கும்பமேளாவில் தலித் சகோதரிகள்

kumbh-2013-dalit-sisters-1”என் வாழ்நாளில் இப்படி ஒரு புனித அனுபவம் எனக்குக் கிடைக்கும் என்று கனவில் கூட எண்ணியதில்லை. இதை சாத்தியமாக்கிய பெரியோர்களுக்கு மிக மிக நன்றி” என்று தழுதழுத்த குரலில் கூறுகிறார் 50-வயதான உஷா சமவுர். ”தலைமுறை தலைமுறைகளாக, எனது சமூகத்தில் முதன் முதலாக இந்தப் புனித நிகழ்வில் பங்கு கொள்பவள் நானாகத் தானிருக்கும். மிகவும் பாக்கியசாலியாக உணர்கிறேன்” என்று நெகிழ்கிறார் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் டாலி.

இந்த வருடத்திய கும்பமேளாவில், பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கங்கை-யமுனை-சரஸ்வதி சங்கமத்தில் இப்பெண்களைப் போன்று நூற்றுக்கும் மேற்பட்ட தலித் சகோதரிகள் புனித நீராடினர். சடங்குகளிலும் பூஜைகளிலும் பங்கு கொண்டனர். பின்னர், சுவாமி நரேந்திரகிரியின் தலைமையில் இயங்கும் புகழ்பெற்ற பாகபன்பாரி அகாரா என்ற பாரம்பரிய மடத்தில் அனைத்து பக்தர்களுடனும் அமர்ந்து விருந்து உண்டனர். மகாமண்டலேஸ்வர் பட்டம் பூண்ட மடாதிபதிகளும், நிரஞ்சனி அகாரா உள்ளிட்ட பிரபல மடங்களைச் சேர்ந்த துறவிகளும் இந்தப் பெண்மணிகளுக்கு ஆசி வழங்கினர்.

புனிதமான, இந்து சமுதாயம் என்றென்றைக்கும் பெருமைப் படக் கூடிய முன்னுதாரணமான இத்தகைய ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியவர் டாக்டர் பிந்தேஷ்வர் பாடக் என்ற சமூக சேவகர். ”கழிப்பறை மனிதர்” என்று உலகங்கும் பிரபலமாக அறியப் படும் டாக்டர் பாடக், சுலப் இண்டர்நேஷனல் (Sulabh International) என்ற சுகாதார சமூகசேவை அமைப்பை நிறுவியர். இந்தியாவின் பல பெருநகரங்களிலும், சிற்றூர்களிலும் கூட சுலப் அமைப்பினர் நடத்தும் கழிப்பறைகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.

நவீன இந்தியாவில் காந்தியைத் தவிர்த்து கழிப்பறை என்ற அதி முக்கியமான சுகாதாரத் தேவை பற்றி அனேகமாக எந்தப் பெரிய தலைவரும் சிந்தனையாளரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. தொற்று நோய்களுக்கும், புண்பிடித்த உடல்களுக்கும், பல ஆரோக்கிய சீர்கேடுகளுக்கும் எல்லாம் அடிப்படைக் காரணம் கழிப்பறை சுகாதாரம் பற்றிய பிரக்ஞை கூட இந்தியர்களிடம் இல்லாதிருந்ததே என்பதை காந்தி அறிந்திருந்தார். அத்துடன், மனிதக் கழிவை அகற்றுதல் என்ற பணியில் அடிமைகளாகப் பிணைக்கப் பட்டிருந்த ஏராளமான தலித் சமுதாய மக்களின் சமூக விடுதலையும் இதில் அடங்கியுள்ளது என்பதையும் புரிந்து கொண்டிருந்தார். அதனால் தான் மீண்டும் மீண்டும், சில சமயங்களில் காங்கிரசின் தளுக்கான தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எரிச்சலூட்டும் வகையில், அது குறித்துப் பேசியும் எழுதியும் வந்தார். காங்கிரஸ் மாநாடுகளிலும் முகாம்களிலும் குச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு தாமே கழிப்பறைகளைச் சுத்திகரிப்பவராக வலம் வரும் காந்தியின் சித்திரம் அந்தப் பேச்சுக்களை விடவும் அதிகமாக நம் நெஞ்சில் பதிந்து விட்ட ஒன்று. தமது சொற்களுக்கு செயல்வடிவம் அளிக்க ஒருபோதும் அவர் தவறியதில்லை என்பதை என்றென்றும் நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் சித்திரம் அது.

kumbh-2013-dalit-sisters-2

அத்தகைய காந்திய சிந்தனைகளால் உந்தப் பட்ட மாபெரும் இலட்சியவாதி பிந்தேஷ்வர் பாடக். சுகாதாரம், ஒடுக்கப் பட்ட மக்களின் சமூக விடுதலை என்ற இரண்டு நோக்கங்களையும் இணைத்ததாகவே அவரது செயல்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளன. அவரது அமைப்பு தொடர்ந்து மனிதக் கழிவை அகற்றும் பணியில் தலித் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் இன்னும் ஈடுபடுத்தப் படுவதை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறது. இது தொடர்பான கடுமையான சட்டங்களைப் பிறப்பிக்கவும், அவற்றை நடைமுறைப் படுத்தவும் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திப் போராடி வருகிறது. 1970ம் ஆண்டு தொடங்கி, இந்தியா முழுவதும், குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள ’பக்கெட் டாய்லெட்’ எனப்படும் பழைய பாணி கழிப்பறைகளை நீரூற்றிக் கழுவும் ‘ஃப்ளஷ் டாய்லெட்’ வகைக் கழிவறைகளாக இந்த அமைப்பு மாற்றியிருக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான தலித் சகோதர, சகோதரிகளுக்கு சமூக அடிமைத் தளையிலிருந்து விடுதலை கிடைக்கச் செய்துள்ளது. அவர்கள் இந்த தேசத்தின் மற்ற குடிமக்களைப் போலவே சம உரிமைகளும், மதிப்பு மிக்க வாழ்வும் வாழ்வதற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளது போல, பாதாள சாக்கடைகளை நவீன தொழில் நுட்பம் மூலம் முற்றிலும் தானியங்கி முறையில் சுத்தம் செய்யும் திட்டங்களை அரசு உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் இந்த அமைப்பு குரல் கொடுத்து வருகிறது.

கும்பமேளாவில் புனித நீராடிய அந்தப் பெண்கள் எல்லா வகையிலும் சமூக மீட்சிக்கான முன்னுதாரணங்கள். அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மற்றும் டோங்க் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ராஜஸ்தானின் உட்பகுதியில் சமீபத்திய காலம் வரை சாதிய ஒடுக்கு முறையும், கண்மூடித்தனமான கட்டுப் பாடுகளும் கோலோச்சி வந்த பிரதேசம் இது. பதினைந்தாண்டுகள் முன்பு வரை இப்பிரதேசத்தில் மனிதக் கழிவை அகற்றும் பணியில் தள்ளப் பட்டிருந்தவர்கள் அவர்கள். கோயில்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப் படவில்லை. அவர்களுக்கான மதச் சடங்குகளை நடத்தி வைக்க யாரும் முன்வரவில்லை. சுலப் அமைப்பு அவர்கள் விடுதலைக்கு வழி செய்தது. அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களையும், கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போது அவர்களது சமய உரிமைகளையும் பாராட்டத் தக்க வகையில் முன்னெடுத்திருக்கிறது.

”முன்னாள் துப்புரவுப் பணியாளர்களும் நமது சமூகத்தின் பிரிக்க முடியாத உறுப்பினர்களே. அவர்கள் எந்த வகையிலும் தீண்டத் தகாதவர்கள் அல்ல என்பதை உரத்துப் பறைசாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த வருடக் கும்ப மேளாவில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம்” என்கிறார் பாடக். இந்த நற்பணி இத்துடன் நின்று விடக் கூடாது. கும்பமேளா போன்ற மாபெரும் புனித நிகழ்வுகளில் ஒவ்வொரு வருடமும் மேன்மேலும் அதிகமான தலித் மக்களை பங்கேற்கச் செய்வதற்கு ஒரு நல்ல தொடக்கமாக இது இருக்கட்டும்.

kumbh-2013-dalit-sisters-3

பல நூற்றாண்டுகளாக இந்த சமூகத்தினால் சிறைப்படுத்தப் பட்டு, இருளில் அமிழ்த்தப் பட்டு, நசுக்கப் பட்டுக் கிடந்து மீண்டவர்கள் அந்த சகோதரிகள். இந்தியத் திரு நாட்டின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் வந்து குவிந்துள்ள அனைத்து சமூக மக்களுடனும் கலந்து நின்று, நீர்த் திவலைகளை அள்ளி வீசிப் புனித நீராடிய தருணத்தில், அவர்கள் கட்டாயம் ஒரு மாபெரும் விடுதலையுணர்வையும், நம்பிக்கையையும் அடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம். பாரபட்சமற்ற தாய்மையின், மானுட கருணையின் மகத்தான சாட்சியமாக காலங்காலமாக ஓடிக் கொண்டிருக்கும் அன்னை கங்கையும் தன் அலைக்கைகளால் ஆர்ப்பரித்து அவர்களை வாழ்த்தியிருப்பாள்.

Shawshank Redemption என்ற மகத்தான திரைப்படத்தில் வாழ்வில் இனி மீளவே வழியில்லை என்று தோன்றும் இருட்சிறையிலிருந்து தனது விடாமுயற்சியாலும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையிலும் தப்பி விடுவான் கதாநாயகன் Andy. சிறைக் காவலர்களின் கடும் கண்காணிப்புகளையும் மீறி, சிறுகச் சிறுக சிறையின் உட்புறமாக சுரங்கம் அமைத்து அங்கிருந்து சாக்கடைக்குள் குதித்து நீந்தி வெளிவருவான். அப்போது பின்னணியில் ஒலிக்கும் வசனம் இங்கு நினைவுக்கு வருகிறது –

…Andy crawled to freedom through five hundred yards of shit smelling foulness I can’t even imagine, or maybe I just don’t want to. Five hundred yards.. that’s the length of five football fields, just shy of half a mile. Andy Dufresne – who crawled through a river of shit and came out clean on the other side.

உண்மையில் தூய்மையடைய வேண்டியிருந்ததது அந்த சகோதரிகள் அல்ல. அவர்களது மீட்சியின் மூலம் நூற்றாண்டுகளாக இந்து சமுதாயத்தைப் பீடித்திருக்கும் சாதிய அடக்குமுறைகள், சாதியம் விளைவித்த வெறித்தனங்கள் வக்கிர மலங்கள் ஆகிய அழுக்குகளே அந்தப் புனித நீராடலில் துடைக்கப் பட்டன. சாதிய வண்டலையும், களங்கங்களையும் தூறெடுத்து மனித நேயமெனும் பந்தத்தால் இணைந்திட, அந்த மாதரசிகள் குளித்தெழுந்த மாசற்ற புனித கங்கைப் பிரவாகம் நம்மை ஆசிர்வதிக்கட்டும்.

செய்தி, படங்கள் – https://www.sulabhinternational.org/

18 Replies to “கும்பமேளாவில் தலித் சகோதரிகள்”

  1. ”/உண்மையில் தூய்மையடைய வேண்டியிருந்ததது அந்த சகோதரிகள் அல்ல. அவர்களது மீட்சியின் மூலம் நூற்றாண்டுகளாக இந்து சமுதாயத்தைப் பீடித்திருக்கும் சாதிய அடக்குமுறைகள், சாதியம் விளைவித்த வெறித்தனங்கள் வக்கிர மலங்கள் ஆகிய அழுக்குகளே அந்தப் புனித நீராடலில் துடைக்கப் பட்டன. சாதிய வண்டலையும், களங்கங்களையும் தூறெடுத்து மனித நேயமெனும் பந்தத்தால் இணைந்திட, அந்த மாதரசிகள் குளித்தெழுந்த மாசற்ற புனித கங்கைப் பிரவாகம் நம்மை ஆசிர்வதிக்கட்டும்./”

    மிகவும் அவசியமானதும் தேவையானதுமான மாற்றத்திற்கு வழி கோலிய பெரியோர்களுக்கு நன்றி.

  2. அருமையான கட்டுரை. பாராட்ட வார்த்தைகளே இல்லை. தலித் முன்னேற்றம் குறித்து வாய்ஜாலம் செய்யும் மனிதர்களிடையே அதனை ஆதாயமாக்கி தன்னை முன்னேற்றும் தறுதலைகளிடையே இத்தகைய ஒரு அற்புத மனிதர் வாழ்க்கையையே ஆகுதியாக அர்ப்பணித்திருக்கிறார்… இதையெல்லாம் ஊடகங்கள் காட்டவே காட்டாது. அற்புதமான பணி ஜடாயுஜி.

  3. ஓர் அரிய, தூய நிகழ்ச்சியை கவனப்படுத்தியுள்ளீர்கள்.
    மிக்க நன்றி

    தேவ்

  4. உடையவரின் குழந்தைகள், திருக்குலத்தோர் என்று புகழ்ந்து இன்றும் தனது சந்நிதிகளில் ஸ்ரீ சடகோபமும் திருத்துழாயும் பிரசாதித்து உத்சவங்களிலும் ஏனைய பொழுதுகளிலும் அனைவரின் பணியையும் கொண்டு வாழ்வித்த வள்ளல் எந்தை எதிராசருக்கு திருவுள்ள உகப்பு! வாழி நீவிர் வாழி நம் எதிராசன் வாழி நம் தூப்புல் குலத்தரசர்! திருமிகு ஜடாயுவிற்கு நன்றி!

  5. இப்படிப்பட்ட நிகழ்விலே கவனம் செலுத்தி அவர்களையும் ஜாதி வேறுபாடின்றி அரவணைத்தால் மட்டுமே நமது மதம் தொடர்ந்து வாழும்.. கட்டுரையை வழங்கிய ஜடாயுவுக்கு நன்றி…டி.ஆர். கௌஷிக் சாஸ்த்ரி.

  6. A wonderful happening- though a side light of the famous Maha kumbamela, it is indeed the highlight. As pointed out by Sri.Rajamanickam, it is the truly a cleansing of the Society of one of its evils. And as usual the media, both electronic and print, maintained a ‘deafening’ silence. May the tribe of Dr. Pathak increase by thousands.
    KRISHNAMURTHY

  7. மனம் நெகிழ வைக்கும் – மகிழ்சியடையவைக்கும் அரிய பணி. சாதித்துக்காட்டிய டாக்டர் பாடக் அவர்கள் மெச்சத்தகுந்த மனிதர். காந்தி மிகவும் பெருமைப்பட்டிருப்பார்.

    கட்டுரையின் இறுதி வரி அற்புதமானது.

    சிறப்பான கட்டுரைக்கு நன்றி திரு.ஜடாயு அவர்களே.

  8. அளவற்ற சந்தோஷம் தரும் செய்தி.

    கும்பமேளாவில் ப்ரயாகையில் ஸ்நானம் செய்த தலித் சஹோதரிகளின் ஆன்மீக அனுபவத் திவலைகளில் சில துளிகள் எங்களுக்கும் கிட்டியது என்றால் மிகையாகாது. ராமகதையை சமூஹத்திற்கு வழங்கிய தொன்மையை உடையவர்களாயிற்றே இந்த சமூஹத்தினர்.இப்படி ஒரு அருமையான வ்யாசம் சமர்ப்பித்த ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு மிகுந்த நன்றி.

    ஸ்ரீ பிந்தேஷ்வர் பாடக் மஹாசயர் அவர்கள் இந்த சமூஹத்து மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு பாடுபடுவது மட்டுமின்றி இவர்களுடன் ஒன்றாக உண்டு இவர்களது ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இவர்களது ஆன்மீக முன்னேற்றத்திற்கும் பாடுபடும் அன்பர்.

    भवद्विधा भाकवता: तीर्थभूता: स्वयं विभो ।
    तीर्थीकुर्वन्ति तीर्थानि स्वान्तस्थेन गदाभॄता॥

    பவத்விதா பாகவதா: தீர்த்தபூதா: ஸ்வயம் விபோ ।
    தீர்த்தீ குர்வந்தி தீர்த்தானி ஸ்வாந்தஸ்தேன கதாப்ருதா ॥ (ஸ்ரீமத் பாகவதம் – 1-13-10)

    (கண்ணனின் மனத்துறையும் அவனடியார்கள் – அவன் மனத்துறைவதால்) அடியார்கள் கண்ணனைப் போன்றே பரிசுத்தமானவர்கள். கண்ணனைப்போன்றே அவனடியார்களும் தீர்த்த ரூபமானவர்கள். எப்போதும் கண்ணனின் மனதிலுறையும் அவனடியார்கள் தீர்த்தங்களயும் பாவனமாக்குகிறார்கள்.

    தீர்த்தராஜனான ப்ரயாகையில் கும்பமேளா சமயத்தில் ஸ்நானம் செய்யும் பாக்யம் பெற்ற அன்பர்களுக்கும் ஆரம்பமுதல் துவங்கி கும்பமேளா முடியும் வரைக்கும் கல்பவாசம் என்ற படிக்கு அங்கு தங்கி அனுஷ்டானங்களைச் செய்யும் பாக்யம் பெற்ற அன்பர்களுக்கும் பாவுகமான வணக்கங்கள்.

  9. Neenda kaala adakkumurai + odukkumuraikku intha kumba mela oru thiruppam ena eduthukkondaalum,
    Kovilgalil Dalit makkal nuzhaivu
    Dobule Glass tea/coffee shops
    Samapandhi/Sambandhi murai
    varaatha varai “Theendaamai” (UnTouchability) ozhindadhu ena koora mudiyathu.

  10. இந்த செய்தியை பார்த்தால் பதிவர் BR. மகாதேவன் ரொம்ப டென்ஷன் ஆகி விடுவார்.

  11. Mr. ZAFAR’S STATEMENT IS CORRECT. BUT, SINCE LAST 150 YEARS, SLOWLY DEVELOPMENT IS TAKING PLACE. THIS IS ONE MORE STEP FORWARD. BUT DEFINITELY WE DONT WANT TO TAKE THE SOCIETY BACK TO THE CONDITIONS PREVAILED IN MIDDLE EAST BEFORE 1400 YEARS.

  12. திரு ஜடாயு அவர்களின் கும்பமேளாவில் தலித் சகோதரிகள் என்ற கட்டுரை நமது ஹிந்து சமூகத்தில் மாற்றம் நிகழ்ந்து வருவதன் குறியீடாகக்காண்கிறேன். தலித் மக்கள் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராட சட்டபூர்வமாக எந்த ஒரு தடையில்லை என்றபோதும் ஸ்ரீ பிந்தேஸ்வர் பாடக் ஐயா அவர்கள் தலமையில் நடைபெற்ற புனிதனீராடல் வரவேற்பிற்குறியதே, ஸ்ரீ பாடக் அவர்களை இருபது ஆண்டுகளுக்கு முன் சுலப் இண்டர் நேஷனல் அமைப்பின் தலமையகத்தில் தில்லியில் ஒரு பயிலரங்கில் நேரில் சந்தித்து உரையாடும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அவரது உரையில் ஸ்ரீ விவேகானந்தர், ஸ்ரீ மாகாத்மா காந்தி மற்றும் பாபாசகேப் அம்பேட்கர் ஆகியோரின் தாக்கத்தினைக்கண்டேன். தாழ்த்தப்பட்ட மக்களிலேயே கடைனிலையில் இருக்கும் துப்புறவுத் தொழிழாளர் மீட்சிக்கும் உயர்வுக்கும் அயராது பாடுபடும் ஸ்ரீ பாடக்ஜியின் சேவை மகத்தானது. சுலப் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தக்குழந்தைகள் மிக அழகாக, நேர்த்தியாக, தெளிவாக சமஸ்கிருத சுலோகங்களை சொன்னதை நினைத்தால் இன்னும் எனக்கு அன்று போலவே ஆனந்தக்கண்ணீர் பெருகுகிறது. நம் நாட்டிற்கு இன்னும் பல நூறு பிந்தேஸ்வரர்கள் தேவை இருக்கிறது.
    சிவஸ்ரீ.

  13. மிக மன நிறைவைத் தரும் செய்தி. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்குப் பின்னராவது இந்த அளவுக்கு தலித்துகளுக்கு விடுதலை கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. இதுபோலவே பலமுனைகளிலும் விடுதலை கிடைக்க இறைவன்தான அருள வேண்டும்.

  14. உடையவரின் குழந்தைகள், திருக்குலத்தோர் என்று புகழ்ந்து இன்றும் தனது சந்நிதிகளில் ஸ்ரீ சடகோபமும் திருத்துழாயும் பிரசாதித்து உத்சவங்களிலும் ஏனைய பொழுதுகளிலும் அனைவரின் பணியையும் கொண்டு வாழ்வித்த வள்ளல் எந்தை எதிராசருக்கு திருவுள்ள உகப்பு! வாழி நீவிர் வாழி நம் எதிராசன் வாழி இப்படிப்பட்ட நிகழ்விலே கவனம் செலுத்தி அவர்களையும் ஜாதி வேறுபாடின்றி அரவணைத்தால் மட்டுமே நமது மதத்தின் தர்ம நெறியை வுலகுக்கு பறைசாட்ட முடியும் . கட்டுரையை வழங்கிய ஜடாயுவுக்கு நன்றி .

  15. காணக்கூடாது என்று சில பிற்போக்காளர்களால் சமூகத்தில் தேங்கிவிட்ட கொள்கைகளை புறம் தள்ளி புரட்சியை ஏற்படுத்தும் ”திரு.பாடக் குழுவின்” செயல்பாட்டால் பரவசத்துடன்கூடிய ஆத்மாக்களை காணசெய்த கட்டுரை ஆசிரியர் திரு.ஜடாயு அவர்களுக்கு மிகவும் நன்றி. இதைபடித்ததும் எனது பாலிய வயதில் சுமார் ஒர் ஆண்டுகள் ”பத்திரம்மா” என்ற புலைய பெண் தோள் மீது ஏறி பள்ளிக்கு சவாரி செய்த காலம் நினைவில் பட்டு மறைந்தது.

    மேலும் இந்த கட்டுரையை வாசித்த பலனாக ”சுலாப்” பற்றிய முழுவிபரங்களை வலைதளம் சென்று பார்வையிட்டேன். இதன் ஸ்தாபகர் ”பின்தேஸ்வர் பாடக்” என்ற ஒரு பிராமிணர் என்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது. அவர்களது இன்றைய வளர்ச்சி ”அழுக்கே படாமல் சுகாதார முறையில் அழுக்கை நீக்குபவர்கள்” என்று உலகளவில் பெயரும் புகழும் பாராட்டும் பெற்று வருகிறது என்பது ஒரு மகிழ்சியான சமாசாரம். அவர்களது சமூக பணிகளை பற்றி ஒரு தனி கட்டுரையே எழுதலாம்.

    மேலும் இதை படித்த தாக்கத்தினால் என்றோ வாசித்து மறந்துவிட்ட திரு.இரவீந்திரநாத் டாகுர் அவர்களின் வங்களா ஓரங்கநாடகத்தின் தமிழ் ஆக்கம். எழுதியவர் திரு.நா.குமாரசாமி என்ற பிரபல எழுத்தாளர். தலைப்பு ”புலைச்சி (சண்டாளிகா)”. இதை மறுமுறை வாசித்தேன். அந்த கதை சுருக்கம் – ஒரு புலைச்சி தான் தீண்டப்படாதவள் என்று அறிவித்தபின்பும் தன்னிடமிருந்து தண்ணீர் வாங்கி பருகிய ஒரு புத்த பிட்சு மேல் தீரா மோகம் கொள்கிறாள். அதைப்போல் அந்த பிட்சுவும் அவள் மேல் மனதை பறிகொடுத்து அதற்கு சங்க கொள்கைள் தடையாக உள்ளதை எண்ணி வருந்துகிறான்.. இவர்களது மனநிலையை அறிந்த புத்தர் அவர்களுக்கு நல்லாசிகள் சொல்லி இது பூர்வ ஜன்ம காதலின் தாக்கத்தினால் தொடர்வது இதை மீண்டும் தொடர்வது சாத்தியம் இல்லை தர்மம் ஆகாது என்று சொல்லி அந்த புலய பெண்ணை புத்த சன்னியாசியாக மாற்றிவிடுகிறார். மிகவும் சுவாரஸ்யமான படிக்க ஆவலைதூண்டும் கதை இது. இந்த கதையில சில குட்டி கதைகளும் உண்டு.

    cont…

  16. சாதிய வண்டலையும், களங்கங்களையும் தூறெடுத்து மனித நேயமெனும் பந்தத்தால் இணைந்திட, அந்த மாதரசிகள் குளித்தெழுந்த மாசற்ற புனித கங்கைப் பிரவாகம் நம்மை ஆசிர்வதிக்கட்டும்.//

    அற்புதமான கட்டுரை. ஜெய் கங்கா மா!

  17. தமிழ் ஹிந்து வாசகர்களுடன் இந்த ஒரங்கநாடகத்தின் சில வரிகளை பகிர்ந்துகொள்கிறேன்.

    தாய் – உன் ஜாதியை ஒளிக்கவில்லையே நீ? சண்டாளப் பெண் என்று சொன்னாயா?

    பிரகுருதி – சொன்னேன் அவர் ”பொய்” என்றார். ஆவணிமாதத்தின் கருமுகிலிற்குச் சண்டாளன் என்று பெயர் இட்டதனால் அதன் உயர்வு குறைந்து போகுமா! அதன் நீர் சுவையற்றதாகுமா ! இழிவாக உன்னையே நினைத்துக் கொள்ளாதே. ஆத்ம ஹத்தியைவிட ஆத்மநிந்தை மகா பாபகரமானது? என்றார் அவர் !

    வேறு ஒரு இடத்தில் –

    பிரகிருதி – ஒரு கையளவு நீர்தான் பெற்றுக்கொண்டார். அந்த நீர் ஆழமானது. எல்லை இல்லா கடல் போல் ஆகிவிட்டது. எழுகடல் நீரும் அதில் ஒன்றாகிவிட்டது. எனது குலம் அதில் அமிழ்ந்து போய்விட்டது. புதுமை பெற்றுவிட்டது. வனவாசம் தொடங்கும் பொழுது சீதாபிராட்டி இந்த நீரில்தான் ஸ்னானம் செய்தாளாம். அதை அவளுக்கு தூக்கிகொண்டு வந்தவன் ஈன குலத்தோனாகிய குகன் என்று சொன்னார் அவர் ! அதை கேட்டதிலிருந்து எனது மனம் ஆனந்த கடலாடுகிறது. கம்பீரமான குரல் ஒன்று இரவும் பகலும் ”நீர்தா” என்று சொல்லுகிறது.

    தாய் – வேட்டைக்கு புறப்பட்ட அரசகுமாரன் இதே கிணற்று கரைக்கு தானே வந்தான். அவன்கூட உன்மேல் மயக்கம் கொண்டான். நீ ஏன் அரண்மனை செல்லவில்லை !!
    பிரகிருதி – மயங்காமல் என்ன ? நான் மனுஷி என்பதை மறந்தான். மிருகத்தை வேட்டையாட புறப்பட்டான். எதிர்ப்பட்ட மிருகத்திற்கே பொன்விலங்கு போட நினைத்தான்………………. இப்படி விருவிருப்பாக செல்லும் இந்த நாடகத்தில் வரும் குட்டிகதையின் சில வரிகள் …………

    கங்கைகரையில் வாழ்ந்த வேதங்களையும் சாஸ்திரங்களையும் நன்கு கற்ற புலைய மன்ணன் த்ரிசங்கு. அவனது மகன் சார்தூலக கர்ணன். அவனுக்கு புஷ்கரசாரீ என்ற பிராமிண பண்டிதனின் பெண்ணை மணம்செய்து வைக்க விரும்பினார். முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த பிராமிணர் நீண்ட விவாததில் தோல்விகண்டு பின் தன் மகனை மணம்செய்து வைக்க சம்மதிக்கிறார். அந்த சம்பாஷனையில் சில வரிகள் –

    சிறுவர்கள் தெருபுழுதியில் மண்ணைபிசைந்து விளையாடுகிறார்கள். அந்த மண் உருண்டையை ஒருவன் வெல்ல கட்டி என்கிறான், ஒருவன் வெள்ளரிக்காய் என்கிறான், ஒருவன் மீன் என்கிறான், ஒருவன் வடை என்கிறான்,. சிறுவர்களை அதை தின்பண்டமாக நினைத்திபோதிலும் அது மண் உருண்டைதானே ! அதை போல்தான் இந்த நான்கு வர்ணமும். மனிதன் எவனுமே ஒரே தேக உருப்புகளுடன் பிறக்கிறான். மயிர், கண், மூக்கு, மோவாய், தோள், பக்கம், முதுகு, வயிறு, தொடை, குறி, கை, கால், நகம், குரல், நிறம், இவை போன்ற விஷயங்களில் வீபரிதமான மாறுதல்கள் இருப்பதாக தெரியவில்லை. மாடு, குதிரை, கழுதை, ஓட்டை, மான், பறவை யாவும் ஒன்னுகொன்று வித்தியாசம் உள்ளவை. இந்தமாதிரியான வேறுபாடுகள் நான்கு வர்ணத்தில் இல்லையே.

    இன்பம், துன்பம், ஐபுலன்களின் நுகர்ச்சி, ஊண், விளையாட்டு, உறக்கம், மலமூத்திராதி போன்ற நிலைகளிலும் வித்தியாசம் காணவில்லை. எனவே ஜாதி ஒன்றேயொழிய நான்கு அல்ல. நாலு வர்ணத்தார் என்பது மணிதனே செய்துகொண்ட பிரிவு. புஷ்கரசாரீ! உம்முடைய அழகிய பெண்ணை சார்தூல கர்ணனுக்குக் கொடுத்தால் ஒன்றும் முழுகி போகாது.

    ரிஷி குலத்தில் எத்தைனையோ பார்பனர் அல்லாதவர் ஏன் புலைய பெண்கள்கூட ரிஷிபத்தினிகளாக விளங்கியுள்ளார்கள். ஆருந்ததி யாராம்? கபிஞ்ஜலரின் தாய் சண்டாளப் பெண். மகா தேஜஸ்வியான த்வைபாயனரின் அன்னை செம்படவச்சி,. சத்திரிய மகளான ரேணுகை பிராம்மண பரசுராமனை ஈன்றெடுத்தவள். பிரம்மாவின் வாயிலிருந்து பிராமிணன் வந்தான் என்பதெல்லாம் வெறும் கதை. அது பொய்யும் தவறும் ஆகும். அது உண்மை என்றால் பிரம்மாவின் வாயில் தோன்றிய பிராமணனும் அவனது மனைவியும் சகோதரர்கள் ஆகுமே. அவர்கள் உடல உறவு கொள்வது மிருக செயல் அல்லவா? தொழில் இயக்கவே ஜாதி, சர்வ ஜீவன் எல்லாம் யோனியிலிருந்துதான் வெளிப்படுகிறது. எந்த உயிரும் ஆகாயம் காற்றிலிருந்து உருவாகாது. மேலும் கோத்திரம் பற்றி கூறுகையில் காயத்திரியின் உற்பத்தியையும் ஒவ்வொரு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தனிதனியாக காயத்திரி மந்திரம் உண்டு என்பதை விளக்கி கூறினான்..

    இந்த கதையை புத்தர் (புலயச்சி-புத்த பிஷ்சுவிற்கு சொல்லி) போன ஜன்மத்தில் நானே அந்த புலைய அரசன். இந்த புலயச்சிதான் அந்த பிராமணரின் பெண் புத்த பிஷ்சுவே சார்தூல கர்ணன் என் முடிக்கிறார் !!!

  18. GHHF Dalits successfully performed Satyanarayana Puja on large scale in Kadiri, Andhra Pradesh

    “I look upon all creatures equally; none are less dear to me and none more dear. But those who worship me with love live in me, and I come to life in them.” Bhagavad Gita, 9:29.

    More than 3000 thousand Dalits participated in performing Samoohika Satyanarayana Temple in the premise of Sri Khadri Lakshmi Narayana Temple on March 4, 2013. It was scene to be seen and experienced. The organizing committee worked hard to make sure all the arrangements were up to the par. A number of people volunteered to make sure that all the puja items are properly arranged for the families to sit and perform Satyanarayana Vratham. More than 4000 people from the nearby villages came to witness this unprecedented occurrence and supported the event with enthusiasm, commitment and passion to create the communal harmony.

    Samoohika Satyanarayana Vrathas in Laxmi Narasimha Swamy Temple at Kadiri Part 1

    https://www.youtube.com/watch?v=_u1p0DSevPY

    Samoohika Satyanarayana Vrathas in Laxmi Narasimha Swamy Temple at Kadiri Part 2

    https://www.youtube.com/watch?v=sDe1y1SWVuE

    Samoohika Satyanarayana Vrathas in Laxmi Narasimha Swamy Temple at Kadiri Part 3

    https://www.youtube.com/watch?v=EaVU1TeyL3g

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *