நம்மாழ்வார்

நம்மாழ்வாரின் மறைவு நிச்சயமாக nammalvarஅனைவருக்கும் ஒரு பேரதிர்ச்சி.  இயற்கை விவசாயத்தை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சென்ற பெரும் ஆளுமை அவர்.  இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படை மானுட வாழ்வாதார உரிமைகள் என அடிப்படைகளை இணைக்கும்  பார்வையை அவர் தன் பொது வாழ்க்கை முழுவதும் முன்வைத்து வந்தார். தமிழுணர்வாளர்கள், சுதேசி அமைப்பினர் என அனைவருக்கும் அவரது பங்களிப்பும் பார்வையும் முக்கியமானவையாக இருந்தன. இயற்கை வேளாண்மை குறித்தும் நம் வாழ்க்கை முறை குறித்தும் அவரது பேச்சு மிகவும் இயல்பானதாகவும் கருத்து செறிவு கொண்டதாகவும் அமைந்திருக்கும். இன்று இயற்கை வேளாண்மை அனைவராலும் பார்க்கப்படும் பேசப்படும் விவாதப் பொருளாக தமிழகத்தில் மாறியிருப்பதில் நம்மாழ்வாரின் பங்கு முக்கியமானது. அவரது இயற்கை வேளாண்மையின் அடிப்படையில் ஒரு ஆன்மிக பார்வை இருந்தது. மதங்களை கடந்து மனிதர்களை இணைக்கும் இந்த மண்ணுக்கே உரிய ஆன்மிக பார்வை அது. அதையும் அவர் எப்போதும் முன்வைத்து வந்தார்.  எளிமையான மனிதர். பழகுவதற்கு இனியவர். மண்ணின் வாசம் தெரிந்தவர். இறுதி காலம் வரை போராளியாகவும் புத்தாக்க சக்தியாகவும் திகழ்ந்தவர். ஒரு புதிய திறப்பினை நமக்கு கொண்டு வந்தவர். இனி என்றென்றும் அவர் தமிழ் பண்பாட்டின் ஒரு அழியாத சின்னமாக வழிகாட்டும் குருவாக திகழ்ந்து கொண்டிருப்பார். அவரது நினைவுக்கு அஞ்சலியையும் அவரது பணி தொடரவும் விரிவடையவும் தன் பங்கையும் தமிழ்ஹிந்து தெரிவித்து கொள்கிறது.

தாய் மண்ணின் இயற்கை வளம் காத்திட வாழ்ந்த மூத்த மைந்தனுக்கு வணக்கம்.

இயற்கை வேளாண்மை என்பதன் அடிப்படை இயற்கையுடன் இணைந்த உணவு உற்பத்தி.  மானுடத்தின் வரலாற்றில் வேளாண்மையின் உதயம் முக்கியமானது. அது ஒருவிதத்தில் ஒரு பிரிவையும் மற்றொரு விதத்தில் ஒரு இணைதலையும் முன்வைத்தது. அது வரை வேட்டையாடியும் கனி-கிழங்குகளை சேகரித்தும் வாழ்ந்த மனிதன் அதை  விடுத்து திட்டமிட்டு உணவை உற்பத்தி செய்ய ஆரம்பித்தான். அவ்விதத்தில் அது வரை அவன் வாழ்ந்த இயற்கையிலிருந்து அவன் பிரிந்தான். 0108musings1மற்றொரு விதத்தில் தான் வாழும் மண்ணுடன் ஒரு ஆழமான உறவை ஏற்படுத்தினான். அதை உன்னிப்பாக கவனித்தான். விவசாய பண்பாடு வளர்ச்சி பெறும் காலத்தை ஒட்டியே ஆண் பெண் உறவுகளில் பாலின அடிப்படையிலான தொழில் பாகுபாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். பெண் உணவு உற்பத்தியில் ஒரு மைய இடத்தை பெற்றாள். நிலம் பெண்ணாக பார்க்கப்பட்டது. தொல் கற்காலம் முதல் மானுட ஆழத்தில் பெண் தெய்வமாக உரு பெற்றிருந்த போதிலும் இப்போது அந்த ஆழ்மன படிமம் (archetype) ஒரு இயக்கத்தன்மையை அடைந்தது. நிலத்தை பெண்ணாக நோக்கும் பார்வையின் அந்த ஆழமான வேர்களில் இருந்து பல சடங்குகள் உருவாகின. இவை தன்னியல்பில் வேற்றுமையை பேணும் தன்மை கொண்டவை. அதுவரை சடங்குகளுக்காகவும் புலப்பெயர்வுகளில் திசைகள் அறியவும் முக்கியமாக இருந்தவை விண்மீன் சுழற்சிகள். ஆனால் வேளாண்மை உருவான பிறகு வானிலை சுழற்சிகள், பருவநிலை மாற்றங்கள் ஆகியவை உன்னிப்பாக கவனிக்கப்பட்டன. உணவு உற்பத்தியுடன் உணவுப்பன்மை என்பது உணவு பாதுகாப்புக்கு முக்கியமானது.

krishna_balaramaஇக்காலகட்டத்தில் உருவான ஆபிரகாமிய அடிப்படை தொன்மங்களில் ஒரு பிளவை காணலாம். விவசாயத்திற்கும் கால்நடை மேய்ப்போருக்குமான அடிப்படை பிளவு அது. இறைவன் இதில் கால்நடை மேய்ப்போரையே ஆதரித்தான் என்கிறது விவிலியம். அத்துடன் உணவை வியர்வை சிந்த உற்பத்தி செய்வதே ஒரு சாபம் என்கிறது ஆபிரகாமிய ஆதி புனைவுகள். பாரதத்தின் தொன்மங்களில் இந்த இரு முக்கிய தொழில்களுக்கும் ஒரு இணைப்பும், உணவு உற்பத்தி ஒரு கர்மயோகமாகவும் காட்டப்படுவதை காண்கிறோம். பலராமனும் கிருஷ்ணனும் இணைந்த

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு

எனும் சித்திரத்தையே நம் மரபு நமக்கு அளித்தது. அன்னத்தை அதிக அளவில் உற்பத்தி செய்வதையும் பகுந்தளிப்பதையும் வேதம் சாபமாக அல்ல விரதமாக மனித சமுதாயத்துக்கு அளித்தது. puriஅதன் நீட்சியாக மானுடத்தின் வணக்கத்தை வானில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தேவனுக்காக அல்லாமல் பருவநிலைக்கும் மழை வளத்துக்கும் காரணமாக விளங்கும் பர்வதத்துக்கு கொடுக்க சொன்னான் கண்ணன். உயிர்களின் பன்மை மானுட உயிர்வாழ்தலுக்கு அவசியம் என்பதை பாரத பண்பாடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. விவசாயிகளின் உயிர்வாழ்தலுக்கு அவசியமான விதை நெல்களின் பன்மைக்கான ஒரு குறியீடாக பலராமனையும் கிருஷ்ணனையும் இணைத்து வணங்கும் பூரி ஜகன்னாத க்ஷேத்திரம் விளங்கியது அதிசயமில்லை.  உணவு உற்பத்தியையும் உணவு பகிர்ந்தளித்தலையும் பெரும் அறங்களாக பாரத பண்பாடு உருவாக்கியது. அதே நேரத்தில் அந்த பகிர்ந்தளிப்பதென்பதில் மானுடத்தை மட்டுமல்லாது அனைத்து உயிர்களையும் பாரதம் இணைத்தது.  இயற்கை விவசாய மீட்டெடுப்பும் முன்னகர்தலும் இந்த பண்பாட்டு மீட்டெடுப்பில் ஒரு முக்கிய மைய அம்சமாகும். சாதி மத மொழி எல்லைகளுக்கு அப்பால் இந்த மண்ணையும் பண்பாட்டையும் அடிப்படையாக கொண்ட ஒரு ஆன்மிக மக்கள் இயக்கமாக இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த நம்மாழ்வார் வாழ்க்கையே ஒரு தவமாக வாழ்ந்த ரிஷி.

இறுதி வரை போராளியாக மக்களின் குரலாக வாழ்ந்து அமரத்துவம் அடைந்த அந்த மகா மனிதரை தமிழ்ஹிந்து.காம் வணங்கி அஞ்சலி செலுத்துகிறது. அய்யாவின் உடல் அஞ்சலிக்காக புதன் கிழமை (01/01/2014) தஞ்சாவூரில் வைக்கபடும். தொடர்புக்கு – கணேஷ் (+91 9500796349).

13 Replies to “நம்மாழ்வார்”

  1. மிக துயரம் கொண்டேன் .. எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன் …

  2. இயற்கை சார்ந்து வாழ்வதையே அய்யா அவர்கள் முன்னெடுத்து சென்றார்கள். அதை பின் தொடர்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி……

  3. வணக்கம்
    அந்த நம்மாழ்வார் உளங்களைச் சீர்திருத்த முயன்றார். இந்த நம்மாழ்வார் நிலங்களைச் சீர்த்திருத்த முயன்றார். அன்னம் பஹு குர்வீத என்றது வேதம். அதற்கு விளக்கவுரை எழுதினார் வேளாண் விஞ்ஞானி திரு நம்மாழ்வார் அவர்கள். இன்று நாம் சந்திக்கும் இழப்பு ஈடு செய்யப் படமுடியாதது. பூமித் தாயுடன் சேர்ந்து நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்
    கண்ணீருடன்
    நந்திதா

  4. அய்யா நமாழ்வார் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் .அவர் விட்டு சென்ற பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம் .இயற்கை வேளாண்மையை விவசாயிகள் முன்னெடுத்து செல்ல மிகபெரிய பணியை பல வருடங்களாக செய்தவர் .

  5. ஐயா ஸ்ரீ நம்மாழ்வார் இயற்கை விவசாயம் தழைக்க பாடுபட்ட பெரியோர்களில் ஒருவர். கனிவான பேச்சை உடையவர். ஆரோக்யத்துடன் வாழ்ந்தவர். கண்ணன் திருவடிகளையடைந்த அவர் நினைவுகள் தமிழகத்தை செழிப்பின் பாதையில் எடுத்துச் செல்லும்.

    \\ விவசாயத்திற்கும் கால்நடை மேய்ப்போருக்குமான அடிப்படை பிளவு அது. இறைவன் இதில் கால்நடை மேய்ப்போரையே ஆதரித்தான் என்கிறது விவிலியம். அத்துடன் உணவை வியர்வை சிந்த உற்பத்தி செய்வதே ஒரு சாபம் என்கிறது ஆபிரகாமிய ஆதி புனைவுகள். \\

    புதியதான செய்தி

    \\ அன்னத்தை அதிக அளவில் உற்பத்தி செய்வதையும் பகுந்தளிப்பதையும் வேதம் சாபமாக அல்ல விரதமாக மனித சமுதாயத்துக்கு அளித்தது. \\

    அருமை. தூய்மையான நினைவுகளை மனதில் மீட்டெடுப்பதும் இறைவனுடைய கருணையே. வாழ்வாங்கு வாழ்ந்த பெரியோரின் மறைவிலும் கூட அவர் நினைவுகள் வழியே நற்சிந்தனைகள் பெருக்கெடுப்பமை ச்லாக்யமானது.

    தைத்ரீய உபநிஷத் – ப்ருகுவல்லி – 7ம் அனுவாகம்

    अन्नम् न निन्द्यात् ।
    तद् व्रतम् ॥

    He shall not condemn food; that shall be his vow.

    Life (Prana) verily is food, the body (Sariram) the eater of food. In life the body is set ; life is set in the body. Thus food is set in food. Who so knows thus, that food is set in food, he is settled; Possessor of food and eater of food he becomes. Great he becomes by progeny, by cattle, by spiritual lustre, great by fame.

  6. மிக துயரம் கொண்டேன்
    நம்மாழ்வார் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
    இயற்கை சார்ந்து வாழ்வதையே அய்யா அவர்கள் முன்னெடுத்து சென்றார்கள். அதை பின் தொடர்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி…

  7. ஐயா நம்மாழ்வார் ஒரு இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் என்றால் அது மிகையன்று. இன்றைக்கு உலகமயமான சூழலில் பெரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டிலிருந்து நம்மைக்காத்துகொள்ள நமக்கு இருக்கிற ஒரு பேராயுதம் இயற்கை வேளான்மை அது சார்ந்த இயற்கை உணவு நுகர்வு. இந்த அருமையான கருவியை தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சுயநலமின்றி பரப்பிய பெரியார் ஐயா நம்மாழ்வார். அவர் ஒரு பெரும் ஜோதி. அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் நம்மாழ்வாராக விளங்கி இயற்கை வேளாண்மையை வெற்றியின் உச்சத்திற்கு இட்டுசெல்வார்கள். அதுவே ஐயாவுக்கு செய்யும் அஞ்சலி. இயற்கையோடு கலந்துவிட்ட ஐயா அவர்களை வணங்கி அவரத பெரும் பணியைத்தொடர்வோம்.

  8. மிக மிக அருமையான நினைவு அஞ்சலி.நம்மாழ்வார் என்றும் நம்மை ஆள்வார்.

  9. நம்மாழ்வார் இறந்தது நமது சொந்தத்தில் ஒருவர் இறந்தது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. நம்மாழ்வாரின் எண்ணங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

  10. \\ நம்மாழ்வார் இறந்தது நமது சொந்தத்தில் ஒருவர் இறந்தது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. \\

    மிகவும் நெகிழ்வளிக்கும் இரங்கல்.

    \\ நம்மாழ்வாரின் எண்ணங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். \\

    ஒரு சிறிய திருத்தம். அன்னாரது எண்ணங்கள் தமிழகத்தில் மட்டுமல்ல ஹிந்துஸ்தானமுழுதும் செயல் படுத்தப்பட வேண்டும்.

    தேசத்தின் பல பகுதிகளிலும் ஸ்வதேசக் கனல் நம்மழ்வாரை ஒத்த பல சான்றோர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போற்றப்பட வேண்டிய விஷயம்.

  11. நம்மாழ்வார் அவர்கள் எந்த வித சித்தாந்த தாக்கமும் இல்லாதவர். ஆரம்பத்தில் அவர் வளர்ந்த சூழல் ஏற்ப்படுத்திய திராவிட/கம்யுனிஸ தாக்கம் அனிச்சையாக பல இடங்களில் வெளிப்பட்டாலும், அவற்றின் தீமைகளை உணர்த்து தன்னை பல வகையிலும் திருத்தி அவற்றின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். எல்லா கட்சியிலும் உள்ள நண்பர்களோடு நல்ல முறையில் பழகினார். இருப்பினும் ஐயாவின் சேவைகளால் அதிக பாதிப்பை சந்தித்தது கம்யுனிஸ சித்தாந்தம்தான். நம்மாழ்வாரின் வாழ்வே கம்யுனிஸ பிழைகளை எதிர்த்து போராடுவதாகத்தான் இருந்தது.

    • அடிப்படையில் காரல் மார்க்ஸ் இந்திய கிராமங்கள் சார்ந்த பொருளாதார சமூகம் உடைக்கப்பட வேண்டும் என்று காலனிய ஆட்சி காலத்திலேயே எழுதினார். எந்த நாட்டில் பிறந்தாலும் கம்யுனிஸ்ட்களுக்கு ரஷ்யா தான் தாய் நாடு. அதுதவிர பிற நாடுகள் அனைத்தும் நரகமே. அனைத்தும் அழிந்து ரஷ்யாவின் பின்னால் நிற்க வேண்டும் என்பதே அவர்களின் சமூக கலாசார பொருளாதார கொள்கைகளின் அடிநாதமாக இருக்கும். ஆனால் நம்மாழ்வார் அவர்கள் வாழும் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டார். கிராமிய வாழ்வியலை சிலாகிக்க செய்தார். கிராமங்களை மையப்படுத்திய பொருளாதாரம் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தினார். இது கம்யுனிஸ்ட்களுக்கு மிளகாயை கில்லி வைத்தது போல இருந்தது. (ஆதாரம்: British Rule in India-Karl Marx)

    • கம்யுனிஸ அடிப்படைவாதிகள் இயற்கை விவசாயமே மக்களுக்கு பயன் தராது என்றும், தேவையற்றது என்றும் கருத்தெழுதி வந்தனர். சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்டதும் தேவையற்றும் என்று கூறினர். இதை கட்டுரைகளாக எழுதி வந்தனர். ஆனால் அவர்கள் வாதங்களை பொய் என்று நிரூபித்து உடைத்து வாழ்ந்து காட்டினார் நம்மாழ்வார் ஐயா.

    • பாரம்பரியம் என்ற சொல்லையே கம்யுனிஸ்ட்கள் வெறுத்தனர். முன்னோர்கள் என்றால் எதுவும் தெரியாத, முட்டாள்தனமான அரக்கர் கூட்டம் என்ற பிம்பம் ஏற்படுவதையே விரும்பினர். ஆனால் நம்மாழ்வார் ஐயா காலையில் துவங்கும் யோகப்பயிற்சி, உணவு முதல் வீடு, மருத்துவம், பொழுதுபோக்கு என அனைத்திலும் பாரம்பரிய வேர்கள் நமக்கு எவ்வளவு பெரிய செல்வத்தை சேர்த்து தந்துள்ளது என்பதை எடுத்துசொல்லி முன்னோர்கள் மீதும் பாரத பாரம்பரியத்தின் மீதும் பெரும் பற்று எற்படும்படி செய்தார். (ஆதாரம்: பூவுலகின் உணவரசியல் – கீற்று கட்டுரை)

    • கடவுள் மறுப்பு கொள்கையுடைய திராவிடத்தை ஈன்ற தாய் கம்யுனிசம். ஆனால் நம்மாழ்வார் ஒவ்வொரு கூட்டத்தின் துவக்கத்திலும் ஓம் என்று கூறுவதும், இயற்கை வழிபடுவதையும், காவி வேஷ்டி கட்டுவதையும், தினமும் காலை யோகா, பிராணாயாமம், தியானம் செய்வதையும் கம்யுனிஸ்ட்கள் சகித்துக்கொள்வார்கள் என்று நினைக்க இடமில்லை.

    • பசுக்கள் தான் விவசாயத்தின் – கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பதால், தனது கூட்டங்களில் ஓரிரு வார்த்தைகளாவது பசுக்கள் கேரளா செல்லும் அவலத்தையும், பசுக்களை காக்க வேண்டிய அவசியத்தையும், நாட்டு பசுக்களின் பஞ்சகவ்யத்தின் அருமைபெருமைகளை கூறுவார். நாட்டு பசுக்கள் எண்ணிக்கையில் வீழ்ந்து தற்போது தன்னார்வலர்கள் முயற்சியால் மீண்டு வரும் வேளையில், நாட்டுமாடுகளை கொன்று திண்ணுவதும் பாரம்பரியம் தான் என்றும் அதை பாரம்பரிய உணவு விழாவில் ஏன் வைக்கவில்லை என்ற அற்ப வாதங்கள் செய்தவர்கள் இந்த கம்யுனிஸ்ட்கள். அதோடு கம்யுனிஸ்ட்கள் மாட்டுக்கறி தின்பதை நியாயப்படுத்தி கவிதைகள் கட்டுரைகள் எழுதி பரப்பினர். தனது சொந்த வாழ்விலும் நாட்டுபசு மருந்துகளின் மகத்துவத்தை உணர்ந்தவராதலால், அவரை சோர்வடையச்செய்ய கம்யுனிஸ்ட்கள் வீசிய ஆயுதங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்தார்.

  12. அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் நம்மாழ்வாராக விளங்கி இயற்கை வேளாண்மையை வெற்றியின் உச்சத்திற்கு இட்டுசெல்வார்கள். அதுவே ஐயாவுக்கு செய்யும் அஞ்சலி
    we can keep him alive if we do what he was doing ,we are the extension of him, I will do my part,I have resigned from min. of defence job,
    . g.ravichandran,trichy-13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *