கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

ராமனுடைய அரசவைக்கு ஒரு வினோதமான வழக்கு வருகிறது. அரிசி, கேழ்வரகு (ராகி) ஆகிய இரண்டு தானியங்களுக்கும் நடுவில் யார் பெரியவர் என்பது வழக்கு. இரண்டு தானியங்களும் தங்கள் பெருமைகளைக் கூறி வாதம் செய்கின்றன. இரண்டையும் ஆறு மாதம் சிறைக்கு அனுப்புகிறான் ராமன். ஆறு மாதத்திற்குப் பிறகு அரிசி உளுத்துப் போய்விடுகிறது. கேழ்வரகு உறுதியாக நிற்கிறது. கஷ்டங்களைப் பொறுக்கும் சக்தி படைத்த கேழ்வரகே உயர்ந்தது, அதற்கே என் அனுக்கிரகம் என்று ராமன் தீர்ப்பு வழங்குகிறான்.

kanakadasaகன்னடத்தில் கனகதாசர் எழுதியிருக்கும் ‘ராமதான்ய சரித்ரே’ என்ற குறுங்காவியத்தின் கதை இது. அரிசி உயர்குடி மக்களின், செல்வந்தர்களின் உணவு. கேழ்வரகு கீழ்சாதிக் காரர்களின், உழைக்கும் மக்களின் உணவு. இந்த இரண்டையும் குறியீடுகளாகப் பயன்படுத்தி சமூகத்தின் அடித்தட்டு மக்களே மன உறுதி வாய்ந்தவர்கள், கடவுளின் அருள் அவர்களுக்கும் உண்டு என்ற கருத்தை அவர் அறிவுறுத்துகிறார் என்பது கன்னட இலக்கியவாதிகள் கூறும் கருத்து. சமூக விமர்சனத்தை அழுத்தமாக முன்வைத்த ஒரு பக்தி இலக்கியப் பிரதி என்று இந்த நூலை அவர்கள் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

கர்நாடகத்தில் அடித்தட்டு மக்களின் சமூக, ஆன்மிக எழுச்சிக்கு ஒரு குறியீடாகவே கனகதாசர் விளங்குகிறார் என்று சொல்லலாம். அவரது காலம் 15ம் நூற்றாண்டு (1506 – 1609). உன்னதத்துடனும், செல்வச் செழிப்புடனும் விளங்கிய விஜயநகரப் பேரரசு மறையத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். கர்நாடகத்தின் மத்தியப் பகுதியில் உள்ள ஹவேரி மாவட்டத்தில் காகினேலே என்ற சிற்றூரில் கௌடர்களின் ஒரு பிரிவான குருபர் (இடையர்) குலத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் திம்மப்ப நாயக்கர். அவர் ஒரு குறுநிலமன்னரிடம் போர்த் தளபதியாகப் பணியாற்றுகையில் ஒரு போரில் உயிர்போகும் சமயம் தெய்வாதீனமாகக் காப்பற்றப் பட்டதாகவும், அதன்பின் உலக வாழ்க்கையைத் துறந்து ஆன்மிகப் பாதையில் திரும்பியதாகவும் கூறப் படுகிறது. அவரது பல பாடல்களில் தனது சொந்த ஊரில் குடிகொண்ட பெருமாளின் பெயரான “காகினேலே ஆதிகேசவா” என்ற முத்திரையையும் பதித்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் உடுப்பியில் வாழ்ந்து வந்த மத்வ சம்பிரதாய மடாதிபதி வியாசராஜ தீர்த்தர். தனது ஆன்மிக குருவாக இவரைக் கனகதாசர் ஏற்றுக் கொண்டிருந்தார். ஒருமுறை சீடர்கள் வேதாந்த விசாரம் செய்து கொண்டிருந்தபோது, மோட்சத்திற்குப் போக அதிகாரி யார் என்று விவாதம் வந்தது. அப்போது‘நானு ஹோதரே ஹோதெனு’ (நான் போனால் போகலாம்) என்று சொன்னார் கனகதாசர். என்ன ஆணவம் இந்த கீழ்ச்சாதிக் காரனுக்கு என்று மற்ற சீடர்களும், பண்டிதர்களும் கூச்சலிட்டனர். குரு அவர்களை அமைதிப்படுத்தி, அதன் பொருளை விளக்குமாறு கனகதாசரைக் கேட்க, ‘நான்’ என்ற அகங்காரம் போனவன் தான் மோட்சத்திற்குப் போக அதிகாரி என்று அவர் விளக்கமளித்தார். பிறகு சீடர்களின் கர்வம் அடங்கியது. இது ஒரு சம்பவம்.

இன்னொரு சம்பவம் கனகதாசர் அக்காலத்திய சாதிய அடக்குமுறையினால் எந்த அளவு அவமதிக்கப் பட்டார் என்பதையும் பதிவு செய்கிறது. ஒருமுறை அவர் உடுப்பிக்குச் சென்று அங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்ய விரும்பினார். சிறுமதி படைத்த பிராமண பூசாரிகள் தடுத்தனர். எனவே கோயிலின் பின்புற வாயிலுக்குச் சென்று அங்கிருந்தே மனமுருகிப் பாட ஆரம்பித்தார். அவரது பக்திக்கு இரங்கினார் பரந்தாமன். அவருக்கும் கிருஷ்ண விக்கிரகத்திற்கும் இடையே இருந்த சுவரில் கீறல் விழுந்து பிளந்து அதில் ஜன்னல் அளவு பெரிய இடைவெளி தோன்றியதாம். அதே நேரத்தில் கிருஷ்ண விக்கிரமும் அரைவட்டமாகத் திரும்பி அந்த துவாரத்தின் வழியே தாசருக்குத் தரிசனம் தந்ததாம். பிறகு சுவரை சீர்படுத்தி அதில் அந்த இடைவெளியை அப்படியே விட்டுவிட்டார்களாம். இன்றும் உடுப்பி கோயிலின் வாயிலில் ‘கனகன கிண்டி’ (கனகனது சாளரம்) என்று ஒரு ஜன்னல் இருக்கிறது. சம்பிரதாயத்தின்படி கிழக்கு நோக்கி வீற்றிருக்காமல், கிருஷ்ண விக்கிரம் மேற்கு நோக்கி இருப்பதற்கும் இதுவே காரணம் என்று கூறப் படுகிறது.

kanaka_window_udupi

கனகதாசர் குருபர் குலத்தினராக இருந்தும் இளம்வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்தும், கவி பாடும் திறன் பெற்றவராகவும் இருந்ததார். ஹரிபக்திசாரம், நரசிம்ஹஸ்தவம் ஆகிய துதிப்பாடல்களும், மேற்சொன்ன ராமதான்யசரித்ரே தவிர நளசரித்ரே, மோகனதரங்கிணி ஆகிய காவியங்களும், நூற்றுக் கணக்கான தனிப் பாடல்களும் அவர் இயற்றியவை என்று கருதப் படுகிறது. மோகனதரங்கிணி என்ற காவியம் கிருஷ்ணன் ருக்மிணி இருவருக்கும் மகனாகப் பிறந்த பிரத்யும்னன், பாணாசுரனின் மகள் உஷையைக் காதலித்து மணம் புரியும் புராணக் கதையின் காவிய வடிவம். இக்காவியத்தில் துவாரகை நகரை வர்ணிக்கும்போது, முத்தும் மணியும் தெருவில் கூறுகட்டி விற்கும் அகன்ற கடைவீதிகள், பேரம் பேசும் பல நாட்டு வணிகர்கள், மது மயக்கத்தில் திளைக்கும் கிராமத்து மள்ளர்கள் என்று தமது ராஜ்யத்தின் தலைநகரான விஜயநகரத்தையே (இன்றைய ஹம்பி) விரிவாக வர்ணித்திருக்கிறார்.

கனகதாசருக்கு கர்நாடக சங்கீதத்தின் இசையமைப்பு பற்றிய அடிப்படை ஞானம் இருந்தது. கிராமிய இசைவாத்தியமான எளிய தம்புராவை மீட்டிப் பாடும் வகையில் எளிய சொற்களிலேயே அவரது பெரும்பாலான பாடல்கள் அமைந்துள்ளன. பல பாடல்கள் தத்துவார்த்தமானவை. ஒரு பாடல் –

கன்னடம்:

நீ மாயெயொளகொ நின்னொளு மாயெயொ
நீ தேஹதொளகொ நின்னொளு தேஹவொ

பயலு ஆலயதொளகொ, ஆலயவு பயலொளகொ
பயலு ஆலயவெரடு நயனதொளகொ
நயன புத்தியொளகொ புத்தி நயனதொளககொ
நயன புத்திகளெரடு நின்னொளகொ ஹரியெ

ஸவியு ஸக்கெரெயொளகொ சக்கரெயு ஸவியொளகொ
ஸவியு ஸக்கரெயெரடு ஜுஹ்வெயொளகொ
ஜிஹ்வெ மனஸினொளகொ மனஸு ஜிஹ்வெயொளகொ
ஜிஹ்வெ மனஸுகளெரடு நின்னொளகொ ஹரியெ

குஸுமதொளு கந்தவொ கந்ததொளு குஸுமவொ
குஸும கந்தகளெரடு ஆக்ரஹணதொளகொ
அஸம்பவ காகினெலெ ஆதிகேசவராய
உசுரலென்னளவல்ல எல்ல நின்னொளகொ ஹரியெ.

தமிழில்:

நீ மாயையினுள்ளா அன்றி நின்னுள் மாயையா
நீ தேகத்தினுள்ளா அன்றி நின்னுள் தேகமா

வெளி வீட்டினுள்ளா வீடு வெளியினுள்ளா
வீடும் வெளியும் இரண்டும் விழியிலேயோ
விழி அறிவினுள்ளா அறிவு விழியினுள்ளா
விழி அறிவு இரண்டும் உன்னிலேயோ ஹரியே

இனிமை சர்க்கரையினுள்ளா சர்க்கரை இனிமையினுள்ளா
இனிமை சர்க்கரை இரண்டும் நாவிலேயோ
நா மனதினுள்ளா மனம் நாவினுள்ளா
நா மனம் இரண்டும் உன்னிலேயோ ஹரியே

மலரினுள் மணமா மணத்தினுள் மலரா
மலர் மணம் இரண்டும் நாசியிலேயோ
சொல்ல வல்லேன் அல்லேன் காகினெலெ ஆதிகேசவராயா
ஒப்பற்றவனே, எல்லாம் உன்னிலேயோ ஹரியே

மேலும், பல பாடல்களில் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கடுமையாக விமர்சித்தும் பாடுகிறார். ‘குல குல குலவெந்து’ என்று தொடங்கும் ஒரு பாடல்.

குலம் குலம் குலம் என்று சண்டையிடாதீர்
உம் குலத்தின் ஆதிமூலம் என்ன என்றாவது அறிவீரோ

நாம் பிறக்காத யோனிகளும் இல்லை நடக்காத நிலங்களும் இல்லை
இப் பிறவிகளில் நாம் உண்ணாத பொருளே இல்லை
இறுதிச் சொட்டு நீருக்காகத் துடிக்கும் நேரத்தில் கீழ் மேல் என்று பார்ப்பாயா
இதனை உணர்; சர்வக்ஞனான ஹரியையே நினை.
இது ஏன் உனக்குப் புரியவில்லை மானிடா?

தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ
தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?
நீர்க்குமிழி போன்று நிலையில்லாதது இத்தேகம்
நீர் புரிந்து கொள்ளும் இதனை மானிடரே

ஹரியே சர்வோத்தமன் ஹரியே சர்வேஸ்வரன்
ஹரிமயம் இதெல்லாம் என்று அறிந்து தெளிந்து
ஸ்ரீ காகினெலெ ஆதி கேசவராயனின்
சரண கமலத்தைப் புகழ்ந்து பாடுபவனே நற்குலத்தான்.

பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. இத்தனைக்கும் நந்தனார் போன்றோ, திருப்பாணாழ்வார் போன்றோ அவர் கடைநிலைச் சாதியினர் கூட இல்லை. போர்வீரராக ‘நாயக்கர்’ என்ற பட்டத்துடன் வாழ்ந்திருக்கிறார். இருந்தாலும் அவர் உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. சாதியக் கட்டுப் பாடுகள் கெட்டிப் பட்டு கடுமையாகி, மிகவும் இறுகிய நிலையை அக்காலகட்டத்தில் அடைந்திருந்தன என்ற சித்திரத்தையே இது அளிக்கிறது. தன் வாழ்நாளின் இறுதிக் காலத்தைக் கனகதாசர் திருமலையில் கழித்தார் என்று சொல்லப் படுகிறது. பிறப்படிப்படையில் மனிதருக்கு மனிதர் வேறுபடுத்திப் பார்த்து, அதையே சமூக நடைமுறையாக்கி, சில மக்கள் சமூகங்களின் சமூக, வழிபாட்டு உரிமைகளையே முழுவதுமாக முடக்கி வைத்திருந்த ஆதிக்கவாதிகளுக்கு, தன் ஆன்மிக அற உணர்வின் அடியாழத்திலிருந்து புறப்பட்ட எளிய பாடல்கள் மூலம் வாழ்நாளின் இறுதிவரை அவர் உபதேசம் செய்து வந்தார்.

kanakadasa-statue-in-udupiஉடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குள் அவரது சிலையோ திருவுருவப் படமோ எதுவும் இல்லை. அவருக்கு பகவான் தரிசனம் தந்த நுழைவாயிலில் எழுப்பப் பட்ட கோபுரம் கனக கோபுரம் என்று சம்பிரதாயமாக அழைக்கப் பட்டதாம். ஆனால் சில வருடங்கள் முன் மத்வ மடாதிபதி சுவாமிகள் அதன் பெயர் கனக கோபுரம் அல்ல, நவக்ரக கோபுரம் என்று சொல்லி நிறைய சர்ச்சையையும், கனகதாசரது அடியார்களின் கடுப்பையும் சம்பாதித்துக் கொண்டார். கனகதாசரைப் போன்றே புரந்தர தாசர், விஜயவிட்டலதாசர், ரங்கவிட்டலதாசர் என்று பல ஹரிதாசர்கள் கன்னடத்தில் எளிமையான மொழியில் பக்திரசம் ததும்பும் பாடல்களைப் பாடியுள்ளார்கள். இவர்களது பாடல்களை ஒட்டுமொத்தமாக ‘ஹரிதாஸ சாகித்யம்’ என்று அழைக்கிறார்கள். ஹரிதாசர்களின் பாடல்கள் எல்லா மக்களாலும் பக்தியுடன் பாடப்படுகின்றன. ஆனால் மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த குருமார்களைப் போல கோயில்களும் பிருந்தாவனங்களிலும் வைத்து இவர்களைப் பூஜிப்பதில்லை என்று அறிய வருகிறேன். தேசந்தோறும் பாஷை வேறு, சம்பிரதாயம் வேறு.

அந்த விதத்தில் நாயன்மார்களும், ஆழ்வார்களும், அவர்களின் அடியார்களும் பாக்கியசாலிகள். ’திருநாளைப் போவாரையும், திருப்பாணாழ்வாரையும் பார்ப்பார் கோயிலிலே வைத்துப் பூசை செய்யவில்லையா?’ என்று பாரதியார் ஒரு கட்டுரையில் கேட்டது ஞாபகம் வருகிறது. ஆகம முறைப்படி கட்டப் பட்ட தமிழகக் கோயில்களில் அடியார்களது திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்து, அவர்களுக்கு விழாக்களும் கொண்டாடும் நல்மரபு சைவ, வைணவ சமயாசாரியார்களாலும், பண்டைத் தமிழ் அரசுகளாலும் ஏற்படுத்தி வைக்கப் பட்டிருக்கிறது.

ஆனால் கர்நாடக அரசுக்குத் தான் இந்தக் கட்டுரைக்காக நான் நன்றி தெரிவிக்க வேண்டும். கனகதாசரைப் பற்றி நான் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தது அவர்கள் தான். போன வார இறுதியில் பள்ளி நாளேட்டைப் பார்த்து ஆகா என்று சந்தோஷத்தில் குதித்தாள் அருமை மகள். என்ன சமாசாரம் என்று கேட்டால், 24-நவம்பர் புதன்கிழமை பள்ளி விடுமுறை! பண்டிகை ஒன்றும் இல்லையே எதற்காக விடுமுறை என்று பார்த்தால் “கனகதாஸ ஜயந்தி” என்று போட்டிருந்தது.

ஆம். கனகதாசரின் பிறந்தநாள் கர்நாடகத்தில் மாநில அரசு விடுமுறை. அதே பட்டியலில் இன்னொரு நாளும் வருகிறது – பஸவ ஜயந்தி. கர்நாடக வீரசைவ சமயப் பிரிவின் குருநாதரான பசவண்ணர் எனப்படும் பசவேஸ்வரரின் பிறந்த நாள்.

அடித்தட்டு மக்களின் சமய, ஆன்மீகக் குரலாக எழுந்த இரு பெரும் சைவ, வைணவப் பெரியார்கள். அவர்கள் இருவரது பிறந்த நாளையும் அரசு விடுமுறையாக அறிவித்ததோடு, அவர்களின் புனித நினைவைப் போற்றி, அவர்களது மனிதநேய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளைப் பரப்பும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் நடத்த மாநில அரசு ஆதரவு தருகிறது என்று கேள்விப் படுகிறேன்.

உத்தமமான காரியம். கர்நாடக அரசின் இச்செயல்பாட்டை மனம்திறந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

14 Replies to “கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்”

  1. Pingback: Indli.com
  2. அன்பிற்குரிய ஜடாயு அவர்களுக்கு,

    //அதே பட்டியலில் இன்னொரு நாளும் வருகிறது – பஸவ ஜயந்தி. கர்நாடக வீரசைவ சமயப் பிரிவின் குருநாதரான பசவண்ணர் எனப்படும் பசவேஸ்வரரின் பிறந்த நாள்.

    அடித்தட்டு மக்களின் சமயஇ ஆன்மீகக் குரலாக எழுந்த இரு பெரும் சைவஇ வைணவப் பெரியார்கள். அவர்கள் இருவரது பிறந்த நாளையும் அரசு விடுமுறையாக அறிவித்ததோடுஇ அவர்களின் புனித நினைவைப் போற்றிஇ அவர்களது மனிதநேய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளைப் பரப்பும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் நடத்த மாநில அரசு ஆதரவு தருகிறது என்று கேள்விப் படுகிறேன்.//

    கன்னட தேசத்தில் பொ.பி. 1105ல் பிறந்த பசவண்ணர் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் பிறப்பினால் பிராமணர். ஆனால் ஜாதி வேறுபாட்டை எதிர்த்தவர். குரு லிங்க சங்கம வழிபாடடைக் கைக்கொள்ளும் சங்கமர் குழாத்தினரை உருவாக்கினவர். யாத்திரைகளும் வேள்விகளும் பயனற்றது என்றும் அவர் கூறி சிவலிங்க வழிபாட்டை செய்வதே சிறந்தது என்று தன்னைச் சார்ந்தவர்களை ஆற்றுப்படுத்தினார். பால்யவிவாகத்தை எதிர்த்த அவர் விதவா விவாகத்தையும் அக்காலத்திலேயே ஆதரித்திருக்கிறார். இறந்தவர்களை எரிக்கக் கூடாது என்று புதைக்குமாறு சொன்னார் என்றெல்லாம் பல செய்திகளை அவர் பற்றி அறிகிறேன்.

    வீரசைவ மரபின் ஸ்தாபகாச்சார்யராகிய ஸ்ரீ பசவண்ணரின் கோட்பாடுகள் சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியா விடினும் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதிமறுப்பு கோட்பாட்டை தீவிரமாக செயற்படுத்திய அவரது பணி போற்றுதற்குரியது.

    பசவரும் பாடல்கள் பாடியிருக்க வேண்டும் என்றும் தெரிகிறது. உதாரணமாக

    எனது மனமோ அத்திப்பழம் பாரையா
    ஆராய்ந்து பார்த்தால் அதில் ஏதும் இல்லை
    உலகின் டாம்பீகத்தில் என்னை ஓராளாக்கி
    நீங்கள் விட்டுள்ளீர்கள் கூடல சங்கமதேவா’

    என்பது போன்ற தன்னைத் தான் இரங்கிப் பல பாடல்கள் பாடியிருப்பதாகவும் அறகிறேன். இப் பசவர், பசவையா, பசவேசர், பசவண்ணர் என்றெல்லாம் சொல்லப்பெறும் இவர் பற்றியும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    ஜாதி என்ற கொடுமை நம் மத மக்களை எப்படி எல்லாம் சிதைத்திருக்கிறது என்று நினைக்கும் போது நெஞ்சம் அழுகிறது.

  3. சர்மா அவர்களுக்கு,

    பசவண்ணரின் ’வசனங்கள்’ எனப்படும் தத்துவார்த்தமான, எளிய பாடல்கள் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ளன. ஆங்கிலத்தில் ஏ.கே.ராமானுஜன் மொழிபெயர்ப்பில் Speaking of Siva என்று புத்தகமாக வந்துள்ளது (பெங்குயின் வெளியீடு). இத்தொகுப்பில் பசவண்ணரோடு, அக்கா மகாதேவி, அல்லம பிரபு ஆகிய அடியார்களின் பாடல்களும் உள்ளன. இத்தொகுப்பு முழுவதும் நான் படித்து மகிழ்ந்திருக்கிறேன். ராமானுஜன் தானே ஒரு நல்ல ஆங்கிலக் கவிஞர் என்பதால் இந்த மொழியாக்கமும் மிகச் சிறப்பாக உள்ளது.

    தமிழில் நஞ்சுண்டன் மொழிபெயர்ப்பில் ’பசவண்ணர் வசனங்கள்’ நூல் வந்துள்ளது (காலச்சுவடு வெளியீடு). நான் படித்ததில்லை. நஞ்சுண்டன் அவர்களும் நல்ல எழுத்தாளர், படைப்பாளி. அதனால் சிறப்பாகவே செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.

    நேரம் கிடைக்கும்போது பசவண்ணர் பற்றியும் எழுதுகிறேன்…

  4. // நாம் பிறக்காத யோனிகளும் இல்லை நடக்காத நிலங்களும் இல்லை
    இப் பிறவிகளில் நாம் உண்ணாத பொருளே இல்லை //

    புல்லாகி பூண்டாய்ப் புழுவாய் மரமாகி
    பல்மிருகமாகி பறவையாய்ப் பாம்பாகி
    வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!

    என்று நமது மாணிக்கவாசகரும் இதே கருத்தைத் தான் கூறுகிறார் என்று நினைக்கிறேன். பல பிறவிகள் எடுத்து மோட்சம் அடைவது என்ற கண்ணோட்டத்தில் தான் இந்தப் பாடலை இதுவரை படித்து வந்துள்ளேன்..

    இதில் சமத்துவ சிந்தனையும் இருக்கிறது என்று ஒரு புதிய பார்வை இப்போது கிடைக்கிறது. அருமை.

    நல்லதொரு கட்டுரைக்கு நன்றி.

  5. நன்றி! அருமை! ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் கோவிலில் வைத்து வழிபாடும் போது தானே அடியார்களின் பெருமை சாமானியருக்கும், தங்களை மட்டுமே பெரியவர்கள் என்று நினைபோருக்குமே புரிகிறது. இறைவனுக்குத் தேவை எதுவுமே இல்லை. உண்மையான பக்தி எதையும் சாதிக்க வல்லது.

  6. ஸ்ரீ ஜடாயு அவர்களின் இந்தக்கட்டுரை தற்செயலாக அடியேனுக்குப்பட்டது. அருமையானக் கட்டுரை. கர்னாடகத்து திருமாலடியார்களில் சிறந்த கனக தாஸரின் பங்களிப்பை சிறப்பாக வர்ணித்துள்ளார் ஸ்ரீ ஜடாயு. அடியேனுக்கு கன்னடம் படிக்கத்தெரியாது. கன்னட மொழியில் திரைப்படங்களை ஒரளவு புரிந்துகொள்ள முடியும். பக்த கனகதாச கன்னடப்படம் பார்த்ததுண்டு.அந்தப்படத்தின் காட்சிகளை இந்தக்கட்டுரை நினைவிற்கு கொண்டுவந்தது. நன்றி ஜடாயு. அந்தப்படத்தில் நிறைவாக கனகதாஸர் ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாளோடு சாயுஜ்யம் அடைவதாகக்காட்டியிருந்தார்கள். ஸ்ரீ பெருமாள் விஸ்வரூபமாக ஸ்ரீ தாசரை எடுத்து அப்படியே விழுங்கிவிடுவதாகக்காட்டினார்கள். ஆகா சைவத்திள் உள்ளது போலவே வைணவத்திலும் சாயுஜ்யம் இருக்கிறதே என்று மகிழ்ந்தேன்.

  7. ஸ்ரீ மயூரகிரி சர்மா
    “வீரசைவ மரபின் ஸ்தாபகாச்சார்யராகிய ஸ்ரீ பசவண்ணரின் கோட்பாடுகள் சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியா விடினும் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதிமறுப்பு கோட்பாட்டை தீவிரமாக செயற்படுத்திய அவரது பணி போற்றுதற்குரியது”.
    ஸ்ரீ மயூரகிரியார் அவர்களின் ஸ்ரீ பசவண்ணர் பற்றிய கருத்தில் ஒரு சிறு தவறு உள்ளது. ஸ்ரீ பசவேசர் வீரசைவ மரபின் ஸ்தாபகர் அல்லர். கருநாடகத்திலும் இரு வீரசைவ மரபுகள் உள்ளன. பஞ்சாசாரியார் மரபு ஸ்ரீ பசவருக்கும் முற்பட்டது.வீரசைவ நூல்களில் தலையாதான சித்தாந்த சிகாமணி பசவரின் காலத்திற்கும் முற்பட்டது. சடுத்தலக்கோட்பாடு அதிலேயே உள்ளது. சமீப காலத்தில் ஹிந்து சமயத்திலிருந்து வேறுபட்டதாக தம்மைக்காட்டுக்கொள்ளும் பசவ லிங்காயதர்கள் பசவேஸ்வரரே பூர்வாச்சாரியார் என்று சொல்லத்தலைப்பட்டுள்ளனர். இது ஆங்கிலேயர் மற்றும் மிச நரிகளின் சூழ்ச்சியின் விளைவு. சீக்கியர்களை எப்படி ஹிந்துக்கள் அல்லர் என்று சொன்னார்களோ அப்படியே லிங்காயதர்களையும் ஆங்கிலேயர்கள் அழைத்தார்கள். கடந்த மக்கள் தொகைக்கணக்கெடுப்பு சமயத்தில் சமயம் என்ற வினாவுக்கு லிங்காயதம் என்று கொடுக்கவேண்டும் என்று அழைப்பும் அவர்களால் விடுக்கப்பட்டது.ஆனால் சிதானந்த மூர்த்தி போற்ற கன்னட அறிஞர்கள் இதை மறுத்து அறிக்கை விட்டதோடு. மத்திய அரசுக்கும் விண்ணப்பித்தனர். ஆனால் ஒரு சிலர் இந்த பிளவு வேலையில் ஈடுபட்டுவருகின்றனர்.

  8. ஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்களுக்கு மேலும் லிங்க தாரணம் செய்யும் வழக்கம் சிவாகமங்களின் உத்திர பாகத்தில் காணப்படுகிறது. திருமந்திரத்தில் திருமூலர் பிரான் தாம் லிங்கம் அணிந்திருந்ததாகக்கூறுகிறார். அந்த செய்தியை ஒரு ஈழ அறிஞர் உரை மூலம் அறிந்தேன். அவர் பெயர் முனைவர் வேதாந்தன். அவர் 1998 -99 வாக்கில் தஞ்சைத்தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தார். உங்களும் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
    தமிழ்ப்பேராசிரியர் அடிகளாசிரியர் மணிவாசகரும் லிங்கதாரணம் உடையவர் என்றே கருதுகிறார். உடலிடம்கொண்டாய் யான் இதற்கு இலன் ஒர் கைமாறே என்று மணிவாசகர் கூறுவது இட்டலிங்க தாரணம் என்று அவர் கருதுகிறார்.
    ஈழத்தில் உள்ள வீரசைவர்களும்(ஜங்கமர்கள்) பசவலிங்காயத்துக்கள் அல்லர் பஞ்சாச்சாரியார்களின் வழிவந்தவர்களே ஏன் எனில் தமிழகத்தில் உள்ள ஜங்கமர்கள் என்று அழைக்கப்படுவோர் பஞ்சாச்சாரியார் மரபினரே. விசாரித்தல் நலம்.

  9. மரியாதைக்குரிய வீபூதிபூஷண் அவர்களுக்கு,

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்…. முனைவர் வேதநாதன் அவர்கள் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தான் பணியாற்றி வருகிறார்… நான் பலமுறை அவரோடு பேசியிருக்கிறேன்…. சைவ சித்தாந்த விஷயங்களில் அவர் மிகுந்த அறிவு உடையவர்…

    எனக்கு உண்மையில், வீரசைவமரபு பற்றி அதிகளவில் ஏதும் தெரியாது… என்னைப் போலவே, பலருக்கும் வீரசைவமரபு பற்றிப் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவே தெரிகிறது… தாங்கள் இவை குறித்த அறிவுடையவராயின், ஒரு கட்டுரையாகவே பதிவு செய்யலாமே என்று விண்ணப்பிக்கின்றேன்…

  10. அன்புக்குறிய மயூரகிரி சர்மா அவர்களுக்கு நன்றி. உங்களுக்கு பேராசிரியர் வேதநாதன்(வேதாந்தன் என்று நினைத்தேன்) அவர்களைத்தெரியும் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. அடியேனுடைய வணக்கங்களை அவருக்கு சொல்லுங்கள். எனது பெயர் அவர் நினைவிலிருக்குமா என்று தெரியாது. எனினும் அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர். விபூதியை எப்போதும் பூசிக்கொண்டு கருத்தரங்கில் கேள்வி நிறையக்கேட்பார் என்று சொல்லுங்கள். நிச்சயம் எனது முகத்தினை நினைவில் வைத்திருப்பார் என்று நம்புகின்றேன்.
    வீரசைவத்தினைப்பற்றி கட்டுரை எழுதச்சொன்னீர்கள். நன்றி. அவசியம் முயற்சிக்கிறேன். ஒரு பினூட்டத்தில் இலங்கையில் வீரசைவர்கள் இருப்பதாக சொன்னீர்கள். அவர்களது வழிபாட்டு முறைகளை கொஞ்சம் ஆய்வு செய்து கட்டுரை எழுதும் படி உங்களையும் வேண்டுகிறேன்.
    வீரசைவம் லிங்காங்க சமரஸ்யத்தில் நம்பிக்கைவைத்துள்ள சைவம். முப்போது வழிபாடு செய்யவேண்டும் என்று மற்றைய சைவர்கள் சொன்னால் எப்போதும் சிவத்தோடு (லிங்கதாரணத்தின் மூலம்) இணைந்திருப்போர் வீரசைவராவர்.அதனால் நடமாடக்கோயில் என்ற திருமூலர் பிரானின் கருத்திற்கு பொருத்தமானவர்கள் வீரசைவரே.
    தென்னாடுடைய சிவனே போற்றி.

  11. அன்பிற்கினிய சிவஸ்ரீ விபூதி பூஷண் அவர்களுக்கு, தாங்கள் இலிங்கதாரனர் என்று அறிந்து மரியாதையும் மகிழ்ச்சியும் கொள்கின்றேன். என்னுடைய தந்தையார் காலத்திலிருந்து ஒரு வீரசவத் திருமடத் தொடர்பு எங்கள் குடும்பத்திற்கு உண்டு. தமிழகத்தில் வீரசைவத்திற்கும் சித்தாந்த சைவத்திற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மடாதிபதிகள் அங்கலிங்க பூசைக்குப் பின் திருவுருவ வழிபாட்டினையும் மேற்கொள்கின்றனர். திருமுறைகளையும் சித்தாந்த நூல்களையும் பயிற்றுவிக்கின்றனர். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், துறையூர் சிவப்பிரகாசசுவாமிகள், திருப்போரூர் சிதம்பரசுவாமிகள், திருப்பாதிரிப் புலியூர் ஞானையார் அடிகள் போன்ற சைவசித்தாந்திகளால் பேணப்பட்டு வளர்க்கப்பட்டதன்றோ தமிழகத்தில் சித்தாந்த நெறி. தங்களிடமும் அத்தகைய உறுதி இருப்பதைத் தங்கள் மறு மொழிகளில் காண்கின்றேன். வீரசைவராகிய ஒரு பேராசிரியர் தம்முடைய அனுபவத்தை என் நண்பர் ஒருவருக்குக் கூற அதனைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் அடுத்த மறுமொழி பார்க்க.
    .

  12. இது ஐம்பது அல்லது அறுபதாண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி. நண்பர் ஒரு வீரசைவர். சைவசித்தாந்தப் பேராசிரியர். தொழில் முறையில் கர்நாடகாவில் உள்ள தார்வாருக்குச் சென்றிருந்தார். பல்கலைக் கழகத்திற்குச் செல்லுமுன் முடி திருத்திக் கொள்ள அருகிலிருந்த தொரு நிலையத்திற்குச் சென்றார். சட்டியைக் கழ்ற்றிவிட்டு வெற்ருடம்புடன் நாற்காலியில் அமர்ந்தார். முடிதிருத்துபவர் தொழில் செய்யும் போதே நன்பரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டார். நண்பர் சட்டை அணிந்து புறப்படுகையில் முடி திருத்தியவர் நண்பரை நண்பகல் உணவு கொள்ளத் தம் இல்லத்திற்கு அழைத்தார். திடுக்கிட்ட நணபர் பேசாமல் நின்றார். முடிதிருத்தியவர், நண்பரின் இலிங்கதாரணத்தைக் கண்டு, தாமும் இலிங்கதாரணம் உடைய வீர சைவர் என்று தெரிவித்து சங்கம வழிபாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டினாராம். நண்பர் அதனை ஏற்றுக் கொண்டாரா அல்லது தவிர்த்து விட்டாரா என முடிவு எனக்கு நினைவில்லை. தமிழகத்தில் நடைபெற இயலாதவொரு நிகழ்ச்சி என்பதனால் இது மட்டும் என் நினைவில் உள்ளது.

  13. நான் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கிரேன் நான் வீர சைவ ஜங்கம் குலத்தை சார்தவன் நான் மற்றும் எனது குல உறவினர்கள் நண்பர்கள் பசவேசர் பற்றியும் வீர சைவ குலத்தைபற்றியும் அறிய ஆவலோடு காத்திருக்கிறோம்.ஐயா ஜடாவு தாங்கள் மனம் இறங்கி எங்களது வேன்டுகோலை நிறைவேற்றுங்கள் தங்களின் தொலைபேசிஅலைப்புக்காக காத்திருக்கும் சிறுவன் இ.பால முருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *