சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2

சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1

தொடர்ச்சி…

முதலில் சூரிய மாதம் பற்றி ஒரு மேற்கோள்.

மணிமேகலையில், புத்தர் பிறந்த தினத்தைக் குறிக்கும் இரு இடங்களிலும் சூரியன் செல்லும் மாதத்தை இடபம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனோடு பொருந்தி..” (11 & 15 )

buddha-purnima-moon-thanks-arvind-narvekar‘இளவேனில் பருவத்தில் இடபத்தில் சூரியன் 13 நாட்கள் சென்றபின் மீனத்து இடை நிலையில் திங்களோடு பொருந்தும் போது’ என்று பொருள் தரும் இவ்வரிகளை சோதிடம்மூலம் தான் புரிந்து கொள்ள முடியும். இளவேனில் என்பது சித்திரை; வைகாசி என்பது, இங்கே வைகாசி என்று சொல்லாமல், இடபம் என்று சாத்தனார் கூறியுள்ளது, அந்நாள் வழக்கப்படியே. இடபம் என்று சொன்ன மாத்திரத்திலேயே, அது சூரியன் இருக்கும் மாதத்தைக் குறிக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘இளவேனில் பருவத்தில், சூரியன் இடபத்தில் 13 நாட்கள் சென்ற பின்..’ என்று இப்பகுதி கூறுகிறது. சூரியன் ஒரு நாளுக்கு ஒரு பாகையைக் கடக்கிறான். 13 பாகைகள் கடந்திருந்தால், அன்றைக்கு அந்த மாதம் (அ) ராசிக்கு வந்து 13 நாட்கள் முடிந்து விட்டன என்று அர்த்தம். போதித் தலைவனான புத்த பிரான் வைகாசி விசாகத்தில், அதாவது வைகாசி மாதம் பௌர்ணமியில் பிறந்தார். அவர் பிறந்த அந்த நாளில், சந்திரன் இருக்குமிடம் எளிதாகத் தெரிந்து கொண்டு விடலாம் – விசாகம் என்று. ஆனால் சூரிய மாதத்தில், அன்று எத்தனையாவது நாள் என்று சொல்லும் வகையில் இந்த வரிகள் அமைத்துள்ளன. இடபத்தில் 13 நாட்கள் சென்றபின் என்றால், சூரிய மாதத்தில் 14 -ஆம் நாள் என்று பொருள். இதையே வைகாசி மாதத்தில் 14-ஆம் நாள் என்று சாத்தனார் சொல்லியிருந்தால் குழப்பமாகியிருக்கும். வைகாசி என்பது சந்திர மாதம், அதில் 14-ஆம் நாள் என்றால், அன்று சதுர்த்தசி – பௌர்ணமிக்கு முதல் நாள் என்று அர்த்தம்.

இந்த வரிகள் மூலம், புத்தர் பிறந்த சந்திர மாதம் என்று ஆரம்பித்தது என்று கூறி விடலாம். சூரியன் இடபம் வந்து 13 நாட்கள் ஆகி விட்டன. ஆனால் அன்றோ, பௌர்ணமி, சந்திர மாதத்தில் 15-ஆம் நாள்.எனவே சூரியன் மேடத்தில் 28 -ஆம் பாகையில் இருந்த போது, அமாவாசை வந்திருக்க வேண்டும். மேட மாதத்தின் 29 -ஆம் நாள் வைகாசி (சந்திர மாதக் கணக்கில்) ஆரம்பித்திருக்கும். அப்பொழுதுதான், இடபத்தின், 14-ஆம் நாள் விசாகப் பௌர்ணமி வந்திருக்கும்.

இந்தச் செய்யுளில் இடைநிலை மீன் என்று சொல்லப்படுவது ஒரு முக்கிய வானியல் குறிப்பு ஆகும். விசாக நட்சத்திரம், இடைநிலை மீன் ஆகும். விஷாகா என்றாலே பிரிக்கப்பட்டது அல்லது பிளவு பட்டது என்று பொருள். சோதிடத்தில் இதற்கு ஒரு விளக்கம் உண்டு. கிருஷ்ணாவதாரம் நடந்த போது, equinox என்று சொல்லப்படும் சம நோக்கு நாள் கார்த்திகையிலும் விசாகத்திலும் அமைந்தன. அதற்குமுன் வரை விசாகம் ராதா என்று அழைக்கப்பட்டது. ராதாவை அடுத்து வந்த அனுஷம், எனவே அது அநு-ராதா என்று அழைக்கப்பட்டது. சம நோக்கு நாள், ராதாவை வடக்கு, தெற்கு என்று பிளந்ததால், அது முதல் விசாகம் என்று அழைக்கப்படலாயிற்று என்பது சோதிடக் கருத்து. இக்கருத்து, இடைநிலை மீனம் என்று விசாகத்தைக் குறித்து வரவே, பண்டைத் தமிழர் கொண்டிருந்த வானியல் அறிவு தெரிகிறது. அவர்கள் கடைபிடித்த வருடப் பிறப்பும் அப்பழுக்கில்லாத சரியான நிலைப்பாடாகத்தான் இருக்க வேண்டும் என்றும் நிரூபணமாகிறது.

இப்பொழுது சந்திர மாதத்தைக் காட்டும் உதாரணத்தைப் பார்ப்போம். புறம், 229 – ஆம் பாடல் முழுவதுமே அரிய சோதிடக் கருத்துகளைக் கொண்டுள்ளது. “ஆடிய லழர் குட்டத்து” எனத் தொடங்கும் இப்பாடல் பாடப்பட்டது பங்குனி மாதத்தில். பங்குனி பிறந்து அன்றைய தினம் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கிறான். அன்று நள்ளிரவில், பங்குனிக்கு உச்சமாகிய உத்தர நட்சத்திரம், தலை மேல் இருக்கிறது. அங்கிருந்து உத்தரம் சாய ஆரம்பித்தவுடன், ஒரு எரி நட்சத்திரம் வடக்கிலும் இல்லாமல் கிழக்கிலும் இல்லாமல் வீழ்த்தது. அதைக் கண்ட புலவர் கூடலூர்க் கிழாரும் மற்ற பலரும் நம் அரசனுக்கு என்ன ஆகுமோ என்று அஞ்சினர். அவன் நோய்வாய்ப்படாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டினர். எனினும் அந்த எரி நட்சத்திரம் கண்ட ஏழாம் தினம், அரசன் மறைந்த துக்கச் செய்தி வந்தது என்று போகிறது அப்பாடல்.

டாக்டர் உ.வே.சா. அவர்கள் கண்டெடுத்த உரையில் (யார், எப்பொழுது எழுதினர் என்று தெரியாத பழமை கொண்ட உரை – டாக்டர் . உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த, ‘புறநானூறு மூலமும், உரையும்’ புத்தகத்தில் காணலாம்) “பங்குனி மாதத்தினது முதல் பதினைந்தின் கண் உச்சமாகிய உத்தரம், அவுச்சியினின்றும் சாய” என்று வருகிறது. பங்குனி மாதத்தின் 15 .ஆம் நாள் உச்சமாவது பங்குனி உத்தரம் என்னும் பௌர்ணமி சந்திரன். எனவே இங்கு சொல்லப்படுவது அமாவாசை அடுத்து வரும் பிரதமை முதல் ஆரம்பிக்கும் சந்திர மாதமே.

அதேபோல், இந்திர விழா ஊரெடுத்தக் காதையில், “சித்திரை, சித்திரைத் திங்கள் சேர்ந்தென” என்று கூறுவதும், சந்திர மாதச் சித்திரையில், சித்திரா பௌர்ணமி என்று பொருள் படும். அவ்வாறே அக நானூறு 137 -இல் பங்குனி உத்தரத்தில், திருவரங்கத்தில் நடக்கும் விழா சந்திர மாதம் குறித்து வருவதே. (பங்குனி உத்தர உத்சவம் அரங்கன் கோயிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது என்று தெரிகிறது.)

சமீபத்திய சில நூறு வருடங்களில் தான் சந்திர மாதப் பெயர்கள், சூரிய மாதங்களுக்கு வந்திருக்க வேண்டும். அது எப்படி என்று ஆராயப் புகுந்தால், பிரபவ முதலான 60 வருடக் கணக்குகள் இந்த மாற்றத்தின் அவசியத்தை உணர்த்தியிருக்கும்.

 

பிரபவ முதலான 60 வருடங்கள்

சித்திரை வருடப் பிறப்பு எதிர்ப்பாளர்களுக்கு அலர்ஜியான ஒன்று, இந்த 60 வருடக் கணக்கு. இது எப்பொழுது உருவானது அல்லது எழுதப்பட்டது என்று தெரியாது. ஆனால் எல்லாப் பழைய சோதிட நூல்களும் கூறுவது. நாரத சம்ஹிதையிலும் காணப்படுகிறது (அபிதான சிந்தாமணி கூறுவது போல அல்ல). ப்ருஹத் சம்ஹிதையிலும் காணப்படுகிறது. சூரிய சித்தாந்தத்திலும் சொல்லப்படுகிறது. இந்த 60 வருடங்கள், வியாழன் கிரகத்தின் 60 வருட சுழற்சியின் பெயர்கள். இவற்றை சூரிய வருடங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் இன்று வழக்கில் சூரிய வருடங்களுக்குச் சொல்லப்படுகின்றது. இந்த மாற்றத்தைச் செய்தவர்கள் தமிழர்கள்தான் என்பது எனது கருத்து. இடைக் காட்டுச் சித்தர் அளித்துள்ள 60 வருடப் பலன்களும், பிரபவ முதலான 60 வருடங்களைத் தாங்கியுள்ள சூரிய வருடங்களுக்கே. இது எவ்வாறு நடைமுறைக்கு வந்திருக்க முடியும்?

இதற்கு பதிலை தொல்காப்பியர் சிந்தனையிலிருந்து எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

“முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே”

என்கிறார். இதில் பொழுது என்பது, அந்நிலத்தின் தட்ப வெப்பம் சார்ந்தது. இவ்விரண்டின் இயல்பு தெரிந்தோரால்தான் இவற்றைப் பற்றிப் பேச முடியும், இவை குறித்த விதிகளை வகுக்க முடியும். தமிழ் நிலம், அதன் தட்ப வெப்பம் என்பது, பழந்தமிழ் நாட்டில் இருந்தது போல இன்றில்லை. சூரியன் சிம்ம ராசி ஏகினவுடன், பொதியில் முனிவனான அகத்தியன் (Canopus) சூரிய உதயத்திற்குமுன் எழும்போது (Heliacal rising), சைய மலையில் மழை பொழியும், என்கிறது பரிபாடல்- 11. இது மேற்குத் தொடர் மலை. இன்று அம்மலை நம் வசம் இல்லை. அங்கு மழை பெய்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் இல்லை. மூவேந்தர் ஆட்சி அஸ்தமித்த உடனேயே தமிழ் நிலமும் மாறிவிட்டது, மக்கள் வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு இடைக் காட்டு சித்தர் போன்றவர்கள், சூரிய மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, 60 வருடப் பெயர்களையும் சூரிய வருடங்களுக்குக் கொடுத்திருப்பர்.

இந்த வருடங்கள் அலங்காரப் பெயர்கள் அல்ல. அந்தந்த வருடத்தில் நடக்கும், சம்பவங்கள், வானிலை, மழை, உழவு குறித்த விஷயங்களைக் கூறுவன. தமிழ் நாட்டில் நாம் இன்று பின்பற்றி வரும் வருடக் கணக்கு, வட மாநிலங்களிலிருந்து வேறுபட்டது. அதாவது, இங்கே நமக்கு விரோதி வருடம் என்றால், வட இந்தியாவில், சார்வரி வருடம். இந்த மாறுபாட்டை, இடைக் காட்டுச் சித்தர் போன்றவர்களோ, அல்லது சோதிட வல்லுநர்களோதான் – தொல்காப்பியர் கூறினது போல, நிலம், தட்பவெப்பம் ஆகியவற்றின் இயல்பு உணர்ந்தவர்கள்தான் கொண்டு வந்திருக்க வேண்டும்.

60 வருடங்களும், நிலம், தட்பவெப்பம் குறித்து, சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. இவற்றைக் குறித்தும் வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், வருடப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று நாம் பின்பற்றும் வருடக் கணக்கு, நம் பகுதியில் உள்ள வெப்பம், பருவ மழை இவற்றைப் பொருத்ததே.

வருடப் பலன்களை அறிந்து கொள்ள, அவற்றின் பெயர்களே போதும். அப்படி என்றால், இப்பெயர்களைத் தமிழ்ப் படுத்தி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றும். அது எளிதல்ல. பல பெயர்களுக்கும் சரியான மொழிபெயர்ப்பு தமிழில் மட்டுல்ல, பிற மொழிகளிலும் கிடையாது. தமிழ்விரும்பிகள் கோபப்படாமல் இதைப் படிக்க வேண்டும்.

தானம், தவம் இரண்டும் தங்கா வியனுலகம் பற்றிப் பேசின வள்ளுவரே அந்த இரு வட சொற்களை அப்படியே கையாண்டுள்ளார். ஏன்? அவை சொல்லும் கருத்தை அவற்றைப் போல ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சொற்களைத் தமிழில் அப்படியே ஏற்றுள்ளனர்.

உதாரணமாக, 2006 -2007 -இல் வந்த வியய வருடத்தை எடுத்துக் கொள்வோம். இதைச் சரியாக மொழிபெயர்க்க முடியாது. ஓரளவு சொல்ல வேண்டும் என்றால், குறைவு, நஷ்டம், செலவு என்று சொல்லலாம். அந்த வருடப் பலன் மேற்சொன்னவாறு இருக்கும். வியய என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த வருடம் நடந்ததை நினைவுகூற வேண்டும். அந்த வருடம்தான், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாகத் தர ஆரம்பிக்கப் பட்டன. அது நடந்த ‘வியய’ எப்படிப்பட்டது என்றால், ஆக்க பூர்வமான செலவுகளுக்கான அரசுப் பணம் (மக்கள் பணம்) குறைவுதரும் வண்ணம் செலவழிக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த குறைவு (வியய), புது வழிகளில் இன்று மக்களாட்சித் தத்துவத்தின் ஆணி வேறான வாக்குச் சீட்டின் புனிதத்தையே புதைக்கும் அளவுக்கு இழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று விட்டது.

இவ்வாறு சரியான வார்த்தைகள், பல வருடப் பெயர்களுக்கு இல்லாமையாலும், புரிந்த வார்த்தைகள், மக்களை பயமுறுத்தும் வண்ணம் இருப்பதாலும் – (விரோதி என்னும் இவ்வருடம், எதிரி என்று தெளிவாகப் பொருள் தருவது) – சித்தர் போன்றவர்கள், வழக்கு ஒழிக்காமல் அந்த 60 வருடப் பெயர்களையே சூரிய வருடங்களுக்குச் சூட்டி இருப்பார்கள். பாதி புரிந்தும் புரியாததுமாக வட மொழியிலேயே அப்பெயர்கள் இருப்பது, அல்லலுறும் மக்கள், பலன் தெரிந்துகொண்டு மேலும் புதுக் கவலைகள் கொள்ளாமல் இருப்பதற்கு உதவும்.

 

ஆவணியில் புது வருடமா?

அந்நாள் தமிழர்கள் ஆவணி மாதத்தில் புது வருடத்தைத் துவங்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உலவுகிறது. இதற்கு அடிப்படை, “மாயோன் மேய காடுறை உலகமும்” என்றும், “காரும் மாலையும் முல்லை” என்றும் ஆவணி மாதத்தில் துவங்கும் கார்ப் பருவத்தையே தொல்காப்பியர் முதலில் கூறியுள்ளார் என்பதே. இயல்பு தெரிந்து இயல்பு உரைக்க வேண்டும் என்று அவர் கூறுவதற்கொப்ப ஆராய்வோம். மக்களின் வாழ்வாதாரமான் மழை வரும் நேரம், மழையின் அளவு, அது தொடரும் காலம் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எவைஎவை முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் கூறியுள்ள பொழுதைப் பார்த்தாலே புரியும்.

  • குறிஞ்சியில், நடு ராத்திரி குளிரைச் சமாளிக்க வேண்டும். வெதுவெதுப்பாக அந்நேரம் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.
  • முல்லையில் முக்கிய நேரம், மாடுகள் திரும்பும் மாலை நேரம். அப்பொழுதுதான் முல்லை மக்கள் மிகக் கவனமாக தங்கள் ஆநிரைகளை திரும்பி கொட்டகையில் சேர்ப்பிக்கும் நேரம்.
  • மருதத்தில், விடியலுக்கு முன்னமே உழவு வேலைகளைத் தொடங்கிவிட வேண்டும், வெயில் ஏறி விட்டால் நிலத்தில் வேலை செய்ய முடியாது.
  • நெய்தலில், சந்திரன் உதிக்கும் எற்பாடு நேரம் கடலுக்குச் செல்லும் நேரம்.

இப்படி அந்த அந்த நிலங்களின் தன்மைக்கு ஏற்ப, தொழில் குறித்தும், அவரவர் முக்கிய பொழுது அமைகிறது. ஒட்டுமொத்த தமிழ் நிலங்களை நோக்கினால், பருவ நிலை என்பது, மாரிக் காலம் துவங்கி முக்கியத்துவம் பெறுகிறது. மாரிக் காலம் நன்றாக இருந்தால்தான், வரும் வருடம் வளமாக இருக்கும்.

பரிபாடல் 11-இல் கார் காலத்தில் வரும் முதல் மழை, சரியான சமயத்தில்தான் வந்துள்ளதா என்று சொல்லிவிட்டுத்தான், புலவர், அந்த மார்கழி மாதம் பௌர்ணமியில் துவங்கும் பாவை நோன்பு பற்றி விவரிக்கின்றார். பாவை நோன்பு, நல்ல கணவனைப் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, கொண்ட கணவன் தன்னை விட்டுப் பிரியாமல் இருக்கவும், அவனே வரும் பிறவிகளிலும், கணவனாகக் கிடைக்க வேண்டும் என்றும் மகளிர் அனைவரும் செய்வது. இதைச் செய்யும் மார்கழி மாதம், மழையைக் கருத்தரிக்கும் மாதம். இது ஆண்டாண்டு காலமாக முனிவர்களால் சொல்லப்பட்டு, சோதிடர்களால் கணிக்கப்பட்டு மழை வரவை உறுதி செய்யும் நோன்பும்கூட.

மார்கழி விடியலுக்குமுன், காற்று மண்டலத்தில் மக்கள் வெளியில் செல்வதால் உண்டாகும் சலசலப்பும், சில்லிடும் ஆற்று நீரில் குளிப்பதால் ஆற்று நீரில் ஏற்படும் சலனங்களும், மணலில் பாவைகள் செய்து உற்சாகக் கூக்குரலிடும் சிறுமியர் எழுப்பும் சப்தமும், ஆற்றங்கரையில், ஹோமத் தீ வளர்த்து உண்டாக்கும் வெம்மையும், தெய்வம் தொழும் போது எழுப்பும் ஒலி அலைகளும், என்றைக்கெல்லாம் அவ்வாறு செய்யபட்டனவோ, அன்றிலிருந்து, 195 – ஆம் நாள் மழை பெய்வதை உறுதி செய்யும் என்பது சோதிட விதி. இது தவறுவதில்லை.

மார்கழி, திருவாதிரைப் பௌர்ணமியில் ஆரம்பிக்கும் இந்த நோன்பு தொடர்பாக, அன்றிலிருந்து, 6 மாதம் கழித்து, அதே திருவாதிரை நட்சத்திரத்தில், சூரியன் பிரவேசிக்கும் போது உள்ள கிரக நிலைகளைப் பொருத்து, அதன்பின் வரும் கார்ப் பருவத்தில், மழை எந்த அளவு இருக்கும் என்று கணிக்கப்படும். நல்மழை பொழிவதற்காக தங்கள் அக வாழ்க்கைக்குரிய நோன்புகளை, ஒரு பொது நலம் கருதியும் செய்த உயர் மக்கள் கொண்ட நாடு, நம் நாடு.

bajanகாலம் சுழன்றாலும், இந்த மார்கழி குறித்த – மழை வரச் செய்யக் கூடிய – விடியலுக்குமுன் செய்ய வேண்டிய சலசலப்புகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்று நம் குடிப்பெருமை, மதப் பெருமை முதலியவற்றை நாம் அறியாது இருந்தாலும், அவற்றை மறந்தாலும், காலமானது நாம் அறியாமல் நம்மை வழிப்படுத்திக்கொண்டு செல்கிறது. பாவை நோன்பு கலாசாரம் போனாலும், பஜனை பாடும் வழக்கம் வந்து, மார்கழி வைகறையை சலசலப்புக்குள்ளாக்கியது. தற்காலத்தில், ஐயப்ப பக்தர்கள் அந்த உத்தம நன்மையைச் செய்கிறார்கள். விடியலுக்கு முன், அவர்கள் கோவிலுக்குச் செல்லுதலும், பஜனை பாடுதலும், முற்காலத்தில் பாவை நோன்பின் போது சுற்றுப்புற சூழலில் உண்டாக்கப்பட்ட சலசலப்பிற்கு ஒப்பானது. இதனால், அடுத்த கார்ப் பருவம், மழை தரும். இப்படி நம் வாழ்க்கை, நாம் உணராமலேயே, கார் பருவத்தை முன்னிட்டுதான் இயங்குகிறது.

காரின் முக்கியத்துவத்தை முன்னிட்டு, தொல்காப்பியர் அவ்வாறு எழுதியது, வருட ஆரம்பம் என்று எப்படி ஆகும்?

 

தையில் புது வருடமா?

சங்கத் தமிழ் நூல்களில் ‘தை‘ என்பது திருநாளாகச் சொல்லப்படவில்லை. அது ஒரு விழாவும் அல்ல. மார்கழியும், தையும் மேற் சொன்னாற்போல் பாவை நோன்பு நோற்கும் காலம். ஆவணியில் துவங்கிய மழைக் காலம், (சேர நாடும் சேர்ந்த அன்றைய தமிழகத்தில்) கார்த்திகை மாதம் வரையில் நன்கு பெய்யும். காட்டாற்று வெள்ளமாக நீர் நிலைகள் நிரம்பியும், குழம்பியும் இருக்கும். மார்கழி மாதத்தில் மழை பெய்வது நின்று, ஆற்று நீர் தெளிந்து ஆங்காங்கே குளம்போல் விளங்கும். மார்கழிக்கு எதிர்புறத்தில் உள்ள புனர்பூசம் நட்சத்திரம் குளம் எனப்படும். அதனாலும், மார்கழி மாதத்தைக் குளம் என்பர். (இந்த செய்தியை பரிபாடல் 11 -இல் காணலாம்.)

தை பிறக்கும் போது, தண்ணீர் நன்றாகவே தெளிந்து விடும். இயற்கையையும், நீர் நிலைகளையும் தெய்வமாக நினைத்த அந்நாள் மக்கள், ‘தவத்தை நீராடுதல்’ என்பதை ஒரு தவமாகவே செய்தனர்.

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

தாயும் மகளுமாக பனி நீரில் மூழ்கி எழுந்து, ஆங்கே நதிக்கரையில் ஆதிரையோனுக்குச் செய்யும் ஹோமத்தீயை வலம்வந்து, முன்பிறவியில் செய்த தவப்பயனோ இன்று நாம் இருப்பதும் இந்த வைகையில் குளிப்பதும் என்று வியந்து, கண்ணாடி போலத் தெளிவாகத் தெரியும் நீரே, எம் வேண்டுதல்களையும் விருப்பங்களையும் நீ தைத்துக் கொள்ளும் வண்ணம் தெளிவாக இருக்கிறாய், தை நீரே, நீ தான் எங்கள் வேண்டுதல்களை வாங்கிக்கொள்ளத் தக்கவள் என்று கூறுவர்

“நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்மாரும்”, என்கிறது பரிபாடல் 11.

month_raasiமார்கழி முடிந்து வரும் தை தெள்ளிய நீர் ஓடும் காலம். அன்ன நடை, அழகு நடையுடன் வரும் ஆற்றுக் கன்னி, மக்கள் எண்ணங்களை தைத்துக் கொள்கிறாள். தை-இ என்னும் சொல் சங்க நூல்களில் பல இடங்களிலும் வருகிறது. தை என்றால், தைத்தல் என்று பொருள். தைத்தல், பின்னுதல், பொருத்துதல், சேர்த்தல் என்னும் பொருளிலேயே வருகிறது. கார் கால நீர் போலன்றி, தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் தம் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. இந்த மாதத்திற்கு நேர் எதிரில் இருக்கும் மாதம், தைக்கப்பட்ட எண்ணங்களைப் பிரதிபலிக்கச் செய்தார் போல கண்ணாடி போல் இருக்கும் “ஆடி” மாதம் என்றாயிற்று.

தையில், நீரில் கண்ட பிம்பம், ஆடியில் – கண்ணாடியில் நேர் முகமாகத் தெரிய வேண்டும். தையில் உள் வாங்கிய வேண்டுதல்கள், ஆடிக்குள் நிகழ்ந்து விட வேண்டும். இதுவே தவம். நீரின் கண் நின்றும் செய்யும் தவம், மற்றும், நெருப்பின் கண் நின்று (ஹோம குண்டம் சுற்றி) செய்யும் தவம், ஆக பாவை நோன்பு முடித்து, “தவத்தை நீராடி” (பரி பாடல் 11), புலனடக்கி, காக்கும் தெய்வமான ஆற்று நீரின் கண், தங்கள் வேண்டுதல்களைக் கொட்டி செய்யப்படுவதே ‘தை- நீராடல்’ ஆகும்.

இதன் ஆரம்பம் தை மாத முதல் தினமல்ல. மார்கழி பௌர்ணமியிலேயே ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய பின்புலம் கொண்ட தை மாதம் எங்ஙனம் வருடப் பிறப்பாகும்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லியுள்ளனரே என்பார்கள். யாருக்கு வழி பிறக்கும்? திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கு. அப்படிக் காத்திருக்கும் கன்னியர் எல்லோருக்குமே திருமணம் ஆகி விடுவதில்லை.

காத்திருக்கும் தலைவனுக்கோ பெண்ணின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை. பாவை ஆடிய இளம் பெண், அவளைப் பார்த்து ஏங்கும் தலைவனைக் காணாள் இல்லை. அவளிடம் மனம் பறிகொடுத்த தலைவன் சொல்கிறான், “நீ தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?” (கலித் தொகை 59)

“இவளோ என்னைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாள். ஆனால், வருடம் தோறும், தையில் நீராடி, நல்ல கணவன் வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறாள். என்னைக் காணாது இருக்கையில், தை நீராடி தவம் இருந்து என்ன பயன்?” என்று நக்கல் பேச்சு பேசுகிறான். இப்படியெல்லாம் அக வாழ்கையின் ரசனை ததும்ப ஓடும் கருத்துக்களைக் கொண்டதால் அந்த மாதமே வருடப் பிறப்பு என்று எப்படி சொல்லலாம்?

மேலும் தையை தொடர்ந்து வரும், மாசி மாதம் எப்படிப்பட்டது? ‘மாகூர் திங்கள்’ என்னும் பதிற்றுப் பத்து பாடல் (59), மாக்கள் குளிர் தாங்காமல் உடலைக் குறுக்கிகொள்ளும் மாசி மாதம், மாகூர் மாசியாகும் என்கிறது. அந்தப் பாடலில், பாணன் எப்பொழுதுதான் குளிர் நீங்கி, வெயில் வரும் எனக் காத்திருக்கிறான். பொதுவாக, விடியலுக்கு முன்னாலேயே பாணர்கள் அரசனைக் காணக் கிளம்பி விடுவர். அப்பொழுதான், வெயிலுக்கு முன் அரண்மனை சென்று அடைய முடியும். ஆனால் மாசி மாதத்தில் விடிகாலையில் கிளம்ப முடிவதில்லை. குளிரும் பனியும் அதிகம். மேலும் மாசித் தன்மை உடையதால் அது மாசி என்று உரை காரர் கூறுகிறார். மாசி என்றால் மேகம் என்றும் பொருள். மேகமே இறங்கி வந்தாற்போல், பனி மூட்டம் நிலத்தின் மீது பரவி இருப்பதால் அது மாசி என்றாயிற்று.

நெடு நல் வாடையிலும், (6) ” மாமேயல் மறப்ப, மந்தி கூற” என்று கூறுகிறது. மாசி மாதம், மாடுகள் குளிர் காரணமாக மேயச் செல்லாது மந்தி உடலைக் குறுக்கிக் கொண்டு இருக்கும். “தையும் மாசியும் வையகத்து உறங்கு” என்று பதிற்றுப் பத்து உரைகாரர் கூறுகிறார். வையம் உறங்கும், தைமாதமா வருடப் பிறப்பு என்னும் முக்கியத்துவம் பெற முடியும்?

பொங்கல் திருநாளும், வருடப் பிறப்பும். பொங்கல் திருநாள் தமிழர் திருநாள். அதனால் அன்றே வருடப் பிறப்பு கொண்டாடுவது தக்கது என்று ஒரு வாதம். தமிழர் திருநாள் என்று, தமிழருக்கே உள்ள பிரத்யேகமான பண்டிகை என்று ஒன்று இருக்குமானால் அது கார்த்திகை தீபம் மட்டும்தான். அதைத் தமிழர் தவிர வேறு யாரும் கொண்டாடுவதில்லை. நான் அறிந்த அளவிலேயே, மூன்று இடங்களில் அகநானூறில் கார்த்திகை தீபத்தை எவ்வாறு பழந்தமிழர் கொண்டாடினர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பொங்கல் பண்டிகை பற்றி சொல்லப்படவில்லை.
மக்கள் பொங்கலாடுவர் – எல்லாப் பண்டிகையிலும்.

“பூவும், புகையும், பொங்கலும் சொரிந்து” கடவுளை வணங்கி, இந்திர விழாவில் கொண்டாடினர் என்று சிலம்பு கூறுகிறது. இன்றைக்கும், எந்த விசேஷ நாளிலும் அம்மனுக்குப் பொங்கலிடுவர். தையில் மட்டும் அல்ல, மார்கழியிலேயே பொங்கல் பொங்குதல் ஆரம்பித்து விடுகிறது.

அறுவடையைக் கொண்டாடிப் பொங்கலிடுவர். புது அரிசியைப் பொங்கலிட்டுப் படைத்து விட்டுதான் உண்பர். புது அரிசி உண்பதற்கு நேரம் காலம் பார்த்துதான் சமைத்து உண்ண வேண்டும். இதற்கென்றே சோதிட விதிகள் உண்டு. பொங்கல் பண்டிகை அன்று, நாடு முழுவதுமே மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.ஆனால் பொங்கலாடுதல் என்று ஒரு சொல்லாட்சி தமிழில் உண்டு. “பெய்து புறன் தந்து பொங்கலாடி விண்டுச் சேர்ந்த வெண்மழை போல” என்று 6 -ஆம் பதிற்றுப் பத்தில், 5 -ஆம் பாடலில், காக்கைப் பாடினியார், ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றிச் சொல்கிறார்.

பொங்கலாடுதல் என்றால், நன்கு பெய்து ஓய்ந்த மேகமானது, பஞ்சினைப் போல வெண்மையாக, பரவி, விரிந்து, பொங்கி, வானத்தின் மேலே போய் நிற்கும். அதைப் போல் சேரமானும், நன்கு சிறப்பாக வாழ்ந்து, விரிந்து, உயர்ந்து, பரந்து பொங்கலாடுவது போல் பல்லாண்டுகள் வாழ்கிறான்.
இக்கருத்தை அகம் 217 -இலும் காணலாம்.

pongal-celebrationsநன்கு வாழ்ந்து, மனம் நிறைந்து, மகிழ்ந்து, நல்ல பலன் தந்த மேகம் பஞ்சு போல் பரவிப் பொங்கியதைப் போல இருத்தல் பொங்கலாடுதல் ஆகும். திருப்தியான அறுவடை செய்துகிடைத்த அரிசியைக் களைந்து போட்டபின், வெண்மையாகப் பொங்கும் அந்த உணவும், அதனால் பொங்கல் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். மன நிறைவு ஒரு முக்கிய காரணம் என்பதால், விழாக்களிலும், பண்டிகையிலும், அறுவடை முடிந்த பின்னும், பொங்கலிடுதல் வழக்கமாக இருந்திருக்கின்றது.

கரும்பும் அதே போல் தான். இந்நாளில் தைப் பொங்கல் பொழுதுகளில்தான் கரும்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களைப் பார்த்தால், கரும்பு வருடம் முழுவதும் விளைந்த பயிர் என்பது புலனாகிறது. கரும்பும், பூவும் இல்லாமல் ஒரு விழாவும் கிடையாது. இது பற்றிய செய்திகள் பதிற்றுப்பத்து, புறநானூறு முதலியவைகளில் உள்ளன.

எனவே பொங்கல் பண்டிகை தமிழர் பண்டிகை என்று சொல்லி வருடப் பிறப்பை அன்று கொண்டாடுவது சரியல்ல.

 

வானியல் கருத்துக்கள்

வானியல் அடிப்படியில் தான் சொல்கிறோம், சூரியன் வடக்குப் பயணம் துவங்கும் மகர சங்கராந்தி எனப்படும் தை முதல்நாளே வருடப் பிறப்பு என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. சூரியனின் வடக்குப் பயணம், அதற்கு முன்பே தொடங்கி விடுகிறது. 72 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு பாகை என்று சூரியன், precession என்று பின்னோக்கி நகர்கிறான். தற்சமயம், அந்தக் கணக்கின்படி தனுர் ராசி 6-ஆம் பாகையில் வடக்கு நோக்கித் திரும்பி விடுகிறான். அதேபோல் சமநோக்கு நாள் என்பதும் மீன ராசியில் 6-ஆம் பாகையில் ஏற்படுகிறது. நிலையில்லாத இந்தக் கணக்கைக் கொண்டால் என்றென்றும் குழப்பம்தான். ஆனால் வருடம் ஆரம்பித்தல் என்பதில் குழப்பமே கிடையாது. அது சூரியன் மேட ராசியில் நுழையும் நேரம்தான். ஏனென்றால், அதுதான் மக்கள் தொகுதியின் பிறந்த தினம்! சதுர் மகா யுகம் எனப்படும் யுகங்கள் ஆரம்பித்த முதல் நாள்.

இப்பொழுது நடக்கும் சதுர் மகா யுகம் ஆரம்பித்த அன்று, சூரியன் உட்பட அனைத்து கிரகங்களும், மேட ராசியில் 0 பாகையில் நின்றிருந்தன. அதுவே யுகாதி. சூரிய மாதக் கணக்கில், சூரியன் மேடத்தில், அசுவினியில் பிரவேசித்ததை பிறந்த நாளாகக் கொள்கிறோம். ஆந்திரா போன்ற மற்ற இடங்களில் உள்ளவர்கள், சந்திர மாதக் கணக்கைப் பின்பற்றி, சந்திரன், சூரியனோடு சேர்ந்த அமாவாசையின் அடுத்த நாளை யுகாதி என்று கணக்கிட்டு வருடப் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். சதுர் யுகத்தின் முதல் யுகமான கிருத யுகம் ஆரம்பித்தபோது, சந்திரனும் சூரியனுடன் கூடிய அமாவாசையாக இருந்திருக்க வேண்டும் – ஏனெனில், எல்லா கிரகங்களுமே. பூஜ்யம் பாகையில் இருந்தன என்பது சோதிடக் கணக்கு. அதன் பிறகு எல்லா கிரகங்களும் வேறு வேறு வேகத்தில் பயணம் ஆரம்பித்தவுடன், சந்திரனும் சூரியனும் சேரும் அமாவாசையும், மேடத்தின் பூஜ்யம் பாகையில் அமைவதும் எப்போழுதோதான். அதனால் தெலுங்கர்கள் கொண்டாடும் யுகாதி தினம் வேறுபடுகிறது. சூரியமாதம் பின்பற்றும் நாம், சூரியன் மேடத்தில் நிழைவதைத்தான் கணக்கில் கொள்கிறோம். இதுவே மிகச் சரியான கணக்கும் கூட.

சூரியக் கணக்கின் படி மேடத்தில் நுழையும் நேரம் ‘ஜக லக்னம்’ எனப்படும். உலகத்தின் லக்னம் என்று பொருள். நாடு, உழவு, பருவ நிலை, மக்கள், ஆட்சியாளர் குறித்த சம்பவங்கள் இந்த ஜக லக்னத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றன. அதனால்தான் வருடப் பிறப்பு என்பது, பஞ்சாங்கம் வாசிப்பதுடன் வருகிறது. வரும் வருடம் எப்படி இருக்கும், மழை, விளைச்சல் இருக்குமா என்பது போன்ற பெரிய அளவில், நாட்டை பாதிக்ககூடிய விஷயங்களை அறிந்துகொண்டு, அதன் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அரசன் (ஆட்சியாளர்) முடிவெடுக்க வருடப் பிறப்பு உதவுகிறது.

இந்த விதத்தில் பார்த்தால் வருடப் பிறப்பும் வருமுன் காப்போம் வகையைச் சேர்ந்ததுதான். அதனால் தங்களுக்கு என்ன லாபம் என்று ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை போலிருக்கிறது!! தையில் என்றாலாவது ‘சங்கம’ மித்து விடலாம். சித்திரையில் என்ன இருக்கிறது? யாராவது, ஏதாவது ஐடியா கொடுங்களேன்!

முற்றும்.

48 Replies to “சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2”

  1. குடும்ப அரசியல்வாதிகளுக்கு அரசியல் பண்ண வேற வழி தெரியாத காரணத்தால் தமிழ் வருட பிறப்பை மாத்திவிட்டர்கள் இன்னும் எத்தனை நாள் தான் ஏமாத்த முடியும் தமிழ் இந்துக்களே இனியாவது விழித்து கொள்ளுங்கள் நாளை அம்மாவை அப்பாவை மாற்ற சொல்வார்கள்

  2. அருமையான கட்டுரை. தமிழ் அறிக்னர்களுக்கும் தமிழ் காவலர்களுக்கும் வித்தியாசம் இந்து எதிர்ப்புதானோ? முன்பெல்லாம் ஆவின் பால் கவர் மேல் அன்றைய பண்டிகைக்கான வாழ்த்து இருக்கும். ஆனால் சமீப காலமாக வந்த கவர்களில் ஈத், கிருஸ்துமஸ் பண்டிகைகளுக்கு இருந்தது. தீபாவளி, நவராத்திரிக்கெல்லாம் இருக்கவில்லை. இன்று(14.01.10) தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து இருக்கிறது! உக்காந்து யோசிப்பாங்களோ?

  3. என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன்.

    நீங்கள் ”தமிழ் ஹிந்து” விற்கு, ஏன் தமிழ் ஹிந்துக்களுக்கே, கிடைத்த ஒரு பொக்கிஷம்.

    வளரட்டும் தங்கள் பணி. வாழ்த்துக்கள்!

    அன்புடன்

    ஹரன்

  4. மிக அற்புதமான கட்டுரை. ஜோதிட சாஸ்திரத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள உறைவை கோடிட்டுக் காண்பித்தமையும், ஜோதிடப் பார்வை கொண்டு கட்டுரையின் கருப்பொருளை அணுகிய விதமும், அருமை. ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களைக் கூட யோசிக்க வைக்கும் கட்டுரை!

    //தையில் என்றாலாவது ‘சங்கம’ மித்து விடலாம்.//

    சரியாகச் சொன்னீர்கள். தைக்கு மாற்றியதே “ஜனவரியில்” கிரெகரியன் காலண்டரில் இணைத்து, கிறுத்துவத்தில் சங்கமித்து விடலாம் என்பதற்குத் தானே!

    இந்தத் தமிழ் வியாபாரிகளை தமிழ் இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி.

    அன்புடன்

    தமிழ்செல்வன்.

  5. தைப் பொங்கல் நாள் (இன்றைய) தமிழக அரசின் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாலும், பெருவாரியான அரசியல் சார்பற்ற உண்மை தமிழ் இந்துக்கள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் தான் என்பதில் ஐயமில்லை. தங்கள் கட்டுரையாவது ‘அவர்களின்’ கள்ள உள்ளத்தின் இருளைப் போக்கி ஒளியேற்றட்டும். ஏன் இன்னும் மற்ற மதங்களின் மீது அரசு ஆதிக்கம் செய்ய அரசு கூசுகிறது? அரசுத் தலைவரின் ஒரு சாராரின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி தானே?

  6. ஐயா

    இதை எவ்வாறு மாற்றுவது.சென்ற வருடம் நீதிமன்றத்தில் நடந்த தமிழ் வருடம் மாற்றப்பட்ட வழக்கில் கூட ஆட்சியாளர்கள் செய்தது சரிதான் என்று தீர்பாகிவிட்டது. வரும் வருட பிறப்பை இந்தியன் சூரிய வருட பிறப்பு அல்லது வேறு ஏதாவது சரியான பெயர் கொடுக்கபட வேண்டும். அந்த பெயர் கொடுக்கபட்டு வரும் வருடம் அவர்களின் அழிவு நெருங்கிகொண்டுருப்பதை அது தெரிவிக்க வேண்டும். உலகம் அழியபோகிறது என்று சில மேற்கத்தியர்கள் சொல்லுகின்றனர். அந்த உலகம் எதுவெனில் அவர்களின் ஏமாற்றும் திருட்டு உலகம். அவர்கள் அழிவை பற்றி அவர்களே சரியாகத்தான் கணித்திருக்கிறார்கள். அந்த நாளும் வெகுதொலைவில் இல்லை. அவர்களின் ஏமாற்று உலகம் அழியும் நாளே நல்லவர்களின் பொன்னாள்.

    விஜய்

  7. I am from srilanka…
    we celebrate today only pongal….
    we celebrate tamil new year in april 14.
    we don’t accept karunanidhi’s opinion…..
    he isn’t king…

  8. //ஏன் இன்னும் மற்ற மதங்களின் மீது அரசு ஆதிக்கம் செய்ய அரசு கூசுகிறது? அரசுத் தலைவரின் ஒரு சாராரின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி தானே?//

    கூச்சமும் கடியாது ஒரு மன்னாங்கட்டியும் கடியாது ஸார்! இவனுங்க அல்லாம் அன்கோ போட்டுகினானுங்க.

    கருப்பு, செவப்பு, வெள்ள, பச்ச அல்லாரும் காவிக்கு எதிர்ப்பு அப்டீன்ற கொள்கைல ஒன்னாயிட்டானுங்க. அதாவ்து திராவிடனுங்க, கம்யூனிஸ்டுங்க, கிறுஸ்து பார்டிங்க, முஸ்லீமுங்க அல்லாரும் சேந்துகினு இந்துக்களுக்கு ஆப்போஸிட்டா வேல செய்றானுங்க.

    அத்தொட்டு, தமில்நாட்ல எந்த திராவிட கட்சி ஆச்சிக்கு வந்தாலும் நமக்கு ஒரு வேலையும் ஆவாது. இன்னா புர்ஞ்சுக்கினீங்களா?

    வர்டா…

    மன்னாரு

  9. மறுமொழி இட்ட அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. திரு ஹரன், திரு தமிழ் செல்வன் ஆகியோர் பாராட்டுதல்களுக்கு ஏற்ற வண்ணம், நான் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்னும் ஊக்கம் கூடுகிறது. அன்னாருக்கும் என் நன்றி.

    பொங்கலன்றுதான் புத்தாண்டு என்று மக்கள் நினைக்கவில்லை என்றாலும், இன்று காலை வெளியான Vadapalani Talk படித்து அதிர்ச்சியாக இருந்தது. பொங்கலையும், புத்தாண்டையும் ஒன்றாகக் கொண்டாடுவதில் என்ன தவறு என்று நடுத்தர, மேல்மட்ட மக்கள் நினைப்பதாகவும், வடபழிநியாண்டவர் கோயிலிலும், சிவன் கோயிலிலும், இன்று புத்தாண்டென்று ஆயிரக்கணக்கான மக்கள் வருவர் என்றும் செய்தி வெளியாகியிருந்தது. பொங்கலன்று கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாயிருக்கும். அதைப் புத்தாண்டென்று வரும் கூட்டம் என்று திரிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. வருடப்பிறப்பு குறித்த அரசாணையை விரைவில் திரும்பப்பெறவில்லை என்றால், யோசிக்காத மக்களின் மெத்தனத்தையும், அறியாமையையும் பத்திரிக்கைகள் முதல் எல்லாவித வியாபாரிகளும், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு விடுவர்.

  10. ஜோதிடம் தமிழ் மண்ணின் முக்கியக் கண்ணாக இருந்திருக்கின்றது, சங்கத் தமிழ் படித்தவர் எவருமே இதை மறுக்க மாட்டார்கள். ஆனால் சங்கத் தமிழைக் கரைத்துக் குடித்தவர்கள் என்று பறை சாற்றிக்கொள்ளும் தலைவர்கள், மேம்போக்காகத்தான் சங்கத் தமிழைப் படித்திருக்கிறார்கள். அல்லது தங்களுக்கு வசதியானவற்றை, தாங்கள் விரும்பிய விதத்தில்தான் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

    எடுத்துக்காட்டாக, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – என்னும் இந்த ஒரு வரியை மட்டும் மேற்கோளிட்டு, இதுவே பண்டைய தமிழனின் நாகரீகம் என்பர். ஆனால் இந்த வரிகள் எழுதப் பட்ட இடம், பொருள் வேறு. இவை கர்ம வினையின் பாற்பட்டு, ஊழின் கண் அடித்துச் செல்லப்படும் வாழ்கை நிலையைப் புரிந்து கொண்டமையால் ஏற்பட்ட தெளிவின் வெளிப்பாடு. இதைக் கூறியவர் பூங்குன்றன் என்னும் காலக் கணிப்பாளர் எனப்படும் ஒரு ஜோதிடர்.

    தீதும், நன்மையும், சாதலும், நோதலும் பிறர் தர வாரா. அவை கர்ம வினையின் படியே ஏற்படுகின்றன. ஒருவர் பெரியோராக இருத்தலும், அல்லது சிறியோராக இருத்தலும், முன் பிறவியில் செய்த வினையின் படியே, எனவே, பெரியோரை வியப்பதும் இல்லை, சிறியோரை இகழ்வதும் இல்லை. மற்றவர் யாரும், நம்முடைய இன்ப துன்பங்களுக்குக் காரணமாகாது, நாமே நம் நிலைக்கு காரணம் ஆகையால், எல்லாரும் நமக்கு ஒன்றுதான். அதனால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் தத்துவக் கருத்து கொண்டது இப்புறப் பாடல்.

    இந்தத் தத்துவத்தின் அடிப்படை, ஜோதிடம் தரும் முக்கால அறிவு. இந்த அறிவு வேதாந்தம் கூறும் கருத்து. ஸ்திதப் ப்ரஞன் என்று கீதையில் கண்ணன் கூறுவது. இதையெல்லாம் காணாது, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர்கள் கொண்ட நாகரீகம் என்று மட்டும் சொல்லி, அந்த நாகரீகத்திற்கு ஆணி வேரான வேதாந்தத்தின் வழியே வாழ்ந்த வாழ்கையை மறைப்பது ஏமாற்று வேலைதான்.

    பாடலின் இக்குறிப்பிட்ட பகுதிக்கு உரை எழுதிய உரை ஆசிரியர் (டா. உ.வே. சா. அவர்கள் கண்டெடுத்த பழைய உரை) ” உயிர் ஊழின் வழியே படுமேன்பது, நன்மைக் கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தோம் ஆகலின்..” என்று நன்மை எது, தீமை எது என்னும் கூறுபாடுகள் அறிந்தோர் எழுதிய நூல்களில் இருந்து தாம் கற்று அறிந்தோம் என்று புலவர் கூறுவதால், கணியன் பூங்குன்றனார் காலத்து முன்பிருந்தே இந்த வேதாந்தக் கூறுபாடு அறிந்து, தெளிந்த மக்களாக நம் பண்டைய தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. இந்தக் கருத்தைப் புறக்கணித்தது, தமிழுக்காக வாழ்வதாகச் சொல்லும், தமிழ் வியாபாரிகள்தான்.

    நுண்ணிய, அருமையான ஜோதிடக் கருத்துக்கள் பல சங்கத் தமிழில் உள்ளன. சங்கத் தமிழில் காணப்படும் ஜோதிடக் கருத்தக்களை எழுத வேண்டும் என்பது என் குறிக்கோள்களுள் ஒன்று.அன்றைய தமிழர் அனைவருமே ஜோதிட அறிவு கொண்டிருந்தனர். அதிலும், பிறந்த நட்சத்திரத்தின் முக்கியத்துவம் தொல்காப்பியத்திலும், நடை முறை வாழ்க்கையிலும் சொல்லப்படுகிறது.

    இந்தக் கட்டுரை தொடர்பாக, இக்கருத்து இருக்கவே இதைப் பற்றி இங்கே எழுத விரும்புகிறேன்.
    ‘குடையும், வாளும் நாள் கோள்’ என்பது உழிஞ்சைத் திணை சூத்திரம்.
    நாள் கோள் பார்த்தலை சிலப்பதிகாரத்திலும், மாங்குடி கிழார் எழுதிய புறப் பாடலிலும் (24) காணலாம்.

    மாங்குடி கிழார் எழுதி இருப்பது சுவையாக இருக்கும். இவர் பாடிய பாண்டிய அரசனின் நாள் மீன், அதாவது அவன் பிறந்த நட்சத்திரம், நன்கு நிலைத்து சிறப்பாக இருக்கட்டும். அந்த அரசனது பகைவனது பிறந்த நட்சத்திரம் பட்டுப் போவதாக இருக்கட்டும், என்கிறார் புலவர்.

    பிறந்த நட்சத்திரம் மிக முக்கியம், அதன் அடிப்படையில்தான் நல்லதும் தீயதுமான பலன்கள் நடக்கின்றன என்பது ஜோதிடக் கருத்து. அதன் பொருட்டே அரசனும், தன்னுடைய எல்லா செயல்களையும் செய்வான். உதாரணமாக, அவன் போருக்குப் புறப்பட்டுச் செல்லும் நாள், அவன் பிறந்த நட்சத்திரம்படி நன்மை தரக்கூடியதாக இல்லை என்றால் (இதை ஜோதிடத்தில் தாரா பலம் என்பர்). அதற்கு முன்னால் வரக்கூடிய ஒரு நல்ல நட்சத்திரத்தன்று, அவனது குடை, வாள் போன்றவற்றை, பட்டத்து யானையின் மேலேற்றி, அரசனே செல்வது போன்ற விமரிசைகளுடன் எடுத்துச் சென்று வேறு ஒரு இடத்தில் வைப்பார். அரசனே அன்று போருக்குக் கிளம்பி விட்டாற் போன்ற ஒரு பாவனை அது. பிறகு என்றைக்குக் கிளம்ப வேண்டுமோ அன்று அரசன் போருக்குக் கிளம்புவான். இது குறித்த தொல்காப்பிய சூத்திரம், அதற்கு முன்னரே இந்த வழக்கம் இருத்திருப்பதால் எழுந்திருக்கின்றது. இந்த வழக்கத்தை மேற்கோளிட்டு சங்கப் பாடலிலும், சிலப்பதிகாரத்திலும் சொல்லப்பட்டுள்ளன.

    இதன் மூலம் தெரிவது என்னவென்றால், வரப் போகும் நேரத்தைப் பிறந்த நட்சத்திரம் சுட்டிக் காண்பிக்கும் என்ற ஜோதிட எண்ணம் அந்நாளில் இருந்திருக்கின்றது. உலகத்திற்குப் பிறந்த நட்சத்திரம் அசுவினி நட்சத்திரம். சூரியன், சந்திரன் உள்ளிட்ட எல்லா கோள்களும் அசுவினியில் இருந்த போதுதான், மக்கள் தொகுதியும், முதல் யுகமும் பிறந்தன. லக்னம் என்பது உயிர், சந்திரன் என்பது மனம், சூரியன் என்பது நிகழ்வுகள் என்னும் ஜோதிட அடிப்படையில், பிறந்த பாகையில் சூரியன் வரும் நேரமே உலக நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையாகும். உலகத்திற்குப் பிறந்த நாள் அந்த நேரமாதலால், சித்திரையில் வருடம் துவங்குகிறது.

  11. ஏன் தை மாதம் வருடப் பிறப்பாக இருக்கக் கூடாது என்று கேட்பவர்களுக்கு பதில் கொடுப்பதற்கு நிறைய செய்திகள் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

  12. மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மேடம். மனமார்ந்த நன்றி.

    //சங்கத் தமிழில் காணப்படும் ஜோதிடக் கருத்தக்களை எழுத வேண்டும் என்பது என் குறிக்கோள்களுள் ஒன்று.//

    உங்கள் குறிக்கோள் விரைவில் நிறைவேறட்டும். அதனால் எங்களுக்கும் பயன் உண்டே! (:-)))

    //விஜய்
    14 January 2010 at 12:49 pm

    சென்ற வருடம் நீதிமன்றத்தில் நடந்த தமிழ் வருடம் மாற்றப்பட்ட வழக்கில் கூட ஆட்சியாளர்கள் செய்தது சரிதான் என்று தீர்பாகிவிட்டது.//

    இல்லை திரு.விஜய். உயர் நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. வழக்கு நிலுவையில் தான் இருக்கிறது. திமுக அரசு தன் பக்கம் வலுவாக இல்லை என்பதால் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. எப்படியும் வரும் ஏப்ரல் (சித்திரை) மாதத்திற்குள் முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

    எவ்வழக்கிலும் ஹிந்துக்களுக்கு நியாயமாக தமிழகத்து நீதிமன்றங்களில் தீர்ப்பு வந்ததில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வெற்றி நிச்சயம்.

    அன்புடன்

    தமிழ்செல்வன்

  13. மிகவும் சிறப்பானதொரு பொக்கிசத்தை அளித்திருக்கிறீர்கள். தமிழ் கூறும் நல் உலகம் தங்களை போன்றவர்களை மட்டுமே எதிர்பார்க்கிறது. உலக தமிழர்களின் வழக்கத்தை ஒரு மாநிலத்தை ஆள்பவரால் எப்படி மாற்ற முடியும்? இந்த அரசாணை ஈழ தமிழர்களை கட்டுபடுத்துமா? நம் நாட்டில் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களை கட்டுபடுத்துமா? இந்த அரசாணை செல்லும் என சொன்ன நீதி மன்றம் இதை எல்லாம் கருத்தில் கொண்டதா?
    மேலும் தை முதல் தேதியை ஆண்டு முதல் நாளாக வைக்க சொன்னது நமது கிருஸ்தவ அன்பர்கள்தான் என்று நான் கருதுகிறேன். அவர்கள்தான் திருவள்ளுவரை கிருஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றி விட இந்த புதிய முறையை கொடுத்து அதற்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டும் விட்டார்கள். கிருஸ்தவர்களுக்கு சலாம் போடும் நமது கழக கண்மணிகளும் அதை அப்படியே ஏற்று முன் மொழிய வீரமணி போன்ற அடிவருடிகள் அதை வழி மொழிகிறார்கள்.
    இந்த கட்டுரை ஆசிரியர் கூறிய கருத்துக்கள் நம்மில் பெரும்பாலனவர்கள் அறியாதது. இன்னும் சொல்ல போனால் இதை கேள்வி பட்டதும் இல்லை. இதற்கு காரணம் நமக்கு சொல்லி தரவோ அல்லது அதை அறிந்து கொள்ளும் வாய்ப்போ இல்லாததே. உதாரணமாக என் பள்ளி கால தமிழ் ஆசிரியர் (அப்போது) ஒரு நாத்திகர். அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறை எதிர்ப்பை எங்களுக்கு போதித்தார். ஆனால் காலத்தின் கோலம் என்றே சொல்ல வேண்டும். அவர்தான் இப்போது எங்கள் ஊர் கிருஷ்ணர் கோவில் விழா கமிட்டி தலைவர்.
    தாங்கள் சொன்னது போல நாம் உணராமலே நம்மை காலம் தன் வழிக்கு திருப்பி விடுகிறது. எங்கள் ஊர் தமிழ் ஆசிரியரை திருப்பியதை போல.

  14. Excellent article. Thanks Madam. pinni pedal edukareenga…thorattum ungal pani. Learning a lot from your article and ofcourse from all articles in this site.

  15. /// எடுத்துக்காட்டாக, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – என்னும் இந்த ஒரு வரியை மட்டும் மேற்கோளிட்டு, இதுவே பண்டைய தமிழனின் நாகரீகம் என்பர். ஆனால் இந்த வரிகள் எழுதப் பட்ட இடம், பொருள் வேறு. இவை கர்ம வினையின் பாற்பட்டு, ஊழின் கண் அடித்துச் செல்லப்படும் வாழ்கை நிலையைப் புரிந்து கொண்டமையால் ஏற்பட்ட தெளிவின் வெளிப்பாடு. இதைக் கூறியவர் பூங்குன்றன் என்னும் காலக் கணிப்பாளர் எனப்படும் ஒரு ஜோதிடர் ////

    ஆசிரியருக்கு நன்றிகள். தங்கள் சேவை மகத்தானது.

    இதுபோலத்தான் இந்த வஸூதைவ குடும்பகம் என்ற ஒரு சமஸ்கிருத பதத்தையும் வைத்து எல்லோரும் அடிக்கும் ஜல்லி. ஏது என்ன என்று தெரியாதவர்களும், சமஸ்கிருதம் கிலோ என்னவிலை என்று கேட்பவர்களும், இந்துமததுவேசகர்களும் கூட இந்தியாவின் கலாசாரமாக சொல்வது இதைத்தான். ஆனால், இது என்ன வேதத்தில் உள்ளதா, மகாபாரதத்தில் உள்ளதா, என்ன ஆதாரம் என்று கேட்டால் முழிப்பார்கள். இது ஹிதோபதேசத்தில் (பஞ்சதந்திரம் என்று சொன்னால் புரியும்) வரும் ஒரு ஏமாற்று நரி சொல்வது (முதல் கதை – மித்ரலாபம்). அந்த கதையே இந்த வசுதைவ குடும்பகம் என்று பிறரை நண்பனாக எடுத்துக்கொள்ளகூடாது என்று சொல்வதுதான். இந்துக்கள் தன் தலையில் தாங்களாகவே மண் அள்ளிப்போட்டுக்கொள்ளும்போது சொல்லவேண்டிய மந்திரம் இது “வஸூதைவ குடும்பகம்”. இதை ஞாபகப்படுத்தியது உங்கள் பின்னூட்டம்.

  16. தை, ஆடி மாதங்களின் பெயர்கள் மற்றும் 60 வருடப் பெயர்களுக்கான விளக்கங்கள் அருமை.

    ஜோதிடம் வானியல் என்ற அறிவியல் துறையாக, அதாவது நாள்கள், கோள்கள் இவற்றைக் கண்டு ஆவணப் படுத்தி காலக் கணக்குக்கு உறுதுணை செய்யும் ஒரு துறையாகவே முன்பு இருந்திருக்கிறது. பின்னர் நாள், நட்சத்திரம் இவற்றை வைத்து எதிர்கால நிகழ்வுகளைக் கணிக்கும் ஒரு விஷயமாக வளர்ந்து, இன்றைக்கு முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த ஒரு துறையாக ஆகிவிட்டது என்று எண்ணத் தோன்றுகிறது.

  17. // ஜோதிடம் வானியல் என்ற அறிவியல் துறையாக, அதாவது நாள்கள், கோள்கள் இவற்றைக் கண்டு ஆவணப் படுத்தி காலக் கணக்குக்கு உறுதுணை செய்யும் ஒரு துறையாகவே முன்பு இருந்திருக்கிறது. பின்னர் நாள், நட்சத்திரம் இவற்றை வைத்து எதிர்கால நிகழ்வுகளைக் கணிக்கும் ஒரு விஷயமாக வளர்ந்து, இன்றைக்கு முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த ஒரு துறையாக ஆகிவிட்டது என்று எண்ணத் தோன்றுகிறது.//

    இல்லை திரு ஜடாயு.

    Space – time தொடர்பு பற்றி எல்லோருக்கும் தெரியும். Big Bang தியரியின் மூலம் இதைப் பலரும் அறிந்திருக்கிறோம். ஆனால் அதனுடன் தொடர்பு கொண்ட மூன்றாவது பொருள் ஒன்று உண்டு. அது events எனப்படும் நிகழ்ச்சி. Big bang ஆகி முதல் வினாடியில் இது நிகழ்தது, இரண்டாவது வினாடியில் இது நிகழ்ந்தது என்று சொல்லும் அறிவியலார், அப்பொழுது இருந்த இடம், காலம் பற்றி மட்டும் குறிப்பிடுகின்றனர். அந்த நிகழ்ச்சியும், அந்த இடம் – காலம் – பற்றியது தானே? நம் கலாக்சியைப் பின் நோக்கினால், ஒரு நிகழ்வைக் கொண்டே அப்போழ்து இருந்த இடம் – காலம் பற்றி சொல்ல முடியும் அல்லவா? அது தான் ஜோதிடத்தின் அடிப்படை. Space- Time – Events என்னும் மூன்றையும் கூட்டிக் கணிக்கும் அறிவே ஜோதிடம். ஒரு தாமரை இலையை ஊசியால் துளைக்க ஆகும் த்ருதி’ எனப்படும் நேரம் முதலாக, அது நடைபெறும் இடம், அதனால் நிகழும் நிகழ்ச்சியைப் பற்றிக் கணிப்பது ஜோதிடமாகும். அதனால் இது நம்பிக்கை சார்ந்தது அல்ல.

    ஜோதிடக் கணிப்பில் தவறுகள் இருந்தால், அது, ஜோதிடரின் தவறே தவிர, ஜோதிடத்தின் தவறு அல்ல.

  18. தமுள் நாட்டுல, 6 கோடி இந்து சனம் கீது, ஆனா கண்டி இந்து மதத்து மேல நக்கல் பண்ணிகினு கீரான் என் தலைவன். அது ஏன்னு நின்சுப் பாத்தியா?

    ஏன்னா, சனத்துக்கு சரியான் ஆனமீகம் போய் சேரலை. அது உன்க்கு புரிலை. ஏனா கண்டி ஆன்மீகம் நா இன்னா னே உன்க்கு தெரிலை, அதுனால தான் போலிக்கு எல்லாம் ஜால்ரா போட்டுகினு அலயுற! அத்தை புரிஞ்சுக்கோ முதல்ல! அத்தை புரிஞ்சிக்குனு எல்லா சனத்துக்கும், அருமையான ஆன்மீகத்தைக் கொண்டு போய் சேக்கறத பாரு.

    வண்டை, வண்டையா பேசுறது, உண்மையை சொல்லுரவனை மெரட்டுறது, கட்டையை போடுறது…. இதெல்லாம் தான் இந்து மத வழினு நினக்காதே. எனக்கு மதராஸ் தமில் சரியா வல்லை. ஆனாலும் புரிஞ்சிருக்கும்னு நினக்கிறேன்.

    வர்டா…

  19. நீங்கள் எக்கச்செக்க சங்க இலக்கிய அத்தாட்சிகள் அடுக்கிக்கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனால் ஒரு திராவிட சிங்கமும் இதனைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதுவதாக இல்லை. தையில் தமிழ் புத்தாண்டை வைத்துத் தைக்கத்தான் பார்க்கிறார்கள்.

  20. Dear madam,

    varuda pirappai thai madam vaithadu unmaileye migavum kandikka thakkadu. latchoba latcham makkal unarvugalodu vilayadi kondirukkirargal. Makkalukku erkenave vilaivasi prachanai.

    Inda vazhakkam kalapokkil nalindu, pudu varuda kondattam, en padinainthu dinangalil iru murai kondada vendum, adanal evvalavu selavagiradu enru kanakku pottu, naladaivil grigarian calender-i pinpatri january mudal thediyaiye kondaduvargal. makkalin kalakala thonmai azhindu padum. nalu thalaimuraiyinar ippadi kondadinal, ellam onrudan enru makkal ninaippargal. idu mella mella indu samudayathirku adikka padum savu maniye anri, veru illai.thangali ponnana ezhuthirkum, adan pinnal ulla aaraichikkum mikunda vanakkangal.

    shanthi ravichandran

  21. மேடம் உங்கள் எழுத்துக்களும் கருத்துக்களும் ஆராய்ச்சிகளும் திகைக்க வைக்கின்றன.
    பணி தொடர வாழ்த்துக்கள்
    ஆனால் ஒரு மிகபெரிய வருத்தம் என்னவென்றால் இக்கருத்துக்கள் வெகுஜன மக்களை சென்றடையாது.
    குறைந்தபக்ஷம் இது தொடர்பான வழக்கிற்கு பயன்படும்படி செய்து கொடுங்கள்
    நன்றி

  22. Excellent Articles. Can find many related things in many areas according to Jyotisha !! In Srirangam Temple entrance walls and in Srivilliputthur Andal Temple entrance walls, Madurai Meenakshi temple entrance walls are adorned with the greetings of HR&CE Board and CM of TN for Tamil Putthandu and Thai Pongal which are pasted to continously confusing poor village people who are entering into the temple and young children which can adopt these kind of useless notices and postures and grew up in their life with wrong concept. St.Joseph Church in Tiruchy also celebrated Thai Pongal festival and Tamil New year day with grand mass by as usual copy con method and confusing converted christians.
    Your article exposed many things scientifically (i won’t want to discriminate or differentiate Jyothisham from Science as both are synonymous to each other). Again am seeing Kalaingar TV is conducting Karutthu Vivadam for Thaali issue. Why they are not taking the issue of Kerala Church and Sex Scandal case or changing rings in church or naming Subramani or Thangavel or Subhatra to Christian child in Evangelical Churches by Pastors and Priests.

    Thangalin aazhndha matrum tholai nokkudaiya intha arivupoorvamaana katturaikku aaiyiram vanakkangal. Vainava Samayaththil….. Azhwargalum,Vainava Periorgalum avargalin pirantha natchatirangalum neengal kuripiturupathupol porunthuginrana
    பௌர்ணமி காணும் நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்கள். அவையே, அந்த மாதப் பெயர்களாக ஏற்கப்பட்டுள்ளன … (1st article on this subject)
    சித்திரை – சித்திரை நட்சத்திரத்தில் – Madhurakavi Aazhwar
    வைகாசி – விசாகத்தின் – Nammazhwar
    ஆடி – உத்திராட – Aalavandhaar – Ramanujaa’s Guru
    புரட்டாசி – பூரட்டாதி – Koil Annan – One of the divine Guru comes in the hereditary of Mudaliaandan – Ramanujaa’s Disciple
    கார்த்திகை – கார்த்திகை – Thirumangai Aazhwar
    மாசி – மகம் – Manakkal Nambi – Divine Guru of Sri Alavandaar (On this particular day, still we can see the sun’s light worshipping the feet of Lord Sri Krishna painted on the left side top most wall of Sri Garudan Sannidhi( very big) in Srirangam)
    பங்குனி – உத்திர – Srirangam Thayaar

    There must be some divine connection with these month and stars, and that’s why these great people are for us and for Tamil. Who knows the significance or secret of God’s Mind for these things?

  23. நல்ல ஆய்வுக் கட்டுரை. தங்கள் சிறந்த பணி மேலும் தொடரட்டும்.

  24. அருமையான கட்டுரை தொடர். நன்று. இருந்தாலும் மீடியாவால் வழி நடத்தப் படுகிற இன்றைய நாகரீகம் – அட்சய திருதியையும் கொண்டாடும் – தையில் புத்தாண்டும் கொண்டாடும். அரசாங்கமே மறுபடியும் சித்திரையில் புத்தாண்டு என்று மாற்றினால் தான் உண்டு.

  25. அருமையான நீண்ட ஆய்வுக்கட்டுரை. கருநாக்குநிதியின் ஏஜென்ட்கள் என்ன பதில் சொல்கிறார்கள் பார்ப்போம். இதில் சில ஜோதிட சமாச்சாரங்கள் புரிந்துகொள்ள கடினமாகவும் இருந்தன.

    உயர் நீதி மன்றத்தில் எதிர்வழக்கு தோற்று விட்டதாகவே எனக்கு நினைவு. மேலும் நீதிபதி ‘தேவையற்ற, நேரத்தை வீணாக்கும் வழக்கு’ எனச்சொல்லி 10,000 அபராதமும் தண்டனையாக அளித்தார்.

  26. மிகவும் அருமையான கட்டுரை.
    நீங்கள் இதற்காக செய்த ஆராய்ச்சியும் உங்கள் முயற்சியும் பாராட்டுதலுக்கு
    உரியது.
    நாம் ஹிந்துக்கள் முழித்து கொண்டிருக்கணும்.
    இல்லையெனில் தலைக்கு மிளகாய் அரைத்து விடுவார்கள்.
    நாம் நமது எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்
    உங்கள் பணி வளர்க.

  27. மிக அருமை ஜெயஸ்ரீ அவர்களே. இன்றுதான் இரு பகுதிகளையும் படித்தேன், மிக தெளிவாக, தரவுகளுடன் நிருபித்து இருக்கிறீங்க நன்றிகள் பல.

  28. கேரளத்தில் ஒவ்வொரு மாதத்தையும் அதன் ராசியின் பெயரால்தான் (மேஷ மாசம் சிம்ஹா மாசம் என்று ) அழைக்கிறார்கள்.
    நான் வேறொரு பதிவில் தெரிவித்த கருத்து இதுதான்: அரசுக்கு தனது தொழில் நடத்தும் ஆண்டு எது என்பதைத்தான் முடிவு செய்ய உரிமை இருக்கிறது. யார் எந்தப் பண்டிகையை எப்பொழுது எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதைச் சொல்ல இவர்கள் யார்?

  29. Excellent Article. It impressed me lot. I have few doubts. Kindly clarify.
    1. Why no Tamil scalars were objected this Government order?
    2. I know, Saiva Adhinam’s are doing excellent works in Bhakthi Tamil. Why no Adinam oppose this order?
    3. Is it mentioned in our Thirumurai’s or in Allvar Pasurangal?

    Somasundaram

  30. Dear Mr Sundaram,

    For the first two questions, only Tamil scholars and Saiva adheenam people have to reply.
    For the 3rd question let me answer.

    திருமுறை, ஆழ்வார்கள் பாசுரத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?
    காலக் கணிதத்தையா? அல்லது பக்தி, ஞான விஷயங்களையா?
    சொல்லுங்கள்.

    நோய் வந்தால் மருத்துவரைப் போய்ப் பார்க்கிறோம், மருத்துவ விஞ்ஞானியைக்கூட அல்ல.
    அது போல ஒவ்வொரு விஷயமும் எங்கே கிடைக்குமோ அங்கே தான் தேட வேண்டும்.
    அப்படிப்பார்க்கையில், சங்கப் பாடல்களிலும், பக்தி இலக்கியங்களிலும், வருடம் என்றைக்குத் தொடங்கும் என்ற செய்திகள் கொடுக்கப்படுவதற்கு அவை காலத்தைப் பற்றிப் பேசும் புத்தகங்கள் அல்ல. அப்படியும் நமக்கு, சில செய்திகள் கிடைத்துள்ளன என்பது ஆறுதல் தருவது.
    திருவோணத்தில் திருமலை அப்பனுக்கு உத்சவம், பங்குனி உத்திரத்தில் அரங்கனுக்கு உத்சவம் என்று, பாடப் படும் இடத்துக்கேற்ற செய்திகள் பிரபந்தத்திலும் உள்ளன. அகநானுரிலும் உள்ளன.

    நீங்கள் கேட்கலாம், தொல்காப்பியத்தில் கூட அதை பற்றிச் சொல்லப்பட வில்லையே என்று. தொல்காப்பியம் பருவங்கள், பொழுதுகள் பற்றிச் சொல்கிறதே, ஏன் வருடம் பற்றிச் சொல்லவில்லை என்று நினைக்கலாம்.

    தொல்காப்பியத்தின் குறிக்கோள் காலக் கணக்கு கூறுவது அல்ல. செய்யுள் யாப்பதற்குத் தேவையான செய்திகளைக் கூறுவதே தொல்காப்பியத்தின் நோக்கம்.
    தொல்காப்பியம் கூறும் விஷயங்கள் மூன்று, அவை, முதல் (நிலம்), கருப்பொருள், உரிப்பொருள்.
    செய்யுளில் பேசப் படும் பொருள் நிலம், பருவம் போன்றவை குறித்தும், அவற்றின் அடிப்படையில் மக்கள் வாழ்க்கை இருக்கும் விதத்தைப் பற்றியும், அவை மாறுவதால், மாறுபடும் செயல் பாடுகளைக் குறித்தும் இருக்கவே, அங்கு பருவ நிலை குறித்த பொழுதும் சொல்லப்படுகின்றன.

    வருடங்கள் குறித்த காலக் கணிதம் வேண்டுமென்றால், பழந்தமிழ் சோதிடப் புத்தகங்களில் பார்க்க வேண்டும்.
    அவை கூறும் வருடம் சூரியன் மேடத்தில் துவங்கும் பயணம் தான்.

    வருடம் என்றால், சூரியனின் சுற்று.
    மாதம் என்றால், சூரியனும், சந்திரனும் சேர்ந்தவுடன் ஆரம்பிப்பது.
    நாள் என்றால் சூரியனும், பூமியும் சேருவது.
    சூரியனின் முதல் கதிர்கள் பூமியைத் தொடும் நேரம் (உதயம்) நாள் ஆரம்பிக்கும் நேரம்.
    இவைதான் அடிப்படைக் காலக் கணக்கு.

    எந்த சோதிடப் புத்தகத்தைப் பார்த்தாலும் அது சொல்லும் கணக்கு இவ்வாறு:-
    சூரியன் மேடத்தில் ஆரம்பித்து, மீண்டும் மேடத்தை அடைவது = 1 மனித வருடம்.
    30 மனித வருடம் = 1 பித்ரு வருடம்
    12 பித்ரு வருடம் = 1 தேவ வருடம்
    12,000 தேவ வருடம் = 1 சதுர் யுகம்

    சதுர் யுகம் ஆரம்பித்த போது , சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், (ராஹு, கேது நீங்கலாக) மேடம் பூஜ்யம் பாகையில் இருந்தன. அதுவே மனித வர்கத்தின், யுக ஆரம்பத்தின் பிறந்த நாள்.

    நாம் நம் பிறந்த நாளை- இவ்வுலகில் பிறந்து, முதல் மூச்சு விட ஆரம்பித்தவுடன் கணக்கிடுவது போல, வருடக் கணக்கும், சதுர் யுகம் ஆரம்பித்த அன்றிலிருந்து கணக்கிடப்பட்டு வருகின்றது. இதில் தமிழன் இதை வைத்திருந்தான, இல்லை தெலுங்கன் அதை வைத்திருந்தான் என்று எல்லாம் பேசுவது, நம் அறியாமையின் விளைவாக வரும் பிதற்றல்கள்.

    இந்த காலக் கணக்கு இந்துக்கள் – இந்த நாவலம் தீவு முழுவதும் வியாபித்திருந்த இந்துக்கள், அது மட்டுமல்ல, அசுரர்கள் நீங்கலாக அனைத்து உலக மக்களும் பின்பற்றியது.

  31. ஆரிய திராவிட வாதம் பேசுகிறவர்கள் ,ஆரியர் தான் இந்த அறுபது வருட பெயர்களை நம்மீது திணித்தனர் என்பது உண்மையானால் தமிழ் நாட்டில் தான் இந்த தமிழ் பெயர்களில் வருடங்கள் அமைந்திருக்கின்றன்.வேறு மாநிலங்களில் இந்த பெயர்கள் இல்லையே, அப்படியென்றால் ஆரியர் தமிழ் நாட்டில் மட்டும் தான் இருந்துள்ளனரா?வியாபாரத்திற்கு என்ன வேண்டுமானுலும் செய்வார்கள் நமது தமிழ் பகுத்தறிவு வியாபாரிகள்

  32. வியாழன் கிரகத்தின் வருடங்களின் பெயர் என்று எல்லா சோதிட சித்தாந்தங்களிலும் கொடுக்கப்பட்டுள்ள பிரபவ முதலான அறுபது வருடப் பெயர்கள், தமிழ் பேசும் நிலங்களில் சூரிய வருடங்களுக்கு அமையும் என்று சொல்லும் ஒரு பிரமாண நூல் உள்ளது என்று சமீபத்தில் அறிந்து கொண்டேன்.

    வராக மிஹிரர் எழுதிய ஒரு நூல் ‘பஞ்ச சித்தாந்திகா’ என்பது. ஐந்து சித்தாந்தங்களைக் கொண்டது இது. இதில் முதன்மையான சித்தாந்தம் ‘பிதாமஹ சித்தாந்தம்’ என்பது. பிதாமகர் என்பது படைப்புக் கடவுளான நான் முகப் பிரமனைக் குறிக்கும். படைத்ததோடு மட்டுமல்லாமல், நாம் வேறு ஒரு மறு மொழியில் கூறியுள்ளது போல space – time – events அடிப்படையில், எப்பொழுது என்ன நடக்கும் என்று காலக் கணிதமாக சோதிடத்தை, பிதாமகர் என்னும் பிரமன் எழுதியுள்ளார். இதில், பிரபவ என்னும் வருடப் பெயர்களைப் பற்றிய விவரங்களும் வருகின்றன. வியாழன் கோளின் சுற்றுக்குப் பெயரான இவை, பாரதத்தின் தென் பகுதியில் சூரிய வருடங்களுக்குப் பெயராக வழங்கப் படுகிறது என்ற ஒரு குறிப்பும் இந்த சித்தாந்தத்தில் காணப் படுகிறது.

    18 சித்தாந்தங்களில் முதலாவதும், பழமையானதுவுமான இந்த சித்தாந்தத்தில் சொல்லப் பட்டிருப்பதால், என்று ஆரம்பித்தது என்று சொல்ல முடியாமல், வெகு காலமாகவே பிரபவ முதலான பெயர்கள், பாரதத்தின் தென் பகுதியில் உள்ள தமிழ் நாட்டில் சூரிய வருடங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

  33. சம்ஸ்க்ருதம் – தமிழ் ; இரண்டிற்கும் உள்ள உறவு ‘Matter’ – ‘Anti-Matter’ உறவு தான்; ‘தமிழ்’ என்று கூறிக்கொண்டு தகாத காரியங்களைச்செய்தால்தான், இவ்வுலகை, கலியுக உலகை, முடிவுக்குக் கொண்டு வர முடியும் ; எனவே தான், தமிழ் என்று கூறிக்கொண்டு, ராமன் இல்லை, ராமர் பாலம் இல்லை என்று, தமிழை வைத்துப் பிழைத்து, தமிழையும், உலகையும் முடிவுக்குக் கொண்டு வர தமிழ் என்ற ஒன்றும் அதை தவறாகப் பயன் படுத்தும் கருணாநிதிகளும் இருக்க வேண்டும்; இப்போது புரியும் “தமிழ்’ ஏன் எப்படி, எவ்வாறு ‘ஆண்டி-மேட்டர்’ என்று.

  34. matter – anti matter என்று என்னால் தமிழ்- சமக்ருதத்தைப் பார்க்க முடியவில்லை. matter and anit matter can not co exist. They will annihilate each other.

    தமிழும், சம்ஸ்க்ருதமும் ஒன்றை ஒன்று அழிக்கவில்லை: அவை அழிக்கப் பிறந்தவையும் அல்ல. அவை வழக்கு மொழியாகவும், வித்தை மொழியாகவும் பாரதமெங்கும் கோலோச்சி நின்றன. அவற்றை அழிக்கப் பிறந்த தீய சக்திகள் இன்று பலம் பெற்றுள்ளன. அந்த சக்திகள் தமிழை வைத்து வியாபாரம் செய்கின்றன. அது தெரியாமல், தமிழ் பேசும் மக்கள் மயக்கத்தில் உள்ளனர்.

    அவர்களால் தமிழை அழிக்க முடியாது. அவர்கள் அழிப்பது தமிழ் காட்டும் உயர்ந்த கலாசாரத்தை.

    ஒரு சமீபத்திய உதாரணம்.
    குஷ்பூ கேசில் திருமணம் செய்யாமலேயே ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வது அவர்கள் உரிமை என்று சொல்லப்பட்டுள்ளதே, ஒரு வார்த்தை இவர்கள் வாயிலிருந்து வந்ததா? தமிழுக்குத் தொண்டு செய்கிறேன் என்று வள்ளுவரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே, அவர் சொன்ன வாழ்கை முறையா இது?

    சேர வேந்தன் கோவில் கட்டி கும்பிட்ட தெய்வத்தை, தெருவோரம் நிற்க வைத்து, வெய்யிலும், மழையும், காக்கையின் எச்சமும் பெய்ய வைத்து, அதுவே தாங்கள் தமிழுக்குச் செய்யும் தொண்டு என்று முழக்கமிடுகிறார்களே, அந்தக் கண்ணகி இப்படிப்பட்ட ஒரு கலாச்சார இழுக்கைத் தாங்குவாளா? சுட்டுப் பொசுக்கிட மாட்டாளா?

    இப்படிப்பட்ட ஒரு வழக்கு தமிழ் நாட்டிலிருந்து வந்தது என்பது வெட்கமாக இல்லை? தமிழ்க் கலாச்சாரத்தை அழிய விடுவதும் கொலைதான். தெரிந்து செய்யும் கொலை. இவர்கள் செய்த முதல் கொலை தெய்வத்தை, மக்கள் மனத்திலிருந்து தெய்வ எண்ணத்தைக கொன்றது. இப்பொழுது தமிழ்க் கலாசாரத்தைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.
    தமிழன் புரிந்து கொள்ள வேண்டும்.

  35. மேட்டர்——–ஆன்டி-மேட்டர்
    அணு ——— எதிர் அணு
    தெய்வ சிந்தனை ——— தெய்வ நிந்தனை
    வடபுலம் ———– தென்புலம்
    ஆரியம் ———- திராவிடம்
    சுவர்கவழி ———- யமவழி
    கிருஷ்ணன் ——– சிசுபாலன்
    பாண்டவர்கள் ——– கௌரவர்கள்
    ஆத்திகம் ——– நாத்திகம்
    ஆழ்வார்கள், நாயன்மார்கள், சங்ககாலப்புலவர்கள் மற்றும் அவர்கள் படைப்புக்கள் ——— திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்
    கிருபானந்த வாரியார் ——- பனகல் ராஜா மற்றும் ஜஸ்டிஸ் கட்சியினர்
    மேஷ ஆடு சேரலாதன் —— மெக்கா சென்ற சேரமான் பெருமாள்
    ஆரியத்தில் தெய்வ நிந்தை கிடையாது ——– திராவிடத்தில் , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவத்தில் தெய்வ நிந்தனை உண்டு.
    “தமிழ் திருவள்ளுவரை, திருக்குறளை”, “கன்னட சர்வக்ஜரை, கங்கை நிந்தனையை”, “மெக்கா சென்ற மலையாள சேரனாடனை” இது போன்ற பல எதிர் அணு விஷ(ய)ங்களை, திராவிடத்தில் தான் காண முடியும் மற்றும் இவற்றைத்தான் கருனாநிதிக்கள், மக்களிடமிருந்து தெய்வத்தைப் பிரிக்க உபயோகப்படுத்த முடியும்; சமஸ்க்ருதத்தை அடிப்படையாகக் கொண்ட, வட புல மொழிகளைக கொண்ட மக்களிடையே, தெய்வப் பிரிவை ஏற்ப்படுத்த முடியாது; மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது, இறந்தவரைக் கொண்டு செல்லும் போது என்று எப்போதும் வார்த்தையில் ராம் ராம் தான். தென்புலத்தார்க்கு, ஆங்கிலம் நன்றாகப பேசும் திறமையும், திராவிடத்தின் எதிர் அணு குணம் தான்.

  36. வானவியல் விஞ்ஞானத்தை உணர்ந்தரியக் கூடிய அனைவருக்கும் புது
    “விக்ருதி வருடபபிறப்பு’ வாழ்த்துக்கள்.
    திதி – அமாவசை
    வாரம் – புதன்
    நட்சத்ரம் – ரேவதி
    யோகம் – வைத்ருதி
    கரணம் – நாகவம்

  37. ” இளவேனில் என்பது சித்திரை; வைகாசி என்பது, இங்கே வைகாசி என்று சொல்லாமல், இடபம் என்று சாத்தனார் கூறியுள்ளது, ”

    நீங்கள் சொல்லும் இளவேனில் கால தை மற்றும் மாசி மதங்களை குறிக்கும். உங்களின் அடிப்படை வாதமே தவறு.

    1.இளவேனில் – தை – மாசி மாதங்கள்
    2.முதுவேனில்-பங்குனி – சித்திரை மாதங்கள்
    3.கார்-வைகாசி – ஆனி மாதங்கள்
    4.கூதிர்-ஆடி – ஆவணி மாதங்கள்
    5.முன்பனி-புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்
    6.பின்பனி–கார்த்திகை – மார்கழி மாதங்கள்

  38. வணங்கத் தகு ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே !

    சித்திரை வருடப் பிறப்பைத் தை வருடப் பிறப்பாக மாற்ற விரும்புவோர் வைக்கின்ற வாதங்களை ஒவ்வொன்றாக எடுத்துவைத்து, அவற்றுக்கு எதி வாதங்களை மிக அழகாக அடுக்கியுள்ளீர்கள்.

    தமிழகத்தின் மக்களுள் ஒரு பகுதியினரை, நல்ல செய்திகளைக் காது கொடுத்துக் கேட்கவும் படிக்கவும் கடுகளவும் பொறுமையில்லாதோராக மாற்றம் செய்துள்ள பெரு(சிறு)மை இங்குள்ள போலிப் பகுத்தறிவுவாதிகளுக்கு உண்டு.

    இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் படிக்கிற பெரும்பகுதி மாணவர்களுக்கு அவர்கள் வாழும் ஊர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் எதுவும் தெரியவில்லை; இராமன், இராமாயணம் இன்னபிற செய்திகளைப் பற்றியெல்லாம் கடுகளவுகூடத் தெரியவில்லை; திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட நற்றமிழ் ஆக்கங்களும் தெரியாது; அவை வீசை என்ன விலை என்று கேட்கிறார்கள்.

    இந்த நிலை தானே இவர்கள் (போலிப் பகுத்தறிவுவாதிகள்) விரும்பிய நிலை ? அந்த வெற்றிடங்களில் இவர்கள் விடும் புரட்டுக் கதைகள் தான் எடுபடுகிறது.

    வருடப் பிறப்பை மட்டும் அல்ல; பாரத நாட்டின் மற்ற பல நெறி முறைகள், பழக்க வழக்கங்களையும் ஒரு தரப்பினர் கேலியாகவும் குதர்க்கமாகவுமே பேசுவதும் பரப்புவதும் தொடர்கிறது. ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி இவர்கள் செயல்படுவதால்தான், சரியான கோணத்தில் உண்மைகளை வெளியிட வாய்ப்பே கிடைக்கிறது. இல்லாவிட்டால் இங்கு உண்மைகளிக் கேட்க யார் ஆயத்தமாக இருக்கிறார்கள் ?

    உங்கள் உழைப்பை வணங்குகிறேன்.

  39. வணங்கத் தகு ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே !

    சித்திரை வருடப் பிறப்பைத் தை வருடப் பிறப்பாக மாற்ற விரும்புவோர் வைக்கின்ற வாதங்களை ஒவ்வொன்றாக எடுத்துவைத்து, அவற்றுக்கு எதிர் வாதங்களை மிக அழகாக அடுக்கியுள்ளீர்கள்.

    தமிழகத்தின் மக்களுள் ஒரு பகுதியினரை, நல்ல செய்திகளைக் காது கொடுத்துக் கேட்கவும் படிக்கவும் கடுகளவும் பொறுமையில்லாதோராக மாற்றம் செய்துள்ள பெரு(சிறு)மை இங்குள்ள போலிப் பகுத்தறிவுவாதிகளுக்கு உண்டு.

    இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் படிக்கிற பெரும்பகுதி மாணவர்களுக்கு அவர்கள் வாழும் ஊர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் எதுவும் தெரியவில்லை; இராமன், இராமாயணம் இன்னபிற செய்திகளைப் பற்றியெல்லாம் கடுகளவுகூடத் தெரியவில்லை; திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட நற்றமிழ் ஆக்கங்களும் தெரியாது; அவை வீசை என்ன விலை என்று கேட்கிறார்கள்.

    இந்த நிலை தானே இவர்கள் (போலிப் பகுத்தறிவுவாதிகள்) விரும்பிய நிலை ? அந்த வெற்றிடங்களில் இவர்கள் விடும் புரட்டுக் கதைகள் தான் எடுபடுகிறது.

    வருடப் பிறப்பை மட்டும் அல்ல; பாரத நாட்டின் மற்ற பல நெறி முறைகள், பழக்க வழக்கங்களையும் ஒரு தரப்பினர் கேலியாகவும் குதர்க்கமாகவுமே பேசுவதும் பரப்புவதும் தொடர்கிறது. ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி இவர்கள் செயல்படுவதால்தான், சரியான கோணத்தில் உண்மைகளை வெளியிட வாய்ப்பே கிடைக்கிறது. இல்லாவிட்டால் இங்கு உண்மைகளைக் கேட்க யார் ஆயத்தமாக இருக்கிறார்கள் ?

    உங்கள் உழைப்பை வணங்குகிறேன்.

  40. ” உதாரணமாக என் பள்ளி கால தமிழ் ஆசிரியர் (அப்போது) ஒரு நாத்திகர். அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறை எதிர்ப்பை எங்களுக்கு போதித்தார். ஆனால் காலத்தின் கோலம் என்றே சொல்ல வேண்டும். அவர்தான் இப்போது எங்கள் ஊர் கிருஷ்ணர் கோவில் விழா கமிட்டி தலைவர்.
    தாங்கள் சொன்னது போல நாம் உணராமலே நம்மை காலம் தன் வழிக்கு திருப்பி விடுகிறது. எங்கள் ஊர் தமிழ் ஆசிரியரை திருப்பியதை போல.”

    அன்புள்ள எஸ் சுரேஷ் குமார் ,

    அறுபதாம் ஆண்டுகளில் நாத்திகம் பேசி, பிரச்சாரம் செய்த பல குடும்பங்கள் இன்று ஆத்திகத்துக்கு மாறிவிட்டன. அவர்களில் உங்கள் தமிழாசிரியரும் ஒருவர். அவ்வளவுதான்.

  41. நீங்கள் கூறிய விளக்கங்கள் வாதத்திற்கு அருமை ஆனால் தமிழருக்கு புது வருடம் என்பதே கிடையாது ஏனென்றால் இது கல் தோன்றா மண் தோன்றிய காலத்து முன் தோன்றிய மூத்தகுடி.தை திருநாளே அவனுக்கு எல்லாம்…..இது கருணாநிதி சொன்னதால் அல்ல வழக்கத்தில் இருந்ததால்

  42. பாசமிகு ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களுக்கு நன்றி. நம் வருடபிறப்பு சித்திரையில் தான் ஆரம்பம் என்று தெளிவாக கூறிவிட்டீர்கள். ஆனால் நம் மக்களோ ஜனவரி 1யை தான் தமிழ் வருடபிறப்பு போல கொண்டாடி வருகிறார்கள் . ஏன் மக்கள் புத்தி கெட்டு திரிகிறார்கள் என் தெரியவில்லை. அந்த நாளில் இரவு 12.00 மணிக்கு சில கோவில்களையும் திறந்து வைத்துகொண்டு இவர்கள் அடிக்கும் கூத்துகளை என்னவென்று சொல்வது. இதற்கு முடிவு தான் என்ன. உலகமே அழிந்து புதியதோர் தமிழ் உலகம் தோன்றினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்த வரை மேநாட்டு கலாச்சாரங்களும், ஆபிரகாமிய மதம்களும் வேரோடு அழிந்து விட வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு ஒரு பெரிய பிரளயமே தோன்றினால் கூட தவறு இல்லை. தாயாகிய தமிழும் தந்தையாகிய பிராகிருதமும், குருவாகிய சமஸ்கிருதமும் மீண்டும் புத்துயிர் பெற்று, கலாச்சாரங்களும், பாரத பண்பாடும் புத்துயிர் பெற்று புதியதோர் சமுதாயம் இப்புவியில் தோன்றி செழிக்க இறைவனை வேண்டுகிறேன்.

  43. பாசமிகு ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களுக்கு நன்றி. நம் வருடபிறப்பு சித்திரையில் தான் ஆரம்பம் என்று தெளிவாக கூறிவிட்டீர்கள். ஆனால் நம் மக்களோ ஜனவரி 1யை தான் தமிழ் வருடபிறப்பு போல கொண்டாடி வருகிறார்கள் . ஏன் மக்கள் புத்தி கெட்டு திரிகிறார்கள் என் தெரியவில்லை. அந்த நாளில் இரவு 12.00 மணிக்கு சில கோவில்களையும் திறந்து வைத்துகொண்டு இவர்கள் அடிக்கும் கூத்துகளை என்னவென்று சொல்வது. இதற்கு முடிவு தான் என்ன. உலகமே அழிந்து புதியதோர் தமிழ் உலகம் தோன்றினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்த வரை மேநாட்டு கலாச்சாரங்களும், ஆபிரகாமிய மதம்களும் வேரோடு அழிந்து விட வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு ஒரு பெரிய பிரளயமே தோன்றினால் கூட தவறு இல்லை. தாயாகிய தமிழும் தந்தையாகிய பிராகிருதமும், குருவாகிய சமஸ்கிருதமும் மீண்டும் புத்துயிர் பெற்று, கலாச்சாரங்களும், பாரத பண்பாடும் புத்துயிர் பெற்று புதியதோர் சமுதாயம் இப்புவியில் தோன்றி செழிக்க இறைவனை வேண்டுகிறேன்.

  44. நெடு நல் வாடையிலும், (6) ” மாமேயல் மறப்ப, மந்தி கூற”
    இந்த உலகத்தில் நாம் நம் இந்திய நாடு இருப்பது கடகத்தில் அதாவது நான்காவது வீட்டில் சூரியன் அதீத பலமாக சித்திரை மாதத்தில் வருகிறார் .சித்திரை மாதம் வெய்யில் மாதமாக வழக்கத்தில் கொண்டுள்ளோம் .கடகத்தில் சூரியன் நுழைவதாகவே கொள்ளவேண்டும் .
    இவ்வுலக நடப்பின் ஆரம்பம் மேஷம். இந்த பூமியில் சூரியன் ஆரம்பம் மேஷம் அதாவது ஜப்பானில் நுழைகிறது.இவ்வுலகத்திற்கு வருடம் பிறப்பது தையில் ஆனால் இந்தியாவிற்கு சித்திரையில் கடகத்திற்க்கு
    சித்திரையும் கடகத்தை யும் ஒன்று சேருங்கள் உலக கணக்கோடு சரியாக இருக்கும்

  45. இந்த உலகத்தில் நாம் நம் இந்திய நாடு இருப்பது கடகத்தில் அதாவது நான்காவது வீட்டில் சூரியன் அதீத பலமாக சித்திரை மாதத்தில் வருகிறார் .சித்திரை மாதம் வெய்யில் மாதமாக வழக்கத்தில் கொண்டுள்ளோம் .கடகத்தில் சூரியன் நுழைவதாகவே கொள்ளவேண்டும் .
    இவ்வுலக நடப்பின் ஆரம்பம் மேஷம். இந்த பூமியில் சூரியன் ஆரம்பம் மேஷம் அதாவது ஜப்பானில் நுழைகிறது.இவ்வுலகத்திற்கு வருடம் பிறப்பது தையில் ஆனால் இந்தியாவிற்கு சித்திரையில் கடகத்திற்க்கு
    சித்திரையும் கடகத்தை யும் ஒன்று சேருங்கள் உலக கணக்கோடு சரியாக இருக்கும்

  46. https://puthu.thinnai.com/?p=37190#comment-50716

    //இந்து சமயத்தினர் நீங்கள் கூறும் இம்முறையை ஏற்றுக்கொண்டு அடுத்து வரும் (மேலே குறிப்பிட்ட ஆண்டுகளில்) சித்திரை புத்தாண்டுக்கு நிகழும் வீரமாமுனிவர் ஆண்டு சித்திரை மாதம் என்று”பஞ்சாங்கம்” எழுதி கோயிலில் வாசிக்க முன்வருவார்கள் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

    சிலதமிழர் ஏற்றுகக் கொண்டு திருமண அழைப்பிழ்தழில் கூட போடலாம்… ஆனால் …இந்துக்களின் பஞ்சாங்கம் ???!!!! வாய்ப்புண்டா?

    நேற்றே இந்தக் கேள்வியை எழுப்பினேன்…
    ///அவர்களிடம்தான் சொல்லிப் பாருங்களேன்… நமக்குத் தமிழ் முக்கியம் இனி இந்தத் தமிழ் ஆண்டுகளில் ஜாதகம் எழுதுங்கள் என்று … நடக்குமா?/// என்று.

    இந்த இடத்தில் உங்கள் கருத்து சென்று சேர்ந்தால் உங்கள் முயற்சிக்கு வெற்றிதான். ////

    ++++++++++++

    தேமொழி,

    தமிழ்க்கடலில் நான் ஒரு கல்லைப் போடுகிறேன். அலை வேகத்தை அமுக்கி அது ஓர் சிற்றலை உண்டாக்குவதைக் காணாமல் போகலாம். அது எழுப்பும் ஓசை காதில் கேட்காமல் போகலாம்.

    ஆனால் குறள் என்ன சொல்கிறது ?

    எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
    திண்ணிய ராகப் பெறின்.

    வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
    மற்றவை எல்லாம் பிற.

    எனது குறிக்கோள் :

    தமிழரிடையே ஒருமைபாட்டை உருவாக்குவது.

    தமிழர் அறுபதாண்டு அணி அட்டவணை ஒருமைப்பாட்டை உறுதியாக உண்டாக்கும். பழைய வடமொழிப் பெயர்க்கு இணையாக புதிய தமிழர் பெயர்கள் உள்ளதால், முதலில் ஏற்காத சிலர் பழைய பெயரைச் சொல்வார். ஏற்கும் பலர் புதிய பெயரை உச்சரிப்பார். பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றங்கள் நிலைபெறும். எதிர்ப்புகள் தளரும்.

    சித்திரை முதல் தேதி திருவள்ளுவர் ஆண்டும் துவங்கி நிலைபெறும். தமிழர் அறுபதாண்டுத் தமிழாண்டும் எப்போதும் போல் சித்திரை முதல் தேதி, ஆண்டு தோறும் கோயில்களில் வாசிக்கப்படும்.

    ஒளவை ஆண்டு, வள்ளுவர் ஆண்டு, தொல்காப்பியர் ஆண்டு, ஆண்டாள் ஆண்டு, கண்ணகி ஆண்டு, மணிமேகலை ஆண்டு, கம்பர் ஆண்டு, அப்பர் ஆண்டு, போப் ஆண்டு, கால்டுவெல் ஆண்டு, காந்தியார் ஆண்டு, காமராசர் ஆண்டு, பெரியார் ஆண்டு, அண்ணாதுரை ஆண்டு, அப்துல்கலாம் ஆண்டு, மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் சித்திரை முதல் தேதி அன்று கொட்டி முழங்கும் என்று நினைக்கும் போது நமக்கு எல்லாம் புல்லரிக்க வில்லையா ?

    சித்திரை முதல் துவங்கும் மீள்சுற்றுத் தமிழர் அறுபதாண்டு அணி அட்டவணை [மூலக அணி அட்டவணை போல் (Periodic Table of Chemical Elements)] பலர் அறிய அறிக்கப்பட வேண்டும்.

    அதுபோல் சித்திரை முதல் துவங்கும் நீடித்த திருவள்ளுவர் ஆண்டும் தமிழ் நாட்காட்டியில் அச்சிடப் பட வேண்டும்.

    சி. ஜெயபாரதன்.

    ++++++++++

  47. சி. ஜெயபாரதன் on May 17, 2018 at 10:41 pm
    S. Jayabarathan

    1:05 PM (2 minutes ago)

    to vallamai, மின்தமிழ், tamilmantram, vannan, vaiyavan

    It is an Academic & HISTORICAL insult, done by DMK & SOME OTHER TAMIL SCHOLARS to the Great Thiruvalluvar, USING HIS NAME FOR A FORGERY & CONTROVERSIAL THAI MONTH TAMIL YEAR which was not EVEN accepted by ADMK AND A LOT MORE TAMIL READERS IN THE WORLD.

    FORGERY THIRUVALLUVAR TAMIL YEAR was not at all a HONOUR TO THIRUVALLUVAR.

    S. Jayabarathan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *