியிருக்கிறேன். அது ஆக்க பூர்வமாகப் பரிமளிக்க வேண்டும். அதற்காகத்தான் தங்கள் சித்தாந்தம் குறித்தோ பாணினியின் இலக்கியம் குறித்தோ எழுதுங்கள் என்றேன். ஏற்பது தங்களுக்கும் சமுதாயத்துக்கும் நலம் பயக்கும். காட்டாற்று வெள்ளம் அணை கட்டுவதால் நன்முறையில் விவசாயத்துக்குப் பயன்படுவதுபோல, வெற்று மறுமொழி விவாதங்கள் சிறந்த கட்டுரைகளாகப் பரிமளிக்கவேண்டும் (Transform) என்பதே எனது கருத்து. ஏற்காமை தங்கள் விருப்பம்.

  92. // இப்படி விவாதம் நடக்கையில் ஒரு சான்கயனோ, நையாயிகனோ, வேதாந்தியை பார்த்து நீ சமயவாதி என்றோ bias உள்ளவன் என்றோ சொல்லவில்லை – ந்யாயம் கற்றதால் தான் சங்கரரால் அற்புதமாக வாதிட முடிந்தது, வாதிட்டு வேதாந்தம் தழைத்திட செய்ய முடிந்தது

    அதலால் இங்கு நடக்கும் அனைத்தும் வெறும் சமய வாதம் என்று ஒதுக்கித் தள்ளி விட வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன் //

    சாரங், சமயவாதம் என்பது திட்டு அல்ல, வாதம் புரிபவரது மையக் கண்ணோட்டம் எது என்பதை வரையறூக்க பயன்படுத்தும் சொல்.

    சாங்கியர்களும், வேதாந்திகளும் மோதிக் கொண்டது தத்துவ/தரிசன தளத்தில் (metaphysical / philosophical). பிரபஞ்சம், அதன் காரண காரியம், ஜீவன், ஆத்மா, அவற்றிற்கிடையே உள்ள உறவு முதலிய அடிப்படை கேள்விக்ள் தான் அங்கு பேசப் படும். அங்கு தர்க்கம், நியாயம் அதன் உபகரணங்கள் எல்லாம் செல்லும்.

    ஆனால் இங்கு நடப்பது அப்பேர்ப்பட்ட ”விவாதம்” அல்ல. இது முழுக்க முழுக்க இரு சமயங்களின் (relgious sects) புராண, சம்பிரதாய, சமயக் கோட்பாடுகளை வைத்து மட்டுமே நடந்து கொண்டிருக்கும் ஒரு சமயவாத (theological) பூசல் மட்டுமே. தத்துவ விவாதம் என்ற தளத்திற்கே இது போகவில்லை. எனவே இதனை சமயவாதம் என்று நான் அழைத்தது நமது இந்து ஞான மரபுப் படியே மிகச் சரியான, துல்லியமான சொல் தான்.

    நீங்கள் சங்கரரைக் குறிப்பிட்டதால் இன்னொரு விஷயம்.

    சங்கரர் தனது தரப்பில் முன்வைத்தது முற்றிலும் சிந்தனாபூர்வமான தூய தத்துவம் மட்டுமே; அதில் சமயவாதம் கிடையாது, சமய மறுப்பும் கிடையாது (அதனால் தான் சைவம், வைணவம், சாக்தம் உள்ளிட்ட ஆறு சமயங்களையும், அது தவிர்த்த பூரண நிர்குண உபாசனையையும், உபாசனையே இல்லாத தூய ஞான மார்க்கத்தையும் என்று எல்லாவற்றையும் கூட தத்துவ ரீதியாக சங்கர வேதாந்தத்தால் ஏற்றுக் கொள்ள முடிகிறது). ஆனால் விசிஷ்டாத்வைதத்தில் தத்துவமும், சமயவாதமும் (விஷ்ணு – வைஷ்ணவம்) பிரிக்க முடியாதபடி கலந்தே முன்வைக்கப் படுகிறது. அப்போதே அது partly theology ஆகிவிட்டது. த்வைதத்தில் தத்துவம் மிகவும் குறைந்து theologyயே முழுக்க முழுக்கப் பேசப் படுகிறது – இந்த விஷயம் நான் சொல்வது அல்ல. இந்திய தத்துவங்களை ஆழப் பயின்ற நவீன அறிஞர்களான டாக்டர் ராதாகிருஷ்ணன், நடராஜ குரு போன்றோர் சொல்வது. இது அகாடமிக் விவாதம் என்று நீங்கள சொன்னதால் மேற்சொன்ன அகாடமிக் கருதுகோளை சொல்கிறேன். அவ்வளவே.

    மற்றபடி இது வேதாந்தப் பிரிவுகளை ஸ்தாபித்த மகோன்னதமான ஆசாரியர்கள் மீதான விமர்சனம் அல்ல. அவர்கள் அனைவருமே ஞானச் சுடர்கள், இந்து தர்ம புத்தெழுச்சியின் நாயகர்கள் என்றே நான் கருதுகிறேன்.

  93. ஜடாயு அவர்களே

    உங்கள் கருத்துக்கு நன்றி

    நான் அடிப்படையில் உங்களை சொல்லவில்லை – நீங்கள் சொன்னது சமயம் சார்ந்து மட்டுமே பார்க்க வேண்டாம் என்பது

    வேறு சிலர் சமயவாதம் பேசிக்கொண்டே நீ ஒரு கீழான சமயவாதி என்று saadinathu

    //
    சாரங், சமயவாதம் என்பது திட்டு அல்ல, வாதம் புரிபவரது மையக் கண்ணோட்டம் எது என்பதை வரையறூக்க பயன்படுத்தும் சொல்.
    //

    இரு சமயத்தை பற்றி வாதிடுவது ஒரு கீழான செயல் என்று என்ன வேண்டாம் என்று தான் என் கருத்து

    சமய வாதம் மோசம் என்றால் தத்துவ வாதமும் தான் – சங்கரர் சான்க்யத்தை மதம் என்று தான் சொல்கிறார் – சாங்கய மதத்தவன், நியாய மதத்தவன் இப்படி தான் போகிறது

    இங்கு முதலில் தொடங்கியது விவாதம் – இப்போது இன்றைக்கு பூசலாக உருவெடுக்கிறது என்பது உண்மை தான் இன்றைக்கு வெறும் பக்கம் தான் ரொம்பிற்று

    academic discussion

    //
    சங்கரர் தனது தரப்பில் முன்வைத்தது முற்றிலும் சிந்தனாபூர்வமான தூய தத்துவம் மட்டுமே; அதில் சமயவாதம் கிடையாது,
    //

    நீங்கள் சங்கரரின் பிரஸ்தான திரைய பாஷ்யத்தையும் ராமனுஜரின் பிரஸ்தான திரைய பாஷ்யத்தையும் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்

    விசிஷ்டாத்வைதம் வெறும் ஸ்ரீ பாஷ்யம் மட்டும் பார்த்தல் அதுவும் தத்துவ அலசல் தான் – பாஷ்யத்தில் பரமாத்மா நிர்ணயம் செய்தே தீருவார்கள் – இதில் சங்கரரும் ராமானுஜரும் எடுக்கும் முடிவு ஒன்றே.

    வைணவம் என்று சமயத்தின் விழிகளால் சங்கரரும் ராமானுஜரும் பாஷ்யம் செய்ய வில்லை அது வெறும் தத்துவ ரீதியில் போகிறது

    ராமனுஜரின் கீதா பாஷ்யமும் சரி சங்கரின் கீதா பாஷ்யமும் சரி – இரண்டுமே தத்துவ அடிப்படையில் தான் நகர்கின்றன – இங்கும் சங்கரர் யாரை பரமாத்மா என்கிறாரோ அவரையே தான் ராமானுஜரும் சொல்கிறார்

    ராமானுஜர் உபநிஷத் பாஷ்யம் செய்ய வில்லை அதனால் அதை ஒப்பிட முடியாது

    விஷிச்டட்வைதம் என்ற பெயரை ராமானுஜர் உபயோகிக்கவில்லை – அது பின்னால் வந்தது

    ராமானுஜர் பின்பற்றியது மதம் என்ற அடிப்படையில் வைணவமே – இதில் எந்த குழப்பமும் இல்லை

    வைணவம் என்ற பொது சமயம் வேறு – ஸ்ரீ வைஷ்ணவம் பின்பற்றும் விசிஷ்டாத்வைதம் கலந்த வைணவ சமயம் வேறு

    ராதாக்ருஷ்ணன் அவர்கள் சொல்வதில் நடைமுறையில் தவிறில்லை – ஏன் என்றால் எல்லா விசிஷ்டாட்வைதிகளும் இன்று ஸ்ரீவைஷ்ணவர்கள் தான் – அனால் the contrary need not be true – இதற்க்கு பாஷ்ய கர்த்தாவின் உரைகளை பார்த்தல் தெரியும் ஸ்ரீ பாஷ்யம், வேதார்த்த சந்க்ராஹா, வேதாந்த சாரா, வேதாந்த தீப, கீதா பாஷ்ய – இதில் எதிலுமே சமயம் சொட்டும் இருக்காது

    அவர் செய்த கத்யத் த்ரயம் மற்றும் நித்யபடியில் தான் சமயம் இருக்கும்

    Philosophy point of view என்று வந்தால் இரண்டுமே (அத்வைதமும், விசிஷ்டாட்விதமும்) போதாயன சுத்ரத்தை மற்றும் upanishad பின் பற்றியே தத்துவ விசாரம் மட்டுமே செய்கின்றன.

    மேலும் இது ஏன் இப்படி இருக்கிறது என்று அறிய இங்கு வரலாற்று சூழ்நிலைகள் பெரிதும் உதவுகின்றன

    i have very little knowledge about dwaitam – so cannot comment. i study advaitham from my advaithi Guru and study Vishistadwaitham on my own (with equal fervor and respect) – so i can reasonably say what i see in there.

  94. முனைவர் அவர்களே,

    நீங்கள் “அறிந்தவர் திருத்துக” என்று சொன்னது “தற்கால ஆசமன விதியில் திருமாலின் நாமங்களே வருகின்றன” என்னும் வாக்கியத்திற்கு. நீங்கள் கீழ்க்கண்டதற்கன்றோ “அறிந்தவர் திருத்துக” என்று சொல்லியிருக்கவேண்டும்! முடிவு கட்டிவிட்டது போல சொல்லியிருக்கிறீர்கள் இதோ:

    //
    காலச்சூழ்நிலைகளின் காரணமாகச் சமயப் புறவொழுக்கங்களில் மாறுதல்கள் அவ்வப்பொழுது நிகழ்கின்றன. சிவஞானமுனிவர் அத்தகைய மாற்றங்களைக் கண்டு அவற்றை இப்புராணத்தில் பதிவு செய்து வைத்துள்ளார்.
    //

    இப்படி முடிவுகட்டி எழுதினால் தான் கண்டனங்கள் வரலாம் என்றேன். அதையும் நான் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்ததாக நீங்கள் கொள்கிறீர்கள். அப்படி அல்ல, கோபப்பட்டு எவரேனும் எழுதியிருக்கலாம் என்று தான் சொன்னேன். நான் எந்த மறுமொழியிலும் உங்களைக் கண்டனம் செய்தகாகக் காட்டமுடியாது என்பது உங்களுக்கே தெரியும். இதற்கு மேல் இதைப் பற்றி விமர்சிக்காதீர்கள் தயவு செய்து.

    இந்தக் கட்டுரையில் இருக்கும் சாரமான கருத்தைச் சொல்லுவதற்கு, தற்காலத்து வைதிகர்களின் சந்தியைப் பற்றி நீங்கள் ஏதும் கூறியிருக்கத் தேவையில்லை. மேலும், சுமார்த்தம் வேறு சைவ சித்தாந்தம் வேறு. இவ்விரண்டு பிரிவினர்களுக்கும் சடங்குகளில் ஒரே விதி இருக்கும் எந்பது சாத்தியமல்ல.

    இது திரு உமாசங்கருக்கும் உங்களுக்கும்–

    // சித்தாந்த ரீதியிலான மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிமளித்து வரும் நமது மதத்தில் இப்படி இன்னமுமா மாற்று சித்தாந்தங்களை யாரும் எழுதவிடமாட்டேன் என்ற ரீதியில் எண்ண வேண்டும்? அது ஆக்க பூர்வமான செயல் அல்லவே. //

    “வியாசர் அஜ்ஞானத்தின் காரணமாகப் பொய் கூறினார்” என்பதற்கும் எந்த சித்தாந்த விஷயத்திற்கும் சம்பந்தம் இல்லை. சித்தாந்தத்தை விளக்க இதைச் சொல்லவும் தேவையில்லை. வேதத்தைத் தொகுத்துத் தந்த பகவான் வேத வியாசர் வைதிக மதத்திற்கு முக்கியமான ஒரு தூண் ஆவார். “வைதிக மதம்” என்று சொல்லிவிட்டு, அவரை மட்டம் தட்டுவதற்கு நீங்கள் கூறும் “கிளை நுனியிலிருந்து அடி மரத்தை வெட்டும்” த்ருஷ்டாந்தம் நன்றாகப் பொருந்தும்.

    வியாசரை மட்டம் தட்டி எழுதுவது கருத்துச் சுதந்திரமானால், சிவபெருமானை “ஊளையிடும் பைத்தியக்காரன்” என்று கூறுவதும் கருத்துச் சுதந்திரமே. அதையும் “ஒரு புதிய பார்வை; எனது சொந்தப் பார்வை” என்று ஒருவர் கட்டுரை எழுதினாரே? அதை மாத்திரம் ஏன் எதிர்த்தீர்கள்? அவர் “ஹிந்து ஓப்பன் சோர்ஸ்” என்று கூற அவரைக் கண்டித்தீர்களே? அவருக்கு மாத்திரம் அப்படிச் சொல்லக் கருத்துச் சுதந்திரம் உண்டோ?

    ஸ்ரீவைஷ்ணவர் யாராவது ஒருவர் தமது கட்டுரையில் “சிவன் பிரமன் தலையை அறுத்ததனால் பிரம்ம ஹத்தி தோஷம் பெற்றுப் பல காலம் கண்ணீர்விட்டு பிரம்ம கபாலத்தை வைத்துக் கொண்டு பிக்ஷை எடுத்தார். திருமால் சிவபெருமானுடைய நிலையைக் கண்டு கருணையுற்று சிவபெருமானுக்கு ஐயமிட்டுக் கபால சாபத்தினின்று விமோசனம் அளித்தார்.” என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தால் நீங்கள் ஒன்றும் கூறாமல் இருந்திருப்பீர்களா என்பதை மனசாட்சியைத் தொட்டுச் சொல்லவும்.

  95. ஜடாயு அவர்களே,

    சங்கரருடைய அத்வைதத்தைப் பற்றியும், விசிஷ்டாத்வைதத்தைப் பற்றியும், மத்வருடைய சித்தாந்தத்தைப் பற்றியும் நீங்கள் கூறியிருப்பதிலிருந்து, நீங்கள் எந்த பாஷ்ய நூலையும் மூலத்திலோ, மொழிபெயர்ப்பிலோ படித்ததே இல்லை என்பது தெரிகிறது. அப்படிச் செய்திருந்தால் நீங்கள் கூறும் “அகாடெமிக் ஆராய்ச்சி முடிவுகள்” தவிடுபொடியாகிவிடும் என்று மட்டும் கூறுகிறேன். சங்கரருடைய கீதா பாஷ்யத்தின் அவதாரிகையை மாத்திரம் படித்துப் பாருங்கள். இது இரண்டே பகக்ங்களே.

  96. // த்வைதத்தில் தத்துவம் மிகவும் குறைந்து theologyயே முழுக்க முழுக்கப் பேசப் படுகிறது //

    இது முற்றிலும் தவறான புரிதலே. த்வைத பாஷ்யங்களை வாசித்துப் பார்த்தால் தெரியும். மேலும், த்வைத-விசிஷ்டாத்வைத ஆசாரியார்கள் பலர் அத்வைதியர்களை வாதப்போரில் ஜயித்து அவர்களைத் தமது சம்பிரதாயத்திற்குள் கொண்டு வந்தனர் என்பதற்குப் பல நூற்குறிப்புகளும் சரித்திரச் சான்றுகளும் உள்ளன. வெறும் theology-ஐ வைத்து த்வைதிகள் அத்வைதிகளுடன் வாதப்போர் நடத்தினர் என்பது சாத்தியமே இல்லை. Theology ரீதியில் வாதப்போர் நடந்தது அப்பைய தீட்சிதர் காலத்திலிருந்து தான்.

    ஜடாயு சார், இவ்விஷயங்களைப் பற்றிய awareness இல்லாமல், நீங்கள் வரலாற்று ஆராய்ச்சி, சமயப் பிணக்கு பற்றிய ஆராய்ச்சி இவற்றில் இறங்குவது எனக்கு விந்தையாக இருக்கிறது. சிறிது காலம் contemporary academic view-ஐ ஒரு புறம் தள்ளி வைத்து, சங்கரர் காலம் தொடங்கி அப்பைய தீட்சிதர் காலம் முடிய வேத இலக்கியங்கள், பாஷ்ய நூல்களைப் புத்தகசாலையிலிருந்து படித்து original research செய்ய வேண்டும் என்பது எனது பரிந்துரை. இதைச் செய்து தான் நான் தற்போதைய நிலைக்கு வந்துள்ளேன். மேலும், இத்துறையில் academic consensus என்று ஒன்று இல்லை என்பது ஒரு wide spectrum-ஐ அலசிப் பார்த்தாலேயே தெளிவாகும்.

  97. தலபுராண இலக்கியங்களின் இயல்புகள் குறித்து முதலில்விளக்கிவிட்டே இத்தொடரைத் தொடங்கினேன். புராணக்கதைகள் கற்பனையே. சில உண்மைகளையும் கோட்பாடுகளையும் புரிய வைக்க அவைகூறப்பட்டுள்ளன. தமிழ்த்தலபுராண்ங்கள் அகில இந்தியப் பார்வை உடையன.இதில் மனிதர்களோடுவிலங்குகள்,தேவர்கள்,கடவுளர் ஆகியோரும் பாத்திரங்களாக உள்ளனர். இந்த இயல்புகள் முதற் கட்டுரையில் விரிவாக உள்ளது. திருவிளையாடற்புராணம் தமிழ்ச்சுவை அறிய விரும்புவோரும் சைவர்களும் விரும்பிப் படிக்கும் புராணம். அதில் இறைவன் அம்பிகைக்கு ஆகமத்தைப்போதித்தான் என்றும் அம்பிகை வேறு கவ்னத்தில் இருந்தாள் என்றும் அதனல் இறைவன் அவளைச் செம்படவப் பெண்ணாகப் பிறக்குமாறு சபித்தான் என்றும் தாய் இவ்வாறு சபிக்கப்படுவதற்குக் காரணமான வேதாகம ஏடுகளைக் குழ்ந்தைகளான் கணபதியும் குமரனும் கிழித்துக் கடலிலே எறிந்து விட்டார்களென்றும், அவை மீன்களாகி விட்டன என்றும், கணபதியும் முருகனும் செம்படவச் சிறார்களாகப் பிறந்தார்கள் என்றும்,ஆகமம் படிக்கும் இடத்தில் இடையூறாகப் பிள்ளைகளைப் போகவிட்ட நந்தியைத் திமிங்கிலமாகப் பிறக்கச் சபித்தான் என்றுமொரு கதை வலைவீசின படலத்தில் வருகின்றது. வேதாகம்ங்களை எத்தகைய மனஒருமையுடன் கற்க வேண்டும் என்ற கருத்தை விள்க்க வந்த இந்தக் கதை, கற்பனை எனக் கொள்ளாவிட்டால் பல குழப்பங்கள் ஏற்படும். சிவனுக்குச்சத்தி அபின்னை, முருகன்வேறுசிவன் வேறு அல்ல. சிவனின் ஐந்து முகத்தோடு அதோமுகமும் கூடியவன் அறுமுகச் சிவன்., கணபதி, பூதகணங்களுப் பதியான சிவனே. சிவன் தன்னைத்தானே சபித்துக் கொண்டானோ என்ற குழ்ப்பத்தை விளைக்கும் இந்தக் கதையைக் கச்ண்டு சைவர்கள் மருண்டு,அரண்டுஅலறுவதில்லை. புராணக்கதைகள் எடுத்துக் கட்டுக்களேஒழிய பிரமாணங்கள் அல்ல. புராணங்களையே பிரமாணமாகக் கொண்ட மதங்களும் உண்டு. சைவத்தைப் பெள்ராணிகம் என ஒதுக்கிய பாஷ்யகாரர்களும் உண்டு. கல்வியிற் பெரியவர் வியாசர். அதிகக்கல்வி பணிவைத் தருவதற்கு மாறாக அகம்பாவத்தைத் தரும். புகழ்ச்சிமண்டையை வீங்கச்செய்யும்.அது இறுதியில் நாத்திகத்திற் செலுத்தும். இக்கோட்பாட்டை விளக்குமொரு கற்பனைப் பாத்திரம் வியாசர் என்பது. இராமன், அகலிகை, சீதை தீக்குளித்தல் போன்ற சம்பவங்களைக் குறித்து எத்துணை கதைகள் வந்துள்ளன்? இக்காலத்தில் தோன்றிய இக்கதைகளில்,கதைநிகழ்ச்சிகளுக்கு உரிய காரணங்கள், கதைமாந்தர்களின் செயல்கள் போன்றன் விவாதிக்கப்ப்டுகின்றனவே அன்றி, எங்கள் கடவுளிராமனை எப்படி இப்படிச் சொல்லப் போகும் என்று முரணுவோரை இலக்கிய உலகம் சட்டை செய்யாது. ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வழ்க்கிலிருந்த மிகுந்த பயந்தரும் தமிழ் இலக்கியவகை, சமய இல்க்கியம் என்றதொரு காரணத்தால் தமிழ்னாகிய இந்துவிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கியத்தின் சிறப்பை ஓரளவாவது இந்துத்தமிழ்னுக்குச் சுட்டிக் காட்டுவதே என் நோக்கம். வேதாகம,ப்தினெண்புராணக் கருத்துக்களை,வடமொழிச்சுலோகங்களைச் சொல்லி மருட்டிவிரட்டிவிடாமல், தமிழ்ச்சுவையோடு அனுபவிக்கத் தந்த பெரியோர்களைச் செம்மொழித் தமிழன் நன்றியோடு நினைத்தல் வேண்டும். . . .

  98. எனக்கு நாராயணன் என்றசொல் சிவனைக் குறிக்கும் என்ற வியாகரண அமைதியை விளக்கிய பெரியவரிடம் சென்று, சொக்கநாதரிடம் “கறைகெழு மிடற்றோய் நின்றன் கவிக்குற்றம் சில்வாழ்நாட் சிற்றறிவுடைப் புலவர் சொன்னால் ஆர் உனை மதிக்கவல்லார், இவ்விகழ்ச்சி நின்னதல்லதை எனக்கு யாதாம்” எனத் தருமி முறையிட்டதைப்போல, “ஐயா, என்னை வியாகரண அறியா மூடன் , என்னோடு சேர்த்து உங்களையும் அவ்வாறு சிலர் பழித்து விட்டார்களே” என்றேன்.
    அதற்கு அவர் “தம்பி, என்னுடைய விளக்கத்தை நான் நிலைநாட்டுவது ஒருபக்கம் இருக்கட்டும். நீ வெறுத்து அவர்கள் மேலிருக்கும் சலிப்பில் விஷ்ணுவைக் குறித்துத் தவறாக ஏதும் சொல்லிவிடாதே. ஈசர் விஷ்ணுவை சேவைசெய்வோர்தமை இகழ்வோர் ஏழ்நரகில் அழுந்துவர் என்று அருணகிரிநாதப் பெருமான் கூறியிருக்கிறார். ஏனெனில் அவர்கள் விஷ்ணுவுக்குச் சேவை செய்வோர்போல் தோன்றுகிறது. விஷ்ணு வேறு யாரும் அலர்; சிவபரம்பொருளேதான் விஷ்ணு.
    திருஞானசம்பந்தர் சிவபுரத் திருப்பதிகத்தில்,
    “அலைகடல் நடுஅறி துயிலமர் அரியுரு வியல்பரன் உறைபதி
    சிலைமலி மதில்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே” என்று அருளியுள்ளதையும், அதற்குப் பொருள் திருப்பாற்கடலின் நடுவே, யோகநித்திரை மேவியுள்ள திருமாலின் உருவம் தாங்கிக் காத்தல் தொழிலைப் புரியும் இயல்பினைக் கொண்ட சிவபெருமானதுதிருச்சிவபுரத்தை தியானம் செய்பவர், முத்தித் திருவாகிய திருமகளொடு வீட்டின்பம் எய்தி இன்புறுவார்கள் என்பதை நீ அறிவாயே!
    “சுருதி வானவனாம் திருநெடுமாலாம்” என்று கங்கைகொண்ட சோளேச்சரத்தானைத் திருமால் என்று பாடியுள்ளதையும், திருமந்திரம், “அயனொடு மால்நமக்கன்னிய மில்லை” (107) எனக் கூறியதையும் மனத்தில் கொள்க
    சுவேதாச்வரம் என்னும் உபநிடதம் எல்லாப்பெயரும் சிவனைக் குறிக்கும், பெரியோருக்குச் செலுத்தும் வணக்கம் முடிவில் சிவனைச் சென்று சாரும் என்று கூறும் வேதம் பொய்ப்பதில்லை. என்று கூறி, நாராயணன் முதலிய நாமங்களின் பொருளையும் கூறியருளினார்.
    அவைவருமாறு:
    1.நரனது இருதயத்தில் இருப்போன். நரன் – ஆன்மா. சிவபெருமான் ஆன்மாவின் இதயத் தாமரையில் இருப்போன் என்பது – சைவம் கூறும் முத்தியாகிய சுத்தாத்வைதத்தைச் சொல்கின்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்,”புத்தி குஹாயாம் ஸர்வாங்கஸுந்தரம் புருஷரூபமந்த்ர்லக்ஷ்ய மித்யபரே|சீர்ஷாந்தர்க்கதமண்டலமத்யகம் பஞ்சவக்த்ரமுமாஸ்ஹாயம் நீலகண்டம்ப்ரசாந்த மந்தர்லக்ஷ்ய மிதிகேசித்| அங்குஷ்டமாத்ர புருஷோந்தர் லக்ஷ்மித்யேகே|” என்று கூறுகின்றது. பஞ்சப்ரஹ்மோபநிஷத், “சர்வேஷாம் ஜகநம்பரம் ஈசாநம்பரமம், வித்யாத்ப்ரேரகரம் புத்தி சாக்ஷிணம்” என்று கூறுகிறது.இதற்குப் பொருள் வடமொழி வல்ல உன் நண்பரே அறிவார். இதுபோல பல உபநிடதங்கள் மேற்கோள் உள்ளன.
    2. நாரம் –நீர். இது சிவனுடைய அட்ட மூர்த்தங்களில் ஒன்று அதிலிருக்கும் சிவன் நாராயணன் எனப்படுவான்.
    3. சிவசக்தியாகிய நாராயணிகொண்ட புருஷ கோலமே நாராயணன்’ ‘நாராயணீ ஸஹசராய நம: சிவாய: என காசிக்காண்டத்தில் கூறப்பட்டிருக்கின்றது. நாராயணானவிஷ்ணுவும் அம்பாளும் அபேதமானப்டியால் அம்பாளுக்குநாராயணிஎன்று பெயர். நாராயணன் என்ற சொல்லைப் பகுபதமாகக் கொண்டால் தான் நாராயணி என்ற பெண்பாற்சொல் வரும். இதற்கு உரிய விதியை முன்னமேயே கொடுத்துள்ளேன். இதனை ஏற்றுக் கொள்ளாதபோனால் பாஸ்கரராயர் போன்ற பெரியோர்களுக்கும் வியாகரண அறியாமை கூறப்பட்டுவிடும். இலலிதா ஸ்ஹஸ்ரநாமத்தில் அம்பாளை கோவிந்தரூபிணி, முகுந்தா, விஷ்ணுரூபினி முதலியநாமங்களில் தோத்திரிக்கப்பட்டுள்ளது.அம்பாளுக்கும் சிவனுக்கும் உள்ள உறவு வெளிப்படை.
    4. நரன் என்றால் ஜீவனுக்குப் பெயர். அயனம் என்றால் அடையுமிடம்,கடைசியில் போய்ச் சேருமிடம். (நாந்ய: பந்த்தா வித்யதேSயநாய) இந்த அர்த்தத்தில் சிவனைக் குறிக்கும்.”நராணாம் அயனம் யஸ்மாத் நாராயண: ச்ம்ருத| (ப்ரம்ஹவைவர்த்தம்)
    5. “ருத்ரஹ்ருதயோபநிஷத்,”ருத்ரோநர உமாநாரீ தஸ்மை தஸ்யை நமோநம| என்கிறது. நாரி பாகன் நாராயணன். சிவன்.
    6.நாராயண சப்தம் 28 வகையாகச் சிவபக்ஷஞ் சமர்ப்பிக்கப்ப்டுதலை மல்லிகார்சுநாராத்தியர் இயற்றிய சிவபரகேசவாதி நாமநிர்வசன்ம் எனும் நூலில் காணலாம். வடமொழி விற்பன்னருக்கு இந்தநூல் அரிதன்று.
    7. வாஸூதேவன் –வஸூ – தனம்.வாஸூ –குபேரன். குபேரன் எந்தத் தேவனாற் பிரகாசிக்கின்றனனோ அந்தத் தேவன் வஸூதேவன். அவன்சிவன் குபேரன் சிவனுக்கு நண்பன் ஆதிசங்கரரின் சிவானந்தலஹரி பாடல் 26 காண்க.. வஸதி, வாஸூ –பிருதிவி. சிவனுடைய அட்டமூர்த்தங்களில் ஒன்று. அதிலிருக்கும் சிவன் வாஸூதேவன்.
    8. ஸங்கர்ஷணந் யாவையும் இழுத்துக் கொள்வோன் ஸங்கர்ஷணன்.சருவ சங்கார மகா உருத்திரனாகிய சிவன்.
    9. ப்ரத்யும்நன். ப்ர-மேலான . துயும்நன் – தேவன். சிவநாமங்களில் ஒன்றானமகாதேவன்.
    10. ஹரி – சூரியன். சூரியன் சிவனுடையாட்டமூர்த்தங்களில் ஒன்று.அவனுக்கு அந்தர்யாமியாக இருந்து ஒளியூட்டும் சிவன். சிவசூரியன். ஹரி –வாயு. வாயுவும் சிவனுடைய அட்டமூர்த்தங்களில் ஒன்று. ஹரி – பாவங்களை ஹரிப்பவன். ஹரி.. இதன் விளக்கம் அதர்வணவேத வேத சரபோபநிஷத்தில் உள்ளது.”பஹூநிபுண்யா” எனத்தொடங்கும் அப்பகுதி மிகநீண்டதாகலின் கொடுக்கவில்லை.
    11. கோவிந்தன் -விருஷபாரூடன் காளை வாகனன் என்பது பொருள் .
    இன்னும் இவைபோலப் பல எடுத்துக் காட்டுக்கள் காட்டியருளினார். தம்பி,” தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது” உனக்கு அது வாய்த்துள்ளது. தாழ்வெனும் தன்மையோடு நீ உனக்குத் தெரிந்த வைதிக சைவத்தைப் பற்றிப் பேசு எழுது என்று வாழ்த்தியருளினார். அந்தப் பெரியவர் வியாகரணத்தைப் பார்த்தறியார் என்ற “புகழ்மொழி ‘பூமராங் ஆன திருப்தி எனக்கு ஏற்பட்டது. ’

  99. மிகச்சிறப்பாக வாத விவாதங்கள் நிகழ்ந்திருக்கக் காண்கிறேன். இவற்றினூடாக நான் பல்வேறு விஷயங்களை அறியமுடிந்திருக்கிறது. சந்தியாவந்தனம் என்று தொடங்கி ஏதேதோ பேசப்பட்டிருக்கிறன. சந்தியாவந்தனம் பற்றி அதனால் நான் அறிந்ததை குறிப்பிட விரும்புகிறேன்.
    சிவாச்சார்யார்களைப் பொறுத்த வரையில் வைதிகசந்தி, சைவசந்தி என்ற இரண்டும் இருக்கிறது. அவர்கள் இவ்விரண்டையும் அனுசரிக்க வேண்டியவர்கள் ஆகின்றனர். அகோரசிவாச்சார்யார் பத்ததியிலும் பல்வேறு ஆகமங்களிலம் “வைதீகந்து பரோஹிர்த்வா பச்சாத் சைவீம் சமாச்சரேத்” என்று சொல்லப் பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

    பராசக்தியே சந்தியாவாக இருக்கிறாள் என்பது எனது அபிப்ராயம். அத்தேவியை வைஷ்ணவர்கள் விஷ்ணுவாகவும் சைவர்கள் பரமேஸ்வரனாகவும் பூஜிக்கிறார்கள். வைதீக சைவர்கள் காயத்திரியோடு பஞ்சாட்சரமும் ஜபிப்பதுண்டு எனவும் கூறப்படுகிறது.

    எப்படி என்றாலும் வைதீக சந்தியாவந்தனம் சிவாச்சார்யார்களுக்கும் மிகப்பிரதானம். அதனைச் செய்த பின் சைவசந்தியையும் அவர்கள் செய்ய வேண்டும் என்பதே வழக்கு. சாதாரணமாக மூன்று வேளைகளிலம் நியமம் தவறாமலும் ஒழுங்காகவும் சந்தியாவந்தனம் செய்வதே மிகவும் சவாலாகிப் போன இக்காலத்தில் இவ்வாறு இருச ந்தியாவந்தனங்களையும் செய்ய இயலுமோ என்பது சந்தேகமே. ஆனால் இவ்வாறு இரண்டு சந்திகளையும் செய்து வந்த சிவாச்சார்யார்கள் பற்றி அடியேன் அறிந்திருக்கிறேன்.

    சைவசந்தியை ‘ஆகமசந்தி’ என்றும் சில நூல்கள் கூறுகின்றன. இச்சந்தி செய்யும் சிவாச்சார்யார்கள் நள்ளிரவிலும் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பது விதி. (இவர்களுக்கு நான்கு முறை சந்தி செய்ய வேண்டும்) எது எப்படியாகிலும் வழமையான சந்தியை மூன்று வேளை செய்வது அனைத்து அந்தணர் கடன். அதற்கு அப்பால் இவற்றைச் செய்து கொள்ளலாம். நடைமுறையில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்பது தான் கவனிக்கத்தக்கது.

    ஆத்மார்த்தமாக சிவபூஜை செய்ய வல்ல குருமார்கள் அத்தோடு இணைந்ததாய் சைவசந்தியையும் செய்வதை பார்க்கலாம். எது எப்படி ஆகிலம் சாதாரணமாக ‘சந்தியாவந்தனம்’ என்றால் திரிகாலம் செய்ய வேண்டிய (அனைத்து உபநயனகாரரும் செய்யவேண்டிய) வழமையான சந்தியாவந்தனத்தையே அது குறித்து நிற்கும் என்பது சிறியேனுடைய தாழ்மையான அபிப்ராயம்.

  100. // சங்கரருடைய அத்வைதத்தைப் பற்றியும், விசிஷ்டாத்வைதத்தைப் பற்றியும், மத்வருடைய சித்தாந்தத்தைப் பற்றியும் நீங்கள் கூறியிருப்பதிலிருந்து, நீங்கள் எந்த பாஷ்ய நூலையும் மூலத்திலோ, மொழிபெயர்ப்பிலோ படித்ததே இல்லை என்பது தெரிகிறது. //

    கந்தர்வன்,

    புகழ்பெற்ற தத்துவப் பேராசிய அறிஞர்களுடையது, எனது கருத்து அல்ல என்று சொல்லித் தான் வேதாந்தப் பிரிவுகளில் உள்ள philosophy – theology அம்சங்களைப் பற்றிய கருத்தை நான் எழுதினேன்.. இந்த முடிவுகளுக்கு அவர்கள் எப்படி வந்தனர் என்பதை அறீய நீங்கள் அவர்களது நூல்களைப் படிக்க வேண்டும்.. ஒருசில empirical உதாரணங்களைக் காட்டி என்மீது பாயவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்..

    சங்கரது கீதா பாஷ்யம் மற்றும் உபனிஷத் பாஷ்யங்களில் சிலவற்றை மூலமும் மொழிபெயர்ப்புகளுமாக நான் பயின்றிருக்கிறேன். ராமானுஜரின் வேதார்த்த சங்க்ரஹத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

    நீங்கள் சொல்வது போன்று எல்லா பாஷ்யகாரர்களின் எல்லா உரைகளையும் சென்று படிப்பது நடைமுறையில் இயலாத காரியம். மேலும் ஓரளவுக்கு மேல் அதில்புக எனக்கு முழு ஆர்வமோ, நேரமோ இல்லை.
    எனது ஆர்வங்கள் இலக்கியம், தத்துவம், வரலாறு, சமூகவியல் என்று பன்முகமானவை. ஒவ்வொரு தத்துவப் பிரிவின் மையக் கொள்கைகளையும் விளக்கி நான் மேற்குறிப்பிட் அறிஞர்கள் போன்றவர்கள் present செய்திருக்கிறார்கள். நான் இயங்கும் தளத்தில் அதுவே போதுமானது.

    அவர்கள் கண்ணோட்டத்தை மறுதலித்து நீங்கள் விவாதிக்க வேண்டியது அவர்களிடம், என்னிடம் அல்ல.

    // மேலும், இத்துறையில் academic consensus என்று ஒன்று இல்லை என்பது ஒரு wide spectrum-ஐ அலசிப் பார்த்தாலேயே தெளிவாகும். //

    consensus இல்லை தான், ஆனால் பொதுவான சில கருதுகோள்கள் உள்ளன.
    உதாரணமாக, ராமானுஜரும்,மத்வரும் சங்கரரது பாதையிலேயே கணிசமான தூரம் சென்று, பிறகு ஒரு கட்டத்தில் தான் பிரிகிறார்கள், அடிப்படையிலேயே அல்ல என்று நவீன தத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள்.ஆனால் சம்பிரதாயமான சமயவாதிகள் இதை என்றுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மற்ற தரப்பு முற்றிலும் பொய் என்பதை நோக்கியே அந்த வாதம் இருக்கும்.

    உதாரணமாக, மாத்வ சம்பிரதாயத்தில் மயில்ராவணனே சங்கரராகப் பிறந்து தனது கொள்கைகள் மூலம் மக்களைக் குழப்பினான் என்று கூட ஒரு புராணக் கதை உள்ளது :))) இப்படிப் பல உதாரணங்கள் காண்பிக்கலாம் – சைவ சமயம், சித்தாந்தம் முழுவதுமே கௌதமர் குழப்படியாக உருவாக்கிப் பரப்பியது என்று வேதாந்த தேசிகர் (??) தமது நூலில் ஒரு பாடலில் சொல்லி அதைப் புறந்தள்ளுகிறார். ஒரு முழுமையான தத்துவத் தரப்பை இந்த ரீதியில் புறந்தள்ளுவது அப்பட்டமான theology மட்டுமே – அல்லவா?

    ஆனால் சங்கரரது அணுகுமுறை, அறிதல்முறை (epistemology), உபகரணங்கள் ஆகியவற்றை பின்வந்த எல்லா வேதாந்திகளும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதே வரலாற்று உண்மை. But with all such rigid theological positions, you just hit a stonewall there, you can not move on from that point at all.

    இந்த perspective ஐ நமக்கு நவீன தத்துவ அறிஞர்கள் *மட்டுமே* அளிக்க முடியும், எந்தவித சம்பிரதாய நோக்கும் அத்தகைய பார்வையை அளிக்கவே முடியாது, because they are all shrouded with the theological pre-conclusions.

    மீண்டும் சொல்கிறேன். நீங்கள் விவாதிக்க வேண்டியது அந்த தத்துவ அறிஞர்களுடன், என்னுடன் அல்ல.

  101. திரு ஜடாயு அவர்களே,

    சங்கரர் தமது கடவுட்கொள்கையைப் பற்றியும், theology பற்றியும் விரிவாகவே கீதையில் கூறியுள்ளார் (ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பதின்மூன்றாவது, பதினைந்து முதல் பதினேழு வரியிலான அத்தியாயங்களுக்கு அவரிட்ட பாஷ்யத்தைப் பார்த்தாலேயே தெரியும்). மேலும், கீதா பாஷ்ய அவதாரிகையிலேயே சங்கரர் என்ன theology-ஐச் சேர்ந்தவர் என்பது புலப்படும். உங்கள்மீது பாய்வது எனது எண்ணமன்று. உங்கள் புரிதலில் ஒரு மிகப்பெரிய defeciency இருப்பதைச் சுட்டிக்காட்டினேன் — நீங்கள் தீர ஆராய்ந்து நன்மை பெறவேண்டும் என்பதற்காக.

    //
    இந்த perspective ஐ நமக்கு நவீன தத்துவ அறிஞர்கள் *மட்டுமே* அளிக்க முடியும், எந்தவித சம்பிரதாய நோக்கும் அத்தகைய பார்வையை அளிக்கவே முடியாது, because they are all shrouded with the theological pre-conclusions.
    //

    நீங்கள் கூறும் ஆராய்ச்சியாளர்களுக்கும் சில political agenda இருப்பதை நீங்கள் ஏனோ காணத் தவறுகிறீர்கள். இருப்பதை அப்படியே சொன்னால் அதைப் படிப்பவர் மிகக் குறைவானவரே. “சமரசம், அரியும் சிவனும் ஒண்ணு” என்று சொன்னால் தான் தற்காலத்து மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். நீங்கள் கூறும் ஆராய்ச்சியாளர்கள் செய்திருப்பதும் அதுதான் — தேவைப்பட்ட பாகங்களைத் தமக்குச் சாதகமாக திரித்தும் மாற்றியும் twist செய்தும் கூறுவார்கள். உதாரணமாக, “யோ யோ யாம் யாம்..” என்று தொடங்கும் கீதா சுலோகம் “சமரசத்தை போதிக்கிறது” என்று நீங்கள் நடுநிலையாளர்களாக அபிமானிக்கும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். இப்பகுதிக்கு (கீதை 7.20-7.23) சங்கர பாஷ்யமும், அதற்கு டீகை இட்ட ஆனந்தகிரி என்னும் பிராசீன அத்வைதியரும், மதுசூதன சரசுவதி என்னும் பிராசீன அத்வைதியரும் என்ன கூறுகிறார்கள் என்பதை அவர்கள் நூல்களிலிருந்து தெளிவாகத் தெரிந்துக் கொள்ளலாம். சங்கரரின் கீதா பாஷ்யத்தையும், மதுசூதன சரசுவதியின் கூடார்த்த தீபிகையையும் ஆங்கில மொழிபெயர்ப்போடு இராமகிருஷ்ணா மிஷன் காரர்கள் பதிப்பித்துள்ளனர். வாங்கிப் படிக்கவும். உங்களுக்கு அவகாசம் இல்லையானால், இதில் என்ன சொல்லியிருக்கிறது என்பதன் சாரார்த்தம் வேண்டுமானால், இப்புத்தகத்தைப் பார்த்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

    வரலாற்று ரீதியில் ஆராய்ச்சி செய்வதை ஆமோதிக்கும் நீங்கள், அவருடைய பாஷ்ய நூல்களையே authentic sources ஆக வைத்துக் கொள்ளவேண்டும். அந்நூல்களுக்குத் தான் unbroken tradition of sub-commentaries, vaarttikas, and Tikas by various 10th-13th C advaitins exist. பாஷ்ய நூல்கள் என்று சொல்வது பிரஸ்தானத்ரயங்களுக்கான பாஷ்யங்கள். பிற்காலத்தில் என்ன நடந்தது, எது எப்படி ஆனது, அவர் இயற்றியதாகச் சொல்லப்படும் துதி நூல்கள் பற்றிய விசாரம் எல்லாம் வேறு விஷயம். அக்காலத்தில் அத்வைத-த்வைத-விசிஷ்டாத்வைத வாதங்களில் அம்மூவருள் theology பற்றிய எந்த வித்தியாசமும் இல்லை. வேதாந்த தேசிகர் தாத்பர்ய சந்திரிகையில் (கீதை 18.66-க்கான விளக்கத்தில் கடைசி வரி) இதைக் கூறுகிறார்.

    அதற்கப்புறம்,

    // உதாரணமாக, மாத்வ சம்பிரதாயத்தில் மயில்ராவணனே சங்கரராகப் பிறந்து தனது கொள்கைகள் மூலம் மக்களைக் குழப்பினான் என்று கூட ஒரு புராணக் கதை உள்ளது :))) //

    நீங்கள் கூறும் “மணிமஞ்சரி” புத்தகம் ஒரு கீழ்த்தனமான காவிய நூல். இதை mainstream மத்வர்கள் யாரும் ஏற்பதில்லை. எந்த மத்வ ஆச்சாரியாரும் அப்படி சங்கரரைப் personal-ஆக attack செய்ததில்லை. Mainstream மத்வர்கள் சங்கரரை மிகவும் மரியாதையுடன் தான் பேசுகிறார்கள். dvaita.org-ஐப் போய்ப் பாருங்கள்.

    இதே போல், “அநந்தானந்தகிரி” சங்கரவிஜய நூலில் (டீகைகாரராகிய ஆனந்தகிரியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) சங்கரரும் அவர் சிஷ்யரான பத்மபாதரும் வியாசரை விவாதத்தில் ஜயிக்க முடியாமல் அவரை அடித்து நொறுக்கினார் என்று இருக்கிறது. எவர் எவரோ கடுப்பில் எழுதி வைத்திருப்பதை, அந்த எழுத்தாளர் சேர்ந்த குழுவின் mainstream view-ஆகக் கருதமுடியாது.

    இப்பொழுது தேசிகர் விஷயத்திற்கு வருவோம்.

    // சைவ சமயம், சித்தாந்தம் முழுவதுமே கௌதமர் குழப்படியாக உருவாக்கிப் பரப்பியது என்று வேதாந்த தேசிகர் (??) தமது நூலில் ஒரு பாடலில் சொல்லி அதைப் புறந்தள்ளுகிறார். //

    நீங்கள் கூறும் நூல் “பர மத பங்கம்” என்னும் தலைப்பை உடையது. இவர் குறிப்பிடும் புராண நிகழ்வு உண்மையிலேயே authentic ஆக உள்ளதா, இல்லை தேசிகரே கட்டுக்கதை தொடுக்கிறாரா என்பதை இப்பொழுது ஆராயவேண்டாம். மாறாக…

    இதையும் மனதிற்கொள்ளுங்கள் — “திருமாலே புத்தாவதாரம் எடுத்து மக்களை மயக்கப் பௌத்தமாகிய பொய் சாச்திரம் கற்பித்தார்” என்று பிராசீனமான பாகவத புராணம் கூறுகிறது.

    * அநுபூதிஸ்வரூபாச்சாரியார் என்ற அத்வைதியர் இராமானுஜர் காலத்தை ஒட்டி இருந்தவர் என்று தெரிகிறது. இவர் பாகவத புராணத்தில் இருந்து மேற்கோள்களைக் காட்டுகிறார்.

    * அமலானந்த சரசுவதி என்னும் அத்வைதியர் “கல்பதரு” என்னும் பிரம்ம சூத்ர பாஷ்ய நூலில், “பாஞ்சராத்ரம் முழுவதும் வைதிகமே” என்று சாதிப்பதற்கு “புத்தாவதாரம் பகவான் வாசுதேவனால் அசுரர்களை மோஹிக்க எடுக்கப்பட்டது என்று புராணங்களில் கூறப்படுகிறது. ஆனால், பகவான் பாஞ்சராத்ர சாஸ்திரத்தை மக்களை மோஹமடையச் செய்வதற்காக எழுதியுள்ளதாக எந்த புராணத்திலும் இல்லை” என்கிறார்.

    * மேலும், மேற்படி காட்டப்பட்ட அமலானந்தர் காலத்தை ஒட்டிய அத்வைதியராகிய ஸ்ரீதரஸ்வாமி என்பவர் பாகவதம் முழுதிற்கும் வியாக்கியான உரை இட்டுள்ளார். அதில் இந்த சுலோகம் உட்பட.

    இந்தக் புத்தாவதாரக் கதையையோ, தேசிகர் கூறும் கௌதமர் சாபக் கதையையோ நீங்கள் நம்பவேண்டும் என்று கூறவில்லை. நீங்கள் வேதாந்த தேசிகர் “theological” காரணங்களுக்காக இட்டுக்கட்டுவதாகச் சொன்னது அத்வைத ஆச்சாரியார்களுக்கும் பொருந்தும் என்பதைக் காட்டவே.

    // ஆனால் சம்பிரதாயமான சமயவாதிகள் இதை என்றுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மற்ற தரப்பு முற்றிலும் பொய் என்பதை நோக்கியே அந்த வாதம் இருக்கும். //

    முதலில், மத்வர் அத்வைத ஆசாரியாரிடம் தான் முதன்முதலில் பாடம் கற்றார் என்று மத்வர்களுடைய குருபரம்பரை நூலிலேயே உள்ளது. பிறகு, நீங்கள் எந்த சம்பிரதாய வித்வானிடம் கேட்டு மேற்கூறிய முடிவுக்கு வந்துள்ளீர்கள் என்று காட்டவும்.

    கடைசியாக, நீங்கள் இராதாகிருஷ்ணர் அரவிந்தர் முதலிய நவீன சிந்தனையாளர்களைப் படித்திருப்பதால் உங்கள் புரிதல் incomplete-ஆக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் காட்டுகிறேன். உங்களுடைய தளத்தில் இப்படி எழுதியுள்ளீர்கள்:

    source: https://jataayu.blogspot.com/2008/06/2.html

    //உபநிஷத், பிரம்மசூத்ரம், கீதை ஆகிய மூலநூல்கள் (canon) தவிர்த்து, சங்கரரின் பாஷ்யங்களில் புராணங்கள், ஸ்மிருதிகள், அப்போதிருந்த சமய இலக்கியம் ஆகிய நூல்கள் எந்த விதத்திலும் பிரமாணமாகச் சுட்டப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.//

    இது contrary to fact. பாஷ்யங்களில் பல இடங்களில் சங்கரர் விஷ்ணு புராணம், மார்க்கண்டேய புராணம், பிரம்மாண்ட புராணம், மனு ஸ்ம்ருதி, கௌதம ஸ்மிருதி, வியாஸ ஸ்மிருதி முதலிய நூல்களிலிருந்து பல பிரமாணங்களை அடுக்கு அடுக்கு என்று அடுக்கியுள்ளார். மஹாபாரதத்திலிருந்தும், கீதையிலும் இல்லாத வேறு அத்தியாயங்களிலிருந்து, பல வாக்கியங்களைக் கொட்டு கொட்டு என்று கொட்டியுள்ளார். தேவையானால், references, citations-ஓடு கூட பாஷ்ய வாக்கியங்களையும் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் காட்டத்தயார்.

    நன்றி

  102. முனைவர் அய்யா

    உங்கள் விளக்கங்களுக்கு நன்றி

    எல்லாம் ஒரு புரம் இறுக்க நாம் ஏன் அவ்ல்லோ சிரமப்பட்டு
    நாராயணன் = சிவன்
    வாசுதேவன் = சிவன்
    விஷ்னு = சிவன்
    கோவிந்த = சிவன் ஏன்று சமைக்க வேண்டும்

    //கோவிந்தரூபிணி, முகுந்தா, விஷ்ணுரூபினி //
    iT
    சிவசக்தியாகிய நாராயணிகொண்ட புருஷ கோலமே நாராயணன்’
    சிவன் இதெல்லாம் அம்பால் விஷ்னுவின் தங்கை என்பதால் வந்த பெயர் –இதை வைத்துக்கொண்டு வாசுதேவ நாமம் சிவ பெருமானை குறீக்கும் என்று சொல்வது மிகவும் வியப்பாக உல்லது – லக்ச்மியை விஷ்னு பத்னி என்று சொல்கிறார்கள் நீங்கள் சொல்வதை பார்த்தால் மிகவும் முரனான பொறுல் தான் ஏற்படும் – பூ சூக்தம் நீலா சூக்தம் இதில் எல்லாம் அர்தம் பிழை படும் – வேதமே அபத்தமாகும்

    அவர் வ்யாகரநம் பார்த்தறியார் என்று நான் சொல்லவில்லை

    //ஹரி – சூரியன். சூரியன் சிவனுடையாட்டமூர்த்தங்களில் ஒன்று.அவனுக்கு (ஹரி என்றால் பச்சை எனக்கு பச்சை நிறம் பிடித்ததால் என்னை அவ்வண்ணம் அழைக்கிரார்கள் எனபது கீதயில் கீதாசாரியன் சொல்லும் வாக்கு)
    கோவிந்தன் -விருஷபாரூடன் காளை வாகனன் என்பது பொருள்
    ப்ரத்யும்நன். ப்ர-மேலான . துயும்நன் – தேவன். சிவநாமங்களில் ஒன்றானமகாதேவன்
    //
    சொல்லவில்லை இதனால் நாராயணன் என்னும் நாமம் சிவ பெருமானை குறிக்கும் என்று அவர் நிர்நயம் செய்கிரார் – அப்படி செய்வதால் யாராக இருப்பினும் வ்யாகரநம் கற்றவர் அல்ல அங்கே வெறும் சமயமே கற்றவர். வ்யாகரநம் எnன்பது வ்யாகரநம் நாராயண சப்தம் எந்பது நாராயண சப்தம். அவர் இது ரூடீ இல்லை என்று சொல்லிஇருந்தால் பரவாஇல்லை. யாரவது ருத்ரன் என்றால் அழ வைப்பவன் (அதாவது எதிரிகளை)yaa – மஹா விஷ்னு ராவணனை அழ வைத்தார் அதனால் ருத்ரன் என்றால் மஹா விஷ்னு என்றால் அவருக்கும் வ்யாகரநம் தெரியவில்லை என்று தான் சொல்லுவேன்

    –இப்பொது நான் சொல்ல வந்தது என்ன என்பது உங்களுக்கு புறிந்திருக்குமென நம்புகிறேன் – பூமராங் எல்லாம் ஆகவில்லை நான் எதயும் அந்தப்பக்கம் வீசவில்லை – என் மீது வீசப்பட்டால் கொஞ்சம் ஜாகிரதயாக போய் வருகிறேன். – இப்படி சொன்னதால் உஙகள் த்ருப்தியை கெடுத்தென் என்று என்ன வேண்டாம்.

    நன்றி

  103. திரு மயூரகிரி ஸ்ர்மா அவர்களுக்கு, தாங்கள் இந்த விவாதங்களில் மறுமொழி அளித்தமைக்கு நன்றி. அச்சுவேலி, சுன்னாகம் முதலிய பகுதிகளில் இன்றும் வைதிகமும் சைவமும் இணைந்தே இருப்பதை அறிகிறேன். காசிவாசி செந்திநாதய்யர் போன்ற பெரியோர்கள் முதல் அண்மையில் இந்தியதத்துவஞானம் புத்தகம் எழுதிய திரு லட்சுமணன் , தாங்கள் இந்த பாரம்பரியத்தில் வருகின்றீர்கள். சனற்குமார முனிவர் செய்த சந்தியாகச் சிவஞான முனிவர் சிலமந்திரங்களைப் பதிவு செய்து வைத்துள்ளார். வரலாற்று ரீதியில் இதற்கு ஏதாவது விளக்கம் தர இயலுமா? சுமார்த்தம் வேறு வைதிகம் வேறா

  104. ஜடாயு அவர்களே

    ஒரு சிறு விளக்கம் மட்டும் கூற ஆசை படுகிறேன்

    எனக்கு அத்வைதமும், விசிஷ்டாட்வைதமும் பிடித்தவையே – இரண்டையும் முறையே பயில்கிறேன். ஒன்றை குறைத்துக் கூறி நான் எனக்கு கூட கற்றுத்தரும் என் குருவுக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என்பதை முதலில் சொல்லி விட்டு

    //
    அதனால் தான் சைவம், வைணவம், சாக்தம் உள்ளிட்ட ஆறு சமயங்களையும், அது தவிர்த்த பூரண நிர்குண உபாசனையையும், உபாசனையே இல்லாத தூய ஞான மார்க்கத்தையும் என்று எல்லாவற்றையும் கூட தத்துவ ரீதியாக சங்கர வேதாந்தத்தால் ஏற்றுக் கொள்ள முடிகிறது
    //

    சைவத்திலும் விசிஷ்டாத்வைத தத்துவம் உள்ளது என்று முனைவர் அய்யா எழுத படித்திருக்கிறேன் – இது விசிஷ்டாத்வைத வேதாந்தம் தன்னவில் தத்துவத்தையே முன் வைக்கிறது என்பதற்கு சான்று –
    பாஸ்கரரின் பேத அபேதம் வைணவத்திலும் உண்டு (கௌடிய வைஷ்ணவம்)

    நான் த்வைதம் முறையாக கற்கவில்லை – இயலுமா நேரம் கிடைக்குமா என்று தெரியாது – அனால் மாத்வரது கீதா பாஷ்யம் படிக்கிறேன் – அதில் தத்துவம் நிறையவே இருக்கிறது – சமயமும் சரி பாதி இருக்கிறது

    நீங்கள் முன் வைத்தது ஒரு சிந்திக்க வைக்கும் விஷயம் – நிச்சயம் அதை இன்னும் ஆழமாக அலசிப் பார்க்க விருப்பமாக உள்ளது

  105. // ஒரு முழுமையான தத்துவத் தரப்பை இந்த ரீதியில் புறந்தள்ளுவது அப்பட்டமான theology மட்டுமே – அல்லவா? //

    விசிஷ்டாத்வைதிகள் சைவ சித்தாந்தத்தைத் தத்துவரீதியில் எப்படி நிராகரித்துள்ளனர் என்பதை, ஸ்ரீ்பாஷ்யத்தின் பாசுபத அதிகரணத்திலும், அதன் sub-commentary ஆகிய சுதர்சனசூரியின் ச்ருதப்ரகாசிகையையும் கண்டுத் தெளியவும். தேசிகருக்கு இதெல்லாம் தெரிந்திருக்காமல் இருந்திருப்பது வாய்ப்பில்லை. ஏனென்றால், ச்ருதப்ரகாசிகை இன்று கிடைக்கிறது என்றால் அதற்குச் சுவாமி தேசிகருடைய தியாகம் தான் காரணம்.

    ஸ்ரீபாஷ்யத்தில் சுவாமி உடையவர் 7 முக்கிய தர்க்கரீதியான ஆட்சேபணையை வைக்கிறார். சத தூஷணியில் தேசிகர் அத்வைதத்திற்கு எதிராக கிட்டத்தட்ட 65 தர்க்கரீதியான ஆட்சேபணையை எழுப்புகிறார். இவற்றை எல்லாம் theological அடிப்படையில் அவர்கள் வைக்கவில்லை. தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான logical objections-ஐயே எழுப்புகிறார். இதைத் தவிர 20-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த “விசிஷ்டாத்வைத விஜயம்” என்னும் புத்தகமொன்றில் அத்வைதிகளின் பல வாதங்களைத் தர்க்க ரீதியில் இராமானுஜ சம்பிரதாயத்தவர்கள் அணுகியுள்ளனர். இதைப் பற்றி வித்வத் சபாக்களில் தர்க்க வாதங்கள் இன்னும் நடந்துக்கொண்டிருக்கிறது.

    அத்வைதியாகிய மதுசூதன சரசுவதியும், பிரபல த்வைத ஆசாரியார் வியாஸதீர்த்தரும் பல விவாதங்கள் நடத்தியுள்ளனர். இவை மதுசூதன சரசுவதியால் இயற்றப்பட்ட “அத்வைதஸித்தி” என்ற நூலிலும், வியாஸதீர்த்தரால் இயற்றப்பட்ட “நியாயாம்ருதம்” என்ற நூலிலும் அவரவர் வைக்கும் வாதங்கள் உள்ளன. அனைத்தும் தர்க்கபூர்வமானவையே, அறிவுப்பூர்வமானவையே. ஒரு இடத்திலும் theological points இருவரில் எவரும் செய்யவே இல்லை.

    இதை எல்லாம் அறிந்துக்கொள்ளாமல், சம்பிரதாயக் கல்வி வாசனையே இல்லாத நவீனர்கள் சிலர் max muller போன்றோர் எழுதி வைத்ததை லண்டனில் அரைகுரையாகக் கற்று விட்டுக் கடந்த நூறு ஆண்டுகளாக எழுதி வைத்துள்ளதை வைத்து, “த்வைதிகள் விசிஷ்டாத்வைதிகள் theological arguments-ஐ முன்னிறுத்தி சமயரீதியாகப் பரவிவந்தனர்” என்று முடிவுகட்டுவது ஒரு myopic view. இராதாகிருஷ்ணன் போன்றோர் name and fame-இல் பெரியவர்களாக இருக்கலாம். நம் நாட்டுக் குடியரசுத் தலைவராக அவரை நான் மதிக்கிறேன். ஆனால் அவர்களையே தத்துவ மேதைகள் என்றோ அவர்களுடையது தான் neutral view என்றோ எண்ணுவது இறுதியில் ஏமாற்றத்தையே தரும்.

  106. பெருமதிப்பிற்குரிய முனைவர் அவர்களே

    தங்களிடம் முன்னர் விளக்கம் தந்த அறிஞர் குறித்த தங்கள் மறுமொழி கண்டு மனம் அமைதி பெற்றது.

    ///அதற்கு அவர் “தம்பி, என்னுடைய விளக்கத்தை நான் நிலைநாட்டுவது ஒருபக்கம் இருக்கட்டும். நீ வெறுத்து அவர்கள் மேலிருக்கும் சலிப்பில் விஷ்ணுவைக் குறித்துத் தவறாக ஏதும் சொல்லிவிடாதே. ஈசர் விஷ்ணுவை சேவைசெய்வோர்தமை இகழ்வோர் ஏழ்நரகில் அழுந்துவர் என்று அருணகிரிநாதப் பெருமான் கூறியிருக்கிறார். ஏனெனில் அவர்கள் விஷ்ணுவுக்குச் சேவை செய்வோர்போல் தோன்றுகிறது. விஷ்ணு வேறு யாரும் அலர்; சிவபரம்பொருளேதான் விஷ்ணு.////

    விஷய ஞானம் உள்ளோரின் அடக்கத்தை அனைவரும் பின்பற்றவேண்டும் என்ற எனது முந்தைய கோரிக்கைக்கு இது வலு சேர்க்கிறது. எதையோ சொல்கிறோம் என்று விளைவைப் பற்றி யோசியாமல் சொல்லக் கூடாது என்ற எனது கருத்துக்கும் விரைவில் வலுசேர்க்கும் வண்ணம் இறைவன் வழிசெய்வான் என்றே உணர்கிறேன்.

  107. முனைவர் முத்துக்குமாரசாமி அவர்களுக்கு,

    கிரியாக்கிரமஜோதி என்ற நூலில் சைவசந்தி பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நூலின் அடிப்படையிலேயே தற்காலத்தில் அமைந்துள்ள சைவசந்தி பின்பற்றப்படுவதாயும் அறிகிறேன். இந்நூலின் காலம் பற்றி ஆய்வு செய்தால் சில வேளை தங்கள் கால மாற்றம் சைவசந்தியில் உண்டாக்கிய மாற்றத்தை அவதானிக்க முடியும் என கருதுகிறேன்.

    இன்று இலங்கையில் நாம் ஸ்மார்த்த, ஆதிசைவ பேதம் பார்ப்பதில்லை. இருவகைப் பிராம்மணர்களும் வேறுபாடே அறிய முடியாத வகையில் கலந்து விட்டனர். இந்நிலையில் இது பற்றிய விளக்கம் எனக்கும் அவ்வளவாக இல்லை. சைவர்கள் தம்மை ‘வைதீகசைவர்கள்’என்று கூறிக் கொள்ளும் மரபுள்ளது.

    கிரியைகளில் வைதீகம், ஆகமம் என்ற பிரிவு உள்ளதல்லவா? இன்று பிராம்மண இல்லக்கிரியைகள் யாவும் வைதீகமரபை ஒட்டியே நிகழ்ந்து வருகின்றன. சிவாலயக்கிரியைகளில் ஆகமமரபு பின்பற்றப்படுகின்றது.

    ஆனால் காஞ்சிப்புராணத்திலுள்ள சைவசந்தி பற்றி அடியேனும் தங்கள் மூலமாகவே அறிகிறேன். இது பற்றி வரலாற்று நோக்கில் ஏதும் அறியேன். வெறும் இருபத்தொன்றே வயதான சிறியவனும் இன்னும் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருப்பவனுமான எனக்குத் தெரிந்த விஷயங்கள் இந்த ஆய்வு நிலையில் மிகச்சொற்பமே.

    திருமூலர் திருமந்திரத்தில்… (இவர் ஏறத்தாழ 2000ம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவராகலாம்.)

    அந்தணராவோர் அறுதொழில் பூண்டுள்ளோர்
    செந்தழல் ஓம்பி முப்போதும் நியமஞ் செய்
    தந்த நற்கருமத்து நின்றாங்கிட்டுச்
    சந்தியும் ஓம்பிச் சடங்கறுப்போர்களே
    என்று கூறுவதைக் கவனிக்கவும் இவர் நான்கு கால சைவசந்தி பற்றி ஏதும் குறிப்பிடவில்லையே?

    இன்றைய சூழலில் இவ்விரு சந்தியாவந்தனங்களையும் குடும்பஸ்தராக இருக்கும் ஒரு சிவாச்சாரியார் நான்கு வேளைகளிலம் நேரத்தை அதிகளவில் ஒதுக்கிக் கொண்டு செய்வது எவ்வளவு சவாலான காரியம்? இதனாலேயே சைவசந்தி வழக்கிழந்து வருகிறது என்பது என் கருத்து. மற்றப்படி இச்சைவ சந்தி தொடர்பில் பத்ததிகளுள் மாறுபாடுகளும் பாடபேதங்களும் இருப்பதாயும் அறிகிறேன்.

  108. Shri Ramanujan Pillailokam
    //
    to hear narayana upanishad which tells that
    rudra,bharma,indra, dwadasa adiythyas are narayana..
    and everything n world is narayana…

    //

    the purpose if at all there is one of this discussions is not to establish Narayana parathvam or show aparathvam for others. I think it started off with some factual points on Sandhi, Purusha, NaarayaNa naama, now it is going towards which philosophy was less thelogoical

    it would do good if we stick to these things 🙂 i am anyway not reuesting/forcing anyone not to post what they want –

  109. திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு, வெறும் இருபத்தொரு வயதில் இத்தனை தத்துவ ஞானமா? தங்கள் மறுமொழிகளிலும் கட்டுரைகளிலும் காண்ப்படும் முதிர்ச்சியும் தங்கள் வ்யதும் வியக்க வைக்கின்றன. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாற்று மாற்றங்களின் காரணமாக வைதிகம், சைவம், தமிழ் மூன்றும் முரண்பட்டு மாறுபட்டுப் ப்கைமை கொண்டுள்ளன. இந்த மூன்றும் ஒன்றாக இருந்த நிலை திருஞானசம்பந்தர் காலந்தொட்டுப் பின் மறைஞான சம்ப்ந்தர், உமாபதிசிவ்ம் காலம் வரைக்கும் இருந்தது என நினைக்கின்றேன். ஈழத்தில் வேற்றுக் கலப்பு இல்லாததனால் ஒற்றுமை இன்றும் நில்வி வருகின்றது என நம்புகின்றேன். தாங்கள் அளித்துள்ள செய்திகளுக்கு நன்றியுடையேன்.

  110. திரு சாரங் //சைவத்திலும் விசிஷ்டாத்வைத தத்துவம் உள்ளது என்று முனைவர் அய்யா எழுத படித்திருக்கிறேன் // உண்மையே. ஒரு முக்கிய வேறுபாடு.:சைவசித்தாந்தம் உருவழிபாட்டினைக் கொண்டுள்ளதெனினும் அதனை நிர்க்குண அருவ வழிபாட்டைப் பெரிதும் வற்புறுத்துகின்றது. முத்தியில், சிவத்தின் வியாபகத்தில் இரண்டறக் கலத்தலே பரமுத்தி எனப் பேசுகின்றது. அதை அடையும் வரைமூர்த்திவழிபாடும் பத்தியும் வேண்டுவதே. பாகவதபக்தி அடியார் பத்தி, பிரபத்தி முதலிய ப்க்தி நிலைகளில் எனக்கு வேறுபாடு புலப்படவில்லை. மூர்த்தி பேதத்தை மறந்து திவ்யப் பிரபந்தம் படித்தாலும் திருமுறை ஓதினாலும் எனக்கு ஒத்த அனுபவமே தோன்றுகின்றது. ஈட்டுரைகளின் வாயிலாக திருமுறைப் பொருளைச் சுவைக்க முடிகின்றது. சமயம் என்பது இறையை அழுந்தி அனுபவிப்பதற்கு வழிகாட்டுவதே.

  111. மதிப்பார்ந்த முனைவர் அவர்களுக்கு,

    தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும் நம்மை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் தங்களின் பாராட்டுக்களுடன் கூடிய கருத்திற்கும் நன்றிகூறுகிறேன். அடியேன் அறிந்தவற்றை எழுதுகிறேன். இன்னும் நிறையவே கற்க இருக்கிறது. எல்லாம் ஸ்ரீ பார்வதீ பரமேஸ்வரப் பெருமானின் கிருபையே….

    காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ பஞ்சாக்கரயோகிகள் என்பவரால் சைவ ஆகமகிரியா பாதங்களை தொகுத்தும் சுருக்கியும் சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோஹ ரூபமாகச் “சைவபூஷணம்” என்று பெயரிடப்பெற்றுள்ளது. மிகவும் நுணுக்கமாக பல விஷயங்களைச் சொல்லும் இந்நூலின் காலம் 17ம் 18ம் நூற்றாண்டுகளாக இருக்கலாம்.

    கிரந்த லிபியில் உள்ள 355 ஸ்லோஹங்களிலாலான இந்நூலை 1925ல் தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கம் நூலாக்கியிருக்கிறது. இந்நூலில் உள்ள 61ம் 62ம் 63ம் ஸ்லோஹங்கள் சைவசந்தி அல்லது சைவானுஷ்டானம் பற்றி விவரிக்கின்றன.

    “விஷேஷ தீட்சை பெற்ற சைவர்கள் சிவாகமங்களில் விதிக்கப்பெற்ற முறைக்கமைய நீராடி தூய ஆடை அணிந்து நீர்நிலைக்குச் சமீபமாக வடக்கு, கிழக்கு நோக்கி மந்திரத்தோடே ஆசமனம் செய்தல், வீபூதி ஸ்நானம், மானஸ ஸ்நானம் செய்ய வேண்டும்.அந்தந்த ஸ்தானங்களில் வீபூதி ரட்சை தரித்து மீண்டும் ஆசமனம் செய்து கர, அங்க, மஹாமுத்திரா நியாசங்களைச் செய்ய வேண்டும். பிராணாயாமம் செய்து கொண்டு சிவதீர்த்தாவாஹனம் செய்து பிராம்மி (காலை), வைஷ்ணவி(மதியம்), ரௌத்திரி (மாலை), நிஷ்களரூபி (அர்த்தஜாமம்) ஆகிய தேவதைகளைத் த்யானித்துக் கொண்டு அமிர்தாபிஷேகம், அங்கமார்சனம், அகமர்ஷணம், மீளவும் ஆசமனம், சகளீகரணம், ஜலசுத்தி, காயத்திரிஜபம் செய்ய வேண்டும். பின்னர் சிவகாயத்திரி ஜபம் செய்து உபஸ்தானம், சிவமூல தர்ப்பணம், சிவமூலஜபம், ஈசானாதி மந்திர தர்ப்பணம், ஆசமனம், கரந்நியாசம், தீர்த்த உபசம்ஹாரம், உத்தாபனம், திக்பந்தனம், சிவசூரியோபஸ்தானம், சிவமந்திரஜபம், குருவந்தனம் ஆகியவற்றை முறையே செய்தலே சைவசந்திக்கான சிவாகம விதி என்றறிக”

    என்று மேற்படி ஸ்லோஹங்கள் கூறுகின்றன. இங்கே காஞ்சிப்புராணத்திலிருந்து சில மாற்றங்களை அவதானிக்க இயலுமாயிருப்பதை காண்க.

  112. முனைவர் அய்யா,

    //
    சமயம் என்பது இறையை அழுந்தி அனுபவிப்பதற்கு வழிகாட்டுவதே.
    //

    இந்த வரிகளுக்கு மிக்க நன்றி – எனக்கும் இதுவே தான் கருத்து – வழி கட்டுவதோடு நிற்காமல் சடங்குகள் மூலமும் நெறி முறைகள் மூலமும் அனுபவத்தை ஏற்படுத்தி காட்டுகின்றன – அப்படி இல்லாவிட்டால் நமது வேத மதம் வெறும் வாக்கு வாத மதமாக என்றைக்கோ அமுங்கி இருக்கும்

    எனக்கு தொன்னுறு வயதயும் தான்டிய ஒருவர் சொன்ன் கருத்து –

    our philosophy is not like western philosophy to discuss it over the table and forget it – it is life for us and whaterver path it is we believe and follow it

    another idea i heard from some one

    Only fools think that only one way is right – for someone who is in the water needs to reach the shore swimming and for someone who is in the land needs to reach his destination walking – to swim in both waters and land is really a dumb thing to do

  113. உமாசங்கர் அவர்களே

    //
    தங்களிடம் முன்னர் விளக்கம் தந்த அறிஞர் குறித்த தங்கள் மறுமொழி கண்டு மனம் அமைதி பெற்றது.
    //

    உங்களது மன அமைதியையும் நான் தந்த சரியான விளக்கம் கெடுத்திருக்கலாம் – (அதாவது நான் அவரை வியாகரணம் கற்காதவர் என்பது சொன்னதாவது நாராயண,வாசுதேவ,ஹரி, கோவிந்த, இத்யாதி நாமங்கல் சிவனையே குறிக்கும் என்று வியாகரணம் கொண்டு நிரூபணம் செய்ததை தான்)

    இதற்க்காக வருந்துகிரேன்

  114. // சைவ சமயம், சித்தாந்தம் முழுவதுமே கௌதமர் குழப்படியாக உருவாக்கிப் பரப்பியது என்று வேதாந்த தேசிகர் (??) தமது நூலில் ஒரு பாடலில் சொல்லி அதைப் புறந்தள்ளுகிறார். //

    திரு கந்தர்வன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.வேதாந்த தேசிகரது இந்த நூலின் இப்பகுதியைத் தாங்கள் எனக்கு ஈமெயில் செய்ய இயலுமா? அந்நூல் வடமொழியில் என்றால் த்யவுசெய்து தமிழ்ப்படுத்தி உதவ முடியுமா: என்னுடைய mail id kumaran388@hotmail.com. இதுபோன்றே உடையவரும் தேசிகரும் சைவசித்தாந்தத்தையும் சமயத்தையும் பரபக்ஷம் செய்துள்ள பகுதிகள் குறித்து ஒருகட்டுரையாக எனக்கு உதவினால் மிக்கபயன்பெறுவேன். நன்றியுடையனாவேன்.

  115. (அதாவது நான் அவரை வியாகரணம் கற்காதவர் என்பது சொன்னதாவது நாராயண,வாசுதேவ,ஹரி, கோவிந்த, இத்யாதி நாமங்கல் சிவனையே குறிக்கும் என்று வியாகரணம் கொண்டு நிரூபணம்

    ஒரு சிறிய விளக்கம். நாராயணன் என்றசொல்லுக்கே வியாகரமுறைப்படி பகுபதம் என்றும் அதனால் தான் நாராயணி என்ற பெண்பாற்சொல் பெறப்பட்டதென்றும் எல்லாப் பெயரும் சிவனைக் குறிக்குமாறு பொருள் கொள்ளலாமென்றும் என்றும் கூறப்பட்டதென்றுமே அம்மறுமொழியில் கூறினேன். இப்பெயர்களுக்கு விளக்கம் வியாகரணப்படி அன்று. சொற்களுக்குக் கூறப்படும் பொருளின்படியே. திரு சாரங்கன் அவர்களே உங்களுக்குப் பெரியவர் கூறிய் கருத்து முழுதும் உண்மையே. சமயம் என்பதும், பெரியோர்கள் சாத்திரங்களில் காட்டிய நெறிகளும் கத்தி மோதி வாதாடுவதற்குரிய பொருள் அல்ல. நூல்களிற் கூறப்பட்டுள்ள உண்மையைத் தெரிந்து கொள்லவும்கவியுள்லம் தேறவும் உணர்ச்சிவயப்படாத் விவாதம் தேவைதான். இந்து சமயங்கள் அந்த அளவுக்குத்தான் விவாதங்களை அனுமதிக்கின்றன.என நம்புகின்றேன்.நூலறிவைவிட, அவரவர் சாத்திரங்களையும் தோத்திரங்களையும் கற்று அனுபவிக்கும்ஞானமே உயர்ந்தது. பெரியவர் ஆங்கிலத்தில் கூறிய உண்மையைத் தாயுமானவர் “சமயாதீதப் பழம்பொருள்” என்று குறிப்பிடுவார். அந்தச் சம்யாதீதப் பழம்பொருள் எந்த சமயத்துக்குள்ளும், எந்த சாத்திரத்துக் குள்ளும் அடங்காது, அடக்கிவிட முடியாது என்று அறிந்துகொள்ளுவதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். ம்வுன வியாக்கியானம் அதுவே என நம்புகின்றேன். மிக்க மகிழ்ச்சி திரு சாரங்கன்

  116. முனைவர் அவர்களே,

    உங்கள் வேண்டுகோளை அவமதிக்கவேண்டும் என்று எனக்கு எண்ணம் இல்லை. ஆனால் இதில் சில சிக்கல்கள் உள்ளன. முதலில் நீங்கள் கேட்ட நூல்களின் பெயர்களை மாத்திரம் குறிப்பிட்டுவிட்டு, விஷயத்திற்கு வருவோம்.

    முதலில், தேசிகர் “பரமத பங்கம்” என்னும் தமிழ் நூலில், செய்யுள் வடிவில், ஏனைய மதங்களில் உள்ள குறைபாடுகளை விளக்குகிறார். உடையவர் (ஸ்ரீ் ராமானுஜர்) ஸ்ரீ்பாஷ்யத்தில் பாசுபத அதிகரணத்தில் (பிரம்ம சூத்ரத்தின் இரண்டாவது அத்தியாயம், இரண்டாவது பாதத்தில் வருவது) சைவ சித்தாந்தக் கொள்கைகள் முரண்பாடானவை என்று சாதித்துள்ளார். ஸ்ரீபாஷ்யத்தையும், அதை மேலும் விவரித்த ஸுதர்சன பட்டர் இயற்றிய ச்ருதப்ரகாசிகையும் எளிய தமிழில் கிடைக்கிறது. இவ்விஷயங்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ள ஆசை உள்ளவர்கள் அதை வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இரண்டாவதாக, தேசிகரோ உடையவரோ சைவசித்தாந்த-பாசுபதக் கொள்கைகளைத் தம் நூலில் கண்டித்துள்ளார்களே தவிர, சைவர்களைச் சற்றும் த்வேஷிக்கவில்லை. அந்நூற்களின் அப்பகுதிகளிலேயே இது தெளிவாக உள்ளது. தேசிகர் பரமதபங்கத்தில், சைவ மதத்தைக் கண்டிக்கும் இடத்தில் கடைசிச் செய்யுளில், “தவறான சித்தாந்தங்களை விட்டு, சைவர்களும் நற்கதி பெறுமாறு” எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார். வைணவ சித்தாந்தத்தின்படி சைவர்களும் சிவபெருமானை உபாசித்து, அதன்பலனாக அவரிடமிருந்து ஞானமாகிய உயர்ந்த பலனைப் பெற்று, அவர்களும் அதன்பின் நற்கதி பெறுவார்கள் என்னும் கொள்கை உறுதியாக உண்டு. மற்ற தெய்வங்களை உபாசிப்பவர்கள் நரகத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்பது போன்ற ஆபிரகாமியக் கொள்கைகள் அறவே கிடையாது.

    மூன்றாவதாக, நீங்கள் என்னைக் கட்டுரை எழுதி உங்களுக்கு விளக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளீர். ஆசார்ய நூல்களை பிறர்க்கு interpret செய்து காட்ட எனக்குத் தகுதி இல்லை. என் அற்ப அறிவுக்கு எட்டிய விஷயங்களிலிருந்து, அதுவும் ஆச்சாரியார்கள் சைவ மதத்தைப் பற்றிக் கூறியுள்ளவை போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களிலிருந்து, நான் எழுதப்போய் தவறாக ஏதாவது கூறிவிட்டால் அது ஆசாரியார்கள்-எம்பெருமான் திருவுள்ளங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தரும். ஆகையால், உங்கள் வேண்டுகோளுக்கு என் கைகளைக் கட்டி மௌனம் சாதிக்க வேண்டியுள்ளது. மன்னிக்கவும்.

    நான்காவதாக, இங்கு (ஸ்ரீ்வைஷ்ணவம் உட்பட) எந்த ஒரு சம்பிரதாயத்தைப் பற்றியும் விசாரமோ கட்டுரையோ வந்தால், அதை எழுதுபவர்கள் சற்று கவனத்துடன் இருப்பதே நல்லது. மற்ற சம்பிரதாயத்தவர்களுடைய இஷ்டதெய்வங்களையோ, ரிஷிகளையோ, நூல்களையோ, ஆசாரியார்களையோ பற்றி விமர்சனம் பண்ணினால், அதற்குத் தக்க நூற்குறிப்பை மாத்திரம் இட்டுவிட்டு ஒரு neutral point of view-உடன் எழுதுவது நல்லது. அதிலும், ஒரு சம்பிரதாயத்தில் உள்ளவர்கள் ஏனையோர் புகழும் ரிஷிகளையும், இஷ்டதேவதைகளையும், ஆசாரியார்களையும், அடிப்படைக் கொள்கைகளையும் தாழ்த்திக்கூறுவது/தூற்றுவது போன்ற விஷயங்களை அறவே ஒதுக்குவது நன்று. இம்மாதிரி செய்வதால்தான் என் போன்ற சிலர் சினந்துகொண்டு, விவாதம் செய்ய முன்வருகின்றனர். நண்பர் ஜடாயு தேசிகர் சைவத்தைப் பற்றிக் கூறியுள்ளதை ஒரு விமர்சித்துள்ளார். போனது போகட்டும். இனியாவது இது ஒரு பாடமாக அனைவர்க்கும் அமையட்டும்.

    இம்மாதிரியான பொதுத்தளங்களில், மேற்கூறியபடி சர்ச்சைக்குரிய விஷயங்களை ரஹஸ்ய விஷயங்களாகவே வைத்திருப்பது நன்று. அவற்றை அறியவிரும்புபவர்கள் அவரவர்களுடைய மதத்தலைவர்களையும், ஆச்சாரியார்களையும் கேட்டுத் தெளிவது நல்லது.

    மேலும், ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு set of பிரமாண நூல்கள் உண்டு; வேறு சில நூல்கள் அப்பிரிவினருக்குப் பிரமாணமாகாது. அனைத்து ஹிந்து சம்பிரதாயப் பிரிவுகளில் உள்ள அனைத்து விஷயங்களையும் அனைத்து ஹிந்துக்களுக்கும் ஏற்புடையதாகச் செய்யவேண்டும் என்னும் நோக்கத்தோடு, நூல்களிலிருக்கும் விஷயங்களை ஒன்றுதிரட்டி அவியல் பண்ணிக் குழப்புவதும் சரியன்று. இவ்வருடம் ஜனவரியில் வெளிவந்த “அடி முடி தேடிய புராணம் — ஒரு பார்வை” என்னும் கட்டுரையில் இம்மாதிரியான ஒரு முயற்சி செய்யப்பட்டு, அது பெரிய சர்ச்சையானது அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நம்புகிறேன். இவ்விஷயத்தில் ஆசிரியர் குழுவைச் சற்று பரந்த பார்வையுடன் நடந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வோம்.

    எல்லாப்பிரிவுகளையும் சேர்ந்த ஹிந்துக்களுக்குக் common interest என்று ஒன்று உள்ளது. அதாவது —

    (1) மதமாற்ற சூழ்ச்சிகளைத் தகர்த்து எறிவது,
    (2) பசுவதையைத் தடுப்பது,
    (3) ஆலயங்களின் ஸம்ரக்ஷணம்,
    (4) ஆகம ஸம்ரக்ஷணம்,
    (5) ஆரிய-திராவிட இனவெறி அரசியலை எதிர்ப்பது,
    (6) ஹிந்தி-ஸம்ஸ்க்ருத-தமிழ் சர்ச்சைகளை எழுப்புவோரை எதிர்ப்பது,
    (7) ஹிந்து சம்பிரதாயங்களைப் புண்படுத்துமாறு பொது ஊடகங்களில் வருவதை எதிர்ப்பது,
    (8) தாழ்த்தப்பட்டோர்களுக்கு வழிபாட்டு முறைகளை accessible-ஆகச் செய்வது,
    (9) சிறுபான்மையின அரசியல் மூலம் ஹிந்துக்களை marginalize செய்வது

    முதலிய விஷயங்கள். இவற்றையே இம்மாதிரியான தளங்களில் முன்வைப்போம்.

  117. மன்னிக்கவும், ஒரு விஷயத்தைக் கூற மறந்துவிட்டேன்:

    // தேசிகரோ உடையவரோ சைவசித்தாந்த-பாசுபதக் கொள்கைகளைத் தம் நூலில் கண்டித்துள்ளார்களே தவிர, சைவர்களைச் சற்றும் த்வேஷிக்கவில்லை. அந்நூற்களின் அப்பகுதிகளிலேயே இது தெளிவாக உள்ளது. தேசிகர் பரமதபங்கத்தில், சைவ மதத்தைக் கண்டிக்கும் இடத்தில் கடைசிச் செய்யுளில், “தவறான சித்தாந்தங்களை விட்டு, சைவர்களும் நற்கதி பெறுமாறு” எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார். வைணவ சித்தாந்தத்தின்படி சைவர்களும் சிவபெருமானை உபாசித்து, அதன்பலனாக அவரிடமிருந்து ஞானமாகிய உயர்ந்த பலனைப் பெற்று, அவர்களும் அதன்பின் நற்கதி பெறுவார்கள் என்னும் கொள்கை உறுதியாக உண்டு. //

    இத்துடன் சேர்த்து இன்னொரு விஷயம்– ஸ்ரீ்வைஷ்ணவ சித்தாந்தத்தின் படி, ஆசையுள்ளவர்கள் யாராக இருந்தாலும் ஆசைவந்த அதே பிறவியில் அவர்கள் வைணவத்திற்கு வருவது பரிபூரணமாக ஏற்கப்படும். பிறவி வித்தியாசமின்றி அவர்கள் வைணவர்களால் சக பாகவதாகளாக பரிபூரணமாக ஏற்கப்படுபவர். அப்பிறவியிலேயே அவருக்கு வைகுந்தமாகிய நல்வீடுபேறும் கிட்டும். வைணவர்களாகப் பிறந்தால் தான் வைணவர் என்று இல்லை. வாழ்நாள் முழுதும் நாத்திகராக இருந்தாலும், உயிர் பிரியும் கடைசி நாளன்று கூட எம்பெருமானிடம் சரணாகதி செய்பவர்கள் கூட அதே வீடுபேற்றினை எந்தத் தடையுமின்றிப் பெறுவர். இதை நான் கூறவில்லை. வைணவர்கள் அனவரும் ஏற்கும் ஒன்றே இது. தெளிவுபடுத்த வாய்ப்பளித்ததற்கு நன்றி.

  118. முனைவர் அய்யா,

    உங்களது விளக்கத்திற்கு நன்றி

    யாரையும் தாறுமாறாக விமர்சிக்க வேண்டும் என்பது என் என்னm அல்ல.

    அந்த வ்யாகர்ண பண்டிதர் கூறும் விளக்கத்தை ஒத்துக் கொள்கிறேனோ இல்லையோ, ஒரு விஷயத்திற்கு பல பார்வைகள் இருக்கும் என்பதை ஒத்துக் கொள்கிறேன்

    அந்த தொண்ணூறு வயதையும் தாண்டிய பெரியவரை பற்றி ஒரு உபரி செய்தி

    அவர் இன்றளவும் தினமும் சந்த்யா வந்தனம் செய்கிறார் – தினமும் ருத்ரம் சமகம், விஷ்ணு சூக்தம் எல்லாம் தெளிவாக சொல்வார் அவரை விட ஒரு முப்பது வயது குறைந்த ஒருவரிடம் சீடராக என்னை போன்ற பொடியர்களுடன் சமமாக உட்கார்ந்து பாடம் கற்கிறார் – அவர் சொன்னதை நடை முறை படுத்தி காட்டுகிறார்

    கருத்துக்களை விவாதம் செய்ய அனுமதித்த அனைவருக்கும் நன்றி

  119. அன்புள்ள திரு சாரங் அவர்களே

    எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை.
    ///உங்களது மன அமைதியையும் நான் தந்த சரியான விளக்கம் கெடுத்திருக்கலாம் – ///
    தங்கள் இப்போதும் என்னைப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. நான் அதிகமாக சம்ஸ்கிருத மேற்கோள்கள் காட்டுவதில்லை.ஆனாலும் இந்தத் தருணத்தில் இது மிகவும் பொருந்துகிறது. ஸ்ரீ அப்பையா தீட்சிதர் தமது வாழ்நாளில் சிவாத்வைத சித்தாந்தத்தை அருளினாலும் மகா விஷ்ணுவின் பாலுள்ள பக்தியில் குறைவிள்ளதே திகழ்ந்தார். வரதஜாஜச்தவம் என்ற நூலையும் எழுதினார்.

    விஷ்ணுர்வா சங்கரோ வா ச்ருதிசிகரகிராமஸ்து தாத்பர்ய பூமி:
    நாஸ்மாகம் தத்ர வாத: ப்ரஸரதி கிமபி ஸ்பஷ்டமத்வைத பாஜாம் |
    கிம் த்வீசத்வேஷகாடநல கலிதஹ்ருதாம் துர்மதீநாம் துருக்தீ:
    பங்க்தும் யத்னோ மமாயம் ந ஹிபவது விஷ்ணு வித்வேஷ சங்கா ||

    ” வேதாகம நூல்களில் கூறப்படும் உத்தம பரம் பொருளாய் விளங்குவது சிவபெருமானோ அல்லது விஷ்ணுவோ அதில் நமக்கு வாதமில்லை. ஆனால் பரமசிவனை ஏசிப்பேசும் சில துர்மதியாளர்களின் அவச்சொற்களை மறுத்துப் பேசவே நான் பிரயாசைப் படுகின்றேனே தவிர விஷ்ணுவிடம் ஒரு போதும் பக்திக் குறைவு இல்லை என்ற கருத்து உடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள தீக்ஷிதருடைய ச்லோகம் அவரது நிர்மலமான ஹ்ருதயத்திற்குச் சான்று பகருகிறது. ”

    அடியவனோ அவரைப்போல வாதம் செய்ய அருகதை அற்றவன். ஆனாலும் அவரைப்போல சிவநிந்தனையை எதிர்த்தாலும் விஷ்ணு பக்தியில் குறைவற்றவனாக வாழ முயற்சி செய்பவன். அவ்வளவே.

    தாங்கள் இப்போதாவது புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். எனது மன அமைதிக்குக் காரணம் முனைவர் அவர்களுக்கு விளக்கம் தந்த சிவனடியார் விஷ்ணு நிந்தனை செய்துவிடக்கூடாது என்பதில் காட்டிய ஆர்வமும் அக்கறையுமே ஆகும்.

  120. பெருமதிப்பிற்குரிய முனைவர் அவர்களே

    நான் இரு தினங்களுக்கு முன்னர் தவத்திரு தொண்டை மண்டல ஆதீனம் ஞானப் பிரகாச சுவாமிகளைத் தரிசிக்கும் பெரும்பேரூ எய்தினேன். அவரகளைப் பணிந்து வணங்கி சைவ சந்தி குறித்து விளக்க வேண்டினேன். அவர்கள் ஆசமனத்துக்கு சிவ மூல மந்திரமே பயன்பாடு ஆகும் என்றார்கள். அனுஷ்டானம் என்பது பக்தன் தன்னை சிவ பூஜைக்குத்தக்கவனாக ஆக்கிக் கொள்வதே என்றார்கள். ஆதீன வெளியீடான சிவபூஜா விதிகள் என்ற பதிப்பு தீர்ந்துவிட்டதாகவும் பதிப்பிக்கும்போது தந்தருளுவதாகவும் தெரிவித்தார்கள். மேலும் தற்காலத்தில் பலரும் அனுஷ்டான விதிகள் எவற்றையும் புத்தகம் பார்த்தே பிரயோகிப்பதால், பாரம்பரிய வழிமுறைகள் வழக்கொழிந்து கைக்குக் கிடைத்த மந்தித தந்திரப் பிரயோகங்களுக்கு மாறிவிடுகிறார்கள் என்றார்கள் .

    சைவ சந்தி விதிகள் வெறும் 150 ஆண்டுக் காலத் தொமையுடையவனவா என்ற எனது சந்தேகத்துக்கு விடையளித்த அவர்கள் “அப்படியில்லை, காலம் காலமாக அனுஷ்டான விதிகள் அப்படியே உள்ளன. இவை இரண்டாயிரம் ஆண்டுகஊம் முந்தியவை என்றார்கள். நான் தொண்டை மண்டல ஆதீனம் மெய்கண்டாரது சீடர் நிருவியது அன்றோ என்றதற்கு அவர்கள் தாம் 232 ஆவது பட்டம் எனவும் திருமடம் கிட்டத்தட்ட 2300 ஆண்டுப் பழமையானது என்றும் தெரிவித்தார்கள். சைவ அனுஷ்டானம் தொன்றுதொட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். அப்பர் பெருமான் இத்திருமடத்தில் தங்கியதற்கும் சிலப்பதிகாரக் காலத்தில் இத்திருமடத்தில் சிவனடியார்கள் வசித்ததற்கு மணிமேகலையில் பாடல்களும் உள்ளதாகவும் கூறினார்கள்.

    இவை போக அப்பய்ய தீக்ஷிதரின் சிவார்ச்சன சந்திரிகை என்ற நூலில் ஆசமனத்தில் சிவமூலமந்திரமே பயன்பாடு ஆகிறது என்பது என் பக்கமிருந்து உபரித்தகவல்.

  121. திரு கந்தர்வன் அவர்களே

    ///தேசிகரோ உடையவரோ சைவசித்தாந்த-பாசுபதக் கொள்கைகளைத் தம் நூலில் கண்டித்துள்ளார்களே தவிர, சைவர்களைச் சற்றும் த்வேஷிக்கவில்லை. அந்நூற்களின் அப்பகுதிகளிலேயே இது தெளிவாக உள்ளது. தேசிகர் பரமதபங்கத்தில், சைவ மதத்தைக் கண்டிக்கும் இடத்தில் கடைசிச் செய்யுளில், “தவறான சித்தாந்தங்களை விட்டு, சைவர்களும் நற்கதி பெறுமாறு” எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார். /// இது தவறான தகவல்.

    வேதாந்த தேசிகரால் எழுதப்பட்டது ஸங்கல்ப சூர்யோதயம் என்ற நாடகம். விசிஷ்டாத்வைத வேதாந்தத்தைத் தழுவிய இந்த நாடகத்தை அந்த கால வைஷ்ணவர்கள் நடிக்கும் போது அதனுடைய இரண்டாவது அங்கத்தில் பின்வரும் ச்லோகம் வருகின்றது,

    யதீச்வரஸரஸ்வதீ ஸுரபிதாசயானாம் ஸதாம்
    வஹாமி சரணாம்புஜம் ப்ரணதிசாலினா மெளலினோ |
    ததந்யமததுர்மதஜ்வலிததேஜஸாம் வாதினாம்
    சிரஸ்ஸு நிஹிதம் மயா பதமதக்ஷிணம் லக்ஷ்யதாம் ||

    இராமானுஜருடைய மதத்தைப் பின்பற்றும் பெரியோர்களுடைய பாதங்களை எனது தலையால் வணங்குகின்றேன். மற்றைய மதங்களைப்பின்பற்றும் துர்மதஸ்தர்களின் தலையில் இடது காலை வைப்பேன் என்பது இந்த ச்லோகத்தின் கருத்தாகும்.

    போன‌வை போன‌வையாக் இருக்க‌ட்டும் என்றுதான் இத்த‌கைய‌ விவாத‌ங‌க‌ள் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். இதை இத்தோடு விட்டு விடுகிறேன்.

  122. திரு மயூரகிரி சர்மா அவர்கள் 21 வயதே நிரம்பியவர் என்பதைப் படிக்கும்போது இவ்விளம் வயதில் நமது மதம் சித்தாந்தம் ஆகியவற்றில் இத்தனை ஆர்வமும், அறிவும் நிரம்பியவராக இருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. அவரது அடக்கம் அவரது அறிவுக்கு அணி சேர்க்கிறது.

    திரு சர்மா அவர்கள் மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருளப் பிரார்த்திக்கிறேன்.

  123. Mr. உமாசங்கர்,

    வைஷ்ணவ ஆச்சாரியார்களையும் வைஷ்ணவத்தையும் தூற்றுவதையே சிலர் இங்கு தம் வாழ்நாளின் நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று தெரியவருகிறது!

    வேதாந்த தேசிகரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து விட்டு,

    //
    இத்த‌கைய‌ விவாத‌ங‌க‌ள் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்
    //

    என்று எழுதுவது அப்பட்டமான hypocrisy.

    நான் வேதாந்த தேசிகரை உதாரணமாகச் சொன்னது வைணவர்களுடைய பரிவான உள்ளத்தைக் காட்டுவதற்கே. அதை நீங்கள் “தவறு” என்று claim பண்ணியுள்ளீர்கள். இதைப் ‘பொய்’ என்று கூறியவர்களை வாய்திறக்க முடியாதபடி, “பரமதபங்கம்” என்னும் தேசிக கிரந்தத்தில் சுவாமி தேசிகர் கூறியதைக் காட்டுகிறேன். நாற்பத்தி இரண்டாம் (42) செய்யுளுக்குச் செல்வோம்:

    கந்தமலர்கள் மின்னுங்காரார் மேனிக்
    கருணைமுகில் கண்ட கண்கள் மயிலாயாலும்
    அந்தமில் பேரின்பத் திலடியரோடே
    அடிமையெனும் பேரமுதம் அருந்தி வாழத்
    தந்தமதி யிழந்தரனார் சமயம் புக்குத்
    தழல்வழிபோய்த் தடுமாறித் தடுத்து வீழ்ந்தீர்
    சந்தநெறி நேரறிவார் சரணஞ்செய்து
    சங்கேதத்தவ முனிவீர் தவிர்மினீரே.

    ஒப்பிலியப்பன் கோவில் வரதாச்சாரி சடகோபன் (Oppiliappan Koyil Varadachari Sadagopan) சுவாமியால் எளிய ஆங்கிலத்தில் இதன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

    The Saivas have equal opportunity to be guided by SadAchAryAs to enter Parama Padham and dance joyously with MukthAs and Nithya Sooris at the sight of SrIman NaarAyaNan. We pray that they will gain their senses save themselves by performing SaraNAgathy at SrI VaikuntanAthan’s sacred feet.

    இதிலிருந்து, தேசிகர் ஏனைய மதத்தைக் கண்டித்தாரே தவிர, லோகத்தில் உள்ள எல்லா ஜனங்களிடமும் கருணையையே காட்டினார் என்பது விளங்கும்.

    //
    மற்றைய மதங்களைப்பின்பற்றும் துர்மதஸ்தர்களின் தலையில் இடது காலை வைப்பேன் என்பது இந்த ச்லோகத்தின் கருத்தாகும்.
    //

    முதலில், இந்த சுலோகம் சங்கல்ப சூர்யோதயத்தில் இரண்டாம் காண்டத்தில் எங்கு வருகிறது என்று காட்டுங்கள். நானும் அலுவலக வேலை முடிந்தவுடன் வீட்டில் உள்ள காபியை எடுத்துப் பார்க்கிறேன். இரண்டாவதாக, நீங்கள் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பாஷ்யத்தைப் படிக்காமல் அர்த்தம் கொள்ளுவதாகத் தெரிகிறது. பரமத பங்கத்தில் ஒன்றையும், அதற்கு நேர்மாறாக இங்கு வேறொன்றையும் கற்பிக்க தேசிகர் ஒன்றும் பைத்தியக்காரர் அல்ல.

    “அவர்களுடைய தலையில் காலை வைப்பேன்” என்றது அவர்கள் வைக்கும் தவறான வாதத்தைத் தீர்த்துக்கட்டுவேன் என்பது தான். தேசிகரோ எந்த பரம ஆச்சாரியாரோ தம் வாழ்நாளில் யாரையாவது இப்படி காலால் உதைத்ததாகவோ, யாரையாவது சித்திரவதை செய்ததாகவோ எந்த வரலாறும் இல்லை.

    பாரதியார், காந்தி – இவர்கள் காலத்திற்கு முன்பாகவே 11-ஆம் நூற்றாண்டிலேயே பிறவி வேறுபாடு பாராமல், அனைவரையும் அரவணைத்துள்ள ஒரு சம்பிரதாயத்தின் ஆச்சாரியார்களை உண்மைக்கு மாறாக இழிவுபடுத்திக் காட்டுவது அனைத்து ஹிந்துக்களாலும் கண்டிக்கத்தக்கது.

    வைணவர்களை “இழிகுலத்தவர்”, “காமாந்தகர்கள்” என்றும், ஹிந்துக்கள் அனைவரும், ஏன், உலகில் உள்ள ஏனைய மதத்தவர்கள் கூட போற்றும் கீதையை வீரமணியுடன் கைகோர்த்தார்போல “கொலைநூல்” என்றும் (“Song Divine – Christian commentaries on the Bhagavad Gita” என்னும் நூலில் கீதையைப் பார்த்து கிறித்தவர்கள் மிகவும் பொறாமைப்படுகின்றனர்), கண்ணனை மோசடிக்காரன் என்றும் கூறும் பகவத் துவேஷ பக்ஷத்தை முதலில் மாற்றினால் எல்லாம் சரியாகும்.

    ஆதி சங்கரர் விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில், “எந்த தேசத்தில் பெருமாளைத் தூற்றுகிராரோ, அந்த தேசத்தில் வாழ்வது பெரும் பாவமாகும்” என்று முழங்கியுள்ளார் (“விச்வம்” என்ற நாமத்திற்குண்டான பாஷ்யத்தைக் கண்டுகொள்ளவும்).

  124. திரு கந்தர்வன் அவர்களே

    ///வைஷ்ணவ ஆச்சாரியார்களையும் வைஷ்ணவத்தையும் தூற்றுவதையே சிலர் இங்கு தம் வாழ்நாளின் நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று தெரியவருகிறது!
    வேதாந்த தேசிகரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து விட்டு///

    நான் ஸ்ரீ தேசிகர் என்ற சொல்லை எங்கும் குறிப்பிட்டதே இல்லை. நீங்கள் திரு ஜடாயுவின் தேசிகர் பற்றிய கூற்று தவறு என்றும் தேசிகர் சைவர்கள் மீது துவேஷமே காட்டாதவர் என்றும் கூறியதால் அதில் உள்ள உண்மையின்மையைச் சுட்டவே நான் அந்த மேற்கோள் காட்டினேன்.

    நான் எக்காலத்திலும் இங்கோ வேறெங்கோ எந்த ஹிந்து மத சித்தாந்த்தையுமே குறைபட்டது என்றோ தவறானது என்றோ கூறாதவன். ஆனால் தங்களோ சைவ சித்தாந்தக் கட்டுரைகளே தமிழ் ஹிந்துவில் வரக்கூடாது என்று கோரி வருபவர். பிரசித்தாந்தக் கருத்துக்களில் உள்ள பிழைகளைத்தான் சுட்டுவதாகக் கூறிவருபவர். ஸ்ரீ தேசிகர் கூட சைவ சித்தாந்தத்தை கண்டித்தார் என்றும ஆனால் சைவர்களுக்கு நற்கதி வேண்டினார் என்றும் கூறுபவர். தற்போதும் கூடத் தாங்களே காட்டிய தமிழ்ப் பாட்டில் என்ன இருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.
    //தந்தமதி யிழந்தரனார் சமயம் புக்குத்
    தழல்வழிபோய்த் தடுமாறித் தடுத்து வீழ்ந்தீர்///

    ஸ்ரீ தேசிகர் சைவர்களைப் பார்த்து “மதியிழந்து சைவ சமயம் புகுந்து தடுமாறி விழுந்துவிட்டீர்கள்” என்று கூறினால் சைவ சமயம் புகுந்தவர்கள் முட்டாள்கள் என்பதுதானே இதன் பொருள்? அது சைவர்கள் மீது காட்டும் அன்பா? அல்லது வெறுப்பா?

    அன்பரே, இதற்கு முன்னர் எப்போதும் நான் ஸ்ரீ தேசிகர் எழுதியவற்றில் இப்படிப் பகுத்து எந்த விஷயத்தையும் எங்குமே விமரிசித்ததில்லை. இந்த நிலைக்கு நானும் வரக்கூடாதென்றுதான் கண்டபடி மேற்கோள் காட்டி வாதம் செய்ய இது இடமில்லை என்று நானும் மீண்டும் மீண்டும் கூறிவருகிறேன்.

    நான் வெறுமனே ஸ்ரீ தேசிகரின் ஒரு ஸ்லோகத்தைச் சுட்டிக் காட்டினேன். அதன் மீது எந்த commentary -யும் செய்ய வில்லை. ஆனால் நீங்களோ நான் எழுதாததர்கெல்லாம் பாஷ்யமே எழுதிவிட்டீர்கள். தங்கள் மறுமொழியில் கூறியபடிக்கு நான் எதையுமே எழுதவில்லை என்பதே உண்மை. தங்கள் பாஷ்யம் என் சித்தமல்ல.

    மாற்று சித்தாந்தங்களை மதியுங்கள் என்று கோருவது ஒற்றுமைக்காகவே. ஆனால் தங்களோ மீண்டும் மீண்டும் சைவசித்தாந்தம் தவறு என்று கூறிவருகிறீர்கள். அது சரியல்ல.

  125. திரு உமாசங்கர் அவர்களே,

    இந்த விவாதம் முடிந்து விட்ட நிலையில் மறுபடியும் கேள்விகளை எழுப்பி உள்ளீர். இப்படி சுற்றிச் சுற்றி அதே வாதத்தை மீண்டும் மீண்டும் வைப்பது தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவிற்குப் பெரும் தலைவலியைத் தான் தரும். வேதாந்த தேசிகர் பார பக்ஷம் பாராத பரம காருணிகர் என்று சொன்னேன். அதை நீங்கள் “தவறான தகவல்” என்று நிரூபிப்பதில் குறியாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், நான் மட்டும் இக்கட்டுரையில் “தவறான தகவல்கள் உள்ளன” என்று மறுமொழி இட்டதைக் கண்டு நீங்கள் ஆட்செபித்தீர்களே!

    நான் சைவ சித்தாந்தத்தைக் குறைகூறவேண்டும் என்னும் நோக்கத்துடன் இங்கு எழுத வரவில்லை. நான் எங்குமே சைவ சித்தாந்தக் கட்டுரைகளை இங்கு இடக்கூடாது என்று முறையிடவும் இல்லை. அவரவர் சித்தாந்தத்தைப் பற்றிப் பொதுத் தளங்களில் பெருமை பேசிக்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் அப்படிப் பொதுத்தளங்களில் பேசும்பொழுது வியாசர் முதலிய ரிஷிகளையும், மற்ற தெய்வங்களையும் நிந்திப்பது தவறு என்று தான் கூற வந்தேன். வைணவர் ஒருவர் பொதுத்தளங்களில் சிவனைக் கண்டபடி தாழ்த்தி எழுதியிருந்தால் அவரிடமும் இதையே சொல்லியிருப்பேன்.

    // ஸ்ரீ தேசிகர் சைவர்களைப் பார்த்து “மதியிழந்து சைவ சமயம் புகுந்து தடுமாறி விழுந்துவிட்டீர்கள்” என்று கூறினால் சைவ சமயம் புகுந்தவர்கள் முட்டாள்கள் என்பதுதானே இதன் பொருள்? அது சைவர்கள் மீது காட்டும் அன்பா? அல்லது வெறுப்பா? //

    பரிபூரணமான அன்பு தான் அது. இதைத் தான் நீங்கள் புரிந்துக் கொள்ளவில்லை. “சம்சாரிகள் உண்மையை அறியாமல் தடுமாறி விழுந்துள்ளனரே, அவர்களுக்கு மெய்ப்பொருளை எடுத்துச் சொல்லவேண்டுமே” என்று நினைப்பவர் பரம காருணிகர் தான். மேலும், “மந்தமதிகள்” என்று கூறியிருப்பது எந்த ஒரு வியக்தியையும் நிந்திப்பதாக எடுக்க இடமே இல்லை. மதி வேறு, ஆன்மா வேறு. மதி (புத்தி) என்பது ஆன்மாவுடைய baggage.

    ஒருவர் மெய்யான அக்கறையுடன் “உங்கள் பாதை சரியாக இல்லை. அதை நீங்கள் திருத்தவில்லை என்றால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்” என்று கூறுவாரானால், அவர் “வெறுப்பு உடையவர்” என்று கூறுவீர்களா? உங்கள் பார்வையில் உங்கள் பாதை சரியாகக் கூட இருக்கலாம். ஆனால், அயலவர் ஒருவர் “மிக உயர்ந்த ராஜமார்க்கம் இருக்கும் பொழுது சந்து பொந்துகளில் போய் சிக்கித் தவிக்கிறானே” என்று உங்கள் மேல் அக்கறை காட்டினால், அதை நீங்கள் மறுத்தால் “உங்கள் அக்கறைக்கு நன்றி” என்று கூறலாம். அல்லது சக்தி இருந்தால் அவருடன் விவாதம் நடத்தி உங்கள் வழியையே சரி என்று நிரூபித்துக் காட்டலாம். இது தான் நாகரீகம். உங்கள் பார்வையில் சரி என்று பட்டதை வேறொருவர் தவறு என்று கருதி அதற்குப் பரிகாரம் காட்டினால் அவரை “காழ்ப்புணர்ச்சி உள்ளவர்” என்று கூறுவீர்களா?

    // அன்பரே, இதற்கு முன்னர் எப்போதும் நான் ஸ்ரீ தேசிகர் எழுதியவற்றில் இப்படிப் பகுத்து எந்த விஷயத்தையும் எங்குமே விமரிசித்ததில்லை. //

    அப்படி நீங்கள் விமர்சித்தால் ஏதோ குடிமுழுகிப் போய்விடும் என்று எண்ணுகிறீர்கள். “நாம் வாதம் புரிவதைப் பார்த்து அந்நிய மதத்தவர்கள் தாக்குவார்கள்” என்றெல்லாம் சொல்வது பயன்தாங்கோளித்தனம். அப்படி அந்நியர்கள் தாக்கினால், “உங்களுடைய கத்தோலிக்க-புரோடச்டண்டு, ஷியா-சுன்னி bloodshed battle அடிதடிகளைக் காட்டிலும் நாங்கள் புரியும் bookshed battle வாதப்போர் எவ்வளவோ பரவாயில்லை” என்று எடுத்துக் காட்டலாம். உண்மைகளை மறைப்பதனாலும் திரித்துச் சொல்லுவதானாலும் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும், ஏனென்றால் எப்படியாவது உண்மை வெளிவரும்.

    // மாற்று சித்தாந்தங்களை மதியுங்கள் என்று கோருவது ஒற்றுமைக்காகவே. ஆனால் தங்களோ மீண்டும் மீண்டும் சைவசித்தாந்தம் தவறு என்று கூறிவருகிறீர்கள். அது சரியல்ல. //

    மீண்டும் — நான் எங்குமே “சைவ சித்தாந்தம் தவறு” என்ற எண்ணத்துடன் எதையும் எழுதவில்லை. அப்படி ஒரு ஆச்சாரியார் சொல்லியிருந்தால் அதை “உள்ளபடி உரைத்தல்” என்ற protocol படி, “இந்த இந்த ஆச்சாரியார் இந்த இந்த சித்தாந்தத்தைப் பற்றி இப்படி இப்படி கூறியுள்ளார்” என்று தான் கூறி வருகிறேன். அதுவும் தேவையில்லாமல் இவ்விஷயங்களை அடியேன் எங்குமே எடுத்து அனைவர்க்கும் அம்பலப்படுத்தவில்லை.

    இந்தக் கேள்விக்குப் பதில் கூறுங்கள். சங்கரர் பௌத்த, ஜைன, வைசேசிக, கணாத, சாருவாக மதங்களைக் கண்டித்துள்ளதால், “சங்கரர் பௌத்தர்களையும், ஜைனர்களையும், வைசெசிகர்களையும், சான்கியர்களையும், சாருவாகர்களையும் வெறுத்தார்” என்று கூறுவீர்களா?

    // தேசிகர் சைவர்கள் மீது துவேஷமே காட்டாதவர் என்றும் கூறியதால் அதில் உள்ள உண்மையின்மையைச் சுட்டவே நான் அந்த மேற்கோள் காட்டினேன் //

    இதை என் மறுமொழியில் தவறு என்பதை நிரூபிக்க முன்வந்துள்ளேன். உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால் அதற்குத் தக்க காரணத்தை இடவும்.

  126. திரு கந்தர்வன் அவர்களே

    ///இந்த விவாதம் முடிந்து விட்ட நிலையில் மறுபடியும் கேள்விகளை எழுப்பி உள்ளீர். இப்படி சுற்றிச் சுற்றி அதே வாதத்தை மீண்டும் மீண்டும் வைப்பது தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவிற்குப் பெரும் தலைவலியைத் தான் தரும். ///

    நான் ஒருமுறை வைத்த வாதத்தை மீண்டும் வைத்தது இல்லை. தாங்கள்தான் அவ்வாறு செய்கிறீர்கள். இதற்கு முன்னர் எப்போதும் ஸ்ரீ தேசிகர் பற்றி நான் குரிப்பிடாதபோதும் இவ்வாறு கூறுவது வியப்பளிக்கிறது. சுற்றிச் சுற்றி அடிமுடிகானாப் புராணத்தில் தவறு என்று மலையையே சுற்றி வருவது நீங்கள்தான். சுற்றிச் சுற்றி அதே வாதத்தை மீண்டும் மீண்டும் வைப்பது தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவிற்குப் பெரும் தலைவலியைத் தான் தரும் என்பதைத் தாங்கள் புரிந்து கொள்வது நலமே.

  127. //எல்லாப்பிரிவுகளையும் சேர்ந்த ஹிந்துக்களுக்குக் common interest என்று ஒன்று உள்ளது. அதாவது —

    (1) மதமாற்ற சூழ்ச்சிகளைத் தகர்த்து எறிவது,
    (2) பசுவதையைத் தடுப்பது,
    (3) ஆலயங்களின் ஸம்ரக்ஷணம்,
    (4) ஆகம ஸம்ரக்ஷணம்,
    (5) ஆரிய-திராவிட இனவெறி அரசியலை எதிர்ப்பது,
    (6) ஹிந்தி-ஸம்ஸ்க்ருத-தமிழ் சர்ச்சைகளை எழுப்புவோரை எதிர்ப்பது,
    (7) ஹிந்து சம்பிரதாயங்களைப் புண்படுத்துமாறு பொது ஊடகங்களில் வருவதை எதிர்ப்பது,
    (8) தாழ்த்தப்பட்டோர்களுக்கு வழிபாட்டு முறைகளை accessible-ஆகச் செய்வது,
    (9) சிறுபான்மையின அரசியல் மூலம் ஹிந்துக்களை marginalize செய்வது

    முதலிய விஷயங்கள். இவற்றையே இம்மாதிரியான தளங்களில் முன்வைப்போம்.//
    அன்புள்ள அனைத்து நண்பர்களுக்கும் ,
    திரு கந்தர்வன் ஐயா அவர்களின் கருத்துக்களே இன்றைய நமது அவசிய அவசர தேவை என நினைக்கிறேன். தயவு செய்து இக்கருத்துகளை மட்டும் மேற்கொள்ள பரிசீலிக்க வேண்டுமாய் வேண்டுகோள் வைக்கிறேன்.
    இக்கருத்தினை மொழிந்த திரு கந்தர்வன் அவர்களுக்கு நன்றிகள் பல.

  128. அனைத்து விவாதங்களையும் படித்த அடியேனுக்கு வியப்புதான் ஏற்பட்டது. ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், தான் வந்த மரபை விட்டுக்கொடுக்க மனம் இசையார் என்பதையே மேற்படி விவாதங்கள் காட்டுகின்றன என்பத மட்டும் நிச்சயம். படித்தோர் நிலையே இதுவெனில் பாமரர் நிலையை சொல்லவும் வேண்டுமோ?

    எல்லை இல்லா இறைதத்வத்தை இன்னான், இனையான், இன்னபெயருடையான், என சிறுவட்டத்திற்குள் அடைப்பது அறிஞர் செயலா? இவ்வாறு சிறுவட்டத்திற்குள் இறைதத்வத்தை அடைக்கமுற்படுவோர், சைவராயினும் சரி, வைஷ்ணவராயினும் சரி, ஏன்,
    பிற சமயத்தாராயினும் சரி, அவர்கள் ஆன்மீகத்திற்கு உலை வைப்போரே.

    ஒன்று மட்டுமே இறையாக இருக்கமுடியும் என்னும் தர்கரீதியான உண்மை இவ்வாறான வீண் வாதங்களால் மறைக்கப்பட்டுவிடும் என்பது ஏன் கற்றோர் மத்தியில் எடுபடுவதே இல்லை என்பது அடியேனுக்குப் புரிவதே இல்லை. ப்ரஹ்மம் ஒன்றே என்பதுதானே மறைகளின் திரண்ட கருத்து?

    ப்ரஹ்மம் ஒன்று தான் என்பதை தமது திரண்ட கருத்தாக மறைகள் கொள்ளுமாயின் அவை ஏன் பல பெயர்களை குறிப்பிடுகின்றன என்பதை விளக்கவேண்டும் அல்லவா? இதன் காரணம் மிக எளிமையானது. மறைகள் ஒரே எழுத்தாளரால் படைக்கப்பட்டனவன்று. பல்வேறு பெரியோர்கள் தத்தம் இறை அனுபவங்களை உரைத்ததின் தொகுப்பே அவை. அவரவர்கள் தமது மனதிற்கு இனிமையாகப்பட்ட பாவனைகளில் ஒரே இறைவனை சுட்டிக்காட்டியதால். பல பெயர்கள். இந்த உண்மையை நாம் ஏன் ஏற்க மறுத்து தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுகின்றோம்? இதுவும் இறைவிளையாட்டே அன்றி வேறென்ன?

    (edited and published).

  129. திரு கந்தர்வன் அவர்களுக்கு, வணக்கம்.
    இங்கு நாம் பேசுவது அனைத்தும் வாதமன்று. கருத்து பரிமாற்றமே. இக்கருத்து பரிமாற்றமும் விஷயம் அறியாதோர் அறிய வேண்டியே. தம் முடிபு கொண்டு அதனை தாபிக்க புகின் மற்றையோரும் அவ்வாறே புகுவர்.
    இங்கே முனைவர் அய்யா இயம்பியதற்க்கு தாங்கள் இலக்கண விளக்கம் கூறினீர். அது இங்கு தேவையா?அனைத்து பெயரும் சிவபெருமானை குறிக்கும் என்பது வேதம் விதித்த விதி வாக்கியம்.ஆகவே இங்கு வேண்டுவது பொருள் பற்றிய வாதம் அன்றி எழுத்து இலக்கணம் பற்றி அன்று.
    இன்னும் தாங்கள் திரு பாலாஜி அவர்கள் சிவன் வேறு ருத்ரன் வேறு என்பது வேத கொள்கை அன்று எனும் கருத்தினை உடன்பட்டு வேதத்தில் ருத்ரன் எனும் பெயர் சிவனுக்கே என கூறினீர். ருத்ரன் எனும் பெயர் மஹா ருத்ரனாகிய சிவ பெருமானையும், மும் மூர்த்திகளில் ஒருவராகிய குண ருத்ரனையும், அக்னி தேவனையும், அட்டதிக் பாலகரில் ஒருவனாகிய ஈ சானனையும் , ஏகாதச ருத்ரர் பதினோரு வரையும், பத்து திசையிலும் உள்ள நூ ற்றி எட்டு ருத்ரரையும் குறிக்கும். அதற்கு இடத்திற்கு ஏற்ப பொருள் கொள்ள வேண்டும். என்னையெனின் அரி எனும் சொல் அரனின் சக்தியாகிய தேவியையும், திருமாலையும் ,குரங்கையும், சிங்கத்தையும், மரத்தையும் குறிக்க அதற்கு இடத்திற்கு ஏற்ப பொருள் கொள்ளா கால் மாற்று கருத்துடையார் விபரீத பொருள் கொள்வர். எனவே இடத்திற்கு தக பொருள் கொள்க.

  130. “அத்வைதம் சதுர்த்தம் ப்ரம்ஹ விஷ்ணு ருத்ராதீதம் ,ஏகமா சாஸ்யம் பகவந்தம் சிவஹ” – (இரண்டற்றவரும் ,சதுர்த்த சப்த வாச்சியரும், பிரம விஷ்ணு ருத்ரரை கடந்தவரும், உபாசிக்க தக்கவரும் ,ஏகரும், சாட் குணிய சம்பன் னரும் ஆன சிவபெருமான் ) – இது அதர்வண வேத பஸ்ம ஜாபால உபநிஷத்
    “ஜாகரீதே ப்ரம்ஹா: ஸ்வப்னே விஷ்ணு; ஸுஷிப்தௌ ருத்ர; துரீய மக்ஷரம்” – (சாக்கிரம், சொப்பனம் , சுழுத்தி எனும் முன்று அவஸ்தைக்கும் முறையே பிரமன், விஷ்ணு, ருத்ரன் எனும் மூவர். அம்முவருக்கும் துரீய பொருள் அக்ஷரம்”) இது யசுர் வேத பிரமோபநிசத். அந்த அக்ஷரபொருள் சிவம் என்பது ” ஸதா சிவோ ஷரம்” எனும் திரி புர தாபினி உபநிசத் கொண்டு அறியலாம்.
    “சாந்தம் சிவ மத்வைதம் சதுர்த்தம் ” இது மாண்டுக்யம் இன்னும் இதே பொருள் பட நரசிம்ம பூர்வ தாபினி, உத்திர தாபினி , நாரத பரிவ்ராஜகம், ராம உத்தர தாபினி எனும் உபநிசத் புகலுமாறும் அறியலாம். சதுர்த்தம் எனும் வாக்கியம் மும் மூர்த்தியையும் கடந்த நான்காவது தெய்வமான சிவத்தை குறிப்பதே!
    “அகாரம் ப்ரம்ஹாணம்,உகாரம் விஷ்ணு , மகாரம் ருத்ரம் ,ஓங்காரம் சர்வேச்வரம்” எனும் நரசிம்ம தாபினி உபநிசத் நான்காவது பொருளை புகல்வது அன்றோ! பஸ் ம ஜாபாலம் ” கைலாச சிகார வாஸ மோங்கார ஸ்வரூ பிணம் மகாதேவம் ” என்பது அந்நான்காவது பொருளையே!
    “ப்ரம்ஹ விஷ்ணு ருத்ரேந்த் ராஸ்தே ஸம்ப்ர ஸுயந்தே ஸர்வாணிசேந்ரியாணி ஹைபூதைர் நகாரணம் காரணாநாம் த்யாதா காரணந்து த்யேயஸ் சர்வைஸ்வர்ய ஸம்பந்நஸ்சர்வேஸ்வரச் சம்புராகாச மத்யே” – (பிரமன் -, விஷ்ணு, உருத்திரன்,இந்த்ரன் ஆகிய இவரெல்லாம் படைக்க படுகின்றனர்.இந்த்ரியங்கள் எல்லாம் பூதங்களோடு பிறப்பிக்க படுகின்றன. எனவே அவர்களும் அவைகளும் காரணமாகா. தியாதா ஆகிய அவர்களால் தியானிக்க படும் தியேய னெனும் சர்வ ஐஸ்வர்ய சம்பன்னன் சர்வேஸ் வரனும் சம்பு சப்த வாச்சி யனும் பரமா காச மத்தியில் ( சித் பர வியோமம் – ஞா னாகாசம்- சித் சபை -சிற்றம்பலம்) இருப்பவனும் ஆகிய சிவபெருமானே காரணன்” – இது அதர்வ சிகை உபநிசத்.
    இவற்றில் எல்லாம் மும் மூர்த்தியை கடந்த நான்கவது தெய்வமாகிய சிவபெருமானுக்கும் மும் மூர்த்தியில் உள்ள ருத்ரனுக்கும் வேறுபாடு வேதம் முழங்க அதனை இல்லை என மறைப்பது கதிரவனை கையால் மறைப்பது ஒக்கும்.
    இப்படி கூறின்அது வாய்மை ஆகுமோ? அதனை தங்கள் நாயகனான ஸ்ரீமன் நாரணனே அறிவான்.
    இதனை அறிந்தே

    “மூவர்க்கும் முதல்வ ரானார் ”

    “முன்பினார் மூவர் தாந்தொழும் முக்கண் மூர்த்தி” – ஸ்ரீமத் ஞான சம்பந்தர் தேவாரம்
    திருவாசகத்தில்
    “மூவர் கோனாய் நின்ற முதல்வன் ”

    “முந்தும் நடுவும் முடிவுமாகிய மூவர் அறியா”

    “மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் ”

    “மூவராலு அறி யொணா முதலாகிய ஆனந்த மூர்த்தியான்”

    “மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் காணா சிவபெருமான் ” என ஸ்ரீமத் மணிவாசக பெருந்தகையும்

    திருமந்திரம்

    ” அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை ” என ஸ்ரீமத் திருமூலரும் அருளி உள்ளனர்.

  131. வேதத்தில் இவ்வளவு ருத்ரனுக்கும் சிவபெருமானுக்கும் வேறுபாடு கூ ற வேதத்தில் இல்லை என்பது என்ன காரணம் பற்றியோ?
    இன்னும் திரு பாலாஜி அவர்கள் சிவமும் ருத்ரனும் வேறு எனில் ஏன் சிவாக்ஷம் என குறைவில்லை என கேட்டுள்ளார். “புருஷ” என்ற வார்த்தை பற்றி வியாக்கியானம் எல்லாம் வேதத்தில் படித்தவருக்கு இது தெரியாது இருக்காது. இருப்பினும் சொல்கிறோம்.
    மும் முர்த்திகளிலும் ருத்ர மூர்த்திக்கு சிவ பெருமானின் பெயரும் வடிவமும் தொழிலும் விளங்க இருப்பவன் உருத்திர மூர்த்தி என்பது விஷ்ணு அம்சமாகிய வியாச பிரான் சொன்ன பதினெண் புராணத்தில் ஒன்றாகிய சைவ புராணத்து வாயு சம்கிதை காண்க.இன்னும் ஸ்காந்த புராணத்தும் காண்க.
    “தச்சக்த்யாதிஷ்டிதச்சச்வத்தச்சிஹ்நைரபிசிஹ்நித;”
    “தந்நாமநாமாதத்ரூபஸ்தக்கார்ய்யகரணஷம; ”
    “தத்துல்யவ்யவஹாரச்சததாஜ்ஞாபரிபாலக;” – — சைவ புராணம்.
    எனவே ருத்ரனுக்கும், சிவ பெருமானுக்கும் உள்ள இயைபு காண்க.மும் மூர்த்திகளும் பசுக்களே என (ஸ ர்வே தேவா:பசுதாமவாபு – சரபோ உபநிசத்) (ப்ரம்ஹ விஷ்ண்வீசாநேத்ந்ரா தீநாம் நாம ரூபத்வாராஸ்தூலோ ஹமித் யத்யாஸவசாஜ்ஜீவ -நிராலம்ப உபநிசத்) வேதம் கூ ற உருத்ரனுக்கு மட்டும் என்னை யுயர்வு எனின், அவர் உள்ளே சத்வமும் வெளியே தம் தொழில் பற்றி வெளியே கோபமும் உடையவர் ஆதலால்.
    இந் நியாத்தால் தான் பிரம,விஷ்ணு இருவரும் அடிமுடி காணாது அலமந்த இடத்து ருத்ரன் ஆங்கு இல்லையாம்.இன்னும் பிரம்ம விஷ்ணு இருவரும் தம் தொழில் நிமித்தம் எப்போதும் தொழில் இயற்ற ருத்ர மூர்த்தியின் தொழில் சம்ஹாரமாகிய முடிவில் இருப்பதால் அவர் எப்போதும் சிவபூசையில் இருக்கின்றார். எனவே சைவர்களால் வழிபட பெறுகின்றார்.
    இது ராஷச புராணம் என மறுக்கபுகின் அது யோக்கியமாகாது. அன்றியும் அவரே வியாசருக்கு இழிவு ஏற்படுத்தினோர் ஆவார். என்னை எனின் தவறை போதித்த குற்றம் விஷ்ணு அம்ச வியாசருக்கு சம்பவிக்கும்.
    இன்னும் விஷ்ணுபுராணம் மூன்றாம்அம்சம் ஆறாம் அத்தியாயம் “பிரம்மம், பத்மம், வைஷ்ணவம், சைவம்,(தேவி) பாகவதம், நாரதியம், மார்கண்டேயம், ஆக்னேயம், பவிஷ்யம்,பிரம்ம கைவர்த்தம், லிங்கம், வராகம்,ஸ்கந்தம், வாமனம், கூ ர்மம், மத்ஸ்யம், கருடம், பிரமாண்டம் என்கிற இவை அனைத்தும்இதுவே. அதன் முறையும் இதுவே. இவை சிருட்டி திதி சம்ஹாரம் வம்சம் மன்வந்தரம் இவற்றை தெரிவிக்கின்றன.” எனும் விஷ்ணு அம்ச வியாசர் கூ ற்றை அவமதிப்போரே வியாசரை அவமதிப்போர். எனவே அஷ்டா தச புராணமும் பிரமாணமே.
    இது அறியாது சிவாஷம் என ஏன் கூ றவில்லை என கேட்பது முறையோ? இம்முறை பற்றி ஏன் புருஷ ஸுக்தம் என வேண்டும் , நாரண ஸுக்தம் எனலாமே என அறிந்தோர் கேட்பின் என் செய்வீர்?

  132. இன்னும் சிவ- ருத்ர வேதம் சைவ சித்தாந்தத்தை வேறு எவற்றிலும் இல்லை என்பது என்னோ?
    பிரம்மசூத்திரதிற்கு பாஷ்யம் கண்டோரில் காலத்தால் முற்பட்டவரான ஸ்ரீமத்நீலகண்டர் தமது பாஷ்யத்தில் “வேதம் சிவாகமம் இரண்டிலும் பேதமில்லை” (வயந்து சிவாகம யோர் பேதம் ந பச்யம: வேதோபி சிவாகம:) என கூறியபடி சிவாகமம் கூறிய சித்தாந்தம் வேத சம்மதமே. வேதம் (ஆகமஷ்ய விரோதே ந ஊஹனம் தர்க்க உச்யதே என) ஆகமத்தை ஏற்க காமிக ஆகமமும் (வேதாந்தார்த்த மிதஜ்ஞானம் வேதஸாரமிதந் தந்த்ரம் – சித்தாந்தம் வேதஸாரத்வாத்) கூறுகின்றது.
    பஸ்ம தாரணம் ,ருட்ராக்ச தாரணம், சிவபூசை, பஞ்சாட்சரம் அனைத்தும் வேதத்திலும்,சிவாகமத்திலும் ஒருங்கே காண்க.
    சிவானந்தம்- பிரம்ம ஆனந்தம், சிவ ஞானம் – பிரம்ம ஞானம், சிவலோகம் – பிரம லோகம் சிவ ஞானி -பிரம ஞானி அனைத்தும் காண்க.
    இவ்வளவும் இருக்க சிவ ருத்ர பேதம் சித்தாந்தத்தில் இருப்பது- சித்தாந்த கருத்து சர்ச்சைக்கு உரியது என்பது என்னோ? ஏற்க மனமில்லை என கூறலாமே.

  133. இன்னும் யசுர் வேத யோக சிகோப நிசத்

    “சதுச்ரம் தரண்யாதௌ ப்ரம்ஹமா தத்ராதி தேவதா/
    அர்த்த சந்த்ராக்ருதி ஜலம் விஷ்ணு தஸ்யாதி தேவதா /
    த்ரிகோணமண்டலம் வஹ்நீ ருத்ரஸ் தஸ்யாதி தேவதா/
    வாயோர்பிம்பந்து ஷ ட்கோண மீச்வரோஸ்யாதி தேவதா/
    ஆகாசமண்டலம் வ்ருத்தம் தேவதாஸ்யா ஸதாசிவ/”
    எனவும்,

    ஸாம வேத யோகா சூடாமணி உபநிசத்

    “தேஷாம்பஞ்சபூதாநாம்பதய; பஞ்ச ஸதாசிவேச்வர ருத்ர விஷ்ணு ப்ரம்ஹ்மாணச்சேதி”
    எனவும்

    ஸாமவேத தர்சனோபநிசத்

    “ப்ரம்ஹா ணம் ப்ருத்வீ பாகே விஷ்ணும்தோயம்சகேததா /
    அக்ந்யம்சேசமஹேசாந மீச்வரம் சாநிலாம்சகே /
    ஆகாசாம் சேமஹாப்ராஜ்ஞ தாரயேத்து ஸதாசிவம்/”

    எனவும் வருதலால் சித்தாந்தத்தில் உள்ள அனைத்தும் காண, வேதாந்தம் சித்தாந்தம் அனைத்தும் ஒரு பெற்றியே இயம்ப சித்தாந்தம் எப்படி சர்ச்சைக்கு உள்ளாகும்?

    “த்யாயம்ச் சதுர்முகாகாரம் சதுர்வக்த்ரம் ஹிரண்மயம்தாரயேத் பஞ்சகடிகா ப்ருத்வீ ஜயமாப்நுயாத்” என வருதலில் பிரமனை உபாசித்து ப்ருத்வீயை வெல்லுதலும்,
    “ஸ்மரந் நாராயணம்தேவம் சதுர்பாஹீம்கிரீடிநம் / தார யேத் பஞ்ச கடிகாஸ் சர்வ பாபை; ததோ ஜலாத்
    பயம் நாஸ்தி ஜலேம் ருதுர் நவித்யதே ” என்றலின் படி நாராயணனை உபாசித்து அப்புவை வெல்லுதலும் ,
    “த்ர்யஷந்து வரதம் ருத்ரம் தருணா ஆதித்ய ஸ்ந்நிபம் / தார யேத் பஞ்ச கடிகா வஹ்னி நாஸவ்த்க்யதே ” – ருத்ரரை உபாசித்து அக்னியை வெல்லுதலும் ,
    “தாரயேத்தத்ரஸர்வக்ஜ்ஞ மீச்வரம்விச்வதோமுகம் /தாரயேத்பஞ்ச கடிகா வாயுவத் வ்யோம கோபவேத் மரணம் நதுவாயோஸ்துபயம் பவது யோகி ந;” என்றலின் படி சர்வக்ஞனான மகேஸ்வரனை உபாசித்து வாயுவை வெல்லுதலும் ,
    “ஆகாசேவாயுமாரோப்ய ஹகாரோபரிசங்கரம்/ பிந்துரூபம் மஹாதேவம் வியோமகாரம்சதாசிவம் /சுத்த ஸ்படிக சங்காசம் த்ருதபாலேந்து சேகரம் / உமார்த்த தேஹம்வரதம் சர்வகாரணகாரணம்/ யத்ர குத்ரஸ்திதோவாபி ஸுகமத்யந்தமச்நுதே;/ என வருதலால் சர்வ காரணத்திற்கும் காரணனான சதா சிவ மூர்த்தியை உபாசித்து ஆகாயத்தால் ஒரு கேடுமின்றி உய்தலும் அறியப்படும். இந்த சுருதி வசனத்தின் முன் சைவ சித்தாந்தம் சர்ச்சைக்கு உரியது என்பது வாக்கியம் உறுதி வாக்கியம் ஆமோ? நன்று! நன்று!

    திரு சாரங் அவர்கள் விளக்கம் கூறியவரை அவர் வியாகரணம் கற்கவில்லை என இகழ்வது ஏனோ? அனைத்தும் கற்றவரும் இல்லை – கற்றவரிடத்தும் குற்றம் வருவதும் உண்டு எனவே அடுத்தவரை இகழ்வது நன்றன்று. ” அடக்கம் அமரருள் உய்க்கும் ”
    நாரணன் என வரும் இடமெல்லாம் அது சிவனை குறிக்கும் என அர்த்தமன்று. இடத்திற்கு தக்கவே குறிக்கும். அதனை முன்னும் உரைத்தோம். இல்லை எனின் முரணாகும். என்னையெனின் ஓரிடத்து “நாரணனும் நான்முகனை படைத்தான் நான்முகனும் தான்முகமாய் சங்கரனை படைத்தான்” எனபதற்கு விரோதமாய் “பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே படைத்தான்” என்பது முரணுமே. இதற்கு நீர் சொல்வீர்? இது கொண்டு மற்றவர் இகழலாமோ? எனவே “யாகாவார் ஆயினும் நா காக்க”
    இன்னும் ஏன் அவ்விடத்தில் நாரணன் என பேர் கொண்ட சிவன் விஷ்ணுவை படைக்க வில்லை என கேட்டீர். ருத்ரன் என்ன? பிரமனே ஒரு கற்ப்பத்தில் மகா ஸ்காந்த உபதேச காண்டத்தின் ஐம்பத்தி ஐந்தாம் சுலோகத்தின் படி “சிவ பிரசாத வலிமையால் பிரமன் ஒரு கற்பத்தில் விட்டுணுவை உலகத்தோடு விழுங்கி இருந்து பின் அபான வழியாக படைத்தான்.”என்பது காண்க. இந்த புராணமும் விஷ்ணு அம்ச வியாச புரோக்தமே. இவ்வாறு கற்ப பேதத்தால் ஒருவர் மற்று இருவரை படைத்தல் புராண சம்மதமே. இதன் படியே ஒரு கற்பத்தில் பிரமன் படைத்தல் தொழில் தொடங்க அறியாது மயங்க ருத்ரன் அவனுடைய நெற்றியில் தோன்றி வந்தனன் என்பதும் காண்க. இவனையே சிவன் என்று கொண்டு மத அபிமானத்தால் வெருட்டுவோறும் உண்டு.அதெல்லாம் சழக்குரையே அன்றி வழக்குரை ஆகுமோ? இந்த ருத்ரன் அழுத போது அவனுக்கு பிரம்மன் பவ,சர்வ,ஈசான ,பசுபதிர்,ருத்ர, உக்ர, பீமா,மஹ தூர்தேவ என பரமாத்மாவின் நாமங்களை இட்டான். இந்த ருத்ரன் நீல லோகிதனே.
    நாரணன் எனும் பெயரை சிவபெருமானுக்கும் நாரணனுக்கும் முறைப்படி ஏற்று கொண்டதால் தான் சைவர் அனைவரும் தம் மக்களுக்கு நாரணன், கிருஷ்ணன்,சிவராமன்,வேங்கட நாதன் என பேதமின்றி அழைத்து மகிழ்கின்றனர்.யூகித்து உணர்க. என்னையெனின்
    “போஹிர்பவானி புருசேஸி விஷ்ணு
    கோபேது காளி ஸமரேஸுதுர்கா” எனும் வேத வாக்கியத்தின் படி விஷ்ணு சிவ சக்தியாதலால் விஷ்ணு சைவர்களுக்கு விரோதமானவர் அன்று. சைவர்கள் என்றும் விஷ்ணுவை இகழ்வதில்லை.

  134. முதற்கண் அடியேன் முனைவர் ஐயா அவர்களையும், திரு உமா சங்கர் அவர்களையும் , திரு மயூரகிரி சர்மா அவர்களையும் இன்னும் நடுநிலையோடு எழுதுவோரையும் வணங்கி கொள்கிறேன்.
    நான் திரு. கந்தர்வன் அவர்களை கேட்பது வியாசர் விஸ்வ நாதர் சந்நிதியில் கூறியது நடந்ததா? இல்லையா? முதற்கண் அதனை உறுதி படுத்த வேண்டும். இல்லை எனின் யாமும் உண்டு தக்க நூல் (இன்னும் சொல்லின் தங்கள் நூல்) கொண்டே உறுதி படுத்துவோம்.
    இரண்டு தேசிகர் அவர்கள் சைவர்களை அற்பமதியோர் என கூறி விட்டு அவர்க்காக பிரார்த்திப்பதாக கூறினீர். அதுவும் வாத்ஸல்யத்தால் கூறினார் என்றீர். முன்னே இயம்பியது என்னோ?
    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனி இருப்ப காய் கவர்ந்தற்று”
    “இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது ” என்னும் எல்லோர்க்கும் பொதுவாகிய பொய்யா மொழிக்கு என்னோ கதி. நன்று.
    இதனை அனுவதித்தே பாடிய
    “வெட்டனவை மெத்தனவை வெல்லாதாம் வேழத்தில்
    பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது- நெட்டிருப்பு
    பாரைக்கு நெக்கு விடா பாறை பசுமரத்தின்
    வேருக்கு நெக்கு விடும்”
    எனும் தமிழ் மூதாட்டியின் மூதுரை மூத்து வழக்கொழியுமோ ? இனி நல்வழி படுத்துவோர் அனைவரும் இவ்வழியே நடக்க கடவர். அதன் பயன் எப்படியோ? தங்கள் நியாயம் தெரிந்து இருப்பின் வள்ளுவரும்,மூதாட்டியும் அவ்வாறு பாடாமல் மாற்றி இன்னாது கூற சொல்லியே பாடி இருப்பார். நன்று. நன்று. நீங்கள் சொன்னால் அறிந்ததை எடுத்துரைப்பது, மற்றவர் கூறின் அது விதண்டா வாதம்.
    இன்னும் ஸ்ரீ பாஷ்யம் பற்றி நீர் கூறின் அதிலும் யாமும் விளங்க எடுத்துரைப்போம். யாமும் அதனை கண்ணுற்றவரே.
    இதுமட்டோ இன்னும் “சிறியார் சிவப்பட்டார் ” எனும் வாக்கும்அது போல பல வாக்குகளும் தங்கள் இரகசிய கிரந்தங்களில் உள்ளதே. அந்த வாக்கியத்தை எல்லாம் யாம் உதகரிப்பின் நன்றாக இருக்காது. இதெல்லாம் தாங்கள் ,நாங்கள் அறியாதது அல்ல. “அவ்வளவில் அவன் மகிழ்க” என செல்வதே ஆகும். இன்னும் தாங்கள் எவனோ ஊளை இட்டதற்கு வக்காலத்து வாங்கியதாக இயம்பினீர்.தங்களுக்கு அக்கவலை தேவை இன்று.உண்மைக்கு புறம்பாய் இயம்புவோர் எல்லாம் எரிவாய் நரகுக்கு இரையாவோரே.
    பின்னும் சிவபெருமான் பிரமன் தலை கொய்து பிரமஹத்தி என எவரேனும் ஊளை இட்டால் என் செய்வீர் என அச்சுறுத்தினீர். இன்னும் பாடவில்லையோ? இனிமேல் வந்து ஊளை இட்டு தான் அக்குறை தீருமோ? வேண்டும் நேரத்தில் வேண்டியதை மறப்பிரோ? எல்லா பாடலும் படிக்கவில்லையோ? ஊளை இட்டு அதற்க்கு தக மறுப்பும் கொடுத்தாயிற்று.
    சைவ சமயம் என்பது உவமை இலா கலை ஞானமான அபரஞானம் (வேதம்,சிவாகமம்,திருமுறை ஆகியவற்றால் பெற்ற ஞானம் ) கொண்டு உணர்வரிய மெய்ஞானத்தை (அனுபூதி ஞானத்தை ) தலைப்பட முயற்சிப்பதே ஆகும். இதனை ஸ்ரீமத் வாகீசர் அருளிய
    “வெவ்வேறு சமயம் பற்றி எரிவினாற் சொன்னரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும் ” எனும் தமிழ் வேதம் பற்றியும் ,
    “கற்க இடர்ப்பட்டு கற்றதெல்லாம் கற்றவர்பால்
    தர்க்கமிட்டு நாய்போல சள்லெனவோ -நற்கருணை
    வெள்ளமடங்கும் விரி சடையார்க்கு ஆளாகி
    உள்ளமடங்க அல்ல வோ. – ஸ்ரீமத் குருஞான சம்பந்தர் வாக்கின் படியும் அனுபூதி ஞானம் கொண்டு சிவ கதி ஏகவே அன்றி இவ்வார்த்தை விளையாட்டிற்கு அன்று. இன்னும் தாங்கள் எது கூறினும் யாமும் தக்க நியாயம் காட்ட வல்லோம். எற்றுக்கு எனின் மற்றவர் மயங்காதிருக்கும் பொருட்டு.

  135. திரு செந்தில்,

    விவாதம் ஓரளவு முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து ஆறிப்போய்விட்ட சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளீர்கள். அதையும் ஒரு மாதம் கழித்துப் பார்த்த நான், “இதற்கு ஒன்றும் கூற வேண்டாம்” என்று நினைத்திருந்தேன். எனினும், உங்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளேன். காரணம், நீங்கள் நீங்கள் என்னைக் குறிப்பிட்டு எழுதியதைப் பார்த்து விட்டு பதில் கூறாமல் இருப்பது அநாகரீகம் என்று கருதியே.

    ஒரே வரியில் உங்களுக்குப் பதில் கூறிவிடுகிறேன் — காலாவதியாகிவிட்ட இந்தச் சர்ச்சையில் இப்போது இறங்க எனக்கு விருப்பமில்லை.

    அது கிடக்கட்டும். நான் இத்தளத்தில் எழுதும் கட்டுரைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்வியோ, சந்தேகமோ, கருத்தோ, புதிதான விளக்கமோ இருந்தால் அங்கே மறுமொழியிடவும்.

    நன்றி. இனி இக்கட்டுரைக்கடியில் நான் மறுமொழியிடப்போவதில்லை. இது கருதி உங்களையும் ஆசிரியர் குழுவையும் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  136. திரு கந்தர்வன் அவர்களுக்கு,
    வணக்கம்.
    நானும் இந்த தளத்தை தினமும் பார்வை யிடினும் விவாதத்தில் கலந்து கொள்ளாது ஒரு பார்வையாளனாக இருந்தேன். சிவபெருமானை குறை சொல்வதே என் குறிக்கோள் என கூறுவோர் பற்றி எமக்கு கவலை இல்லை.
    ஆனால் அதற்காக அடிப்படையான வேதம், உபநிஷத் , சாஸ்திரம் ஆகியவற்றை மீறி ,வரம்பு அழித்து நடுநிலை தவறி தன்னுடைய திறன் கொண்டு வெருட்டும் பொது அதனை காணாது இருக்க எம் மனமிடம் கொடுக்க வில்லை.
    இரண்டு மாதம்என்ன ? இரண்டு வருடம் ஆயினும் பதில் கொடுக்க வேண்டும் என நினைத்தே பதில் எழுதினேன். உண்மைக்கு முரணாக வந்த செய்திகளுக்கு நான் என் தரப்பு பதில்களை அடிப்படை வேத உபநிஷத் கொண்டு கூறினேன். இதில் சர்ச்சை எங்கு முடிந்தது? எங்கு ஆரம்பித்தது? இது என்றும் ஆறாத சர்ச்சையே. என்னையெனின் தாம் தம் கொள்கை பற்றி மற்றையோரை தாழ்த்தினால் மற்றையோர் தம் கொள்கை நிருபிக்க வேண்டிய அவசியம் வந்து விடும்.
    நாம் சொல்லியதற்கு நீங்கள் வேத, உபநிஷத் கொண்டு மறுக்கவும். அதுவே நீதியாம்.
    திருக்குறளுக்கு எழுந்த உரைகளில் பரிமேல் அழகர் உரை சிறப்பு. அப்பெருமகனார் கடவுள் வாழ்த்திற்கு உரை எழுதும் பொழுது தாம் மாற்று சமயத்தை சேர்ந்தவராய் இருப்பினும்
    “கோளிற் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை”
    எனும் குறளுக்கு உரையில் “எண்குணம் என்பது என்ன என அதனை சொல்லி பின் இது சைவ ஆகமங்களில் சிவபெருமானுக்கு குறிக்க பட்டு உள்ளது” என அருளி தன் நடுநிலைமை காத்து கொண்டார். அதுவன்றோ தர்மம்!
    அவ்வாறன்றி தன் திறமை கொண்டு அடிப்படை வேத சாஸ்திரங்களின் வரம்பழித்து வலிந்து பொருள் கொள்வதோ தர்மம்? தர்ம சாஸ்த்ரங்களை இவ்வாறு அலைக்கழிப்பது அம்மா! அறக் கொடிது அன்றோ? இதனை தர்ம தேவதையும் பொறுக்குமோ? எல்லா நல்ல குணத்திற்கும் அடிப்படை தர்மம் அன்றோ? அதனையே அழிக்கலாமோ?
    நாம் சொல்லியதில் பிழை இருப்பின் அதனை தக்க ஆதாரம் கொண்டு எம் கேள்விகளுக்கு தக்க விடை அளித்து மறுக்கவும். தங்கள் ஒருவரி பதிலில் எமக்கு உடன்பாடு இல்லை . தக்க பதில் எனில் நாமும் ஏற்று கொள்வோம். உம்மை பொறுத்து அருள வேண்டியது உம்மையும், எம்மையும் படைத்தது அருளும் இறைவன் கடனே அன்றி, எம் கடன் அன்று. நன்றி.

  137. திரு செந்தில் அவர்களே,

    மறுமொழிக்கு நன்றி.

    இங்கு விவாதிக்கப்பட்டது சிவபரத்துவமோ விஷ்ணுபரத்துவமோ அன்று. “நாராயண” என்ற பதம் ரூடி பதம், அதை ஆகுபெயராக்கி விட முடியாது என்பதே எமது நிரூபணம். அதற்கான காரணங்களையும் மேலே இட்டு விட்டதாயிர்று. வேதாந்த கௌஸ்துபம் முதலிய நூல்களில் வெகு விரிவாக விவாதிக்கப்பட்டுவிட்டன. அங்கு கண்டுகொள்ளவும். இவ்விஷயத்திற்குத் திரும்பிப் போக வேண்டாம்.

    நீங்கள் காட்டிய வாக்கியங்கள் பற்றி நிறைய வாத-பிரதிவாதங்கள் உண்டு, அவற்றை நான் இங்கு வைத்தால் சிலர் மனம் புண்படும், பலர் எனக்குச் “சமயவாதி” என்ற பட்டம் கட்டிவிடுவர். இவ்விவாதங்களை நிகழ்த்துவதற்கு இத்தளம் சரியான மேடை அல்ல. ஆகையால், அதற்குரிய இடத்தில் இவை பற்றிக் கேட்டுக்கொள்ளவும். உங்களுக்கு வேண்டுமானால் என் தளத்தில் தனிப்பட்ட முறையில் என்னைத் தொடர்பு கொள்ளவும்:

    https://tinyurl.com/2efz3an

    மேலே உள்ள இடத்தில் தொடர்பு கொண்டால் அவ்வாத-பிரதிவாதங்கள் உள்ள புத்தகங்களின் பெயரை எம்மால் உமக்கு அனுப்ப இயலும். விருப்பம் இருந்தால் நீங்கள் அவற்றை வாங்கிப் படித்துக் கொள்ளலாம்.

  138. திரு செந்தில்,

    இங்கு நான் நடத்திய விவாதம் சிவபெருமானைச் சிறுமைப்படுத்தும் நோக்கத்தோடோ, விஷ்ணு பரத்வ – சிவா பரத்வ விவாதத்தைப் பற்றியோ அல்ல. ‘நாராயண’ என்பது ரூடியாகத் திருமாலைத் தான் குறிக்கும், ஆகுபெயராக எடுக்க இடமில்லை என்று சமஸ்கிருத இலக்கணத்தின் முறைப்படி விளக்கினேன். இலக்கணத்தை மீறி வேத வாக்யங்களுக்குப் பொருளுரைக்கலாகாது என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டால் இது உங்களுக்கு நியாயமாகப் படும். ஆகுபெயராய் எடுக்க வேண்டுமானால், “நாராயந” என்று தான் இருந்திருக்க வேண்டும். ஆகவே, “நாராயண பரம் பிரம்மா, தத்வம் நாராயண பர, நாராயண பரோ ஜ்யோதி ஆத்மா நாராயண பர” முதலிய பிரசித்தமான தைத்திரீய நாராயண சூக்த மந்திரங்களுக்கு வேறு விதமாகப் பொருளுரைக்கலாகாது.

    மற்றபடி, நீங்கள் குறிப்பிட்டுள்ள வாக்கியங்கள் (த்ரிமூர்த்தி அதீத வாக்கியங்கள்) பற்றி நிறைய வாத-பிரதிவாதங்கள் உண்டு. அவற்றை விவாதிக்க இது தக்க இடமும் இல்லை, ஏனெனில் அது சமயவாதத்தில் கொண்டு போய் முடியும். ஆசிரியர் குழுவும் இம்மாதிரி விவாதங்களை இங்கு வளர்க்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், எந்த அத்வைத-விசிஷ்டாத்வைத-த்வைத வேதாந்தியும் கீதை கூறும் தத்வங்களுக்கு எதிரானதை ஏற்க மாட்டர்.

    இதையும் மீறி உங்களுக்கு வாத-பிரதிவாதங்களில் ஆசை இருக்குமாயின், அதற்குப் பல நூல்கள் உள்ளன. அவற்றில் கண்டுகொள்க. இதற்கு மேலும் தகவல் தேவையானால், என்னுடைய கீழ் குறிப்பிடப்பட்ட தளத்தில் என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டால், அப்புத்தகங்களின் பெயர்களை உங்களுக்கு இடத் தயாராக உள்ளேன்:

    https://bhagavatas.blogspot.com/p/contact-us.html

    நன்றி.

  139. திரு செந்தில் அவர்களே,

    வணக்கம். நான் சிவபெருமானைச் சிறுமைப்படுத்த வேண்டி எதையும் இங்கு எழுதவில்லை. “நாராயண” என்பதில் உள்ள ’ண’-காரத்தால் ஆகுபெயர் ஆக முடியாது என்று சில உதாரணங்களைக் காட்டினேன். “நாராயந” என்பது “நரர்களுக்கு அயனமாக இருப்பவன்” என்ற பொருளுடன் உள்ளது, அதுவே ’ஸம்ஞைப்’ பொருளில், அதாவது ஒருவருக்கு உள்ள பிரஸித்தமான பெயரைக் குறிக்க (ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால் proper noun), வரும் பொழுது நகாரம் ணகாரமாக மாறும். “நாராயண” என்பது ’ஸமான பதம்’ (பகாபதம்) ஆகாமையால் “ரஷாப்யாம் நோ ண ஸமான பதே” என்ற விதியை வைத்து இங்கு “ந” காரத்தை “ண” காரமாக மாற்றி விட்டு, அதை ஆகுபெயராகச் சொல்ல முடியாது. அவ்வளவே. உதாரணமாக, “சர்மநாஸிகா” என்ற பதத்தில் “ந” காரம் “ண” காரமாகத் திரியவில்லை என்பதை நோக்குக. ந காரம் ண காரமாகத் திரிய வேறு ஒரு விதி உள்ளது, அதுவும் ஸம்ஞைப் பொருளில், ஆகுபெயரல்லாத பொருளில் தான் உண்டு.

    ஆகையால், “நாராயண பரம் பிரம்மா, தத்வம் நாராயண பர, நாராயணபரோ ஜோதி ஆத்மா நாராயண பர” என்ற இடத்தில் நாராயண பதத்தை விஷ்ணு என்னும் திருமாலுக்கே என்பது சித்தமாகும்.

    நீலகண்ட பாஷ்யம் சங்கர பாஷ்யத்திற்கும் முந்தையது என்பதற்கு எந்த சான்றும் இல்லை. அப்படி இருந்தால் சங்கரரும் ராமானுஜரும் மத்வரும் நீலகண்ட பாஷ்யத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பர்.

    சிவன் வேறு மும்மூர்த்திகளுள் ஒருவனான ருத்ரன் வேறு என்று நீங்கள் படிக்கும் வாக்கியங்களை அனைவரும் வேதத்தின் பகுதியாக ஏற்பதில்லை. இதைப் பற்றி நான் விளக்க வேண்டுமென்றால் சமயவாதத்தில் கொண்டு போய் முடியும். ஆகையால், பலர் மனம் புண்படும். ஆசிரியர் குழுவிற்கும் இம்மாதிரி சமயவாதங்களில் விருப்பமில்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு இதை மீறியும் விருப்பமானால் என் தளத்தில் என்னைத் தனியாகத் தொடர்பு கொள்ளுங்கள், உங்களுக்கு இவ்வாத பிரதிவாதங்களை அடக்கிய புத்தகத்தின் பெயர்களை அனுப்ப முடியும்.

    ஒரே ஒரு சான்று காட்ட வேண்டுமென்றால் அமரகோச என்னும் நிகண்டுவில் மும்மூர்த்திகளை எடுக்கும் இடத்தில், பிரம்மாவின் பெயர்களையும் விஷ்ணுவின் பெயர்களையும் குறிப்பிட்ட பிறகு,

    சம்புரீச பசுபதி சிவ சூலி மஹேச்வர
    ஈச்வர சர்வ ஈசான சங்கர சந்த்ரசேகர
    பூதேச கண்டபரசு கிரீசோ கிரிசோ ம்ருட
    ம்ருத்யுஞ்ஜய க்ருத்திவாஸ பினாகீ ப்ரமதாதிப
    உக்ர கபர்த்தி ஸ்ரீகண்ட சிதிகண்ட கபாலப்ருத்
    வாமதேவோ மஹாதேவோ விரூபாக்ஷ த்ரிலோசன
    க்ருசானுரேத ஸர்வஜ்ஞோ தூர்ஜடி நீலலோஹித
    ஹர ஸ்மரஹரோ பர்க த்ர்யம்பக த்ரிபுரான்தக
    கங்காதரோ அந்தகரிபு க்ரதுத்வம் வ்ருஷத்வஜ
    வ்யோமகேசோ பவோ பீம ஸ்தாணு ருத்ர உமாபதி
    அஹிர்புத்ன்யோ அஷ்டமூர்தி ச கஜாரி ச மஹாநட

    [அமரகோசம், 1.1.72-1.1.82]

    என்று தெளிவாக மும்மூர்த்திகளில் ஒருவரான ஒரே பரமசிவனைத் தான் இங்கு தெளிவாகக் காட்டப்பட்டது. தனியாக ஒரு ருத்ரனும் தனியாக ஒரு பரமசிவ-மஹாருத்ரனையும் இந்நிகண்டு குறிப்பிடவில்லை. ஆகையால், சிவன் வேறு மும்மூர்த்திகளுள் ஒருவரான ருத்ரன் வேறு என்பது சைவ சித்தாந்தத்திற்கே தனிப்பட்ட ஒரு கொள்கை எனத் தெரிகிறது. இதை வைத்து மற்றவர்களுடன் விவாதிப்பது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன்.

  140. // சிவன் வேறு மும்மூர்த்திகளுள் ஒருவனான ருத்ரன் வேறு என்று நீங்கள் படிக்கும் வாக்கியங்களை அனைவரும் வேதத்தின் பகுதியாக ஏற்பதில்லை. //

    மேற்கூறியது சரபோபநிஷத், பஸ்ம ஜாபாலோபநிஷத் முதலியவற்றைக் குறித்தே. மாண்டூக்ய, நரசிம்ம பூர்வ-உத்தர தாபிணி, அதற்வசிராஸ், அதர்வசிகை இவற்றைக் குறித்து அப்படிச் சொல்லவில்லை.

  141. மேற்படி விவாதங்களைக் கண்ட அனைவருக்கும் புரிந்திருக்கும், வேதகாலத்தில் இந்தியாவில் இருந்த வேத மதம், நாளடைவில் வைணவ, சைவ, சாக்த, காணபத்ய, கௌமார, ஸௌர்ய மதங்களாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கிளைகளாகப் பிரிந்தனவே அன்றி, ஹிந்து மதம் என ஒரு பெயரில் ஒருங்கிணையவே இல்லை என்பது. ஒரே இறைவன் தான் அனைத்திற்கும் ஆதாரம், இறைவன் படைப்பே மனிதன் என்பது பொய்யாகி, மனிதன் ‘பற்பல இறைவர்களைப்’ படைப்பித்துக்கொண்டிருக்கிறான் என்பது நிதர்சனமாகிவிட்டதல்லவா? இந்த மாயைக்கு மெத்தப் படித்தவர்களும் பலியாகிப் போனார்கள் என்பதும் உண்மையே அல்லவா?

  142. இறைவன் ஒருவனே அல்லது ஒன்றே ,உருவங்கள் பல என்பதே நமது சித்தாந்தம்.
    அதை மறப்பதேனோ?

  143. சுவாமி விவேகானந்தர் பிராமணர்களைப் பார்த்துக் கூறு முகமாக அவர்கள் ( ஆசாரம், அனுஷ்டானம் இவை பற்றிய) முடிவில்லாத சர்ச்சையில் ஈடுபட்டு காலம் , சக்தி, இவற்றை விரயம் செய்கிறார்கள் .
    அப்படிச் செய்யாமல் தங்களைச் சுற்றியுள்ள வீழ்ந்து கிடக்கும் கோடானு கோடி மக்களை கரையேற்ற முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்
    .

  144. அதர்வண வேத மாண்டூக்யோபநிடதம்-“அமாத்ரச் சதுர்த்தோவ்யவஹார்ய: ப்ரபஞ்சோபசமச் சிவோத்வைத ஏவமோங்கார” என்று கூறுகின்றது. அளவிலாதவராய், வாக்கு வியவகாரத்திற்கு எட்டாதவராய் பிரபஞ்சோபசாந்தராய் அத்வைதராய்(பிரமன்,விஷ்ணு,உருத்திரன் எனும் மூவர்க்கும்) மேலாய நான்காவது தெய்வமாய் ஓங்காரப் பொருளாயுள்ள சிவபெருமானே சைவசமய தெய்வம்.

    தைத்திரியாருணசாகை நாராயணம், “உமாபதயே பசுபதயேநமோநம:’ என்று உரைத்துப் பின் “ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் கிரிஷ்ணபிங்கலம்| ஊர்த்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாயவை நம்:| ஸர்வோவை ருத்ரஸ் தஸ்மைருத்ராயநமோ அஸ்து||’ ‘மஹா தேவாயமஹா ருத்ராய” என்றுயஜுர்வேத பஞ்சப்ரஹ்மோபநிஷத் கூறுகின்றன.

    தமிழ்மறை, “நல்வினைப்பயன் நான்மறையின்பொருள்- கல்வி யாய கருத்தன் உருத்திரன் -செல்வன் மேய திருமழ பாடியை’ எனச் சிவபரம்பொருளை உருத்திரப் பெயரால் கூறுகின்றது

    உருத்திரன் என்பதற்கு, “சமுசாரத் துன்பம் என்னும் சமுத்திரத்தில் கிடந்து வருந்துமுயிர்களைத் திருவருளாகிய தெப்பத்திலேற்றி முத்திக் கரை சேர்ப்பவன்” என்பது பொருள் .
    முத்திக்கரை சேர்க்கும் உருத்திரன் வேறு. பசுக்களாகிய மும்மூர்த்திகளில் ஒருவனாகிய உருத்திரன் வேறு.
    மீண்டும் நாராயணன் என்ற பதத்தைப் பற்றிய கருத்தை நினைவூட்டுகின்றேன்.
    1.நாராயணன் என்ற சொல்லுக்கு நாரத்தை (நீரினை) இடமாகக் கொண்டவன் என்பது பொருளன்று.

    2. உயிர்த்தொகுதியொடு ஒத்து நிற்பவன் என்பதே அப்பதத்திற்குச் சைவர்கள் கொள்ளும் பொருள். நரர் என்பது உயிர்த்தொகுதியைக் குறிக்கும் தொகுதிப் பெயர். ஒத்து நிற்றலாவது உயிர்த்திகுதியோடு ‘அவையேயாய் அவற்றோடு இயைந்து நிற்றல்’. பரப்பிரமப் பொருளாகிய பரமசிவன் மாயோன் முதலியவர்களோடும் அபேதமாய் நிற்பவன். மாயோன் முதலியோரும் உயிர்த் தொகுதியைச் சேர்ந்தவர்களே. மாயோன் முதலியவர்களுக்கு உயிர்களுடன் அவையேயாய் நிற்றல் என்னும் இயல்பு இல்லை.

    3.இவ்வாறு, ‘நர’ என்னும் தொகுதிப் பெயர் ‘நார’ என நீண்டு நிற்கும். இது நாராயணன் என்னும் சொல்லுக்குப் பகுதி என்னும் உறுப்பு எனப்படும்.

    4தொகுதிப் பொருள் ‘அண்’ என்னும் விகுதி பெற்று நிற்பதற்கு விதி உண்டு. அது “பிக்ஷாதிப்ய:அண்” என்பது. ந,அண் ய் நாராய்.

    5′ அண்’ விகுதியின் மேல் ஆதாரப் பொருள் உணர்த்தும் ககர ஙகர இத்துக்களை உடைய யகரவிகுதி (ய்) வந்து சேரும்.

    6. இந்த ‘அண்’ விகுதியும் ‘ய்’ விகுதியும்வது சேரும்போது ‘ந’ என்பது ‘நாரா’ என நீண்டு ‘நாராயண்’ என நிற்கும். இவ்வாறுவிகுதிமேல் விகுதி சேர்ந்து அனைத்தும் ஒருபகுதியாய் நிற்கும்.

    7.இவ்வாறு யகரவிகுதி வர்வதற்கும் வந்தவழி முதல் நீளுதற்கும் விதி, “உபமாநாத் ஆசாரோ”, “கர்து,க்யங் ஸலோபஸ்ய”,”அத உபாதாயா” என்னும் சூத்திரங்கள்.

    8இவ்வாறு எல்லாம்சேர்ந்து ‘நாராய்’ என நின்ற இடத்து அதன்மேல் வினைமுதற் பொருண்மையினை உணர்த்தும் லகர டகர இத்துக்களை உடைய ‘யு’ கர விகுதி ‘அந’ எனத் திரிந்து ‘நாராயந’ என நிற்கும். இந்த ‘அந’ என்பதில் உள்ல ‘ந’ – ‘ண’ வாகத் திரியும். இதற்கு விதி,” யுவோர நா கெள’ நாராய + அந >நாராயண
    வினைப்பெயர் விகுதியின் நின்ற நகரம்ணகரமாய்த் திரிவதற்கு விதி,”ரஷாப் யாம் நோண” என்பது.

    9. இந்த நாராயணன் என்னும் சொல்லின் பகுதி லகர டகர இத்துக்களை உடைய யகர ஈற்றுச் சொல்லாக இருப்பதனால்தான் ‘நாராயணீ ‘ என்னும் பெண்பாற்சொல் வழங்குவதாயிற்று. இவ்வாறு நாராயணன் என்னும்சொல்லைப் பகுபதமாகக் கொள்லாத போனால் ‘நாரயணீ’ என்னும் சொல்வழக்குக்கு இடமில்லையாகப் போகும்.

    10. இரண்டாவது எண்ணில் கூறியுள்ள காரணத்தினால், அதாவது , சிவம் எல்லா உயிர்களுடனும் கலந்து ‘அதுஅதுவேயாய்’ நிற்றலினால்
    ‘நாராயணன்’ என்னும் பெயர் சிவபெருமான் ஒருவருக்கே பொருந்தும்.

    11. நாராயணன் என்பது வேறு ஏதாவது காரணம் பற்றியோ அல்லது இயைபு பற்றி ஆகுபெயராக மாயோனுக்கும் வழங்கப் பெறலாம்.

    உணர்வு சலிப்பு ஏற்படுத்தும் இலக்கணக் கூறுடைய இந்த மறுமொழி மாற்றுக் கருத்துடையவரை மறுக்கவோ உடன்படச் செய்வதற்கோ அல்ல;. என்னுடைய கட்டுரையில் கூறப்பட்ட செய்திகளை உடன்பட்டோருக்கு உறுதி அளிக்கவே.ஏற்கெனவே மனதில் படிந்துவிட்ட கருத்தை யாரும் மாற்றிவிட முடியாது.

    தன்னுடைய கருத்துக்கு ஏற்புடைய சில உபநிடதங்களை மட்டும் ‘பஞ்சோபநிஷத்’, ‘தசோபநிஷத்’எனத் தழுவிக் கொண்டு பிறவற்றை ஏதாவது காரணத்தைச் சொல்லி ஒதுக்குவது சரியல்ல.
    “ஜீவன்முக்தி விதேகமுக்தேயோ ரஷ்டோத்தர சதோபநிஷத: ப்ரமாணம்| “முக்திகோபநிஷத்

  145. ///வேதகாலத்தில் இந்தியாவில் இருந்த வேத மதம், நாளடைவில் வைணவ, சைவ, சாக்த, காணபத்ய, கௌமார, ஸௌர்ய மதங்களாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கிளைகளாகப் பிரிந்தனவே அன்றி, ஹிந்து மதம் என ஒரு பெயரில் ஒருங்கிணையவே இல்லை என்பது. ///

    இல்லை. ஆதிசங்கரர் ஆறு சமயங்களையும் ஒருங்கிணைத்து ஒரே மதமாக ஸ்தாபித்தது வரலாறு. இதற்காக அவர் சமரசம் செய்ததும் அந்த நோக்கில் அனைத்து மூர்த்தங்களையும் பக்தி செய்து ஸ்துதிகள் எழுதியதும் வரலாறு. அவரது காலத்தில் ஒற்றுமையாக இருப்பதாக அவரிடம் வாக்களித்தவர்களில் சிலரது வழித்தோன்றல்கள் அவரது காலத்துக்குப் பின்னர் மீண்டும் பினக்கிக் கொண்டதால் வந்த வினையே இப்போதும் தொடர்கிறது. இன்றும்கூட அனைத்து மூர்த்தங்களையும் பக்தி செய்யும் வண்ணம் திருக்கோயில்கள் பல்லாயிரமாண்டுப் பழமையுடன் திகழ்கின்றனவே.

    இந்த பிரம்ம வாதத்தை சிலர் ஆரம்பித்த நாள் முதலாகவே இந்த வாதத்தை செய்ய இடம் இது அல்ல என்றே கூறிவருகிறேன்.

  146. அன்புள்ள ஸ்ரீனிவாசராகவன், ஸ்ரீதரன்,

    இவ்விஷயத்தில் தங்களுடைய கருத்தையும் உணர்ச்சியையும் மதிக்கிறேன். சர்ச்சைக்குரிய வேத வாக்கிய அர்த்த விசாரம் இங்கு வேண்டாம் என்று முன்னமே அன்பர் செந்தில் அவர்களைக் கேட்டுக் கொண்டோம். ஒருவரை ஒருவர் நண்பர்களாக மதித்து அவரவர் தத்தம் கொள்கையில் உறுதியாக இருப்பதே நல்லது.

    திரு செந்தில் அவர்களே,

    இது வரை விவாதித்தது போதும் என்று நாம் கூறினோமே. நீங்கள் இன்னும் தொடர வேண்டும் என்று விரும்பியதால் நான் மறுமொழியிட்டு, இங்கு இரு நண்பர்கள் “போதும் போதும்” என்று கூறும் வரை சென்று விட்டோம். அவர்கள் கேட்பதை மதிக்காமல் நாம் இருவர் இப்படி விவாதித்துக் கொண்டே இருப்பதா சொல்லுங்கள். நம் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதன் காரணமாக ஆசிரியர் குழுவுக்கும் அயர்ச்சியை ஏற்படுத்துவது நியாயம் அன்று. மீண்டும் கூறுகிறேன் – இத்துடன் நிறுத்திக் கொள்வோம். விவாதத்தை இதற்கும் மேல் வளர்க்க எனக்கு த்ராணியும் அவகாசமும் இல்லை.

  147. அன்புள்ள கந்தர்வன்,

    உபநிஷத்தில் ஸ ஏவ ஸௌம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம். ஸ ஏக்ஷத பஹுச்யாம் பிரஜாயைவ (அது ஒன்று மட்டுமே முதலில் இருந்தது, இரண்டாவதே இல்லாமல்; அது விரும்பியது, நான் பலவாவேன்) என ஐயத்திற்கு இடமின்றி எப்போது ப்ரஹ்மம் ஒன்று மட்டுமே பல அல்ல என ஆணி அடித்தாற்போல் கூறப்பட்டுவிட்டதோ, பிறகு பல கடவுள் இருப்பு என்பதையும் அவர்களுக்கு இன்னின்ன பெயர்கள் இவர்களில் இன்னார் இன்னாரைக் காட்டிலும் பெரியவர் எனவும் வாதிடுவது விதண்டாவாதமும் அன்றி குழந்தைத்தனமானதும் அல்லவா?

    சரி, அந்தக் கடவுள் பெயர் என்னவாக இருக்கக் கூடும் என நாம் விவாதிக்கிறோமா என்றால், எப்போது கடவுள் ஒன்று தானோ அக்கடவுளுக்குப் பெயரே தேவையில்லை என்பது நிதர்சனம் அல்லவா? அவ்வாறு எந்தப் பெயரைக் குறிப்பிட்டாலும் அது மனிதன் வைத்ததாக இருக்குமேயன்றி அது கடவுளே தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்டதாக இருக்கும் என்பது மடைமை அல்லவா? தெரிந்தே இந்த சிறுபிள்ளைத் தனமான வாதத்தில் நாம் என் விழுகிறோம்? இந்த மாயை அல்லது விளையாட்டை வைத்துத் தானே இருக்கும் அந்த ஒரே பேராற்றல் தனது உலக விவகார விளையாட்டை நடத்தியாக வேண்டும்? அதனால் தான் இவ் விவாதம் முடிவின்ன்றி நீண்டே இருக்கும், நமக்கு நல்லறிவு தோன்றும் வரை!!

    இது எக்காலத்திலும் தீர்க்கப்பட இயலாது என்று கருதியே ஆதி சங்கரர் ஒரு முடிவுக்கு வந்து வேடம் சார்ந்த பல்வேறு வழிபாடுகளில் எதைச் செய்தாலும் (கடவுளை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும்) சரி வழிபடல் தான் முக்கியம் என்பதை வலியுறுத்தவே, அவர் காலத்தில் பரவாலாக இருந்த வேதம் சார்ந்த எந்த வழிபாடுகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முயற்சித்தார். அதன் விளைவே அவரது ஷன்மத ஏற்பாடு. எனினும் மக்கள் அவற்றை தனி மதங்களாக மட்டுமே மீண்டும் பார்க்கத் தலைப்பட்டார்களே அன்றி அவரின் உன்னத நோக்கத்தைப் பாக்க மறுத்தார்கள், மறுத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பது தான் நான் சுட்டிக்காட்டிய ”ஹிந்து மதம் என ஒரு பெயரில் இம்மதங்கள் ஒருங்கிணையவே இல்லை” என்னும் உண்மை. சங்கரரும் ஹிந்து மதம் என அவ்வாறு ஒரு பொதுப் பெயரைத் தரவில்லை என்பதும் உண்மை.

  148. நானூறு ஐந்நூறு வருடங்களுக்கு முன் எவருமே எடுத்திராத வாக்கியங்களைக் கொண்டும், அதுவும் சங்கரர் உட்பட எல்லா வேதாந்திகளும் பரதெய்வம் என்று உடன்பட்ட மாயோனின் நரசிங்க முதலிய அவதாரங்களை சிறுமைப்படுத்தும் சமீப படுத்தி எழுதி, அதற்கும் மேலாக முக்திகொபநிஷத் என்ற கற்பனையையும் செய்து “உபநிஷத்” என்று சமீபகாலத்தில் அச்சிட்டதேல்லாம் பிரமாணமாக எடுக்கக்கூடிய உபநிஷத் ஆகாது. அப்படி இல்லை என்றால், “அல்லோபநிஷத்” முதலானவற்றையும் பிரமாணமாக எடுக்கவேண்டி வரும்.

    மாயோன் பசுவா அல்லது பாசத்தை அவிழ்ப்பவனா என்று தெளியவேண்டுமானால்,

    “ஆதி கர்த்தாவாகிய நாராயணன் எனப்படும் விஷ்ணு” (கீதா பாஷ்ய அவதாரிகை), “ஈச்வர சர்வ பூதானாம் என்னும் வாக்கியத்தில் ஈச்வரன் என்று கூறப்பட்டவர் அனைத்தையும் ஆளும் நாராயனனாவார்” (கீதா பாஷ்யம் 18.61) “பகவான் வாசுதேவனை இகழும் தேசத்தில் ஒரு வினாடி கூட காலம் கழிக்காதே” (விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம்) என்று சங்கரர் பாஷ்யங்களில் இட்டமையும் கண்டு ஆராய்ந்து தெளிவோர் தெளியட்டும்.

    அத்துடன்,

    “ஈத்ருகீச்வரோ நாராயண ஆக்யஹா” (பிருகதாரன்யக பாஷ்யம், 3.7.3)

    “வ்யாபன சீலச்ய வாசுதேவாக்யச்ய ப்ரம்மன பரமாத்மனாஹ் உத்க்ருஷ்டம் ஸ்தானம்” (கடோபநிஷத் பாஷ்யம், 1.3.9)

    “ஏஷ தேவோ விஷ்ணுர் அனந்தஹா, பிரதம சரீரி த்ரைலோக்ய தேஹோபாதிஹி, சர்வ பூதானாம் அந்தராத்மா” (முண்டக உபநிஷத் பாஷ்யம், 2.1.4)

    என்று மூன்று முக்கியமான இடங்களில் சங்கரர்-

    “நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்”

    – என்னும் நாராயண காயத்ரியில் வரும் நாமங்களை மிகச்சிறப்பாக உபநிஷத் பாஷ்யத்தில் பரப்பிரம்மமாக எடுத்திருப்பதையும் விஷயம் அறிய விரும்புமவர் கண்டுகொள்ளட்டும்.

    அத்துடன், அமரகோசம் வடமொழி நிகண்டுக்கள் (சொற்களஞ்சியங்கள்) அனைத்திலும், மாயோனுக்கே நாராயண நாமம் குறிப்பிட்டிருப்பதும், வேறு எவருக்கும் அந்நாமம் எடுக்கப்படவில்லை என்பதையும் நடுநிலையாளர் தெளிந்துக்கொள்க.

    இதற்கும் மேலாக பாஞ்சராத்ர அதிகரணத்தில் (பிரம்மா சூத்திரம், 2.2.42-2.2.45) சங்கரர் “பாஞ்சராத்ரத்தில் வரும் ‘நாராயணனே பரமாத்மா’ என்னும் கொள்கையை நாம் ஆதரிக்கிறோம்” என்றும், “அவனையே பஞ்சகால பராயனர்கலாக வழிபட்டு அவனையே அடைய விரும்பும் மார்க்கத்தை நாம் நிராகரிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருப்பதும், நல்லோர் நோககுவார்களாக.

    இதுவும் மாற்றுக் கருத்துடையவரை மறுப்பதற்கோ அவர்களை எம் வழி கொண்டு வருவதற்கோ அல்ல. நம் தரப்பில் உள்ள கருத்துக்களுக்கு உடன்பட்டவர்களுக்கும் தகவல் தெரிய வேண்டும் என்று விரும்பும்பவர்களுக்கும் மாத்திரம்.

  149. உயிரினும் மேலான ஹிந்து சகோதரர்களே நமக்கு மேலே கொடிய நாகம் காத்திருக்கிறது.
    கீழே கொடும் புலி காத்திருக்கிறது
    அதைச் சிந்திப்போமா?
    ஹிந்து சமயம் என்பது ஆயிரக் கணக்கான வித விதமான பறவைகள் புகலிடம் தேடும் ஆல மரம்
    அந்த ஆல மரத்த்தைத் தாங்குபவை ஷண்மதங்கள் என்று சொல்லப் படும் ஆறு பெரும் விழுதுகள். மற்றும் நூற்றுக்கணக்கான சம்பிரதாயங்களான சிறு விழுதுகள்.
    பறவைகளே நீங்கள் அவரவர்களது கானத்தைப் பாடுங்கள்.
    எல்லாம் கேட்க இனிமையே.
    நான் கடைப் பிடிக்கும் தத்துவம் இது என்ற விளக்கமே போதும் அதன் உயர்வைச் சொல்ல.
    மற்றவரது சித்தாந்தம் தாழ்வென்றுகாட்ட முனைவதேனோ?
    ஹிந்து சமயத்தின் அழகே அதன் வித விதமான தத்துவங்களில் தானே உள்ளது?

    Hindu Dharma is a beautiful mosaic of hundreds of panths, philosophies,practices,festivities,dance,music,art,architecture,sculpture etc etc.
    It is like looking at the dance of colors through a kaleidoscope.
    It is at once fascinating and exhilerating.

  150. பெருமதிப்பிற்குரிய முனைவர் அவர்களுக்கு

    தங்கள் பொறுமையான தீர்க்கமான விளக்கங்களுக்கு நன்றி.

    திரு மயூரகிரி சர்மா அவர்கள் எழுதியது போல காஞ்சி தொண்டை மண்டல ஆதீனத்தில் உள்ள சைவானுட்டான விதி குறித்து முன்னரே நான் ஆதீனம் அவர்களை அணுகி விண்ணப்பித்தது குறித்து எழுதியிருந்தேன். சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற ஒரு சவ சமய மாநாட்டில் ஆதீனம் அவர்கள் அருளாசி வழங்கினார்கள். அவ்வமயம் அங்கிருந்த புத்தக சாலையில் இந்த நூலைக் கண்ட நான் அதை வாங்கி ஆதீனம் அவர்களை வணங்கி அவர்தம் கொடுத்து ஆசியுடன் பெற்றேன். அதில் உள்ள ஆசமன மந்திரமாவது : ஓம் ஆத்ம தத்வாய சுவதா, ஓம் வித்யா தத்வாய சுவதா, ஓம் சிவ தத்வாய சுவதா என்பதாகும்.

  151. திரு கந்தர்வன் அவர்களுக்கு,
    ஒவ்வொரு முறையும் முடிக்கும் போதே அடுத்த சர்ச்சைக்கு வித்து இடுவது யாரோ?
    எங்களுடைய கொள்கையில் பதினெட்டு புராணமும்,நூற்றி எட்டு உபநிசதும் நான்கு வேதமும் ஆன்றோர் கொண்ட அனைத்து சாஸ்திரங்களும் பிரமாணமே.
    இவற்றில் புதிதாக சத்வ , ராக்ஷஸ, தாமஸ என நூதனமாக பிரிப்பதில்லை. புதிதாக “உத்தர” பாகங்களை கற்ப்பிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. வைஷ்ணவ கருத்துடைய “கீதையை” நாங்கள் பிரமாணமாக கொள்வதில்லையே அன்றி பொய்,சந்தேகத்திற்கு உரியது என யாண்டும் குறை கூறுவதில்லை. அதனை பிரஸ்தான த்ரயத்தில் ஒன்று என யாவர் கொள்ளினும் எமக்கு குறை இல்லை. தம் கொள்கை தாபிக்க “காத்யாயன உபநிசத்” என எங்களவர் யாரும் உண்டுபண்ணியதில்லை.
    முதலில் வேதத்தில் சிவ-ருத்ர பேதம் இல்லை என்றீர். சான்று காட்டிய பின் அது வேத பகுதியே இல்லை சர்ச்சைக்கு உள்ள பகுதி என்றீர்? இனி எதை ஒப்புவீர்? வேதத்தை பற்றி பேசும் பொது அமர கோசம் என நிகண்டுகளின் பெயர் கொண்டு தாபிப்பீர்.
    சிவ பரமாக வந்த வேத வாக்கியத்திற்கு எல்லாம் பாஷ்யத்தில் வலிந்து நாரண நாமமாக பொருள் கொள்வீர்.ஆனால் அந்த நாமங்களை மறந்தும் சொல்லீர்,அது காதில் விழினும் பொறுக்கீர். வாயார வாழ்த்தீர். . அதனை நாரண நாமமாக தங்களவர் ஒப்பின் தம் மக்களுக்கு யாரேனும் அந்நாமத்தை இட்டுலீரோ? நீங்கள் அடிப்படை இன்றி மறுப்பீர்,சான்று காட்டின் சான்றினையே சந்தேகிப்பீர். நன்று. இனி பேசுவது, வாதம் செய்தல் வீண்.
    “அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றி கூட்டி கொளல்” என்பது தெய்வ புலவர் கட்டளை என யாம் வாளா இருப்பின் மீண்டும் ஏதேனும் கூறி எம்மை மீண்டும் பேச வைப்பீர். யாம் முதன் முறை மறுப்பு எழுதிய அன்றே “அவன் அவ்வளவ்வில் மகிழ்க” என கொண்டே முடித்தோம். இன்றும் அதுவே. நன்றி.

  152. திரு செந்தில்,

    பதினெட்டு புராணங்களும் பிரமாணம் என்றால் ஏனோ விஷ்ணு புராணம் இயம்புவதையும் பாகவத புராணம் செப்பியதையும் நீங்கள் ஒத்துக்கொள்வதில்லை.

    //
    இவற்றில் புதிதாக சத்வ , ராக்ஷஸ, தாமஸ என நூதனமாக பிரிப்பதில்லை
    //

    ஒன்றை நோக்குங்கள்… விஷ்ணு புராணம் பாகவதம் இவை இரண்டுக்கும் பல பிராசீனர்கலாகிய அத்வைத-விசிஷ்டாத்வைத-த்வைத பாஷ்ய காரர்கள் உரையிட்டுக் கொண்டாடியுள்ளனர். இப்படி வேறு எந்த புராணத்தையும் மும் மதத்தவர்களும் கொண்டாடியதில்லை. மும்மதத்தர்களும் வாசுதேவனைத் தம் பாஷ்யங்களில் வேதத்தில் கூறப்பட்ட பரதேய்வமாகச் சொல்லியுள்ளனர். கீதையிலும் “வேதம் அனைத்தும் என்னையே போற்றுகின்றன” (கீதை 15.15) என்று கண்ணன் கூறுவதால், அக் கண்ணனுக்கும் மேலாக ஒன்றைக் கற்பித்தால் அதை ஏற்றுக்கொள்வதில்லை. பிரஸ்தான த்ரயங்களுக்கும், “பிரமமன்யோ தேவகி புத்திர, பிரமமன்யோ மதுசூதன” முதலியவற்றை முழங்கும் வேதத்துக்கும் முரணாக உள்ள ஸ்மிருதி-புராண வாக்கியங்களைத் தட்டிக் கழிப்பதில் ஒரு குறையுமில்லை என்று பூர்வ மீமாம்சை சூத்ரம் ஒன்று உள்ளது. இன் நியாயத்தைச் சங்கரரும் பிரம்மா சூத்ரத்தில் (2.1.1) முன்வைத்து சில ஸ்மிருதிகள் தட்டிக் கழிக்கவேண்டியவை என்று கூறியுள்ளார். நாராயண பட்டதிரியும் நாராயணீயத்தில் தொண்ணூறாவது தச்சகத்தில் இப்படிச் சொல்லியுள்ளார்.

    “வேதம் நான்கு, வேதாங்கங்கள் ஆறு, இதிகாசங்கள் இரண்டு, புராணங்கள் பதினெட்டு” என்பதைப் போல, சைவச் சமயச் சான்றோர்களோ, மற்ற எவரோ, 500 வருடங்களுக்கு முன் “உபநிஷத்துக்கள் நூற்றெட்டு” என்று எழுதியிருந்தால் காட்டுங்கள். அல்லது சரபோபநிஷத், பஸ்ம ஜாபாலம், முதலானவற்றில் உள்ள (மற்ற உபநிஷதுக்களில் இல்லாத) வாக்கியங்களையோ அல்லது அன்நூர்களின் பெயர்களையோ குறிப்பிட்டிருந்தால் காட்டுங்கள். நையாயிக-வைசேசிக மதத்தவர்களுள் பலர் சிவபக்தர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவர் கூட இத்தகைய உபநிஷத்துக்களில் இருந்து ஒரு வாக்கியத்தையும் எடுக்கவில்லை. ஹரதத்தர் நூற்களிலோ, நீலகண்ட பாடியத்திலோ, சிவ தத்துவ விவேகத்திலோ, சிவார்க்கமணி தீபிகையிலோ சர்ச்சைக்குரிய அவ்வுபநிஷத்துக்களில் இருந்து ஏதாவது ஒரு வாக்கியம் இருக்கிறதா என்று ஆய்வு செய்தோ, சைவ சமயச் சான்றோர்கலையோ கேட்டுக் கூறுங்கள்.

    காத்யாயன உபநிஷத் அடையாறு லைப்ரரியில் உள்ளவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வைஷ்ணவர்கள் அல்லர். இதுவும் வைஷ்ணவர்களால் கையாளப்பட்ட உபநிஷதுக்களுள் ஒன்று. இப்படி நடுநிலையாளர்களால் அச்சிடப்பட்டு, பிராசீனரான வேதாந்த தேசிகர் முதலானோரால் கையாளப்பட்டதாக இருப்பதால் இவ்வுபநிஷதும் உண்மை, கல்பிதம் இல்லை என்று தெரிகிறது.

    மேலும், நூர்றேட்டுச் சுவடியில் பிராசீனமான மைத்ராயணி உபநிஷத், நாராயனவல்லி, முதலியவற்றில் பல மாற்றங்கள் உள்ளன. மைத்ராயணி உபநிஷத்துக்கு அத்வைதி ஒருவர் எழுதிய பாஷ்யம் இன்றும் கிடைக்கிறது. அதிலுள்ள விஷ்ணுபரமான வாக்கியங்கள் நூர்றேட்டுச் சுவடியில் உள்ள மைத்ராயணி உபநிஷத்திலிருந்து கழிக்கப்பட்டு விட்டது. நாராயணவல்லிக்கு பட்ட-பாஸ்கர சாயன பாஷ்யங்கள் இன்றும் நூலகங்களில் உள்ளன. அவற்றில் இல்லாத பல வாக்கியங்களை நூர்றேட்டுச் சுவடியில் சேர்க்கப்பட்டு விட்டன.

    “சதுர்த்தம் சிவம் அத்வைதம்” = இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம்… சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகிய மூன்று வியூகங்களுக்கும் காரணமாய் இருக்கும் வியூக வாசுதேவ மூர்த்தியைக் குறிக்கலாம். அல்லது, மும்மூர்த்திகளுக்கும் காரணமாக உள்ள பரவாசுதேவனைக் குறிக்கலாம். பாற்கடலில் பள்ளிகொண்டு “விஷ்ணு” என்ற பெயருடைய பெருமாளையும் பரவாசுதேவனுடைய அவதாரமாகக் கொள்வதால், விஷ்ணுவுக்குப் பரவாசுதேவன் காரணம் என்று கூறுவதில் தட்டில்லை.

    // அதனை நாரண நாமமாக தங்களவர் ஒப்பின் தம் மக்களுக்கு யாரேனும் அந்நாமத்தை இட்டுலீரோ? //

    உங்களுக்கு ரூடி-யௌகிக வித்தியாசம் புரியவில்லை என்று தெரிகிறது. இடத்திற்கு ஏற்ற மாதிரி மற்ற பெயர்களுக்குப் பொருள் மாறும். ஆனால், “நரசிம்மன்”, “லக்ஷ்மீபதி”, “நாராயணன்”, “கிருஷ்ணன்”, “வெங்கடேசன்”,”ரங்கநாதன்”, “ஜகன்னாதன்”, முதலானவை ரூபம் விபவம் அர்ச்சை ஆகிய தனிப்பெரும் பெருமைகளைச் சொல்லுவதால் மற்ற பெயர்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு அப்பெயர்களுக்கு உண்டு என்று வைஷ்ணவர்கள் கொள்வர்.

    // வைஷ்ணவ கருத்துடைய “கீதையை” நாங்கள் பிரமாணமாக கொள்வதில்லையே அன்றி பொய்,சந்தேகத்திற்கு உரியது என யாண்டும் குறை கூறுவதில்லை. //

    சந்தேகத்திற்கு இடமே இல்லை என்பது தானே காரணம்…! எட்டாம் நூற்றாண்டில் சங்கரர் முதல் அண்மை வரை பலர் பாஷ்யம் இட்டுள்ளனர். அவருக்கு முன் பலர் பாஷ்யம் இட்டுள்ளனர் என்று அவரே குறிப்பிடுகிறார். இத்தகைய சான்று “உபநிஷத்துக்கள் நூற்றெட்டு” என்னும் கருத்துக்கு இல்லையே!

    // இனி பேசுவது, வாதம் செய்தல் வீண். //

    இதைத் தான் நானும் முன்பே கூறினேன். இவ்வளவு தூரம் வளர்த்திருக்க வேண்டாம்.

  153. // புதிதாக “உத்தர” பாகங்களை கற்ப்பிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.//

    இப்படி நீங்கள் சொல்லியிருப்பதி புருஷ சூக்தம் பற்றியதானால் அது முற்றிலும் தவறு. தைத்திரீய ஆரண்யகத்தின் மூன்றாம் பிரச்னம், பனிரண்டாம் அனுவாகத்தில் புருஷ சூக்தத்தின் பூர்வ பாகமும் (அதாவது “சஹஸ்ர சீருஷா புருஷ” என்று தொடங்கும் அனுவாகம்), அதற்கு அடுத்ததான பதிமூன்றாம் அனுவாகத்தில் உத்தர நாராயண பகுதியும் (அதாவது “ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச்ச பத்நியௌ” என்று முடியும் அனுவாகம்) உள்ளது. பட்ட பாஸ்கர சாயன பாஷ்யங்களில் உள்ள இப்பகுதியை நவீன கல்பிதம் என்று கூறின் அதற்குப் பண்டிதர் செவி கொடுக்க மாட்டார்.

  154. முனைவர் அவர்களால் கூறப்பட்ட நாராயண நாம விளக்கத்தில் இருந்து…

    // இவ்வாறு யகரவிகுதி வர்வதற்கும் வந்தவழி முதல் நீளுதற்கும் விதி, “உபமாநாத் ஆசாரோ”, “கர்து,க்யங் ஸலோபஸ்ய”,”அத உபாதாயா” என்னும் சூத்திரங்கள். //

    இந்த “உபமாநாத் ஆசாரோ”, “கர்து,க்யங் ஸலோபஸ்ய” எனும் விதிகள் அஷ்டாத்யாயில் 3.1.10-3.1.11 -இல் வரும் விதிகள். இதற்கும், மேலே உள்ளதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று அஷ்டாத்யாயி புத்தகத்தைப் பார்த்தபோது தெரிந்தது. இவ்விரண்டு விதிகளின் விளக்கம் உள்ள அஷ்டாத்யாயி ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகத்தின் இரு பக்கங்கள் இங்கே:

    சுட்டி 1 (விதி 10)
    சுட்டி 2 (விதி 11)

    முனைவர் அவர்களே, ஒரு வேண்டுகோள். நம் இருவருக்குள் ஏகப்பட்ட கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் வியாகரணம் சம்பந்தப்பட்ட விஷயத்தைச் சரிவர ஆராய வேண்டும். எப்படி 2+2 = 4 என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாதோ, அப்படியே வியாகரணத்தில் (சம்ஸ்கிருத இலக்கணத்தில்) கருத்து வேறுபாடு என்பது இருக்க வாய்ப்பில்லை. தப்புக்கனக்கையும் முரண்பாட்டையும் வைத்து சைவ நம்பிக்கையை நிர்மாணிப்பது சைவர்க்குத் தான் கெடுதல் என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர் என்று நினைக்கிறேன். மேலே நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது உங்களுக்கு யாரோ தவறாகத் தகவல் அளித்ததன் விளைவு என்றே நினைக்கிறேன்.

    நான் கூறியுள்ளது பின்வரும் சுட்டியில் நடுநிலையாளர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது:

    சுட்டி 3

    அதில் நமக்குத் தேவையான பகுதி இங்கே:

    //
    >What causes the transformation na-> Na in the words :
    >rAmAyaNa , uttarAyaNa, nArAyaNa ? Clearly the “na”
    >comes in a different pada from the “ra”.
    > We were told it was the rule “pUrvapadAta samj~nAyAm

    > agaH” (8.4.3??)
    >… for nArAyaNa & rAmAyaNa.
    > … Moreover, how does it apply to uttarAyaNa?

    Your explanation and sUtra quotation are correct.
    saMGYA in this case is what is called a “proper noun”
    or a “defined technical term”. In the sense that you
    should not try to get the meaning from the component
    words
    , but from tradition or technical context or a
    naming ceremony.

    nArAyaNa is a name of a person or a deity = “proper
    name” in English.
    //

    மேலே காட்டப்பட்டது சம்ஸ்கிருத ஆர்வலர்கள் குழுவின் ஒரு உரையாடல் பகுதி தான். அவர்கள் நடுநிலையாளர்கள் என்று தான் நினைக்கிறேன். இந்த விளக்கம் தான் வைஷ்ணவரும் கூறுவார். அதைத் தான் நானும் முன்னே இட்டிருந்தேன்.

    ஒன்று செய்வோம்… முடிந்தால் சைவ-வைணவ சமயச் சார்பற்ற வியாகரணப் பண்டிதச் சான்றோர் யாராவது இருந்தால் கேட்போம்.

  155. அன்புள்ள செந்தில் அவர்களே,

    நீங்கள் நிறைய எழுதியுள்ளீர்கள் வாழ்துக்கள்

    உங்களின் நிலைபாடு உங்களது மருமொழியிலேயே நன்றாக தெரிய வருகிறது

    அதென்ன கச்சிதமாக ஒரு மூன்று பேர் மட்டும் நடு நிலையாக எழுதுவதாக உங்களுக்கு தோண்றுகிறது – இது எப்படி சாத்தியப்பட்டது

    மருமொழிகளில் எங்காவது சிவ பெருமானை குரைவாக கூர கண்டீரா – அப்படி எங்குமே இல்லையே –

    மரு மொழிகள் பெரும்பாலும் ஆசிரியர் செய்த சில அர்தங்களுக்கு மறுப்பாகவே வந்துள்ளன மற்றபடி – ருத்திரன் சிவன் இல்லை ஆனால் ருத்ர காயத்ரியில் வரும் புருஷ சப்தத்தின் மூலம் சிவ பெருமான் தான் புருஷன்என்பது தெறிகிறது என்று முன்னுக்கு பின் முரனாக நானோ கந்தர்வன் அவர்களோ சொல்லவில்லயே

    கந்தர்வன் அவர்கள் கூரியது – இப்படி கொண்டால் ப்ரச்சனை வரும் ஏன் என்றால் கருட காயத்ரியிலும் புருஷ சப்தம் வருகிறதே என்பதே

    இதை விடுவோம் – அதர்வ சிரஸிர்க்கு வருவோம் – முதலில் நீங்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் – வேதம் என்பது எப்பொழுதுமே த்ரயி வித்யா தான் – ரிக், யஜுச், சாமம் தான் – மஹாபாரத்தை கூட ஐந்தாவது வேதம் என்று சொல்கிறார்கள் – அதற்காக பஞ்ச வித்யா ஆகிவிடாது. ரிக்கும் சாமமும் ஒரே மந்திரங்கள் தான் – ஸ்வரம் மட்டுமே வேருபடுகிறது – உத்தர மீமாம்சை பாகம் தான் ஒவ்வொரு வேதத்திர்க்கும் உண்மையாகவே வேருபடுகிறது

    கீதை ப்ரமானம் – நீங்கள் ப்ரமான்மாக கொள்ளும் உபநிஷத்களை வாசித்து இருந்தால் கீதை அப்படியே உபநிஷத் சொல்வதை தான் சொல்கிறது என்று தெரிந்திருக்கும்
    பல உபநிஷத் மந்திரங்கல் அப்படியெ வரி மாறாமல் கீதயில் வருகிரது – ஆக கீதயை புரமிட்டு நீங்கள் உபநிஷ்த்தயும் சேர்த்தே தல்லுகிறீர்கள்

    கீதயை வைனவ நூல் என்று சொல்வது உண்மயாகவே சிரிப்பு வருகிறது – மேல் சொன்ன விதியின் படி பார்த்தால் உபநிஷத்கலும் வைனவ நூல் ஆகிவிடும் 🙂 – நீங்களாகவே உஙகள் சார்புகு எதிர்மறையை உண்டுபன்னினார்ப்போல் உள்ளது

    இவ்வளவு எழுதும் நீங்கள் தல புரானம் நான்கு படித்தீர்களா – அதை பற்றியும் அங்கு வந்த ம்றுமொழி பற்றியும் உங்களது கருத்து என்ன

    ஆசிரியர் எதை நோக்கி செல்கிறார் எந்த நூலை மூலமாக வைக்கிரார் அதில் என்ன உள்ளது என்பதைஅறிந்தாதாலேயே மருமொழி இட தொடங்கினோம் – நினைத்தது போலவே இந்தியாவின் ஆன்மீக எழுச்சிக்கு பெரிதும் வித்திட்ட கீதயை பற்றி அபாயகரமான தகவல்கள் புரிதல்கள் தல புரானம் நான்கில் வந்தது

    நீங்கள் ஒருவேலை தல புரானம் நான்கு படித்து மருமொழி ஏதும் இடவில்லை என்றால் அது ஏன் என்று புரிந்துகொள்வது எலிது – சில விவேகமுள்ளவர்கள் அங்கு வாயே திரக்க வில்லை – அது போலே என்று என்னிக்கொள்வேன்

    மற்றபடி உங்களது தமிழ் நன்றாக உள்ளது – குலோத்த கால தமிழ் கேட்ட ஒரு த்ருப்தி தந்தது

  156. Mr.Gandharwan,

    I see you posing / posting your views as a fanatic vaishnava here. Nothing wrong in it. Yet claiming to be a Smartha and acquiring / showing off such divisive view-point is nothing but Guru-droha imho. Now lets see how you respond to the below facts:

    1.
    Acharya Adisankara in Prasnaottara Ratnamalika

    Q. Who is Bhagwan? (Kascha Bhagwan Mahesah?)
    A: Sankara Narayanatmaikah

  157. Utter Siva Nama even unintentionally and get rid of your Karma says …yes … the Bhagavatham.

    Verse 4.4.14
    yath thwAksharam nAma krEritham nrUNam
    sakruth prasangAth agam aasu hanthi tat
    pavithra kIrthIm tham alangkya sasanam
    bhavAn-ahO dhvEshti sivam sivEdhra

    This verse comes in Daksha yagna. Sukarishi sings that the very two
    syllables – thwAksharam – Si vA – even uttered casually – cleanses
    one’s sins, that moment (aasu) itself.

  158. I am sure that the incarnations of Mahavishnu, say Rama or later Krishna, had they desired, could have converted all as Vaishnavaites. Had they propagated the chosen form of Vishnu as the ultimate worship and eschewed out Lingapooja, ridiculing Siva as a ‘DemiGod’ as many do now, we all would have been Vaishnavaites long ago. Why that did not happen?

  159. See Mahabharata Anusasana Parvan chapters 14 – 18,
    where Krishna becomes the disciple of Upamanyu, observes Pasupata
    vrata, and then begets a son called Samba with the blessing of Siva.
    In the same parvan, chapters 160 – 162, Yudhishtra asks Krishna as to
    what Jnana, that Sage Turvasa imparted Krishna, to which He answers that it was
    Siva worship, and calls Siva Sata Rudriya. In fact, Krishna describes
    how Upamanyu granted Him Siva Diksha, in the same parvan chapter 14.

    பெரியபுராணம் – திருமலைச் சருக்கம்

    யாதவன் துவரைக்கிறை யாகிய
    மாதவன் முடிமேல் அடி வைத்தவன்
    பூதநாதன் பொருவருந் தொண்டினுக்கு
    ஆதி அந்தம் இலாமை அடைந்தவன்.

    உபமன்னியுமுனிவர் கிருஷ்ணருக்குச் சிவதீக்ஷைசெய்தமையால், அவரை “யாதவன் றுவரைக் கிறையாகிய மாதவன்முடிமே லடிவைத்தவன் – யாதவன் துவரைக்கு இறையாகிய மாதவன் முடிமேல் அடி வைத்தவன்” என்றார்.

  160. //
    Mr.Gandharwan,

    I see you posing / posting your views as a fanatic vaishnava here.
    //

    Dear Guhan as what you are writing a series of replies and for establishing what 🙂

  161. ஸஹஸ்ர ஷீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் -யஜுர் 31.1

    வ்ராட்புருஷ வடிவத்தைச் சுட்டும் தேவாரம்

    ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்
    ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடையானும்
    ஆயிர ஞாயிறு போலும் ஆயிர நீண்முடியானும்
    ஆயிரம் பேருகந்தானும் ஆரூரமந்த அம்மானே – அப்பர் தேவாரம்- 4-4-8

  162. My dear Guhan,

    Don’t indulge in personal attacks such as calling me “fanatic”. Your mode of debate will make bystanders laugh their lungs out.

    I quoted Sankarar only to show that the opinion that “Narayana/Vishnu is Pasu” is invalid as per Adi Sankara.

    //
    Acharya Adisankara in Prasnaottara Ratnamalika

    Q. Who is Bhagwan? (Kascha Bhagwan Mahesah?)
    A: Sankara Narayanatmaikah
    //

    Kindly quote from authentic texts such as Upanishad Bhashyas, Brahma Sutra Bhashya, Bhashya, Gita, and Sahasranama Bhashya which are undoubtedly authentic texts by the Acharya, if you want to debate. For your kind information, I am not keen at all to debate if you don’t agree to this rule.

    And just to let you know… even today there is a strong smArtha bhAgavata tradition with Sri Sankara as the parama parama guru. Read Narayaneeyam Dasakams 89 and 90 and you will know. Have you heard of Tiruvisanallur Ramasubba Sastrigal? If you have, you wouldn’t have written what you did.

    //
    Utter Siva Nama even unintentionally and get rid of your Karma says …yes … the Bhagavatham.
    //

    Do you think that Vaishnavites are fools to ignore that verse? Those words are not Shuka rishi’s, it is said by Uma Devi in anger.

    As for the Mahabharata verses you quoted, read the Mokshadharma Parva, especially the Brahma-Siva samvAda episode quoted by Adi Sankara in the Brahma Sutra Bhashya 2.1.1, and you will know.

    Cheers, Gandharvan.

  163. >Have you heard of Tiruvisanallur Ramasubba Sastrigal?>Do you think that Vaishnavites are fools to ignore that verse? Those words are not Shuka rishi’s, it is said by Uma Devi in anger.<<

    LOL.. So Bhagavatham was written by Umadevi. Isn’t it!

  164. “Have you heard of Tiruvisanallur Ramasubba Sastrigal?”

    No I know of course Mahaan Sridhara Ayyaval from this village .. great adavaitin. I have a friend from this lineage – they are typical smartas – beyond petty Harihara bheda.

    Btw, what makes you think that Prasnottara Ratamalika is not an authentic source?

    “Do you think that Vaishnavites are fools to ignore that verse? Those words are not Shuka rishi’s, it is said by Uma Devi in anger.”

    LOL.. So Bhagavatham was written by Umadevi. Isn’t it!

  165. “Dear Guhan as what you are writing a series of replies and for establishing what ”

    This:
    I am sure that the incarnations of Mahavishnu, say Rama or later Krishna, had they desired, could have converted all as Vaishnavaites. Had they propagated the chosen form of Vishnu as the ultimate worship and eschewed out Lingapooja, ridiculing Siva as a ‘DemiGod’ as many do now, we all would have been Vaishnavaites long ago. Why that did not happen?

  166. //
    ஸஹஸ்ர ஷீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் -யஜுர் 31.1

    வ்ராட்புருஷ வடிவத்தைச் சுட்டும் தேவாரம்

    ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்
    ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடையானும்
    ஆயிர ஞாயிறு போலும் ஆயிர நீண்முடியானும்
    ஆயிரம் பேருகந்தானும் ஆரூரமந்த அம்மானே – அப்பர் தேவாரம்- 4-4-8
    //

    so purusha suktam was copied from thevaram is it 🙂

    do remember there are equivalent prabandams too – foget that look at purusha suktam in Yajur vedam

    please get in to the crux of the arguments – it is about the authors interpretation of purusha padam and vykarna sastram … and not about who is big

    Dear Guhan – your intentions too are clear now – you simply call one person as fanatic and because he is writing something pro vaishnavic. There are also responses which are very saivic? what do you say about that?

    You have not tried to answer even a single question posed? what is the use of engaging in mud slinging? if you have studied something, please try and respond to the main questions posed?

  167. Guhan,

    Someone writes that Vyasa was a fool and was cursed by Nandi. Someone writes that Bhagavan Vishnu is a Pashu, and so the name Narayana does not apply to Him. You are someone okay with all of this. My point here is not about Narayana-Vishnu or Siva supremacy.

    // Btw, what makes you think that Prasnottara Ratamalika is not an authentic source? //

    Authentic works of Sri Sankara have an unbroken lineage (from 9th-13th Century) of sub-commentaries and cross-references. Brahma Sutra Bhashya, Gita Bhashya, Upanishad Bhashyas, Vishnu Sahasranama Bhashya, and Upadesa Sahasri enjoy that status. Rest of the works attributed to his name do not. This should be the basis for any debate.

    // LOL.. So Bhagavatham was written by Umadevi. Isn’t it! //

    Did I say Bhagavatam was written by Umadevi? Words uttered by Rishis directly are to be taken at face value. Rest should be treated as “so and so said such and such in such and such situation”. To motivate you with this, see what Lord Krishna says:

    //
    10.88.32:

    The Supreme Lord said: If this is the case, We cannot believe what Śiva says. Śiva is the same lord of the Pretas and Piśācas whom Dakṣa cursed to become like a carnivorous hobgoblin.
    //

    would you interpret the above words literally?

    // we all would have been Vaishnavaites long ago. Why that did not happen? //

    Nobody is pushing forward a Vishnu-centric theology down others’ throats here. The debate was totally academic, and based on the following two points:

    (1) As per Vedantic traditions, Purusha Suktam referred to who?
    (2) Is it grammatically correct to split NarayaNa name and apply it on the basis of etymology?

    That’s all! If you are concerned about the above two questions, kindly go through all the posts and respond with what you think.

    Cheers, Gandharvan

  168. Editors, please remove the below section from my previous comment, as it is easy to be misunderstood:

    To motivate you with this, see what Lord Krishna says:

    //
    10.88.32:

    The Supreme Lord said: If this is the case, We cannot believe what Śiva says. Śiva is the same lord of the Pretas and Piśācas whom Dakṣa cursed to become like a carnivorous hobgoblin.
    //

    would you interpret the above words literally?

  169. //
    This:
    I am sure that the incarnations of Mahavishnu, say Rama or later Krishna, had they desired, could have converted all as Vaishnavaites. Had they propagated the chosen form of Vishnu as the ultimate worship and eschewed out Lingapooja, ridiculing Siva as a ‘DemiGod’ as many do now, we all would have been Vaishnavaites long ago. Why that did not happen?
    //

    Dear Guhan,

    this is an absurd view without any logic. MIssonaries and islamists (including Prophet) tried hard to convert hindus to their relgion – this did not happen.

    I am not getting in to samaya fights, only looking at what you said logically

    During Krishana’s time – Sankya matham was a famous religion, Krishna did not try to convert them :-).

    there were a lot of nastikas – they did not convert? there are a lot of nastikas today also?

    do you think Rama and Krishna are the reason why Christianity and Islam exist today – if only they had strongly said hat if you do not accept me – i will throw you in hell, probably hinduism would have been another semetic religion today

    do you think the avataras were taken to spread vaishnavism 🙂

    btw, i did not mean this when i asked “Dear Guhan as what you are writing a series of replies and for establishing what” – i was asking about you calling someone fanatic despite you airing extreme views.

  170. திரு கந்தர்வன்/ திரு சாரங்க் அவர்களே

    1. அடிமுடி காணாத வரலாறு முதலாக ஒவ்வொரு சைவ சித்தாந்தம் விளக்கக் கட்டுரையிலும் விஷ்ணுவே பரமன் என்றவாறான வாதத்தை வைப்பது நாகரீகம் அல்ல என்பதைத்தான் நான் மறைமுகமாக விவேகம் அல்ல என்றும், வேறு பலவிதமாகவும் அவ்வப்போது கூறிவந்தேன். திரு கந்தர்வன் அவர்களது வைணவசித்தாந்த விளக்கத் தொடரில் எந்த சைவ சித்தாந்தியாவது அல்லது அத்வைதியாவது சிவன்தான் பரமன் என்ற ரீதியிலான வாதத்தை வைத்திருக்கிறார்களா என்பதை உணர்ந்து பாருங்கள். விவேகம் என்ன என்பது புரியும்.

    2. இந்த வாதங்களை சைவ சித்தாந்தத் தொடர்களில் நீங்கள ஆரம்பித்த நாள் முதலாக நான் வேதப்பிரமாணம் காட்டி வாதம் செய்ய இடம் இது அல்ல என்று கூறிவந்தேன். தொடர்ந்து வரும் திரு கந்தர்வனின் இப்படிப்பட்ட எழுத்துக்களினால் எற்படும் அலுப்பாலும், கடுப்பாலும் சில சைவ சித்தாந்திகள் திரு கந்தர்வனைப் போலவே வாதம் செய்ய ஆரம்பித்த பின்னர், இப்போதுதான் திரு கந்தர்வன் இங்கு இந்த வாதம் வேண்டாம் என்று கூறுகிறார். தேவையற்ற விவாதங்களை வளர்த்த பின்னால் இப்படிச் சொல்லி என்ன பயன்? இதையெல்லாம் எதிர்பார்த்துதான் ஆரம்பத்திலேயே நானும் திரு ஜடாயு போன்றோரும் இத்தகைய வாதம் இங்கே வேண்டாம் என்றோம். கேட்கவில்லை. இதை முதலிலேயே உணர்ந்து கொள்ளுதல் விவேகம் ஆகும்.

    3. ஆரம்பத்திலிருந்து சமஸ்கிருதம் வேதம் இவற்றை முறையே பயிலாதவர் மத்தியில் இவற்றை முன்னிறுத்தி வாதம் செய்யவேண்டாம் என்று கோரினேன். எடுபடவில்லை.

    4. ‘கீதை எமக்குப் பிரமாணமில்லை’ என்று ஒரு சைவ அன்பர் சொன்னது தங்களுக்கு வேதனை தருவது போலத்தானே நீங்கள் திருமுறைகளைப் பற்றிச்சொன்னபோது சைவ அன்பர்களுக்கு இருந்திருக்கும் என்பதை யோசியுங்கள். ‘கீதை இதிகாசத்தின் அங்கம், அதில் உபநிஷத் சார்ந்த கருத்துக்கள் இருப்பது வேறு விஷயம். நேரடி வேதம் அல்லது உபநிஷத்தின் நிலையை அது பெறமுடியாது’ என்பதுதானே உண்மை.

    5. ‘எமக்குத் தோதுப்பட்டதை ஏற்பேன் பிறதை ஏற்கமாட்டேன்’ என்று சொன்னால் அதையே மற்றவர்களும் சொல்ல ஆரம்பிப்பார்கள் என்பதையும் மறைமுகமாகச் சொல்லிப் பார்த்தேன், எடுபடவில்லை.

    6. வேதமோ, உபநிஷதோ, கீதையோ, திருமுறையோ, பிரபந்தமோ இவற்றால் மட்டும்தான் இறைவனை அடைய முடியும் என்று நமது மதம் சொல்லவில்லை என்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இறைவனை இந்த உருவம்தான் என்று அடைக்கக் கூடாது என்பதால்தானே பலவேறுபட்ட உருவங்களில் பக்தனுக்கு நமது மதம் அறிமுகப்படுத்துகிறது? சிவலிங்கத்தையே அருவுருவம் என்றுதானே தத்துவ ரீதியாக நம் முன்னோர் கூறுகின்றனர்? வேதமும், உபநிஷத்தும், கீதையும்தான் Supreme Court, constituition போன்றது என்றொரு எழுத்தாளர் இங்கே எழுதினார். பக்தனின் உள்ளம் தான் இறைவன் வாழும் இடம், பக்தனின் சிந்தைதான் பிரதானம், பக்தனின் சிந்தனைதான் பிரமாணம் என்பதுதானே உண்மை. இறைவனின் திருவுருவத்தை இந்த மஹான் இப்படிக் கண்டார் என்றெல்லாம் வாதிக்கக் கூடும். அவை யாவும் பக்தன் கேட்ட வண்ணம் அல்லாது வேறில்லை. ஆக இறைவன் எடுக்கும் தோற்றம் பக்தன் முடிவு செய்ததே அல்லாது இறைவன் முடிவு செய்தது அல்ல என்பதுதானே உண்மை. வேதமும், உபநிஷத்தும், கீதையும்தான் பிரமாணம் என்றால் எப்படி இவற்றையெல்லாம் அறியாத பாமரன் முக்தியெய்த முடியும்? அப்படி இதையெல்லாம் அறியாத யாரும் முக்தி அடையவில்லையா? கண்ணப்ப நாயனார் முதல் எத்தனை எத்தனை உதாரணங்கள் உள்ளன? பக்தன்தான் இறைவனை உணரமுடியும், வேறு எந்த உந்துதலும் வெளித் துணையே ஆகும். இறைவனை உணரும் உயர்ந்த பக்குவ நிலையை எய்த சிலருக்கு/ பலருக்கு வெளித்துணை உதவலாம், ஆனால் இவை போன்ற வெளித்துணை இல்லாமல் இறைவனை உணரும் பக்குவம் வரவே வராது என்று சொல்ல முடியாதே.

    7. இதில் ஏன் மறு மொழி இடவில்லை அதில் ஏன் இடவில்லை இந்தக் கேள்வி இத்தோடு நான்கு முறை திரு சாரங்க் அவர்களிடமிருந்து எனக்கு வந்துவிட்டது. நீங்களும் கூட எத்தனையோ கட்டுரைகளில் மறுமொழி இடவில்லை, திரு சாரங்க் அவர்கள் சாதீயம், தீண்டாமை குறித்த தமது கருத்துக்களை மந்த்ராலயம் கட்டுரையில் ஏன் கூறவில்லை என்று நான் கேட்டேனா? இதெல்லாம் ஒரு பொருட்டாகுமா? சிலவிஷயங்களை சில சமயங்களில் ignore செய்வது விவேகத்தின் பாற்பட்டதே. இடம், பொருள், ஏவல் என்பது குறித்து அவ்வப்போது நான் குறிப்பிட்டதைக் கவனத்தில் கொள்ளவும். சாதீயம், தீண்டாமை இவற்றை கண்டிக்காமல் ignore செய்வதே முறையற்றது.

    8. ஆதிசங்கரர் எழுதிய உரைகளை, அவரது அயராத உழைப்பை நீங்கள் உங்களது சித்தாந்தத்துக்காக, பிரம்ம வாதத்துக்காகப் பயன்படுத்தும்போது, அவர் வாழ்ந்துகாட்டிய விதமாக அனைத்து இறைமூர்த்தங்களையும் பக்தி செய்து வாழவேண்டாமா? அவர் கடைப் பிடித்த சமரச மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டாமா? அவர் கடைப் பிடிக்காத ‘மறந்தும் புறம் தொழாமை’யைக் கடைப்பிடிக்கலாமா? அவரது அத்வைத சித்தாந்தத்தைப் புறம் தள்ளலாமா? ஆதிசங்கரரின் பாஷ்யங்களில் பிரம்மவாதத்துக்குத் தோதான பகுதியை எடுத்துக்கொண்டு அத்வைத சித்தாந்தத்தை புறம் தள்ளுதல் முறையா? என்ற வினாக்களை நான் எழுப்பினால், நான் எழுதுவது தமது ஆக்க பூர்வமான முயற்சிகளுக்கு “அபவாதமாக” இருக்கிறது என்றார் திரு கந்தர்வன். அதனால் நானவரது எழுத்துக்களுக்கு மறுமொழி செய்வதை நிறுத்திய பிறகும் அவர் தமது பிரம்ம வாதத்தை விட்டாரில்லை. ஆக, அவரது ஆக்க பூர்வமான முயற்சிகளுக்குத் தடை அவரிடத்திலேயே இருக்கும் பிரம்ம வாதம்தான் என்பது தெளிவாகிறதல்லவா?

    9. சாதீயம் நமது மதத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரம்ம வாதத்தில் சாதீயத்தின் ஓர் அடித்தளம் அமைந்திருப்பதை நான் மறைமுகமாகச் சுட்டியும் பலனில்லை. இதுதான் எனது அனைத்து மறுமொழிகளுக்கும் மூல காரணம் ஆகும்.

    10. நமது திருமடங்களின் சொத்துக்களை கோயில்களின் சொத்துக்களைப் போலவே சுரண்ட சில அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இவற்றுக்கு அஸ்திவாரமாக சில அந்தணர்கள் கூடத் தத்தம் சுய நலம் கருதி வகை செய்திருக்கிறார்கள்/ செய்து வருகிறார்கள். இவை போன்ற பல தரப்பட்ட பிரசினைகள் சூழ்ந்த இந்தத் தருணத்தில் நமது கவனத்தை இப்படி பிரம்ம வாதத்தில் சிதறவிடக்கூடாது.

    11. நான் சொல்வது எதுவும் தனிப்பட்ட ஓரிருவரைப் பற்றியல்ல என்பது, இதிலுள்ள பெயர்களை நீக்கி கருத்துக்களை மட்டும் படித்தாலே புரியும்.

  171. “Dear Guhan – your intentions too are clear now – you simply call one person as fanatic and because he is writing something pro vaishnavic. There are also responses which are very saivic? what do you say about that?”

    Hi Sarang,

    I would not have come into this argument at all, had there been Pro-Vaishnava or Pro-Saiva sectarian views from a Vaishnavaite or a Saivaite. However seeing one Gandharvan, claiming to be a Smarta, writing all this brought me here. As a practising Smarta I am really appalled rather offended if a fellow Smarta goes against our all encompassing Smarta fundamentals and starts propagating his own sectarion views.

    As a Smarta kid, I was taught Harihara Vandana – as a part of my daily Sandhya during Upanayanam. As per Smarta tradition, we carry out Panchayatana Pooja from time immemorial. Our Guru parampara performs ChandraMouleeswara Pooja. Our Guru Parampara gives Deeksha to perform SriVidya Upasana. In essence, we stand for the all unifying spirit of our beloved Acharya Sankara.

    Now someone comes and starts preaching us the supremacy of one single form with certain gunas as the ultimate worship, citing his own interpretation of certain scriptures, you want us to watch this nonsense silently?

    This is worse than what the missionaries have done to our tradition.

    If Gandhrvan & his ilk want to claim supremacy of their own Ishta Devata – as a Vaishnavaite (like Saint Ramanuja chose to break away) or a Saivaite et al – they are free to choose whatever way they like – but sure not as a Smarta & they will not be allowed to make a mockery of our living tradition. Hope I have made points clear.

    Regards,
    Guhan

  172. திரு உமாசங்கர் அவர்களே,

    சற்று நீண்ட மறுமொழி. கொஞ்சம் பொறுமையாகப் படிக்கவும்.

    ========================================
    நீங்கள் கூறுவது: // அடிமுடி காணாத வரலாறு முதலாக ஒவ்வொரு சைவ சித்தாந்தம் விளக்கக் கட்டுரையிலும் விஷ்ணுவே பரமன் என்றவாறான வாதத்தை வைப்பது நாகரீகம் அல்ல //
    ========================================

    ——————————————–
    மறுமொழி:

    நான் யாரிடமும் சென்று “விஷ்ணு தான் பர தெய்வம்” என்று தேவையில்லாமல் அவர்கள் தொண்டையில் திணிப்பதில்லை. அடி முடி தேடிய புராணத்தை வைத்து சைவ சித்தாந்தத்தை விளக்குவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், அந்த எல்லைக்குள் நிற்காமல்,

    // ஸ்ரீதேவியும், பூதேவியும் கொண்ட விஷ்ணுவும் சரி, ஞானாம்பிகையான சரஸ்வதியைக் கொண்ட பிரம்மாவும் சரி, இருவருமே தம்தம் அகந்தையின் எழுச்சியினாலேயே வாதத்தைத் தொடங்கினர். விஷ்ணுவோ பாதியிலேயே தன் தவற்றை உணர்ந்து சரணடைகிறார். //

    என்று ஒரு interpretation, ஒரு முடிவு கட்டுவது புண்படத் தக்கதல்லவா? இதனால் தான் தேவையான அளவு விஷ்ணு பரத்வத்திற்கான வாதங்களை வைத்தோம். சிவனை இழிவாகப் பேசிய கட்டுரைக்கடியில் நீங்களும் மற்ற பிறரும் ஆதங்கப்பட்டது கண்டிப்பாக நியாயமே. ஆனால் இதே உரிமையை வைஷ்ணவர்களுக்கும் தர வேண்டும்.
    ——————————————–

    ================================
    நீங்கள் கூறுவது: // திரு கந்தர்வன் அவர்களது வைணவசித்தாந்த விளக்கத் தொடரில் எந்த சைவ சித்தாந்தியாவது அல்லது அத்வைதியாவது சிவன்தான் பரமன் என்ற ரீதியிலான வாதத்தை வைத்திருக்கிறார்களா என்பதை உணர்ந்து பாருங்கள். //
    ================================

    ——————————————————-
    மறுமொழி:

    என்னுடைய கட்டுரைகளை அலசிப் பாருங்கள். சிவபெருமானின் பெயரையோ, சைவப்பெருமக்களின் பெயர்களையோ, சைவ சித்தாந்த நூற்களின் பெயரையோ எங்குமே நான் எங்குமே எடுக்கவில்லை. அதுவன்றோ காரணம். சைவ சித்தாந்தக் கட்டுரைகளையும் இம்மாதிரி எழுதுவதில் என்ன குறை? எதற்கு சிவனைப் பற்றிப் புகழ, வியாசரையும் திருமாலையும் திருமால் அவதாரங்களையும் கீதையையும் விமர்சிக்க வேண்டும்?

    அது போகட்டும், ஆசிரியர் குழு கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரு கட்டுரையில் “சங்கத் தமிழர் வழிபட்ட தெய்வமாகிய கண்ணன்” என்று எழுதியிருப்பது பொறாமல் சிலர்,

    // பெண்ணின் வயிற்றில் பிறந்தால் அவன் இறைவன் இல்லை. பழந்தமிழர்கள் நிலத்தை பிரித்து அதற்குத முல்லை தலைவனை திருமால் என வைத்தார்களே ஒழிய, கண்ணனைப் பாடி வணங்கியது பிற்காலத்தில்தான் //

    // தான் வணங்கும் தெய்வத்தை உயர்த்தி கூறுவது இயற்கையே. அதனால் நாரணனுக்கு பிறப்பில்லை அது அவரின் பிரவேசம் எனில் கருப்பண்ணன், இருளன்,என அனைவரும் தம்முடைய தெய்வத்தின் பிறப்பை அவ்வாறே கூறுவர். //

    // பிறப்பித்தார் இல்லை என்பது தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் என்பதே. ஆனால் ராமயணத்தின் மாய சீதை படலமும் , பாரதத்தின் மாயா வாசுதேவ படலமும் நோக்கும் போது அங்கு அவதார விஷ்ணு மூர்த்திகள் மனம் கலங்குவதும், துன்ப கடலில் தவிப்பதும் அவ்வாறு எண்ண இடமின்றி இருக்கின்றது. //

    // வேதமும் பிறவாதவனையே பரம் பொருள் என்று கூறுகிறது. அதனை நேரே மறுக்க வழி இன்றியே பிறப்பித்தார் இல்லை என கூறுவது என நினைக்கின்றேன். //

    //கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் மனஸ்தாபம் ஏற்ப்பட்டதும் இதிகாசத்தில் உள்ளதே? இவையெல்லாம் அவர்கள் ஸ்வதந்திரம் இலாதவர் என காட்டுவது ஆக உள்ளது.//

    என்றெல்லாம் கேட்பார் செவிசுடும்வண்ணம் எழுதியுள்ளனர். இதைக் கண்டு எந்த வைஷ்ணவன் சும்மா இருக்க முடியும்? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.

    ஆதாரமில்லாமல் கடுப்பால் எழுதியிருப்பதைக் கண்டு, வேத-இதிகாச்ச-புராண ஆதாரங்களுடன் எதிர்த்தேன். அதற்கு நீங்கள் எம்மைக் கண்டித்தீர்கள்; ஏனோ தெரியவில்லை.
    ——————————————————-

    ===============================
    நீங்கள் கூறுவது: // தொடர்ந்து வரும் திரு கந்தர்வனின் இப்படிப்பட்ட எழுத்துக்களினால் எற்படும் அலுப்பாலும், கடுப்பாலும் சில சைவ சித்தாந்திகள் திரு கந்தர்வனைப் போலவே வாதம் செய்ய ஆரம்பித்த பின்னர், இப்போதுதான் திரு கந்தர்வன் இங்கு இந்த வாதம் வேண்டாம் என்று கூறுகிறார். //
    ===============================

    ——————————————————-
    மறுமொழி:

    விவாதம் வேண்டாம் என்று சொன்னது எதற்காக என்றால், “நான் எவ்வளவு ஆதாரங்களை முன்வைத்தாலும் அதை எல்லாம் ஏற்க இங்கு பலர் மனம் இடம்கொடுக்கவில்லை, அவர்கள் வெறும் வியக்தி தூஷணமும் காழ்ப்புணர்ச்சியும் கக்குகிறார்கள். ஆகையால் பயனில்லை” என்று உணர்ந்ததனாலேயே. “ஒற்றுமைக்கு ஊறு” என்றெல்லாம் கருதி விவாதத்தையும் வேத அர்த்த விசாரத்தையும் நான் ஒருபொழுதும் விட மாட்டேன். அந்நாளில் விவாதங்கள் வளர்ந்ததனால் தான் பல அருமையான பாஷ்யங்கள் இன்று வரை கிடைக்கின்றன. (இதற்காக நான் என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன் என்று நினைக்க வேண்டாம்).
    ——————————————————-

    நீங்கள் கூறுவது:
    =========================================
    // இந்தப் பிரம்ம வாதத்தில் சாதீயத்தின் ஓர் அடித்தளம் அமைந்திருப்பதை நான் மறைமுகமாகச் சுட்டியும் பலனில்லை. //
    =========================================

    மறுமொழி:
    ———————————-
    பிரம்ம வாதத்துக்கும் சாதியத்துக்கும் என்ன தொடர்பு? இதென்ன புதிய விந்தை? சபந்தமில்லாத விஷயங்களுக்கு முடிச்சு போட்டு என்ன சாதிக்க முயல்கிறீர்களோ தெரியவில்லை.
    ———————————-
    முடிவாக ஆதி சங்கரர் பற்றி…

    நீங்கள் கூறுவது:
    =============================
    ஆதிசங்கரர் எழுதிய உரைகளை, அவரது அயராத உழைப்பை நீங்கள் உங்களது சித்தாந்தத்துக்காக, பிரம்ம வாதத்துக்காகப் பயன்படுத்தும்போது, அவர் வாழ்ந்துகாட்டிய விதமாக அனைத்து இறைமூர்த்தங்களையும் பக்தி செய்து வாழவேண்டாமா? அவர் கடைப் பிடித்த சமரச மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டாமா? அவர் கடைப் பிடிக்காத ‘மறந்தும் புறம் தொழாமை’யைக் கடைப்பிடிக்கலாமா?
    =============================

    மறுமொழி:
    ————————————
    தொடக்கத்திலிருந்து இதைத் தான் கூறி வருகிறேன்… அவருடைய வாழ்க்கையைப் பற்றியும், அவருடைய வாக்கு என்ன என்பதைப் பற்றியும் தீர்மானிக்க, காலங்காலமாக அனைவரும் அவருடையது என்று கருதி, அன்று முதல் இன்று வரை அநு பாஷ்யங்களும் இடப்பட்டதாகிய அவரது உபநிஷத்-கீதா-பிரம்மசூத்திர-சஹஸ்ரநாம-உபதேசசாஹஸ்ரீ பாஷ்ய நூல்களை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இதுவே நியாயமானது. பாஷ்யத்தில் உள்ளதற்கு முரணாக உள்ள கொள்கைகள் அவருடையதல்ல என்று தீர்மானிக்க வேண்டியது தவிர வேறு வழி இல்லை. இதில் உங்களுக்குக் கருத்து வித்தியாசம் இருந்தால் தாராளமாகக் கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. அதே சமயம், எங்கள் கருத்துக்கு எதிராக, “நீங்கள் நான் சங்கரர் கூறுவதாகப் புரிந்துக்கொண்டுள்ள வழியில் தான் சேவிக்க வேண்டும்” என்று கோருவதில் நியாயமில்லை.

    சங்கரர் சரிதத்தை எப்படி உணர முடியும் என்பது பற்றி மேற்கண்டவாறு நான் ஒரு வருடமாகக் கூறி வரும் நியாயத்தை ஏற்க ஏனோ உங்கள் மனம் இடம் தருவதில்லை. அதனால் தான் நீங்கள் சங்கரர் கீதா பாஷ்யத்தின் அவதாரிகையில் கூறிய

    “தத் இதம் கீதா-சாஸ்த்ரம் ஸமஸ்த வேதார்த்த ஸார ஸங்க்ரஹ:”
    [இந்த கீதா சாஸ்த்ரம் எல்லா வேதங்களின் சாரத்தையும் அடக்கியுள்ளது]

    என்பதற்கும்

    “பரமார்த்த தத்வம் ச வாசுதேவாக்யம் பர-பிரம்ம அபிதேய பூதம் விசேஷதஹ:”
    [மெய்ப்பொருளையும் வாசுதேவன் என்ற பெயரை உடைய பரம்பொருளையும் விசேஷித்து (கீதை கூற வருகிறது)]

    என்பதற்கும் முரணாக,

    ===================================
    கீதை இதிகாசத்தின் அங்கம், அதில் உபநிஷத் சார்ந்த கருத்துக்கள் இருப்பது வேறு விஷயம். நேரடி வேதம் அல்லது உபநிஷத்தின் நிலையை அது பெறமுடியாது.
    ===================================

    என்று எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

    புறந்தோழாமை பற்றி பாஞ்சராத்ர அதிகரணத்தில் (பிரம்ம சூத்திரம் 2.2.42) மிகத் தெளிவாக இவ்வாறு கூறியுள்ளார் சங்கரர்:

    “யோ.ஸெள நாராயணஃ பரோ.வ்யக்தாத்ப்ரஸித்தஃ பரமாத்மா ஸர்வாத்மா, … யதபி தஸ்ய பகவதோ.பிகமநாதி லக்ஷணம் ஆராதநம் அஜஸ்ரமநந்யசித்ததயா அபிப்ரேயதே, ததபி ந ப்ரதிஷித்யதே, ஷ்ருதிஸ்ம்ரித்யோரீஷ்வரப்ரணிதாநஸ்ய ப்ரஸித்தத்வாத்.”

    “பிரசித்தமான பரமாத்மா நாராயணனை (பாஞ்சராத்ரிகள்) கோயிலுக்குச் செல்லுதல் முதலான முறையில் அனவரதம் அவனையோழிய வேறு எதையும் நினைக்காமல் ஆராதிப்பதை நிராகரிக்கவில்லை, ஏனென்றால் இது வேதத்திலும் ஸ்மிருதிகளிலும் பிரசித்தம்.”

    குன்றில் இட்ட விளக்கு போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல உள்ள இந்த வாக்கியத்தை ஏற்க மனமில்லாமல், “இது சரித்திரம், அது சரித்திரம்” என்று ஏதேதோ எழுதி, “இன்னாரது வழித்தோன்றல்கள் இன்ன இன்னதைச் செய்கின்றனர்” என்று புண்படும்படி எழுதுவது நியாயமா? சங்கரர் பாஷ்யத்தில் இப்படித் தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்க,

    // மாயோன் முதலியோரும் உயிர்த் தொகுதியைச் சேர்ந்தவர்களே. மாயோன் முதலியவர்களுக்கு உயிர்களுடன் அவையேயாய் நிற்றல் என்னும் இயல்பு இல்லை. //

    என்ற கருத்தை அவர் ஹ்ருதய விருத்தமாக வரவேற்பது சரியா? பிருகதாரண்யக உபநிஷத் அந்தர்யாமி பிராமண பாஷ்ய வார்த்திகத்தில்,

    சம்சாரம் என்ற இருளைப் போக்கும் கிருஷ்ணத்வைபாயனராகிய வேதத்துக்கு ஆத்மா போன்ற வியாசர், உயிர்களெல்லாம் உய்யும் பொருட்டு மீண்டும் மீண்டும் இதைச் சொன்னார்:
    ‘நாராயணன் அவியக்தமாகிய முக்குணங்களால் ஆன மாயைக்கு மேலானவன். நிர்க்குண பிரம்மமாகவும், சகுண பிரம்மமாகவும் நிற்கும் அவனுக்கு நமஸ்காரங்கள். எல்லா தேவர்களுக்கும் பரமாத்மாவாக, பிரபஞ்சத்தின் உட்பொருளாக, இருக்கும் இவனைக் குறித்தே (தைத்திரீய) நாராயண மந்திரங்களை வேத வித்துக்கள் ஓதுகின்றனர்.'”

    என்று சுரேச்வரர் எழுதியிருப்பதும் மிகப் பிரசித்தம். அப்படிப்பட்ட வியாசரை சங்கரரும் அவர் முதல் சீடரும் சொன்னதற்கு மாறாக

    // அறிவுபோல் அடர்ந்து எழும் அறியாமையினது வலியால் ஒருமுறை வியாசர் பொய் கூறி சிவாபராதத்துக்கு ஆளானார். //

    என்று எழுதியிருப்பதைக் கண்டித்தல் சரி தான் என்று எனக்குத் தோன்றுகிறது.
    ———————————–

    முடிவுரை:

    ஆதாரமில்லாமல், தேவையில்லாமல் விஷ்ணுவையும் வைஷ்ணவர்களையும் அவர்களின் சரிதத்தையும் பொதுவிடங்களில் இழித்தும் திரித்தும் கூறுவது வெகுகாலமாகத் தமிழ்நாட்டு ஊடகங்களில் பரவி வருகிறது என்பது என் தாழ்மையான கருத்து. அவர்கள் கூறுவதை நடுநிலை நின்று ஆராய்ந்து அணுகுவதை விட்டு “சமய வாதிகள், ஜிஹாதிகள், குறுகிய மனப்பான்மை உடையவர்கள்” என்று வைஷ்ணவர்களை இகழ்தல் என்னும் போக்கு மாற வேண்டும்.

    இன்னொரு முறை பொறுமையாக இதையெல்லாம் ஆராய்ந்துவிட்டு, நான் செய்ததில் நியாயம் இருக்கிறதா என்று மனசாட்சியைத் தொட்டு எண்ணிப் பாருங்கள். எப்படி இருப்பினும், நடுநிலையாளர்கள் முடிவு செய்வார்கள்.

  173. நன்றாக சொன்னீர்கள் உமாசங்கர் எங்களை போல வேதம் அறியாதவர்களுக்கு என்ன வழி? மீட்சியே இல்லையா எங்களை போன்ற ஆட்களுக்கு சிவன் கோயிலுக்கு போனாலும் பெருமாள் கோயிலுக்கு போனாலும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லையே “எற்றைக்கும் ஏலேல் பிறவிக்கும் உற்றே நாம் ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்” என்று எந்த சாமியிடம் சொன்னாலும் கோபித்து கொள்வதில்லையே மிகவும் ஆன்ற அறிவுடைய நீங்களே இப்படி யார் பெரியவர் என்ற கோஷத்தில் இறங்கினால் எம் போன்றோர் தெளிவுறுவது எப்படி மறுமொழிகள் அலுப்பு ஏற்படுதுகின்றன புரிந்து கொள்ளுங்கள் அதிகப் பிரசங்கித்தனமாக எழுதியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் நன்றி

  174. அன்புள்ள உமாசங்கர் அவர்களே

    மாயை – அது உங்களுக்குள் இருப்பதோ நீங்கள் உருவாக்க நினைப்பதோ அது எதுவோ அதை களைய என்னால் முடிந்த மற்றொரு முயற்சி – ஏற்கனவே பல முறை முயன்டிருக்கிறேன்

    //
    அடிமுடி காணாத வரலாறு முதலாக ஒவ்வொரு சைவ சித்தாந்தம் விளக்கக் கட்டுரையிலும் விஷ்ணுவே பரமன் என்றவாறான வாதத்தை வைப்பது நாகரீகம் அல்ல என்பதைத்தான் நான் மறைமுகமாக விவேகம் அல்ல என்றும்
    //

    இது மிகவும் தவறான ஒரு கருத்து – IN GOD WE TRUST, REST ALL SHOULD SHOW DATA என்பதற்கு இணங்க – அடி முடி காணாத வராரு வந்த பிரக பல சைவ சித்தாந்த கட்டுரைகள் வந்தன அவற்றுள் அடி முடி காண புராணம் ஒரு விளக்கம், தள புராணம் மூன்று தள புராணம் நான்கு என்ற இந்த மூன்று கட்டுரைகளில் மட்டுமே நீங்கள் எதிர் விவாதங்களை பார்த்திருக்க முடியும் – தள புராணம் மட்டுமே ஏழு தொடர்கள் உள்ளன – ஏன் எல்லாவற்றிலும் எதிர் மொழி இல்லை என்று உங்களுக்கு உங்கள் விவேகம் சொல்ல வில்லையா? என் என்றால் இந்த இரண்டில் மட்டும் தான் அசிரியர் தவறான புரிதல்களுடன் எழுதி இருந்தார் – அதையும் கூட சகட்டு மேனிக்கு புறம் தள்ளாமல் ஆதாரத்துடன் தான் எதிர்த்து இருக்கிறோம்.

    இங்கே எங்கே நீங்கள் விஷ்ணு பரத்வத்தை நிலை நாட்டுவதை கண்டீர்கள்? இந்த கட்டுரையில் வ்யாகர்ண பிழை, சந்தியை பற்றி வந்த ஒரு கருத்து ஆகியவற்றை சுட்டிக் காட்டியே மறு மொழிகள் வந்தது, குஹனாரும், செந்தில் அவர்களும், ஆசிரியரும் தான் பரத்வ மொழி இட்டார்கள் – அதன் பின்னரே மறு மொழிகள் அந்த திக்கில் பயணித்தன

    இதை நீங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை

    சைவ சமய கட்டுரயில் க்ண்டபடி மற்ற தைவங்களை பற்றி எழுதாலாம் அதற்க்கு சுதந்திரம் உண்டு என்று நினைத்து எழதினால் அதற்க்கு மரு மொழி இடவும் ஏனயவருக்கு சுதந்திரம் உண்டு என்று என்னுவது தான் விவேகம்

    கந்தர்வன் அவர்கள் ஒரு கட்டுரயிலும் யாரயும் மட்டம் தட்டி பேசவில்லயே – இதுவண்றோ தன் கருத்தை முன் வைக்கும் விவேக புத்தி

    சிவ பெருமானை ஒரு நவீன உருவாக்கம் என்று ஒரு ஆங்கிலேயர் எழுதி இருந்ததை கந்தர்வன் அவர்கள் வன்மையாக கண்டித்தாரே – இது கூட விவேகமின்மையோ?

    //
    கீதை எமக்குப் பிரமாணமில்லை’ என்று ஒரு சைவ அன்பர் சொன்னது தங்களுக்கு வேதனை தருவது போலத்தானே நீங்கள் திருமுறைகளைப் பற்றிச்சொன்னபோது சைவ அன்பர்களுக்கு இருந்திருக்கும் என்பதை யோசியுங்கள். ‘கீதை இதிகாசத்தின் அங்கம், அதில் உபநிஷத் சார்ந்த கருத்துக்கள் இருப்பது வேறு விஷயம். நேரடி வேதம் அல்லது உபநிஷத்தின் நிலையை அது பெறமுடியாது’ என்பதுதானே உண்மை.
    //

    இது தான் மாயை என்பது – நான் வேதனை உற்றேன் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்

    அவர் கீதையை மட்டும் தான் பிரமாணமாக ஏற்கவில்லை – ஏன் வீட்டில் எதையுமே எர்காதவர்களுடன் நான் காலம் தள்ளிக்கொண்டு இருக்கிறேன் – இதற்கெல்லாம் வேதனை பட்டால் எப்படி?

    நான் சொல் வந்தது என்ன என்றால் – கீதை நேரே உபநிஷத் கூறும் வாக்கியங்களை கூறுகிறது – அதில் என்ன இருக்கிறது என்று கூட எட்டிப் பாராமல் ஒருவர் கட்டுரை இடுகிறார் ஒருவர் மறு மொழி இடுகிறார் – கடைசியில் அதை வைணவ நூல் என்கிறார் – அப்போது தானெனக்கு விசயமே புரிந்தது – சிரித்தேன் – அவ்வளவு தான்.

    கீதை முழு முதல் பிரமாணமாக எந்த வேதாந்த மதத்தவரும் ஏற்பதில்லை – வேதத்திற்கு அடுத்த நிலை தான் – ப்ரஸ்தான த்ரய்த்தில்Ÿ ப்ரம்ம சூத்திரமும் அடங்கும் அதர்க்கும் வேததிதிர்க்கு அடுத்த நிலை தான் – எப்படி சூத்ரம் உபநிஷத்களை விவரிக்கிறதோ அப்படியே கீதயும்.

    ஏன் மருமொழிகள் இடவில்லை – இப்படி முதலில் வருத்தப்பட்டது நீங்கள் தான் – இது ஒரு வஎளிநாட்டவர் எழுதிய கட்டுரை சார்ந்தது

    – நான் ஒன்றும் வருத்தமெல்லாம் படவில்லை – விவேகத்தின் ஆழம் பார்த்தேன் அவ்வளவே
    – சாதியம் பற்றி நான் ஏற்கனவே ஜடாயு, அரவிந்தன் பனித்துளி அவர்கள் எழுதிய கட்டுரையில் நிரய எழுதி விட்டேன் (சாதியத்தை எதிர்துதான் ) – மந்த்ராலய கட்டுரை சாதியம் பற்றிய கட்டுரையே இல்லை என்பது என் கருத்து. ஹரன் ப்ரஸன்னா எழுதிய மத்ராலய கட்டுரயிலும் சாதியம் பற்றி என் கருத்தை எழுதியிருக்கிரேன்.
    – பொதுவாகவே ஸ்ரீ் வைஷ்னவ சம்ப்ரதாயத்தில் வந்தவர்கள் சாதியத்தை எதிர்க்கத்தான் செய்வார்கள் – ஆழ்வார் ஆசாரியர்கள் பின் பற்றிய வழியே அவர்களுக்கும் வழி – இதை பற்றி நிரய எழுதியாகிவிட்டது – அதை நீங்கள் படித்துதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை நானறிவேன்

    – இந்த மந்தராலய கட்டுரை வந்த பொது நான் கொஞ்ஜம் தமிழ் பேப்பரில் பிசியாக இருந்தேன்  – அதில் அரவிந்தன் கருத்தை ஆதரித்து எழுதிய மரு மொழிகள் நான் ஆங்கிலத்தில் இட்டதால் ப்ரசூரமாகவில்லை – ஆனால் நான் சொல்ல வந்த கருத்து அங்கு வந்துவிட்டது
    – அது சரி சாதியம் பற்றி பல கட்டுரைகள் வந்தன மந்த்ராலய கட்டுரையில் மட்டும் உங்களுக்கு என்ன அவ்வளவு ஆர்வம்

    வேதம் .. ப்ரஸ்தான த்ரயம் மட்டுமே உண்மை என்று யாரும் கூரவில்லை – நீங்கள் பக்தனின் உள்ளம் பற்றி கூருவது அனைவரும் அறிந்ததே – வேதாந்த மத கருத்துக்கள் Ÿ பற்றி பேசும் போது அதற்க்கு அடிப்படை ஆதாரமாக ப்ரஸ்தான த்ரயத்தை தான் கொள்ள வேண்டும் என்பதுவே நீங்கள் சொல்லும் ஆசிரியர் சொன்ன கருத்து. அர்கிமிடிஸ் தத்துவம் பற்றி பேசினால் அவரது வாக்கே அடிப்படை அதாரம்.வாலியும் வைர முத்துவும் பல பாடல்கலில் அர்கிமிடஸை இழுக்கிறார்கள் (தண்ணீரில் மூழ்காது காற்றுல்ல பந்து, பூவேடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு வந்து விடும் மேலே வஞ்சிக் கொடியே ….) அதை ஆதாரமாக கொள்ளக்கூடாது அவ்வளவு தான் விஷயம்

    – இத்தை நீங்கள் மாற்றிப்புரிந்து கொண்டால் அது உங்களுடய சொத்து மட்டுமே

  175. Dear Guhan,

    Did I write any anti-Smartha comments here? Can you please point out if I did?

    Let me tell you this… I am not a Smartha as per your definition.

    I am a Smartha by birth and etymological definition (Smartha = observer of Smritis) and a Vaishnava by faith who admires Sri Adi Sankara and other Advaita/Dvaita/Vishistadvaita Acharyas’ contribution to Vaishnavism.

    “vihita srauta smArtha nityakarmAnuShTAna yOgyatA siddhyartham” – I hope you recognize this mantra. It is also recited by Vaishnavites in Upakarma.

    I don’t see the necessary for “offence”. I am not offended by you and what you practice/believe.

    Cheers, Gandharvan

  176. திரு கணேஷ்,

    //எங்களை போல வேதம் அறியாதவர்களுக்கு என்ன வழி//

    கட்டுரை ஆசிரியர் வேதத்தை மேற்கோள் காட்டி எழுதிஉள்ளார் அதுவும் புரிய வில்லையா – இல்லை வேத பிரமாணம் காட்டும் மறு மொழிகள் மட்டும் புரியவில்லையா

    பத்து வருஷம் வேதம் படித்தவர்கள் தான் அதில் உள்ளவற்றை மேற்கோள் கட்ட வேண்டும் என்பது கிடையாதே – நீங்கள் கூட சில பாகங்களை கற்றுக் கொண்டு அதை மேற்கோள் காட்டலாமே – ரிக் வேதம் படித்தவர் – யசுர் வேத மேற்கோள் காட்டக்கூடாத என்ன?

    ஹிந்து தர்மம் பற்றி பேசும் பொது வேதத்தையும் சேர்த்துக் கொள்வது அவசியமாகிறது – அதை படிப்பதர்க்கோம் மேற்கோள் கட்டுவதற்கும் கன பாடியாக இருக்க வேண்டும் என்பதில்லை என்பது என் கருத்து

  177. திரு கந்தர்வன் அவர்களே
    ///// இந்தப் பிரம்ம வாதத்தில் சாதீயத்தின் ஓர் அடித்தளம் அமைந்திருப்பதை நான் மறைமுகமாகச் சுட்டியும் பலனில்லை. //
    ///மறுமொழி:
    ———————————-
    பிரம்ம வாதத்துக்கும் சாதியத்துக்கும் என்ன தொடர்பு? இதென்ன புதிய விந்தை? சபந்தமில்லாத விஷயங்களுக்கு முடிச்சு போட்டு என்ன சாதிக்க முயல்கிறீர்களோ தெரியவில்லை.///

    நிச்சயமாகத் தொடர்பு இருக்கிறது. அமைதியாகச் சிந்தித்துப் பாருங்கள். தெரியும்.

    ///“பிரசித்தமான பரமாத்மா நாராயணனை (பாஞ்சராத்ரிகள்) கோயிலுக்குச் செல்லுதல் முதலான முறையில் அனவரதம் அவனையோழிய வேறு எதையும் நினைக்காமல் ஆராதிப்பதை நிராகரிக்கவில்லை, ஏனென்றால் இது வேதத்திலும் ஸ்மிருதிகளிலும் பிரசித்தம்.”///

    இது ஆதிசங்கரர் எழுதிய விளக்க உரை. இந்தக் கருத்துக்களை அப்படித்தான் பார்க்கவேண்டும். இளக்க உரையை அவரது வழிகாட்டுதலாகக் கொள்ளக் கூடாது. பரிமேலழகர் திருக்குறாளுக்கு எழுதிய உரை போலத்தான் இது. மேலும் இது mandatory command அல்ல. அப்படி இருக்குமானால், ஏன் ஆதிசங்கரர், எல்லா இறை மூர்த்தங்களையும் பக்தி செய்தார்? அப்படியென்றால் அவர் தான் சொன்னது ஒன்று செய்தது இன்னொன்று என்று நடந்து கொண்டார் என்கிறீர்களா? இல்லை என்றே எண்ணுகிறேன், விரும்புகிறேன்.

    ஏன் அவர் கணபதி, சுப்ரமணியர், அம்பாள், சிவன் குறித்தெல்லாம் ஸ்துதியாகவே (விளக்க உரையாக அல்ல) எழுதிவைத்தார்?
    ஏன் அவர் நிறுவிய திருமடங்களில் பிரதான மூர்த்தமாக விஷ்ணுவை வைக்க வில்லை?

    அப்படியானால் அவர் நடந்துகொண்ட விதம்தானே அவர் காட்டிய வழியாகக் கொள்ளவேண்டும்?

    இதைத்தானே நான் சொல்லிவருகிறேன். அவர் வாழ்ந்து காட்டிய விதமாக நடக்க வேண்டும் என நான் சொன்னதை விட்டு சுற்றி சுற்றி விளக்க உரைகளை மேற்கோள் காட்டி ஏன் வீணே பக்கத்தை நிரப்புகிறீர்கள்?

  178. Hi Gandharvan,

    “Let me tell you this… I am not a Smartha as per your definition.”

    That’s fine. You may keep your faith on any deity & follow any way as you like.
    And you have every right to your own beliefs & interpretations too.

    Regards,
    Guhan

  179. திரு கணேஷ் அவர்களே,

    ///மிகவும் ஆன்ற அறிவுடைய நீங்களே இப்படி யார் பெரியவர் என்ற கோஷத்தில் இறங்கினால் எம் போன்றோர் தெளிவுறுவது எப்படி மறுமொழிகள் அலுப்பு ஏற்படுதுகின்றன புரிந்து கொள்ளுங்கள்///

    தங்கள் கூறுவதற்கு நான் தகுதி அற்றவனாகவே என்னை உணர்கிறேன்.

    நான் யார் பெரியவர் என்ற கோஷத்தில் இறங்கவில்லை. ஆனால் இந்தப் பிரம்மா வாதத்தில் சாதீயத்தின் அடித்தளம் ஒன்று உள்ளது. அதனால் மட்டும்தான் இந்த மறுமொழிகள். ஆனாலும் நீங்கள் கூறுவதில் உள்ள உண்மையையும் உணர்கிறேன். எதற்குமே ஓர் எல்லை உள்ளது என்பது உண்மையே.

  180. திரு சாரங் அவர்களே,

    தாங்கள் மாயை பற்றிக் கூறுவது வேடிக்கை.

    நான் சங்கரர் வாழ்ந்து காட்டிய வழியில் செல்லவேண்டிய நடைமுறை பற்றி எழுப்பிய வினாக்களை உங்கள் எண்ணத்திலிருந்து எல்லாம் மறைக்கும் வண்ணம் வாலி, வைரமுத்து, ஆர்க்கிமிடீஸ் வரை சிந்தனை ஓட்டம் போகிறதே, இதுதான் மாயை.

  181. திரு உமாசங்கர்,

    // மேலும் இது mandatory command அல்ல. //

    நான் mandatory command என்றா சொன்னேன்? நான் கூற வந்தது, “அவர் புறம் தொழாமையை நிஷேதிக்கவில்லை” என்பதை. ஒருவேளை நீங்கள் நினைப்பது போல அவர் பாஞ்சராத்ரிகள் “குறுகிய மனப்பான்மை உடையவர்கள்” என்று நினைத்திருந்தால் அவ்விடத்தில் அப்படி எழுதியிருப்பார். அவர் கூறியபடி நீங்களும் அனன்ய பக்தி செய்பவர்களிடம் நடந்துக் கொள்ள வேண்டும் என்று தான் கேட்கிறேன்.

    சரி, mandatory command இல்லை தான். ஆனால் கீதா பாஷ்யத்தில் என்ன கூறுகிறார் பாருங்கள்:

    கீதை விளக்கம் 13.10:

    ” ‘न अन्यो भगवतो वासुदेवात् परः अस्ति, अतः स एव नः गतिः’ इत्येवं निश्चिता अव्यभिचारिणी बुद्धिः अनन्ययोगः, तेन भजनं भक्तिः न व्यभिचरणशीला अव्यभिचारिणी। सा च ज्ञानम्।”

    இதன் அர்த்தம்: ‘பகவான் வாசுதேவனுக்கு வேறுபட்டவன் அவனை விட உயர்ந்தவநல்லன். ஆகையால் அவனைத் தவிர வேறு கதி இல்லை.’ என்று திடமாக, மனதை வேறு இடத்தில் செலுத்தாமல் செய்யப்படும் பக்தி ஞான ரூபமானது.

    கீதை விளக்கம் 9.25-9.26:

    “यान्ति गच्छन्ति देवव्रताः देवेषु व्रतं नियमो भक्तिश्च येषां ते देवव्रताः देवान् यान्ति। पितृ़न् अग्निष्वात्तादीन् यान्ति पितृव्रताः श्राद्धादिक्रियापराः पितृभक्ताः। भूतानि विनायकमातृगणचतुर्भगिन्यादीनि यान्ति भूतेज्याः भूतानां पूजकाः। यान्ति मद्याजिनः मद्यजनशीलाः वैष्णवाः मामेव यान्ति। समाने अपि आयासे मामेव न भजन्ते अज्ञानात्, तेन ते अल्पफलभाजः भवन्ति इत्यर्थः।।न केवलं मद्भक्तानाम् अनावृत्तिलक्षणम् अनन्तफलम्, सुखाराधनश्च अहम्।”

    இதன் அர்த்தம்:

    “தேவர்கள், பித்ருக்கள், பூத கணங்கள் இவற்றை வணங்குபவர்கள் அவர்களிடம் போய்ச் சேருகிறார்கள். என்னை (கண்ணனை) வணங்கும் வைஷ்ணவர்கள் என்னையே அடைகிறார்கள். மற்றவர்கள் முயற்சியில் சரிசமமாக இருப்பினும், என்னையே அவர்கள் வணங்காமையால் அற்பப் பலன்களையே எய்துகின்றனர்.”

    “என்னுடைய பக்தர்களுக்கு ‘மற்றீண்டு வராமை’ என்னும் அனந்தமான பலன் கிட்டுவதோடல்ல, என்னுடைய ஆராதனம் மிக எளிதானது”

    இதெல்லாமும் mandatory அல்ல. Recommendation அல்லது பரிந்துரை தான்.

    நீங்கள் கேட்கிறீர்கள்:

    // அப்படியென்றால் அவர் தான் சொன்னது ஒன்று செய்தது இன்னொன்று என்று நடந்து கொண்டார் என்கிறீர்களா? //

    // ஏன் அவர் கணபதி, சுப்ரமணியர், அம்பாள், சிவன் குறித்தெல்லாம் ஸ்துதியாகவே (விளக்க உரையாக அல்ல) எழுதிவைத்தார்?
    ஏன் அவர் நிறுவிய திருமடங்களில் பிரதான மூர்த்தமாக விஷ்ணுவை வைக்க வில்லை?//

    //அப்படியானால் அவர் நடந்துகொண்ட விதம்தானே அவர் காட்டிய வழியாகக் கொள்ளவேண்டும்?//

    //இதைத்தானே நான் சொல்லிவருகிறேன். அவர் வாழ்ந்து காட்டிய விதமாக நடக்க வேண்டும் என நான் சொன்னதை விட்டு சுற்றி சுற்றி விளக்க உரைகளை மேற்கோள் காட்டி ஏன் வீணே பக்கத்தை நிரப்புகிறீர்கள்?//

    நீங்கள் கேட்டதற்காகச் சொல்கிறேன்:

    சங்கரருடைய கீதா பாஷ்யம் 11.43:

    “न हि ईश्वरद्वयं संभवति, अनेकेश्वरत्वे व्यवहारानुपपत्तेः। त्वत्सम एव तावत् अन्यः न संभवति; कुतः एव अन्यः अभ्यधिकः स्यात् लोकत्रयेऽपि सर्वस्मिन्?”

    இதன் அர்த்தம்: “சர்வேச்வரர்கள் இருவர் இருப்பது அசம்பாவிதமே. பல சார்வேச்வரர்கள் இருந்தால் பிரபஞ்சம் சரிவர இயங்குவது அசம்பாவிதமாகிவிடும். ஆகையால், உனக்குச் சமமானவரே வேறு இருக்க முடியாது என்று ஆகிவிட்டதில், உன்னை விட வேறு ஒருவன் உயர்ந்தவனாக மூன்று லோகங்களில் எங்கு தேடினாலும் கிடைப்பனோ?”

    இவ்விடத்தில் ஆனந்தகிரி டீகையில் கூறுவது: “தனித்தனியாக ஸ்வதந்திரமாக இரு ஈச்வரர்கள் இருந்தால் ஒருவர் பிரபஞ்சத்தைப் படைக்கும் தொழிலில் ஈடுபட, இன்னொருவர் அதை ஒடுக்கும் தொழிலில் ஈடுபடலாம். இருவரும் ஸ்வதந்திரமாக இருப்பதால் ஒருமனதுடையவராக இருப்பது துர்லபம்.”

    இவ்வார்த்தைகள் அவர் பாஷ்யத்திலே கல்லிலே பொறித்தவையாக இருக்கின்றன.

    அவர் சொன்னது பாஷ்யத்தில் ஸ்பஷ்டமாக உள்ளது. “அவர் வாழ்ந்து காட்டியது” என்று நீங்கள் சொல்வதும் நம்புவதும், மடங்களோ மற்றவரோ கூறும் ஐதீகமும் அவர் பாஷ்யத்திற்கு முரணாக இருப்பதால் அவற்றைச் சங்கரர் செய்ததாக என்னால் நம்பமுடியவில்லை.

    உங்களுக்கு இதில் கருத்து வேறுபாடு இருந்தால் அது உங்கள் கருத்துச் சுதந்திரம், நான் சொன்னதை வைத்து நீங்கள் புண்படவும் தேவையில்லை. அவர் எழுதியுள்ள பாஷ்ய வாக்கியங்களுக்கு நீங்கள் எப்படி பொருள் கொள்ளுகிறீர்கள் என்று எழுதினால் எனக்கு ஆர்வமாக இருக்கும்.

    நாம் எம் பெரிய மறுமொழியில் எழுப்பிய மற்ற கேள்விகளுக்கெல்லாம் விடை இல்லை போலிருக்கிறது.

  182. Dear Guhan,

    // That’s fine. You may keep your faith on any deity & follow any way as you like.
    And you have every right to your own beliefs & interpretations too. //

    Thanks. As long as you folks do not indulge in character assassination for what I believe, it is fine. I wouldn’t do that to you in return.

    Regards,
    Gandharvan

  183. Hi Gandharvan,

    “I am surprised that you are not offended by Senthil’s comment that Gita is a Vaishnavite text.”

    Why should I! I had already made clear the reason for posting my views here:

    I would not have come into this argument at all, had there been Pro-Vaishnava or Pro-Saiva sectarian views from a Vaishnavaite or a Saivaite. However seeing one Gandharvan, claiming to be a Smarta, writing all this brought me here. As a practising Smarta I am really appalled rather offended if a fellow Smarta goes against our all encompassing Smarta fundamentals and starts propagating his own sectarion views.

    Its time for we Hindus to grow beyond ‘my daddy strongest’ stage in our spiritual life.

    Regards,
    Guhan

  184. இந்தக் கட்டுரைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களையும் கந்தர்வன் போன்றவர்கள் செய்யும் வாக்குவாதங்களையும் படித்தால் உண்மையிலேயே ஹிந்து ஒற்றுமை சாத்தியமா என்று வருத்தமே மேலிடுகிறது.

    கம்பனைவிடப் பரமவைணவர் யார் இருப்பார்! ஒருகணம் அவர் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்பீர்:

    அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலார்க்குப் பரகதி சென்றடைவது அரிய பரிசே..

    உடனே கம்பனுக்கு சமஸ்கிருதம் தெரியாது, அவர் பிரம்மசூத்ர பாஷ்யங்களைப் படித்திருக்க மாட்டார், அவரைவிட நான் புத்திசாலி என்ற ரீதியில் புது வாதங்களைத் தொடங்கலாம்.

  185. திரு உமாசங்கர் அவர்களே,

    // இது ஆதிசங்கரர் எழுதிய விளக்க உரை. இந்தக் கருத்துக்களை அப்படித்தான் பார்க்கவேண்டும். இளக்க உரையை அவரது வழிகாட்டுதலாகக் கொள்ளக் கூடாது. பரிமேலழகர் திருக்குறாளுக்கு எழுதிய உரை போலத்தான் இது. //

    நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் தவறு. மூலத்தில் எங்குமே ஆதி சங்கரர் கூறுவது இல்லை. அந்த சூத்திரத்தின் மூலம் என்ன சொல்கிறது என்றால் “உத்பத்தி அசம்பாவாத் (பொருள்: உத்பத்தி ஆவது சாத்தியம் இல்லை என்பதால்)”. எங்குமே பாஞ்சராத்ரம் பற்றியோ நாராயணன் பற்றியோ இதில் இல்லை. அவர் சொந்தமாகத் தான் நான் குறிப்பிட்ட பாஷ்ய வாக்கியங்களை வைத்துள்ளார். ஆகையால் அது முற்றிலும் அவருடைய கருத்தே. ஆகையால், “இது பரிமேலழகர் உரையைப் போல” என்பது தவறு.

  186. // இது ஆதிசங்கரர் எழுதிய விளக்க உரை. இந்தக் கருத்துக்களை அப்படித்தான் பார்க்கவேண்டும். இளக்க உரையை அவரது வழிகாட்டுதலாகக் கொள்ளக் கூடாது. பரிமேலழகர் திருக்குறாளுக்கு எழுதிய உரை போலத்தான் இது. //

    ஏதோ சங்கரர் பொழுது போக்கிற்காக, அல்லது சமஸ்கிருத பாஷ்ய பயிற்சிக்காக கீதைக்கும் பிரம்மசூத்திரத்திற்கும் உபநிஷதங்களுக்கும் உரை எழுதியது போல இக்கருத்து உள்ளது.

    இது ஆதி சங்கரர் மீதும், அவருடைய பாஷ்யங்களுக்கு அநுபாஷ்யம் இட்ட அவருடைய சீடர் மீதும் மிகக் கொடுமையான அவதூறாகும். எங்கே குஹனார்?

  187. திரு C R Rangarajan,

    உமாசங்கர் அவர்களுக்கு எழுதிய பகுதியிலிருந்து கீழ்க்கண்டவாறு உள்ள பகுதியைப் படியுங்கள்:

    =====================

    // ஸ்ரீதேவியும், பூதேவியும் கொண்ட விஷ்ணுவும் சரி, ஞானாம்பிகையான சரஸ்வதியைக் கொண்ட பிரம்மாவும் சரி, இருவருமே தம்தம் அகந்தையின் எழுச்சியினாலேயே வாதத்தைத் தொடங்கினர். விஷ்ணுவோ பாதியிலேயே தன் தவற்றை உணர்ந்து சரணடைகிறார். //

    ஆசிரியர் குழு கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரு கட்டுரையில் “சங்கத் தமிழர் வழிபட்ட தெய்வமாகிய கண்ணன்” என்று எழுதியிருப்பது பொறாமல் சிலர்,

    // பெண்ணின் வயிற்றில் பிறந்தால் அவன் இறைவன் இல்லை. பழந்தமிழர்கள் நிலத்தை பிரித்து அதற்குத முல்லை தலைவனை திருமால் என வைத்தார்களே ஒழிய, கண்ணனைப் பாடி வணங்கியது பிற்காலத்தில்தான் //

    // தான் வணங்கும் தெய்வத்தை உயர்த்தி கூறுவது இயற்கையே. அதனால் நாரணனுக்கு பிறப்பில்லை அது அவரின் பிரவேசம் எனில் கருப்பண்ணன், இருளன்,என அனைவரும் தம்முடைய தெய்வத்தின் பிறப்பை அவ்வாறே கூறுவர். //

    // பிறப்பித்தார் இல்லை என்பது தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் என்பதே. ஆனால் ராமயணத்தின் மாய சீதை படலமும் , பாரதத்தின் மாயா வாசுதேவ படலமும் நோக்கும் போது அங்கு அவதார விஷ்ணு மூர்த்திகள் மனம் கலங்குவதும், துன்ப கடலில் தவிப்பதும் அவ்வாறு எண்ண இடமின்றி இருக்கின்றது. //

    // வேதமும் பிறவாதவனையே பரம் பொருள் என்று கூறுகிறது. அதனை நேரே மறுக்க வழி இன்றியே பிறப்பித்தார் இல்லை என கூறுவது என நினைக்கின்றேன். //

    //கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் மனஸ்தாபம் ஏற்ப்பட்டதும் இதிகாசத்தில் உள்ளதே? இவையெல்லாம் அவர்கள் ஸ்வதந்திரம் இலாதவர் என காட்டுவது ஆக உள்ளது.//

    என்றெல்லாம் கேட்பார் செவிசுடும்வண்ணம் எழுதியுள்ளனர். இதைக் கண்டு எந்த வைஷ்ணவன் சும்மா இருக்க முடியும்? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.

    // மாயோன் முதலியோரும் உயிர்த் தொகுதியைச் சேர்ந்தவர்களே. மாயோன் முதலியவர்களுக்கு உயிர்களுடன் அவையேயாய் நிற்றல் என்னும் இயல்பு இல்லை. //

    ==========================

    மேற்படி உள்ளதில் “//” என்று தொடங்கி “//” என்று முடியும் பகுதிகள் இத்தளத்தில் மற்றவர்கள் எழுதியிருப்பது. இதற்கெல்லாம் என்ன சொல்கிறீர்கள்? இதெல்லாம் உங்கள் கண்ணுக்குப் படவில்லையா?

    அதெப்படி – ஒரு தரப்பினர் எத்தனை வேத அர்த்த விசாரமும் செய்யலாம் , எத்தனை பரத்துவ வாதமும் செய்யலாம், அதற்காக மற்ற தரப்பினருடைய கொள்கைகளை மட்டம் தட்டும் கருத்துக்களை முன்வைக்கலாம் – அதெல்லாம் ஓ.கே. ஆனால், மறு தரப்பினர் அதை மறுத்து எழுதினால் அவர்களை மாத்திரம் பெயர் சூட்டி ‘ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்கள்’ என்று விமர்சிப்பது? இது காங்கிரஸ் காரனுடைய போலி மதச்சார்பின்மை வாதத்தைப் போல உள்ளது. அத்துடன், சாதி வன்முறை அனைத்துக்கும் பார்ப்பனரே காரணம் என்று கூறும் திராவிட கட்சியின் ஒருதலைப்பட்ட கருத்து போலவும் உள்ளது.

    நீங்கள் சொல்வது “நம்முடைய சரித்திர ஆவணங்களை புறம் தள்ளி விட்டு, அல்லது ஒரு புறம் யாருக்கும் எட்டாத விதம் பூட்டி வைத்து விட்டு, ஒற்றுமை காரணமாக விவாதமே செய்யாமல் இருக்கலாம்”. அப்படியானால், தம் நம்பிக்கையினுடைய வரலாற்று அடித்தளத்தை அறிய வாய்ப்பே இருக்காது. இது பதினைந்தாம் நூற்றாண்டு கத்தோலிக்க சர்ச் சொல்வது போல உள்ளது.

    நான் இன்றைக்கே உமாசங்கர் அவர்களையோ, செந்தில் அவர்களையோ, முனைவர் அவர்களையோ, குகன் அவர்களையோ சந்தித்தால் அவர்களிடம் சிரித்த முகத்துடன் கைகுலுக்கி நட்பு தொடர்வு செய்வதற்குத் தயார். விவாதங்கள் செய்யலாம், அதே சமயம் விவாதிப்பவர்களை நண்பர்களாகக் கருதலாம்… இதுவன்றோ ஒற்றுமை.

    கம்பர் வாக்கியம்… I am much too tempted to answer this with logic, ஆனால் விவாதம் வேறு திசையில் திரும்பிவிடும். நான் இத்தளத்தில் வேறு ஒரு கட்டுரையில் இது குறித்து தகுந்த இடத்தில் மறுமொழியிட்டுள்ளேன். தகுந்த இடத்தில் கண்டுகொள்ளவும்.

    என்னுடைய மறுமொழிகளைச் சரியாகப் படித்துப் பாருங்கள். நான் வைக்கும் வாதம் “விஷ்ணு பெரியவரா சிவன் பெரியவரா” என்ற விஷயம் பற்றியே இல்லை என்பது தெரிய வரும்.

  188. திரு உமாஷங்கர் அவர்களே
    //தாங்கள் மாயை பற்றிக் கூறுவது வேடிக்கை//

    அப்படியா
    நீங்கள் உங்களது நீண்ட பதிலில் எங்கோ ஒரு இடத்தில் சங்கரரை பற்றி எழுதீயிருக்கிறீர்க்ள் – நான் எனது நீண்ட பதிலில் எங்கோ ஒரு இடத்தில் வாலியை பற்றி எழுதி உள்ளேன் இவ்விரண்டயும் முடிச்சு போடுவதை மாயயை அல்ல மாயா ஜாலம் என்று சொல்லப் போகிறார்கள்

    நமக்குள் இந்த ப்ரச்சனை வேண்டாம் – பொதுவாக யாரும் எந்த ஒரு வேதாந்ததயோ,சித்தாந்ததயோ மட்டம் தட்டி எழுதாமல் இருந்தால் சரி – மட்டம் தட்டி பேச சுததிரம் நிச்சயமாக உண்டு -அப்படி பேசுவதில் தவறிருந்தால் அதை மறுப்பதர்க்கும் சுததிரம் உண்டு

  189. Dear Guhan,

    //
    I would not have come into this argument at all, had there been Pro-Vaishnava or Pro-Saiva sectarian views from a Vaishnavaite or a Saivaite. However seeing one Gandharvan, claiming to be a Smarta, writing all this brought me here
    //

    by writing this – are you saying you are writing as though you are a Smartha sectarian. What do you mean by pro-vaishnama/pro-saiva sectarianism? – all vedantins follow Smrithi.

    you want to look at every mutham as Paramathma – fine – this is like vaisesikas view – starting from Anu – (should be interpreted as you add everything and call as paramathma) Vedantins do top-down and look at one paramathma as everything – which is what shri Gandarvan is doing.

    you look from anu and call that as advaitham – you are looking at parts and adding up, whereas Shri Ganarvan is looking at one absolute whole as everything – now i do not which one is advaitham

  190. Hi Sarang,
    If this is the way you interpret my comments, one can very well understand how you guys could essence the Prastanatrya bhashyas too. All the best!
    Rgds,
    Guhan

  191. Dear Guhan,

    //If this is the way you interpret my comments//

    thats the same mistake you did in interpreting Shri Gandarvan’s writings and thats the same mistake you did by putting yourself on a high pedestal and calling others Sectarians.

    only those who do true akshara brahma upasana can be truly non -sectarians.(according to your own statements). Please ponder over the later part of my earlier reply to you.

    i do not know how you interpret prastana trayam – i do it according to what my Guru says (my Guru is an advaithin and an authority in it)

  192. Guhan & others,
    Pl stop argueing with HRHK followers. It would just be futile as I have realised over a period of time.

  193. Dear Venkat,

    Thank you for the profuse eulogy. It is a great honor to be called a Hare Krishna devotee

    🙂

    Who will not rejoice to know that (s)he is part of a great movement that removed despair and filled millions of Indians belonging to all social strata with Krishna bhakthi
    Who will not rejoice to know that (s)he is part of a great movement that has impressed astikas globally and has a mass following of true bhakthas globally who engage in service and live a simple and austere life
    who will not rejoice to know that (s )he is part of a tradition which was founded by chaitanya prabhu who knowingly or unknowlingly helped in a major portion of india becoming pakistan 🙂

    Who will not rejoice to know that (s)he is part of a tradition which has produced great bhaktas like Shri Raghava ( American white) who lost his legs fighting local theives who were trying to steal Mayapur Krishna Vigraha

    Venkat, you have indeed filled me with happiness 🙂

    hope you get it 🙂

  194. Shriman Venkat,

    Apart from the fact that what you intended as a censure turns out to be an unintended praise, please note that the sort of character assassination you are attempting (by calling us so and so) is like Leninist/Stalinist/Marxists’ tactic of dismissing the opposition (they did it by labeling them as “anti-people bigots”) and painting a dishonest picture of them. This is done by them in order to make lay people believe that what they say does not matter any more, once they have been branded as such-and-such.

    If you have anything to say about the points I or Shri Sarang made, it would be desirable for you to put that. By resorting to name-calling, you are only painting a bad picture of yourself and doing a disservice to your side.

    Regards,

    Gandharvan

  195. திரு சாரங்க் அவர்களே

    ///அப்படியா
    நீங்கள் உங்களது நீண்ட பதிலில் எங்கோ ஒரு இடத்தில் சங்கரரை பற்றி எழுதீயிருக்கிறீர்க்ள் – நான் எனது நீண்ட பதிலில் எங்கோ ஒரு இடத்தில் வாலியை பற்றி எழுதி உள்ளேன் இவ்விரண்டயும் முடிச்சு போடுவதை மாயயை அல்ல மாயா ஜாலம் என்று சொல்லப் போகிறார்கள் ///
    நான் எங்கோ ஒரு மூலையில் ஆதி சங்கரரைப் பற்றி எழுதவில்லை. ஆதிசங்கரர் வாழ்ந்துகாட்டிய விதம் நீங்கள் நடக்கிறீர்களா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை வைத்தேன். அவர் மறந்தும் புறம் தொழாமையைக் கடைப்பிடிக்காத போது அதை நியாயப் படுத்தும் நீங்கள் அவரது உழைப்பைப் பயன்படுத்துதல் முறையா என்றுன் கேட்டேன். இவையெல்லாம் எங்கோ ஒரு மூலையாகத் தங்களுக்குத் தெரிவது நிச்சயமாக மாயைதான். அதை நீங்கள் வேறு விதமாகப் படம்பிடித்து மழுப்புவது மாயாஜாலம்தான்.
    ///நமக்குள் இந்த ப்ரச்சனை வேண்டாம்///
    மிகச்சரி.

  196. திரு கந்தர்வன் அவர்களே,

    நான் ஆதிசங்கரர் நடந்து காட்டிய விதத்தைக் குறிப்பிட்டுத் தங்களுக்கு வினாக்களை எழுப்பினால் கூட நீங்கள் கீதா பாஷ்யத்தை மேற்கோள் காட்டுகிறீர்கள்.

    நீங்கள் எடுத்ததெற்கெல்லாம் கீதையை மேற்கோள் காட்டுவதால் எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை.

    கீதையைப் புரட்டுங்கள் –
    உய்யும் வழி எதுவென்று உணர்வதற்கு, அவ்வழி நடப்பதற்கு.

    உமாசங்கர் போன்ற சாதாரணமானவர்கள் எழுப்பும் சாதாரண வினாக்களுக்கு விடை தரவும் வாதம் செய்யவும், புரட்டாதீர்கள்.

    கீதையைப் புரட்டு – புரட்டென்று புரட்டுவதற்கும் ஒரு நியாயமான காரணமும், முறையும், அளவும் வேண்டும்.

    எங்கே அந்த குஹனார் என்றும் எனது அந்தக் கேள்வி என்னவாயிற்று என்றும் கேட்கும் முன்னர் ஆத்ம விசாரணை செய்யுங்கள். நான் ஆதிசங்கரரின் பிரஸ்னத்திரயத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டியபோது அது உங்களுக்கு அபவாதமாக இருக்கிறது என்று சொன்னதை நினைவு கொள்ளுங்கள்.

    ஆதிசங்கரர் கீதா பாஷ்யம் மட்டுமல்ல, விவேக சூடாமணி, சிவமானஸ பூஜா ஸ்துதி, சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி, நிர்க்குண மானச பூஜா ஸ்துதி, பவானி அஷ்டகம், சுப்ரமண்ய புஜங்கம் உள்ளிட்ட பலவற்றை எழுதியிருக்கிறார். பிரம்ம விசாரணை செய்வதற்கு என்னென்ன தகுதிகள் என்று கூறப்பட்டிருப்பதையும் படித்துப் பாருங்கள். இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, கீதாபாஷ்யத்தை மட்டும் வைத்துக்கொண்டு, ஆதிசங்கரருக்கு அவதூறு அது இதென்று தாங்கள் எழுதும் நாடக வசனங்கள், தங்களுக்கு நிதானமின்மையையே காட்டுகின்றன. நிதானம் தவறும்போது நியாயம் கண்ணுக்குப் படாது. ஆத்மவிசாரணைதான் இதற்கு நல்ல மருந்து. தயவு செய்து இதே தமிழ் ஹிந்துவில் திரு ராமன் அவர்கள் எழுதிய தியானம் குறித்த தொடரை படித்துப் பயன் பெறவும்.

  197. அன்புள்ள திரு உமாசங்கர் அவர்களே,

    // விவேக சூடாமணி, சிவமானஸ பூஜா ஸ்துதி, சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி, நிர்க்குண மானச பூஜா ஸ்துதி, பவானி அஷ்டகம், சுப்ரமண்ய புஜங்கம் உள்ளிட்ட பலவற்றை எழுதியிருக்கிறார்.//

    “இந்நூல்களை ஆதி சங்கரர் எழுதவில்லை. அவர் எழுதியதாகத் திட்டவட்டமாக நிரூபிக்கப்படுவது அவருடைய கீதா-உபநிஷத்-பிரம்மா சூத்திர பாஷ்யங்கள் மட்டுமே” என்று பல முறை எழுதியும் மீண்டும் விவேக சூடாமணி முதலிய நூல்களை அவர் எழுதியதாக என்னை நம்பச் சொல்லுகிறீர்கள். எந்த பாஷையில் நான் இதை மறுபடியும் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை…

    பிரம்ம சூத்திர-கீதா-உபநிஷத் பாஷ்யங்கள் தவிர மற்ற நூல்களை (பஜ கோவிந்தம், கோவிந்தாஷ்டகம், ரங்கநாதாஷ்டகம், ஜகன்னாத அஷ்டகம், லக்ஷ்மீ நரசிம்ம ஸ்தோத்ரம் உட்பட) அவர் எழுதியதாக அவர் சீடர்களும் அவர்களுக்கு அண்மைக் காலத்தில் இருந்தவர்களும் குறிப்பிடவில்லை. ஆகையால், அந்நூல்களை அவருக்குப் பின் மடங்களில் இருந்த வேறு சங்கராச்சாரியார்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நம்பமுடிகிறதே தவிர, ஆதி சங்கர பகவத்பாதர் தான் எழுதினர் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதையும் மீறி நீங்கள் கூறும் நூல்களை ஒப்புக்கொண்டால், அவர் பாஷ்யங்களில் கூறியிருப்பது வெறும் வேடிக்கையாகிவிடும். இது உங்களுக்குப் புரியாவிட்டாலும் அல்லது ஒப்புக்கொள்ள மனமில்லை என்றாலும் என் நிலையை எடுத்துக் கூறினேன். அவ்வளவே. நமக்குள் பரஸ்பர வித்தியாசம் இருக்கலாம். அதற்காக விவாதத்தை நீட்டிக் கொண்டே இருக்க வேண்டாம்.

    இந்த ஆதி சங்கரர் நூல்கள் பற்றிய விஷயத்துக்கு வரும் முன் நான் முன்வைத்த விஷயத்தில் உள்ள நியாயத்தை ஏற்பதற்கு உங்களுக்கு ஏதோ தடையாக இருக்கிறது என்று தெரிகிறது. அதனால் தான் விவாதத்துக்குச் சம்பந்தமில்லாத புறம்தொழாமை முதலியவற்றை கொண்டு வருகிறீர்கள் என்று தெரிகிறது. சரி அது உங்கள் விஷயம். இத்துடன் விட்டுவிடுவோம். விவாதித்தது போதும். நன்றி.

  198. திரு கந்தர்வன் அவர்களே

    ஏதொ ஆதிசங்கரர் என்று ஒருவர் இருந்தார் அவரும் உங்களுக்கு சௌகரியமான சிலவற்றை இயற்றினார் என்றாவது ஒப்புக்கொண்டீர்களே, மிக்க நன்றி.

    ///அவ்வளவே. நமக்குள் பரஸ்பர வித்தியாசம் இருக்கலாம். அதற்காக விவாதத்தை நீட்டிக் கொண்டே இருக்க வேண்டாம்.///

    ஒப்புக்கொள்கிறேன்.

  199. Advaita Vedatin Sarang says:
    It is a great honor to be called a Hare Krishna devotee –
    Who will not rejoice to know that (s)he is part of a great movement that removed despair and filled millions of Indians belonging to all social strata with Krishna bhakthi..

    Another Advaita Vedantin Gandharvan posing / posting here as a true disciple of AdiSankara says:
    If you have anything to say about the points I or Shri Sarang made, it would be desirable for you to put that. By resorting to name-calling, you are only painting a bad picture of yourself and doing a disservice to your side.

    And see what their original Guru’s name calling on Adisankara:

    “According to the Vedic teachings, anyone who does not accept the Vedic way of life, he is called atheist. Therefore, according to Vedantists, Buddhists are called atheist. Actually Buddha philosophy does not accept God, neither soul. They simply philosophize on the material elements, and they want to finish the material exis…, dismantle the material elements. Nirvana. So Caitanya Mahaprabhu has remarked that the Buddhists are honest. They frankly say that “We don’t accept your Vedas.” But the Shankarites, they are cheaters, because they are accepting Vedas, but on the basis of Buddha philosophy. That is cheating.”
    – Srila Prabhupada Lecture on Srimad-Bhagavatam, 09-17-72, Los Angeles

    Now, may I request you to please go, correct these views & spread your own Advaita Darsana among the fellow devotees of ISKCON instead of spamming Tamil Hindu comment boxes?.

    (Edited and published)

  200. அனாவசிய விவாதங்கள் நீண்டு கொண்டு போவதால், இந்தப் பதிவின் மறுமொழிகளை நிறுத்துவதே நலம் என்று சில வாசகர்கள் தெரிவிக்கின்றனர். அமைதி காக்க வேண்டுகிறோம்.

    இந்தப் பதிவின் மறுமொழிப் பெட்டி மூடப்படுகிறது. இனிமேல் வரும் மறுமொழிகள் பிரசுரிக்கப் படமாட்டாது.

Comments are closed.