பிரார்த்தனைகளின் சங்கமம்

allahabad-1சற்றே சரிவாக, வழுக்கும் ஈரக்களிமண்ணாக இருக்கும் அந்தப் பாதையில், மிகக் கவனமாக நம்மை நடத்தி, நதியின் கரையில் இருக்கும் படகுக்கு அழைத்துச் செல்கிறார் அந்த முதியவர். செம்மண் நிறத்தில் ஒரு ஏரியைப் போல் சலனமில்லாமல் அமைதியாக இருக்கிறது கங்கை. படகு மெல்லச் செல்லுகிறது. பத்து நிமிடப் பயணத்தில் சட்டென்று நதியின் நிறம் மாறுகிறது. அதன் வேகத்தைப் படகிலிருக்கும் நம்மால் உணர முடிகிறது. இங்குதான் யமுனை கங்கா மாதாவுடன் சேருகிறார்.

சரஸ்வதி இணையும் சங்கமத்திற்கு இன்னும் போகவேண்டும் போக வேண்டும் என்கிறார் படகுக்காரர். வெளிர் நீல நீர் பரப்பில் அருகே செல்லும் சற்றே பெரிய படகுகளும், அதைத் தொட்டுச் சிறகடித்துப் பறக்கும் வெள்ளைப் பறவைகளும் அந்தக் காலைப் பொழுதை ரம்மியமாக்குகின்றன. தொலைவில் நிற்கும் நிறையப் படகுகள். அவற்றில் பறக்கும் பல வண்ணக் கொடிகள்.

அருகில் போனபின்தான் அந்த இடம் திரிவேணி சங்கமம் என அறிந்துகொள்ளுகிறோம். கங்கையும், யமுனையும், கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதியும் ஒன்றாக இணைந்து சங்கமிக்கும் உன்னதமான இடம். இந்த இடத்தில் நீராடுவதும் வழிபடுவதும் மிகப் புண்ணியம் என இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் இந்துக்கள் போற்றும் புனித இடம்.

மாறுபட்ட திசைகளில் இருந்து வேகத்தோடு நதிகள் இணையும் இடம் எப்படியும் அறுபது அடி ஆழமிருக்கும். இந்த நடு ஆற்றில் எப்படி நீராட முடியும் என திகைத்துக் கொண்டிருக்கும் நாங்கள் அங்கே செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து அசந்து போகிறோம்.

சங்கமம் என அடையாளம் காணப்பட்டிருக்கும் அரை கிலோ மீட்டர் பகுதியில் பல பெரிய படகுகள் நங்கூரமிடப் பட்டிருக்கின்றன. அவை இரண்டு இரண்டாக வைக்கப்பட்டு, இரண்டு படகுகளுக்கும் இடையில் 6 அடி இடைவெளி இருக்கும் வகையில் இரண்டு மூங்கில்களால் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த இடைவெளியில் குளிக்க நாலு பக்கமும் பிடித்துக் கொள்ள வசதியான ஃப்ரேமுடன் ஒரு சதுர மேடை தொங்குகிறது. கவிழ்த்துப் போடப்பட்ட மேஜை போன்ற தொட்டி. நதியில் உள்ளே மூழ்கியிருக்கும் இதை இணைக்கும் நீண்ட நைலான் கயிறுகளைப் படகிலிருக்கும் உதவியாளர்கள் இயக்க, நதியில் மிதக்கிறது குளிக்கும் மேடை. அந்த மேடையில் இறங்கி நாம் நீருக்குள் முழுகுகிறோம். முதல் முழுகலில் பயம் தெளிந்து, அமைப்பின் பாதுகாப்பு புரிந்திருப்பதால், பலமுறை ஆனந்தமாக மூழ்கி திளைக்கிறோம்.

allahabd2குளிக்கும்போது, மேல்பரப்பில் நதிநீர் செல்லும் திசைக்குக் குறுக்காக, உள்ளே மற்றொரு நீரோட்டம் பாய்ந்து செல்வதை உடல் நமக்குச் சொல்கிறது. வெளியே ஒரு படகில் பளபளக்கும் பித்தளைத் தட்டில் சாமந்திப் பூக்களுடனும், பூஜை சாமான்களுடனும் காத்திருக்கும் பண்டா ஈர உடைகளுடனேயே பிரார்த்தனை செய்ய அழைக்கிறார். பக்கத்துப் படகுகளில் அணிந்திருக்கும் சபாரி உடையின் மீதே பூணூலும் மாலையும் அணிந்தவர் ஒருவர், கைநிறைய வளையல்கள் அணிந்த ராஜஸ்தான் பெண்கள், பஞ்சகச்ச வேஷ்டியில், கையில் ஸ்படிக மாலையுடன் தென்னிந்தியர் எனப் பலபேர். அந்த இடமே பிரார்த்தனைகளின் சங்கமமாக இருக்கிறது.

மற்றொரு படகில் பிளாஸ்டிக் துணியால் பக்கங்களும், மேற்கூரையும் மூடப்பட்ட ட்ரெஸ்ஸிங் ரூம். கண்ணாடிகூட வைத்திருக்கிறார்கள். அந்தப் படகின் நடுவில் குஷன்கள் இடப்பட்ட பெஞ்ச் நாற்காலியில் தலைப்பாகை அணிந்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் படகின் சொந்தக்காரர். அவரது ஆசனத்தின் பின்னே நிற்கும் கம்பத்தில்தான் கொடி பறக்கிறது. இது போலப் பல படகுகள். பல வண்ணக் கொடிகள். கரையில் இருந்து நம்மை அழைத்து வரும் படகுக் காரர்களுக்குப் படகுகளின் க்ரூப்பை அடையாளம் தெரிவதற்காக இந்தக் கொடிகளாம்.

ஓடும் நதியில் ப்குதிகளைப் பிரித்துப் பங்கிட்டு, உரிமை கொண்டாடி, வருபவர்களுக்கு நல்ல வசதிகள் செய்து,  சம்பாதிக்கும் அந்தப் படகுக்காரர்கள் சாமர்த்தியசாலிகள்தான். நீராடித் திரும்பும்போது பின் காலைப் பொழுதாகிவிட்டதால், யமுனை நதியின் உயரமும் வேகமும் அதிகரித்திருப்பதால் படகு சீக்கிரமாகக் கரையைத் தொடுகிறது.

allahabad4மொகலாயக் கட்டிடக் கலையின் மிச்சங்களை ஆங்காங்கே அடையாளம் காட்டும் அலகாபாத், இந்தியாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. பெரிய பல்கலைக் கழகம், மாநில தலைநகருக்கு வெளியே துவக்கப்பட்ட ஹைக்கோர்ட் எனப் பல கௌரவங்களைப் பெற்றிருந்தாலும், நகரம் என்னவோ களையிழந்துதான் காணப்படுகிறது.

பளபளக்கும் வண்ணத்துணியில் பூ வேலைகளுடன் வட்டக் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஆடம்பரமான மேல்கூரையும், பின் திரையுமிட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள்களை ஓட்டும் சட்டை அணியாத ரிக்‌ஷாக்காரர்கள், மேற்கூரையில் பயணிகளுடன் மினிபஸ் போன்ற வினோதங்களை ரசித்த வண்ணம் விசாரித்து வழியறிந்து நாம் செல்லுமிடம் ஆனந்த பவன்.

பரந்த பசும்புல்வெளியின் மறுகோடியில் வெளிர்மஞ்சள் நிறத்தில் நிற்கும் இந்தக் கம்பீரமான இரண்டு-அடுக்கு மாளிகையில்தான், மூன்று தலைமுறைகளாக நேரு குடும்பத்தினர் வாழ்ந்திருக்கின்றனர். இந்திரா காந்தி இதை அரசுக்கு நன்கொடையாகத் தந்து அருங்காட்சியகமாக ஆக்கி இருக்கிறார்.

அண்ணல் காந்தியடிகள் பலமுறை வந்து தங்கி இருக்கும் இந்த மாளிகையின் அறைகளை அந்தக் காலகட்டத்தில் இருந்தது இருந்த படி பயன்படுத்தியப் பொருட்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அறைகளைப் பார்க்கிறோம். மாடியில் நேருவின் படுக்கை அறையில் அலமாரியில் இருக்கும் புத்தகங்களின் முதுகில் அச்சிடப் பட்டிருக்கும் பெயர்களைக்கூடப் படிக்க முடிகிறது. எழுதும் மேசையில் இருக்கும் பார்க்கர் பேனாவும், வெளிநாட்டுத் தயாரிப்பான சின்ன சூட்கேஸும் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

இந்திராவின் எளிமையான அறை, அண்ணல் காந்தியடிகள் காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டத்தை நடத்திய இடம் – இவை எல்லாவற்றையும் பார்த்தபின் கீழே வரும் நம்மைக் கவருவது கீழ்த்தளத்தின் வராண்டாவில் இருக்கிற, “இந்திராவின் திருமணம் நடைபெற்ற இடம்” என்ற அறிவிப்புடன் இருக்கும் ஒரு சின்ன மேடை. திருமணம் மிக எளிமையாக நடைபெற்றிருக்கிறது என்பதைக் கண்காட்சியில் உள்ள படம் சொல்லுகிறது.

800px-anand_bhawan_allahabadஅல்லி தடாகம், அழகான பூச்செடிகள், அருமையாகப் பராமரிக்கப்படும் புல்வெளி என்ற அந்தச் சூழ்நிலையை ரசித்த வண்ணம் வெளியே வரும் நம் கண்ணில் படுவது, உள்ளே வரும்போது பார்க்கத் தவறிய, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பாறையும் அதில் நேர்த்தியாகப் பொருத்தப் பட்டிருக்கும் பட்டயமும்தான். பட்டயத்தில் “செங்கலாலும், சுண்ணாம்பாலும் எழுப்பப்பட்ட வெறும் கட்டிடம் மட்டும் இல்லை இது. தேசத்தின் சுதந்திரப் போராட்டத்துடன் மிக நெருங்கிய உறவு கொண்டது இடம் இது. இதன் சுவர்களுக்கு இடையே மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. மிகப்பெரிய நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.” என பொறிக்கப்பட்டிருக்கிறது.

மனதைத் தொட்ட மணியான வாசகங்கள்.

4 Replies to “பிரார்த்தனைகளின் சங்கமம்”

  1. Dear friends
    We have one more friend joining the world of Hindus. Welcome actress Julia Roberts…
    Julia Roberts is practicing Hinduism

    Julia Roberts at an awards ceremony in June.
    Julia Roberts, star of the new movie “Eat, Pray, Love,” which tells the story of a soul-searching character, is now a practicing Hindu.

    Roberts, in an interview with Elle magazine, says she worships with her husband, cameraman Danny Moder, and their three children, People.com says.

    The family, she told Elle, goes to temple together to “chant and pray and celebrate. I’m definitely a practicing Hindu.” Roberts grew up in Georgia, the daughter of Christian parents.

    Read the full story

  2. Pingback: Indli.com
  3. தேசத்துடன் நெருங்கிய சம்பந்தம் உள்ள இடம் தான்! ஆனால் இந்தியர்களுக்கு தேசப் பற்று குறைந்து விட்டதோ, அதற்குக் காரணமாகவும் இந்த இடத்தில் வளர்ந்தவர்கள் இருந்து விட்டார்களோ! என்ன செய்ய! காலம் தான் பதில் சொல்ல முடியுமோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *