ஓடிப் போனானா பாரதி? – 01

ஒருசின்ன முன்கதை: இந்தத் தொடரைத் தமிழோவியம் இணையதளத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். சில காரணங்களால் இதைத் தொடரமுடியவில்லை. முற்றுப் பெறாமல் நிற்கும் இந்தத் தொடரை தமிழ்இந்து தளத்தில் தொடர்ந்து, முடிக்கிறேன். தொடர்ச்சி கருதி இதுவரையில் வெளிவந்த தவணைகளையும் இங்கே இடுகிறேன்.

ஓடிப் போனானா?

பூர்வ பீடிகை

பாரதியின் கவிதைகள் வாங்கப்படும் அளவுக்கு – கவனிக்கவும், மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு சொல்கிறேன், ‘படிக்கப்படும் அளவுக்கு’ என்று சொன்னேன் இல்லை – அவனுடைய வசனங்கள் பரவலாக பதிப்பிக்கவோ, வாங்கவோ, படிக்கவோ படுவதில்லை. பாரதி அன்பர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் எவரும் அவனுடைய வசனங்களை ஒதுக்கிவிட்டு அவனை அறிய முடியாது என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. எங்கெங்கெல்லாம் அவனுடைய வசனங்களைப் பற்றிக் குரல் எழும்புகிறதோ அங்கங்கெல்லாம் ஓடிப் போய் நின்று கவனமாகக் கேட்டுக் கொள்வேன், அதாவது என் கவன வட்டத்திற்குள் வரும் எந்தக் குரலையும்.

பாரதி வசனங்கள் குறித்த அலட்சியம் மிகப் பலரிடம் விரவியிருக்கிறது. என் மரியாதைக்குரிய ஓர் அன்பரிடமும் இது உண்டு. தமிழ்நாட்டில் பாரதிக்குத் தொண்டாற்றியவர்களில் (அதாவது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்களில்) மிக முக்கியமான பத்து பேர் என்று பட்டியல் எடுத்தால், அவர் பெயரும் கட்டாயம் அதில் இருக்கும். ஆனால் அவர் கூட பாரதி வசனம் என்றாலே முகத்தைச் சுளிப்பார். இப்போது தலைகீழாக மாறிவிட்டார் என்பது வேறு விஷயம்.

அவர் சார்ந்த அமைப்பில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. பாரதி வசனங்கள்தான் விவாதப் பொருள். இவர் எதிரணியில் பேசினார். பட்டிமன்ற மரபுக்குச் சற்றும் குறையாமல் தரக்குறைவான ஒரு வாக்கியத்தை, பாரதி வசனங்கள் குறித்துச் சொன்னார். இது நடந்தது 95ல் என்று நினைவு. அந்த நிகழ்ச்சியின் போது நான் அங்கே இல்லை. அதன் பிறகு இதைப் பற்றிக் கேள்விப் பட்டதும் அவருக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதினேன். பாரதியின் வசனங்களை ஏன் படிப்பதில்லை என்று எனக்கு விளக்கம் அளித்து ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்தான் நம் தலைப்பில் உள்ள கதை ஆரம்பிக்கிறது.

அவருடைய கடிதத்தில் இருந்து சில பகுதிகளை மேற்கோளாகக் காட்டி, அதன் பிறகு அவருக்கு நான் எழுதிய நீண்ட கடிதத்தை நண்பர்களுக்கு நடுவில் வைக்கிறேன். தனிப்பட்ட கடிதங்கள் என்றாலும், செய்திகள் மிக மிகப் பொதுவானவை என்பதால் இவற்றைப் பொது மேடையில் வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தனிப்பட்ட ஒன்று என்பதால் அவருடைய பெயரைத் தவிர்க்கிறேன். இங்கே விவாதம் அவரைப் பற்றியதன்று. எனவே அவருடைய பெயர் தேவையில்லாத ஒன்று.

பாரதியின் வரலாறு எத்தனை தூரம் தவறான கருத்துகளை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் காட்டுவதே இந்த முயற்சியின் நோக்கம். பாரதியின் அணுக்கத் தொண்டனாக அறிமுகம் பெறுவதில் பெருமிதம் கொண்ட ஒருவரே இப்படிப் பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார் என்பது பாரதி வரலாறு பதியப்பட்டிருக்கும் விதத்தில் உள்ள குறைகளைக் காட்டுகிறது. ஒன்று ஒரேயடியான துதிபாடல். இல்லாவிட்டால், நேர்மையான அணுகுமுறை என்று காட்டிக் கொள்ளவாவது பாசாங்கான குறைகூறல். மிகச் சிறந்த முறையில் பதிவு செய்திருப்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்திற்கு விடை எழுத மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டேன். ஆதார பூர்வமாக எடுத்துச் சொல்ல நிறைய வரலாற்றுப் பதிவுகள் தேவைப்பட்டன.

நான் குறிப்பிடும் பாரதி அன்பருக்கு, பாரதியின் கவிதைகளைப் படிப்பதோடு நிறுத்திக்கொண்டால் வம்பில்லை என்ற ஒரு அபிப்பிராயம் ஆழமாகவே இருந்தது. பாரதியின் உரைநடையைப் படிக்கத் தொடங்கினால் பல சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும் என்றொரு கருத்தும் அவருக்கு இருந்தது. எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொன்னார். பாரதி பாண்டிச்சேரிக்குப் போனதைக் சுற்றிப் படர்ந்திருக்கும் சில வினோதமான செய்திகளும், பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகை எழுத்தில் சிலவும் அவனை நல்லதொரு கோணத்தில் காட்டவில்லை என்பது அவற்றில் ஒன்று. பாரதியின் நெருங்கிய நண்பர்களே, ‘ஒன்றும் அறியாத அப்பாவியான முரப்பாக்கம் சீனிவாசனை – இந்தியா பத்திரிகையின் ஆசிரியராகப் பதிவு பெற்றிருந்த இளைஞரை – இக்கட்டில் மாட்டி வைத்துவிட்டு, தான் தப்பித்துக்கொண்டார்,’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘பாரதியின் வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி,’ என்றும் பாரதியின் சில நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கருத்தைத்தான் நான் குறிப்பிட்டிருக்கும் பாரதி அன்பர் தன் கடிதத்தில் எடுத்து வைத்திருந்தார்.

இனி அவருடைய 1.2.1997 தேதியிட்ட கடிதத்திலிருந்து சில பகுதிகள்.

“பாரதி ஒரு மகாகவி. முதலாவதாகவும், இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும். அவர் வசனகர்த்தா, சிறுகதை ஆசிரியர், வசன கவிதையின் பிதாமகன் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான் என்பது என் அசைக்க முடியாத கொள்கை. எதற்கெடுத்தாலும் அவர் மீது அட்சதை தூவி அர்ச்சிக்கும் பூஜா மனப்பான்மை எனக்கு உடன்பாடல்ல. மேலும், வசனத்தில் பாரதியை விஞ்சும் எழுத்துகள் வந்துவிட்டன. கவிதையில் அப்படி இல்லை என்பது என் கணிப்பு. மேலும், பாரதியின் வசனத்தை ஆராய்ந்தால் கவிதையுடன் முரண்படும் இடங்கள் வருகின்றன. பாரதியின் வசனச் சிறப்பைப் பற்றி என் பழைய கருத்துகள் சில மறு பரிசீலனை செய்யப்படுகின்றன. எத்தனைப் பிரச்சினைகள் பற்றி அவன் சிந்தித்திருக்கிறான் என்பதை எல்லாம் அறிந்து வருகிறேன்.

பாரதி புதுவைக்குச் சென்ற (ஓடிய) வரலாறு நாம் அறிந்ததே. இது பாகை முள்ளாக உறுத்துகிறது. நான் வணங்கும் இராமநுஜரும் இப்படி கர்நாடகத்துக்கு ஓடியவர். என்ன சமாதானம் சொன்னாலும் இங்கிருந்து போராடி இருக்க வேண்டாமா? இரண்டு ஜன்ம தண்டனை பெற்ற கப்பலோட்டிய தமிழர் ஊரைவிட்டா ஓடினார்? இதில் insult added to the injury என்னவென்றால், இந்தியா பத்திரிகை ஆசிரியராக உண்மையில் செயல்பட்ட பாரதி, புதுச்சேரி செல்ல ‘நாம்கே வாஸ்தே’ ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். அவர் பயந்தாங்கொள்ளி. நீதிமன்றத்தில் தாம் பிரிட்டிஷ் விசுவாசி என்று வாக்கு மூலம் தருகிறார் அந்த அப்பாவி! இதைக் கண்டித்துப் புதுவையிலிருந்து பாரதியாரின் ‘இந்தியா’ தலையங்கம் எழுதுகிறது! வீரமாக எதிர்த்து நின்றிருக்க வேண்டாமா? என்று. (வேடிக்கை. நீதி மன்றத்தில் நின்று குரல் கொடுக்க வேண்டியவர் ஓடி வந்துவிட்து மட்டுமன்றி, இப்படி ஓர் எழுத்து!) ஓடிவந்த செயலுக்கு வருந்தியதாக பாரதியார் எழுத்தில் ஒரு குறிப்பும் இல்லை. பாரதி வசனம் பற்றிப் பேசினால் இதெல்லாம் வரும் என்று பட்டிமன்றத்தில் கூறினேன். இதுதான் விமர்சனத்துக்கு ஆளானது.”

இதில் என்ன வேடிக்கை என்றால், மேற்படிச் செய்திகளில் எதற்குமே ஆதாரம் இல்லை என்பதுதான். (1) பாரதி முரப்பாக்கம் சீனிவாசனை (இந்தியா பத்திரிக்கை ஆசிரியர்) காட்டிக் கொடுத்துவிட்டு பாண்டிச்சேரிக்குத் தப்பி ஓடிவிட்டார். (2) அங்கே போய் ஒளிந்து வாழ்ந்துகொண்டு இந்தியா பத்திரிகையில் அவரைப் பற்றி இழிவாக எழுதினார். (3) தான் ‘ஓடிப் போய்விட்டதற்காக’ வருத்தப் பட்டு எழுதவில்லை. (இத்தனைச் சிக்கல்கள் வெளிப்படும் ஆகையினாலே பாரதி வசனங்களைப் படிப்பதில்லை.)

முதல் கருத்துக்கு அணுக்கமாக இருப்பது, பாரதியின் தோழரும் பத்திரிக்கையாளருமான எஸ். ஜி. இராமநுஜலு நாயுடு காரணம். “தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்கவைத்து விட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமே ஆகும்” என்று எழுதியிருப்பது. உண்மைகளை நுணுகிப் பார்த்தால் இந்தக் கூற்றுக்கு ஆதாரமே இல்லை என்பது புலனாகும்.

‘ஓடிப் போய்விட்டார்’ என்ற வன்மமான எழுத்து சுதேசமித்திரனில் வெளிவந்த ஒன்று. (அதாவது பாரதி இந்தியா பத்திரிகையில் பணியாற்றிய காலகட்டத்தில்). “துவக்கத்திலேயே கவர்ன்மெண்டார் எச்சரித்திருந்தார்களானால் இப்போது ஓடிப் போயிருக்கிற எடிட்டரும், புரொப்ரைட்டரும் அப்படிப்பட்ட வியாசங்கள் தோன்ற இடம் கொடுத்திருக்க மாட்டார்கள். அவைகளால் விளையும் தீங்கும் குறைந்து இருக்கும்’ என்று சுதேசமித்திரன் 16.11.1908ல் எழுதியதை பெ. சு. மணி சுட்டிக்காட்டுகிறார். (“பிற பத்திரிகைகள் எடுத்துக் கூறாததை பின்வருமாறு வெளியிட்டது” என்ற குறிப்புடன். – பத்திரிகையாளர் பாரதியார், பெ. சு. மணி, பக்கம் 141).

முரப்பாக்கம் சீனிவாசனைச் சிக்க வைத்துவிட்டுத் தான் தப்பிவிட்டார் என்ற தவறான கருத்துக்கு இராமநுஜலு நாயுடு வித்திட்டார். ரா. அ. பத்மநாபன், நாடக பாங்கில் அந்தக் காட்சியை எழுதுவதாக நினைத்துக் கொண்டு ‘சித்திர பாரதி’யில் இந்தத் தவறான கருத்துக்கு நீரூற்றி வளர்த்தார்.

பாரதியின் வாழ்க்கை மிகப் பெரும் அளவில் எழுதப்பட்டிருந்தும், அவரவருக்குத் தோன்றிய விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சிக்கலாகப் பிரித்து, உண்மையை ஆதார பூர்வமாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. என்னுடைய விடைக் கடிதம் அப்படிப் பட்ட ஒரு முயற்சி. பின்வருவது என் விடைக் கடிதத்திலிருந்து.

எனதன்புக்குரிய ……. அவர்களுக்கு,

தங்களின் அன்பான கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. பல நாள்களுக்குப் பிறகு சிந்திக்க நிறைய தீனி கிடைத்திருக்கிறது.

ஆரம்பத்திலேயே ஒன்று கூறிவிடுகிறேன். பாரதியைப் பற்றி, மற்றும் அவரின் எழுத்தைப் பற்றி எந்த அபிப்பிராயத்தையும் யாரும் வைத்துக்கொள்ளலாம். அதை யாரும் மறுக்கவோ, குறை கூறவோ முடியாது. தங்களுக்கு, பாரதி கவிஞனாக மட்டுமே தென்பட்டால் அதற்கு எந்தவித ஆட்சேபமும் கிடையாது. உதிக்கும் செங்கதிர் ஒரு வண்ணமும், உச்சி வெய்யில் ஒரு வண்ணமும், அஸ்தமனத்தின் போது ஒரு வண்ணமும் தெரியவில்லையா? ஆனால், வானவில் தோன்றும் போதன்றோ சூரியனுக்கு ஏழு வண்ணங்கள் இருப்பதாய்ப் புலப்படுகிறது?

கண்ணுக்குக் கண் பார்வை மாறுபடும். மஞ்சள் நிறத்தில் நமக்குத் தெரியும் பூ, வெள்ளை நிறத்தில் தேனீக்குத் தெரிவதாகச் சொல்கிறார்கள். போகட்டும். இந்தப் பார்வை வித்தியாசத்தைப் பற்றி பாரதி என்ன சொல்கிறான் தெரியுமா?

“ஸங்கீதத்தில் ஸ்வர ஸ்தானங்கள் ஸ, ரி, க, ம, ப, த, நி என ஏழு இருக்கின்றன. ஆனால் நாம் எந்த ஒலியையும் ஸ (ஷட்ஜம்) என்று வைத்துக் கொண்டு அதற்குத் தக்கபடி மற்ற ரி, க, ம, ப, த, நி பாடலாம். இங்ஙனம் ஸாதாரண மனிதனுடைய தொண்டைக்கு இரண்டரை ஸ்தாயிதான் எட்டும். சிலருக்கு மூன்று ஸ்தாயியும், சிலருக்கு இன்னும் அதிகமாகவும் எட்டக்கூடும் என்றும் சொல்லுகிறார்கள். இருந்தாலும் மூன்றரை ஸ்தாயிக்கு மேலே மனிதத் தொண்டை பேசுதல் ஸாத்தியமில்லை.

ஆனால், ஒளியுலகத்தில் அநந்த ஸ்தாயிகள் இருக்கின்றன. கிளிக்குஞ்சு கத்துவதை ஷட்ஜமாக வைத்துக் கொள்வோம். சந்த்ர மண்டலம் இடிந்து பூமிமேல் விழுந்தால் அதிலுண்டாகும் ஒலியை மேற்படிக் கிளிக்குஞ்சின் ஒலியினின்றும் எத்தனை ஸ்தாயி மேலாக வைத்துக் கணக்கிடலாம்?

……….ஒளியோ எல்லையற்றது. நாமோ துளி தவிர முழுக் குருடு. மனிதன் இருளாகக் கருதுவதை ஆந்தை ஒளியாகக் கருதுகிறது. ஒளி விஷயத்தில் ஆந்தை நம்மைவிட ‘கீழ் ஸ்தாயி’ பழகியிருக்கிறது. ஆனால் நம்முடைய ஸ்தாயி ஆந்தைக்கு எட்டாது….”

மேலே எழுதிக் கொண்டே போகிறார். ஆச்சரியமான physics. குழந்தைக்கும் புரியவைக்கும் அழகான உத்தி. நம் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும். ஒருவருக்கு எட்டுவது மற்றவருக்குப் புலப்படுவதில்லை. சங்கங்கள் அமைப்பதும், கழகங்கள் குழுமுவதும் தத்தமக்குப் புலப்பட்டதை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவே. ஆகவே, உங்கள் பார்வைக்குப் பட்டதைச் சொல்லிவிட்டீர்கள். என் பார்வையில் பட்டதையும் கொஞ்சம் சொல்கிறேன். ஒன்றே ஒன்று. ஆயிரமாயிரம் வாதப் பிரதிவாதங்களால் ஒரே ஒரு உண்மையை நிறுவவோ, தெளிவுபடுத்தவோ, தரிசிக்க வைக்கவோ இயலாது. சத்தியம் வாதங்களுக்கு அப்பாற்பட்டது. பற்பல வாதங்களைக் கண்டும், ஆராய்ந்தும் சத்தியத்தின் வழி இன்னதாக இருக்கலாம் என்று நிச்சயித்துக் கொள்ளலாகும். அதாவது, யாருடைய வாதம் மேலானது என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் இருந்தால்.

ராமனுஜரைப் பற்றி சொல்வதற்கான தகுதியோ, கல்வியோ எனக்கில்லை. பாரதியைப் பற்றி நிச்சயமாகச் சொல்ல இயலும்.

பாரதி வரலாறு எழுதிய ஒவ்வொருவரும், அவர் பாண்டிச்சேரி செல்வதற்கு (சரி, ஓடிப் போவதற்கு) உடன்படவில்லை; நண்பர்களின் வற்புறுத்தல் அதிகரிக்கவே, இணங்கினார் என்கிறார்கள். (முரப்பாக்கம் ஸ்ரீனிவாசன் கதைக்குப் பின்னால் வருகிறேன்.)

“பாரதியார் சென்னையிலிருப்பதற்கு அஞ்சவில்லை. ஆனால், நண்பர்கள்தான், சிறை செல்வதைவிட புதுவை சென்று அங்கிருந்து இந்தியாவைத் தொடர்ந்து நடத்த முயல்வதே சரி என்று வற்புறுத்தினார்கள். மேலும் அக்காலம் காந்தி யுகதுக்கு முந்தியது. திலகர் முதலிய தலைவர்கள், சிறை சென்று ஆத்மிக வழியில் பிரிட்டிஷ்காரனை எதிர்க்க முடியும் என்று கருதவில்லை. போராட்டத்தை விடாமல் நடத்த வேண்டும் என்பதே கருத்தாயிருந்தார்கள்.” — சித்திர பாரதி. ரா. அ. பத்மநாபன்.

“பாரதியார் வெள்ளையர் ஆட்சிக்குப் பயந்து சென்னையை விட்டு ஓடிவிடவில்லை. அவர் எழுத்திலும், பேச்சிலும், வாழ்க்கையிலும் அச்சத்தை அறவே தவிர்த்தவர். அவர் பாண்டிச்சேரிக்குச் செல்வதற்கு அவர் நண்பர்கள்தான் காரணம்.” பாரதியாரின் வாழ்க்கையும் நூல்களும். வை. சச்சிதானந்தன்.

“பாரதியார் சென்னையில் இருப்பது அபாயம் என்றறிந்த அவரது நண்பர்கள், அவர் பிரிட்டிஷ் இந்தியா எல்லையில் எங்கிருந்தாலும் ஆபத்துதான் என்றும், புதுச்சேரி போன்ற பிரெஞ்சு இந்தியாவுக்குப் போய்விடுவதே நல்லது என்றும் சொன்னார்கள்.” — பாரதியைப் பற்றி நண்பர்கள். நீலகண்ட பிரம்மச்சாரி. (நீலகண்ட பிரம்மச்சாரி பாரதி ‘விஜயா’ பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த போது துணையாசிரியராக இருந்தார். கலெக்டர் ஆஷைக் கொன்ற வாஞ்சிநாதன் இருந்த குழுவின் தலைவர். சத்குரு ஓம்கார் என்ற பெயரில் மைசூர் நந்திஹில்ஸ் பகுதியில் துறவியாக வாழ்ந்த 1978ல் காலமானார்.)

திரு. சீனி. விசுவநாதன் கூறுகிறார்.

“பழுத்த பத்திரிகையாளரும், பாரதியை உள்ளும் புறமும் அறிந்தவருமான திரு. எஸ். ஜி. ராமநுஜலு நாயுடு அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால்,

‘…..அதற்கு முன்னர் எவரும் அவ்வழியில் பத்திரிகையை நடத்தவில்லையென்று சொல்லும்வாறாக வெகுசிறப்புடனும், திறமையுடனும் எழுதிவரத் தொடங்கினார். இந்தியா பத்திரிகை பிரபலப்பட்ட பொழுது அது மிகவும் உக்கிர வாசகமுள்ளதாக இருந்தது. சிறிதும் அச்சமின்றி எழுதப்படலானது. அந்த அம்சம்தான் கடைசியில் அப்பத்திரிகைக்கு ஆபத்தாய் முடிந்தது. பத்திரிகை என்றைக்கும் நடக்கும்படியான ரீதியில் சாந்தமாய், சட்ட வரம்புக்கு உட்பட்டு நடத்தும்படி பல நண்பர்கள் கூறியும் பாரதியாரி எழுதுகோல் பழையபடியே இருந்தது. பத்திரிகைக்கு ஆபத்து நிச்சயம் என்று பலர் கூறினர்.’ (அமிர்தகுண போதினி 1929).

“நின்று போராடியிருக்க வேண்டாமா?” என்பது தங்கள் வாதம். நாம் விரும்புகிறபடியெல்லாம் சரித்திரம் நடந்துவிடுமா? நடப்பதுதான் சாத்தியமா?

தொடரட்டுமா?

11 Replies to “ஓடிப் போனானா பாரதி? – 01”

  1. பாரதி எப்படியாவது இருந்து விட்டு போகட்டும்
    ஆனால் இன்று அவனை பற்றி உலகம் முழுவதும் அவன் எழுத்துக்களை படிக்க வைத்ததும்,, அவன் பாடல்களை பாட வைத்ததும் அவனுடைய வெற்றி.
    இன்று சுகமாக அனைத்துவிதமான சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டும், சுகபோக வாழ்க்கைகளில் புரண்டு கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு வறுமையில் வாடி ஆதரவின்றி இங்கும் அங்கும் அலைந்து திரிந்த போதும் தமிழிலே இவ்வளவு கட்டுரைகளும், பாடல்களும் எழுதி தேசபக்தியை ஊட்டினான் அவனை பற்றி பாராட்டக்கூட தேவையில்லை,அவனை கேவலமாக இழிவுபடுத்தாமல் இருந்தால் அது போதும். அவனை இழிவுபடுத்தி அதில் இன்பம் காணுபவர்கள் தமிழர்களே அல்ல.
    மேலும் ராமானுஜரை அவர் சார்ந்த வைணவ பெரியார்களே அழிக்க நினைத்த போதும் மக்கள் உய்யும் வழியை காட்ட அவர் செய்த தியாகமும் சேவையும்தான் அவரை தெய்வமாக வழிபடும் நிலைக்கும் அவரை கொண்டு சென்றுள்ளது.
    குறிக்கோளை அடைய உடலில் உயிர் முக்கியம்,அதை காப்பற்றிக்கொள்ள வேறு இடத்திற்கு செல்வது அறிவுடைமையே ஆகுமே தவிர கோழைத்தனமாகாது.
    பல்லில்லாத கிழவி வெறும் வாயை மென்றுகொண்டு இருந்ததைபோல் வரலாற்றில் சுவடுகள் பதித்தவர்களை விமரிசனம் செய்வது கேலிக்குரியது.
    ராமாயணத்தில் ராமன் வாலியை மறைந்து கொன்றதை இன்றும் விமரிசிக்கும் இந்த புத்தக புழுக்கள் அந்நூலின் முழு கருத்தையும்,தத்துவத்தையும் அறியாமல் பிதற்றுபவர்களை போன்றவர்கள். எவர்கள் எப்போதும் அரிசியை புறம் தள்ளி உமியை உண்பவர்களுக்கு. சமம்.
    குறைகளையே வாழ்வில் காண்பவர்கள் என்றும் நிறைவை அடைவது அரிது.

  2. பாரதியைப் படிப்பது, பாரதியைப் புரிந்து கொள்வது இரண்டும் வேறு சமாசாரங்கள் இல்லையா? பெயர் சொல்ல விரும்பவில்லை. இங்கு குறிப்படப்பட்டிருக்கும் பாரதி நிபுணர்களில் ஒருவரது நேர்மையே சந்தேகத்திற்குரியதாக விஷயம் தெரிந்த என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது ஒரு தர்ம சங்கடமான சிக்கல் எனக்கு. பெயர் சொல்லிக் குற்றம் சாட்டும் தகுதி எனக்கில்லை. சொன்ன நண்பர்களின் நம்பகத் தன்மையை வைத்து இதைச் சொன்னேன். எனக்கு நேர்முக சாட்சியங்கள் இல்லை.பெயர் சொல்லாது இப்படிச் சொல்வது மற்ற இருவரையும் கூட சந்தேகத்திற்குள்ளாக்கும் பாபத்தை நான் செய்கிறேனோ என்னவோ.

    போகட்டும். புதுவைக்கு “ஓடிப்போய்” பாரதி தன் மனதை, செயல்பாடுகளை, கருத்துக்களை மாற்றிக் கொண்டாரா? அதைச் செய்திருந்தால்தான் அவர் கோழை. தன் தொடர்ந்த செயல்பாட்டுக்கு சாதகமான இடத்தைத் தேர்ந்தெடுத்தது எப்படி கோழைத் தனமாகும்? அரசியல் சட்டத்தை எரிப்போம் என்று போராட்டம் நடத்தி விட்டு, கைது ஆனதும், நாங்கள் எரித்தது அரசியல் சட்டம் இல்லை. ஒரு காகிதத் துண்டுதான் என்று சொல்லி தப்பித்த தமிழினப் போராட்ட வீரர்கள் இங்கு உண்டு.
    தன் லட்சியம் மாறாத தொடர்ந்த செயல்பாட்டுக்கான இடத்தையும் முறையையும் தேர்ந்து கொள்வது போராளியின் மனத் திடத்தையே குறிக்கும்

    ஹரிஹி, நீங்கள் குறித்துள்ள இந்தத் குற்றச் சாட்டுத் தகவல்கள் இப்போதுதான் உங்கள் மூலம்தான் தெரியவந்துள்ளன, எனக்கு. நன்றி. நம் நிபுணர்கள் சிலர் எவ்வளவு உள்ளீடற்ற ‘சாவிகள்’ என்பது வேதனைக் குரிய விஷயம். என் நண்பர்கள் இந்த நிபுண்ரைப் பற்றிச் சொன்ன விஷயம் இங்கு கூடுதல் சாட்சியம் பெறுகிறது.

  3. வெசா சார், நீங்கள் வந்து எழுதியிருப்பது மிகப் பெரிய கௌரவம்.

    நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்பது புரிகிறது. நிறையப் படித்திருக்கிறார். பல இடங்களை அனாயாசமாக மேற்கோள் காட்டுவார். ஆனாலும். அது போகட்டும். என்ன பெரிய அவஸ்தை என்றால் பாரதியின் வாழ்க்கை குறித்த தகவல்களில் நம்பகத்தன்மை என்பது பலவற்றில் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. பாரதி இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னாலேயே வ ரா அவருடைய முதல் வாழ்க்கைப் பதிவை எழுதினார். 25 வருட காலத்துக்குப் பின்னால் எல்லாமே நினைவுக்குறிப்புகள்தாம். இதில் பாரதி இன்ன மாதிரி சொன்னான் என்று பதிவாளர்கள் குறிப்பிட்டிருப்பதை எல்லாம் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, பாரதி சொன்னதே என்பதுபோல் எடுத்துக்கொண்டு இன்டர்ப்ரெட் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.

    போதாதற்கு பல்கலைக் கழகங்களின் பங்கு வேறு. அண்மையில் பாரதி 125 என்று ஒரு ‘பன்னாட்டுக் கருத்தரங்கில்‘ (!) படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு தலகாணி ஒன்று கிடைத்தது. பாண்டிச்சேரி பல்கலைக் கழகம் வெளியிட்டிருக்கிறது. எவ்வளவு தூரம் தவறாகவும், அசட்டுத்தனமாகவும், இருக்கும் உண்மைககளுக்கு மாறாகவும் எழுத முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. விரைவில் இந்தப் புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகளையும், அவற்றில் உள்ள திரிசமன்களையும் எடுத்துச் சொல்லப் போகிறேன். யாராவது இதைச் செய்யாவிட்டால் ‘பல்கலைக் கழகம் வெளியிட்ட புத்தகம் அப்படியே எழுத்துக்கு எழுத்து ஆதாரபூர்வமானது’ என்ற அபிப்பிராயம் பரவிவிடும்.

    இனிமேல் பாரதியைப் பற்றிய குறிப்பு என்றால் அவனுடைய எழுத்து ஒன்றுதான் அதற்கான ஆதாரபூர்வமான சான்றாக இருக்க முடியும். காவல் துறை, பத்திரிக்கை அறிக்கைகள் போன்ற அரசாங்க ஆவணங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். மற்றதெல்லாம் ஆராய்ச்சி இல்லை. பீராய்ச்சி.

    நன்றி சார்.

  4. பாரதியின் வாழ்க்கையை ஆராய்வதைவிட அவன் எழுத்துக்களை ஆராய்வது நல்ல பலனை அளிக்கும்.அவன் ஒரு பல்பொருள் அங்காடி.இவ்வுலகில் சிறிது காலமே வாழ்ந்தாலும் தமிழறிந்தவர்களுக்காக சிந்தித்து அவன் அனைத்து செய்திகளையும் தன் எழுத்துக்கள் மூலம் திரட்டி பார்வைக்கு வைத்துள்ளான்

  5. ஹரிகிருஷ்ணன், நீங்கள் த.இ. தளத்தில் இந்தக் கட்டுரையைப் பிரசுரித்தது மிக நல்ல் விஷயம். பொய்மையும் சூதும் நிறைத்து பிரசுரிப்பதையே ஆய்வு என்ற பெயரில் தமிழகத்தில் பல ‘நிபுணர்கள்’ செய்து வருகிறார்கள். சமீப காலத்தில் (கடந்த 20 ஆண்டுகளில்) ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களை நிர்மூலம் செய்வதே தம் கடமை என்று இயங்கும் சில நிபுணர்கள் இதில் அடக்கம். இவர்கள் பல்கலைகளில் பேராசிரியர் வேலை எல்லாம் செய்பவர்கள். சிறு ஆசிரியத் தன்மை கூட இல்லாத நபர்களைப் பேராசிரியர் என்றழைப்பது என்னவொரு பேதமை?! ஆனால் முந்தைய தலைமுறை திராவிட இயக்கப் பொய்கள் ஒரு இனவெறி அரசியலைத் தமிழகத்தில் பரப்புவதில் பெரும் வெற்றி அடைந்துள்ளதைப் போல இந்த பொய்யாசான்களின் புரட்டல்களும் வரலாற்றுப் புத்தகங்களிலும், இளம் மாணவர்களின் நினைவிலும் அறிவிலும் பதிந்து அடுத்தடுத்த தலைமுறைகளின் அறிவில் விஷத்தைப் புகுத்தும் என்பது ஒரு துக்ககரமான சம்பவம்.

    இந்த விஷபபாய்ச்சலுககு மாற்று மருந்து ஏதும் கிட்டாதிருபபதை நினைத்து நொந்திருந்தேன். எனக்குத் தென்னிந்திய, தமிழக வரலாற்றில் பயிற்சியோ, திறமையோ அதிகம் இல்லை எனவே இதை உடைக்க என்னாலாகாதிருந்தது. நீங்கள் இந்த உணமையை நிறுவும் முயற்சியில் இறங்கி இருப்பதை நான் மிகவும் மெச்ச வேண்டி இருக்கிறது. தொடர்ந்து இந்த கட்டுரைத் தொடரைப் பூர்த்தி செய்து பிறகு அதை ஒரு புத்தகமாகவும் கொணர்ந்தீர்களானால் பாரதியின் வாழ்வுக்கும், தமிழரின் வரலாற்றறிவுக்கும் உங்கள் பணி அபாரமான மதிப்புள்ளதாக இருக்கும்.
    உங்களுக்கு என் வாழ்த்துகள்.
    மைத்ரேயா

  6. திரு பட்டாபிராமன், இரண்டு காரியங்களையும் செய்துகொண்டுதான் வருகிறேன். இரண்டுமே அவசியமானவை. ஒன்று மற்றொன்றைச் சார்ந்தது. பாரதியின் பாடல்களைக் குறித்து ஏராளமாக எழுதியிருக்கிறேன் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  7. மைத்ரேயா, மிக்க நன்றி. மிக ஆதாரபூர்வமான‍‍‍, மிக வலுவான சிஜடி போலிஸார் குறிப்புகளின் அடிப்படையிலும், அரசாங்கத்தினர் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் அடிப்படையிலும், வழக்குமன்ற ஆவணங்களின் அடிப்படையிலும் இந்தத் தொடர் விரிகிறது. பொறுத்திருந்து பார்ப்பவர்களுக்கு இதனுடைய முக்கியத்துவம் புரியும்.

    திரு பட்டாபிராமன்: போட்டுவாங்குவது என்ற உங்களுடைய மறுமொழி யாரைக் குறிக்கிறது, எந்த நோக்கத்தோடு சொல்லப்படுகிறது என்பன புரியவில்லை. அன்றாடம் ஒரு மறுமொழியாக இட்டுக் கொண்டிருப்பதற்கு நன்றி. இன்னமும் போடுஙகள். இன்னமும் வாங்கலாம்.

  8. இதில் ஒன்றும் மர்மம் இல்லை. உங்களின்பணி அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ஒரு திரைப்பட வசனத்தை எடுத்து கையாண்டேன். அவ்வளவுதான்.

  9. மறு மொழியிடுவது பற்றி நான் சளைப்பதுகிடையாது
    ஆனால் உலாவியில் தன் கருத்துக்களுக்கு மாற்று கருத்து உண்டு என்பதையும் அதை மற்றவர் வெளியிட உரிமை உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லாதவர்களின் கூட்டம் உலா வருவது வேதனைக்குரியது. இருந்தாலும் பிறர் மனம் புண்படாத வகையில் முடிந்தவரை என் கருத்துக்களை வெளியிட்டுவருகிறேன்
    வாதம் செய்பவர்களோடு போராடலாம். வாதம் செய்ய வரும்போதே ஒரு முடிவுடன் வந்துவிட்டவர்களிடம் வாதம் செய்வதை விடுத்து அகன்று விடுவதே நலம் என்று எனக்கு ஒரு எல்லையை நான் வகுத்துக்கொண்டிருக்கிறேன். சென்ற ஆண்டு தினமலர் openpage பகுதியில் 300௦௦ க்கு மேற்பட்ட இடுகைகளை இட்டேன்.என் கருத்துக்கள் மீது வந்த விமரிசனங்கள் சுமார்20குள்தான் இருக்கும். பிறகு அதை நிறுத்திக்கொண்டேன். பிறகு வலைபூக்களில் நுழைந்தேன். அப்பப்பா~ஆரோக்கியமாக போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய அறிவையும் ஞானத்தையும் பெருக்கிகொள்ள எத்தனை வாய்ப்புக்கள்.
    வார்த்தையில் வடிக்க இயலாது.

  10. பாராட்டுக்கள்.பாரதி என்றால் கவிதைகள்மட்டுமே என்னுபவர்கள் 99% பேர்கள். பாரதியின் கட்டுரைகள் படிக்கப்படவேயில்லை பெரும்பாலோரால். பாரதியைப் புரிந்து கொள்ள அவரின் உரைநடைகளை வாசிக்கப்பட வேண்டும்.பல்கலைகழக ஆராய்ச்சிக் கட்டுரைகள் -பீராய்ச்சிக்கட்டுரைகளாகப் போய்விட்டதை தங்களைப் போன்றோர் விளக்கவேண்டுகிறேன்.பாரதிக்கு பெருமை சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. சிறுமை சேர்க்காதிருக்க தங்களைப் போன்றோர் இருப்பதைக் கண்ணுறும் போது மிக்க மகிழ்ச்சி. வளர்க உமது தொண்டு. வாழ்க வளமுடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *