ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்

இந்து சமய கிரியை வழிபாட்டு முறையிலே ‘யாகம்’ என்பது தொன்மையானது. இதனைத்
தமிழில் வேள்வி என்று கூறுவார்கள். வேட்டல் என்ற சொல்லும் இதே பொருளுடையது. யாகம் என்ற சொல் யஜ் என்ற அடியை உடையது. யஜ் என்றால் வழிபாடு, ஆகவே பக்தி பூர்வமான சிறப்பான வழிபாடு யாகம் எனலாம். இதனையே யக்ஞம் என்ற சொல்லும் விளக்கி நிற்பதாகவும் காட்டுவர்.

யாகம் என்று சொல்லும் போது, எரியோம்பல் என்கிற அக்னி வழிபாடே முதன்மை பெறுகின்றது. அதற்கு அங்கமாக அந்த அக்னி குண்டத்திற்கு அருகிலும், சுற்றிலும், யாகமண்டபம் அமைத்து, கும்பங்களை ஸ்தாபித்து, பல்வேறு தேவ தேவியர்களை ஆவாஹனம் செய்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால், இன்றைய ஆலயங்களில் நடைபெறும் யாகபூஜையில் அக்னி வழிபாடு சிறிது சுருங்கியதாய், யாகவழிபாட்டின் ஓரங்கமாகியிருக்கின்றது.

யாக பூஜையும் யாக மண்டபமும்

யாகசாலை அல்லது யாகமண்டபம் என்பது ஒரு திருவோலக்கம் போன்றது. அதாவது, ஒரு
பெரும் சக்கரவர்த்தி தனது பரிவாரங்களோடு, அத்தாணி மண்டபத்தில் எழுந்தருளியிருப்பது போல நாமும் நமது இறைவனை ஆவரண தேவ தேவியர்களோடு, சகல பரிவாரங்கள் சகிதம் யாகமண்டபத்தில் வீற்றிருக்கச் செய்கின்றோம்.

இவ்வாறு திருவோலக்கத்தில் எழுந்தருளியிருக்கிற பேரரசனுக்கு சகல வித உபசாரங்கள் வழங்குவது போல, இவ்வாறு மஹா யாக மண்டபத்தில் வீற்றருளும் இறைவனுக்கு, நாம் சகல உபசாரங்கள் வாழ்த்தி வழங்கிப் போற்றுகின்றோம்.

இவ்வாறு இந்த யாக உருவாக்கத்திலும், யாக பூஜையிலும், மந்திர பூர்வமாகவும், பாவனை மூலமும், கைலாசம், வைகுண்டம், ஸ்ரீபுரம் போன்ற தோற்றம் நம் பூமியில் உருவாகின்றது. இந்த வழிபாடுகள் நிறைவு பெற்றதும், தேவ தேவியர்களை அவரவர் இருப்பிடத்திற்கு (யதாஸ்தானம்) அனுப்பி வைப்பார்கள். பிரதான மூர்த்தியும், அஷ்ட வித்யேஸ்வரர், பீடசக்தி என்கின்ற ஸ்நபன திருமஞ்சன கும்பங்கள் அபிஷேகம் மூலம் திருவுருவத்துடன் சேர்க்கப்பெறும்.

ஆலயங்களில் நடக்கிற யாக பூஜையினில், இரண்டு மிகச்சிறப்பானது. ஓன்று வருடம் தோறும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கிற மஹோத்ஸவ யாகம், மற்றையது மஹா கும்பாபிஷேக யாகம்.

இதனை விட சங்காபிஷேகம், பவித்திரோத்ஸவம், பிராயச்சித்தம், விசேஷ அபிஷேகம், போன்றவற்றிலும் யாகபூஜைகள் நடைபெறுகின்றன.

இவற்றுள் மஹோத்ஸவம் என்கிற வருடாந்த பெருந்திருவிழாவுக்கான யாகசாலை நமது தென்னகத்திருக்கோயில்களில் தனியே ஆகம விதிப்படி அமைக்கப்பெற்றிருக்கக் காணலாம். (அநேகமாக திருக்கோயில்களில் ஈசான பாகத்தில் மேற்கு நோக்கியதாக இந்த யாகசாலை அமைந்திருக்கும்) மற்றைய விசேட யாகங்களுக்காக யாகசாலை தற்காலிகமாக, அழகாக அமைக்கப்பெறக் காணலாம்.

மஹோத்ஸவம், கும்பாபிஷேகம் இந்த நிகழ்வுகளில் எல்லாம் தினமும் இரண்டு வேளை
யாகபூஜை நடக்கக் காணலாம். சாதாரணமாக யாகசாலை நாற்புறமும் வாயில்களை உடையதாகவும், 16 தூண்களுடையதாகவும், நடுவில் சதுர வேதிகை (மேடை) உடையதாகவும், இருக்கும்.

இறைவனின் கொலு மண்டப வழிபாடு

யாகசாலையின் வாயுமூலை என்கிற வடமேற்கு மூலையில், அமிர்தேஸ்வரர் என்ற சந்திரகும்பம் வைக்கப்பெற்று பாலிகைகள் வைக்கப்பெற்றிருக்கும். ஈசான மூலையில் (வடகிழக்கில்) யாகேஸ்வரர்- யாகேஸ்வரி என்கிற யாகரட்ஷண மூர்த்தியும், நிருதி மூலையில் (தென்மேற்கு) புண்ணியாகவாசன மேடையும் அமைந்திருக்கும்.

இதனை விட யாகசாலையில் உள்ள தோரணங்கள், கதவுகள், மேல்விதானம், தூண்கள், திரைச்சீலை எல்லாம் தெய்வீகச்சிறப்புடையதாக, தியான ஆவாஹன பூஜை நடக்கக் காணலாம்.

சிவ யாகம்

சிவாகமபூர்வமான, யாகபூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், பஞ்சகவ்யபூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம் (மண் எடுத்தல்), சூரியாக்னி சங்கிரகணம் (சூரியனிலிருந்து நெருப்பு உண்டாக்கல்), அங்குரார்ப்பணம் (பாலிகை இடுதல்) ரக்ஷாபந்தனம் (சிவாச்சார்யார்கள் காப்பணிதல்), கடஸ்தாபனம் (கும்பங்கள் வடிவமைக்கப்பெறுதல்) என்பவற்றுடன் யாகபூஜை ஆரம்பமாகும். இவற்றினை விடவும் இன்னும் சிறப்பாக விரிவாக பல பூர்வாங்க கிரியைகளும் செய்வர்.

நவக்கிரஹம், நான்மறை, நான்கு யுகம், ஐந்து கலை, எண்திசைப்பாலகர், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி என பல்வேறு தேவ, தேவியரும் யாகத்தில் பல்வேறு இடங்களில் பூஜிக்கப்படுவார்கள்.

சில மூர்த்திகள் கும்பங்கள் வைக்கப்பெற்றும், சில மூர்த்திகள் கும்பங்கள் இல்லாமலும் பூஜிக்கப்பெறுவதும் ஆகம சம்பிரதாயமாக இருந்திருக்கின்றது. உதாரணமாக, 12 சூரியர்கள், 12 ராசிகள், 8 பைரவர்கள் முதலியவர்கள் கும்பங்கள் இல்லாமலும், எண்திசைப் பாலகர்கள் கும்பத்திலும் ஆவாஹித்து வழிபாடு செய்யும் வழக்கம் இவ்வாறுள்ளது.

அஷ்டமங்கலங்கள், தசாயுதங்கள் போன்றவையும் யாகத்தில் போற்றப்படுகின்றன. சித்திரங்களாக இவற்றை வரைந்து யாகத்தின் பல பாகங்களிலும் வைத்துப் போற்றும் வழக்கமும் உள்ளது.

யாகத்தில் சாதாரண மூர்த்திகளை வழிபட்ட பின் சிவாச்சார்யர் பிரதான மூர்த்தி பூஜைக்குச் செல்ல முன் அந்தர்யாகம், பூதசுத்தி என்னும் கிரியைகள் மூலம் தன்னை தயார்ப்படுத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிவாரங்களோடு கும்ப வடிவில் காட்சி தரும் பரமன்

ஆவரண மூர்த்திகள், புடை சூழ நடுவே மேடையில் பிரதான மூர்த்தி தமது ஆயதம், தேவியர், புத்திரர் பரிவாரங்களோடு எழுந்தருளியிருப்பார். இவர் வீற்றிருக்கும் ஆசனத்திற்கே தனிப்பட்ட சிறப்புப் பூஜை உள்ளது. அதனைப் பஞ்சாசனம் என்று குறிப்பிடுவர்.

ஆமை வடிவான ஆதாரசக்தி, அதன் மேல் ஆயிரம் தலை கொண்ட அநந்தன் என்ற அநந்தாசனம், அதன் மேல் சிங்கமுகங்களை உடைய சிம்மாசனம், அதன் மேல் காலம், கலை, நியதி என்ற யோகாசனம், அதன் மேல் தாமரை வடிவான பத்மாசனம், அதன் மேல் சூரிய, சந்திர, அக்னி மண்டல பூர்வமான விமலாசனம் இவற்றுக்கு மேலே கும்பத்தில் பிரதான மூர்த்தி வழிபடப்பெறுவார்.

இந்த ஆசனங்களை பாவனையாகக் காட்ட நவதானியங்களை வதை;து அதன் மேல் பிரதான கும்பத்தை நிறுவும் வழக்கமும் இலங்கையில் இருக்கின்றது. இதன் பிறகு கும்பத்தில் நியாச பூஜை நடக்கும். நியசித்தல் என்றால் பதித்தல் என்று பொருள். ஆக, சுவாமியை அங்கம் அங்கமாக இக்கும்பத்தில் நியசித்து விரிவாக பூஜிப்பர். இதன் பின் நிறைவாக அக்கினி வழிபாடு நடக்கும்.

இந்த அக்கினியில் நடக்கிற ஹோமத்தின் நிறைவாக, பூர்ணாஹுதி வழங்கி, யாகபூஜையை நிறைவு செய்து, பரிவார தேவர்களை விசர்ஜனம் செய்வர். பிரதான கும்பங்களை வீதியுலாவாகக் கொண்டு சென்று மூர்த்திக்கு அபிஷேகிப்பர்.

உதாரணமாக, சிவயாகத்தை எடுத்துக் கொண்டால் யாகத்தில் சுற்றிலும் 30 கும்பங்கள் வைத்து பூஜிப்பர். சந்திரன், சூரியன், சாந்திகலை, நந்தி, மஹாகாலர், வித்யாகலை, பிருங்கி, விநாயகர், நிவிர்த்திகலை, விருஷபர், ஸ்கந்தர், பிரதிஷ்டாகலை, தேவி, சண்டிகேஸ்வரர், வாஸ்துப்பிரம்மா, யாகேஸ்வரர், யாகேஸ்வரி, இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், பிரம்மா, விஷ்ணு, மஹாலக்ஷ்மி, விக்னவிநாயகர், சப்தகுரு என்று இந்த 30 கும்பங்களும் பூஜிக்கப்பெறும்.

இதே போல இன்னொரு உதாரணமாக சுப்பிரம்மண்யர் என்கிற முருகப்பெருமானுடைய யாகத்தை எடுத்துக் கொண்டால் அங்கேயும் 30 கும்பங்கள் பரிவார கும்பங்களாக யாகத்தில் பூஜிக்கப்படும் அதிலும் சிவயாகம் போலவே, எண் திசைப் பாலகர்கள், பிரம்மா, விஷ்ணு, யாகேஸ்வர யாகேஸ்வரி, கலைகள், மஹாலக்ஷ்மி, சப்தகுரு, விநாயகர் போன்ற பொதுவான மூர்த்திகள் பூஜிக்கப்பெறுவர்.

சுப்பிரம்மண்ய யாகம்

இவற்றை விட குமரக்கடவுளுடைய சிறப்பான பரிவாரங்களாகிய சுதேஹர், சுமுகர், மஹாவல்லி, கெஜாவல்லி(தேவசேனா), கஜர், மயூரர், குஹாஸ்திரதேவர், சுமித்திரர், தேவசேனாபதி, முதலிய மூர்த்திகள் பூஜிக்கப்பெறக் காணலாம்.

இவ்வாறே விநாயகர், அம்பாள், பைரவர், முதலிய மூர்த்திகளுடைய யாகசாலையிலும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. மஹா விஷ்ணு யாக மண்டபபூஜை வைஷ்ணவ ஆகமங்களின் வழியே நடைபெறுவதாலும், அவற்றினை பற்றி விவரிப்பதைத் தவிர்க்கிறோம்.

கற்றாங்கு எரியோம்பல்

சிவாகம விதிப்படி கும்பாபிஷேக யாகத்தில் பஞ்சகுண்டம் (5 அக்னி குண்டங்கள்), நவகுண்டம் (9 குண்டங்கள்), சப்ததசகுண்டம் (17 குண்டங்கள்), திரியத்திரிம்சத்குண்டம் (33 குண்டங்கள்) அமைத்து ஹோம வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.

இவற்றில் பஞ்சகுண்ட, நவகுண்ட பூஜைகள் காமிக,காரண ஆகமங்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக, நவகுண்ட பக்ஷ குடமுழுக்கு விழா என்றால் ஈசானத்தில் பிரதான குண்டம் விருத்த (வட்ட) வடிவில் அமையும். கிழக்கே சதுஸ்ர வடிவ குண்டமும், அக்னி மூலையில் யோனிகுண்டமும், தெற்கில் அர்த்தசந்திர (அரைவட்ட) குண்டமும், நிருதியில் திரிகோணமும் (முக்கோணம்), மேற்கில் விருத்தமும் (வட்டம்), வாயுவில் ஷடஸ்ரம் என்று, அறுகோணமும், வடக்கில் பத்ம அமைப்புள்ள குண்டமும் அமைத்து ஹோம வழிபாடுகள் செய்யப்படும்.

33 குண்ட யாகசாலை அமைத்தால், அது ஐந்து ஆவரணங்கள்  (பிரகாரங்கள்) கொண்டதாய்ப் பிரம்மாண்டமாக அமையக் காணலாம். முதல் ஆவரணத்தில் பிரதான குண்டத்துடன் 9 குண்டமும், மற்றைய ஆவரணங்களில் முறையே எட்டு, எட்டுக் குண்டங்களும் அமைப்பர். 108 தூண்களும் அமைப்பர். இவ்வாறான கும்பாபிஷேக யாகங்களும் இப்போதெல்லாம் அநேகமாக அமைக்கப்பெற்று வரக் காணலாம். சத்யோஜாத சிவாச்சார்யாரின் ‘பிரதிஷ்டாகாரிகை’ என்ற நூலின் வண்ணமாக இந்த 33 குண்ட யாக பூஜை அழகாகச் செய்யப்படுகிறது.

33 குண்ட யாகசாலை

புரியாத  மொழியில் அர்ச்சகர்கள் ஏதோ செய்கிறார்கள் என்று எண்ணி விலகியிருக்காது இந்த யாகபூஜையை யாவரும் உணர்ந்து அந்த இன்பத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

யாகபூஜையை முழுக்க, முழுக்க சம்ஸ்கிருத பாஷையிலேயே ஆற்றி நிறைவு செய்யாமல், அர்ச்சகர்கள் அந்த பிரதேச மொழியில் சில விளக்கங்களை வழங்குவதும் இடையிடையே திருமுறைகள், போன்ற தெய்வீக பாசுரங்களுக்கு இடம் தருவதும் யாகபூஜையில் அனைவரையும் இணைந்து பங்கெடுத்துக் கொள்ள வசதியாக அமையும் எனலாம்.

கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

30 Replies to “ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்”

  1. நல்ல விளக்கம்.
    //யாகபூஜையை முழுக்க, முழுக்க சம்ஸ்கிருத பாஷையிலேயே ஆற்றி நிறைவு செய்யாமல், அர்ச்சகர்கள் அந்த பிரதேச மொழியில் சில விளக்கங்களை வழங்குவதும் இடையிடையே திருமுறைகள், போன்ற தெய்வீக பாசுரங்களுக்கு இடம் தருவதும் யாகபூஜையில் அனைவரையும் இணைந்து பங்கெடுத்துக் கொள்ள வசதியாக அமையும் எனலாம்.//

    மிக அருமையான வரிகள்.

  2. மிக அருமையான கட்டுரை! கட்டுரை ஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்! மேலும் தொடர்ந்து தாங்கள் இத்தகைய கட்டுரைகளை தீட்ட வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்! மேலும் ஸ்ரீ வைஷ்ணவ ஆகம பூஜைகளை பற்றியும், அதில் தேர்ந்த பெருந்தகயோரை கொண்டு எழுத வைப்பின் பாலோடு தேன் சேர்ந்தார் போல தமிழ் ஹிந்து இனிக்கும்! வணக்கங்கள்!

  3. இங்கே, பதிவிட்ட சோமசுந்தரம், மித்ரன் ஆகியோருக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்பின், ஸ்ரீ.மித்ரன் அவர்கள் ஸ்ரீ வைஷ்ணவ மரபு யாகமண்டபபூஜை பற்றிக் கேட்டிருக்கிறார்கள்.

    நான் இலங்கையில் வாழ்பவன். இங்கே விஷ்ணுவாலயங்கள் நிறைவாக உள்ளன. ஆனால், வைஷ்ணவர்கள் என்ற தனிப்பிரிவு இல்லை.. ஆக, சிவாச்சார்ய மரபினரே இந்த விஷ்ணுவாலயங்களிலும் பூஜை செய்து வருகின்றார்கள்.

    ஆக, இந்த ஸ்தலங்களிலும்.. இன்னும் விஷ்ணுப் பிரதிஷ்டையின் போதும், இலங்கையில் பேணப்படும் பத்ததி மரபிலும்.. யாகபூஜா மரபிலும் எனக்கு நேரடி அனுபவம் உண்டு.. ( இவற்றிலிருந்து தனித்துவமான ஸ்ரீ வைஷ்ணவ பஞ்சாராத்திர- வைகாசன மரபு யாகபூஜைகளில் வித்தியாசம் இருக்கலாம்.. அவற்றினை அறிந்தோர் குறிப்பிட்டால் அகமகிழ்வேன்..)

    நமது யாழ்ப்பாணத்துப் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தான பத்ததி இப்படி இருக்கிறது.

    இங்கே உதாரணம் காட்டிய சிவ- சுப்பிரம்மண்ய யாகங்கள் போலவே இந்த யாகமும் தோற்றத்தைக் கொண்டிருக்கும்.. பூஜிக்கப்படும் மூர்த்திகள் மட்டும் வித்யாசம்..

    கும்பத்தில் பூஜிக்கப்படும் மூர்த்திகள் முறையே.. சூரியன், சந்திரன், சாந்திகலாத்துவாரம், கேசவமூர்த்தி, நாராயணமூர்த்தி, வித்யாகலாத்துவாரம், மாயவமூர்த்தி, கோவிந்தமூர்த்தி, நிவிர்த்திகலாத்துவாரம், மதுசூதனமூர்த்தி, திரிவிக்ரமமூர்த்தி, பிரதிஷ்டாகலாத்துவாரம், ரிஷிகேஷமூர்த்தி, விஸ்வக்ஸேனர், வாஸ்துப்பிரம்மா, மஹாலக்ஷ்மி, சக்ரேஸ்வரர், சக்ரேஸ்வரி (யாக ரக்ஷார்த்தமாக பூஜிக்கப்படும் கும்பங்கள்),

    இதனை விட எண்திசைப் பாலகர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், பிரம்மா, விஷ்ணு, வாமனமூர்த்தி, சப்தகுரு
    என்று 30 கும்பங்கள் யாகத்தைச் சுற்றிப் பூஜிக்கப்படும்.. இதை விட நான்கு மறைகளுக்கான கும்பங்கள் வழிபாடு செய்யப்படும்.

    நடுவே பஞ்சாசன வேதிகையில் நவகலச ஸ்நபனம் வைக்கப்பெற்று பூமகள், திருமகள் உடனாய திருமாலாம் வரதராஜப்பெருமாள் பூஜிக்கப்பெறுவார்.

    பெருமாளைச் சுற்றிலும் ஏழு ஆவரண (சப்தாவரண) தேவர்கள் போற்றப்படுவர்.
    இவ்வாறான மூர்த்திகள் யாவருக்கும் தியான ஸ்லோகங்கள் நமது முன்னோர்களால் எழுதியோ, எங்கிருந்தோ எடுத்தோ பாதுகாக்கப்பட்டு மரபு வழியே சிறப்பாகப் பேணப்பட்டு வருகின்றன..

    சிவாச்சார்யர்களின் மரபிலான விஷ்ணு யாக மண்டபபூஜையே இது என்பதை மீளச் சொல்ல வேண்டும்.. இந்தப் பத்ததி முறையைத் தான் விஷ்ணு வழிபாடுகளில் நான் கூட பயன்படுத்தி வருகின்றேன்..

    திருவரங்கம், திருவேங்கடம் போன்ற வைணவ ஆலய யாக வழிபாட்டுக் கிரமம் பற்றி யானும் தங்களைப் போலவே, அறிய ஆவலாயுள்ளேன்..

    சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பும்
    செல்லும் தனையும் திருமாலை- நல்லிதழ்த்
    தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
    நாமத்தால் ஏத்துதிரேல் நன்று
    -முதல் திருவந்தாதி-

    தி.மயூரகிரி சர்மா
    நீர்வேலி, யாழ்ப்பாணம்

  4. ஆலய யாக பூஜைகளைப் பற்றிய மயூரகிரி ஷர்மாவின் கட்டுரை மக்களுக்குப் பயன் தருவது. நிறைவில் அவர் குறிப்பிட்டிருப்பதுபோல, அவ்வப்போது நேரம் ஒதுக்கி, அந்தந்தப் பிரதேச மொழியில் விளக்கங்களை அளித்துப் படிப்படியாக யாகக் கிரியைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது மிக அவசியம்.

    பல ஊர்களில், கும்பாபிஷேக வர்ணனையாளர் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தாலும், வர்ணனையாளரும் வேத விற்பன்னர்களும் ஒரே நேரத்தில் mike ல் இரைச்சலை ஏற்படுத்தும் கேவலம் நடந்துவருகிறது. பல சமயங்களில், ‘அவரவர் தாய் மொழியில் வேத விஷயங்களை மக்களுக்கு வெளிப்படுத்திப் புரிந்துகொள்ள விட்டுவிடக் கூடாது’, என்கிற வீம்பில் சிலர் செயல்படுகிறார்களோ என்கிற சந்தேஹம் எழுகிறது.

    வேத வழி, ஆகம வழி இக் க்ரியைகளில் ஈடுபடும் மாண்பாளர்கள், இக்கட்டுரையைப் படித்து, உயர்திருவின் மயூரகிரியாரின் கருத்துக்கு மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டும் என்பது பிரார்த்தனை.

  5. பெருந்தகயீர்! தங்களை போன்ற பெருமக்களே அனாதியான இந்த பாரத வர்ஷத்து கலாச்சாரத்தின் தூண்கள்! நமது வேத அன்னையின் குழந்தைகள்! என் ஆயுளும் கொண்டு நீ வாழ் என்று அவ்வை யால் அதியமான் கொண்டாட பட்ட பெருமை தங்களை போன்றோருக்கே சால பொருந்தும்! எளியேனின் கேள்விக்கும் நல்விடை நல்கிய தங்களுக்கு எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்! தமிழ் ஹிந்து ஆசிரிய குழு தகுந்த பண்பாளர்களை கொண்டு ஸ்ரீ வைஷ்ணவ ஆகமங்களை பற்றி எழுத வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்! தங்களின் கட்டுரைகள் தொடர வேண்டும்! தாங்கள் தேவி உபாசனை பற்றியும், யந்திர வித பூஜா கிரமங்களை பற்றியும் சமயம் இருக்கும் பொது தனி கட்டுரைகள் யாக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்!

  6. ஸ்ரீ மயூரகிரி சர்மாவின் கட்டுரை சிவாகமங்களின் வழியில் எப்படி வேள்விகள் நடத்தப்படுகின்றன என்பதை தெளிவாக இந்த்க்கட்டுரையில் எழுதியுள்ளார். கட்டுரை நன்று. பணி தொடரட்டும். அடியேனுக்கு ஒரு சில ஐயங்கள். ஸ்ரீ சர்மா விளக்கங்கள் அளிப்பார் என நம்புகிறேன்.
    எனக்குள் எழுந்த ஐயங்கள் இதோ.
    1. சிவாகம வேள்விக்கும் வேத யாகங்களுக்கும் உள்ள அடிப்படைவேறுபாடுகள் என்ன?
    2.சிவாகம வேள்வியில் ஓதப்படும் மந்திரங்களின் மூலம் என்ன என்ன?
    3.வேள்வியில் உயிர்பலி அளிக்கப்படுவது சிவாகமங்களுக்கு சம்மதமா?
    4. வேள்வியில் இன்ன இன்ன மந்திரங்கள் இந்த இந்த இடத்தில் ஓதப்படவேண்டும் என்று ஆகமங்கள் வரையறுக்கின்றனவா?
    5.சிவாகம வேள்வியை நடத்திவைக்கும் ஆச்சாரியார்களின் தகுதியாக ஆகமங்கள் கூறுவன யாவை?
    அன்புடன்
    விபூதிபூஷண்

  7. இங்கே பதிவிட்ட, பாராட்டுதல்கள் தெரிவித்த அனைத்து அன்பர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    மரியாதைக்குரிய வீபூதி பூஷண் அவர்கள் சில வினாக்களை இரு நாட்களுக்கு முன் இங்கு தொடுத்திருக்கிறார்கள். நேரமின்மை காரணமாக உடன் பதிலளிக்க இயலவில்லை..

    சைவம் சிவ சம்பந்தமானது. இந்தத் திருநெறிக்கு வேதமே முதல் ஆதாரம்.. வேதம் பொது நூல்.. ஆகமம் சிறப்பு நூல் என்று காட்டுவார்கள்.. இன்றைக்கும் தில்லை நடராஜர் திருக்கோயில் போன்றவற்றில் தனி வேதவழக்கின் படியே உத்ஸவாதிகள் நடைபெற்று வருகின்றன..

    ஆக, வேதம் ஆகமத்திற்கு விரோதம் கிடையாது.. ஆகமம் கிரியைகளை வரையறுக்கிற போது, இன்ன இன்ன கிரியைகள் செய்யும் போது இன்ன இன்ன வேத மந்திரங்கள் சொல்லப்பட வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இவற்றை நாம் பயன்படுத்தும் ஆகம வழிக் கிரிகைளை ஒழுங்கு செய்த சத்யோஜாத சிவாச்சார்யார் பத்ததி, அகோர சிவாச்சார்யார் பத்ததி போன்றவற்றிலும் தெளிவாகக் காணலாம்..

    எனவே, வேத மந்திரங்களே முக்கியம்.. வேத மந்திரங்கள் இல்லையெனில் ஆகமக்கிரியைகள் இல்லை.. இதனைச் சிலர் புரிந்து கொள்ளாமல் இருப்பதனால் தான் வேத வழக்கு எங்களுடையதல்ல.. சிவாகமமே எங்களுடையது என்று சொல்லித் திரிகிறார்கள்.

    திருஞானசம்பந்தரைச் சேக்கிழார் போற்றும் போது ‘வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க பூத பரம்பரை பொலிய” (பெரியபுராணம்) என்கிறார்.

    வேத நெறி தழைக்க வேண்டும்.. அதன் வாயிலாகத் தான் சிவாகமம்.. சிவாகம நெறி வாயிலாகத் தான் சைவசித்தாந்தம்.. இந்த வழியிலே தான் சைவத்திருத்தொண்டர் நெறி சிறக்கும்.

    இரண்டிலும் (வேத வேள்வியிலும் ஆகம வேள்வியிலும்) பலி சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பலிகள் குறிக்கும் கருத்து என்னவென்பது ஆய்வுகளுக்கு உரியது. 23 வயதினையே உடைய என்னுடைய வேதாகம அறிவு இவை பற்றி விவாதிக்க முடியாதிருக்கிறது..

    சாதாரணமாக நாம் இந்தப் பலிகளின் போது, கூஸ்மாண்டம் என்று பூசணிக்காய் வெட்டுவதைக் கண்டிருப்பீர்கள்.. சில இடங்களில்.. சில நேரங்களில்.. சேவலின் பூ வெட்டுகிற வழக்கமும் இருக்கிறது.

    இரண்டு வேள்விக்கும் வித்யாசம்.. இவை பற்றிச் சொல்ல இன்னொரு கட்டுரை எழுதலாம்..

    உதாரணமாக, வைதீக நெறியில் “முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர்கள்” (திருமுருகாற்றுப்படை) என்பது போல ஆகவனீயாக்னீ, தக்ஷணாக்னி, கார்ஹபத்னீயாக்னி என்று மூன்று அக்னிகளில் ஹோமம் செய்வார்கள்.. இந்த அக்னி கார்ய அறிவு பெரியளவில்.. சிறியேனுக்கும் இல்லை..

    பெருமதிப்பிற்குரிய ஜடாயு, சாரங் போன்ற வைதீக விஷயங்களில் அறிவும் அனுபவமும் நிறைந்த பெரியவர்கள் இந்த வைதீக அக்னி கார்யம் பற்றி விரிவாக.. உரிய இடத்தில் விளக்கம் தரவேண்டும் என்று இந்நேரத்தில் விண்ணப்பிக்கிறேன்..

    ஆனால், சிவாகமப்படி ஏககுண்டம், பஞ்சகுண்டம், நவகுண்டம் என்று அமைத்து யாகம் செய்வார்கள். இங்கே சிவ சம்பந்தமான அக்னியானது மிகச்சிறப்பாகப் பிரதிஷ்டை செய்யப்படும்..

    பிரதான குண்டத்தில் உருவாக்கப்பெறும் இந்த விருத்த சிவாக்னி என்ற அக்னியின் மூலமாக இன்னும் எட்டாக ஆஹவனீயாக்னி, தக்ஷணாக்னி, கேவலாக்னி, கார்ஹபத்யாக்னி, விருத்தாக்னி, சாமான்யாக்னி, யௌவனாக்னி, பாலாக்னி, என்று நவ(ஒன்பது) குண்டங்களிலும் அக்னி உற்பத்தி செய்யப்பட்டு ஹோமங்கள் நடக்கும்.. இப்படி நிறைய நிறைய வேறுபாடுகள் உள்ளன..

    ஆச்சார்ய லக்ஷணம் வேறு கேட்கிறேளே.. வழமையாக எல்லா குருக்களுக்கும் நாம் எதிர்பார்க்கிற சத்வகுணலக்ஷணத்தோடு… ஆகம வேள்வி செய்வதற்கு இவர் கிருஹஸ்தராக இருக்க வேண்டும்..சிவதீக்ஷைகளை முறையாகப் பெற்று .. ஆச்சார்யாபிஷேகம் என்ற சிவாச்சார்ய தீக்ஷை பெற்றிருக்க வேண்டும்… (இப்போது சந்நியாச தீக்ஷை பற்றியே குழப்பம் நேரும் போது.. இவை பற்றியெல்லாம் என்ன சொல்ல முடியும்..?)

  8. அன்புள்ள ஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்களுக்கு நன்றி. அவர் ஸ்ரீ மயூரகிரி சிவாச்சாரியாராக விளங்கவேண்டும் அடியேன் வாழ்த்துகிறேன்.

  9. சிவ வேள்வி தமிழ் திருமுறை மந்திரங்களைக்கொண்டும் , வேத மந்திரங்கள் தமிழ் இரண்டும் ஒருங்கே ஒதபட்டும் நடத்தப்படலாம். அவை அனைவரும் பங்கேற்கும் வண்ணம் மந்திரங்கள் அடியவர்கள் ஆச்சாரியர்களோடு இணைநது ஓதிய வண்ணம் நடத்தப்படுதல் சிறப்பாகும். இவ்வண்ணம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷண் நடத்துகிறது. மக்களுக்கு சிறந்த வேத மந்திரங்களையும் திருமுறைகளை ஓதும் பயிற்சியை நமது சமய அமைப்புக்கள் அளிக்கவேண்டும்.
    அன்புடன்
    விபூதிபூஷன்

  10. யக்ஞம் சம்பந்தமான விஸ்தாரமான வ்யாசம் சமர்ப்பித்துள்ள மயூரகிரி சர்மா மஹாசயருக்கு நன்றி.

    கடந்த சில பல நாட்களாக தமிழ் ஹிந்து தளத்தில் சில வ்யாசங்களில் பதிவான உத்தரங்களில் இருந்த யதிதூஷணங்களால் (மட்டற்ற மற்றும் ஆசிரியர் குழுவின் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படாத) விசனமுற்று தமிழ்ஹிந்து பக்கங்களை தொடர்ந்து பார்க்க இயலவில்லை.

    தங்களது யக்ஞம் சம்பந்தமான வ்யாசம் பார்த்ததும் ஏகம் பாகவதம் சாஸ்த்ரம் என்ற ரீதியில் ஸ்ரீமத் பாகவதமே நினைவில் வந்தது. ஸ்ரீமத் பாகவதத்தின் மூன்றாவது ஸ்கந்தத்தில் பதின்மூன்றாவது அத்யாயத்தில் 34 ஸ்லோகம் முதல் 48 ஸ்லோகம் வரை ப்ரளய ஜலத்தில் மூழ்கிய பூமியை ஹிரண்யாக்ஷனுடன் யுத்தம் செய்து மீட்டெடுத்த வராஹ மூர்த்தியை ரிஷிகள் யக்ஞ ரூபமாய் ஸ்துதி செய்கிறார்கள். இந்த வ்யாசத்தின் கருப்பொருளுடன் சம்பந்தமிருப்பதால் நான் அறிந்த வரை என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

    வெல்ல முடியாத வராஹ மூர்த்திக்கு ஜெயம் ஜெயம் என ஸ்துதி ஆரம்பிக்கிறது. வேதமயமான வராஹமூர்த்தி யக்ஞஸ்வரூபமாய் அறியத்தக்கவர் என ஸ்துதிக்கிறார்கள் ரிஷிகள். அவருடைய சரீரம் வேத மயமாயும் ரோமக்கால்கள் சமுத்ரங்களால் நிரம்பியதாகவும் நேத்ரங்கள் யக்ஞத்திலிடப்படும் நெய்யால் நிரம்பியதாயும் ரோமங்கள் குசம் என்னும் தர்ப்பைப்புல்லால் ஆனதாயும் தோள்கள் காயத்ரி போன்ற சந்தஸுகளால் ஆனதாயும் மூக்கும் காதுகளும் வாயும் முறையே யக்ஞங்களில் உபயோகப்படுத்தப்படும் பாத்திரங்களான ஸ்ரவம், சமஸம் மற்றும் ப்ராஸித்ரம் போன்றவற்றைக் குறிப்பதாகவும் ஸ்துதிக்கிறார்கள். அவருக்கு உணவு அக்னிஹோத்ரம் எனும் க்ரியை. இவ்வாறாக, யக்ஞ வராஹ மூர்த்தியின் ரூபத்தை முழுக்க யக்ஞ பரிபாஷைகளால் ஸ்துதிக்கிறார்கள். அவரை யக்ஞம் எனவும் க்ரது எனவும் ஸ்துதிக்கிறார்கள். யக்ஞம் மற்றும் க்ரது ஆகியவை வேள்விகளே எனினும் இஞ்சிக்கொல்லை சிவராம சாஸ்த்ரிகள் அவர்கள் ஸோமம் உள்ள வேள்விகளை க்ரது எனவும் ஸோமம் இல்லாத வேள்விகளை யக்ஞம் எனவும் வ்யாக்யானம் செய்துள்ளார். முழுதும் யக்ஞ பரிபாஷைகளால் நிரம்பிய இந்த ஸ்துதியை வாசிப்பது பல யக்ஞங்களைச் செய்யும் பாக்யம் பெற்ற தங்களுக்கு மனநிறைவைத்தரும். ஸ்துதியையும் அதன் வ்யாக்யானத்தையும் தாங்கள் அவசியம் வாசிக்கவும்.

    யக்ஞ வராஹப்பெருமான் வேத நெறி தழைக்கவும் வேத வழி யக்ஞங்கள் குறையின்றி நடந்து உலகம் முழுதும் சுபிக்ஷமாக இருக்கவும் அருளட்டும்.

    லங்காபுரியில் ஸோமயாகம் வாஜபேயம் போன்ற யக்ஞங்களைச் செய்து நித்யாக்னிஹோத்ரம் செய்யும் அந்தணர்கள் உள்ளார்களா என அறியவும் ஆவலாக உள்ளேன்.

    தாங்கள் எழுதியபடி வைஷ்ணவ ச்ரேஷ்டர்கள் வைஷ்ணவாகமங்கள் ப்ரகாரம் செய்யப்படும் யக்ஞங்கள் பற்றி வ்யாசங்கள் சமர்ப்பிக்கவும் விக்ஞாபிக்கிறேன்.

  11. சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய, எழுதாக்கிளவி என அறியப்படும் வேதத்தை உபயுக்தமாகவாவது கற்கவிழைவோருக்கு (புஸ்தக உதவி கொண்டு) அருமருந்து ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தார் அச்சிட்டு (தமிழ் மற்றும் நாகர லிபியில் ஸ்வரக்குறிப்புகளுடன்) வெளியிட்டுள்ள புஸ்தகங்கள் என்றால் மிகையாகாது.

    வைதிக யக்ஞங்கள் நானறிந்த வரை ஆகம மற்றும் உறிய கல்ப சூத்ரங்களின் ப்ரகாரம் நடாத்தப்பெறுகின்றன.

    சிவ வேள்வி என்ற பதம் மூலம் தாங்கள் குறிப்பிட விழைவது யாதென அறிய இயலவில்லை.

    \\\\சிவ வேள்வி தமிழ் திருமுறை மந்திரங்களைக்கொண்டும் , வேத மந்திரங்கள் தமிழ் இரண்டும் ஒருங்கே ஒதபட்டும் நடத்தப்படலாம். அவை அனைவரும் பங்கேற்கும் வண்ணம் மந்திரங்கள் அடியவர்கள் ஆச்சாரியர்களோடு இணைநது ஓதிய வண்ணம் நடத்தப்படுதல் சிறப்பாகும். இவ்வண்ணம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷண் நடத்துகிறது.\\\\

    சைவ சம்ப்ரதாயம் பற்றி, அடியேன் இங்கு வ்யாசம் சமர்ப்பிக்கும் மற்றும் உத்தரங்களிடும் தங்களைப்போன்ற வித்பன்னர்கள் மூலமே அறியப்பெறுகிறேன். ஆதலால் சைவ சம்ப்ரதாயம் சம்பந்தமாக தாங்கள் சொன்ன கருத்திற்கு நான் அபிப்ராயம் சொல்வது உசிதமாகாது. ஆனால் நான் வாசித்து அறிந்த படிக்கு பழுத்த சிவநெறிச் செல்வரான பெருமதிப்பிற்குறிய கயிலைமாமுனிவர் திருவாளர் திரு காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான், அதிபர்,காசித்திருமடம், திருப்பனந்தாள் அவர்களது அபிப்ராயம் தாங்கள் பதிவு செய்த அபிப்ராயத்திலிருந்து முற்றிலும் மாறானது என அறிகிறேன்.

    திரு.மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு உத்தரமளிக்கும் முகாந்திரமாக ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்கள் இவ்விஷயம் சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் கீழ்க்கண்ட சுட்டியில் வாசிக்கலாம்.

    https://groups.yahoo.com/group/devaram/message/4018

    அதன் சாராம்சம்

    “”””தாங்கள் செந்தமிழ் வேள்வி செய்வது தங்கள் கருத்தாகச் சொல்லிச் செய்வீர்களேயானால் அதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்காது என்று எண்ணுகிறோம்.

    திருநெறிய தமிழ் வேள்விக்குரிய மந்திரமன்று. ஓதியமாத்திரத்திலேயே ஊடகமின்றி இறைவன் திருச்செவியில் நேரே சென்று சேர்ந்து பயனளிக்கக்கூடியது திருநெறியத் தமிழ் மந்திரம். அத்தகைய மேலான மந்திரத்தை நீங்கள் பிரயோகிக்கும் முறை தவறானது. தவறான பிரயோகம் நற்பயன் தராதல்லவா?

    “சொற்றமிழ் பாடு” என்று இறைவன் சுந்தரர்க்குக் கட்டளையிட்டான் என்பதுதானே பெரியபுராணம்! நால்வர் பெருமக்கள் வாக்கெல்லாம் இறைவன் வாக்கே. அது நெருப்பில் வேகாது; நீர்வழிப் போகாது என்பதைத் திருஞானசம்பந்தப் பெருமான் நமக்கு நிருபித்துக் காட்டியுள்ளாரே. இறைவன் தன் கைப்பட எழுதி வைத்துக்கொண்ட தமிழை; அரசனுக்கும், சிவாச்சாரியருக்கும் இறைவன் சீட்டுக்கவி எழுதிக் கொடுத்த தமிழை; ஞானப்பாலுண்ட அருநெறிய மறைவல்ல திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருநெறியத் தமிழை வேள்வித் தீயில் இடும் செயலிலும் கொடுஞ்செயல் ஒன்றுளதோ? சிந்தியுங்கள்.””””

    சைவ சமயமறியா நான் ஏதும் இது பற்றி சொல்லவியலாது. எனினும் நானறிந்த படிக்கு முக்யமான மாற்றுக்கருத்து என்ற ரீதியில் இதைப்பகிர்ந்து கொள்கிறேன்.

    \\\\\மக்களுக்கு சிறந்த வேத மந்திரங்களையும் திருமுறைகளை ஓதும் பயிற்சியை நமது சமய அமைப்புக்கள் அளிக்கவேண்டும்.\\\\

    ஆஸேது ஹிமாசலம் நாலாயிர திவ்யப்ரபந்தங்கள் தெலுகு, கன்னடம், ஹிந்தி மற்றும் நேபாள மொழி பேசுவோர்கட்கெல்லாம் கூட முறையாக பயிற்றுவிக்கப்படுகிறது. தெலுகு மொழியைத் தாய்மொழியாய்க் கொண்ட சின்ன ஜீயர் ஸ்வாமிகள் என்றறியப்படும் நாராயண ஜீயர் ஸ்வாமிகள் அவர்கள் ஆதீனத்தில் பதரிகாச்ரமத்தில் உள்ள அஷ்டாக்ஷரி மடத்தில் தெலுகு மற்றும் நேபாள மொழி பேசுவோர் தெலுகு லிபியில் எழுதப்பெற்ற திருப்பாவையை காலை நேரத்தில் அனுசந்தானம் செய்ததை கண்ணில் நீர்மல்க நெஞ்சு குளிர நான் கேட்டு ஆனந்தித்தது உண்டு.

    ஹிந்துஸ்தானத்தின் தக்ஷிண பாகத்தில் இன்று எப்படி நிலைமை என அறியேன். உத்தர பாரதத்தில் மஹரிஷி தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளது ஆர்ய ஸமாஜத்தினர் சமூஹத்தின் அனைத்து மக்களுக்கும் வேதக்கல்வி அளித்து படிப்பவர்களை ப்ரோத்ஸாஹம் செய்ய பணக்கிழிகளும் அளிக்கிறார்கள்.

    ஆஸ்தா தொலைக்காட்சியில் ஸ்வாமி ராம்தேவ் அவர்கள் ரிக், யஜுர் மற்றும் சாமவேதம் பூர்ணமாக அத்யயனம் செய்து பரீக்ஷையில் தேர்ச்சி பெற்ற ஆண் பெண் குழந்தைகளுக்கு நற்சான்றிதழும் பணக்கிழியும் அளித்ததை சமீபத்தில் ஒளிபரப்பினர். ஸ்வாமி ராம்தேவ் அவர்களும் பாரதத்தின் பெரும் வேத விற்பன்னர்களில் ஒருவர்.

    உலகெங்குமேவிய தேவாலயந்தொரும் வீற்றிருக்கும் வள்ளிக்கு வாய்த்த மணவாளனின் திருப்புகழ் தமிழ் கூறும் நல்லுலகத்தோரால் “பாருளீர் வாருமே வந்து மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கணியலையும் நினைந்திருக்க வாருமே” என்ற ரீதியில் பேச இயன்ற மானுட குலமனைத்திற்கும் உலகெங்கிலும் கற்பிக்கப் படுகிறது. கௌமாரம் தளத்தினர் பாரதமெங்கும் உள்ள திருப்புகழ் சபைகளை தொகுத்துள்ளனர்.

    அது போலே தமிழகத்திலும் ஹிந்துஸ்தானத்தின் அன்ய மாகாணங்களிலும் சைவத் திருமுறை கற்றுத்தரும் சத்சங்கங்களை பற்றி தங்களைப் போன்றோர் பரிச்ரமப்பட்டு ஒரு தொகுப்பை ஆவணப்படுத்த வேணுமாய் விக்ஞாபித்துக் கொள்கிறேன்.

  12. ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மாஹாசயருக்கு தக்ஷ யக்ஞமாகட்டும் சிவாகம வேள்வியாகட்டும். அதைப்பற்றி விவாதிக்க வித்தைகள் பதினான்கையும் முழுமையாகக் கொண்ட சைவர்கள் ஒரு பதினெட்டில் ஒரு புராணமாக ஏற்றுக்கொள்ளாத தந்திரம் என்று கருதும் பாகவதம் துணைவருகிறது. என்னே விந்தை.

  13. அன்பின் சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய, வ்யாசத்தின் தலைப்பு ஆகம வழி நின்ற ஆலய பூஜைகள். வ்யாசத்தில் சிவாகம ப்ரகாரம் செய்யப்படும் யக்ஞங்களைப் பற்றிய விவரணங்கள் உள. ஒப்புக்கொள்கிறேன். என் உத்தரத்தில் யக்ஞத்தை மையமாக வைத்தே விவரணங்கள் அமைந்துள்ளன. ப்ரத்யேகமாக சிவாகம யக்ஞம் என்றில்லை. காரணம் சிவாகமப் படி செய்யும் யக்ஞமாயினும் வைஷ்ணவாகமப்படி செய்யும் யக்ஞமாயினும் ஆராத்ய மூர்த்தியில் வேறுபாடுகள் இருப்பினும் வைதிக யக்ஞம் என்ற க்ரியையில் பொதுவான விஷயங்கள் மிகப்பல உள்ளன. என் கருத்துப்பகிர்வுக்கு ஆதாரமாக நான் எடுத்துக் கொண்ட க்ரந்தம் ஸ்ரீமத் பாகவதம்.

    தக்ஷ யக்ஞ வ்ருத்தாந்தம், அம்ருத மதனத்தின் போது மஹாதேவர் ஹாலாஹல விஷபானம் அருந்தி தேவாஸுரர்களை ரக்ஷித்த வ்ருத்தாந்தம் போன்ற சைவ பக்ஷமான வ்ருத்தாந்தங்கள் வைஷ்ணவ பக்ஷமான ஸ்ரீமத் பாகவத மஹாபுராணத்தில் இருப்பது எமக்கு உணர்த்துவது சைவம் வைஷ்ணவம் இவையனைத்தும் பரந்த வைதிக தர்சனத்தின் அங்கங்கள் என்பது.

    தங்கள் ஏகாக்ர சிவபக்தியிலிருந்தும் இங்கு பதிவுகள் செய்யும் பல வைஷ்ணவ ச்ரேஷ்டர்களின் ஏகாக்ர விஷ்ணு பக்தியிலிருந்தும் அடியேன் கற்க விழைவது நான் ச்லாகிக்கும் ஏகாக்ரதை அல்லது புறந்தொழாமை. பின்னும் இளமையிலிருந்து மனதில் நான் உள்வாங்கிய விஷயம் சிவ விஷ்ணு அபேதம். சிவனையே தொழுவதும் விஷ்ணுவையே தொழுவதும் பேதமின்றி இருவரையும் தொழுவதும் வேறெந்த தெய்வங்களைத் தொழுவதும் ஏன் தெய்வ மறுப்பும் கூட பரந்த ஹிந்து சமயத்தில் அடங்குபவையே.

    வராஹ ஸ்துதியில் ஸ்துதிக்கப்படுவது வராஹமூர்த்தி எனினும் அதன் தாத்பர்யம் உள்வாங்கத்தக்கது. யக்ஞத்தில் ப்ரயோகிக்கப்படும் வேதமந்த்ரங்களும் அதிலிடப்படும் நெய்யும் உபயோகிக்கப்படும் குசம் இத்யாதி தர்ப்பங்களும் யக்ஞத்தில் உபயோகிக்கப்படும் பாத்ரங்கள் இவையனைத்தும் ஸ்துதிக்கப்பெறும் பகவத் ஸ்வரூபமே என்பது ஸ்துதி காட்டும் தாத்பர்யம். அந்த பகவத் ஸ்வரூபத்தை யக்ஞேஸ்வரனை அரவணைமேல் துயில் கொண்ட பெருமானாக த்யானிப்பதும் யக்ஞவராஹப்பெருமானாக த்யானிப்பதும் உமாகாந்தனாக த்யானிப்பதும் வள்ளீ தேவானைமணாளனாக த்யானிப்பதும் அவரவர் உபாசனா சம்ஸ்காரம் சார்ந்த விஷயம். அப்பரம்பொருள் எங்கும் நிறைபவன் அனைத்துள்ளும் உறைபவன் என்பது ஸ்துதியிலிருந்து பொதுவிலே நான் உள்வாங்கும் விஷயம்.

    வ்யாசர் அருளிய ஸ்ரீமத் பாகவதமும் வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய தித்திக்கும் திருப்புகழும் என்னிரு கண்களாய் பார்ப்பவற்றை க்ரஹிக்கின்றன. க்ரஹித்த விஷயத்தில் தோஷம் என்றால் அது என் ஊனக் கண்களில் இருக்கலாம். எனது கண்ணுக்கு கண்ணாய் விளங்கும் ஆதாரமான திருப்புகழிலோ அன்றி ஸ்ரீமத் பாகவதத்திலோ அல்ல என்பது என் புரிதல். நமக்குப் பரிச்சயமான விஷயங்கள் வாயிலாகவே நாம் கேட்கும் பார்க்கும் விஷயங்களை அறிவது என்பது இயல்பே அன்றி விந்தையன்று என்பது என் புரிதல்.

    நான் க்ரஹித்த விஷயங்களில் தோஷமேதுமிருப்பின் வித்பன்னரான தாங்கள் ப்ராமாணிக க்ரந்தங்கள் மூலமாக என் உத்தரங்களில் இருக்கும் தோஷங்களை தயை கூர்ந்து களைந்தால் க்ருதார்த்தனாவேன்.

  14. சிவஸ்ரீ அவர்களுக்கு,

    வேதத்திலும் மற்ற புராணங்களிலும் இல்லாத தாத்பரியம் எந்த தாத்பரியத்தையும் பாகவதம் சொல்லவில்லை.

    இது விஷ்ணு புராணம் முதல் சருக்கம் நான்காம் அத்தியாயத்தில்:

    The Yogis.–Triumph, lord of lords supreme; Keśava, sovereign of the earth, the wielder of the mace, the shell, the discus, and the sword: cause of production, destruction, and existence. THOU ART, oh god: there is no other supreme condition, but thou. Thou, lord, art the person of sacrifice: for thy feet are the Vedas; thy tusks are the stake to which the victim is bound; in thy teeth are the offerings; thy mouth is the altar; thy tongue is the fire; and the hairs of thy body are the sacrificial grass. Thine eyes, oh omnipotent, are day and night; thy head is the seat of all, the place of Brahma; thy mane is all the hymns of the Vedas; thy nostrils are all oblations: oh thou, whose snout is the ladle of oblation; whose deep voice is the chanting of the Sáma veda; whose body is the hall of sacrifice; whose joints are the different ceremonies; and whose ears have the properties of both voluntary and obligatory rites: do thou, who art eternal, who art in size a mountain, be propitious. We acknowledge thee, who hast traversed the world, oh universal form, to be the beginning, the continuance, and the destruction of all things: thou art the supreme god. Have pity on us, oh lord of conscious and unconscious beings. The orb of the earth is seen seated on the tip of thy tusks, as if thou hadst been sporting amidst a lake where the lotus floats, and hadst borne away the leaves covered with soil. … Be favourable, oh universal spirit: raise up this earth, for the habitation of created beings. Inscrutable deity, whose eyes are like lotuses, give us felicity. Oh lord, thou art endowed with the quality of goodness: raise up, Govinda, this earth, for the general good.

    இத்தகைய ஸ்துதி ஹரிவம்ச்சத்திலும் உண்டு. ஆதி சங்கரர் விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில் “யஞாங்க” (974) என்ற நாமத்திற்கு இட்ட பாஷ்யத்தில் இதைக் காணலாம். “யஞ்யோ வை விஷ்ணு:” என்று கிருஷ்ண யஜுர் வேத தைத்திரீய சம்ஹிதையிலேயே உண்டு. ஆகா ஸ்ரீ கிருஷ்ணகுமார் காட்டிய பாகவத வசனங்கள் நீங்கள் ஏற்கும் மற்ற பிரமாணங்களிலும் உண்டு. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பாகவதத்தின் மீது சீற வேண்டாம்.

  15. போற்றுதலுக்குரிய ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மகாசயருக்கு,
    ஹரிகதை எனப்படும் பாகவதத்தை சைவர்கள் ஏற்பதில்லை என்பதை
    சுட்டவே விரும்பினேன்.
    வைதீகர்கள் அனைவரும் ஏற்று போற்றுவது யக்ஞம் என் கிற முறை.
    இங்கே ஒரு சிறிய செய்தி தக்ஷ யக்ஞம் பாகவதம் இரண்டையும் இணைக்க உதவுகிறது. தக்ஷனுடைய சோம யாகத்தை நடத்திய அந்தணர்கள் வேதத்திற்கு விரோதமாக ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அவிர்பாகம் அளிக்கவில்லை. ஆகவே அவர்கள் அடுத்த பிறவியில் வைதீக மார்கத்திநின்று வெளியேற்றப் பட்டார்கள். அவர்களும் உபாசிக்க ஸ்ரீ ஹரியால் வகுக்கப்பட்டதே பாகவத தந்திரம்.
    சைவ வைணவ ஒற்றுமைக்காக பாடுபடும் உங்கள் முயற்சியிலும் ஆர்வத்திலும் வீரசைவனான அடியேனுக்கு கருத்துபேதம் இல்லை.
    அன்புடன்
    விபூதிபூஷன்

  16. பாகவத ஸ்ரீ கந்தர்வன் அவர்களே பாகவதம் எமக்கு பிரமாணம் இல்லை என்கிறேனே அன்றி பாகவதத்தின் மீது சீறவெல்லாம் இல்லை. அடியேன் ஏற்றகனவே தமிழ் ஹிந்துவில் சொன்னதை
    மீண்டும் இங்கே நினைவுட்டுகிறேன் அவ்வளவுதான்.
    சைவர்களின் பிரமாணங்கள் வேதம் முதலாய பதினான்கு வித்யாஸ்தானங்களில்(திருமூலர் பெருமான் வித்தை என்பார் இதனை) ஒன்று புராணம் (18). இதனுள் சைவர்களின் கருத்துப்படி ஸ்ரீ தேவிபாகவதமே பாகவதம் எனக்கொள்ளப்படுகிறது. வேதநெறிக்கு உள்ளே விதிவசத்தால் உள்வரமுடியாதவர்களுக்கு பாகவத தந்திரம் பொருத்தமானது. ஆகவே வேதநெறியை காட்டிலும் more Inclusive என்று கூட சொல்லலாம்.
    அன்புடன்
    விபூதிபூஷண்

  17. சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய தங்கள் உத்தரம் வாசித்ததில் சில சம்சயங்கள் எழுகின்றன. தெளிவு படுத்துமாறு விக்ஞாபிக்கிறேன்.

    “தக்ஷனுடைய சோம யாகத்தை நடத்திய அந்தணர்கள்”—-ருத்ராவேசத்தால் அனுப்பப்பட்ட மூர்த்தி நாசம் செய்த தக்ஷ யக்ஞத்தைப் பற்றிய வ்ருத்தாந்தம் ஸ்ரீமத் பாகவதத்தில் வாசித்துள்ளேன். தக்ஷப்ரஜாபதி நடாத்தியது சோம யாகம் என்ற குறிப்பு எந்த புராணத்தில் உள்ளது மற்றும் சம்பந்தப்பட்ட ச்லோகம் யாது என தெரிவிக்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    பஞ்சமகர யுக்தமான (மத்ய, மாம்ஸ, மத்ஸ்ய, முத்ரா, மைதுன – மது, மாம்சம், மீன், முத்திரைகள் மற்றும் மைதுனம்) வாமாசார தந்த்ர வழிபாடு காபாலிக சைவ மற்றும் சாக்த வழிபாடுகளில் இருந்ததாக அறிவேன். வாமாசார வைஷ்ணவ வழிபாடுகள் என்று ஏதும் இருந்ததாகத் தெரியவில்லையே.

    அதுவும் பாரமஹம்ஸ தர்மத்தை போதிக்கும் ஸ்ரீமத் பாகவதத்தை தந்த்ர சாஸ்த்ரம் என்று கூறுவதற்கு முகாந்திரம் கூட இருக்கவியலாதே. ஸ்ரீமத் பாகவதத்தை தந்த்ரம் என தாங்கள் தெரிவிப்பது வெறும் செவி வழிச்செய்தி என்றால் புறந்தள்ளத் தக்கது. ஏதும் ப்ராமாணிக க்ரந்தத்தின் ப்ரகாரம் எனில் ப்ராமாணிக க்ரந்தம் யாது அவ்வாறு தெரிவிக்கும் ச்லோகம் யாது என்ற விவரங்களை தெரிவிக்குமாறு விக்ஞாபித்துக் கொள்கிறேன்.

  18. ஸ்ரீ மயூரகிரி சர்மா தங்கள் பின்னூட்டத்தில்
    “இன்றைக்கும் தில்லை நடராஜர் திருக்கோயில் போன்றவற்றில் தனி வேதவழக்கின் படியே உத்ஸவாதிகள் நடைபெற்று வருகின்றன”.
    அப்படித்தான் தில்லையில் படித்தகாலத்தில் கேள்விப்பட்டேன். ஒரு சிவாலயத்தின் பூஜை முறைகள் அது எந்த ஆகம முறைப்படி கட்டப்பட்டதோ அவ்வண்ணமே நடைபெறவேண்டும் என்பது விதி. அப்படியானால் சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கோயில் மகுடாகம முறையில் அமைந்திருக்க வேத முறைப்படி அங்கே பூஜை செய்வது எப்படி சரியாகும். வேதத்தில் கோயிலில்லை பூஜை இல்லை க்ரியை இல்லை எப்படி அதன் படி ஆலய பூஜை செய்ய இயலும். கோயில் வழிபாட்டை ஆகமங்களைக் கொண்டே செய்ய முடியும்(மந்திரம் மட்டும் வேதோக்தமானது முத்திரை மற்றும் இதர கிரியைகள் ஆகமங்களில் இருந்தே பெறப்படுகின்றன எனவே வேதமும் ஆகமமும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன. எனவே வைதீக முறைப்படி எம்மிறை ஆடல் வல்லானுக்கு ஆகமமில்லாமல் பூஜை செய்கிறார்கள் என்பது எப்படி சரியாகும்.
    விபூதிபூஷன்

  19. தமிழ் ஹிந்து தள ஆசிரியர் குழுவிற்கு, இன்று தான் சாரு வலை தளத்தில் பழைய மாதத்தை படிக்க விழைந்து, தற்செயலாக தமிழ் ஹிந்து தளத்தின் இணைப்பு கிடைக்க பெற்றேன். இங்கு கருத்து சொன்ன அனைவரின் ஆதங்கமும், உள்ள குமுறலும் போன்ற நிலை எனக்கும் உண்டு. இந்து மதத்தின் சிறப்பே, அதன் தொன்மையும், பகுத்து அறிவு வாதத்தை தனுள்ளே கொண்டதுமே ஆகும். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கைஇல் போன்ற தத்துவம், வேறு எந்தமத்திலும் காணமுடியாதது. ஆனால் சிலர் கூறியது போல நமக்கே நமைபற்றிய தெளிவு இல்லை. இந்த போலி பகுத்து அறிவு வாதிகள் மற்ற மதத்தை பற்றி வாய் திறக்க முடியாது, இவர்களுக்கு அந்த தில் கிடையாது. இவர்கள் இந்த போலி பகுத்து அறிவு வாதிகள் தான் உண்மையான கோழைகள். வாழ்க ஹிந்துதர்மம். வளர்க ஹிந்து ஆன்மிகம்.

  20. ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசயர்
    கயிலைமாமுனிவர் திருவாளர் திரு காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான், அதிபர்,காசித்திருமடம், திருப்பனந்தாள் சிவத்திரு. சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு பதிலாகக்கூறியதை சுட்டியுள்ளார்.
    1. “திருநெறிய தமிழ் வேள்விக்குரிய மந்திரமன்று. ஓதியமாத்திரத்திலேயே ஊடகமின்றி இறைவன் திருச்செவியில் நேரே சென்று சேர்ந்து பயனளிக்கக்கூடியது திருநெறியத் தமிழ் மந்திரம். அத்தகைய மேலான மந்திரத்தை நீங்கள் பிரயோகிக்கும் முறை தவறானது. தவறான பிரயோகம் நற்பயன் தராதல்லவா?”
    இது ஒரு தவறான விளக்கம். திருமுறை பணுவல்கள் ஆற்றலுடையவை நேரடியாக இறைவனை அடைய வல்லன எனில் வேத மந்திரங்கள் வேள்வி மூலம் மட்டுமே பலன் தருமா நேரடியாக ஒதினால் பயன் தராவா? மந்திரங்கள் ஜபிப்பதற்குரியன வேள்விக்கும் உரியன. ரிக் வேதத்தின் பணுவல் யஜூர்வேதத்தில் யக்ஞ மந்திரம் சாமவேதத்தில் இசைபாடல் ஆதல் போல தமிழ் வேதமான தேவார திருவாசக அருள் நூல்களும் பயன் படலாம். ஆலயமே இல்லாத வேதகாலத்தில் அருளப்பட்ட மந்திரங்கள் வேள்விக்கும் பின்னர் ஆலய வழிபாட்டிலும் பயன் படுதல் போல வேத ரிஷிகளுக்கு ஒப்ப இறைவனை கண்ட அருளாளர் அருளிய திருமுறைகளும் வேதம் போல் ஓதுதற்கும் உரியன வேள்விக்கும் உரியன. தமிழ் மந்திரங்கள் மிக்க ஆற்றலுடையன அவற்றுக்கு வேள்வி அவசியமில்லை எனில் வேள்வியே அவசியமில்லை என்றாகிவிடும்.
    2. “இறைவன் தன் கைப்பட எழுதி வைத்துக்கொண்ட தமிழை; அரசனுக்கும், சிவாச்சாரியருக்கும் இறைவன் சீட்டுக்கவி எழுதிக் கொடுத்த தமிழை; ஞானப்பாலுண்ட அருநெறிய மறைவல்ல திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருநெறியத் தமிழை வேள்வித் தீயில் இடும் செயலிலும் கொடுஞ்செயல் ஒன்றுளதோ? சிந்தியுங்கள்”.
    என்னக்கதை இது எந்தை ஈசன் அருளியதே வேதமும் ஆகமங்களும் அவற்றை தீயிலிடலாமா. வேள்வியில் ஓதும் மந்திரம் னெருப்பிலடப்பட்டதாகுமோ என்ன புனைவு. நிச்சயம் ஏமாறமாட்டோம்.
    ஆலயத்தில் சிவபெருமானின் திருச்செவிக்கு தேவார திருவாசக தேன் மொழியை செய்விக்க் விண்ணப்பம் வழியில்லை. கருவறைக்கு வெளியே யாக சாலைக்கு வெளியே கடவுளை கண்ட காட்டும் திருனெறிய தமிழ் தயங்கி நிற்கிறது. சைவ ஆதீனங்கள் கூட வெளியே நிற்கின்றனரே. ஏன் இந்த இழி நிலை இது மாறவேண்டும். என்பதே எம்னைய சைவர்களின் வேண்டுதல். ஒன்றும் வேண்டாம் ஸ்ரீ வைணவ பட்டர் நாலாயிர திவ்யபிரபந்ததை ஓதி திருத்துழாயை திருமாலுக்கு சமர்ப்பிக்கிறார். அந்த அளவுக்கு கூட திருனெறிய தமிழுக்கு சிவாலயங்களில் மதிப்பில்லை. இதையெல்லாம் ஏற்போம் அல்லோம்.

  21. அன்பின் சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய,

    \\\\சைவ வைணவ ஒற்றுமைக்காக பாடுபடும் உங்கள் முயற்சியிலும் \\\\

    ஐயன்மீர், அடியேன் ஸ்வபாவத்தால் சிவ விஷ்ணு அபேதம் உடையவன். மேற்கண்ட கருத்துக்கு பாத்ரனல்லன். அதற்கு மிக அதிகத் தகுதிகள் தேவை. மாறாக வீர சைவர்களின் மற்றும் தீர வைஷ்ணவர்களின் பரமைகாந்தித்வம் அடியேன் ச்லாகிக்கும் விஷயம். இவர்களின் பக்தியைப் பார்த்து என் உபாஸனா மூர்த்தியிடம் அடியேனுக்கும் இவ்வாறு பரமைகாந்தித்வம் சித்திக்க ப்ரோத்ஸாஹம் கிட்டுகிறது என்பது தான் வாஸ்தவம்.

    அடியேன் சமர்ப்பிக்கும் கருத்துக்களை முன் தீர்மானமோ பக்ஷபாதமோ இல்லாது வாசிக்குமாறு விக்ஞாபிக்கிறேன்.

    திருவிண்ணகரங்களில் ஆலய வழிபாட்டை ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யவர்யர்கள் நெறிமுறைப்படுத்தியுள்ளனர். அதுபோலவே சிவாலய வழிபாடுகளை நெறிமுறைப்படுத்தவல்லார் சைவாசார்யர்கள் என்பது சரியே.

    வேள்வி பற்றியதான அபிப்ராயம் தெரிவித்தது அடியேனல்லன் மாறாக பூஜ்ய சைவாதீன திருப்பனந்தாள் காசிமட அதிபரான ஸ்வாமிகள் என்பதை தய்வு கூர்ந்து ஆழ்ந்து கருத்தில் கொள்ளவும். பூர்ண சைவ வித்யாப்யாசம் பெற்ற பல சிவநெறிச்செல்வர்கள் இத்தளத்தில் இருப்பதால் அவர்களூடே இது சம்பந்தமாக இத்தளத்திலோ அல்லது தனிப்பட்ட் முறையிலோ திருமுறைகளின் படி வேள்வி எனில் திருமுறைகளின் படி ப்ரமாணத்தால் கருத்துப்பரிமாற்றம் இருக்க வேண்டியது அவசியம் என்பதற்காக அடியேன் வாசித்தறிந்த மாற்றுக்கருத்து சுட்டப்பட்டிருந்தது.

    ஸ்ரீ ஸ்வாமிகள் தன் தரப்பு வாதங்களை வெறும் வாசகங்களால் தன் தனிப்பட்ட கருத்து என்ற படிக்கு தெரிவிக்காமல் தன் ஸ்ரீமுகத்தை திருமுறைகளிலிருந்து நீண்ட மேற்கோள் பட்டியலால் நிரப்பியிருக்கிறார் என்பதைக் கருத்தில் கொள்ளவும். வாதமறுப்பும் அதுபோன்றே ப்ரமாணங்களால் நிரம்பியதாகவே இருத்தல் உசிதம். பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களது கருத்துடன் தாங்கள் ஒத்துப்போகாமல் இருக்கலாம். பின்னும் நான் விசாரித்தறிந்த வரை திருப்பனந்தாள் காசிமடம் மிக்க பாரம்பர்யம் மிக்க மடம் மற்றும் ஸ்ரீ ஸ்வாமிகள் நன்கு கற்றறிந்த சைவ சம்ப்ரதாய ச்ரேஷ்டர்களில் ஒருவர்.

    கருத்துப்பரிமாற்றம் என்பது நாம் அறியாத விஷயங்களை அறிவதற்கும் தெளிவில்லாத விஷயங்களில் தெளிவு கிட்டவும் என்பது என் புரிதல். அதற்கு கருத்துப் பரிமாற்றம் செய்பவரிடையே ஒருவரை ஒருவர் புரிதல் அவசியம். தங்களிடமிருந்து நான் விஷயங்களை க்ரஹித்துள்ளவன் என்ற படிக்கே என் கருத்து பரிவர்த்தனம். அடியேனுடைய கருத்துக்களில் கண்யமின்மையோ அனாவச்ய வாதங்களோ இருப்பின் தாங்கள் சுட்டிக்காட்டலாம். உடன் கருத்துப்பரிமாற்றம் நிறுத்தப்படும். தாங்கள் 25ம் திகதி மாலையில் இட்ட கருத்துக்கள் பாவ பூர்ணமாயும் விஷய காம்பீர்யம் நிறைவில்லாமலும் உள்ளது என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து. தங்களிடமிருந்து விஷய பூர்த்தியை அபேக்ஷித்து அடியேன் அறிய விழையும் விஷயங்களை கீழே அளித்துள்ளேன்.

    தாங்கள் வைதிக வேள்விகளை திருமுறைப்படி வேள்வியுடன் ஒப்பு நோக்க விழைகிறீர்கள். அடியேன் உபயுக்தமாகவே அத்யயனம் செய்தவன் என்ற படிக்கே என் கருத்துக்கள். மேலும் திருமுறைகளை அறியாதவன்.

    வைதிகமாக ஹோமம் அல்லது ஹவனம் என்ற படிக்கு ப்ரம்மசாரிகள் நித்யம் செய்யும் ஸமிதாதானத்திலிருந்து க்ருஹஸ்தாச்ரமிகள் நித்யம் செய்யும் ஔபாஸனம் அல்லது உக்த அதிகாரிகள் செய்யும் அக்னிஹோத்ரத்திலிருந்து ருத்ரைகாதசி, மஹாருத்ரம், அதிருத்ரம், சண்டீஹோமம் (நவ, சத, ஸஹஸ்ர இத்யாதி ஹோமங்கள் ஸோமயாகம், வாஜபேயம், அச்வமேதம், ராஜஸூயம் இத்யாதி யாகங்கள் க்ரதுக்கள், தர்சபூர்ண மாஸேஷ்டி, புத்ரகாமேஷ்டி என பல இஷ்டிகள்.

    இதை வாசிக்குங்கால் பல கேழ்விகள் எழும்

    வைதிக முறைப்படி செய்யும் யாக யக்ஞங்கள் யாவை?
    சில மேலே சொல்லப்பட்டிருக்கின்றன

    அவற்றை சொல்லும் நூற்கள் யாவை?
    கல்ப ஸூத்ரங்கள் மற்றும் ஆகமாதிகள். மேலும் நூற்கள் இருக்கலாம் அடியேன் அறியேன்.

    யக்ஞத்தில் பங்கெடுத்துக்கொள்பவர்கள் யார்?
    யஜமானன், ஹோதா, அத்வர்யு, உத்காதா என பெரிய யாகங்களில் மற்றும் ஸமிதாதானத்தில் கர்த்தா மட்டும் ஔபாஸன அக்னிஹோத்ராதிகளில் கர்த்தா மற்றும் அவர் பத்னி இப்படியாக

    யக்ஞத்தில் ப்ரயோகமாகும் சாதனங்கள்
    வர்ஜிதமான சமித்துக்களை விலக்கி அர்ஹமான அரசு, புரசு, பலாச இத்யாதி சமித்துக்களிலிருந்து (மரங்களிலிருந்து கீழே விழும் குச்சிகள்) ஆஜ்யம் (நெய்), ஹவிஸ் (முறையாக பக்வம் செய்யப்பட்ட அன்னம்) போன்ற சாதனங்கள்

    எதற்கு செய்யப்படுகிறது?
    நித்ய கர்மாவாகவா (பலன் கருதாது) நைமித்திகமாகவா (தர்சபூர்ணமாஸேஷ்டி போன்று ஒரு நிமித்தத்தில்) காம்யமாகவா (புத்ரன் வேண்டும் என ஒரு பலன் கருதி புத்ரகாமேஷ்டி போன்று)

    ப்ரயோகமாகும் ரிக்குகள் (மந்த்ரங்கள்) யாவை?
    உதாரணமாக ருத்ரைகாதசி, மஹாருத்ரம், அதிருத்ரம் போன்றவற்றில் ப்ரயோகமாகும் ஸ்ரீ ருத்ரம், ஸமிதாதானத்தில் அந்தந்த வேதப்படி ப்ரயோகமாகும் ரிக்குகள்.

    உசிதமான யக்ஞங்கள் எவை வர்ஜிதமானவை (விலக்கத் தகுந்தவை) எவை?
    அச்வமேதம் மற்றும் ராஜஸூயம் போன்ற யக்ஞங்கள் கலியுகத்தில் வர்ஜிதமானவை

    அது போன்று தாங்கள் சொல்லும் சிவவேள்வி என்பது யாது? ஒரு பெரும் சிவநெறிச்செல்வர் மறுப்பு தெரிவித்தமையால் சைவ சம்ப்ரதாயத்திலேயே பல பிரிவுகள் உள்ளதால் (வீரசைவர், காபாலிகர், பாசுபதர்)ஏற்பவர் யார் மறுப்பவர் யார் (ருத்ரைகாதசி வைதிகம் என்றாலும் வைதிகர்கள் ஆயினும் பரமைகாந்திகளான ஸ்ரீவைஷ்ணவர்கள் செய்ய விரும்ப மாட்டார்கள் – அதுபோல்) அது ஒரு வேள்வியா பல வேள்விகளா? பல வேள்விகள் எனில் அவை யாவை? அவற்றைப்பற்றி விவரணம் தரும் சைவ சமய நூற்கள் யாவை? நித்ய நைமித்திக காம்ய இத்யாதி பல பேதாதிகள் உண்டா? யக்ஞங்களில் பங்கெடுக்க வேண்டியவர்கள் யார் (ஸமிதாதானம் ப்ரம்மசாரி தான் செய்யலாம் ஔபாஸனம் க்ருஹஸ்தன் தான் செய்யலாம் எந்த ஒரு யக்ஞ யாகாதிகளும் ஸர்வ கர்ம பரித்யாகி என்ற ரீதியில் துரீயாச்ரமி(சன்யாசி) செய்யலாகாது) இது போன்ற விதி நிஷேதங்கள் தாங்கள் சொல்லும் சிவவேள்வி-களில் உண்டா? யக்ஞ சாதனங்கள் யாவை? ப்ரயோகமாகும் மந்த்ரங்கள் (பதிகங்கள்) யாவை?

    ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு பதிலளிக்க விழைபவர் பாவ பூர்ணமாக மட்டுமன்றி பூர்ணமாக திருமுறைகளையே ப்ரமாணமாக எடுத்துக்கொண்டு அதன் மூலமாகவே விஷயத்தை சித்தம் செய்வது பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள் முறையாகக் கேட்ட கேழ்விகளுக்கு முறையான உத்தரங்களாய் இருக்கும்.

    முன்னம் இல்லை பின்னர் வந்தது என்பது தங்களின் ஒரு கருத்து. அதை அடியேன் புறந்தள்ள விழையவில்லை. பின்னர் வந்தது என்றாலும் ஏற்படுத்தியவர்கள் ரிஷிகள். அவர்கள் வித்யையில் பாராவார பாரீணர்கள் என கரை கண்டவர்கள்.

    சில சமயம் அருளாளர்களின் பேரருளால் முழு சமுதாயத்தையே புரட்டிப்போட ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகர்கள் உதிப்பதும் உண்டு. காலக்கணக்கில்லா வைதிக சமயம் போன்றே ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயமும் காலக்கணக்கில்லாததே.

    ஜாதி, ஜாதிபேதம், உயர்வு, தாழ்வு என்றெல்லமும் வேத வழி உயர்வு என்றும் ஜனங்கள் அடித்துக்கொண்டிருக்கையில் சைதன்ய மஹாப்ரபுவின் ப்ரதான ஆறு சிஷ்யர்களில் ஒருவரான பூஜ்ய ஸ்ரீ சனாதன கோஸ்வாமிகள் அவர்கள் மஹாப்ரபுவின் அருளாணைப்படி இப்படி எல்லாத்தையும் புரட்டிப்போட்டு வைஷ்ணவ புராணங்களின் சாரங்கள் அனைத்தையும் திரட்டி ஜாதி, கீதி, மேலே கீழே இப்படி எல்லாவற்றையும் த்வம்சம் செய்து கௌடிய வைஷ்ணவர்களுக்காக ஹரிபக்தி விலாஸம் என தனியாக ஒரு கரந்தத்தையே ரசனம் செய்தார். சில நூற்றாண்டுகளாக கௌடிய வைஷ்ணவர்களுக்கு அது தான் அவர்களது ஸ்ம்ருதி. காலை எழுவது முதல் இரவு படுப்பது வரை செய்யவேண்டிய க்ரியைகள்கள் யாவை தேவதாராதனங்கள் யாவை. குரு நிர்ணயம். சிஷ்ய நிர்ணயம். செய்ய வேண்டிய வ்ரதாதிகள். திதி நிர்ணயம். கோவில்கள் மூர்த்திகள் நிர்மாணம். தீஷா நிர்ணயம். என பஹு விஸ்தாரமாக இருபத்தொரு விலாஸங்கள் (அத்யாயங்கள்) நிரம்பிய கிட்டத்தட்ட ஆபஸ்தம்ப போதாயன இத்யாதி ஸ்ம்ருதிகள் அதிகாரி பேதங்களுடன் சொல்லும் விஷயங்களை அன்னஸ்ய க்ஷுதிதம் பாத்ரம் (பசிப்பவன் சாப்பிட அதிகாரி) என்ற ரீதியில் எவன் க்ருஷ்ண பக்தி செய்ய விழைகிறானோ அவன் இதற்கு அதிகாரி என்ற ரீதியில் ஹரி பக்தி விலாஸத்தைச் செய்துள்ளார். ஹிந்துஸ்தானி, அமேரிக்கன், ஐரோப்பியன், அராபியன், வெள்ளைக்காரன், கருப்பன், ஆண், பெண் என்றெல்லாம் எந்த அதிகாரி பேதமும் இல்லாது க்ருஷ்ண பக்தி செய்ய விழையும் எந்த ஒரு மானுடனுக்காகவும் செய்யப்பட்ட க்ரந்தம். மிக முக்யமாக பூர்ணமான ஒரு வழிபாடு செய்ய ஹேதுவாக மிக நுண்ணிய கருத்துக்களின் களஞ்சியம் போன்ற ஒரு க்ரந்தம்.

    ஐயன்மீர், மேலே உதாரணத்திற்காக பிற்காலத்திய ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகர் ஏற்படுத்தியது போன்று தாங்கள் சொல்லும் சிவ வேள்வி என்று திருமுறைப்படி தாங்கள் சொல்வதான சிவவேள்வி அல்லது வேள்விகள் யாதாவதொரு சிவநெறிச்செல்வரால் பரிந்துரைக்கப்பட்டதா? அந்த சிவநெறிச்செல்வர் யார்? பூஜ்ய ஸ்ரீ சிவவாக்கியரா? அருணந்திசிவமா? கருவூர்த்தேவரா? சேக்கிழாரா? அல்லது பின்னாட்களில் வந்த சிவநெறிச்செல்வர்களா? நூலின் பெயர் யாது? வழிமுறைகள் யாவை? என ஸ்பஷ்டமாக மிகவும் குறிப்பாக தங்கள் உத்தரங்கள் விவரணம் தெரிவிப்பது சைவர்களுக்கும் புறச்சமயத்தார்களுக்கும் தெளிவளிக்கும்.

    என் கருத்துக்களில் ஏதும் கண்யமின்மையோ தோஷமோ இருப்பின் முன்னமேயே எமது க்ஷமா யாசனம். சைவம் வைஷ்ணவம் இரண்டும் எனது இரு கண்கள் போன்றே. குலசேகர மன்னன் சொன்ன ப்ரகாரம் ப்ருத்யஸ்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய என அடியார்க்கு அடியாராகவே இருக்க விழையும் அடியேன் சிவனடியார் மனம் புண்பட ஏதும் உரைத்திருப்பின் அடியார்கள் அடியேனை க்ஷமிக்க வேணும். எங்கள் ஸ்வர்ணாம்பிகை உடனுறை சுகவனேஸ்வரஸ்வாமி அடியேனை க்ஷமிக்கட்டும்.

    ஹர நம: பார்வதீ பதயே
    ஹர ஹர மஹாதேவ

  22. ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய,

    சிவகாமசுந்தரீ சமேத நடராஜப்பெருமான் உடனுறையும் திருச்சிற்றம்பலம் சம்பந்தமாக தாங்கள் எழுப்பிய வினாவில் எனக்கும் சம்சயம் உண்டு. வைதிகமான வழிபாடு நடக்கும் சிவாலயம் என்று அடியேனும் அறிகிறேன்.

    முன்னம் ப்ரம்மஸ்ரீ மயூரகிரி சர்மா மஹாசயர் அவர்களிடமும் இது சம்பந்தமாக ப்ரஸ்தாபித்துள்ளேன்.

    சிதம்பரத்துப் பூஜா பத்ததி மிகவும் ப்ராசீனமான பூஜா பத்ததி. பூஜை செய்வோர்கள் தில்லை மூவாயிரவர் என்று சிவனருளாளர்களால் போற்றப்படும் அருளாளர்கள்.

    எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் நடராஜப்பெருமானையே ஸ்கந்தவேளாக தர்சனம் செய்ததாகவும் ஸ்கந்தவேளையே நடராஜப்பெருமானாக தர்சனம் செய்ததாகவும் போற்றப்படும் திருச்சிற்றம்பலத் திருப்புகழ், “தாது மாமலர் முடியாலே” திருப்புகழில்

    “வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிர மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே” என குறிப்பிடுகிறார்.

    இதற்கு கௌமார தளத்தினர் தந்திருக்கும் பொழிப்புரை :-

    வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே,

    ஆக, தில்லை மூவாயிரவர் பூஜை செய்யும் பத்ததியை எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் விதந்தோதியிருக்கிறார்.

    மேலும் திருதொண்டத்தொகையின் துவக்கத்திலேயே,

    “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்குமடியேன்” என ஸ்துதிக்கப் படுகின்றனர்.

    பல சிவனருளாளர்கள் போற்றும் அவர்கள் காலங்காலமாக செய்து வரும் பூஜா பத்ததி மாறாததாகத் தானே இருக்க வேண்டும். அவ்வாறன்றி முன்னம் ஆகம ரீதியாகவும் பின்னர் (எப்போது, யாரால், எப்படி) வைதிக முறைக்கும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம் ஏதுமுண்டா?

  23. ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயர் அவர்களே
    அடியேனைப்பொருத்தவரையில் தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இருமொழிகளும் சமமாகவே கருதுகின்றவன். நம்முடைய பாரதத்தின் ஆன்மீக ப்பாரம்பரியத்தின சிறப்பைம் தொடர்ச்சியை ப்போற்றுகின்றவன். வடமொழி அறியேனாயினும் வேதத்தினையும் வேதாந்த்ததினையும் போற்றுவதோடு அவற்றை சமீப காலத்திலும் மக்களுக்கு நெருக்கமாகக்கொண்டு சென்ற அருளாளர்களாம் நால்வரையும் போற்றுகின்றவன். வேதத்தினை ப்படிப்பதற்கோ ஆச்சாரிய பீடம் ஏறுவதற்கோ குருவாய்விளங்குவதற்கோ பிறந்த சாதி ஒரு தகுதி என்ற தற்போதுள்ள நிலையயை ஏற்றுக்கொள்ளாதவன். ஹிந்து சமயத்தின் எழுச்சிக்கும் பாரதனாட்டின் முன்னேற்றத்திற்கும் சமயத்தில் ஆன்மீகத்தில் ஆண் பெண் என்ற பேதமோ அல்லது சாதி வேறுபாடோ இருக்கக்கூடாது என்பது என்னிலைப்பாடு.
    தமிழில் வழிபாட்டை இந்த நோக்கில் அடியேன் முழுமையாக ப்போற்றுகின்றேன். தமிழிலே வேள்வி நடத்துவதை யும் வடமொழி மந்திரங்களைக்கொண்டு ஹவனம் நடத்துவதையும் கண்டிருக்கிறேன். ஒரு ஆன்மிக ஆர்வலனாகத்தமிழ் வேள்வி அதிக மக்கள் பங்கேற்புடையதாக உள்ளது. பக்திப்பூர்வமாக உள்ளது.
    ஹிந்து தர்மத்தின் சிறப்பு மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் உள்வாங்கிக்கொண்டு வளரும் தன்மை. அதன் படியே தமிழ் வேதமும் வேள்விக்குரியதே. அது வேண்டாம் எனில் தமிழ் சைவர்களில் ஒரு சிலர் வேதத்தினை நிராகரிக்கும் போக்கிற்கு தள்ளப்படுவார்கள். துரதிருஷ்டவசமாக ஒருசிலர் திருமுறைகளில் வரும் வேதம் என்ற பதம் ரிக் முதலான வேதமன்று என்றும்.ரிக்வேதம் சிவபெருமானை மதிக்கவில்லை என்றும் கூறிவருகிறார்கள். இது நமது சமயத்திற்கு நல்லதல்ல. இடையில் ஒரு சில சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகம் செய்கின்ற போது தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றி கூறி புனித நீரை திருக்குடங்களில் மீது ஊற்றுவதை க்கண்டேன். இன்றைய சூழலில் பல சிவாச்சாரியார் பெருமக்கள் வேள்வி சாலையின் உள்ளே தமிழைக்கொண்டுவர தயாராகி விட்டார்கள். ஆகவே வேதம் மந்திரங்கள் மட்டுமே ஆலயத்துள் வேள்வி சாலையுள் தமிழ் வெளீயே என்ற நிலை முழ்தும் மாறும் நிலை விரைவில்.

  24. ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசயர் அவர்களுக்கு
    வேதத்தில் இல்லாத கோயிலுக்கு பத்ததி வேதம் எப்படி தரமுடியும்.
    நீங்கள் தீக்ஷிதர்களின் பெருமையை முருகப்பெருமானை சிவமாகவேக்கண்ட அண்ணல் அருணகிரி நாதரை சுட்டி தீக்ஷிதர்களின் பெருமையை போற்றுகிறீர்கள்.
    ஸ்ரீ அருணகிரி நாதர் பாடிய முருகப்பெருமானின் திருவுருவம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் கொடிமரத்திற்கு வலது புறம் இருக்கிறது. திருப்புகழும் எழுதப்பட்டுள்ளது. அவசியம் கண்டு ஆனந்தியுங்கள் தில்லை சென்று ஸ்ரீ குமரனைக்கண்டு.

    எந்தைபெருமான் ஆடல்வல்லானே தன்னையும் அவருள் ஒருவர் என்ற பெருமை சான்ற தில்லை மூவாயிரவர் இன்றுள்ள தீக்ஷிதர்கள் அல்லர். இவர்கள் சிவாச்சாரியார்கள் அல்லர். ஸ்மார்த்தர்களான இவர்கள் தில்லைக்காளி அன்னையை பூஜித்துக்கொண்டிருந்தவர்களே இவர்க்ள். தில்லை மூவாயிரவல் காலத்தே அழிய ஸ்ரீ சபானாயகர் கோயில் பூசனையை மேற்கொண்டவர்கள் என்பதே சரியானவரலாறு. அதுமட்டுமன்று தேவாரதிருமுறைகளை ப்பூட்டிவைத்து மூவர் முதலிகள் வந்தால் தான் அவற்றை க்காட்டுவோம் என்று மாமன்னன் ராஜராஜனிடமே சொன்னவர்கள் இன்றுள்ளவர்களே. வடலூர் ஸ்ரீ இராமலிங்க வள்ளல் பெருமானை கோயிலிருந்து விரட்டிய வர்கள் இவர்கள் என்றும் கூறப்படுகிறது.

  25. ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய,

    \\அடியேனைப்பொருத்தவரையில் தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இருமொழிகளும் சமமாகவே கருதுகின்றவன்\\

    நன்று.

    \\ஹிந்து தர்மத்தின் சிறப்பு மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் உள்வாங்கிக்கொண்டு வளரும் தன்மை. அதன் படியே தமிழ் வேதமும் வேள்விக்குரியதே. \\\

    ஐயா தங்களது மேற்கண்ட பதில் உணர்வு பூர்வமானது என்ற படிக்கு மிகவும் மதிக்கிறேன். ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் சம்ப்ரதாய பூர்வகமாய் திவ்யப்ரபந்தங்களை வைத்து வேள்விகள் நிகழ்த்த்ப்படுவதில்லை என அறிகிறேன். தவறென்றால் திருத்தவும். உணர்வு பூர்வமான கருத்து விடுத்து சித்தாந்த ரீதியில் மற்றும் சைவ சம்ப்ரதாய பூர்வாசார்யர்களின் படி இது சரியா தவறா என தெரிவிக்கவும். சித்தாந்தம் அறிந்த அருளாளர் திருமுறையை ப்ரமாணமாகக் கொண்டு தன் கருத்தை நிர்த்தாரணம் செய்துள்ளார் என்பது தத்யம். அதை மறுப்பவர் கைக்கொள்ள வேண்டியது திருமுறை ப்ரமாண மூலமாக மறுப்பது.

    \\வேதத்தில் இல்லாத கோயிலுக்கு பத்ததி வேதம் எப்படி தரமுடியும்.\\

    பத்ததியைத் தருவது வேதம் என யாராவது சொன்னால் நம்பாதீர்கள். வைதீக பத்ததி என்பதன் மூலம் அறியப்பட வேண்டியது அவற்றை தெரிவிக்கும் கல்ப ஸூத்ராதிகள். க்ருஷ்ணயஜுர் வேதத்தில் ஸ்ரீ ருத்ரம் கிட்டும். ருத்ரைகாதசி, மஹாருத்ரம், அதிருத்ரம் என்றெல்லாம் வேதத்தில் தேடினால் கிடைக்காது. இவற்றின் செய்முறை (பத்தை) சொல்பவை கல்ப ஸூத்ரங்கள். வேதத்தில் இல்லாத யாகங்களின் பத்ததியை வேதம் எப்படி தரமுடியும் என்று கேழ்க்க முடியாதல்லவா? தவறான கேள்வி.

    \\எந்தைபெருமான் ஆடல்வல்லானே தன்னையும் அவருள் ஒருவர் என்ற பெருமை சான்ற தில்லை மூவாயிரவர் இன்றுள்ள தீக்ஷிதர்கள் அல்லர். இவர்கள் சிவாச்சாரியார்கள் அல்லர். ஸ்மார்த்தர்களான இவர்கள் தில்லைக்காளி அன்னையை பூஜித்துக்கொண்டிருந்தவர்களே இவர்க்ள். தில்லை மூவாயிரவல் காலத்தே அழிய ஸ்ரீ சபானாயகர் கோயில் பூசனையை மேற்கொண்டவர்கள் என்பதே சரியானவரலாறு.\\

    இவர்கள் சிவாசார்யர்கள் அல்லர் என்பது தெரிந்ததே. திருவரங்கத்துக் கோயிலொழுகு போன்று திருச்சிற்றம்பல வரலாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா. ஸ்மார்த்தர்களான இவர்கள் எந்த ராஜாவின் ஆட்சியின் போது இவ்வாறு புகுந்தார்கள். தமிழிலக்கியங்கள் சான்றளிக்கின்றனவா? அல்லது கல்வெட்டாதாரங்கள் உளதா? அப்படி ஏதாவது சொல்லாத வரை இதை செவிவழிச்செய்தி என மட்டும் தான் கொள்ளமுடியும்.

  26. i want சத்யோஜாத சிவாச்சார்யாரின் ‘பிரதிஷ்டாகாரிகை’ ,please

  27. போற்றி ஓம் நம சிவாய…,

    கடளுக்கும் நமக்கும் இடைவெளி எதற்கு,
    அதன் இடைவெளில் மட்டுஒருவர் எதற்கு?

    சைவம் , வைணவம் என்ற பிரிவு எதற்கு?
    விநாயகர், முருகர் – சிவ கணங்கள் என்றால்
    முதலில் விநாயக வழிபாடு தொழுபவர்கள் – ?
    திருமாலின் தங்கை, சிவனின் மனைவி தானே …

    சிவனை வழிபடும் கோலத்தில் உள்ள திருசெந்துர & குருவாயுரில், நாம் மேல் சட்டை அணியாமல் செல்லும் போது, திருவண்ணாமலை, மதுரை போன்ற மற்ற சிவ தலங்களில் ஏன் தவறு செய்கின்றார்கள் …?

    இன்றைய ஆதினங்கள் ஏன், எதற்கு?

    துறவு என்பது, துறந்தேன் என்ற எண்ணத்தையும் துறப்பது தானே…!

    குறிப்பு : பணம் (காகிதம்) கொடுத்து இறைவனை தொழுதல் சரியா..?
    ஏதேனும் பிழை இருந்தால் இறை அடியார்கள் பொறுத்து அருள வேண்டிகிறேன்.

  28. இணையம் வாயிலாக சிறப்பானதொரு இக்கருத்தரங்கில் பல வேதபண்டிதர்களும், சைவ தமிழ் ஆர்வலர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுவருகிறீர்கள். ஆழமாக அத்தனையும் படித்தேன். சந்தோஷம்!

    வேள்விகளில் வைதீக, சிவ ஆகம, சாக்த முறைகளின் வேற்றுமைகளைப் பற்றி ஒர் அன்பர் விளக்கியிருந்தார். எனக்கு அதில் ஒரு சந்தேகம். எந்தவித ஹோமமாக இருந்தாலும் அதில் மந்திரம் சொல்லி இடும் பொருட்களை அந்தந்த தெய்வங்கள் வந்து வாங்கிப்போவார்கள், அல்லவா? ஆனால், ‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். இதன்படி பார்த்தால், தெய்வங்கள் இதில் எழுந்தருளி வாங்கிக் கொள்வது சாத்தியமாகுமா? அல்லது அக்னிதேவன் மட்டும்தான் வாங்கிப்போய் அவர்களுக்கு பட்டுவாடா செய்வாரா? அல்லது தெய்வங்களே அக்னி ரூபமாக இறங்கி வந்து வாங்கிக் கொள்வார்களா?

    இதை ஏன் கேட்கிறேன் என்றால், ஹோமங்கள் எந்த முறையாக நடந்தாலும், என் மனதிற்கு தோன்றும்போது நான் எடுக்கும் படங்களில் சிவன், பார்வதி, விஷ்ணு, முருகன், பிள்ளையார், கருடன், கோமாதா, ராம-லஷ்மன-ஆஞ்சநேயர், அம்மன் என்று நிழல்படத்திற்கு ‘pose’ தருவதுபோல் வடித்த சிலைபோல ஒவ்வொருவராக வேள்வியில் எழுந்தருளி என் காமிராவில் பதிவாகிறார்கள். இவர்கள்போக, ஆதிசங்கரர், ஷிர்டி சாய்பாபா, போன்ற மகான்களும் அந்த வேள்வியில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் ஹோமங்களைத் தாண்டி ஒரு உண்மையை புரிந்து கொண்டேன்.

    அதாவது, எங்கள் அண்டை வீட்டில் உலர்ந்த மாவிலைக்குப்பை மற்றும் சுவாமிக்கு சாற்றிய காய்ந்த மலர்களையும் கொல்லைபுறத்தில் ஒரு பள்ளத்தில் போட்டு எரிப்பார்கள். அவ்வாறு அவர்கள் எரிப்பதை எதேச்சையாக ஒருமுறை படம் எடுத்தேன். அதில் சம்ஸ்க்ருத ‘ஓம்’ வடிவம் தத்ரூபமாக பதிவானது.

    எந்தவகை முறையாக இருந்தாலும் ஹோம தீயில் இவை எல்லாம் அடுத்தடுத்து ஒரே சமயம் பதிவாகிறது. அதேபோல் மாவிலை குப்பை ஏறித்தாலும் பதிவானது. அக்னி எங்கெல்லாம் தூய்மையாக இருக்குமோ அங்கெல்லாம் தெய்வங்கள் எழுந்தருளுகிறார்கள் என்று சொல்லலாமா? இதை ஏற்பார்களா? அல்லது நான் எடுக்கும்போது மட்டும் இப்படி நிகழ்கிறதா?

    அந்த படங்களை என்னுடைய blog தளத்தில் இட்டுள்ளேன் அது இங்கே: https://chandru-articles.blogspot.in/2014/09/divine-photos-2.html
    https://chandru-articles.blogspot.in/2015/04/moondravathu-kan-tv-programme-vendhar-tv.html

    அடியேனின் சந்தேகத்தை தீர்த்துவைக்குமாறு விண்ணப்பிக்கிறேன்.

  29. அக்னி கார்யங்களில் ஆவரணங்கள் உடையது சிவாக்னி. ஆவரணங்களின்றி அமைவது வைதிகாக்னி. சிவவழிபாடு செய்ய சிவாக்னி போதுமானது. நிற்க.
    சிவ வழிபாட்டுக்குவேதங்கள் கட்டாயம் என்பது வினோதமானது. சைவம் காஷ்மீரத்திலிருந்து இங்கு வந்தது. சாக்தமும் அவ்வாறே.

    அக்னி கார்யங்கள் இங்கு கொண்டு வந்தது வைதீகம். சங்க காலத்திலும் கூட அறவாழி அந்தணர் என்ற பெருமையை அவர்களுக்கு தரப்பட்டிருப்பதற்கு வெகுபல ஆவணச்சான்றுகள் உண்டு.

    இருப்பினும் நான்கு வேதங்களிலும் இன்று நடைமுறையில் இருக்கும் மும்மூர்த்தி தத்துவமோ,சிவன் என்ற பெயரோ,நாராயணன் என்ற பெயரோ கிடையாது. வேதங்களில் மூத்த ரிக் வேதத்தின் கடவுள் இந்திரன். இந்திரன் கிருஷ்ண யஜூரில் மிகவும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவது மற்ற வேதங்களை அவற்றின் பொருளை முரண்படுத்தி விடுகிறது.

    சுக்ல யஜுரில் இல்லாத மந்த்ரங்கள் க்ருஷ்ண யஜூரில் உண்டு. க்ருஷ்ண யஜூரின் ப்ரபாடகங்கள்/அனுவாகங்கள் ரிக் வேதம் போல் சந்தஸ் சார்ந்து இருப்பதில்லை. இவை பஞ்சாதிகளின் பதம் சார்ந்தும் ஸ்வரம் சார்ந்தும் இருப்பவை.

    ஸ்ரீ ருத்ரம் சொல்லி அபிஷேகம் செய்யப்படும் நீர் ஆவுடையார் பாகம் வரைக்குமே செய்யப்பட வேண்டும். லிங்கபாகத்துக்கு தனியாக 81 பத மந்த்ரங்கள் சொல்லித்தான் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    வேதத்தையும் ஆகமத்தையும் கலக்க வேண்டாம். ஆக்aமத்தால் வேதம் இல்லாமல் பயணிக்க முடியும்.வேதத்தாலும் பயணிக்க முடியும். ஆனால் ஆகமங்களைச்சார்ந்தே அமையும் பயணம்.

    முற்றாக வேதம் ஒதிய தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் இதைக்கடைப்பிடித்தார் என்பது வரலாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *