அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்

பொன்னம்பலத்துப் பிரகாரத்துக் கீழ்ச் சுவரில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கும் புடைப்புச் சிற்பங்களைக் [1] கவனிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.  சமணர்கள் கழுவேற்றப்பட்டதை காட்டும் சிற்பத்தைக் கண்டதும் அவர் முகம் சற்று சுருங்குகிறது.

“சை! இந்தச் சிற்பம் இங்கு இருக்கவேண்டுமா?” என்று அவரையும் அறியாமல் அவரது வாய் முணுமுணுக்கிறது.

“என்ன ஓய், சிவாச்சாரியாரே! எந்தச் சிற்பம் இங்கு இருக்கக் கூடாது என்று நீர் அருவருப்பு அடைகிறீர்?” என்ற சேக்கிழார் பெருமானின் குரல் அவரைத் திருப்பிப் பார்க்கச் செய்கிறது.

சிதமபரம் கோயில் சிற்பம்- சமணர் கழுவேற்றம்
சிதமபரம் கோயில் சிற்பம்- சமணர் கழுவேற்றம்

“வணக்கம், சேக்கிழார் பெருமானே! திடுமென்று தாங்கள் இங்கு எப்படி?” என்று இழுக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

“அது இருக்கட்டும், எந்தச் சிற்பம் உம்மை அருவருப்படையச் செய்தது? காண்பியும்!” என்று மீண்டும் கேட்கிறார் சேக்கிழார்.

சமணர்கள் கழுவேற்றப்படும் சிற்பத்தைக் காண்பிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

அதை உற்றுப் பார்த்த சேக்கிழார், “இந்தச் சிற்பம் இங்கு இருக்கக் கூடாது என்பதற்கு உம்முடைய தரப்புக் கருத்து என்னவோ?” என்று வினவுகிறார்.

“இறைவனின் அருளை வேண்டி அடியார்கள் குழுமும் புனிதமான இடம் இது! இதில் கொலைத் தொழிலைக் காட்டும் சிற்பம் தேவைதானா?”

“இது சரித்திரம் அல்லவா? காழிப் பிள்ளையாருடன் [2] அனல் வாது, புனல் வாது புரிந்து தோற்ற அமணர்கள் விரும்பிப் பெற்ற தண்டனைதானே இது? அவர்கள் சைவத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் இக்கதி ஏற்பட்டிருக்காதே?” என்று அச் சிற்பம் அங்கு இருப்பது பொருத்தமானதே என்ற தனது கருத்தை வெளியிடுகிறார் சேக்கிழார்.

“இது பாண்டியரை உயர்த்தும் சரித்திரம் அல்லவா?  சோழ நாட்டில், அதுவும் கோவில் என்றாலே தில்லை என்று பெயர்பெற்ற, கூத்தபிரான் களிநடமாடும் பொன்னம்பலப் பிரகாரத்தில் பாண்டியர் புகழ் பாடவேண்டுமா?  ஏதோ ஒரு பாண்டியச் சிற்பி யாரும் அறியாத வண்ணம் இச் சிற்பத்தைச் செதுக்கி விட்டது போலல்லவா இருக்கிறது!” பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தன் வாதத்தை வேறு பக்கம் திசை திருப்புகிறார்.

“உம் சோழ நாட்டுப் பற்றை நாம் மெச்சுகிறோம். சைவத்துக்கு வந்த இடர் எவ்வாறு நீக்கப்பட்டது என்ற வரலாற்றைத்தான் இச் சிற்பம் காட்டா நிற்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மன்னன், தான் சென்ற வழி தவறு என்று உணர்ந்து, நன்னெறிக்குத் திரும்பி வந்து, புறச் சமயத்தார் தாமே விரும்பிப் பெற்ற தண்டனையை நிறைவேற்றினான் என்றுதான் உலகுக்குக் காட்டுகிறது.

“ஆகவே, நீர் உமது நோக்கை விரிவுபடுத்தும். பாண்டியன் என்ற குறுகிய நோக்கை விடுத்து — தமிழன், அதுவும் தமிழ்ச் சைவனாகப் பிறந்து புறசமயத்தைத் தழுவிய அரசன் – சோழ இளவரசி ஒருவராலும், சோழ வளநாட்டில் அவதரித்த காழிப் பிள்ளையாராலும்தான் சைவத்திற்குத் திரும்ப ஈர்க்கப்பட்டு, அரசநெறியை நிறைவேற்றிய வரலாறு என்ற பெருநோக்குடன் இச்சிற்பத்தைக் கண்ணுற்றால் — இது சைவ நாயன்மார்களில் ஒருவரான — சோழ இளவரசியாகப் பிறந்து, பாண்டிமாதேவியாகப் பரிணமித்த மங்கையர்க்கரசியாரின் சைவத் தொண்டைச் சிறப்பிக்கும் சிற்பம் என்று உமக்குப் புரிய வரும். இது நாம் எழுதப் போகும் திருத் தொண்டர் புராணத்தின் ஒரு பகுதி என்றும் அறிந்து கொள்வீர்!” என்று விரிவுரை ஆற்றுகிறார் சேக்கிழார்.

பாண்டிய மன்னனுக்கும் மங்கையர்க்கரசியாருக்கும் ஆசி வழங்கும்  ஞான சம்பந்தப் பெருமான்
பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனுக்கும்
சைவம் மீட்ட ராணி மங்கையர்க்கரசியாருக்கும்,
அமைச்சர் குலச்சிறையாருக்கும்
ஆசி வழங்கும் ஞானசம்பந்தப் பெருமான்

“பொறுமையுடன் எனது அறியாமையை அகற்றியதற்கு மிக்க நன்றி, சேக்கிழார் பெருமானே!” என்று குழைந்த பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், “தங்கள் வருகைக்கான காரணத்தை இன்னும் சொல்லவில்லையே?” என்று வினவுகிறார்.

“நாம்தான் அதைப்பற்றியும் கூறினோமே, நீர் கவனத்தைச் சிதறவிட்டிருக்கிறீரே! நீர் இந்தச் சிற்பத்தைப் பற்றித் தமக்குத் தாமே பேசி, அதற்கு நாம் விளக்கம் கொடுத்தபோது, இங்கு வந்ததற்கான காரணத்தைக் கூறிவிட்டோமே!” என்றதும், பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரின் முகம் மலர்கிறது.

“தாங்கள் இங்குதான் திருத்தொண்டர் புராணத்தை எழுத இருக்கிறீர்களா?”

“அம்பலவாணன் அடியெடுத்துக் கொடுத்து, அதை நாம் எழுதத் துவங்கவேண்டும் என்று மனதிற்குள் ஒரு வேண்டுதல். வாரும், இறைவன் முன்பு அமர்ந்து பேசுவோம்!” என்று அழைக்கிறார் சேக்கிழார்.

அவரை வரவேற்க வந்த தில்லை அந்தணர்கள் சிலரையும் அன்பு கலந்த புன்னகையுடன் தடுத்துவிடுகிறார்.  இருவரும் சற்றுத்தள்ளி, நடராஜரின் திருஉருவம் கண்ணில் படும், அதே சமயம் மனித நடமாட்டம் குறைவான இடத்தில் அமர்ந்து கொள்கிறார்கள்.

“ஓய், சிவாச்சாரியாரே!  நீரும் நானும் ஒன்றையேதான் விரும்புகிறோம். தமிழ் என்றும் அழியாமல் எல்லோராலும் பேசப்படவேண்டும், தமிழ் மறைகள் அனைவராலும் ஓதி உணரப்படுதல் வேண்டும் என்பதுதான் அது.  அநபாயச் சோழரும் அதற்காகவே திருத்தொண்டர் புராணம் எழுதி முடிக்கும்வரை தில்லையிலேயே இருக்கும்படி என்னைப் பணித்துவிட்டார்.

“உமக்குத் தமிழில் இருக்கும் ஆர்வம் நான் அறியாததல்ல. எனவே, உம்மையும் தமிழையும், சைவத்தையும் ஒருங்கே வளர்க்கும் இப்பணியில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால், திருத்தொண்டர் புராணம் எழுதுவதற்கு நீர் ஒரு உதவி செய்யவேண்டும்!” என்று சேக்கிழார் சொன்னதும், “சேக்கிழார் பெருமானே! இதைவிடப் பெரும் பேறு, வேறு என்ன எனக்குக் கிடைக்க இருக்கிறது? தாங்கள் திருவாய் மலர்ந்து அருளுங்கள்!” என்று பணிவாகப் பதிலிறுக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

“நீர்தான் எனது எழுத்தராக இருக்க வேண்டும்!”

சேக்கிழார் பெருமான்
சேக்கிழார் பெருமான்

“பெரும் பேறு பெற்றேன் பெருமானே! திருத்தொண்டர் புராணத்தைத் தங்கள் வாயிலாக முதன்முதலாகச் செவியுறும் நல்வாப்பு யாருக்குக் கிடைக்கும்? அதையும் தாங்கள் சொல்லச் சொல்ல நானே எழுதுவது என்றால்… என் மயிர்க்கால்கள் புல்லரிக்கின்றன!” பாகாய்க் கரைகிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

அருகில் நிற்கும் பணியாளரைப் பார்த்து சேக்கிழார் சைகை செய்கிறார்.  பணியாளர் தான் வைத்திருக்கும் ஒரு துணிக்கட்டை  பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரிடம் கொடுக்கிறார். சேக்கிழாரின் தலை அசைப்பைக் கண்ணுற்று, பணியாளர் இவர்கள் பேச்சு தன் காதில் விழாத தூரத்தில் நின்று கொள்கிறார்.

“ஓய், சிவாச்சாரியாரே! பதனிடப்பட்ட பனை ஓலைகளும், நல்ல எழுத்தாணியும் இத்துணிக்கட்டில் உள்ளன. எனவேதான் இதை உம்மிடம் கொடுக்கச் செய்தோம். முதல் அடி எடுத்துக் கொடுக்கும்படி அம்பலவாணனை இறைஞ்சிக் கொண்டிருக்கிறேன். அவர்தான் கருணை காட்டவேண்டும்!” என்று பயபக்தியுடன் சொல்கிறார்.

“கட்டாயம் நடக்கும், பெருமானே!  அவருடைய நாயன்மார்களைப் பற்றி அல்லவா தாங்கள் திருமுறை எழுதப் போகிறீர்கள்! கட்டாயம் அம்பலவாணர் அடி எடுத்துக் கொடுப்பார்!” பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரிடமிருந்து பரவசத்துடன் பதில் வருகிறது.

அப்பொழுது நடராஜருக்குத் தீபாராதனை நடக்கிறது.  அந்த ஒளியில் அவரது திருஉருவம் தகதகவென்று மின்னுகிறது. இருவரும் எழுந்து நிற்கிறார்கள்.

“அவனது ஒளியைப் பாரும்.  அவனது தலையில் மின்னும் பிறை நிலாவைக் காணும். அவன் தலையில் தரித்துக் கொண்டிருக்கும் கங்கையைக் கவனியும். இம்மாதிரியான சோதியை நான் இதுவரை கண்டதே இல்லை. எப்படி ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறான்! அவனது சிலம்பு அணிந்த திருவடிகள்தான் நமக்கு எப்படித் தரிசனம் கொடுக்கின்றன! நோக்கும்!” என்று சேக்கிழார் சொல்லி முடித்தவுடன் அவர்களைச் சுற்றிப் பல இடங்களில் கோவில் மணிகள் ஒலிக்கின்றன.

திடுக்கிட்டுத் திரும்பிய சேக்கிழார் சுற்றுமுற்றும் பார்க்கிறார். மணி ஓசையில் அவரது மனமும், இதயமும், சிந்தனையும் லயிக்கின்றன. மெல்ல அவரது முகம் மலர்கிறது. தலையை ஆட்டி ஆட்டி ரசிக்கிறார். கையை உயர்த்தி, நடமிடும் நாயகனான நடராஜனை நோக்கிக் கூப்புகிறார்.

“கேட்டீரா, ஓய்? அம்பலவாணன் அடி எடுத்துக் கொடுத்துவிட்டான்! திருத்தொண்டப் புராணத்திற்கு முதல் அடியைக் கூறிவிட்டான்! தனது கோவில் மணிகளின் ஒளியின் மூலமாக முதல் அடி எடுத்துக் கொடுத்து, என் அடியார்களின் புகழைப் பாடு, என்னை எழுது, திருமுறையாக எழுது என்று ஊக்குவிக்கிறானே! உமது காதில் அது விழுகிறதா?” என்று ஆனந்தப் பரவசத்துடன் கேட்கிறார் சேக்கிழார்.

“பெருமானே! என் காதில் கோவில் மணிகள் ஒலிக்கும் சத்தம்தான் கேட்கிறது. வேறொன்றும் கேட்கவில்லையே! இறைவன் கோவில் மணிகள் மூலம் தங்களுக்குப் பகிர்வது தங்களது தவப் பயன்! என்மாதிரி ஒன்றுமில்லாத ஞானசூனியனுக்கா அதை உரைப்பான்?” என்று குறைப்பட்டுக் கொள்ளுகிறார்.

“கவனமாகக் கேளும், ஓய்! உமாமகேசனின் உரை உமக்கும் ஒலிக்கும்! அவனது மணிகளின் ஒலியை நன்றாகக் கவனித்துச் சொல்லும், ஓய்!” என்று பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரை உற்சாகத்துடன் தூண்டுகிறார்.

“அப்படியே!” என்று பயபக்தியுடன் கேட்ட பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், “டாண், டாண் என்றுதான் கேட்கிறது.” என்கிறார்.

“மேலெழுந்தவாரியாகக் கேட்காதீர்! உற்றுக் கவனியும். மணிகள் அடித்த பிறகு எழும் அதிர்வுகள் என்ன சொல்கின்றன என்று உட்சென்று கவனியும்!”

கண்களை மூடிக்கொண்டு கவனத்தை மணியோசைகள்பால் செலுத்துகிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

சிதம்பரம் ஆடல்வல்லான்
சிதம்பரம் ஆடல்வல்லான்

“டாண், டாண் என்று ஒலி எழுப்பிய பின்பு மணிகளிலிருந்து, ஓம், உம், கெம், ஓம், லம், லாம், லாம், கெம், என்று பலவாறு அதிர்வுகள் கிளம்புகின்றன. எனக்கு சொற்கள் ஒன்றும் விளங்கவில்லையே?” என்று இறைவனின் சொல்லை அறிய இயலாத ஆதங்கத்துடன் சேக்கிழாரை வினவுகிறார்.

“அதேதான், அதேதான்!” என்று உற்சாகத்துடன், உவகையுடன் சொல்கிறார் சேக்கிழார்.  “நானும் நீர் கெட்ட ஒலி அதிர்வுகளைத்தான் கேட்டேன்.  மணி ஓசையின் அதிர்வு எப்போதும் ஓம் என்று பிரணவ ஒங்காரத்துடன்தான் முடியும். ஒவ்வொரு மணிக்கும் தனிப்பட்டதான அதிர்வு உண்டு. ‘ம்’ என்ற ஒலியை முடிவாக வைத்துக் கொள்வோம். நீர் கேட்ட பல அதிர்வுகளை எழுத்துக்கள் என்று வைத்துக்கொண்டு, ‘ம்’ என்ற பிரணவ மந்திரத்தின் ஒலியை எடுத்து விட்டோமானால், மிஞ்சும் ஒலிகளை ‘உ’, ‘ல’, ‘கெ’, ‘லா’, என்று வரிசைப் படுத்தலாம். பிரணவத்தின் ‘ம்’ கடைசி ஒலியானால், ‘உலகெலாம்’[3] என்ற சொல் நமக்கு அம்பலவாணனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது, பார்த்தீரா!” என்ற சேக்கிழாரின் விளக்கத்தைக் கேட்டு அயர்ந்துவிடுகிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

ஆடலழகனான ஆனந்த சபேசன் தன் அலகிலா விளையாட்டை நிகழ்த்திய நேர்த்தியை எண்ணி உள்ளம் பூரிக்கிறார். உற்சாகத்துடன் மேலும் தொடர்கிறார் சேக்கிழார்.

“நமக்கு இறைவனார் எடுத்துக் கொடுத்த ‘உலகெலாம்’ என்ற சொல்லை வைத்துக்கொள்வோம். சற்றுமுன் அவனது தரிசனத்தைப் பற்றி வர்ணித்தேன். அதை வைத்து முதல் செய்யுளைச் சொல்கிறேன், எழுதிக்கொள்ளும்.” என்று பரபரக்கிறார். உடனே துணிக்கட்டை அவிழ்த்து, ஓலைகளையும், எழுத்தாணியையும் தயாராக வைத்துக்கொண்டு தலை அசைக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

சேக்கிழார் மெய்மறந்து துவங்குகிறார்…

“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவுலாவிய நீர்மலி மேனியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!

“உலக மக்கள் அனைவரும் இறைவன் தங்களுக்குள் இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனைத் துதி பாடிவர வல்லவன், அவனது தலை முடியில் புனித நீரைப் பொழியும் கங்கை இருக்கிறாள், பிறை நிலா அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  அவனிடமிருந்து எழும் ஜோதிக்கு எதையும் ஒப்பிட்டுச் சொல்ல இயலாது.  அவன் தில்லையில், பொன்னம்பலத்தில் என்றும் ஆடிக்கொண்டிருப்பவன், அவனது மலர்போன்ற, ஆனந்த தாண்டவம் ஆடும்போது ஒலிக்கின்ற, சிலம்புகள் அணிந்த திருவடியை வாழ்த்தி வணங்குவோமாக!” என்று முடிக்கிறார்.

 “ஆகா, ஆகா, அருமை! அருமை!” என்று ரசித்தவாறே முதற் செய்யுளை எழுதி முடிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

கவிதை வெள்ளம் சேக்கிழாரிடமிருந்து அருவியாகப் பெருக்கெடுக்கிறது.  திருத்தொண்டர் புராணம் உருப்பெறுகிறது.

.

விளக்கக் குறிப்பு:

[1]  இந்தச் சிற்பம் தில்லை நடராஜர் கோவிலில் கனகசபை பிரகாரத்தில் வடக்கு மண்டபச் சுவரில் செதுக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சிற்பத்தின் நிழற்படமே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

[2]  சீர்காழியில் பிறந்த சைவ சமய குரவரான திருஞானசம்பந்தரை, அவர் பிறந்த ஊரைச் சிறப்பித்து, ‘காழிப் பிள்ளையார்’ என்று அன்புடன் அழைப்பது வழக்கமாக இருந்துவருகிறது.

[3]  திருத்தொண்டர் புராணத்தைத் துவக்க அசரீரி வாயிலாக இறைவனே சேக்கிழாருக்கு ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

37 Replies to “அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்”

  1. தலைப்பு தவிர வேறு எதுவும் இல்லையே? வலையில் ஏற்றுவதில் ஏதாவது குழப்பமா?

  2. திரு. அரிசோனன் அவர்களுக்கு,

    வலையேற்றுவதில் ஏற்பட்ட சிறு பிழை சரிசெய்யப்பட்டுவிட்டது. நன்றி.

  3. திரு அரிசோனன் அவர்களுக்கு, தங்களின் கட்டுரைகளை விரும்பிப்படிக்கும் நபர்களுள் நானும் ஒருவன்.சேக்கிழார் அவர்களின் தொண்டினை மிக நயம்பட யெழுதியுள்ளீர்கள்.நான் 1962 வருஷம் 7 ஆம் வகுப்பு படிக்கும்போது இந்த பெரியபுராண முதல் பாடலை மனனம் செய்தது இன்னும் ஞாபகத்தில் உள்ளது .எக்காரணம் கொண்டும் தமிழில் சந்திப்பிழை வரக்கூடாது என நினைப்பவன் . சில சொற்கள் மாறினால் பொருள் முழுவதும் மாறுபடும் என்பதனை தாங்களும் அறிவீர்கள் .
    இப்பாடலை வெட்டி ஒட்டி இருக்கிறேன்.

    1. பாயிரம்
    1. உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் 0001-1
    நிலவு லாவிய நீர்மலி வேணியன் 0001-2
    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் 0001-3
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். 0001-4

    தமிழ் ஒரு ஒப்பில்லா மொழி . சற்று கவனம் எடுத்து பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன் .இங்கு ஆங்கிலத்தில் அடித்து தமிழில் மாற்ற மிகவும் கடினமாக உள்ளது .வேறு சுருக்கமான வழி இருந்தால் தெரிவிக்கவும் .நன்றி .

  4. ஐயா !! அற்புதம் !! ஆனால் இவ்விடத்தில் “அலகில்” சோதியன் – அழகில் அல்ல

  5. ஸ்ரீமான் அரிசோனன், அழகான புனைவு.

    புனைவு என்ற வரை சரி. ஒரு விஷயத்தை சரித்ரம் என்று நிறுவ அதிக ப்ரயாசை தேவை. இந்த வ்யாசம் சமணர்கள் கழுவிலேற்றப்பட்ட விஷயத்தை சரித்ரம் என்று கூறுவது ஏற்க முடியாத விஷயம். தோழர் அருணன் அவர்கள் செம்மலர் என்ற சஞ்சிகைக்கு சமணர் கழுவேற்றம் பற்றி எழுதிய ஒரு வ்யாசத்திற்கு இடதுசாரி சார்புடைய மதிப்பிறிகுரிய ஸ்ரீ பக்ஷிராஜன் அனந்த க்ருஷ்ணன் அவர்கள் மறுப்பு எழுதியதாகவும் அது செம்மலர் சஞ்சிகையில் பதிவேறாததாகவும் அன்னாரது முகநூல் பக்கத்தில் வாசித்தது நினைவுக்கு வந்தது. இது விஷயம் சம்பந்தமாக மேற்படி தகவல்கள் அன்னாரின் எழுத்துக்கள் வாயிலாக :-

    ———————————————-

    திரு அருணன் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?” என்ற கட்டுரைக்கு மறுப்பு ஒன்று ‘செம்மலர்’ பத்திரிகையில் எழுதியிருந்தார் என்று நண்பர்கள் மூலம் அறிந்தேன். அதைப் படித்தவுடன் அவரது மறுப்புக்கு
    எதிர்வினை எழுதி செம்மலருக்கு அனுப்பியிருந்தேன். இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இது நான் அனுப்பியிருந்த எதிர்வினை. திரு அருணனுடைய கட்டுரைப் பகிர்ந்து கொண்டவர்கள், இதையும் பகிர்ந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

    திரு அருணன் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?” என்ற கட்டுரைக்கு எழுதிய மறுப்பு எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மறுப்பு என்பது வசைபாடுதலே என்ற பரம்பரையில் வந்திருப்பவர் என்பதை அருணன் தனது கட்டுரை மூலம் நிறுவ முயல்கிறார். எனக்கு வசைபாடும் திறமை இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    எனது கட்டுரையில் சமணர்கள் படுகொலை செய்யப்பட்ட்தற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதற்கு நான் கூறிய காரணங்கள் இவை:
    1. நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் சம்பந்தருக்கு 350 ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்கள். கழுவேற்றப்பட்ட கதை இவர்களால்தான் முதலில் சொல்லப்படுகிறது. எனவே கதையின் நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து விடுகிறது.
    2. சம்பந்தர், அப்பர் தேவாரங்களில் கழுவேற்றப்பட்டதற்கு அகச்சான்றுகள் இல்லை.
    3. பல்லவ, பாண்டிய சோழ கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து எந்த ஆதாரமும் இல்லை.
    4. சமணர்கள் இலக்கியங்களிலேயோ கல்வெட்டுகளிலேயோ இந்தச் சம்பவத்தைப் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை.
    5. சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில் சமணக் கல்வெட்டுகள் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த நூற்றாண்டுகளில் அதிகரித்திருக்கின்றன.
    6. இந்தக் காலக்கட்டத்தைப் பற்றி எழுதிய ஏழு வரலாற்றாசிரியர்கள் இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ய்பு இல்லை என்கின்றனர். இவர்களுள் ரொமிலா தபாரும் ஜைன வரலாற்றின் வல்லுனர் என அறியப்படும் பால் டுண்டாஸும் அடங்குவர்.
    இந்தக் காரணங்கள் மறுக்கப்படவில்லை. ஆனால் நான் இந்துப் பழமைவாதி என்று அழைக்கப்படுகிறேன். ரொமிலா தபார் அவர்களும் இந்துப் பழமைவாதி என்று அழைக்கப்படுவார் என்று நம்புகிறேன்.
    இவற்றைத் தவிர என்னை அதிகம் படிக்காதவன், முட்டாள் என்று நிறுவுவதற்கு அருணன் சில நிலைகளை எடுக்கிறார்.
    1. கூன் பாண்டியன், மங்கையர்க்கரசி, குலச்சிறையார் போன்றவர்கள் அவர்களைச் சம்பந்தர் சந்தித்தது வரலாற்று உண்மையல்ல என்று கூறலாமே. ஏன் கூறவில்லை?
    2. மணிமேகலையில் சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதையில் சமயச் சண்டைகள் பேசப்படவில்லையா?
    3. திரு சாட்டர்ஜி சொல்லியிருப்பதாக அருணன் எழுதியிருப்பது இது: ஏழாவது நூற்றாண்டிலும் இந்த மதம் தமிழ்நாட்டில் தனது பெரும் பிரபல்யத்தைத் தக்க வைத்திருந்தது. இது யுவான் சுவாங்கின் வாக்குமூலத்தால் நேரடியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சோழ, திராவிட, மல கூட எனும் இந்தியாவின் மூன்று தென் ராஜியங்களிலும் கணக்கற்ற திகம்பரர்களும், அவர்களது வழிபாட்டுத்தலங்களும் இருந்ததை அவர் கண்டார்.
    4. தமிழகத்தில் சமணர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள்.
    5. வைணவர்களும் கழுவேற்றலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கு உதாரணம் வைகுந்தப் பெருமாள் கோவிலில் இருக்கும் கழுவேற்றச் சிற்பத்தைப் பற்றி இராசமாணிக்கனார் கூறியிருப்பது.
    6. மதுரையிலே சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் எனப் பெரிய புராணத்தில் வருவது மட்டும்தான் “கதை”! மற்றதெல்லாம்? அதெல்லாம் தெரியாது. இடைஞ்சலான பகுதிக்கு மட்டும்தான் ஆதாரங்கள் கேட்கப்படும்.
    இவற்றிற்கு எனது பதில்:
    1. கூன்பாண்டியன், குலச்சிறையார் இவர்களைச் சம்பந்தர் சந்தித்ததற்கு எந்தச் சரித்திரச் சான்றுகளும் இல்லை என்பது உண்மை. இருக்கிறது என்று நான் எங்கு சொல்லியிருக்கிறேன்? மங்கையர்க்கரசியைப் பற்றி சம்பந்தர் பாடியிருப்பதால் அவர்கள் இருவரும் சந்தித்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
    2. வாதத்திற்கும் சண்டைக்கும் வித்தியாசம் இருக்கிறது என நான் நம்புகிறேன். மணிமேகலையில் வரும் இந்தக் காதையில் வரும் தருக்கப்பகுதிகள் வடமொழியில் இருக்கும் திங்நாகரின் நியாயப் பிரவேசத்திலிருந்தோ அல்லது தர்மகீர்த்தியின் நியாயபிந்துவிலிருந்தோ எடுக்கப்பட்டவை என்று வையாபுரிப்பிள்ளை அவர்கள் கூறுகிறார். எனவே இவை கதைக் களத்தில் உண்மையாக நடந்திருக்க முடியாது. அப்படியே வைத்துக் கொண்டாலும் மணிமேகலை இந்த வாதங்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை நான் இங்கு தருகிறேன்:
    ”என்றலு மெல்லா மார்க்கமுங் கேட்டு
    நன்றல வாயினு நான்மா றுரைக்கிலேன்” (சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதை, 277-288)
    “இங்ஙனம் கூறி வந்த எல்லாச் சமயங்களையும் மணிமேகலை கேட்டு இவர்கள் கூறுவன அறமல்லவாயினும் யான் அவர்களை மறுத்து மாறு கூறேன் என நினைப்பவள்” – ந மு வெங்கடசாமி நாட்டார் உரை. எனவே மணிமேகலை சமயச் சண்டைகளை விரும்பாதவள் என்பது தெளிவு.

    3. இது யுவான்சுவாங் காஞ்சிபுரத்தைப் பற்றிஎழுதியிருப்பது. அவர் சொல்லியிருப்பதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்: There are some hundreds of Sangaramas and 10,000 priests… There are eighty Deva temples and many heretics called Nirgranthas. மாலகூடம் என்று அழைக்கப்படும் இன்றைய மதுரையைச் சுற்றிய பகுதிகளைப் பற்றி எழுதும் போது அவர் சொல்வது இது: There are many hundred Deva temples and a multitude of heretics mostly belonging to Nirgranthas. நிர்கிரந்தா என்பவர்கள் சமணர்கள் என்பதில் ஐயம் இல்லையென்றாலும் அவர்களுடைய வழிபாட்டுத்தலங்களைப் பற்றி அவர் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. தேவா கோவில்கள் என்று அழைக்கப்படுபவை இந்துக் கோவில்கள். பல இடங்களில் பாசுபதர்களால் வழிபடப்படுபவை என்று யுவான்சுவாங் சொல்கிறார். எனவே சமணர்களுக்கு கணக்கற்ற வழிப்பாட்டுத்தலங்கள் இருந்தன என்று யுவான் சுவாங் எழுதவில்லை. அவர்கள் இருந்தார்கள் என்பதை ஒரே வரியில் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார்.

    4. தமிழகத்தில் சமணர்கள் பெரும்பான்மையினராக இருந்தார்கள் என்பது திரு அருணனின் கூற்று மட்டுமே. இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
    5. வைகுந்தப் பெருமாள் கோவிலை நன்கு ஆராய்ந்து எழுதிய டெனிஸ் ஹட்ஸன் இந்த சிற்பத்திற்கும் வைணவ மதத்திற்கும் தொடர்பு இருப்பதாக்க் கூறவில்லை. மாறாக அரசன் தண்டனைகளை நிறைவேற்றுபவன் என்பதைச் சிற்பம் குறிக்கிறது என்கிறார். பல்லவ வரலாற்றின் மிகப் பெரிய வல்லுனர்களில் ஒருவரான சி. மீனாட்சியும் இவ்வாறே கருதுகிறார்.
    6. நான் பெரிய புராணத்தின் எந்தக் கூற்றையும் ஏற்கவில்லை. ஆதாரம் இல்லாமல் புராணங்களை நான் நம்பச் சொல்லவில்லை. எழுதியிருப்பதை ஒழுங்காகப் படித்திருந்தால் நான் சம்பந்தர் சார்பிலேயோ அல்லது சைவ, வைணவ சமயங்களில் சார்பிலேயோ நிற்கவில்லை என்பது புரிந்திருக்கும். மதச் சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன என்பதையும் நான் எழுதியிருக்கிறேன்.
    ஜைன மதம் என்றுமே மக்களது மதமாக இருந்திருக்க முடியாது என்பதற்கு நான் கூறும் காரணங்கள் இவை:
    1. நிலம் சார்ந்து இருக்கும் உழைக்கும் மக்களால் சிறு உயிர்களைக் கூட கொல்லாமல் வாழ்க்கை நடத்தவே முடியாது. அவ்வாறு செய்யாதே என்று கண்டிப்பாகக் கூறும் மதம் எப்படி மக்களைச் சார்ந்ததாக இருக்க முடியும்?
    2. மாறாக,வைணவ, சைவ மதங்களில் ”தப்பித்து’ச் செல்வதற்கு ஏராளமான வழிகள் இருந்திருக்கின்றன. இதிகாசங்களும் புராணங்களும் மக்களை ஈர்க்கக் கூடியதாக இருந்திருக்கின்றன. பக்தி இயக்கம் மக்களை கோவில்களின் பக்கம் திருப்பியது. குறிப்பாக வெள்ளாள நில உடைமையாளர்களும், பிராமணர்களும் பக்தி இயக்கம் பக்கம் திரும்பியதால் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் வைணவ சைவ மதங்கள் பக்கம் திரும்பினார்கள்.
    தமிழகத்தில் ஜைனர்கள் அருகிப் போனதின் காரணம் தமிழக வணிகர்கள் சைவர்களாகவோ வைணவர்களாகவோ மாறிப்போனதுதான். அரசர்களின் உதவியும், செல்வந்தர்களின் உதவியும் இல்லாமல் சமணமதத்தினரால் தமிழகத்தில் இயங்கி இருக்கவே முடியாது. எனவே அவர்களை அழித்தொழிக்க வேண்டிய தேவை இல்லை. இப்படி நான் கூறுவதினால் வைணவ, சைவ மதங்கள் வன்முறையில் ஈடுபடவேயில்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வன்முறை தொடந்து நடைபெற்று வந்திருக்கிறது. உதாரணமாக ரொமிலா தபார் வீர சைவர்கள் சமணர்களின் தலைகளை வெட்டுவதில் பெருமிதம் கொள்கிறார்கள். என்று பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீசைலம் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுவதாகத் தெரிவிக்கிறார். இதே போன்று ஒரிஸாவைச் சேர்ந்த கரவேலா அரசர் ஜைன மதத்தைச் சார்ந்தவர். அவர் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தவர். அவர் எதிரி நாடுகளில் எவ்வாறு பயத்தை விதைத்தார் என்பதை ஹாதிகும்பா கல்வெட்டு கூறுகிறது.
    நான் கூறுவதெல்லாம் சமணர்கள் தமிழகத்தில் கழுவேற்றப்பட்டார்கள் என்பதை நிறுவுவதற்கு இதுவரை போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என்பதுதான். கிடைத்தால் என்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளத் தயங்க மாட்டேன்.
    திரு அருணன் மார்க்சீயவாதி என்று அறிகிறேன். பாவம் மார்க்ஸ்.
    பி ஏ கிருஷ்ணன்.

    —————————————–

  6. ஸ்ரீ பக்ஷிராஜன் அனந்த க்ருஷ்ணன் அவர்கள் தனது #3 பதிலில்

    பல்லவ, பாண்டிய சோழ கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து எந்த ஆதாரமும் இல்லை.

    என்று சொல்லியிருக்கிறார்.

    #5 பதிலில்

    சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில் சமணக் கல்வெட்டுகள் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த நூற்றாண்டுகளில் அதிகரித்திருக்கின்றன.

    என்றும் சொல்லியிருக்கிறார்.

    புனைவு சோழ காலத்தியது. ஆனால், இந்த வ்யாசத்தில் பகிரப்பட்ட கல்வெட்டு எந்தக்காலத்தியது எந்த சாம்ராஜ்யத்தைச் சார்ந்தது என்பதனை வாதம் #5 படி ஆராய வேண்டும்.

  7. ஸ்ரீமான் PAK அவர்கள் குறிப்பிடும் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?” என்ற வ்யாசத்திற்கும் தோழர் அருணன் அவர்கள் எழுதிய மறுப்பிற்கும் URLகள் இருக்குமானால் வாசகர் யாரும் அறிந்தால் பகிரவும்.

  8. சமணர்கள் பூனூல் அணிவார்களா?கழுவிலுள்ள ரிஷிகள் பூனூல் அணிந்து இருக்கிறார்களே ?தயவுசெய்து விளக்குக

  9. THANK YOU. FOR THE NEAT WRITTING I HAVE DOUBT IF SAIVAM TELLING THAT “SIVAME AMMBU” THEN HOW COME THESE KIND OF INCIDENCE TAKEN PLACE NEAT I CLEARED. THANK FOR TAMILHINDU PUBLISH THIS ARTICLE .

  10. another doubt morethan 4000 samar were taken the oath if we defeat “THIRUGNANASAMBANDAR” I in DARKA SASTHRAM, sambandhar great god how he allowed “kaluku yettram” its somany years doubt .thank you . only 400 persons were died on these incidence remaining people they went and settled in Srilanka, they made the wrong concept of the singala people Tamil people were bad and they keep on telling the lies so that now SRILANKAN issue these things are also one of strong reason for getting dispute with Lanka. please explain the truth.

  11. ஒரு சிறுகதை என்ற அளவில், கதாசிரியர் தனது கற்பனையை எழுதியிருக்கிறார். அந்த அளவில் சரி. ஆனால், வரலாற்று ரீதியாக, எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறியதற்கான எந்த சான்றுகளும் கிடையாது. சைவர்கள் தங்களது வெற்றியைப் பறைசாற்ற உருவாக்கிக் கொண்ட ஒரு ஐதிகம் இது என்ற அளவிலேயே இதனைக் கருத வேண்டும். திரு கிருஷ்ணகுமார் அவர்கள் சுட்டியுள்ள பி.ஏ.கிருஷ்ணனின் கட்டுரை முக்கியமான ஒன்று. திரு ஜடாயு இது குறித்து முன்பு ஒரு விரிவான கட்டுரை எழுதியிருந்தார். பல விஷயங்களை அக்கட்டுரை தெளிவாக்குகிறது.

    சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்
    பகுதி 1 – https://jataayu.blogspot.in/2009/04/1.html
    பகுதி 2 – https://jataayu.blogspot.in/2009/04/2.html

    எனவே, “சைவத்துக்கு வந்த இடர் எவ்வாறு நீக்கப்பட்டது என்ற வரலாற்றைத்தான் இச் சிற்பம் காட்டா நிற்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மன்னன், தான் சென்ற வழி தவறு என்று உணர்ந்து, நன்னெறிக்குத் திரும்பி வந்து, புறச் சமயத்தார் தாமே விரும்பிப் பெற்ற தண்டனையை நிறைவேற்றினான் என்றுதான் உலகுக்குக் காட்டுகிறது” போன்ற கருத்தாக்கங்கள் சைவ சமய பிரசாகரர்கள் மேடைகளில் பேசுவதற்கு உதவலாம்.. ஆனால் இன்டர்நெட் யுகத்தில், வரலாற்றையும் பண்பாட்டையும் பல்வேறு கோணங்களில் தீவிரமாக வாசித்து ஆராய்ச்சி செய்யும் வாசகர்கள் இருக்கும் சூழலில், இத்தகைய சமநிலை அற்ற கருத்துக்கள் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும்.

  12. திரு. கிருஷ்ணகுமார் குறிப்பிடும் திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் “சமணர்கள் கழுவேற்றப் பட்டார்களா” என்ற கட்டுரை காலச்சுவடு இதழில் வந்தது –

    https://www.kalachuvadu.com/issue-167/page09.asp

  13. திருஅரிசோனன் அவர்கள் சிதம்பரத்தில் உள்ள சிற்பத்தை மையமாக வைத்து நல்ல்தொரு கற்பனையைச் செய்துள்ளார். திருஞானசம்பந்தப் பெருமானுடன் வாது செய்து கழுவேறியவர்கள் திகம்பர சமணர்கல். அவர்கள் பூணூல் என்ன நூலான ஆடையும் அணியாதவர்கள். ஸ்வேதாம்பர சமணர்கள் பூணூல் அணிவார்கள் என நினைக்கின்றேன். அர்சோனனின் எழுத்துக்களைப் படித்து மகிழ்பவர்களில் நானும் ஒருவன்.

  14. பின்னூட்டம் எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

    உயர்திருவாளர்கள் ஜானவி புத்திரன், ஸ்ரீதர் அவர்களே,
    நான் டைப் செய்ததில் ‘அலகில் சோதியன்’ என்பதற்குப் பதிலாக ‘அழகில் சோதியன்’ என்ற தவறு நேர்ந்து விட்டது. சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. அதிலும் தாங்கள் சீர் பிரித்து எழுதியதற்கு எனது பாராட்டுக்கள். அனைவருக்கும் புரிய வேண்டும் என்றுதான் தான் பதம் பிரித்து எழுதினேன்.
    தமிழ் ஹிந்துவுக்கு unicode பாண்ட்டில் டைப் செய்து அனுப்ப வேண்டும். அப்பொழுதுதான் பிரசுரிக்க வசதியாக இருக்கும். நான் மைக்ரோசாப்ட் வோர்டில் எழுத ‘தமிழ் சான்செரிப்’ என்ற பான்ட்டை வடிவமைத்துள்ளேன். அதை இறக்கி, control panel மூலம் கணினியில் ஏற்றிக்கொண்டால் WYSIWYG முறையில் டைப் அடிக்கலாம். ஆயினும், தற்பொழுது அனைவரும் ஆங்கில phonetics முறையில்தான் unicode பாண்ட்டில் டைப் செய்ய விரும்புகிறார்கள்.

    மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார், சக்திவேல், பிறப்பு, சசிந்தர் அவர்களே,
    நான் எழுதி இருப்பது கற்பனையில் உதித்த கதைதான். வரலாற்றுக் கட்டுரை அல்ல. இது நான் எழுதிய, விரைவில் பதிப்பிக்கப்படப் போகும், “தமிழ் இனி மெல்ல..” என்ற வரலாற்றுப் புதினத்தில் ஒரு அத்தியாயத்தில் வரும் நிகழ்வே ஆகும். நான் எழுதியதை வரலாறு என்று யாரும் எண்ணவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    சேக்கிழார் பெருமான் எழுதிய ‘திருத் தொண்டர் புராணத்து’ச் செய்யுள்களும், தில்லை நடராஜர் கோவில் பொன்னம்பலத்து புடைப்புச் சிற்பமுமே என் புனைவுக்கு ஆதாரமாக அமைகின்றன. எச் சமயத்தினர் மனதையும் புண்படுத்துவது இப்புனைவின் நோக்கம் அல்ல

    உயர்திரு சசிந்தர் அவர்களே,
    பழங்காலத்தில் மேலாடையைக்கூட பூநூலாக வடிவமைப்பது சிற்ப சாஸ்திரத்தில் உண்டு என எனக்குத் தெரிந்த கோவில் சிற்பி ஒருவர் விளக்கி இருக்கிறார். நீங்கள் பெண்களின் பதுமைகளைக் கவனித்துப் பாருங்கள். முப்புரி நூல் (பூணூல்) செதுக்கப்பட்டு இருக்கும்.

    சமணர்கள் கழுவேற்றப் பட்டார்களா என்று எழுதிய அன்பர்களே,

    நான் கொடுத்திருக்கும் கழுவேற்றப் புகைப்படம் தில்லை நடராஜர் கோவிலில் பொன்னம்பலப் பிரகாரத்தில் உள்ளது. பொன்னம்பலம் இரண்டாம் குலோத்துங்கனான அநபாயச் சோழன் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டபோது, இந்தச் சிற்பம் செதுக்கப் பட்டு இருக்கக் கூடும். ஆய்வாளர்கள்தான் கார்பன் dating மூலம் சரியான காலத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    திருஞானசம்பந்தர் அவர் பாடிய எல்லாத் தேவாரத் திருப்பதிகங்களில், எட்டாம் செய்யுளில் இராவணனைப் பற்றியும், ஒன்பதாம் செய்யுளில் திருமால், பிரம்மாவைப் பற்றியும், இன்னொரு செய்யுளில் புத்தர், சமணர் பற்றியும் குறிப்பிடுகிறார்.

    தில்லைக் கோவில் மணியோசையின் அதிர்வில் நான் கேட்ட ஒலிகளே என்னை இச் சம்பவத்தைக் கதையாகப் புனைய வைத்தன. ‘ஓம், கெம், லம்,’ போன்ற ஒலிகளை விதை எழுத்துக்கள் [பீஜாக்ஷரங்கள்] என்று பகர்வது ஆன்றோர் வழக்கம். இறைவன் இப்படியும் சேக்கிழார் பெருமானுக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் அப்பொழுது எனக்கு எழுந்தது.

    Respected Prabhu,
    There is nothing wrong is saying “Anbe Sivam”. In a spiritual plane, it is very apt, and we need to strive to live as per that saying. Since Sivam in all of us, we are supposed to love the Sivam in every one of us fellow beings. It is the reason we eat ‘saivite food’, which is misnamed as ‘vegetarian food’. For food, saivites are not supposed to kill any animals. Milk is obtained without killing the cow. Hence it is acceptable as saivite food.
    A king/queen is supposed to maintain peace in his kingdom. Hence he/she is supposed to kill distruptors of peace for the sake of many. I am sure that you know the difference between ‘murder’ and ‘vanquishing’. Though murder is abhored in saivite religion, vanquishing the enemies and bad people is allowed/tolerated.
    All the Hindu gods and goddesses have weapons, denoting that Hindu religion, though it advises ‘tolerance’, one has to protect himself/herself if attacked.

    மதிப்பிற்குரிய சக்திவேல் அவர்களே,
    தாங்கள் கொடுத்த லின்க்கைப் படித்தேன்.
    // https://www.kalachuvadu.com/issue-167/page09.asp //
    //கர்னல்மெக்கென்ஸி ஆவணங்களைச் சேகரிக்கும்போது சமணர்களைப் பற்றிய வாய்மொழிக் கதைகளையும் சேகரித்திருக்கிறார். அவருக்குத் துணை செய்தவர்களில் ஒருவர் ஜைனர் என்று தெரியவருகிறது. லெஸ்லி ஓர் தனது கட்டுரையில் மெக்கென்ஸி ஆவணங்களில் இருக்கும் நான்கு முக்கியமான கதைகளைக் குறிப்பிடுகிறார்:
    3. திருநறுங்கொண்டைக் கோயிலைப் பற்றிய கதை ஒன்று, அப்பர் கடைசிக் காலத்தில் சைவத்திலிருந்து மறுபடியும் சமணமதத்திற்கு மாறிவிட்டார் என்கிறது. காரணம் அவர் கண்பார்வை இழந்து சமணர்களால் மறுபார்வை பெற்றது. இதனால் கோபமுற்ற சம்பந்தரும் சுந்தரரும் சேர்ந்து சூழ்ச்சி செய்து அப்பரைச் சுண்ணாம்பு காளவாயில் தள்ளிக் கொன்றுவிட்டனர்.//
    இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. திருஞானசம்பந்தரும், சுந்தரரும் சூழ்ச்சி செய்து அப்பரைக் கொன்றார்களா! இப்படி சொல்லும் கர்னல் மாக்கேன்சி போன்றவர்களின் மேற்கோள்களை எடுத்துக் காட்டினால் அக்கட்டுரை நடுநிலைமையுடன், உண்மைக் கருத்துக்களை முன்வைத்து இருக்கும் என்று எப்படி நம்புவது?

    இதில் திருவள்ளுவரை சமணர் என்றும், கிறித்தவர் என்றும் கூறுவோரும் உளர். அதைப் படித்துவிட்டு ஆடும் இந்துக்களும் இருக்கவே செய்கிறார்கள்.

    இறுதியாக, சமயப் பூசல் முற்றி, சில சமயம் விரும்பத்தகாத செயல்கள் நடப்பது வரலாறுதான். விருப்பு வெறுப்பின்றி ஆராய்ச்சி செய்தால்தான் உண்மை புலப்படும்.

    இக்கதையின் உட்கருத்து ‘சேக்கிழாருக்கு இறைவன் அடியெடுத்துக் கொடுத்தது’தான். அது எப்படி நடந்திருக்கக்கூடும் என்பதைத்தான் நண்பர்கள் அனைவர்கள் முன்பும் தாழ்மையுடன் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
    வணக்கம்.

  15. மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களே,

    தங்களின் பொருட்செறிந்த விளக்கத்தைப் படித்து மகிழ்ந்தேன். மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு எழுதி உள்ளீர்கள். நிறையத் தெரிந்துகொண்டேன். வணக்கம்.

  16. பாண்டியனின் வெற்பு நோயைத் தீர்க்க மங்கையர்க்கரசி அழைத்து திருஞானசம்பந்தர் மதுரை சென்று அங்கு மன்னருக்கு நெருக்கமாக இருந்த சமணர்களோடு வாதிட்டு, அனல் வாதம், புனல் வாதம் எல்லாம் செய்து வெற்றி பெற்றபின், சமணர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவேற விருப்பமின்றி பலரும் தப்பிப் பாண்டிய நாட்டுக் காடுகளில் சென்று மறைந்து வாழ்ந்தார்கள் என்றும், அப்படி அவர்கள் வாழ்ந்த இடம்தான் புதுக்கோட்டை அருகிலுள்ள சித்தன்னவாசல் என்று ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆக கழுவேற்றல் முறை இங்கு இருந்திருக்கிறது என்பதும், சமணர்கள் அதிலிருந்து தப்பி ஓடியவர்கள் என்பதும் தெரியவருகிறது. இதற்கான வரலாற்று பூர்வமான ஆவணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

  17. சகோதரர் ஸ்ரீதர் அவர்களுக்கு, தாங்கள் குறிப்பிட்ட பிழை சரிசெய்யப்பட்டுவிட்டது.
    //அலகில் சோதியன்//

    நன்றி.

    -ஆ.குழு

  18. மிக அருமை. அதே மாதிரி விமர்சனங்களும் அருமை.

  19. \\ அனல் வாதம், புனல் வாதம் எல்லாம் செய்து வெற்றி பெற்றபின், சமணர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவேற விருப்பமின்றி பலரும் தப்பிப் பாண்டிய நாட்டுக் காடுகளில் சென்று மறைந்து வாழ்ந்தார்கள் என்றும், அப்படி அவர்கள் வாழ்ந்த இடம்தான் புதுக்கோட்டை அருகிலுள்ள சித்தன்னவாசல் என்று ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன். \\

    இந்த செய்தி புனைவா சரித்ரமா?

    \\ ஆக கழுவேற்றல் முறை இங்கு இருந்திருக்கிறது என்பதும், சமணர்கள் அதிலிருந்து தப்பி ஓடியவர்கள் என்பதும் தெரியவருகிறது. இதற்கான வரலாற்று பூர்வமான ஆவணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை \\

    கழுவேற்றல் என்ற கருத்தாக்கம் இருந்துள்ளது என்பது அதைப்பற்றி பல நூற்களில் ப்ரஸ்தாபித்திருந்த படிக்கும் இங்கு காணும் சித்திரத்திலிருந்தும் தெரிகிறது. ஆனால் இப்படி ஒரு கொடுமையான நிகழ்வு உண்மையிலேயே நடந்துள்ளது என்று சரித்ர பூர்வமான ஆவணங்களிலிருந்து தெரிய வந்துள்ளதா?

  20. \\ திருஞானசம்பந்தப் பெருமானுடன் வாது செய்து கழுவேறியவர்கள் திகம்பர சமணர்கல். அவர்கள் பூணூல் என்ன நூலான ஆடையும் அணியாதவர்கள். ஸ்வேதாம்பர சமணர்கள் பூணூல் அணிவார்கள் என நினைக்கின்றேன். \\

    மதிப்பிற்குரிய ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி மஹாசய,

    கழுவேற்றம் என்பது நிகழ்ந்ததா என்பது மிகவும் சம்சயத்திற்கு உரிய விஷயம்.

    இப்படிப்பட்ட ஒரு கொடுமையான நிகழ்வை நமது முன்னோர்கள் நிகழ்த்தியுள்ளார்களா என்பதை பக்ஷபாதம் இல்லாது முறையான சரித்ரத் தரவுகள் சார்ந்து ஆராய்வதே சரி. இதுவரை பக்ஷபாதமின்றி ஆராயப்பட்ட படி அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததற்கு சரித்ர ஆதாரம் இல்லை என்று தான் தெரிகிறது.

    இங்கு பகிரப்பட்ட சில்பத்தில் கழுவேற்றம் என்பது காண்பிக்கப்பட்டுள்ளது என்பது மட்டிலும் உண்மை.

    கழுவேறியதாகக் காண்பிக்கப்படும் நபர்கள் சமணர்களா என்பதில் “பூணல்” என்ற ஒரு சம்சயம் மட்டிலும் இல்லை.

    நன்றாக உற்றுக்கவனியுங்கள் சிற்பத்தை. கழுவேறிய நபர்கள் “பூணல்” மட்டிலும் அணியவில்லை. நீண்முடி மண்டையராகவும் தாடியுடனும் காணப்படுகிறார்கள். ஸ்வேதாம்பரர்களோ திகம்பரர்களோ — யாரும் பூணல் அணிந்ததாக நான் அறிகிலேன். வெகு நிச்சயமாக சமணர்கள் நீண்முடி மண்டையராகவோ தாடி வளர்த்தவர்களாகவோ இருக்கவே முடியாது.

  21. எனக்குமடியெடுத்துக்கொடுத்தான் அந்த ஈசன்!
    ———————————————————————

    தமிழில் புணர்ச்சியென்னும் இலக்கணத்தின் பயன்பாடுபற்றிய ஒரு நூலை பன்னிரண்டாண்டுகளாக எழுதி ஒருவாறு முடித்தபின், அதுவரை பெயரிடாமலிருந்த அந்த நூலுக்கு ஒரு பெயரைச்சொல்லுமாறு நான் வணங்கும் கருப்பசாமியிடம் கேட்டுநின்றேன்.

    கருப்பசாமியோ, ‘என்னிலும்பெரியவரைக்கேள்!” என்றார். கருப்பசாமி நேரில்வந்து பேசினாராவென்றால், இல்லை. ஆனால், நாம் மனத்தால் நினைப்பவை ஒலியாக நம் மனத்தால் கேட்பதைப்போல, இந்த சொற்களை நான் மனத்தாலேயேகேட்டேன். அதாவது நானேதான் நினைத்தேனென்றுவைத்துக்கொள்ளுங்களேன்! நானெதற்கு ‘என்னிலும்பெரியவரைக்கேள்’ என்றுசொல்லவேண்டும்?

    சரியென்று, எல்லாக்கடவுளர்க்கும் பெரியகடவுளாகிய சிவபெருமானைவேண்டிக்கேட்டேன். அவரோ, ‘வெல்லம்’ என்று ஒற்றைச்சொல்லில்விடைதந்தார்!

    இந்த ஒற்றைச்சொல்லை எப்படி தலைப்பாய்வைப்பதென்றெண்ணி, தமிழ்க்கடவுளாகிய முருகப்பெருமானைவேண்டிநின்றேன். அவரோ, ‘ஔவையைக்கேள்!’ என்றுசொன்னார்.

    அதன்படி ஔவையாரைத்தொழுது ‘ஔவையாரே பெயர்சொல்லும்!’ என்றேன். அவரோ, ‘தாழி’ என்று சிவபெருமானைப்போல ஒற்றைச்சொல்லில்விடைதந்தார்.

    ‘வெல்லம்’ ‘தாழி’ என்ற இரண்டுசொற்களையும்வைத்துக்கொண்டு என்னசெய்வதெனத்தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது, ‘இது தமிழைப்பற்றியநூலாயிற்றே, இவற்றோடு தமிழென்பதையும் சேர்த்துப்பார்த்தாலென்ன?’ என்றுநினைத்து, ‘தமிழ்’ ‘வெல்லம்’ ‘தாழி’ ஆகிய மூன்றுசொற்களையும் சேர்த்துப்பார்த்தால்,

    ‘தமிழ்வெல்லத்தாழி’ என்றபெயர்வந்தது. இதையே நூலுக்கு பெயராகவைத்தேன்.

    நூல் புணர்ச்சியால் பொருளில் மாற்றமுண்டாகுமென்பதை அடிப்படைக்கருத்தாய்க்கொண்டது. அதற்கேற்றவாறு, ஈசனாலும் ஔவையாலுமெடுத்துக்கொடுக்கப்பட்ட இந்த நூலின் தலைப்பும் புணர்ச்சியால் இருவேறுபொருளைக்கொண்டதென்பது இந்த தலைப்பின் சிறப்பு.

    அதாவது, தமிழ்வெல்லம் + தாழி = தமிழ்வெல்லத்தாழி என்றுபார்த்தால், ‘தமிழ்வெல்லத்தை தன்னகத்தேகொண்ட ஒரு தாழி’ என்பதுபொருள்.

    இதையே, தமிழ்வெல்லம் + அத்து + ஆழி = தமிழ்வெல்லத்தாழி எனக்கொண்டாலோ, ‘தமிழாகியவெல்லத்தைக்கொண்ட ஆழி (பெருங்கடல்)’ என்றாகிறது.

    நூலை ஒரேசொல்லால் தாழியென்றும் ஆழியென்றுஞ்சொல்வது புணர்ச்சியினாலென்பதும் நூலானது புணர்ச்சியைப்பற்றியதேயென்பதும் பொருத்தமன்றோ?

  22. மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    தமிழ்நாட்டில் போர்கள் பல நிகழ்ந்திருக்கின்றன. போரில் பல்லயிரக்கணக்கானவர்கள் கோரமான முறையில் மடிந்தது உண்மையான வரலாறே! “கலிங்கத்துப் பரணி”யில் எப்படியெல்லாம் மாண்டார்கள் என்பரத்தை விவரித்திருப்பதைப் படித்தால் வயிற்றைக் குமட்டிக்கொண்டு வரும். அது இலக்கியத்தின் ஒன்பது சுவைகளில் ஒன்றான அருவருப்புச் சுவை (பீபத்ஸ ரசம்). அதில் மிகைப்படுத்தல் இருந்தாலும், முதலாம் குலோத்துங்க மன்னனின் படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமானின் தலைமையில், கலிங்கர்களின் (ஒரிசா) படை அழித்தொழிக்கப்பட்டது உண்மையான வரலாறுதானே! மேலும், போரில் பிடிபட்ட எதிரிப் படைத்தலைவர்களின் (மேலைச் சாளுக்கியர்கள்) தலையை கொய்வதும் சோழர்களின் வழக்கம் என்று வரலாற்றில் குறிக்கப்பட்டு இருக்கிறது.

    தங்கள் மன்னன் போரில் வென்றால், தலையைத் துண்டித்துக்கொண்டு தன்னையே கொற்றவைக்குப் பலியாகக் கொடுக்கும் வழக்கமும் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறது. சில கோவில்களில் வீரர்கள் தங்கள் தலையைத் துண்டிக்க முயலும் சிற்பங்களைக் காணலாம். அந்த வீரர்கள் பிற்காலத்தில் காவல் தெய்வமாக வணங்கப்பட்டர்கள். இதுவும் வரலாறே!

    அதுபோலவே, கொடிய குற்றங்களுக்கு கழுவேற்றும் தண்டனையும் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறது. கல்வெட்டுகளிலும், மன்னர்களின் மெய்க்கீர்த்திகளிலும் சிறப்பைப் பற்றிக் குறிப்பார்களே தவிர, எப்படி ஒருவரைக் கொன்றார்கள் என்று குறிப்பிடுவது வழக்கம் இல்லை.

    எனவே, அப்படிப்பட்ட தண்டனை தமிழ்நாட்டில் இல்லை என்று வாதாட இயலாது. தில்லைக் கோவில் சிற்பத்தில் கழுவேற்றம் காண்பிக்கப்பட்டு இருக்கிறது. இல்லாத ஒன்றை கோவிலில் சேதுக்கி இருக்க மாட்டார்கள்.

    தகுந்த ஆதாரம் கிடைக்கும் வரைகழுவேற்றப் பட்டவர்கள் சமணர்களா என்று நாம் வாதம் செய்துகொண்டு இருக்கலாம்.

    சேக்கிழார் மிகைப்படுத்தி எழுதினர் என்று வாதாடலாமே தவிர, அவர் பொய்யுரைத்தார் (கழுவேற்றத்தைப்பற்றி) என்று என்னால் எடுத்துக்கொள்ள இயலவில்லை.

    உதாரணமாக, திருவாசகத்தில் (கீர்த்தித் திருவகலல்) கரு எப்படி வளருகிறது என்று மாணிக்கவாசகர் எழுதி உள்ளார். இக்கால மருத்துவக் கண்டுபிடிப்புகள் வரும்வரை மாணிக்கவாசகர் எழுதியதற்கு ஆதாரம் இல்லை, அதை ஒப்புக்கொள்ள முடியாது என்றுதான் நாம் நினைத்திருப்போம்.

    சமயப் பூசல்களில் மக்கள் சில சமயங்களில் கொடுமையான செயல்களைச் செய்வது உலக நியதிதான். அது தமிழ்நாட்டிலும் நடந்துதான் இருக்கிறது. வரலாற்றிலிருந்து நாம் கசப்பான உண்மைகளையும், பாடங்களையும் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  23. உயர்திரு பொன்முடி அவர்களே!
    நல்ல விளக்கம். சொற்புணர்ச்சிகளைப் பற்றி எழுதியது மிகவும் நன்றாக இருக்கிறது.

  24. அன்பார்ந்த ஸ்ரீ அரிசோனன்,

    உங்களது வ்யாசத்தில் இரண்டு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.

    பெரியபுராணத்தின் ஆரம்பச்செய்யுட்கள் எப்படி இறையருளால் சமைக்கப்பட்டன என்ற அழகான புனைவு. அழகுற பக்தி உணர்வை ப்ரதிபலிக்கும் புனைவு.

    அதற்கு முன் சொல்லப்பட்ட புனைவான சமணக்கழுவேற்றத்துக்கு நீங்கள் ஆதாரமாக எடுத்துக்கொண்டது புலியூர்க்கோவிலில் உள்ளதாக நீங்கள் பகிர்ந்துள்ள சிற்பம்.

    \\ தகுந்த ஆதாரம் கிடைக்கும் வரைகழுவேற்றப் பட்டவர்கள் சமணர்களா என்று நாம் வாதம் செய்துகொண்டு இருக்கலாம். \\

    இதுவரை ஆராயப்பட்ட ஆதாரங்களின் பாற்பட்டு சமணர்கள் கழுவேற்றப்படவில்லை என்ற விஷயம் சரித்ர ரீதியாக நிர்த்தாரணம் செய்யப்பட்ட விஷயம். ஹிந்துத்வவாதிகள் மற்றும் இடதுசாரி சார்புடைய ஆனால் நிஷ்பக்ஷ வாதியால் ….. இருதரப்பிலிருந்தும் நிர்த்தாரணம் செய்யப்பட்ட விஷயம்.

    இதையெல்லாம் வாசித்தறிந்த பின்னரும்………இதை மறுதலிக்கும் விதத்தில் ஆதாரங்கள் ஏதும் இல்லாத பக்ஷத்திலும் கூட…….. கழுவேற்றப்பட்டவர்கள் சமணர்களா என்று வாதம் செய்ய முனைவது விதண்டாவாதம் அல்லது சுஷ்கதர்க்கம் ஆகும்.

    நீங்கள் வ்யாசம் எழுதும் சமயம் உங்களுக்கு இந்த விஷயத்தின் முழுப்பின்னணி தெரியாமல் இருந்திருக்கலாம் என்று ஏற்றுக்கொள்கிறேன்.

    Again revisit the summary of PAK sir.

    சம்பந்தர் காலத்திய கழுவேற்ற சம்பவம் சேக்கிழார் மற்றும் நம்பியாண்டார் நம்பிகளால் கிட்டத்தட்ட 350 வருஷங்களுக்கு பிற்பட்ட காலத்தில் வடிக்கப்பட்டதால் நம்பகத் தன்மை குறைகிறது என்று பாக் சார் அபிப்ராயப்படுகிறார். மறுக்க முடியவில்லையே. # 1

    யார் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறார்களோ — அதாவது சமணர்கள் — அவர்களது இலக்கியங்களிலோ கல்வெட்டுகளிலோ இது பற்றிக் குறிப்பேதும் இல்லை. இவ்வளவு பயங்கரமான ஒரு சமாசாரத்தை இவர்களது எதிரிகளான சைவர்கள் செய்திருந்தார்கள் என்றால் வறுத்தெடுத்திருக்க மாட்டார்கள்? atleast அறம் பாடியிருக்க மாட்டார்கள்? # 4

    Its not as if there have been no stone carvings of Jains with respect to this issue. In fact some stone carvings which narrates such an incident as described by PAK sir at # 5 have been found. But those were dated at a latter period as alleged by PAK sir and accordingly were rejected on the same logic as you find at #1.

    \\ தில்லைக் கோவில் சிற்பத்தில் கழுவேற்றம் காண்பிக்கப்பட்டு இருக்கிறது. இல்லாத ஒன்றை கோவிலில் சேதுக்கி இருக்க மாட்டார்கள். \\

    கோயில் சிற்பங்களில் வடிக்கப்பட்ட விஷயங்களில் இருந்து சரித்ரத்தையும் பெறலாம் என்பது ஏற்புடைய விஷயம். ஆனால் கோவில் சிற்பங்களில் காணப்படும் விஷயமனைத்தும் சரித்ரத்தையே படமெடுக்கிறது என்பது ஏற்புடையது அல்ல. Again specifically read, #1 and #5 to understand the bias and flaw in your above statement.

    உங்கள் வ்யாசத்தில் தில்லைச்சிற்றம்பலக் கோவிலில் உள்ளது என்ற படிக்கு பகிரப்பட்டுள்ள சிற்பம் கழுவேற்றம் என்ற விஷயத்தைக் காண்பிக்கிறது. அவ்வளவே. கழுவிலேற்றப்பட்டவர்கள் பூணூல் அணிந்துள்ளார்கள். நீண்முடி மண்டையராகவும் மீசை தாடி வளர்த்தவர்களாகவும் காணப்படுகிறார்கள்.

    சமணக்கழுவேற்றம் என்ற விஷயம் மனதிலேறிய உங்களுக்கு இந்த சிற்பத்தைக் கண்டதும் கழுவில் காணப்பட்டவர்களை சமணர்களாகக் கண்டது வியப்பில்லை. ஆனால் சமணர்களின் அடையாளங்களுக்கு விரோதமாகக் காணப்படும் இவர்களின் லக்ஷணாதிகளை அறிந்த பின்னரும் சாரமில்லாத கற்பனையை மறுதலிக்காதது வியப்பே.

    சிவனடியார்களையும் திருமாலடியார்களையும் மதிக்க வேண்டும் என எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் போதித்துள்ளார். நான் சைவனல்ல. ஆனால் சிவனடியார்கள் பால் மிக்க மதிப்புடையவன். சரித்ரத்தை நிஷ்பக்ஷமாக ஆராய்ந்துள்ள ஹிந்துத்வரான ஸ்ரீமான் ஜடாயு அவர்களும் இடதுசாரி சார்புடைய ஸ்ரீமான் பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன் அவர்களும் வண்டி வண்டியாக காரண கார்யங்களை சமர்ப்பித்து — சமணக்கழுவேற்றம் என்பது வெற்றுப்புனைவு என்று நிர்த்தாரணம் செய்துள்ளார்கள்.

    நான் மிக மதிக்கும் சைவர்கள் மாற்று மதத்தை ஆச்ரயிக்கும் சமணர்களை கழுவேற்றக்கூடிய செயற்பாடுடைய கொடிய ஒழுக்கமுடையவர்கள் அல்லர் என்பதனையே மறுதலிக்க முடியாத சரித்ரச் சான்றுகள் காண்பிக்கின்றன.

    அப்படியிருக்க இவ்வளவு ஆதாரம் இருக்கும் போதும் வெற்றுப்புனைவுகளின் பாற்பட்டு சைவர்கள் கிராதர்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்வதால் மட்டிலும் சைவர்கள் கொடியவர்கள் ஆக மாட்டார்கள் என்பது என் ஆழ்ந்த கருத்து.

    அன்பே சிவம் என்று படத்தின் பெயரை வைத்து விட்டு …….கூத்தாடியான கமலஹாசன்…… படம் முழுதும் *அன்பே சிவம்* என்று சொல்லக்கூடிய ஆசாமி …….மஹாகிராதனாக எல்லோரையும் கொடுமை செய்பவனாகப் படத்தைக் காண்பித்தது …….இந்த தளத்தில் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

    கற்பனையான விஷயத்தை மனதில் வாங்கி ஏற்கவொண்ணா புனைவை தவறுதலாக வடித்தமை கண்டனத்துக்கு உரியதல்ல. ஆனால் சரித்ரத்துக்கும் ந்யாயத்துக்கும் ஒவ்வாதபடிக்கான விஷயத்தை சுற்றிச் சுற்றி உரக்கப்பேசுதல் கடும் கண்டனத்துக்கு உரியது.

    சைவர்கள் கிராதர்கள் அல்லர். மாற்றுச் சமயத்தவர்களை……. அவர்கள் மாற்றுச் சமயத்தின் படி ஒழுகுகிறார்கள் என்ற படிக்கு மட்டிலும்…….மிகக்கொடிய விதத்தில் அறநிலைக்கொவ்வாத படிக்கு கொலை செய்யும் வன்மமுடையவர்கள் அல்லர். இது சைவனல்லாத நான் சொல்லும் விஷயம். இதை மறுதலிக்க விழைபவர்கள் ……முறையான சரித்ர ஆதாரங்களை முன்வைத்து மட்டிலும்…….. சைவர்களால் சமணர்கள் க்கழுவேற்றப்பட்ட விஷயத்தை நிர்த்தாரணம் செய்யப் புகலாம்.

    சமணர்கள் மாற்றுச் சமயத்தவரே என்றாலும் நாம் ஏற்கவொண்ணா சமயக்கொள்கைகளைக் கொண்டிருந்தவர்கள் என்றாலும்…………. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தேசத்தில் நிலவி வந்த சமயங்கள் கடந்த அறக்கோட்பாடுகளின் பாற்பட்டு இவ்வளவு இழிவான தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று கண்டிப்பாக உரக்கச் சொல்வேன்.

    சமணக்கழுவேற்றம் சம்பந்தமாக உருப்படியான ஆதாரம் என்று ஏதாவது கொடுக்கப்பட்டாலன்றி மேற்கொண்டு விவாதிப்பதற்கு அருகதை வாய்ந்த விஷயமாக இதை நான் கருதவில்லை.

  25. ஓர் அரிசோனன் அவர்கட்கு ( நீவீர் ஒரு அரிசோனன் அல்லர் )
    பெரிய புராணம் உங்கள் வீட்டுத் தோட்டது கிள்ளுக் கீரையன்று. உங்கள் இட்டம் போல் கிள்ளி எறிதற்கு. தெய்வச் சேக்கிழார் பெருமான், குறுமுனியும் ஒப்பாகா மாண்பும் ஏற்றமும் உடையவர். தில்லை மூதுரின் கோலமா பொதுவில், தியாகேசப் பெருமானும் இவர்கள் அடியாரின் அடியேன் யான் என்று தென் தமிழின் பயனுரைத்த பெருமை உடை தில்லை வாழ் அந்தணரை விடுத்தது ஒரு சிவாச்சாரியாரை வலிந்து புகுத்தியுள்ளீர். முப்போதும் திருமேனி பிற சிவாலயங்களில் தீண்டிச் செய்யும் அவர் சீரைப் பாடிய சேக்கிழார் பெருமான் அவரை “ஒய்” என்று அனுசிதமாக அழைப்பதாக மீண்டும் மீண்டும் எழுதியுள்ளீரே. தக்க ஆசிரியரிடம் திருமுறையை முறையாகப் பயின்று, பழைமையும், பண்பும், பயிற்சியும், நண்பும், விழுப்பமும், சைவ ஒழுக்கமும், மாட்சியும் பெற்று, எழுத்தும், சொல்லும், யாப்பும் அறிந்து, அதன் பின்னரும் எழுத வேண்டும் என்ற நசை உண்டாயின் நாயன்மார் (நாயன்மார்கள் என்றுரைப்பது பிழை) மீது மாறாத பக்தி கொண்டோரைத் தலைப்பட்டு அவர் தம் சம்மதம் பெற்று நீர் எழுதலாம். சிவ சிதம்பரம்.

  26. ஓய் என்று எழுதியது தவறாய் இருக்கலாம். ஆனால் அறிசோணன் யார் என்ற என் சந்தேஹம் தீர்ந்தது. நிற்க.

    சமணர்கள் எந்தக் காலத்திலும் தமிழகத்தில் பெரும்பான்மையோர் இல்லை, ஆனால் ஏழாம் நூற்றாண்டில் அவர்கள் தமிழகத்தின் இரண்டு பேரரசர்களையும் தங்கள் மடத்துக்கு மாற்றி விட்டார்கள். அதனால் அப்போது தமிழ் நாடு ஐய்ந்து வருஷம் முன்பு ஆந்திரா இருந்தது போல் இருந்தது.

    இஸ்லாமிய படை எடுப்பு நடந்ததால் சமணர்கள் தங்கள் அஹிம்சைக் கடைப்பிடிக்க முடியாமல் இங்கு சைவத்திற்கும், வடக்கே வைஷ்ணவத்துக்கும் மாறினார்கள். ( அதான் vegeterian ஹோட்டல் இங்கே சைவம் அங்கே வைஷ்ணவம்)

    மகேந்திரன் ஏன் சைவத்துக்கு மாறினான் என்றால் ஒரு சமணனாக அவனால் புலிகேசியுடன் சண்டை போட முடியவில்லை.( அஹிம்சை. சமணம் சண்டை போட விடாது) கோட்டைக் கதவை சாத்திக்கொண்டு இருந்துவிட்டு பழி ஏற்றான். பின்னர் யுத்தம் செய்ய வேண்டி அவன் சைவமாக மாரி, அவன் மகன் மகேந்திரன் சிவ பெருமான் திரிபுரத்தை எரித்தது போல் வாதாபியை எரித்தான்.

  27. வ்யாசத்தின் கருப்பொருளிலிருந்து விலகிக் கருத்துப்பதிவதற்கு க்ஷமாயாசனங்கள்.

    ஸ்ரீ டி. ஆர். ரமேஷ் அவர்களுடைய https://templeworshippers.org என்ற இணைய தளத்தை பார்க்க நேரிட்டது மிக்க மகிழ்ச்சி.

    Temple Worshippers Society என்ற ஸ்தாபனம் மூலம் தமிழக ஆலயங்களில் ஆக்ரமிப்புகள் மற்றும் செக்யுலர் சர்க்கார்களின் அனாவச்ய தலையீடுகள் போன்றவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக இணையதளம் தெரிவிக்கிறது.

    இந்த ஸ்தாபனத்தின் குறிக்கோள்கள் செயல்பாடுகள் பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் ஸ்ரீ ரமேஷ் அவர்கள் விரிவாக எழுதுவது பலருக்கும் பயனளிக்கும்.

    இயன்றால் https://www.brajfoundation.org இணைய தளத்தைப் பார்வையிடவும் என்றும் விக்ஞாபித்துக்கொள்கிறேன். இந்த ஸ்தாபனம் 84 க்ரோசம் விஸ்தீர்ணம் உள்ள வ்ரஜ தாமம் முழுவதையும் புனருத்தாரணம் செய்வதில் முனைந்துள்ளது. வ்ரஜ தாமத்தில் இருப்பதாகக் கருதப்படும் கிட்டத்தட்ட 1000 நீர்நிலைகள், பற்பல மலைகள், காடுகள், விசேஷமான தாவரங்கள் போன்றவற்றை மீட்கப் பாடுபடுகிறது. முதற்காரியமாக முழு வ்ரஜ தாமத்தையும் அதில் உள்ள இயறகைச் செல்வங்களைப் பற்றியும் முறையாக survey and mapping செய்துள்ளது. பற்பல நீர்நிலைகளைப் போராடி மற்றும் கனரக மிஷனெரிகள் துணைகொண்டு மீட்டெடுத்து சுற்றுலாக்கண்ணோட்டத்துடனும் ஆன்மீகக் கண்ணோட்டத்துடனும் புனருத்தாரணம் செய்துள்ளது. ப்ருந்தாவனத்தில் ப்ரபலமான ரங்கஜீ மந்திர் அருகில் உள்ள க்ருஷ்ண லீலைகளுடன் சம்பந்தப்பட்ட ப்ரம்ம சரோவர் என்ற தடாகம் ஓரிரு வருஷங்கள் வரை குப்பைக்கூளமாக காட்சியளித்தது. பற்பல எதிர்ப்புகளையும் எதிர் கொண்டு இந்த தடாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல நீர்நிலைகள் மிகக் குறிப்பாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பல பணிகளை நேரிலேயே பார்த்து வியந்தும் இருக்கிறேன்.

    தமிழகக் கோவில்களைப் பற்றிய முழுத்தகவல் கலைக்களஞ்சியம் தமிழ் ஹிந்து அன்பர்களால் தயாரிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    பல்லாவரத்தருகே மகேந்த்ரவர்மன் கட்டிய ஐந்து குகைக்கோவில்கள் இன்று தர்க்காவினால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள அவலத்தை ஸ்ரீ ரமேஷ் அவர்களின் இணையதளம் பகிர்கிறது.

    தமிழகக் கோவில்கள் அனைத்தைப் பற்றியும் கோவிலின் வரைபடம், அதில் உள்ள மூர்த்திகள், அதன் ஸ்தலபுராணம், கோவிலுக்கு உள்ள சொத்துகள், நிலபுலன்கள், ஸ்தல வ்ருக்ஷம், கோவிலைச் சார்ந்த நீர்நிலைகள் ( கோசக க்ஷேத்ரம் என்றறியப்படும் ஆமருவியப்பனின் தேரெழுந்தூர் கோவிலருகே உள்ள குளம் ஆக்ரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் அபாயம் பற்றி இங்கோ அல்லது வேறு தளத்திலோ வாசித்தது நினைவு) இவையாவும் compile செய்யப்பட வேண்டும்.

    தமிழகத்து கோவிலைச் சார்ந்த தடாகங்கள், குளங்கள் பற்றிய நிலை மனதை வாட்டும் விஷயம். எண்ணிறந்த நீர்நிலைகள் தூர்ந்து போய் நீரில்லாமல் வற்றிக்காட்சியளிப்பது வருத்தம் தரும் விஷயம். பற்பல நீர்நிலைகள் ஆக்ரமிப்பாளர்களால் அகற்றப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்ட அவலம் தமிழகத்திற்கே உரிய அவலம்.
    தமிழகத்தில் உள்ள ஏரிகள் பலவும் பஸ் நிலையங்களாகவும், குடியிருப்புக் காலனிகளாகவும், விளையாட்டு மைதானங்களாகவும், ஆக்ரமிக்கப்பட்ட வயல்வரப்புகளாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆறுகள் அனைத்தும் மணல்வாரி அரசியல் வ்யாதிகளால் பாழ்செய்யப்பட்டது போதாதென்று சாக்கடைகளுடன் கலக்கப்பட்டு சரிசெய்யக் கடினமான வகையில் ப்ரதூஷணம் செய்யப்படுகின்றன.

    இந்த அவலத்தினால் தமிழகத்தின் நிலத்தடி நீர் அதலபாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.

    கோவில்களையும் கோவில்களில் உள்ள கல்வெட்டுகளையும் பாதுகாக்க முனைபவர்கள் மிகுந்த பரிச்ரமம் எடுத்து ஒரு முழுமையான நோக்குடன் கோவில் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைந்த ரீதியில் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    முருகன் அருள் முன்னிற்க.

  28. மதிப்பிற்கு உரிய டி.ஆர். ரமேஷ் அவர்களே,

    உயர்திரு கிருஷ்ணகுமார் எழுதியதுபோல உங்கள் இணைய தளம் மிகவும் நன்றாக இருக்கிறது. இறையிடங்களின் மேன்மையை மிகவும் நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். உங்கள் தொண்டு வாழ்க, வளர்க என்று எல்லாம் வல்ல இறைவனை ஏத்துகிறேன்!

    உங்கள் பின்னூட்டத்தில் எம்பெருமான் சிவனின் அம்சமான உருத்திரனைக் காணுகிறேன். இறைவனின் அந்த அம்சத்தை உங்கள் எழுத்துகள் மூலம் எனக்குக் காட்டிகொடுத்தமைக்கு மிக்க நன்றி! எல்லாம் அவன் அருள்!

    நீங்கள் எழுப்பிய கருத்துகளுக்கு எனது சிற்றறிவுக்கு எட்டியமட்டில் விளக்கம் கொடுத்திருக்கிறேன். பிழையிருந்தால் பொறுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    1. தோழமை இருந்தால் எவரையும் ‘ஒய்’ என்றழைக்கலாம். என் உருவகக் கதையில் சேக்கிழார் பெருமானுக்கும், புனை பாத்திரமான ஒரு சிவாச்சாரியாருக்கும் உள்ள நட்பையே அந்த ‘ஓய்’ என்ற விளிப்பின்மூலம் காட்டியிருக்கிறேன். சுந்தரர் பெருமான் சிவபெருமானையே நண்பனாகக் கருதிப் பாடல் இயற்றியது தாங்கள் அறியாததல்லவே!

    2. நாயன்மார்கள் என்று ஏன் எழுதக்கூடாது என்று எனக்கு விளக்கினால், மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன். பல கோவில்களில் ‘நாயன்மார்கள்’ என்று எழுதியிருப்பதைப் படித்திருக்கிறேன். மரியாதையைக் குறிக்கும் பொருட்டு ‘கள்’ என்ற விகுதி சேர்க்கப்படுவது முறைமைதானே!

    3. தில்லைவாழ் அந்தணர்கள் வணங்கத்தக்கவர்கள் என்று சுந்தரர் பெருமானே தனது திருத்தொண்டத்தொகையில் உரைத்துவிட்டதால்தான், மகாபாரதம் எழுத வேதவியாசருக்கு ஆனைமுகத்தோன் எழுத்தராகப் பணி புரிந்து அருளியதுபோல, இறைவனே தனது அடியாரான ஒரு சிவாச்சாரியாரைத் தன அடியார்களின் புராணத்தை எழுத்தராக இருந்து சேக்கிழாருக்கு உதவ அணிப்பிவைத்ததாகப் புனைந்துள்ளேன்.

    4. நான் ‘அரிசோனன்’ அல்ல என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? அரிசோனன் என்பதற்கு எப்படிப் பொருள் செய்து கொண்டீர்கள்?

    உருத்திரமூர்த்தியான தாங்கள், எனக்கு ‘அன்பே உருவான சிவமாக’ப் பதிலக்குமாறு வேண்டி விழைகின்றேன்.

    ஓம் நமச்சிவாய! தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! திருச்சிற்றம்பலம்!

  29. அன்பர்களுக்கு சில விளக்கங்கள்:

    1. திகம்பர சமணர்களில் இல்லறத்தார் பூணூல் அணிவர்; ஒரு ஆச்சாரமான இல்லற சமணன் (ஸ்ராவகன் என்று ஆண்களையும்; ஸ்ராவகி என்று பெண்களையும் அழைப்பர்)- பூணூல் அணியும் ஜைனன்- எவ்வாறு சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்று “ஸ்ராவாக சாரம்” (இல்லறத்தார் ஒழுக்கம்) என்ற நூல் விரிவாக விளக்கும். தற்போதய தமிழக திகம்பர இல்லறதோர் பூணூல் அணிந்தாலும், சந்தியாவந்தனம் செய்வது மற்ற மதங்களை போலவே குறைந்து வருகிறது. ஆனால் திகம்பர சாது பூணூல் அணிய மாட்டார்;தாடியும் ஜடா முடியும் தரிக்க மாட்டார். சிற்பத்தில் உள்ளது ஒன்று சமண இல்லறதாராய் இருத்தல் வேண்டும் அல்லது புனைவாக இருத்தல் வேண்டும்.

    2. எனக்கு தெரிந்த வரையில், சமண நூல்களில், கழுவேற்றதுக்கான குறிப்புகள் இல்லை. ஒரு வேளை கழுவேற்றிய பிறகு, தமிழக ஜைனர்கள் உயிருக்கு பயந்து, குறிப்புகள் எழுதாமல் இருந்திருக்கலாம்.

    பார்ஸ்வநாதன்.

  30. ஓர் அரிசோனன் அவர்கட்கு
    சிவனருளும், குருவருளும் நிங்கட்கு சிறக்க!

    1. தோழமை இருந்தால் எவரையும் ‘ஒய்’ என்றழைக்கலாம். என் உருவகக் கதையில் சேக்கிழார் பெருமானுக்கும், புனை பாத்திரமான ஒரு சிவாச்சாரியாருக்கும் உள்ள நட்பையே அந்த ‘ஓய்’ என்ற விளிப்பின்மூலம் காட்டியிருக்கிறேன். சுந்தரர் பெருமான் சிவபெருமானையே நண்பனாகக் கருதிப் பாடல் இயற்றியது தாங்கள் அறியாததல்லவே!

    3. தில்லைவாழ் அந்தணர்கள் வணங்கத்தக்கவர்கள் என்று சுந்தரர் பெருமானே தனது திருத்தொண்டத்தொகையில் உரைத்துவிட்டதால்தான், மகாபாரதம் எழுத வேதவியாசருக்கு ஆனைமுகத்தோன் எழுத்தராகப் பணி புரிந்து அருளியதுபோல, இறைவனே தனது அடியாரான ஒரு சிவாச்சாரியாரைத் தன அடியார்களின் புராணத்தை எழுத்தராக இருந்து சேக்கிழாருக்கு உதவ அணிப்பிவைத்ததாகப் புனைந்துள்ளேன்.

    “””””” பொய்யே நடையாய் கட்டித் தோன்றிய சீவக சிந்தாமணியில் அரசன் ஆழங்கால்பட்டிருப்பது கண்டு சேக்கிழார் பெருமான் கருணையினால், இம்மைக்கும் மறுமைக்கும் சிவகதையே உறுதி பயக்கும் எனக்கொண்டு, அவன் உய்யும் பொருட்டும் உலகம் உய்யும் பொருட்டும் அம்பலவானரே அடியெடுத்து கொடுத்துப் பாடிய திருமுறை திருத்தொண்டர் புராணம். அண்டர்நாயகன் அடியெடுத்துக் கொடுத்த அருட்செயலை அனுச்சிதமாகப் புனைந்துரைத்தல் அடாத செயல். சங்கரன்தாள் தமது சிரங்கொள் தெய்வச் சேக்கிழார் பெருமானும்
    அடியார் சரிதம் உரைக்கும் போது “நாந்தெரிந்தவாறு உரைப்பாம்” என்றே அருளிச்செய்வார். தெய்வச் சரிதங்களில் நாம் புனைந்துரைக்க வேண்டியன எவையும் இல்லை.

    சேக்கிழார் பெருமான் ஆடல்வல்லானிடம் திருத்தொண்டர் சீர் பாட இறையருளை வேண்டித் தில்லைப் பொதுவில் இறைஞ்சா நிற்ப, இலகு மன்றினில் ஆடுவார் திருவருளினால் “உலகெலாம்” என்ற வானொலி சீரடியார் அனைவரும் கேட்க எழுந்தது என்பதே உண்மை.
    இ:.து இவ்வாறாக, அங்கு சிவாச்சாரியார் ஒருவரைத் தோற்றிவித்து, தொண்டர் சீர் பரவுவார் அவரை தோழமை பற்றி அடாது விளிப்பார் எனக்கொள்ளல் ஆமாறோ? “”””””

    2. நாயன்மார்கள் என்று ஏன் எழுதக்கூடாது என்று எனக்கு விளக்கினால், மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன். பல கோவில்களில் ‘நாயன்மார்கள்’ என்று எழுதியிருப்பதைப் படித்திருக்கிறேன். மரியாதையைக் குறிக்கும் பொருட்டு ‘கள்’ என்ற விகுதி சேர்க்கப்படுவது முறைமைதானே!

    “”””நாயன்மார் என்ற சொல் பன்மைச் சொல். நாயன்மார்கள் என்றுரைத்தல் மிகை. “”””

    4. நான் ‘அரிசோனன்’ அல்ல என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? அரிசோனன் என்பதற்கு எப்படிப் பொருள் செய்து கொண்டீர்கள்?

    “”””” அரிசோனன் என்ற சொல் உயிர் எழுத்துடன் தொடங்குதலால் ஒரு அரிசோனன் என வழங்கலாகாது. “ஓர் அரிசோனன்” என்பதே சரி. “””””

    உருத்திரமூர்த்தியான தாங்கள், எனக்கு ‘அன்பே உருவான சிவமாக’ப் பதிலக்குமாறு வேண்டி விழைகின்றேன்.

    “”””அடியேனை மிகவும் சிறப்புச் செய்கின்றீர். அடியேன் நாடகத்தால் அடியார் போல் நடிக்கும் செய்கையன்றி சிவமாம் பெற்றியினை அடையும் செய்கைகள் எவையும் புரிந்திலேன். “””””

    ஓம் நமச்சிவாய! தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! திருச்சிற்றம்பலம்!

    “””””””அம்பலவாணர் அருளாலே உங்கட் பணிகள் என்றும் இன்பம் பெருகும் இயல்பு பெற்று விளங்குவதாக!
    சிவ சிதம்பரம் “””””””

  31. \\ சிற்பத்தில் உள்ளது ஒன்று சமண இல்லறதாராய் இருத்தல் வேண்டும் \\

    அன்பின் ஸ்ரீ பார்ஸ்வநாதன்,

    இல்லறத்தார் ஜடா முடி தரித்தல் திகம்பர ஜைன ஆசாரத்திலோ அல்லது ஸ்வேதாம்பர ஜைன ஆசாரத்திலோ சொல்லப்பட்டிருக்கிறதா?

  32. நானும் கூட, டி.ஆர். ரமேஷ் அவர்களைப் போல இறைச் செயலில் இப்படி ஒரு புனைவு செய்வதை ஏற்க மனம் இல்லாதிருக்கிறேன். இறைவன் அடிஎடுத்துக் கொடுத்ததைப் புனைவினால் விவரித்தல், பின்னாளில் அந்த இறைச் செயலுக்கே கெட்ட பொருளைகே கற்பிக்க நம் மதத்தின் விரோதிகளுக்கு வாய்ப்பளிக்கும் அபாயம் உள்ளது.

    எனக்குத் தெரிந்து சேக்கிழார் அடிப்பொடி, யாழ்ப் பல்கலைக் கழகத்தால் முனைவர் பட்டம் தந்து சிறப்பிக்கப்பட்ட சிவஞானி திரு டி.என்.ராமச்சந்திரன் அவர்களுக்கு டி.ஆர்.ரமேஷ் என்ற பெயரில் ஒரு புதல்வன் உண்டு. அவரும் இங்கு பதியும் ரமேஷ் அவர்களும் ஒருவரா என்ற ஐயம் எனக்கு உள்ளது.

  33. சமணர்களின் கழுவேற்றம் புனைவாக இருந்தால், ஏன் மதுரை மீனாட்சி கோயிலுள் (தெப்பக்குளத்துப்படி) மற்றும் இங்கு காட்டப்படும் சிதம்பரத்திலும் இருக்கும் கல்வெட்டுக்களை நீக்க கிருஷ்ணகுமார் போன்றோர் போராடக்கூடாது ?

    கல்வெட்டுக்கள் இருக்கும் வரை கதைகளும் இருக்கும் வரும் தலைமுறைகள் நம்பும்.

  34. சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என்.ராமச்சந்திரன் அவர்களின் மூன்றாவது புதல்வர் தாம், இங்கு இடம் பெறுகின்ற பதிவாளர் திரு T. R. ரமேஷ் அவர்கள்.

  35. அன்பார்ந்த ஸ்ரீமான் *ஓர்* அரிசோனன்

    நீங்கள் கருத்துப்பதிவது ஹிந்து அறிவியக்கத்தின் ஒரு அங்கமாக விளங்கும் தமிழ் ஹிந்து தளத்தில் என்ற புரிதல் உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன்.

    \\\\ ஆக, சேக்கிழார் எழுதியது பொய் என்றும், PAK சாரும், மதிப்பிற்கு உரிய ஜடாயு அவர்களும் எழுத்துதானே உண்மையாகப் பட்டது. அதுதானே உங்கள் வாதமாக இருந்தது! \\\\ சேக்கிழார் மிகைப்படுத்தி எழுதினர் என்று வாதாடலாமே தவிர, அவர் பொய்யுரைத்தார் (கழுவேற்றத்தைப்பற்றி) என்று என்னால் எடுத்துக்கொள்ள இயலவில்லை. \\\\ தகுந்த ஆதாரம் கிடைக்கும் வரைகழுவேற்றப் பட்டவர்கள் சமணர்களா என்று நாம் வாதம் செய்துகொண்டு இருக்கலாம். \\\\

    நீங்கள் ஒரு விஷயத்தை *******சரித்ர பூர்வமானது******** என்று நிறுவ விழைந்தால்……….

    யார் எழுதினார்கள் என்று உரத்துக்கூறுவதில் அர்த்தமே இல்லை.

    என்ன கூறினார்……… அதற்குத் தரவுகள் யாவை என்பதில் தான் விஷயம் இருக்கிறது…….. அதாவது நிர்த்தாரணம் செய்யப்பட வேண்டிய விஷயம் *******சரித்ர பூர்வமானது****** என்றால்…………

    சிறியேனைப்பொறுத்தவரை சிறியேன் பகிரும் கருத்துக்கள் நிர்த்தாரணம் செய்யப்பட்ட அறுதி முடிபுகள் என்ற படிக்கு…… ஆழமான வாசிப்பு இருந்தால் மட்டிலும்……. அப்படியான விஷயங்களைப் பற்றி மட்டிலும்…… நிஸ்ஸம்சயமாகக் கருத்துப் பதிவது வழக்கம். அப்படி இல்லாத விஷயங்களில் சிறியேனின் புரிதல் என்ன என்று பகிர்ந்த பின்னரே கருத்துப்பதிவது வழக்கம்.

    சிறியேன் ஒரு கருத்தைத் தவறாகப் பதிந்திருந்தால் ……….. தள வாசகர் யாரேனும் தகுந்த தரவுகளுடன் அதை மறுதலித்தால்…… சிறியேனுடைய கூற்று தவறு என்று நிர்த்தாரணம் செய்யப்பட்டால்…… சிறியேன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவாகாது. சரியான புரிதலை சிறியேன் மட்டிலும் பெறுவதில்லை. தளத்தின் அனைத்து வாசகர்களும் பெறுவார்கள்.

    தெய்வச் சேக்கிழார் பெருமான் எழுதியது பெரிய புராணம் – திருத்தொண்டர் புராணம்.

    தளத்தின் பீஷ்ம பிதாமஹரான ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் புராணம் பற்றிக் கூறிய இரு கருத்துக்களை உங்கள் கவனத்துக்கு வைக்கிறேன்.

    கருத்து :- 1

    https://tamilhindu.com/2011/08/tamils-and-vedanta-6/

    \\\\ மீண்டும் சொல்லுகின்றேன். திருவிளையாடற்புராணம் போன்ற சைவபுராணங்கள் அனைத்துக் கற்பனையே. சிவனுக்கு உமை என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் என்பதெல்லாம் அகண்டப் பொருளை அனுபவத்திற்குக் கொண்டுவர, உருவுடைய மனுடப் பிறவி அறிந்துகொள்ளப் பெரியவர்கள் மேற்கொண்ட உத்தியே. புராணக் கதைகளை உன்மை என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும் இலர். \\\\\

    ******* புராணக் கதைகளை உன்மை என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும் இலர் *******

    இந்த மேற்கண்ட வாசகத்தை அழுத்தம் திருத்தத்துடன் வாசிப்பீர்களாக.

    கருத்து :- 2

    https://tamilhindu.com/2013/10/sivadvaita-bhashyam/

    சிறியேன் :-

    \\\\ \\\\நீலலோஹித ருத்ராம்சத்துடன் மஹாகாளேஸ்வர ஸ்வாமி ஆசியுடன் அவதரித்தார் என்று பெளராணிகத்தனமான நம்ப முடியாத செய்தி கூறப்பட்டுள்ளது.\\\\

    நம்ப முடியாத செய்தி என்று மட்டிலும் சொல்லியிருந்தால் கூட மேற்கண்ட வாசகம் சரியான பொருள் தந்திருக்கும். அதற்கு பௌராணிகத்தனமான என்ற விகுதி வருத்தத்தை அளிக்கிறது.

    புராணங்களைத் தாழ்த்திச் சொல்ல வேண்டும் என்பது தங்கள் அபிப்ராயமாக இருக்காது என்பது என் புரிதல். பின்னிட்டும் இந்த அபசப்தத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

    அஷ்டாதச மஹாபுராணங்கள் யாவை என்பதில் அபிப்ராயபேதம் இருக்கலாம். புராணங்களில் இடைச்செருகல்கள் இருக்கலாம் என்பது சிஷ்டர்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமே.

    தசலக்ஷண புராணானி என…..ஸ்ருஷ்டி வர்ணனம் (facts as to cosmos and creation) பூகோளககோள வர்ணனம் (Geographical descriptions) …..ரிது வர்ணனம் (description of seasons) ….ராஜவம்சவர்ணனம் (facts about history of kings)….என்றெல்லாம் கருத்துடன் ஸலக்ஷணமாக……. சாக்ஷாத் விஷ்ணுஸ்வரூபியான வ்யாசரால் எழுதப்பட்ட புராணங்களில் ஆங்காங்கு காலக்ரமம் சொல்லுதல் அல்லது இலக்கியச்சுவை கருதி மிகைப்படுத்தல்களும் இருக்கலாமேயன்றி புராணங்கள் மிகப்பெரும்பகுதி தத்வார்த்தம் மற்றும் மிகத்தேவையான தகவல்களின் கருவூலம் என்பது என் புரிதல். \\\

    ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் :-

    \\\\\ புராணங்கள் சைவசித்தாந்தத்திலும் பிரமாணமே. சில்ர் வரலாற்று உண்மைக்குச் சற்றும் பொருந்தாமல் தாம் கருதியவற்றை மிக் உயர்த்திக் கூற நிலை நாட்ட அவை ஏதோ புராணங்களில் உள்ளதாக எழுதிவிடுகின்றனர். அக்கற்பனை மொழிகளைப் பிரமாணமாக எடுத்து ஆளுவோரின் கருத்து வலுவற்றதென ஒதுக்கப்படும். புராணப் பிரசங்கம் செய்வோர் இத்தகைய கற்பனைகளில் ஈடுபடுவர். ‘நீலகண்ட மஹா காவியம்’ எனும் நூல் அத்தகைய கறபனை என்பது என் கருத்து. அவர்களின் கற்பனை மொழிகளையே இக்கட்டுரை ‘பெளராணிகத்தனமான’ என்னும் பிரயோகத்தால் ஒதுக்குகின்றது. தாங்கள் கூறுவதிலும் உண்மை உள்ளது . என்கூற்றிலும் உண்மை உள்ளது. மீண்டும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். \\\\

    ******* சில்ர் வரலாற்று உண்மைக்குச் சற்றும் பொருந்தாமல் தாம் கருதியவற்றை மிக் உயர்த்திக் கூற நிலை நாட்ட அவை ஏதோ புராணங்களில் உள்ளதாக எழுதிவிடுகின்றனர். அக்கற்பனை மொழிகளைப் பிரமாணமாக எடுத்து ஆளுவோரின் கருத்து வலுவற்றதென ஒதுக்கப்படும். *******

    மேற்கண்ட வாசகத்தை அழுத்தம் திருத்தமாக வாசிப்பீர்களாக.

    தெய்வச் சேக்கிழார் பெருமான் எழுதியது புராணம். புராணக்கதைகளை உண்மை என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும் இலர் என்பது முனைவர் ஐயா அவர்களின் கருத்து. அதற்கு மாறுபாடான கருத்தைக் கொண்டவன் சிறியேன்.

    நிற்க.

    1. புராணங்களில் ****இருந்தும் ***** வரலாற்றை கரந்துறையலாமேயன்றி *****…………..புராணங்கள் சொல்வது எல்லாம் சரித்ரம்***** …………….என்பது அறிவு பூர்வமான வாதம் ஆகாது………… ஆகவே ஆகாது……..

    2. \\\\ ஆக, சேக்கிழார் எழுதியது பொய் என்றும், PAK சாரும், மதிப்பிற்கு உரிய ஜடாயு அவர்களும் எழுத்துதானே உண்மையாகப் பட்டது. அதுதானே உங்கள் வாதமாக இருந்தது \\\\ ………… PAK சாரோ ஸ்ரீமான் ஜடாயுவோ முன்வைக்கும் வாதம் ………. அதை வாசித்து சிறியேன் பகிர்ந்த கருத்து………. சேக்கிழார் பெருமான் சொன்ன கருத்து பொய் என்பது அல்ல. மாறாக சரித்ர பூர்வமான ஆதாரம் கொண்ட ஒரு கருத்து அல்ல என்பதே. தெய்வச் சேக்கிழார் பெருமான் சொல்லியது *பொய்* என சிறியேன் எங்கு கருத்துப் பகிர்ந்துள்ளேன்? முனைவர் ஐயா பகிர்ந்த கருத்துக்களை……….. நமக், மிர்சி, மசாலா கலக்காது ………. நேரடியாக சிறியேன் கீழே பகிர்ந்தமையையும் கவனிக்க.

    3. முனைவர் ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் அவர்கள் பகிர்ந்த கருத்திலும் கூட ……. அவர்கள் ****பொய்*** என்ற வார்த்தையை நேரடியாக ப்ரயோகிக்கவில்லை என்று கருத்துப்பகிர்வது தான் நேர்மையான செயற்பாடு.

    ******* புராணக் கதைகளை உன்மை என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும் இலர் ************** சில்ர் வரலாற்று உண்மைக்குச் சற்றும் பொருந்தாமல் தாம் கருதியவற்றை மிக் உயர்த்திக் கூற நிலை நாட்ட அவை ஏதோ புராணங்களில் உள்ளதாக எழுதிவிடுகின்றனர். அக்கற்பனை மொழிகளைப் பிரமாணமாக எடுத்து ஆளுவோரின் கருத்து வலுவற்றதென ஒதுக்கப்படும். *******

    4. ஆனால் இப்படியெல்லாம் புராணங்கள் பற்றிக் கருத்துப் பகிர்ந்த ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் அவர்கள் கூட………….

    \\\\ திருஞானசம்பந்தப் பெருமானுடன் வாது செய்து கழுவேறியவர்கள் திகம்பர சமணர்கல் \\\

    என்று இங்கு கூறுவது எதன் ஆதாரத்தில் என்பது சிறியேனுக்கு விளங்கவில்லை?

    *******புராணக்கதைகளை உண்மை என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும் இலர்****** என்று மஹாசயர் கூறி விட்டதால் அவர்களுடைய ஆதாரம் பெரிய புராணமாக இருக்கவியலாது என நினைக்கிறேன்……………

    அப்படியானால் முனைவர் அவர்கள் ஸ்ரீமான் பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன் அவர்களும் ஸ்ரீமான் ஜடாயு அவர்களும் முன்வைத்த தரவுகளில் முக்யமான ஆக்ஷேபங்களுக்கு ……என்ன ப்ரதிவாதம் வைக்க விழைகிறார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

    சரியான வாதங்களும் சரியான தரவுகளும் மட்டிலும் வரலாற்றை படியெடுக்க முடியும் என்பதை ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் ஏற்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

    வரலாற்றில் இருந்து நிச்சயம் பாடம் பெற வேண்டும் தான். ஆனால் அன்பையே அறமாகக் கொண்ட சைவர்களை கொலைவெறி கொண்டவர்களாகச் சித்தரிப்பது புராணம்…………….. அர்த்தவாதம் என்று மட்டில் முடித்து விடுவது மட்டிலும் சரி………..சம்பந்தமே இல்லாத ஒரு கழுவேற்ற சிற்பத்தை ஆதாரமாக வைத்து வரலாற்றை திரிக்க முனைப்பது ஏற்கவொண்ணாதது.

    வரலாற்றில் கழுவேற்றம் என்ற தண்டனை இருந்திருக்கலாம். மறுப்பதற்கில்லை.

    ஆனால் சைவர்கள் தம் சமயக்கருத்துடன் உடன்படாத மாற்றுச் சமயத்தவரான சமணர்களை கழுவிலேற்றிக்கொன்றார்கள் என்பது வரலாற்றின் படி உண்மை இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது ஸ்ரீமான் பக்ஷிராஜன் அனந்த க்ருஷ்ணன் மற்றும் ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் பகிர்ந்த கருத்துக்களும்.

    இல்லை சமணர்கள் சைவர்களால் கழுவேற்றப்பட்டார்கள் என……இதை வரலாற்று பூர்வமாக மறுக்க விழைந்தால் …… மாற்றுக்கருத்தினர் முன்வைக்கும் ஆக்ஷேபங்களை கூர்ந்து கவனித்து ……………. சரியான ப்ரதி வாதங்களை முன் வைக்க வேண்டும்.

    தூர்வாச கௌசிக விரிஞ்சி மிருகண்டு புத்ரான்
    தேவேந்த்ர பாண ஹரி சக்தி ததீசி ராமான்
    கண்வாத்ரி பார்கவ பிரஹஸ்பதி கௌதமாதீன்
    புண்யான் இமான் பரம பாசுபதான் ஸ்மராமி.

    துர்வாசர், கௌசிகர், பிரம்மா, மிருகண்டு முனிவரின் புத்திரர்கள், தேவேந்திரன், பாணாசுரன், ஹரி, சக்தி, கண்வர், அத்ரி, ததீசி, பிருஹஸ்பதி, கௌதமர் ஆகிய முனிவர்கள், ராமர்கள் (பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன்), ஆகியோர் பாசுபதர்கள் என்று கூறும் ஒரு சுலோகத்தைப் படித்திருக்கிறேன். (நன்றி – ஸ்ரீமான் ஜடாயு — ஆஷேபத்துக்காகத் தேடப்போனாலும் கூட ஆடல்வல்லான் அடியார் பால் சேர்க்காமல் விடுவதில்லை என்று சங்கல்பம் வைத்திருக்கிறான் போலும்) —

    தமிழில் சம்ஸ்க்ருத ச்லோகத்தை எழுதுகையில் ஒற்றெழுத்துக்களை உள்ள படி எழுதினாலேயே சந்தத்தை உள்ளபடி க்ரஹிக்க முடியும் அதன் படி மேற்படி அருமையான ச்லோகம் ஓரிரு பிழை திருத்தத்துடன்.

    தூர்வாச கௌசிக விரிஞ்சி ம்ருகண்டு புத்ரான்
    தேவேந்த்ர பாண ஹரி சக்தி ததீசி ராமான்
    கண்வாத்ரி பார்கவ ப்ருஹஸ்பதி கௌதமாதீன் (बृहस्पति)
    புண்யானிமான் பரம பாசுபதான் ஸ்மராமி.

    ஸ்ரீமான் ***ஓர்*** அரிசோனன் அவர்கள் முன்வைத்த சாரமில்லா சுஷ்க தர்க்கங்கள் எவை என்பதனை அடுத்த உத்தரத்தில் பார்ப்போம்.

  36. தமிழ் மொழிக்கு சைவமும் வைணவமும் ஆற்றிய தொண்டுகள் ஏராளம். பௌத்தமும் சமணமும் வட இந்தியாவை சேர்ந்தவை. தென் இந்தியாவில் புகுந்து பல குழப்பங்கள் விளைவித்து மக்களை துயருக்கு அழைத்து சென்றதாக வரலாறு சொல்கிறது. ஆனாலும் அவை தற்போது ஹிந்து மதத்தோடு கலந்து விட்டது. நம் கலாச்சாரம் என்பது சைவம், வைணவம், சாகித்யம், காணபத்யம், கௌமாரம் & சௌரம் என்பதே. தமிழும், பிரகிருதமும் ஆதி மொழிகளாகும். சமஸ்கிருதம் இரண்டும் கலந்து வந்த பொதுவான மொழியாகும். பிராகிருதத்தை அழித்துவிட்டார்கள், தமிழையும் சமஸ்கிருதத்தையும் அழிக்க முயல்கிறார்கள்.அந்நிய மதங்களான முஸ்லிமும் கிறிஸ்துவமும் அவர்கள் கலாச்சாரத்தை நம்முள் திணிக்க முயல்வதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *