வ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்

“மத சகிப்புத்தன்மையின்மை நாட்டின் மதச்சார்பின்மையைச் சீர்குலைத்துவிடும்” என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை அளித்திருக்கிறது. வ.களத்தூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்லாமியர்களுக்கும், அவர்களுக்கு சாமரம் வீசிய அரசியல் கட்சிகள், ஊடகங்களுக்கும் சம்மட்டி அடியாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில், தொழுதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வண்ணாரம்பூண்டி களத்தூர், சுருக்கமாக வ.களத்தூர். இங்கு சுமார் 8,000 பேர் வாழ்கின்றனர்.

ஊரின் கிழக்குப் பகுதியில் இஸ்லாமியர்களும், மேற்குப் பகுதியில் இந்துக்களும் வசித்து வருகின்றனர். இவர்களில் இஸ்லாமியர் சுமார் 4,000 பேர்; மீதமுள்ளோர் இந்துக்கள் (வன்னியர், நாயக்கர், உடையார், ஹரிஜனங்கள் உள்ளிட்டோர்).

இந்தக் கிராமத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுடன் இணைந்து செல்லியம்மன் கோயில், ராயப்பா கோயில், மாரியம்மன் கோயில் ஆகியவை உள்ளன. இவை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்துவதில் தான் இஸ்லாமியர்களின் எதிர்ப்பால் சர்ச்சை ஏற்பட்டு தற்போது உயர்நீதிமன்றம் இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து, நீதியை நிலைநாட்டி இருக்கிறது.

என்னதான் பிரச்னை?

வ.களத்தூரில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் 3 நாள் திருவிழா நடக்கும். முதல் நாள் செல்லியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், ராயப்பனை (கிராம தேவதை) அழைத்தல், இரண்டாம் நாள் மாரியம்மன் தேர் உற்சவம். மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டு வைபவம். ஜாதி பேதமில்லாமல் அனைத்து இந்துக்களும் ஒன்றிணைந்து நடத்தும் விழா இது.

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன், தேரோடும் வீதிக்கு அடுத்த தெருவில் மசூதி கட்ட (பின்னாட்களில் வரும் விளைவைப் பற்றி யோசிக்காமல்) இந்து பெரியவர்கள் ஒப்புக் கொண்டனர். அதுதான் இன்றைய பிரச்னைக்கு மூலகாரணம் ஆகிவிட்டது.

இஸ்லாமியர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்த வரை ஊருக்குள் பிரச்னை இல்லை. அவர்கள் எண்ணிக்கை கூடக் கூட,கோயில் ஊர்வலத்தில் மேளம் வாசிக்கக் கூடாது; முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்களில் தேர் ஓட்டக்கூடாது (தற்போது சகடை எனும் சிறிய வகைத் தேர்தான் ஓட்டப்படுகிறது) என ஆரம்பித்து, பின்னாளில் கோயில் திருவிழாவே நடத்தக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

வ.களத்தூரில் பிரச்னை தோன்றிய காலம் 1895-லிருந்து ஆரம்பிக்கிறது. அப்போது ஓர் கலவரம் ஏற்பட்டது. பின்னர் 1951லும், 1990லும் முஸ்லிம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்துக்கள் ஒன்றுசேர்ந்து பதிலடி கொடுத்ததால், முஸ்லிம்கள் பின்வாங்கினர்.

இனப்பெருக்கம், வெளியூர் உறவினர்களையும், வெளிநாட்டு இஸ்லாமியர்களையும் குடியேற்றுதல் மூலமாக, தங்கள் மக்கள்தொகையைக் கூட்டிக் கொண்டனர் இஸ்லாமியர்கள். குறைந்த எண்ணிக்கையில் இருந்த இந்து ஜாதியினர் பலர் ஊரை விட்டு வெளியேற ஆரம்பித்ததும் அவர்களுக்கு சாதகமாயிற்று.

இந்தக் கிராமத்தில் சர்வே எண் 119/1 என்ற இடத்தை வைத்துத்தான் இஸ்லாமியர்களால் ஆரம்பத்தில் பிரச்னை கிளப்பப்பட்டது. அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமான இடம். இங்கு தேரடியும், சாவடியும் (அலங்காரம் செய்யும் மண்டபம் – சுவாமி எழுந்தருளும் இடம்) உள்ளது. அதனை அகற்றி விட்டு பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று கோரி, நீண்ட நாட்களாக முஸ்லிம்கள் பிரச்னை செய்து வந்தனர்.

அந்த இடத்தில் கழிப்பிடம் கட்ட வேண்டும் என்றும்கூட இஸ்லாமியர்கள் 2010ஆம் ஆண்டு வரை போராடினர். அதாவது இந்துக்களின் மன உணர்வுகளைக் காயப்படுத்துவதையே தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். 1990களில் இங்கு வந்து இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்ட முஸ்லிம் தீவிரவாதியும் ஜிகாத் பேரவையின் நிறுவனருமான பழனி பாபாவுக்கு இதில் பெரும் பங்கு இருந்தது.

அந்த இடத்தில் உறுதியான தேர்நிலை ஜெயலலிதா ஆட்சியில் கட்டப்பட்ட பிறகே அப் பிரச்னை ஓய்ந்தது. பின்னர் 2012-ஆம் ஆண்டு வாக்கில் தமுமுக, தவ்ஹீத் ஜமாத் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய தீவிர இஸ்லாமிய அமைப்புகள் களத்தூரில் துவங்கப்பட்டன. அவை இந்துக்களை மிரட்டத் துவங்கின.

தேரோடும் வீதியில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு வீடுகளை வாங்கினார்கள். இந்துக்களும் நல்ல விலை கிடைத்தால் போதும் என்று விற்றார்கள். அதன் விளைவாக, தேரோடும் வீதியில் இந்துக் கடவுள் வரக் கூடாது என அழிச்சாட்டியம் செய்யும் அளவுக்கு, இஸ்லாமியர்கள் சென்றனர்.

அது மட்டுமல்ல, இந்துக்களின் திருமண ஊர்வலங்களும் கூட தாங்கள் வசிக்கும் தெருக்களில் செல்லக் கூடாது என்று மிரட்டத் துவங்கினர். 2013 ஜன. 21 அன்று, இந்துக்களின் மண ஊர்வலம் ஒன்று ராஜவீதியில் வந்தபோது இஸ்லாமியர்கள் சிலரால் தாக்கப்பட்டது. அதையடுத்து காவல் துறை நடவடிக்கை எடுத்து பலரைக் கைது செய்தது. அதன்பிறகு இஸ்லாமியர்கள் கொஞ்ச காலம் அமைதியாக இருந்தனர்.

2015-இல் மீண்டும் பிரச்னை வெடித்தது. மாரியம்மன் கோயில் திருவிழாவை 3 நாட்கள் நடத்தக் கூடாது என்று இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்தன. அவர்களுக்கு அஞ்சி, மூன்று நாள் திருவிழாவை 2015ஆம் ஆண்டில் இரண்டு நாளாகக் குறைத்துக் கொள்ளுமாறு இந்துக்களை காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் கேட்டுக் கொண்டன. தீவிரவாத இயக்கங்களை முன்னிறுத்தி இஸ்லாமியர்கள் பிரச்னை செய்ததால், அரசு வேண்டுகோளை ஏற்று, இந்துக்களும் அனுசரித்துப் போவதாக ஒப்புக் கொண்டனர்.

2016இலும் மொகரம் கொண்டாட்டத்தைக் காரணமாகக் காட்டி, கோயில் விழாவைத் தடுக்க இஸ்லாமியர்கள் முற்பட்டனர். அப்போதுதான் விழிப்படைந்த இந்துக்கள், கோயில் விழாவை விட்டுத்தர முடியாது என உறுதிபடத் தெரிவித்தனர். ஆயினும், விட்டுக் கொடுக்குமாறு மாவட்ட நிர்வாகம் கெஞ்சியதால் வேறு வழியின்றி மக்கள் ஒப்புக் கொண்டனர்.

2017லும் கோயில் திருவிழாவுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரண்டு நாள் உற்சவத்திற்கு இந்துக்கள் ஒப்புதல் அளித்தனர். அரசு நிர்வாகம் சிறுபான்மையினருக்கே சார்பாக இருந்ததால் வேறுவழியின்றி இம்முடிவை எடுத்தனர்.

அதன்மூலமாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மூன்று நாள் கோயில் திருவிழாவை இரண்டு நாட்களாக்கியது இஸ்லாமியத் தரப்பு. அதன் நீட்சியாக 2018லும், கோயில் விழாவை இரண்டு நாட்கள் நடத்துமாறு மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தியது. ஆனால், விட்டுக் கொடுக்க முடியாது என இந்துக்கள் தரப்பு உறுதியாகச் சொல்லிவிட்டது.

ஆனால் இஸ்லாமியத் தரப்போ கோயில் திருவிழாவே நடத்தக் கூடாது. அப்படி நடத்தினால் தேரோடும் வீதியில் தேர் வந்தால் தடுப்போம் என மிரட்டி, பிரச்னையில் இறங்கினர்.

அதனைக் கண்டித்து இந்துமுன்னணி சார்பில் பெரம்பலூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான களத்தூர் வாசிகள் கலந்து கொண்டனர். கோயில் வழிபாட்டு உரிமைக்காக தனியே இணையதளமே துவங்கப்பட்டது என்றால் மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்து முன்னணியின் போராட்டத்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பையும் மாவட்ட நிர்வாகம் அழைத்தது. ஆனால் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும், திருவிழா நடத்த விட மாட்டோம் என அங்கேயே பிடிவாதமாகக் கூறினர். அவர்களுக்கு அஞ்சிய காவல் துறையும், அரசு நிர்வாகமும், தேரோடும் வீதிக்குப் பதிலாக மாற்றுப் பாதையில் தேர் செல்லுமாறு வலியுறுத்தின.

அதை ஏற்க மறுத்து உயர் நீதிமன்றத்தை நாடியது இந்துக்கள் தரப்பு. தங்கள் கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி, வ.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி உடையார் என்பவர் வழக்கு தொடுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வால் ஜமாத் சார்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பு புறக்கணிப்பு:

அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, “பிரதான சாலைகளில் மட்டும் கோயில் ஊர்வலங்களை நடத்த வேண்டும்; மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியை நடத்தக் கூடாது’’ ஆகிய நிபந்தனைகளுடன், 2018 செப்டம்பர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை மூன்று நாள் திருவிழா கொண்டாட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும், கோயில் திருவிழாவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆயினும் இஸ்லாமியர்கள் கோயில் விழாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். நீதிமன்ற உத்தரவு உண்மையல்ல என்று புரளியைக் கிளப்பி, இஸ்லாமியர்களை தீவிரவாத அமைப்புகள் தூண்டிவிட்டன.

அதனால், வ.களத்தூர் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு பெரம்பலூர் சார் ஆட்சியர் விஸ்வநாதன் வி.களத்தூரில் செப். 28ஆம் தேதி முதல் அக். 4ஆம்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு நிர்வாகம், இஸ்லாமியர்களின் மிரட்டலுக்குப் பணிந்து இந்து மக்களின் திருவிழாவையே தடை செய்தது. நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்தி, தனது வீரத்தைப் பறைசாற்றியது காவல் துறை.

அதனால் அதிருப்தி அடைந்த திருவிழாக் குழுவினர் சுவாமி திருவீதி உலா நடத்தும் நிகழ்ச்சியையும், மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியையும் முற்றிலுமாக ரத்து செய்தனர். 144 தடை உத்தரவினால் திருவிழா பாதியிலேயே நின்றது.

அதனை அடுத்து, மீண்டும், நீதிமன்றத்தை கோயில் விழாக்குழுவினர் நாடினர். நீதிமன்ற உத்தரவை மீறி கோயில் விழா நிறுத்தப்பட்டதை முறையிட்டு, வ.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி உடையார் மீண்டும் வழக்குத் தொடுத்தார்.

நீதியை நிலைநாட்டிய நீதிபதிகள்:

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு, தீவிரவாத இஸ்லாமியருக்கு அஞ்சி நடுங்கும் அரசுக்கும், மக்களை மிரட்டி சமூகச் சமநிலையைக் குலைக்கும் சிறுபான்மையினருக்கும் சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் அற்புதமான தீர்ப்பை 2021 மே 8 அன்று அளித்துள்ளனர்.

“கோயில் விழாக்களை ஒட்டி, கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக நடத்தப்பட்டதைப் போல கோயில் ஊர்வலங்களை அனைத்துச் சாலைகளிலும் அனுமதிக்க வேண்டும்.

மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. மாற்று மதத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் கோயில் மற்றும் மத ஊர்வலங்களை நடத்த அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.

கோயில் ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து ஊர்வலங்களும், அனைத்து சாலை, தெருக்களில் அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு பிரிவினரின் வழிபாட்டுத் தலம் குறிப்பிட்ட சாலையில் உள்ளதால், அந்தப் பகுதி வழியாக மற்றொரு பிரிவினர் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்க முடியாது”

-என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதன்மூலமாக காலம் காலமாக தங்கள் சொந்த மண்ணில் வழிபாட்டு ஊர்வலம் சென்று வந்த உரிமையை வ.களத்தூர் இந்துக்கள் மீண்டும் பெற்றிருக்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்பை இந்த ஆண்டேனும் இஸ்லாமியர்கள் மதிப்பார்களா, அரசு அதனை உறுதியுடன் நடைமுறைப்படுத்துமா என்று வ.களத்தூர் கிராம மக்கள் காத்திருக்கிறார்கள்.

ஜனநாயக நாட்டில், இந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவே நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கியம் நிலவுவது உண்மையிலேயே வேதனைக்குரியது. மக்கள்தொகைப் பரவலில் நிகழும் மாற்றங்கள் சமுதாய அமைதியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கு வ.களத்தூர் பொருத்தமான உதாரணம்.

நாட்டின் எந்த ஒரு பகுதியில் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து சிறுபான்மையினர் ஆகின்றனரோ, அப்பகுதியில் அவர்களது வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு விடுகின்றன என்பதை உணர்ந்துகொண்டால் மட்டுமே, இந்துக்களுக்கு எதிர்காலம். இதையே வ.களத்தூர் கிராமம் வெளிப்படுத்துகிறது.

வ.களத்தூர் மற்றும் இந்த பிரசினை தொடர்பான பல்வேறு செய்திகள் வ.களத்தூர் செய்தி வலைப்பதிவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

2013ம் ஆண்டு வ.களத்தூருக்குச் சென்று கள ஆய்வு செய்த குழுவினரின் அறிக்கையை தமிழ்ஹிந்து வெளியிட்டது. இப்பிரசினையில் இந்துத் தரப்பிற்கான நீதி கிடைப்பதில் ஒரு சிறு அணிலாக பணியாற்றியதில் இந்த இணையதளம் மகிழ்ச்சியடைகிறது.

One Reply to “வ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *