அனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு

மிழ்நாட்டில் பல சிறு தெய்வ கோயில்களிலும் குலசாமி கோயில்களிலும் பிராம்மணரல்லாதோர் தான் பூசாரிகளாக இருக்கின்றனர், பன்னெடுங்காலமாக. அதுவும் சில சமூகங்களின் குலதெய்வ கோயில்களில் அந்த சாதிகளையே சேராத வண்ணார், குயவர், விஸ்வகர்மா போன்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட பூசாரிகளாக இருப்பதுண்டு. பல கோயில்களில் தாழ்த்தப்பட்ட வள்ளுவர் சமூகத்தினர் பூசாரிகளாக இருக்கின்றனர். இதைத் தவிர தேனி மாவட்டத்தின் பிறமலை கள்ளர் சமூக கோயில்கள், மறவர் சமூகங்களுக்கான கோயில்கள் ஆகியவற்றில் அந்த சாதியினரும் வட தமிழ்நாட்டின் மாரியம்மன், காளியம்மன், திரௌபதி அம்மன் ஆலயங்களில் வன்னியர்களும், துளுவ மற்றும் சோழிய வேளாளர்களும் பூசகர்களாக இருக்கின்றனர். பல மலைப்பழங்குடிகளின் கோயில்களில் குல மூப்பன் தான் பூசாரி.

ஆகம விதிப்படி அமைந்த பெருதெய்வ கோயில்களை எடுத்து கொண்டால் கூட ஆதிசைவர் அல்லது சிவாச்சாரியார் என்று அழைக்கப்படுபவர்கள் மட்டுமே சிவன் கோயில்களில் மூலவருக்கு பூஜை செய்ய முடியும். இதற்காகவே ஆண்டாண்டு காலமாய் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற ஸ்மார்த்த பிராமணர்கள் கூட மூலவருக்கு பூஜை செய்ய முடியாது; அவர்கள் பரிவார தெய்வங்களுக்கு மட்டுமே பூஜை செய்ய முடியும். தில்லை நடராஜர் கோயிலில் தீக்ஷதர்கள் மட்டுமே மூலவருக்கு பூஜை செய்வார்கள். என் எண்ணம் என்னவென்றால் சோழ மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க பல கோயில்கள் ஒருகால பூஜைக்கும் வழி இல்லாமல் இருக்கிறது. அந்த கோயில்களுக்கு சென்று பூஜை செய்ய விருப்பமிருந்தால் அதற்கான சைவ வைணவ பூஜை முறைகளில் முறையான பயிற்சியை பெற்று அனைத்து சாதியினரும் பூசை செய்யலாம். அதனால் இந்த கோயில்களும் புத்துணர்வு பெறும்.

திருவல்லா வளஞ்சவட்டம் மணப்புறம் சிவன் கோயிலில் பூசாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் 22 வயது யதுகிருஷ்ணா. இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்.

பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் ஆண்ட பீகார் மாநிலத்தில் 2007ஆம் ஆண்டே பெருமை வாய்ந்த பல நூற்றாண்டுகள் பழமை மிக்க கோயில்களில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினர் பூசகர்களாக வந்து விட்டனர். இன்று இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் புதிதாக அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. வேத வேள்விகள், சாஸ்திர விதிப்படி கர்ம காரியங்கள் செய்பவர்களாக மட்டுமே அந்தணர்கள் இருந்தார்கள். அவர்கள் கோயில் பூஜை செய்த வரலாறு ஒன்றும் நீண்ட நெடுங்காலமாக இல்லை. சோழர்கள் காலத்தில் ஆகம முறைப்படி சிவாலயங்களும் மற்ற பெருதெய்வ ஆலயங்களும் மாற்றப்பட்டபோது பிராமணர்கள் பூஜை செய்யும் இந்த முறை கொண்டுவரப்பட்டு கடைபிடிக்கப்பட்டிருக்கலாம். அவ்வளவு தான்.இந்தியா முழுக்கவே இடைக்காலத்தில் தான் இந்த முறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் அதற்கு காரணம் அந்நிய ஆட்சிகளில் வேத,வைதீக காரியங்கள் குறைந்து போனதால் அதை ஈடுகட்டுவதற்காக இருக்கலாம்.

“கேரளத்தின் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதன் ஆளுகைக்குட்பட்ட கோயில்களில்  பிராமணர் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த 36 அர்ச்சகர்களை (இதில் தலித்களும் அடக்கம்)   நியமனம் செய்தது பற்றிய செய்தி சமீபத்தில் வெளிவந்தது. கேரளத்தின் சமூக, கலாசார போக்குகளை மிக நெருக்கமாக அறிந்த ஜெயமோகன், இந்த நிகழ்வின் பின்னணி மற்றும் காரணிகள் குறித்து தெளிவாக எழுதியுள்ளார்.  பெரியாரையும் பினராயியையும் இதற்கான காரணங்களாகக் கூறிப் பாராட்டு வழங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் போன்ற தமிழ்நாட்டு அடிமுட்டாள்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய ஒரு கட்டுரை – https://www.jeyamohan.in/102895. தமிழ்நாட்டில் இவ்வகையான இந்துமத சீர்திருத்தங்கள் எவ்வாறு செய்யப்படலாம் என்பதற்கான தனது எண்ணங்களையும் எழுதியுள்ளார்.

அனைத்து சாதியினருக்கும் வேதக் கல்வி அளிக்கும் ‘தந்திர வித்யா பீடம்’ பள்ளியை நிறுவியவர் மறைந்த மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பி. மாதவ். 1983ம் ஆண்டிலேயே கேரளத்தில் விசால ஹிந்து சம்மேளனம் நடைபெற்ற போது, அதன் தொடக்க பூஜையை செய்தவர் ஈழவர் சமூகத்தைச் சேர்ந்த பூசகர். அப்போது இந்தச்செய்தி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனது பதிவில் நாராயண குரு இயக்கத்தையும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் உரிமைகள் மற்றும் சுதந்திரமான செயல்பாடுகளையும் பற்றி எழுதிய ஜெயமோகன், இந்த விஷயத்தில் இந்துத்துவ இயக்கங்களின் முக்கியமான பங்களிப்பைக் குறிப்பிட மறந்ததற்கு அவருக்கேயான ஏதேனும் காரணங்கள் இருக்கக் கூடும்”.

– ஜடாயு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 

பல அறிவுஜீவிகளுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் என்ன நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை.  இப்போது தான் சமூக ஊடகங்கள் வழியாக மெல்ல உலகத்தை பார்க்கிறார்கள். பல பேர் இப்போது தான் குழந்தைகள் போல தவழவே ஆரம்பித்திருக்கிறார்கள். வட இந்தியாவின் சாதிய பிரிவினைமிக்க மாநிலங்களில் எல்லாம் தலித்துகள் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும், பூசகர்களாகவும் ஆகிவிட்டனர். தமிழ்நாட்டில் தான் கோயிலில் திருநீறு பெறவும் அவர்கள் கொடுத்தால் மற்றவர்கள் பெற்றுக்கொள்ளவும் உரிமை கேட்டு போராடுகிறார்கள் !

குஜராத்தில் நரேந்திர மோதி முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் வேத மந்திரங்களையும், பூஜைகளையும்,  திருமணம் உள்ளிட்ட சடங்குகளுக்கான மந்திரங்களையும் பயிலும் வகையிலான கல்வி நிலையங்கள் மாநில அரசின் உதவியுடன் உருவாக்கப் பட்டு, சிறப்பாக இயங்கி வருகின்றன.   இவற்றில் மனிதக் கழிவை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பயிற்றுவிக்கப் பட்டனர்.  இது குறித்த அப்போதைய ராஜ் டிவி  செய்தி  வீடியோ இங்கே .

நன்றி: ம. வெங்கடேசன் பேஸ்புக் பக்கம் 

எவ்விதமான சாதிய ஏற்றத்தாழ்வையும் போக்காத, தான் சார்ந்த சமூகத்தில், பிறந்த பரம்பரையில் கூட எவ்வித மாற்றத்தையும் செய்ய முடியாத ஒருவருக்கு, எங்கோ கண்காணா தேசத்தில் நடப்பதை எல்லாம் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போல பெருமை சேர்த்து புல்லரிக்கும் கும்பல் இது.  நீதிக்கட்சியும் திராவிடர் கழகமும் தோன்றி நூறாண்டுகளுக்கு பிறகும் சமூக அட்டவணையில் 360 சாதிகள் இன்றும் இருக்கும் தமிழகத்தில், பெரியார் மண், சமூகநீதியின் வித்து, சுயமரியாதை பூமி என்றெல்லாம் ஜல்லியடிக்கப்பட்ட மாநிலத்தில்,  “சாதிய பைத்தியங்களின் கூடாரம்”  என்று வர்ணிக்கப்பட்ட பக்கத்து மாநிலத்தை வெட்கமேயில்லாமல் உதாரணம் காட்டும் நிலை வந்துவிட்டதே என்பது கூட அறியாமல் புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

(ஆர்.கோபிநாத்  தனது ஃபேஸ்புக் பக்கதில் எழுதியது)

14 Replies to “அனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு”

  1. உள்ளம் பெருங் கோயில் .இதில் சிறு தெய்வம் மற்றும் பெருந் தெய்வம் என்ற பிரிவினைகள் ஏன்?

  2. நல்லவை எங்கு நடந்தாலும் வரவேற்கும் மனநிலை வேண்டும். கேரள கம்யூனிஸ்ட் அரசு செய்ததா? வாழ்த்துக்கள். குஜராத்தில் மோடி 12 ஆண்டுகள் முதல்வராக இருந்தாலும் செய்யவில்லையா? வசுந்தரா ராஜே, ஆனந்திபென் படேல், ஷிவ்ராஜ் சிங் சௌஹான், தேவேந்திர ஃபட்நவிஸ் மற்றும் பல பாஜக முதல்வர்கள் இருக்கும் மாநிலங்களிலும் நடக்கவில்லையா? இங்கே வரும் பாஜக ஆதரவாளர்கள், பாஜக கட்சி உறுப்பினர்கள் இன்னும் எடுத்துச் சொல்லுங்கள் – கம்யூனிஸ்ட் அரசே செய்தாயிற்று, பாஜக ஆளும் மாநிலங்களிலும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுங்கள். அதைவிட்டு விட்டு வெட்டியாக நொட்டை சொல்லிக் கொண்டு!

    ஸ்பின் டாக்டர்களாகவே மாறிக் கொண்டிருக்கிறீகள். // பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் ஆண்ட பீகார் மாநிலத்தில் 2007ஆம் ஆண்டே பெருமை வாய்ந்த பல நூற்றாண்டுகள் பழமை மிக்க கோயில்களில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினர் பூசகர்களாக வந்து விட்டனர். // 2007-இல் பிஹாரில் பாஜக் முதல்வரா? பாஜக துணைக்கட்சி என்றால் ‘ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும்’ என்று எழுதுவதுதான் பழக்கம். இந்த ஸ்பின் எல்லாம் யாருக்காக, படிப்பவர்களுக்கா உங்களுக்கேவா? பாஜக துணைக்கட்சியாக இல்லாமல் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்த மாநிலங்களில் என்ன நடந்திருக்கிறது என்று ஒரு வரி? ஜடாயு குறிப்பிடும் அனைத்து இந்துத்துவ இயக்க முன்னோடிகளும் மற்றவர்களும் கேரளத்தின் எல்லைகளுக்குள் மட்டும்தான் இயங்கினார்களா என்ன? அப்படியே கேரளத்தின் எல்லைகளுக்குள் இயங்கி இருந்தாலும் கேரளா என்ன அன்னிய நாடா? இந்த முன்னோடிகளின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இத்தனை நாள் அதிகாரத்தில் இருக்கும் பாஜக முதல்வர்கள் மரியாதை தரமாட்டார்களாமா? உங்களைப் போலவே ஸ்பின் செய்தால் மோடி உட்பட்ட பாஜக முதல்வர்கள் இந்த முன்னோடிகளை அவமதிக்கிறார்கள் என்றும் எழுதலாம். எதற்காக இத்தனை ஸ்பின்?

    மீண்டும் சொல்கிறேன், உங்கள் ‘எதிரி’ கிழக்கே சூரியன் உதிக்கிறது என்று சொன்னால் இல்லை மேற்கேதான் என்று குதிக்காதீர்கள். ஈ.வெ.ரா. மனுநீதியில் குறை காண்கிறார் என்பதற்காக மனுதர்மத்தை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது அறிவுடைய செயல் இல்லை. பினரயி விஜயன் முதல்வராக இருக்கும் கம்யூனிஸ்ட் அரசு செய்திருந்தாலும் அது பாராட்ட வேண்டிய செயல்தான். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பார்கள். எச்செயல் யார்யார் கை செய்யினும் அச்செயல் மெய்ச்செயல் காண்பதறிவு என்பதும் சரிதானே!

  3. யார் செய்தாலும் நல்ல செயலை பாராட்டவேண்டும் என்பது சரி. அதே சமயம் நமது மீடியாக்கள் பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் இது போன்ற சாதனைகள் ஏற்கனவே நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதை மூடி மறைப்பதும் தவறு. இந்தியாவிலேயே ஏதோ கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியில் தான் இது முதல் முதலாக நடந்துள்ளது என்பது போல ஒரு பொய்யான சித்திரத்தை மீடியா உருவாக்குவது ஒரு முழு பித்தலாட்டம் மட்டுமே.

  4. ஈ.வெ.இராமசாமி நாயக்கரின் தொண்டர்கள் இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும் என்று தமிழர்களிடம் பிரசாரம் செய்வதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

  5. இந்து மதத்தை யாராலும் ஒழிக்க முடியாது.

  6. திரு.ஆா்வி அவா்களை அவசரப்பட்டு வாா்த்தைகளைக் கொட்டியிருக்கின்றீா்கள். திரு.யது கிருஷ்ணா இன்று அா்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கின்றாா் எனில் அதற்கு காரணம் ஸ்ரீநாராயணகுரு மன்றும் அயன்காளி போன்ற இந்துசமய தொண்டா்கள்தான்.பிறாமணா்களைச் சாராது வாழப் பழக வேண்டும் என்ற கருத்தை அவா்கள் பிற சாதி மக்களுக்கு போதித்தாா்கள்.பிறாமணா்களாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் பிற சாதி மக்களை போதித்து 100 ஆண்டுகளாக அவா்களின் கலாச்சார வாழ்வை பக்குவப்படுத்தி வருணத்தில் உயர வைத்துள்ளாா்கள். அதன் உச்சி சாதனைதான் இந்த அா்ச்சகா் நியமனம். தமிழகத்தில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தா் அந்தா் யோகம் நடத்தி நல்ல ஆன்மீக அனுஷ்டானங்களை விதைத்தாா். அதன் வெற்றியை ஸ்ரீராமகிருஷ்ணதபோவனமாகக் காணலாம். பொதுவாக ஸ்ரீராமகிருஷ்ண மடங்கள் தபோவனங்களில் சாதி பேதம் இல்லை.தகுதியான அனைவரும் சுவாமிஜி ஆகலாம்.ஈவேரா வும் அல்லது தமிழ்நாட்டில் சித்பவானந்தரை பின்பற்றி வீடுதோறும் கோவில் தோறும் அந்தா் யோகம் நடத்தினால் பிறாமணா்களை மற்ற சாதியினா் சமயத்துறையிலும் வென்று விடலாம். அந்த வெற்றி அடக்கமானது.ஆா்ப்பாட்டம் இல்லாதது.அன்பான வெற்றி. பகைமை இல்லா வெற்றியாக இருக்கும்.

  7. கேரளாவில் 6 தலித்துகள் உள்பட 36 பிராமிணர்கள் அல்லாதவர்களை அர்சகர்களாக அமர்தியுள்ளதை எல்லோரும் நிச்சயம் வரவேற்கவேண்டும். இங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய சிலவற்றை பாரதத்தில் மற்ற மாநிலங்களும் கடைபிடித்தால் அதையும் வரவேற்கலாம்.( நடை, உடை, பாவனை, படிப்பு, முறையான பயிர்ச்சி, அனுபவம் மற்றும் அந்தந்த ஹிந்து கோவில் கலாசாரங்களை பேணி கடைபிடித்தல்) யது கிருஷ்ணன் போலவே மற்றவர்களும் சமிஸ்கிருத படிப்பு, தாந்திரிக படிப்பு சிறுவயது முதல் பெற்ற அனுபவம், நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்திராக்ஷம், பூனூல், பாரம்பரிய வேஷ்டி (சிகை மற்றும் கச்சம் இல்லை அதுவும் இருந்தால் நன்று) ஏன் இதை சொல்கிறேன் என்றால் தமிழகத்தில் அர்சகர் பயிர்ச்சி என்று சொல்லி 6 இடங்களில் ஆரம்பித்த முகாம்ங்கள் இன்று காணவில்லை. ஆடவர் வயதை கடந்த பலரை முறையான ஆசிரியர்களை கொண்டு பயிர்ச்சி அளிக்காமல் ஒரு வருடம் படித்து பட்டம் அளித்து தேர்வானவர்கள் அறிவு ”கடவுளை கற்பித்தவன் முட்டாள் – கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி – கடவுள் இல்லவே இல்லை என்று போதித்து தமிழகத்தை குட்டிசுவராக்கிய சிரியாரான பெரியார் சிலைக்கு இந்த அர்சகர் படிப்பு படித்த கடா மாணவர்கள் சென்று மாலை போட்டார்கள் என்றால் என்ன அர்தம் ?

    நவீன திராவிடன் விதேசி மதங்களுடன் கூட்டுவைத்து ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் சில நூற்றாண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்கு உண்மையான சமூக அக்கரை கிடையாது. உள்ளதையும் கெடுத்து கோவில்களே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அது வெகு விமரிசையாகவே 10 ஆண்டுகள் கருணா, சோனியா கூட்டாட்சியில் நடந்தேரியது தமிழக கோவில்கள் காலிகளின் கூடாரமாக மாறிவிட்டது. தமிழனின் கலாசார பொக்க்ஷியங்களை உரு தெரியாமல் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோவில் பிராகாரங்களி்ல அரசியல் தலைவர்களை பற்றி நாமாவளி பொறித்து வைப்பது – அரசியல் தலைவர்களின் உருவங்களை கோவில் கதவுகளில் செதுக்கி வைப்பது போன்ற கீழ் தரமான செயல்களை செய்கின்றார்கள்.

    சமீபத்தில்தான் உச்ச நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வான முடிவை சொல்லியுள்ளது. அதாவது பரம்பரை பாத்தியம் உள்ள கோவில்களிலும் மற்றும் ஆகமவிதிபடி அமைந்த கோவில்களிலும் எது நடைமுறை வழக்கமோ அதை அர்சகர் நியமனத்திலும் பின்பற்றுவது சரியே என்பதாகும். இதை தவிற மற்ற கோவில்களில் பயிர்ச்சி பெற்ற எந்த ஜாதியை சார்ந்தவரையும் அர்சகராக நியமிக்கலாம் என்பதாகும். ஆனால் இந்த பயிர்ச்சி என்பது என்ன ? எப்படி யார் நடத்தவேண்டும்? எத்தனை ஆண்டுகள் நடத்ததவேண்டும் ? எப்படி அந்தந்த கோவில் கலாசாரங்களை பின்பற்றவேண்டும் ? எந்த வயதில் இந்த படிப்பை படிக்க வேண்டும் என்பது போன்ற பலவற்றை பற்றிய முழுமையான தீர்பாக இல்லை. அரசாங்க இரும்பு பிடியிலிருந்து கோவில்களை மீட்க சுவாமி தயானந்தர் போட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. .

    தீருவான்கூர் தேவஸ்தான போர்ட்டிற்கும் நமது தமிழ் நாட்டின் ஹிந்து அற நிலைதுறைக்கும் (
    அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற துறை) நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அது ஒரு படித்த, தெய்வ நம்பிக்கைகள் உள்ள முதிர்ச்சி பெற்ற அறிஞர்களை கொண்ட ஒரு தன்னாட்சி (சுதந்திரமான) நிறுவனம் ஆகும். கேரள மாநிலத்தில் இதை தவிற 5 தேவஸ்தான போர்டுகள் செயல்படுகின்றன. இதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் நம்பூத்திரி பிராமிணர்களும் நாயர்களுமே ஆகும். அரசாங்கம் வரவு செலவு கணக்குகளை தனிக்கை செய்யலாமே அன்றி மற்ற கோவில் சம்பந்தமான முடிவுகளை போர்டின் ஒப்புதல் இல்லாமல் முடிவெடுக்க முடியாது என்று தான் நினைக்கிறேன். அவ்வாறு இருந்தால் கேரளாவை போல் தமிழகத்திலும் பல தேவஸ்தான போர்டுகளை ஏற்படுத்தினாலே அன்றி திராவிட ( ஹிந்து பெயரில் ஒளிந்துகொண்டு) மதமாறிய காலிகளிடமிருந்து தமிழக கோவில்கள் மீட்பது அவசியமாகும்.. .

  8. ஆகமப் பயிற்சி பற்றிப் பேசும் அனபர்கள், அருந் தமிழில் பிழையின்றி எழுதவும் பயிற்சி பெறுதல் நன்று.

  9. * ‘அனபர்கள்’ என்பதை ‘அன்பர்கள்’ என்று படிக்கவும்.நன்றி.

  10. // ஆகமப் பயிற்சி பற்றிப் பேசும் அனபர்கள், அருந் தமிழில் பிழையின்றி எழுதவும் பயிற்சி பெறுதல் நன்று.//

    தனசேகரன் ஐயா கூறுவது 100 சதவிகதித உண்மை. என்னை போன்றவர்களை இடஒதுக்கீடு மூலம் தமிழ் ஆசிரியராக தேர்வு செய்தால் மாணவர்கள் தரம் எப்படி இருக்கும். தமிழகத்தில் 10 வது வகுப்புவரை தேர்வில் யாரையும் பெயில் போடக்கூடாது என்ற கல்வி திட்டத்தில் படித்தால் தரம் எப்படி இருக்கும். ஐயா எனது தமிழ் மற்றும் ஆங்கில அறிவு பிலோ ஆவரேஜ்தான், என்னால் பிழை இன்றி எழுததெரியாது. முடிந்தவரை மற்றவர்களிடம் கேட்டு பிழை திருத்தம் செய்து வெளியிடவே எண்ணுகிறேன். ஆனால் எனது மனைவிகூட முதலில் நீ பிராமிணனாக இரு உனக்கேன் ஊர்வம்பு என்னால் பிழை திருத்தம் செய்துகொடுக்க முடியாது என்கிறார்.. அது சரி பலர் கட்டுரையின் கருத்து பற்றியோ அல்லது பின்னூட்டம் போட்டவர் கருத்து பற்றி தங்களது கருத்து என்ன என்று தெரிவித்தால் பல மாற்று கருத்தை அறியமுடியும் ஆனால் கட்டுரை நடை விபரித்த விதம் எழுத்து பிழை என்று கட்டுரையின் கருத்தை பற்றிய தன்னுடைய நிலையை தெரிவிக்காமல் பின்னூட்டம் மட்டும் போடுவது சரிதானா ?

  11. //கடவுள் இல்லவே இல்லை என்று போதித்து தமிழகத்தை குட்டிசுவராக்கிய சிரியாரான பெரியார் சிலைக்கு இந்த அர்சகர் படிப்பு படித்த கடா மாணவர்கள் சென்று மாலை போட்டார்கள் என்றால் என்ன அர்தம் ? //

    தமிழகத்தையே குட்டிசுவராக்கி அழிவுபடுத்திய அற்பர் ஈ.வே ராமசாமி நாயக்கர் என்பதை மறுக்க முடியாது. இவர் இந்து கடவுள் இல்லை என்று தான் சொன்னார். இந்து மதத்தை அழித்து முஸ்லிம் மதத்தை தமிழகத்தில் கொண்டுவருவதே அவரின் நோக்கம்.

  12. //ன்னால் பிழை இன்றி எழுததெரியாது. முடிந்தவரை மற்றவர்களிடம் கேட்டு பிழை திருத்தம் செய்து வெளியிடவே எண்ணுகிறேன். //

    எனக்குத் தெரிந்த தமிழ் எழுத்தாளர் எட்டாம் வகுப்பு கூட தேறாதவர். தொடக்கக் காலத்தில் ஒரே பிழைகள்தான். அச்சமயம் அவருக்கு நாந்தான் காப்பி எடிட்டர். பின்னர் நான் தொலைதூரம் சென்றுவிட்டேன். ஆனாலும் அவரின் சிறுகதைகளும் நாவல்களும் வெளியாயின பிழையில்லாமல். அவரிடம் கேட்ட போது: பதிப்பகத்தார் அப்படியே அனுப்புங்கள்; நாங்கள் பார்த்துக்கொள்கிறேமென்றார்கள். அதன்படி செய்தேன். அவர்களே திருத்திக்கொள்கிறார்கள். படைப்பாளிக்கு அவன் படைப்பே அவர்களுக்கு முக்கியம். அதைப்போல இத்தளத்துக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தேவை. இத்தளத்திலும் காப்பி எடிட்டர் இருந்து பிழைகளைத் திருத்தி வெளியிடலாம். அல்லது நீங்களே ஒரு தேர்ந்த தமிழ் தட்டச்சு பண்ணுபவரிடம் கொடுத்து விடலாம்.

    உங்களுக்குப் பிழையின்றி எழுதத்தெரியாது எனபது பொய். உங்கள் பல பின்னூட்டங்கள்; கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன இத்தளத்திலேயே பிழைகளில்லாமல்.

  13. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று வந்ததனால் இந்து மதம் பன்னெடுங்காலம் அதன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திலிருந்து தப்பிக்கலாம். ஆனால் இதுநாள் வரை அர்ச்சகர்களாக இருக்கும் ஜாதிக்காரர்களுக்கு நன்மையன்று. அர்ச்சகர் என்பது ஒரு தொழிலும் கூட. இறைவனுக்குச் செய்யும் சேவையென்று இன்று சொல்லவியலாது. பணமிருந்தால்தான் வாழ்க்கையெனும்போது, எங்கே இலவச சேவை வரும்? கிடைக்காது; ஆனால் ஒரு நிரந்தர தொழிலைத் தரும். பெரும்கோயில்களில் வருமானம் உண்டு. பரம்பரைபரம்பரையாகச் செய்து வரும் ஜாதியினரிடம் தட்டிப்பறிப்பதைப் போலாகும்.

    இதுபோக, அர்ச்சகராக பிற ஜாதியினர் ஆர்வம் காட்டுவதில்லை. வருமானமில்லையே! அவர்களும் பெரிய கோயில்களில்தான் ஆக விரும்புவர் காரணம் தெரிந்தததே. தலித்துகளின் வாழ்க்கையில் அப்படி மாற்றமேதும் வரப்போவதில்லை. அம்பேதக்ர் இருந்திருந்தால் தலித்துகளை கல்வியினால் வாழ்க்கையைப்பெருங்கள் என்றிருப்பார்களே தவிர மதச்சேவையினால் பெருங்கள் என்று சொல்லியிருக்க மாட்டார்.

    தலித்துகளைத்தவிர மற்ற ஜாதியினர்களுக்கு வேறு தொழில்கள் ஏற்கனவே உண்டு. சிறு, பெரு வியாபாரிகளாக, பெரும் நிலச்சுவாந்தர்களாக, விவசாயிகளாக. தலித்துகள் என்ன அப்படியேதுனும் முன்னேறிவிட்டார்களா? இன்றும் தினக்கூலிகள்தானே?

    அதே சமயம், தெலுங்கானாவில் பண்ணியிருப்பது போல, அர்ச்சகர்களை அரசு ஊழியர்களாக்கிவிட்டால், (அதே சம்பளம் படிகள் விடுப்பு வேலையுர்வு) தலித்துகள், மற்ற ஜாதியினரின் நலிந்தோருக்கு அர்ச்சகர் தொழிலில் நாட்டம் வரும்.

    தமிழ்நாட்டுச் சட்டத்தை எதிர்த்து வழக்கு நிலுவையில் இருக்கிறது என நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *