அச்சுதனின் அவதாரப் பெருமை

சனாதன தருமத்தைச் சேர்ந்த ஆத்திகர்கள் அனைவரும் “நமக்கு மேல் இருந்துக்கொண்டு நம்மை ஆளும் பரம்பொருள் ஒன்று உண்டு” என்று இசைந்தவர்களே. ஒரு காலத்தில் வேதத்திற்குப் புறம்பான சமயங்களின் தாக்குதல்களிலிருந்து ஆத்திகத்தை மீட்டுத் தந்தவர் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்.

அவரும், ‘இது நல்லது, இது தீயது’ என்ற அடிப்படையில் உயிர்களையெல்லாம் ஆளுகின்ற இறைவன் என்று ஒருவனும் இல்லை” என்ற கொள்கையும், “லோக விருத்தியானது இறைவன் துணை இல்லாமல் வெறும் காமத்தினால் விளையும் ஆண்-பெண் சேர்க்கையின் காரணத்தால் மட்டுமே நடக்கிறது” என்ற கொள்கையும் அசுரர்களுக்கே உரியவை என்று தம் பகவத் கீதை உரை நூலில் (அத்தியாயம் 16, சுலோகம் 8 ) முழங்கியுள்ளார்.

“அந்தப் பரம்பொருள் எத்தகையது? அதன் இலக்கணம் என்ன? அந்தப் பரம்பொருள் என்ன செய்கிறது? நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அத்தகைய பரம்பொருள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்? அந்தப் பரம்பொருளை அறிவதனால் நமக்கு என்ன பயன்?” என்ற கேள்விகள் நியாயமானவையே.

நாம் இன்று கேட்கும்dhs9vnn5_58c8sw7sg8_b இக்கேள்விகளையெல்லாம் அன்றே ஆராய்ந்த தவமுனிவர்கள், “கண்களுக்குப் பார்க்கும் ஆற்றல் எதனிடமிருந்து பிறக்கிறதோ, செவிகளுக்குக் கேட்கும் திறமை எதனால் கிடைக்கிறதோ, மூக்கின் முகரும் சக்தி எதை மூலமாகக் கொண்டுள்ளதோ, நாவிற்கு சுவைக்கும் தன்மை எதனால் நிலைபெறுகிறதோ, தோல் எதனால் தொடு உணர்வைத் தெரிந்துக்கொள்ள முடிகிறதோ, அந்த பொருளே பரம்பொருள். அத்தகைய புரிதற்கரிய பரம்பொருளை நீ மேற்கூறிய ஐம்புலன்களாலும் (ஞானேந்திரியங்களாலும்) அறியமுடியாது” என்று உபநிடதங்களில் சுருதி வாக்கியங்களாக அறுதியிட்டனர்.

கேன உபநிடதம் கண்ட முடிவு இது. இதற்குப் பின்வருமாறு ஒரு எடுத்துக்காட்டு (திருஷ்டாந்தம்/analogy) சொல்லலாம்: “கவலை” என்று ஒன்று உண்டு என்பதை அனைவரும் அறிவர். அதை எவரும் ஐம்புலன்களால் உணர்ந்து “இந்நிறத்தது, இத்தகைய மணத்தை உடையது, இத்தகைய சுவையை உடையது” என்றெல்லாம் விளக்கியிருப்பதாகத் தெரியவில்லை. அப்படியிருந்தும் மனிதன் கவலைப்பட்டுக் கண்ணீர் விடுவதை அனைவரும் அன்றாடம் பார்க்கிறோம்.

மேலும், “கவலை”, “மகிழ்ச்சி”, “துயரம்”, “கோபம்” முதலானவற்றை “மனம்” என்னும் முக்கியமான கருவியால் தெரிந்து கொள்கிறோம், “வாக்கு” என்னும் பொறியினால் (கர்மேந்திரியத்தால்) இன்னொருவருக்கு எடுத்துச் சொல்கிறோம். (கேட்பவர்களும் கவலை என்றால் என்ன என்பதை நன்கு அறிந்தவராதலால் அதைப் புரிந்துக்கொள்கின்றனர்.) ஆனால், “அந்த மனத்தாலும் அறிய முடியாத ஒன்றாக, வாக்காலும் வருணிக்க முடியாத ஒன்றாக அன்றோ இந்தப் பரம்பொருள் உள்ளது!” என்பது தைத்திரீய உபநிடதமாகிய வேதத்தின் முடிவு. [இவ்விளக்கம் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா கிருஷ்ண பிரேமி சுவாமிகள் அவர்களால் “கஜேந்த்ர மோக்ஷம்” பற்றிய உபன்யாசத்தில் விளக்கப்பட்டுள்ளதைத் தழுவி எழுதப்பட்டது.]

“மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாத ஒன்று” என்று கூறி முடித்துவிட்டால் புரிவதற்குக் கடினமாக இருக்கலாம். இதை எளிதாகப் புரிந்துக்கொள்வதற்குப் பின்வரும் எடுத்துக்காட்டு உதவும்:

(1) மனம், ஐம்புலன்கள், ஐம்பொறிகள் இவற்றிற்கு எல்லாம் ஒரு sphere of influence என்று ஒன்று உள்ளது. அதாவது கண்ணால் பார்த்துத் தெரிந்துக் கொள்வதை கண்ணை மூடிக்கொண்டு, மூக்கால் முகர்ந்து “இது வெள்ளையாக உள்ளது, பச்சையாக இல்லை” என்று கூற இயலாது.

முழுக்க முழுக்கக் குருடர்களே வாழும் ஒரு நாட்டிற்குச் சென்ற கண்பார்வையுள்ள ஒருவன்”இலைக்கு நிறம் பச்சை, கடலுக்கு நிறம் நீலம், தாமரைக்கு நிறம் சிவப்பு, சூரியனுக்கு நிறம் மஞ்சள். இலையையும் கடலையும் தாமரையையும் சூரியனையும் நான் செவியால் கேட்காமலேயே, தொடாமலேயே, முகராமலேயே, சுவைக்காமலேயே தெரிந்துக் கொள்வேன். வெகுதூரத்தில் நிலா ஒன்று உள்ளது. அதை நீங்கள் கேட்டோ, சுவைத்தோ, முகர்ந்தோ, தொட்டோ அறிய இயலாது. கண்பார்வையாகிய புலனைக் கொண்டே அறிய இயலும்.” என்று கூறினான். அந்த ஊரில் உள்ளவர்கள் “இவன் பைத்தியக்காரன், ஏதோ பிதற்றுகிறான்” என்று அவனுக்குப் பட்டம் கட்டி விட்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்றனர். இப்படித்தான் பரம்பொருளானது ‘மனம்’ என்ற புலனுக்கும் எட்டாத ஒன்றாகும்.

(2) தொட்டுப் பார்க்கக் கூடிய எந்த ஒரு பொருளுக்கும் அகலம், நீளம், உயரம் என்னும் மூன்று பரிமாணங்கள் (dimensions) உண்டு என்பதை அனைவரும் அறிவர். அதைப் போலவே, நம் அறிவுக்கு எட்டுவதைக் “கண்”, “காது”, “நா”, “மூக்கு”, “தோல்” என்னும் ஐம்புலன்கள் மற்றும் “மனம்” என்ற ஆறு பரிமாணங்களைக் கொண்ட ஒரு தளத்திற்குள் அடக்கி விடலாம். மேலும், அத்தளத்தில் உள்ள எதையும் நம் முயற்சியால் நாமே அறிந்துக் கொண்டு விடலாம்.

“பசிபிக் மகாசமுத்திரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு விசித்திர வகையான மீன் உள்ளது. அதைப் பற்றித் தெரிந்துக் கொண்டு வரவும்” என்று ஒருவர் கட்டளையிட்டால், சில மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஒரு படகிலோ கப்பலிலோ ஏறி, குறித்த இடத்திற்குச் சென்று அந்த அபூர்வமான கடல் பிராணியைப் பார்த்துவிட்டு “அது இன்ன வடிவில் உள்ளது; இன்ன நிறத்தை உடையது; இன்ன இரையைத் தின்பது; ஒரு வருடத்திற்கு சராசரி இத்தனை குட்டிகளைப் போடுவது; சராசரி இத்தனை ஆண்டுகள் காலம் உயிர் வாழ்வது” என்று அறிந்துகொண்டு விடலாம். ஆனால், “பரம்பொருளை இப்படி நம் சொந்த முயற்சியால் எத்தனை செலவு செய்தும் தெரிந்துக் கொள்ள முடியாது” என்று வேதத்தையும் பரம்பொருளையும் தவ வலிமையால் கண்ட வேதமுனிவர்கள் கூறியுள்ளனர்.

ஏனெனில், பரம்பொருள் என்பது முன்கூறிய ஐம்புலன்கள், மனம் இவற்றால் உணரப்படும் ஆறு பரிமாணங்களுக்கும் எட்டாதது. ஆகையாலேயே “ஐம்புலன்களுக்கும், மனதிற்கும் எட்டாத ஒன்று” என்று பரம்பொருளைக் கண்ட ரிஷிகள் வேதவாக்கியங்களில் அறுதியிட்டுள்ளனர்.

“பிரம்மம்” என்று கூறப்படும் பரம்பொருளைப் பற்றி விசாரம் செய்த ரிஷிகளும் ஆச்சாரியார்களும், அதன் இலக்கணங்களை மேலும் விளக்கியுள்ளனர். குறிப்பாக ஸ்ரீ ஆதிசங்கரர், “பிரம்மம் என்பது அளவற்ற வலிமையை உடைய பகவானையே குறிக்கிறது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அவனே செய்கிறான். பிரபஞ்சமானது ஒன்றுமில்லாச் சூன்ய நிலையிலிருந்தோ, ஒரு ஜடப்பொருளிலிருந்தோ, வெறும் அணுக்களைக் காரணமாகக் கொண்டோ, பாப-புண்யங்களுக்கு ஆட்பட்ட ஒரு ஜீவனிடமிருந்தோ உண்டாவது சாத்தியமில்லை (பிரம்மசூத்ர பாஷ்யம், 1.1.2)… சர்வ வலிமை மிக்கவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும், மிகப்பெரியவனாகவும் உள்ள அந்த இறைவனைப் பற்றி என்னவென்று உரைப்பது! (பிரம்மசூத்ர பாஷ்யம், 1.1.3)” என்று அறுதியிட்டார்.

“அச்சுதனின் அவதாரப் பெருமை” என்று தலைப்புக்கும் மேற்கூறப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லையே என்று சிலர் கேட்கலாம். பிரம்மத்தின் மேன்மையை மனதில் வைத்துக் கொண்டாலொழிய பிரம்மம் எடுக்கும் அவதாரங்களின் மகிமை புரிவது கடினம்.

நிற்க, இங்கு ஒரு நியாயமான ஐயம் எழக்கூடும். “நமக்கு எட்டாத இந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்வதால் ‘நமக்கு என்ன பயன்? அப்படி ஒரு பொருள் இல்லை’ என்று கூறிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே?” என்று கேட்கலாம்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் பகவத்கீதைக்கு மிகப் பிரபலமான விளக்கவுரை ஒன்று அருளியுள்ளார். அதில், இப்பொழுது எழுந்துள்ள கேள்விக்கு அவர் என்ன விடை கூறுகிறார் என்று சற்று எட்டிப் பார்த்துவிட்டு அடுத்த கட்டுரையில் இதைத் தொடருவோம். இக்கட்டுரையில் மேலே வரப்போகும் செய்திகளே அவதாரப்பெருமை பற்றி நாம் காணப்போகும் முதல் விளக்கம்.

சங்கரர் தாம் எழுதிய dhs9vnn5_54g8wgn7g4_b கீதை விளக்கவுரை நூலின் முன்னுரையில், “பிரபஞ்சம் முழுதும் ‘அவ்யக்தம்’ என்னும் மூலப்பிரக்ருதியாகிய மாயைக்குள் வசப்பட்டிருக்க, பரமனாகிய நாராயணன் அம்மாயைக்கு அப்பாற்பட்டவன்” என்று முழங்குகிறார்.

பிறகு, ஆதி கர்த்தாவாகிய ‘நாராயணன்’ என்ற பெயரை உடைய விஷ்ணுவானவன், சனாதன தர்மத்தைப் பேணிப் பாதுகாக்க தேவகி அம்மையாருக்கும், வசுதேவருக்கும் ‘கிருஷ்ணன்’ என்ற பெயரை உடைய மகனாக அவதரித்தான். ஞானம், ஐஸ்வர்யம், பலம், வீர்யம், சக்தி, தேஜஸ் ஆகியவற்றை எப்பொழுதும் தன்னிடம் இயல்பாகப் பெற்றுள்ள இறைவன், பிறப்பு-இறப்பு இல்லாதவனாக, உயிர்களை எல்லாம் ஆளும் தன்மை உடையவனாக, நித்ய-சுத்த-புத்த-முக்தனாக எப்பொழுதும் விளங்கியிருப்பினும், தன்னுடைய ஒப்பற்ற ஆற்றலினால் ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு, (ஜீவர்களைப் போல) பிறப்பதாக நமக்குக் காட்சியளித்து, உயிர்களுக்கெல்லாம் அனுக்கிரகம் புரிகிறான். தனக்கென்று தனியாக எந்த ஒரு ஆசையும் நோக்கமும் இல்லாத அவன், அருச்சுனனுடைய துயர் துடைக்க பூலோகத்தில் உபதேசம் புரிந்தான்.” என்று கிருஷ்ணாவதாரப் பெருமையை மிகச்சிறப்பாக விளக்குகிறார்.

சங்கரர் இங்கு எடுத்துள்ள “நித்ய-சுத்த-புத்த-முக்தாத்மா” என்ற இலக்கணத்தைப் பரம்பொருளாகிய பிரம்மத்திற்கு உரியதாகத் தம் பிரம்மசூத்ர-உபநிஷத் விளக்கவுரைகளில் உபயோகித்திருக்கிறார். (உதாரணமாக, பிரம்மசூத்ர பாஷ்யம் 1.1.1-4, 2.1.22, 2.3.40; ஐதரேய உபநிஷத் முதல் மந்திரத்தின் பாஷ்யம்; பிருகதாரண்யக உபநிஷத் பாஷ்யம் 1.4.7 முதலிய இடங்களில் கண்டுகொள்ளலாம்).

மேற்கூறியபடி, கிருஷ்ணாவதாரத்தை ஒரு வரலாற்று உண்மை என்றும், கண்ணனை மூலப்ரக்ருதிக்கு அப்பாற்பட்ட பிரம்மமாகிய பரமாத்மாவே என்றும் நமக்கு அறிவிக்கிறார். ஆதி சங்கரர் “ஆதி கர்த்தா” என்று கூறுவதிலிருந்து, திருமாலை வெறும் காத்தற்கடவுளாகச் சொல்லாமல், ஜகத்துக்கே முதற்காரணமாக இருப்பவனாக அறிவித்திருப்பதும் விளங்கும். மகாப்பிரளயம் முடிந்தவுடன், கல்பத்தின் தொடக்கத்தில் மூலப் பிரக்ருதி என்று சொல்லப்படும் ஜடப்பொருளிலிருந்து பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்ரங்கள் முதலியவற்றை அழிவற்றவனாகிய திருமால் சிருஷ்டித்து, அதன் பிறகே பிரளய ஜலத்தில் சயனித்து பிரமனை உந்தித் தாமரையிலிருந்து படைக்கிறான் என்பதும், அப்பிரமனை நிமித்தமாகக் (instrument) கொண்டு பிறகு சிருஷ்டித் தொழிலை தொடர்ந்து செய்து வருகிறான் என்பதுமான செய்திகளை வேதமும், மகாபாரதம் முதலிய இதிகாசங்களும், பதினெண் புராணங்களும் விளக்கியுள்ளன.

adi-sankara1நிற்க. “இப்படி தேவகி அம்மையாருக்கும் வசுதேவருக்கும் குழந்தையாகப் பிறப்பதால் பரமன் நம்மைப்போன்ற ஜீவர்களுக்குச் சமமானவனாகி விடுவானோ?” என்று கேட்கக்கூடும்.

எங்கும் நிறைந்தவனாகவும், எல்லா ஆற்றல்களையும் குறைவறப் பெற்றவனாகவும், எல்லாம் அறிந்த திறமைசாலியாகிய இறைவன் ஒரே நேரத்தில் பல உருவங்களை எடுக்கவல்லவன். அப்பேர்ப்பட்டவன் ஒரு மீனாகவோ, ஆமையாகவோ, பன்றியாகவோ, குள்ளனாகவோ, மனிதனாகவோ உருவமெடுப்பதால் எந்த விதமான ஆட்சேபமும் ஏற்படாது.

மேலும், அவன் எடுக்கும் பிறப்பை “அப்ராக்ருதம்” என்று ஆதி சங்கரர் கீதையில் வேறு இடத்தில் விளக்குவதிலிருந்து (அத்தியாயம் 4, சுலோகம் 9) நம்மைப் போன்று அழிவுள்ள உடலை எடுத்துத் துன்பப்படுவதில்லை என்பது தெரிகிறது. ஆனந்தகிரி என்னும் பிராசீன அத்வைத வேதாந்த பண்டிதர் தன்னைச் “சுத்தானந்தர்” என்னும் ஆச்சாரியாரின் சீடராகத் தம் படைப்புகளில்  அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவர் சங்கரரின் பாடியங்களுக்கு (பாஷ்யங்களுக்குக்) குறிப்புநூற்கள் (டீகைகள் என்று வடமொழியில் கூறப்படுபவை) இயற்றியுள்ளார். இப்பொழுது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் முன்னுரைப் பகுதியில் இவர், “பரமாத்மா நாராயணன் தன்னிச்சையாகக் கண்ணனாகத் தோன்றினார்.” என்று இட்டுள்ளார்.

அவதாரத்தின் முடிவிலும் நம்மைப் போல மரணம் அடையாமல், யாருடைய உந்துதலும் இல்லாமல் தன்னிச்சையால் எடுக்கப்பட்ட ஆச்சரியமான திருமேனியுடன் வைகுண்டத்திற்குத் தானே எழுந்தருளுகிறான் என்பது பாகவதபுராண வசனங்களிலிருந்து விளங்கும். இதன் விளக்கத்தை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இப்போதைக்கு,

“மரணமற்ற உடலைப் பெற்றுள்ளதால் ‘அம்ருதவபு‘ எனப்படுகிறான்”

என்று ஆதி சங்கரர் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கவுரையில் இட்டுள்ள விளக்கம் நமக்குப் போதும்.

மேலும், உலகைத் தன் கோரைப்பற்களால் தாங்கி நின்றது, மந்திர மலையைத் தன் முதுகில் தாங்கியது, மூவடியளந்து நிலத்தையும் வானுலகையும் மீட்டுத்தந்தது, பிரம்மாதி தேவதைகளிடமிருந்து சாகாவரம் பெற்று அந்த தேவர்களையும் நடுங்கவைத்த இரண்ணியாட்சன், இரண்யகசிப்பன், இராவணன் முதலிய பல அசுரர்களை வதைத்தது முதலிய பல வியக்கத்தக்க செயல்களைச் செய்திருப்பதிலிருந்தே, அவனை “ஒரு ஜீவனோ? பரமன் இவன் இல்லையோ?” என்று ஐயப்பட வாய்ப்பேயில்லை என்பதும் விளங்கும்.

இதனையே சங்கத் தமிழ்ப் புலவர்களும், “தோலாக் கோட்ட… திருவின் கணவ!” [தோல்வியற்ற கோரைப்பற்களை உடைய வராகப் பெருமானே! திருமகளாகிய இலக்குமிப் பிராட்டியின் கணவனே!] என்று (பரிபாடல் மூன்றாம் பாடலில்) உணர்த்தியுள்ளனர். ஆதி சங்கரரும்,

“தன்னுடைய அவதாரங்களில் ஒன்றில் கூட தோல்வியைக் கண்டதில்லையாதலால், திருமால் ‘அஜிதன்‘ எனப்படுகிறான்”

என்று விஷ்ணுஸஹஸ்ரநாம விளக்கவுரையில் “அஜித” என்ற நாமத்திற்கு விளக்கம் தந்துள்ளார்.

dhs9vnn5_55gd53dmmf_b dhs9vnn5_56hpv3hmfx_b dhs9vnn5_5772hmmzgt_b

ஆக, ஆதிசங்கரர் முதலிய ஆச்சாரியர்கள் கூற்றிலிருந்து, ஜகத்துக்கெல்லாம் காரணமாக உள்ள “திருமால், நாராயணன், பகவான், விஷ்ணு” என்று சொல்லக்கூடிய இறைவன், ஜீவர்களைப் போல கர்மபந்தத்தின் விளைவாக அல்லாமல், தானே இச்சைப்பட்டுப் பக்தர்களுக்குத் தன்னை எளியவனாக ஆக்கிக்கொண்டு, அவர்களுக்கு அனுக்கிரகம் புரி அவதாரங்களை எடுத்து பல அரிய செயல்களைச் செய்து வருகிறார் என்பது சித்தமாகிறது.

மனதிற்கும், ஐம்புலன்களுக்கும், வாக்கிற்கும் எட்டாத எப்பேர்ப்பட்ட பரம்பொருளாகிய இறைவன், இறங்கி வந்து வெண்ணெய் திருடும் இடைப்பிள்ளையாக நமக்குக் காட்சியளிக்கிறான் என்பதிலிருந்து அவன் எளிமையும், கருணையும், வள்ளல் தன்மையும் உடையவன் என்பது விளங்கும்.

References

[1] Brahma Sutra – Shankarabhashyam with the commentaries Ratnaprabha, Bhamati and Nyayanirnaya of Shrigovindananda, Vacaspati Misra, and Anandagiri (Second Edition), Mahadeva Shastri Bakre, “Nirnaya-Sagar” press, Bombay, 1909.

[2] The Bhagavad Gita with Eleven Commentaries, Critically Edited and Thoroughly Revised, Second Edition, Gujarati Printing Press, Bombay, 1935.

[3] The Bhagavad Gita with the commentary of Sri Sankaracharya, Translated into English by A. Mahadeva Sastri, Vedic Religion Series, Mysore Government Oriental Library, 1901.

[4] Visnusahasranama with the Bhasya of Sri Samkaracarya (Sanskrit text and English translation), R. Ananthakrishna Sastry, Adyar Library and Research Institute, 1980.

16 Replies to “அச்சுதனின் அவதாரப் பெருமை”

  1. Aaahaa,
    Sir,
    Praamaadham.
    ARPUDHAM.
    Nandri.
    Vanangi Magizgiren.
    Anbudan,
    Seenuvaasaan.

  2. Thank you sir for a very informative article. My day starts and ends with uttering of the name Lord Narayana. Lord’s blessings to you.
    By the way, I was (coincidently) lisening to the song” Narayana” ( Purandharadas) by Sudha Ragunathan in Suddha Danyasi this morning. A heart rendering kiriti. You will have tears in your eyes when you listen to this song.

  3. Dear Rama,

    Thanks for your kind response! This is my first article here and yours is the first response. Yes, “Narayana” (Suddha Dhanyasi) is quite moving. Fewer and fewer people sing Purandara Dasar’s Kritis these days 🙁 I have also personally not seen any plays/upanyAsams about Purandara Dasar. May be they are all in Kannada and is not accessible to Tamils like us… just like Azhwar’s works are not accessible (today) to Sankaradeva-sect Vaishnavites in Assam.

  4. கந்தர்வன் அவர்களே
    புரந்தரதாசரின் பல பாடல்கள் இணைய தளத்தில் கிடைக்கின்றன. அரளு மல்லிகே பார்த்தசாரதி என்பவர் எழுதிய புரந்தரதாசர் பற்றிய புத்தகம் (ஆங்கிலத்தில்) கிடைக்கிறது.( you can get the reference by googling)
    மிக அருமையாக எழுதப்பட்ட நூல்.

  5. திரு கிரி அவர்களே,

    மறுமொழிக்கு நன்றி.

    இணைய தளத்தில் ஆடியோவும் சாகித்யமும் பல இடங்களில் உள்ளன. ஆனால், சென்னை december season கச்சேரிகளில் வெறும் துக்கடாவாகப் பாடாமல் ஆலாபனை, நிரவல், ஸ்வரத்துடன் பாடுவது மிகவும் அரிதாகிவிட்டது என்பதே என் கருத்து.

    நூற்குறிப்புக்கு மிக்க நன்றி. தேடிப் பிடிக்கிறேன். கண்டிப்பாகப் பயன்பெறுவேன் என்று நினைக்கிறேன்.

  6. திரு கந்தர்வன் அவர்களே

    எளிய நடையில் அருமையாக இருக்கிறது கட்டுரை. வாழ்த்துக்கள்.

  7. திரு உமாசங்கர் அவர்களே,

    உங்கள் பாராட்டுக்களைப் படித்து மகிழ்வுற்றேன். மிக்க நன்றி.

  8. Pingback: Indli.com
  9. திரு ஸ்ரீனிவாசன்,

    தங்களுடைய மறுமொழியை இப்போது தான் பார்த்தேன். ஆதரவுக்கு மிக்க நன்றி.

  10. அன்புள்ள கந்தர்வன்,

    அவதாரம் என்ற கருதுகோளுக்கான தத்துவரீதியான விளக்கத்தை தெளிவாக, சுருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். சங்கரர் பாஷ்யத்திலிருந்து மேற்கோள்கள் காட்டியிருப்பது இன்னும் சிறப்பு. மேலும் எழுதுங்கள்.

    … எதுவே யாகக் கருதுங்கொல் இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,
    மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே?

    பிறந்த மாயா! பாரதம் பொருத மாயா! நீயின்னே,
    சிறந்த கால்,தீ,நீர்,வான்,மண் பிறவுமாய பெருமானே!
    கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் –
    இறந்து நின்ற பெருமாயா! உன்னை எங்கே காண்கேனே?

    என்ற நம்மாழ்வார் வரிகளையும் இதனுடன் இணைத்துப் படித்து மகிழலாம்.

  11. அன்புள்ள ஜடாயு,

    மிக அழகான பாசுரம், பொருத்தமாக இருக்கிறது. சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. அவதார ரகசியம் பற்றிக் குறைந்த பட்சம் இன்னும் ஒரு நான்கு கட்டுரைகளாவது வரும் என்று நினைக்கிறேன்.

  12. அச்சுதனின் பெருமைகளில் ஒன்று, தன்னை சரணடையும் வாய்ப்புக்களையும், தன்னை இகாழ்பவருக்குக் கூடக் கொடுப்பது. ராமர் என்பவர் இல்லவே இல்லை, அவர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்று இகழ்ந்த கருணாநிதி, தற்போது தன்னையும், தன மகள் கனிமொழியையும் அலைக்கற்றை ஊழல் வழக்கிலிருந்து ஜாமீன் பெற “ராம்” (ஜெத்மலானி) காலில் விழவேண்டி உள்ளதுதான் அது.

  13. உங்களின் எல்லா பதிவுகளும் அற்புதமானவை

  14. ஐயா,

    ஸ்ரீ ஆசார்யாள் எழுதிய தைத்திரீய உபநிஷத்தின் பாஷ்யம் தமிழில் கிடைக்குமா ? ஸ்ரீ ஆசார்யாளின் முன்னுரையை முழுவதும் படிக்க வேண்டி இது தேவைப்படுகிறது. நன்றி. என். ஆர். ரங்கனாதன். 9380288980. email id nrpatanjali@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *