இரக்கமற்ற இளஞ்சிவப்பு

நன்றி: தினமணி/ மதி/ 14.01.2016
நன்றி: தினமணி/ மதி/ 14.01.2016

ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு மீதான இடைக்காலத் தடையை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், அப்போது தெரிவித்த ஒரு முக்கியமான கருத்து, நாட்டின் இளஞ்சிவப்புப் புரட்சியை கேள்விக்குள்ளாதாக்கி இருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதப் புழுதியில் அந்த முக்கியமான கருத்தை உதாசீனம் செய்துவிடக் கூடாது.

விவசாயிகளின் செல்வம் மாடுகள்...
பண்ணை மாடுகள் வேறு,… விவசாய மாடுகள் வேறு…

தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், உள்ளிட்ட காளைகள் பங்கேற்கும் விளையாட்டுகளுக்கு 2011-இல் அப்போதைய ஐ.மு.கூட்டணி அரசு கொண்டுவந்த ஒரு சட்டத் திருத்தத்தால் சிக்கல் ஏற்பட்டது. ‘காட்சிப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில்’ வன விலங்குகளுடன் காளையையும் சேர்த்தது அன்றைய மத்திய அரசு. அதற்கு அப்போதைய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முக்கிய காரணமாக இருந்தார். போட்டிகளில் காளைகள் வதைபடுவதைத் தடுக்கவே இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.

தமிழகத்தில் பரவலாக எழுந்த கோரிக்கைகளை ஏற்று, மோடி தலைமையிலான தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த ஜனவரி 7-இல் ஓர் அரசாணையை வெளியிட்டது. ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் காளைகள், எருதுகள் பங்கேற்க அனுமதி அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

அதனால், ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடந்துவிடும் என்ற நம்பிக்கை உருவான வேளையில், மத்திய அரசின் அரசாணையை எதிர்த்து ‘பீட்டா’ தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதற்கு மீண்டும் இடைக்காலத் தடை (ஜன. 12) விதித்தது. இவ்வழக்கு மார்ச் 25-இல் தான் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

எனினும், இந்த இடைக்காலத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி, திருவட்டாறு வழக்கறிஞர் என்.ராஜாராமன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜன. 13-இல் முறையிட்டார். அப்போது அவர் தனது மனுவில், ”காளைகளை தமிழர்கள் குடும்பத்தில் ஒருவராகவும், செல்லக் குழந்தைகளாகவும் கருதி வளர்க்கின்றனர். அவற்றை எப்படி அவர்கள் ஜல்லிக்கட்டில் துன்புறுத்துவர்?” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜல்லிக்கட்டின் பாரம்பரியம் , நீண்ட வரலாறு குறித்தும் தனது மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தபோது கூறிய கருத்துகள் நமது மனசாட்சியை உலுக்குபவை.

illegal-cow-transport
கருணையற்ற கடத்தல்…

“காளைகளை குடும்பத்தில் ஒருவராகவும் செல்லப் பிள்ளைகளாகவும் தமிழர்கள் கருத்துவதாகக் கூறினீர்கள். அப்படியெனில், வயதான மாடுகளை அவர்கள் ஏன் அடிமாடுகளாக அண்டை மாநிலத்துக்கு விற்கிறார்கள்?” என்று கேட்ட நீதிபதிகள், வழக்கை மீண்டும் விசாரிக்கும் போது மனுதாரரின் வாதத்தைக் கேட்பதாகக் கூறி, இடைக்காலத் தடையை நீக்க மறுத்துவிட்டனர்.

அலைகள் போலத் தொடர்ந்து வரும் செய்திக் கடலில் இந்த முக்கியமான கருத்து கண்டுகொள்ளாமல் விடப்படவே வாய்ப்புகள் அதிகம். எனவே ஜல்லிக்கட்டுக்கு இந்த விஷயத்தில் நன்றி கூறிவிட்டு, இந்த விவகாரத்தை ஆராய்வது காலத்தின் தேவையாகும்.

இந்தியாவில் பலவிதமான உற்பத்திப் புரட்சிகள் நடந்துள்ளன. விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் பசுமைப் புரட்சி, மீன்வளத்தை அதிகரிக்கும் நீலப்புரட்சி, பால்வளத்தை அதிகரிக்கும் வெண்மைப்புரட்சி, இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்கும் இளஞ்சிவப்புப் புரட்சி ஆகியவை அவற்றில் முக்கியமானவை. நாட்டின் உணவுத் தன்னிறைவுக்காக இவை மேற்கொள்ளப்படுவதாக அரசால் வர்ணிக்கப்படுகிறது.

இவற்றில் முதல் மூன்றும் உண்மையிலேயே அரசின் நடவடிக்கைகளால் உருவானவை எனலாம். இவற்றுக்கு பின்விளைவுகளும் உண்டு என்பது தனிக்கதை. ஆனால், இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க அரசு என்ன செய்தது என்று ஆராய்ந்தால், அதில் அரசின் பங்களிப்பு மிகவும் குறைவு என்பதும், நாட்டின் கால்நடைச் செல்வங்களை அழித்தே இந்த ஏற்றுமதி சாத்தியமாகி இருக்கிறது என்பதையும் உணர முடியும்.

அபாயத்தை வெளிப்படுத்தும் புள்ளிவிவரம்...
அபாயத்தை வெளிப்படுத்தும் புள்ளிவிவரம்…

நாட்டின் இறைச்சி ஏற்றுமதியில் எருமை, ஆடு, பன்றி, மீன் ஆகியவை முக்கியமானவை. (இந்தப் பட்டியலில் மாடு இடம் பெறவில்லை என்பதை கவனிக்கவும்). இதில் 90 சதவீதத்துக்கு மேல் எருமை இறைச்சி இடம் பெறுகிறது. எருமை இறைச்சி என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், இதில் மாட்டிறைச்சியும் அடக்கம். இந்த மாடுகள் அனைத்தும் விவசாயிகளின் சொத்தாக ஒருகாலத்தில் இருந்தவை.

பொதுவாக இறைச்சிக்காக நமது நாட்டில் எருமைகள், ஆடுகள், பன்றிகள், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. ஆனால், மாடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுவதில்லை. ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மாடு வளர்ப்பதற்கென்றே பண்ணைகள் உண்டு. இந்தியாவிலோ, மாடுகள் (காளைகள், பசுக்கள்) விவசாயிகளின் உறுதுணைவனாகவே வளர்க்கப்படுகின்றன. விவசாயத்தில் உழவுக்கு உதவ காளைகளும், பால் வழங்க பசுக்களும் வளர்க்கப்படுகின்றன. இவையல்லாமல் இறைச்சிக்காக மாடு வளர்க்கப்படும் சதவீதம் மிக மிகக் குறைவு.

அதாவது, காலம் முழுவதும் விவசாயிகளின் தோழனாக வாழும் மாடுகள், வயதான காலத்தில் ‘அடிமாடு’ என்ற பெயரில் விற்கப்படுகின்றன. ஏனெனில், அதன்பிறகு அந்தக் காளைகளால் உழைக்க முடியாது; பசுக்களால் பால் தர முடியாது. அதேசமயம் அவற்றுக்கு தீவனம் கொடுத்துப் பராமரிக்க வேண்டும். இதனை பெரும்பாலான விவசாயிகள் விரும்புவதில்லை.

ஒருகாலத்தில், வயது முதிர்ந்தாலும் மாடுகளை சாகும் வரை பராமரித்தவர்கள் தான் நமது விவசாயிகள். ஆனால், விவசாயமே புயலில் அகப்பட்ட தோணி போல அல்லாடுகையில், மாடுகளைப் பற்றிக் கவலைப்பட விவசாயிகள் தயாராக இல்லை. எனவே தான், கண்ணிர் மல்க, மாட்டு வியாபாரியின் கைகளில் ஒப்புவித்துவிட்டு விவசாயிகள் அடுத்த மாட்டை வாங்க சந்தைக்கு கிளம்பி விடுகின்றனர்.

Pink Revelution Cartoon
கார்ட்டூன்: நிதி சென்ட்ரல்

இது ஒரு சமூகப் பிரச்னை. ‘கோமாதா’ என்றும் ‘நந்தி’ என்றும் வழிபடப்படும் மாடுகளை விவசாயிகள் விருப்பப்பட்டு காவு கொடுப்பதில்லை. உண்மையில் தற்போதைய பொருளாதாரச் சூழல் விவசாயத்தையே காவு வாங்கிவரும் நிலையில், அவர்களின் இந்த முடிவு இயலாமையால் விளைந்த நிர்பந்தமே என்பது வெளிப்படை.

இவ்வாறு தான் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான மாடுகள் இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் தமிழகத்தின் கால்நடைச் செல்வம் இன்னும் பத்து ஆண்டுகளில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்பது கால்நடை நிபுணர்களின் எச்சரிக்கை.

ஒரு புள்ளிவிவரப்படி, நாட்டில் 1992-இல் 20.46 கோடியாக இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை 2007-இல் 19.9 கோடியாகக் குறைந்துவிட்டது. இந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தான் நாட்டில் இளஞ்சிவப்புப் புரட்சி வேகம் எடுத்தது என்பதைக் கருத்தில் கொண்டால், இப்போதைய நமது கால்நடைகளின் எண்ணிக்கை மிகவும் வீழ்ச்சி அடைந்திருக்கும் என்பதை உணர முடியும்.

இது ஒருவகையில் சுய அழிவே ஆகும். இந்தியாவின் காங்கேயம் காளை போன்ற பாரம்பரிய மாட்டு ரகங்கள் தற்ப்போது அருகி வருகின்றன. நாட்டின் பாரம்பரிய பசு இனமும் நலிந்து வருகிறது. இளஞ்சிவப்புப் புரட்சி அதன் உச்சத்தை தொடும்போது, நாட்டில் அடுத்து வெட்டுவதற்கு கால்நடைகளே மீதம் இருக்காது. ஏனெனில் இறைச்சிக்காக மாடு வளர்ப்பது நமது நாட்டில் இன்னும் தொழில்ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை.

இளஞ்சிவப்புப் புரட்சி என்பது உண்மையில் இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பை பிரத்யேகமாக மேற்கொள்வதை ஊக்குவிப்பதாக இருந்திருக்க வேண்டும். நடந்தது என்னவோ, வாழ்நாள் முழுவதும் விவசாயிக்காக உழைத்துக் களைத்த மாடுகளே கசாப்புக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இறைச்சி ஏற்றுமதியின் புள்ளிவிவரத்தை கூட்டி இருக்கின்றன. இன்று உலக அளவில் இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இது ஒருவகையில் நன்றி கொன்ற செயலாகும். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; செய்நன்றி கொன்றவர்களுக்கு என்றும் மன்னிப்பில்லை. இதனை கூறியிருப்பவர், தமிழக அரசியல் கட்சிகள் புகழ்ந்துபாடும் நமது திருவள்ளுவர் தான். ஆனால், அடிமாடுகள் மரண வாதையுடன், கைவிடப்பட்ட ஏக்கம் கண்ணீராக வழிய, மேற்கு நோக்கிச் சென்றுகொண்டே இருக்கின்றன. இதைத் தடுப்பவர்களை மதவாதிகள் என்று இதே கட்சிகள் கண்டிக்கின்றன.

cow calfs
வம்ச நாசம் செய்யலாமா?

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயம், இளங்கன்றுகளை இறைச்சிக்காகக் கொல்லக் கூடாது என்ற விதி அப்பட்டமாக மீறப்படுவதாகும். இளக்கன்றுகளைக் கொல்வது கால்நடை இனத்தை மிக விரைவிலேயே இல்லாமல் செய்துவிடும். அதை உணராமல், ஆட்டிறைச்சிக்கு மாற்றாக (கலப்படமாக) இளம் மாட்டுக் கன்றுகள் பலியிடப்படுகின்றன.

இந்த இளஞ்சிவப்புப் புரட்சியை கடந்த 2014 தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். ஆனால், பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. சொல்லப்போனால், முந்தைய ஆண்டுகளை விட சென்ற ஆண்டு இறைச்சி ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது.

2013 ஏப்ரல்- நவம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் இறைச்சி ஏற்றுமதி மதிப்பு 2.8 பில்லியன் டாலராக (ரூ. 18,760 கோடி) இருந்தது. இதுவே 2014-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 3.3 பில்லியன் டாலராக (ரூ. 22,110 கோடி) அதிகரித்திருக்கிறது. இதன் வளர்ச்சிவிகிதம் 16.74 %. 2014-ஆம் ஆண்டில் நாட்டின் இறைச்சி ஏற்றுமதி மதிப்பு 4.5 பில்லியன் டாலர் (ரூ. 30,150 கோடி) என்பது நிதர்சனத்தில் பெருமைக்குரிய விஷயமல்ல.

ஆனால், மத்திய அரசு இவ்விஷயத்தில் ஏதும் செய்யாமல் இருப்பதன் காரணம், விவசாயிகளின் அதிருப்தியை எதிர்கொள்ள முடியாததே. உ.பி, பிகார் போன்ற மாநிலங்களில் இறைச்சிக்காக எருமைகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் இறைச்சிக்காக எருமையோ, மாடோ வளர்க்கப்படுவதில்லை. அப்படியே வளர்ப்பதாகக் கூறினாலும், அவை தானாக மேய விடப்படுவது தான் உண்மை.

மேய்ச்சல் நிலத்தில் பண்ணைகள் அமைத்து மாடுகள் வளர்த்து அவற்றை இறைச்சிக்காக வெட்டுவது தவறாகாது. ஆடுகள் அதற்காகவே வளர்க்கப்படுகின்றன. அது தொழிமுறையிலானதாக இருக்கும். மாடுகள் அவ்வாறு பண்ணைத் தொழிலாக வளர்க்கப்படுவதில்லை என்பதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

நன்றியின்மையின் உச்சபட்ச கொடூரம்...
நன்றியின்மையின் உச்சபட்ச கொடூரம்…

ஆக, சரியான நேரத்தில் நமது இயலாமையையும் பொய்மையையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி விளாசியுள்ளனர். நன்றியற்ற மனிதகளாகிய நாம் சூழ்நிலைக் கைதிகளாகி, அடிமாடுகளை கசாப்புக்கு அனுப்பும் வரை, ஜல்லிக்கட்டு நடத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுவே நீதிபதிகள் மறைமுகமாகக் கூறியுள்ள கருத்து.

கோமாதா எங்க குலமாதா என்று பாடினால் போதாது. வயதான காலத்தில் அதைப் பேணுவதும் நமது கடமை. உழவனின் தோழனான காளையையும் அவ்வாறே நாம் காக்க வேண்டும். இந்த நன்றி உணர்ச்சியை மறக்க மறக்க, நாம் மரத்துப் போன சமுதாயம் ஆவோம். அதன் தொடர் விளைவுகளாக முதியோர் இல்லங்கள் பெருகும். பிறகு நமக்கு என்றும் மீட்பில்லை.

காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் வன விலங்குகளுடன் மாடுகளைச் சேர்த்த புண்ணியவான்கள், அவற்றை கொடூரமாகக் கழுத்தறுத்து வம்ச நாசம் செய்யும் இளஞ்சிவப்புப் புரட்சி குறித்தும் சில ஷரத்துகளைச் சேர்த்திருந்தால் நியாயமாக இருந்திருக்கும், ஏனெனில் எந்த காட்டு விலங்கும் இறைச்சிக்காக கொல்லப்படுவதில்லை. அவ்வாறு கொல்வது வனத் துறை சட்டப்படி கொடிய குற்றம். எனவே, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கும்போது, மேற்கண்ட விவரங்களையும் பரிசீலித்து தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் நீதிமன்றமும், சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோலாக விளங்கும்.

இவ்விஷயத்தில் மத்திய அரசு இதுவரை செயலற்று இருந்தது போதும். தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, இனியேனும் விவசாயக் கால்நடைகளை கசாப்புக்கு அனுப்புவதைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வயதான மாடுகளைப் பாராமரிப்பதிலும் விவசாயிகளுக்கு நலன் விளையும் வகையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

மறைநீர் பொருளாதாரம் குறித்த சிந்தனைகள் பரவிவரும் நிலையில், இறைச்சி உற்பத்திக்கு ஆகும் செலவினத்தையும் நீர்ப் பயன்பாட்டையும் உத்தேசித்தால், கிடைக்கும் லாபம் பெரியதல்ல என்றும், சூழல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி கனவு கண்ட பசுவதை தடுப்பு சட்டத்தை விட மேலானதாக, பசு- காளைகள் வதை தடுப்பு சட்டம் கொண்டுவரப்படுமானால், பாஜக அரசு சரித்திரத்தில் இடம் பெறும். இதையே மோடி அரசிடம் நாடு எதிர்பார்க்கிறது.

.

4 Replies to “இரக்கமற்ற இளஞ்சிவப்பு”

  1. மத்திய அரசு பாரம்பரிய வழிபாட்டு முறையான ஏறுதழுவுதலைப்பாதுகாப்பதற்கு
    ஆழ்ந்த ஈடுபாட்டோடு செயல்படவில்லை. சட்டத்திருத்தத்தினை மேற்கொண்டு ஜல்லிக்கட்டைப் பாதுகாக்க வேண்டும் மத்திய அரசு. இல்லை எனில் ஹிந்துத்துவம் பண்பாட்டு தேசியம் என்பது வெற்று கோசமாகும். ஹரஹர

  2. பசுவதையை வேடிக்கை பார்க்கும் நமக்கு, ஜல்லிக்கட்டு நடத்த அருகதை கிடையாது.

  3. ஃபோர்ட் ஃபவுண்டேஷனால் விலைபேசப்பட்ட பெருமாள் முருகன் என்ற எழுத்துப் பொழுது போக்காளர் கிறுக்கித் தள்ளிய………. தமிழகத்துப் பெண்களை இழிவு செய்யும் ஒரு குப்பையினை ……….. எழுத்தாளர் உரிமை என்றும் இலக்கியம் என்றும் …………… தமிழகம் காறித்துப்பும் தொலைக்காட்சி நிலையங்களுடன் கூட்டு சேர்ந்து தீராவிட தீய சக்திகளின் தலைமையில் தேச விரோத சக்திகள் தமிழகத்தில் நாடகமாடின. ஆனால் சிலம்பரசன் மற்றும் அனிருத் என்ற இரண்டு கூத்தாடிகள் இதே பெருமாள் முருகனுடைய எழுத்துக் குப்பைக்கு ஈடாக…………. பாட்டு என்ற பெயரில் இன்னொரு குப்பையை தமிழகத்தில் கடாசிய போது …………. வெகுண்டெழுந்து அதற்கு எதிராக இன்னொரு நாடகம் போட்டன. தீராவிடத்தினர் அசிங்கப்படுத்தியுள்ள பகுத்தறிவு என்ற கோட்பாட்டில் இரண்டு குப்பைகளில் ஒரு குப்பை மேன்மையாகி இன்னொரு குப்பை எப்படி இழிவானது என்பது ராம்சாமி நாயக்கருக்குத் தான் புரியும் போல.

    இதே சக்திகள் தமிழக ஹிந்துப்பெண்களின் மங்கலச்சின்னமான……………. ஆயிரம் வருஷங்களுக்கும் மேற்பட்ட தொல் தமிழ் நூற்களில் பெருமைப்படுத்தப்பட்டுள்ள…….. தாலியை இழிவு செய்து தாலியறுப்புப் போராட்டம் என்று நாடகமாடின. கவனிக்க வேண்டிய விஷயம் …………. இது போன்ற தமிழின விரோத………… ஹிந்து விரோத…………. ஈனத்தனத்தில் ஈடுபட்ட எந்த டம்ளர் சக்திகளோ அல்லது தமிழ் என்ற போர்வையில் தமிழர்களை இது வரை அடிமை செய்து வந்துள்ள தீராவிட ஈன சக்திகளோ அவனவன் வீட்டில்……….. இந்த தமிழின விரோத………. ஹிந்து விரோத………. ஈன நிகழ்ச்சிகளை நடத்தாமல் அடுத்த பெண்டிரின் தாலியறுப்பில் ஈடுபட்டு ……….. கோர்ட் தடை இருப்பது தெரிந்ததும்……….. இலை மறைவு காய் மறைவாக ………….வழக்கமான தீரா விட ஈனத்தனத்துடன் இந்த நிகழ்வுகளை நிறைவேற்றின.

    இதே விலை போன சாபக்கேட்டு தீரா விட தீய சக்திகள் ……………. ஹிந்துக்கள் புனிதமாக மதிக்கும் …………. ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனம் பரிந்துரை செய்துள்ள பசுவதைத் தடை …………. என்னும் கொள்கையை கேலிக்கு உள்ளாக்கி …………….. தமிழகத்தில் மாட்டுக்கறி தின்னும் நாடகத்தை …………. நிகழ்த்தின. பசு மாட்டை குற்றுயிரும் குலையுயிருமாக கழுத்தை அரைகுறையாக வெட்டி விட்டு அது துடிக்கத் துடிக்கச் சாவதை இந்த சக்திகள் குதூஹலத்துடன் பார்த்து மகிழும் அவலக்காட்சிகள் பொதுதளத்தில் பலரின் பார்வைக்கும் கிட்டின. இப்படிப்பட்ட குரூரத்துக்கு கூட்டாளியான தீரா விட தீய சக்திகள் ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன்புறுத்தப்படுவதைக் கண்டு வாடிய பயிரைக்கண்ட போது வாடுகின்ற நிலைக்கு வந்து விட்டனவாம். என்னே தீராவிட அசிங்கப்படுத்தப்பட்ட பகுத்தறிவு. மாட்டை அரையும் குறையுமாக துடிதுடிக்க கொலை செய்து அதனை சமயல் செய்து வாய் ருசிக்க தின்னுவது உரிமையாம். தமிழகத்தின் மற்றும் ஹிந்துஸ்தானத்தின் மதச்சடங்குகளின் அங்கமாக வழிபாடுகளின் அங்கமாக இருக்கும் ஏறு தழுவல் விலங்கினங்களுக்கு இழைக்கும் கொடுமையாம்.

    தமிழகத்து க்ராமங்களின் மிகப் பழைய பாரம்பர்யம் ஏறு தழுவல். அறுவடைத் திருநாளாகிய பொங்கலை அடுத்து தமிழகத்தின் பெருமை வாய்ந்த……… தனித்ததான ஆவினங்களின் சந்ததியை அடுத்தடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து வழங்கி வரும் அதீத சக்தி மிகுந்த காளைகளை………. அதற்கு ஈடான சக்தி வாய்ந்த……….. தமிழகத்து இளைஞர்கள் எனும் காளைகள் தங்கள் புஜபலத்தை ப்ரயோகம் செய்து கட்டுக்குள் கொண்டு வரும் வீரம் செறிந்த …………….. க்ராமத்து கோவில்களின் வழிபாட்டுக்கு அங்கமாகிய சடங்கு.

    காசே தான் கடவுளடா என்ற கொள்கைப் பாஷாணத்தில் ஊறிய புழுக்களான தீரா விட தீய சக்திகள் இந்த கோவிலுடன் சம்பந்தப்பட்ட சடங்கினை குலைப்பதற்கு செய்த முதல் பழி …….. இதனுடன் சம்பந்தப்பட்ட நாட்டார் வழிபாடு என்ற அம்சத்தை அழித்தொழித்து …………… இதை விளையாட்டு என்ற போர்வையில் ………… தமிழகத்தை நாசமாக்கியுள்ள போலி மதசார்பின்மைக்கு பலி கொடுத்த அவலம். தமிழகத்தில் (ஹிந்துஸ்தானமுழுதும் கூட) விளையாட்டுக்கும் சூதாட்டத்துக்கும் இன்றைய திகதியில் பெரிய வித்யாசம் இல்லை. கோவில் சடங்கு என்ற கூற்றில் கோவிலை அப்புறப்படுத்தி விளையாட்டு மற்றும் போலிமதசார்பின்மை என்ற கருப்பு மசியைப் பூசி அவற்றை முதன்மைப் படுத்துகையில்……… சூதாட்டங்களுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இழிவுகளும் பலப்பல இடங்களில் தலையெடுக்க ஆரம்பித்தன. சடங்கு பின்னுக்குச் சென்று காசு ப்ரதானமாகி சூதாட்டமாகிப்போன ஒரு நிகழ்வில் காசு சம்பாதிக்க வேண்டி சில காளைகளின் கண்களில் மிளகாய்ப்பொடி அடைத்து அதை வெறியேற்றல்…………. கள்ளச்சாராயத்தை குடிக்க வைத்து அவற்றை வெறியேற்றல் போன்ற அவலங்கள் பல இடங்களில் நிகழ்ந்ததாக விழியங்கள் பொதுதளத்தில் பரப்பப் பட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாக சூதாட்டத்தின் அங்கமாகிய விதிவிலக்குகளையே விதியாக்கி……….. இது தான் ஜல்லிக்கட்டு என்று தமிழகத்தின் பாரம்பர்யத்தையும் தமிழனின் வீரத்தையும் தமிழகத்து நாட்டார் கோவில் சடங்குகளையும் ஒட்டு மொத்தமாக இழிவு செய்தன காசுக்கு விலை போன தீரா விட தீய சக்திகள்.

    NAME THE DOG AND HANG IT என்று ஆங்க்லத்தில் ஒரு வசனம் உண்டு. தமிழகத்து நாட்டார் கோவில் பாரம்பர்யங்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு சடங்கில் வழிபாடு பாரம்பர்யம் போன்ற கூறுகளை மறைத்து அதை விளையாட்டு என்று தரமிறக்கி……….. ஹிந்து நம்பிக்கைகளை இழிவு செய்வதை தன்னுடைய தலையாய கொள்கையாகக் கொண்ட காங்க்ரஸ் என்ற கட்சியுடன் கூட்டு சேர்ந்து இந்த பாரம்பர்யத்தை முற்று முழுதாக அழித்தொழிக்க ………….. ஈனத்தனமான சட்டத் திருத்தங்கள் செய்து ………….. பின்னர் இதை ஒட்டு மொத்தமாக தடை செய்ய வழிவகுத்தவை தீரா விட தீய சக்திகள்.

    இந்தத் தமிழ் விரோத தேச விரோத ஹிந்து விரோத சக்திகளின் பகற் கனவை முறியடிக்க ………….. ஜல்லிக்கட்டு / ஏறுதழுவல் என்ற தமிழகத்தின் தொன்மையான நாட்டார் வழிபாட்டுமுறைகளில் ஈடுபாடுள்ள அனைத்து சக்திகளும் கைகோர்க்க வேண்டும். அது மட்டுமே இழந்த பாரம்பர்யத்தை மீட்க உதவும்.

    பசுவதைத் தடை என்ற உயர்ந்த கோட்பாடு ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனத்தை வகுத்தளித்த ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களால் அரசியல் சாஸனத்தின் பரிந்துறைக்கும் ஷரத்தாகச் சேர்க்கப்பட்டது. இதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையும் முனைப்பையும் எக்காரணம் கொண்டும் தடுக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு என்ற பாரம்பர்யத்துடன் இணைக்கக் கூடாது. அப்படி இணைப்பது பரஸ்பரம் இரண்டுக்கும் ஊறு விளைவிக்கும் போக்காகவே இருக்கும். ஹிந்துஸ்தானத்தின் தலைசிறந்த வக்கீல்களை பணீயில் அமர்த்தி நம் பாரம்பர்யத்தினை முறைப்படி ந்யாயாலயத்தில் வாதாடி இழந்த பாரம்பர்யத்தை விரைந்து மீட்க வேண்டும்.

  4. முதியோர் இல்லங்கள் தோன்றக் காரணமான மனிதர்கள் மாறும் போது இந் நிலையும் மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *