கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1

‘தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டத்தை பகிரங்கமாகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தொண்டர்களைத் திரட்டியும் தமிழகத்தில் முதலில் நடத்தியவை நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும்தான்’ – என்று தொடர்ந்து திராவிட இயக்க எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் சில தலித் எழுத்தாளர்கள் கூட எழுதி வருகிறார்கள். இதற்கு முன்னே கோயில் நுழைவு போராட்டம் தமிழகத்தில் நடந்திருக்கிறது என்பதை இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் நமக்குச் சொல்வதில்லை. வரலாற்றை மறைப்பதிலும், திரிப்பதிலும் இவர்களை மிஞ்சக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்காரர்களும்கூட வளரவில்லை.  தமிழ்நாட்டில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

தலித்துகளுக்காக கோயில் நுழைவு போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தது திராவிட இயக்கம்தான் என்பது பெரியாரியவாதிகளின் வாதம். அவர்கள் சில சம்பவங்களை முன்வைக்கிறார்கள். அந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நாம் ஆராய்வோம்.

முதல் சம்பவமாக இதை நாம் எடுத்துக் கொள்வோம்.

kuthuoosi_gurusamy

ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக்குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்றார். அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்து பூட்டப்பட்டனர். அவர்கள்மீது வழக்கும் தொடரப்பட்டது. (பெரியார் சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, பக்கம்.514-515) என்று கூறுகிறார் எஸ்.வி.ராஜதுரை.

அடுத்து,

சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்பும் பெரியார் ஈ.வெ.ரா. முன்பு வகித்துவந்த சில பதவிகளில் தொடர்ந்து இருந்துவந்தார். ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் பதவியும் அதில் ஒன்று. 1929 ஏப்ரல் முதல் வாரத்தில் மேற்படி ஈசுவரன் கோயிலுக்குள் ஆதித்திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தவரும் பெரியார் அவர்களே. அத்தீர்மானம் போட்ட மறுநாள் ஈ.வெ.ரா. கோவைக்குச் சென்றுவிட்டார். பெரியார் கோவை புறப்படுவதற்கு முன்பு குருசாமியை அழைத்து கோவையிலிருந்து நான் திரும்புவதற்குள் இத்தீர்மானத்தை ஒட்டி எந்தவித நடவடிக்கையிலும் இறங்கிவிட வேண்டாம் என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். குருசாமியைப் பற்றி நன்கு உணர்ந்தவர் அல்லவா பெரியார்.

பெரியார் ஈ.வெரா.ரா. கோவை சென்ற அன்றே அதாவது 4-4-1929 அன்று மாலையே அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த விரும்பிவிட்டார் குருசாமி. அவரைத் தடுப்பார் யார்? ஆகவே குத்தூசியார், பொன்னம்பலனார் துணையுடன், ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று ஆதிதிராவிடத் தோழர்களையும் நெற்றியில் திருநீறு பூச செய்து அழைத்துக் கொண்டு முக்கியத் தெரு வழியாகச் சென்று மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதவகையில் தேங்காய், பழம், பூ ஆகியவைகள் அடங்கிய தட்டுடன் மேற்படி ஈசுவரன் கோயிலுக்குள் நுழைந்தனர். (பசுபதியும், கருப்பனும் குடியரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள்)

இதனைப் பொதுமக்களும் பார்ப்பனர்களும் பார்த்துவிட்டனர். குருசாமி நண்பர்களுடன் கோயிலுக்குள் கலாட்டா செய்வதற்கென்றே செல்லுகின்றான் என்ற செய்தியை ஊர் முழுவதும் பரப்பினர். குருசாமி முதலானோர் கோயிலுக்குள் இருக்கும்போதே வெளிக் கதவைப் பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் வரை பூட்டிய கதவைத் திறக்கவும் மறுத்துவிட்டனர். குருசாமியின் தோழர்களுக்குச் சாப்பாடு கோயில் மதில் வழியாக ஈவெராவின் துணைவியார் நாகம்மையாரால் அனுப்பப்பட்டது. பெரியார் கோவையிலிருந்து வந்த பிறகுதான் கோயில் கதவைத் திறக்கச் செய்து அவர்களை வெளிக்கொணர்ந்தார். (நூல்: குத்தூசி குருசாமி, ஆசிரியர் : குருவிக்கரம்பை வேலு, பக்.159-160) என்று எழுதுகிறார் குருவிக்கரம்பைவேலு.

ஈரோடு ஈசுவரன் கோயில் நுழைவைப் பற்றி இரண்டுபேர் எழுதியதின் திரிபுகளை இப்போது பார்க்கலாம்.

  1. ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக்குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்றார். அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்து பூட்டப்பட்டனர். அவர்கள்மீது வழக்கும் தொடரப்பட்டது என்று எழுதுகிறார் எஸ்.வி.ராஜதுரை. ஆனால் உண்மை என்ன? வழக்கு சா.குருசாமி மீது போடப்படவேயில்லை. ஈசுவரன், கருப்பன், பசுபதி ஆகிய மூன்றுபேர் மீது மட்டுமே போடப்பட்டது.
  2. சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்பும் பெரியார் ஈ.வெ.ரா. முன்பு வகித்துவந்த சில பதவிகளில் தொடர்ந்து இருந்துவந்தார். ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் பதவியும் அதில் ஒன்று என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் உண்மை என்ன? பெரியார் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் அல்ல. துணைத்தலைவர் மட்டுமே.
  3. ஆதித்திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தவரும் பெரியார் அவர்களே என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் இதற்கு ஆதாரமே இதுவரை இல்லை.
  4. ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று ஆதிதிராவிடத் தோழர்களையும் நெற்றியில் திருநீறு பூச செய்து அழைத்துக் கொண்டு – என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் உண்மை என்ன? ஈசுவரன் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவர் அல்ல. பிள்ளை சமூகத்தைச் சார்ந்தவர். மற்ற இருவரும்தான் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதில் ஒருவர் வள்ளுவர், ஒருவர் பஞ்சமர். இந்த ஈசுவரன் பின்பு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார்.
  5. குருசாமி முதலானோர் கோயிலுக்குள் இருக்கும்போதே வெளிக் கதவைப் பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் வரை பூட்டிய கதவைத் திறக்கவும் மறுத்துவிட்டனர் என்று எழுதுகிறார் வேலு. ஆனால் உண்மை என்ன? வெளிக்கதவை பூட்டவே இல்லை. இரவு 7.00 மணிக்குத்தான் இவர்கள் கோயிலுக்குள் வந்தனர். மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு காவிரியில் குளிக்கச் சென்றனர். பின்பு 7.00 மணிக்கு மீண்டும் அனைவரும் திரும்பி வந்தபோது வெளிக்கதவும் பூட்டப்பட்டிருந்தது. சிறிது நேரம் அங்கேயே நின்றுவிட்டு போய்விட்டார்கள். இரண்டுநாள் என்பது பொய்யான தகவல்.
  6. குருசாமியின் தோழர்களுக்குச் சாப்பாடு கோயில் மதில் வழியாக ஈவெராவின் துணைவியார் நாகம்மையாரால் அனுப்பப்பட்டது என்று எழுதுகிறார் வேலு. ஆனால் உண்மை என்ன? சாப்பாட்டை கோயில் வழியாகவே கொண்டுவந்தனர். கொண்டுவந்தவர் செட்டி சாமியார் என்பவர். கொடுத்தனுப்பியது வேண்டுமானால் நாகம்மையாராக இருக்கலாம். ஆனால் மதில் வழியாக என்பதெல்லாம் கடைந்தெடுத்தப் பொய்.
  7. பெரியார் கோவையிலிருந்து வந்த பிறகுதான் கோயில் கதவைத் திறக்கச் செய்து அவர்களை வெளிக்கொணர்ந்தார் என்று எழுதுகிறார் வேலு. இதுவும் பொய். மறுநாள் காலையே அவர்கள் குளிக்கச் சென்றுவிட்டு மறுபடியும் வந்து பார்த்தபோது கோயில் வெளிக்கதவு மூடப்பட்டிருந்தது. பின்பு அவர்கள் சென்றுவிட்டனர்.

கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு என்ற நூலை திராவிட இயக்கத்தைச் சார்ந்த வாலாசா வல்லவன் எழுதியிருக்கிறார். அதில் ஈரோடு ஈசுவரன் கோயில் நுழைவு சம்பந்தமாக நடைபெற்ற வழக்கை விலாவாரியாக கொடுத்திருக்கிறார். அந்த வழக்கிலிருந்துதான் இந்த உண்மைகளை நான் எடுத்து எழுதியிருக்கிறேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் குத்தூசி குருசாமியின் பெயரே வரவில்லை. அப்போது குருசாமிக்கு வயது 23தான் என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும். குருசாமி அழைத்துப் போயிருந்தால் அவர்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஈசுவரன் என்பவர்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். ஈசுவரன்தான் மற்ற இருவரையும் அழைத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இந்த வழக்குக்காக பல்வேறு பொதுமக்கள் பணத்தை தந்திருக்கிறார்கள். இதில் ஈவெரா 35ரூபாய் மட்டுமே தந்திருக்கிறார். ஆனால் இந்த வழக்கிற்காக சென்னை ஆதிதிராவிட சங்கம் 60ரூபாயை தந்திருக்கிறது. ஈரோட்டில் மிகப்பெரிய வணிக தனவந்தர் பெரியார்தான். அவரே வெறும் 35ரூபாய்தான் தந்திருக்கிறார், ஆனால் சம்பந்தமே இல்லாதவர்கள் பலர் அதைவிட அதிகமாக பணத்தை தந்திருக்கின்றனர் என்பதிலிருந்தே இது சுயமரியாதை இயக்கம் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டம்தானா என்பதில் ஐயம் இருக்கிறது.

எப்படியிருப்பினும் பெரியாரின் தொழிலாளிகள் மற்றும் இயக்கத்தவர்கள் கலந்துகொண்ட கோயில் நுழைவு போராட்டம் நடந்திருக்கிறதே என்று கூறலாம். ஆம் உண்மைதான்.

ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக ஏன் பெரியார் தலைமையில் கடைசிவரை தமிழகத்தில் ஒரு கோயிலில் கூட கோயில் நுழைவு போராட்டம் நடத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. 1925ல் காங்கிரசை விட்டு விலகிவிடுகிறார். ஆனாலும் 1927வரை காந்தியையும் கதரையும் ஆதரித்துக்கொண்டு இருக்கிறார். 1926க்குப் பிறகுதான் ஒரு புதிய இயக்கத்துக்கு வித்திடப்படுகிறது. இயக்கத்துக்கு பலம் சேர்க்க பல்வேறு போராட்டங்களை ஆரம்பிக்கவும் அன்று பெருவாரியாக அரசியல் விழிப்புணர்வு பெற்ற ஆதிதிராவிடர்களை தங்கள் இயக்கத்தின் பக்கம் வளைக்கவும்தான் இந்த கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மற்றபடி தலித்துகள் கோயிலில் நுழைந்து வழிபட வேண்டும் என்ற நோக்கத்திற்காக பெரியார் இந்த போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. கோயில் நுழைவு தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல. அதற்கான ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றையும் எதற்காக இந்த கோயில் நுழைவு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் பின்பு பார்ப்போம்.

தொடரும்

10 Replies to “கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1”

  1. கோயில் நுழைவுப் போராட்டம் என்றாலே 2008 ல் நடந்த தில்லை நடராஜர் கோயில் போராட்டம் நினைவுக்கு வருகிறது. உண்மை நிலை என்ன என்பதை இந்த லிங்கில் படிக்கலாம். ( ஆங்கிலத்தில் உள்ள பதிப்பு.)

    https://psenthilraja.wordpress.com/2008/03/15/media-bias-chidambaram-natarajar-temple/

  2. மூட பக்திதான் உயெர்ந்த பக்தி வட இந்தியாவில் வரும் பக்தர்கள் எந்த பயனையும் எதிர்பாராமல் பகவான் திருவடியில் காணிக்கையை அள்ளி கொட்டுகிறார்கள் அதுபோல் தான் தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட மக்கள் திருகோயில்களுக்கு வாரி வழங்குகிறார்கள் அவர்கள் வழங்கும் காணிக்கை ஏற்புடையது என்றால் அவர்களை ஒதுக்குவது ஏன்? பக்தி செய்திட குலம் ஜாதி ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது ஆச்சாரிய மகான்கள் வரலாறுகளில் ஆழ்ந்தால் புரியும்

  3. கோவில்களில் பின்பற்றப்பட்ட ”தீண்டாமை” மிகவும் கொடுயது. இன்றளவும் அதற்கு தக்க நிவாரணம் அளிக்கப்படவில்லை.முறையான சமய கல்வி பயிற்சி ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் நடத்தி வரும் அந்தா் யோகம் வகுப்புகளால் கிடைக்கும். அநதா் யோகம் அனைத்து கோவில்களிலும் கிராமஅளவிலும் நடத்த துறவிகள் இந்து சமய இயக்கங்களின் தொண்டா்கள் முன் வரவேண்டும். அமைதியாக பத்மாசனத்தில் அமா்ந்து நாமஜெபம், தியானம், பதிகங்கள் முன்றோதுதல் போன்ற மனதிற்கு பயிற்சி அளிக்கும் பழங்க வழக்கங்கள் பிற்பட்ட தலீத் மக்களுக்கு அளிக்க வேண்டும்.

  4. வைத்தியநாத ஐயர், கக்கன் முதலியவர்களின் தீவிர முயற்சியால் ‘அரிசன சேவா சங்கம்’ மதுரை மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. அதிக எண்ணிக்கையில் அரிசனப் பள்ளிகளையும், விடுதிகளையும் நடத்தி அரிசன மாணவர்களின் கல்விக்காகப் பாடுபட்டது. மேலூரில் மாணவியருக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியாக விடுதிகளை ஏற்படுத்தி, அவை இரண்டிற்குமே காப்பாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார் கக்கன். இவ்விடுதிகளுக்கு ‘காந்தி விடுதி’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்.

    கக்கன், சிவகங்கையைச் சேர்ந்த சொர்ணம்பார்வதி என்பவரை 1938-ஆம் ஆடு மணம் புரிந்துகொண்டார்.

    மகாத்மா காந்தியடிகளுக்கும், அண்ணல் அம்பேத்காருக்கும் 1932-ஆம் ஆண்டு ஏற்பட்ட பூனா ஒப்பந்தப்படி, பத்து ஆண்டுகளில் தீண்டப்படாதவர்களுக்கு, இந்து மதத்தில், சாதி இந்துக்களுக்கு உள்ள அனைத்து சிவில் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். பொது நடைபாதைகளில் நடந்துசெல்லும் உரிமை, பொது நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, பொதுக் கிணறுகளில் நீரெடுக்கும் உரிமை, பொதவான இடங்களிலும், உணவு விடுதிகளிலும் செல்லும் உரிமை, கோவிலினுள் நுழைந்து வழிபடும் உரிமை, அரசு கல்வி நிலையங்களிலும், அரசுப் பணிகளிலும் தனி ஒதுக்கீடு பெறும் உரிமை முதலிய உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென ஒப்பந்தம் அறிவித்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்துக் கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபாட்டில் ஈடுபடச் செய்யும் உரிமையை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். இக்கோவில் நுழைவுப் போராட்டம் சாதி இந்துக்களால் தடுக்கப்பட்டது. அதை மீறி மதுரை வைத்தியநாத ஐயரும், கக்கனும் கோவில் நுழைவு உரிமைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினர்.

    சென்னை மண்டலத்திற்கு 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மண்டல முதல்வராகப் பதவியேற்றார். இராஜாஜி தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவு இயக்கத்தை ஆதரித்தார். மேலும் ‘கோவில் நுழைவு’ என்பதைச் சட்டமாக்கினார். ‘மலபார் கோவில் நுழைவு சட்ட முன்வரைவு’ என்ற சட்ட முன்வரைவை 1938-ஆம் அண்டு கொண்டுவந்தார். இதற்குத் தடையாக இருந்த இந்து சமய அறநிலையச் சட்டங்களைத் திருத்தினார். தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவு உரிமைக்கு தடையாக நிற்கும் சாத்திர, சம்பிரதாயங்களை முறியடித்து அவர்களுக்கு முழு உரிமையும் அளிக்கும் சட்டத்தை 1938-ஆம் ஆண்டு நிறைவேற்றினார். ஆனால், இச்சட்டம் இந்துமதவாதிகளின் எதிர்ப்பினால் தோல்வியடைந்தது.

    ஆனால், மதுரை அரிசன சேவா சங்கத்தின் செயல்வீரரான கக்கன் கோவில் நுழைவு உரிமையை எப்படியும் நிலைநாட்டிட வேண்டுமென உறுதி பூண்டார். அகில இந்திய அரிசன சேவா சங்கத்தின் துணைத் தலைவரான இராஜேஸ்வரி, நேருவை டெல்லியிலிருந்து மதுரைக்கு வரவழைத்தார். கோவில் நுழைவு உரிமை மாநாட்டை மதுரையில் கூட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலை தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட திறந்துவிட வேண்டுமென தீர்மானம் போட்டார். இராஜாஜி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்களையும், அலுவலர்களையும் சந்தித்து, கோவிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடும்படி கூறினார்.

    தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவிலைத் திறந்துவிட்டால், இந்து சமய அறநிலையச் சட்டங்களின்படி கோவில் அலுவலர்களும், அர்ச்சகர்களும், அறங்காவலர்களும், பிறரும் தண்டிக்கப்படுவார்கள் என்ற அவலநிலை இருந்தது. அதை அறிந்த இராஜாஜி, அன்றைய‌ ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபுவிடம் எடுத்துக் கூறி 1935-ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தின் 88-ஆவது பிரிவின்படி ‘அவசரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிடச் செய்தார். ஆதன்படி தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் அதற்காக கோவில் அதிகாரிகள், அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் முதலியவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்ற நிலை உருவானது. அதற்குப் பிறகு தமிழகமெங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபடும் உரிமை நிலைநாட்டப்பட்டது.

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939-ஆம் ஆடு ஜூலை 8-ஆம் நாள் ஆ. வைத்தியநாத ஐயர் தலைமையில் எல்.என். கோபாலசாமி, கக்கன், சாமி.முருகானந்தம், முத்து, வி.எஸ்.சின்னையா, வி.ஆர். பூவலிங்கம் முதலிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும், விருதுநகர் எஸ்.எஸ். சண்முக நாடார் என்ற நாடார் பிரமுகரும் கோவிலில் நுழைந்து வழிபட்டனர். கக்கனின் அரசியல் வாழ்வில் இந்த நிகழ்ச்சி வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. கக்கன் மக்களிடையே பிரபலமடைந்தார். இந்த கோவில் நுழைவுப் போராட்டத்தை இராஜாஜி ‘இரத்தம் சிந்தாப் புரட்சி’ எனக் கூறி வைத்தியநாத ஐயரையும், கக்கனையும் புகழ்ந்து பாராட்டினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்தை அடுத்து, மதுரையிலுள்ள கள்ளழகர், கூடல் அழகர் கோவில்களும் திறந்துவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து தஞ்சை, திருநெல்வேலி, குற்றாலம், தென்காசி முதலிய இடங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமைப் போராட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன.

    கோவில் நுழைவுச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னும் கூட, கேரளாவின் மலபாரிலும், தமிழகத்திலும் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமை முழுதாக வழங்கப்படவில்லை. ஆங்காங்கே இந்துமத சனாதனியர்களும், சாதி ஆதிக்கம் கொண்டவர்களும் எதிர்ப்பாகச் செயல்பட்டனர். அரிசன சேவாத் தொண்டர்கள் தமிழகத்திலிருந்து கேரளாவின் மலபாருக்குச் சென்றனர். கக்கன் தலைமையில் அரிசன சேவாத் தொண்டர்கள் திருவனந்தபுரம் சென்று அங்குள்ள பவண மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்து உரிமையை நிலைநாட்டினர்.
    https://keetru.com/index.php?option=com_content&view=article&id=25709:2013-12-11-09-52-22&catid=25:tamilnadu&Itemid=137

  5. திரு கருப்பையா அவர்கள் வரலாற்றை மிகச் சரியாகக் கொடுத்திருக்கிறார். போராட்டம் என்ற பெயரில் விளம்பரத்துக்காக நடத்தப்படுபவை அதிகம். ஆனால் காந்திஜி குற்றாலம் கோயிலுக்குச் சென்றபோது அங்கு தாழ்த்தப்பட்டவர்ளை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற செய்திகேட்டு கோயிலுக்குள் செல்லாமல், தாழ்த்தப்பட்டவர்களை என்று ஆலயத்தினுள் அனுமதிக்கிறார்களோ அன்றுதான் தானும் கோயிலுனுள் நுழைவேன் என்று சபதம் செஇதுவிட்டுச் சென்றார். காந்திஜியின் மனச்சாட்சி என அழைக்கப்பட்ட ராஜாஜி தமிழ்நாட்டில் (சென்னை மாகாணம்) முதல் அமைச்சராக (பிரதமர் என்று அப்போது பெயர்) இருந்தபோது ஆலயப் பிரவேசம் செய்ய முடிவு செய்து மதுரை ஏ.வைத்தியநாத ஐயரை தலைமை வகிக்க வைத்து, கக்கன் முதலானவர்களுடன் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தினுள் நுழையச் செய்தார். அப்போது இவர்களை தடிகொண்டு தாக்க ஒரு கூட்டம் காத்திருந்தது. அந்த கூட்டத்தின் பின்பலமாக ஒரு ஜஸ்டிஸ் கட்சிக்காரர் இருந்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ராஜாஜி தகவல் கொடுக்க அவர் மாட்டு வண்டிகளில் தொண்டர்களை அனுப்ப, தடுக்க வந்த கூட்டம் காணாமல் போனது. ஒரு குருக்கள் சந்நிதி சாவியை மதுரை ஏ.வைத்தியநாத ஐயரிடம் கொடுத்து கோயில் சன்னிதிகளைத் திறந்து கொள்ளும்படி கொடுத்து விட்டார். இப்படி பலரும் சேர்ந்து ஆலயப் பிரவேசம் செய்தபின் காந்திஜி மதுரை கோயிலுனுள் வந்து தரிசனம் செய்தார். வரலாறு இப்படி இருக்க, யாரோ பெற்ற பிள்ளைக்கு திராவிட இயக்கம் தகப்பன் முறை கொண்டாடுவது வேடிக்கையாக இருக்கிறது.

  6. வைத்தியநாத ஐயர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டம் தவிர வேறு என்னென்ன கோயிலில் நுழைவுபோராட்டம் நிகழ்த்தியுள்ளார் என்ற விவரம் தர முடியுமா?

  7. அண்ணா என்ற தமிழான் ஏமாந்ததின் விழைவு திராவிட கழகங்கள்

  8. @jayaseelan
    It will appreciated if you can provide us details about EVR’s OTHER “Poratams” for temple entry for Dalits ( apart from something he was remotely connected with some past event in one Kerala temple )

  9. கோவில் நுழைவுபோராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர் தேவர்,தேவரை புகழ்ந்து வைத்தியநாதையர் காந்திக்கு எழுதிய கடிதம் ஆதாரம் உள்ளது..ஆனால் இந்த பதிவு ஒருதலைபச்சமாக உள்ளது..ஆதாரம் வேண்டும் என்றால் veeramukkulam@gmail.com mail அனுப்புக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *