மோகம் எனும் கடலைத் தாண்டிவந்து மூண்டு எழுகின்ற ஆசை, கோபம் முதலான அரக்கர்களை முற்றிலுமாக அழித்து, யோகியானவன் அமைதியுடன் ஆன்மாவிடத்தில் ஒன்றி ஆனந்தத்தை அடைந்தவனாகி ஒளி வீசுபவனாய் இருப்பான் என்பதைத் தெரிந்துகொள்… நீரில் நீரும், தூய்மையான ஆகாயத்தில் ஆகாயமும், தீயில் தீயும் கலப்பது போல, தூலமாகிய உடல் நீங்கும்போது, மீதமுள்ள நுண்ணியதான மனம், புத்தி இவைகளும் நீங்கி ஞானியானவன் உபாதியற்ற, எங்கும் நிறைந்த பிரம்மத்தில் கலந்து இரண்டற்ற நிலையை அடைவான்…. ஒரு காலி குடத்திலும் ஆகாயம் இருக்கிறது, வெளியேயும் ஆகாயம் இருக்கிறது. அப்போது குடத்தின் உள்ளே வெளியே என்று ஆகாயத்தைப் பிரித்துச் சொல்ல முடியும். குடத்தை உடைத்து விட்டால் உள்ளே இருந்த ஆகாயம் வெளியே கலந்துவிட்டது என்றா சொல்வது?…
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 18Tag: ஆதி சங்கரர்
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17
இருட்டில் திசைகளை அறியமுடியாத பிரமை சூரியன் உதித்தவுடன் நீங்குவதுபோல, இல்லாத ஒன்றான ‘நான்’ என்ற அகங்காரத்தையும் ‘எனது’ என்ற மமகாரத்தையும், உள்ள ஒன்றேயான பிரும்ம சொரூப அனுபவத்தில் தனக்குத் தானே உதிக்கும் ஞானம் அழித்துவிடும்… வண்டினால் கொட்டப்பட்ட புழு வண்டாகவே ஆவதுபோல உனது உண்மை நிலையில் நீ இருப்பாய்… சாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காட்சி என்ற முப்புடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காட்சி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காட்சி. ஒரு யோகிக்கு அந்த சாதாரண ஊனக்கண் காட்சி கிடையாதா என்று கேட்டால் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி அவன் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருளும் ஆன்மாவாகவே அவனுக்குத் தெரியும்…
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 16
உள்முகப்பார்வை கொண்ட ஜீவான்மாவெனும் அரணிக் கட்டையில் இப்படியாக ஆன்மத் தியானம் என்ற உள்முகக் கடைதலை ஒருவன் இடைவிடா முயற்சியோடு எப்போதும் செய்துவர, அதிலிருந்து கிளம்பும் ஞானம் எனும் தீ அறியாமை என்ற விறகுக்கட்டைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் எரித்துவிடும்… ஆன்மாவானது எப்போதும் நம்மால் அடையப்பட்டதே ஆனாலும், நமது அஞ்ஞானத்தினால் நாம் அதை அடையவில்லை என்று தோன்றும். தன் கழுத்திலே இருக்கும் நகையொன்று தொலைந்து போய்விட்டதே என்று எண்ணித் தேடுபவன் அது தன் கழுத்திலேயே இருப்பதைக் கண்டது போல, அஞ்ஞானம் அழிந்தவனுக்கு ஆன்மா புதிதாக அடையப்பட்டது போலப் பிரகாசிக்கிறது… இருட்டில் இருக்கும் மரக்கட்டை ஒன்று மனிதனாகத் தோன்றுவது போல, மனப்பிராந்தியால் பிரம்மத்தில் ஜீவன் கற்பிக்கப்படுகிறான். கற்பனையில் உருவான இந்தப் பொய்யாகிய உருவத்தின் உண்மை எதுவெனத் தான் உணரும்போது அந்தக் கற்பனையுருவம் பொருளற்றது என்று அறிவாய்…
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 16ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 15
எப்படி ஆகாயமானது நிர்மலமாக பரந்து விரிந்து எங்கும் காணப்படுகிறதோ அதே போல எல்லாவற்றிலும் பிரகாசிக்கும் ஆன்மாவை எப்போதும் தியானம் செய்வாயாக…. உள்ள பொருளான ஆன்மாவை உணர்ந்தவனாக, தான் காணும் பொருட்களின் உருவம், நிறம் முதலாக பலவிதமான வேற்றுமைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, அவைகளின் உள்ளத்தில் பரிபூரணமாய் நிறைந்து ஒளிர்கின்ற ஞானானந்தமே, தன்னுள்ளும் எப்போதும் ஒளிர்கின்றதென்று தெளிவாய்…. வேற்றுமைகள் வருவது புறநோக்கு இருக்கும்போது தான். அப்போதுதான் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் உண்டு. ஆன்மாவைப் பற்றி நாம் குறிப்பிடும்போது அங்கு ஆன்மாவைப் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் கிடையாது. அப்படியிருந்தால் பார்க்கும் நான், பார்க்கப்படும் ஆன்மாவாகிய நான் என்ற இரு “நான்”கள் அல்லவா இருக்கவேண்டும். “நான்” என்ற நமது உணர்வு எப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளதால், அது என்றும் ஒன்றானதாகவே இருக்கும். அங்கு இரு “நான்”கள் இல்லாததால் முப்புடிகளான வேற்றுமைகள் ஆன்மாவிற்குப் பொருந்தாது….
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 15ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 14
முன்பு எதிர்மறையான சொற்றொடர்களை வைத்துக்கொண்டு ஆன்மாவைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இங்கு “ஆகாயம் போல” என்று நேர்மறையாகத் தொடங்கிவைத்து ஆன்மாவின் சொரூப லக்ஷணம் துல்லியமாக விளக்கப்படுகிறது. இங்கும் எதிர்மறைகள் தவிர்க்கப்படவில்லை என்பதையும் காணலாம். ஆகாயம் என்பதை sky என்று குறுகிய அளவில் கொள்ளாது, space என்று விரிந்த அளவில் பொருள் கொண்டால் நன்கு விளங்கும்.
முன்பே நாம் பார்த்ததுபோல ஒரு காலியாக உள்ள குடத்திற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்வோம். ஆனால் அந்தக் குடத்திற்குள் ஆகாயம் இருப்பதை அக்குடத்தை உடைத்தாலோ, அல்லது அதை அங்கிருந்து நீக்கினாலோ தானே நமக்கு விளங்குகிறது. அது மட்டும் அல்லாது அந்தக் குடம் ஜடமாக ஓர் இடத்தை முன்பு அடைத்துக்கொண்டு இருந்தாலும், குடத்தை அகற்றியதும் அந்த இடம் கூட ஆகாயத்துடன் ஒன்றாகிவிடுகிறது அல்லவா? அதனால் ஆகாயத்தை எந்தப் பொருளின் உள்ளும் புறமும் வியாபித்துள்ளது என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும். அதாவது இருப்பது ஆகாயம் ஒன்றுதான், மற்றதெல்லாம் வந்து போவது என்றுதான் ஆகிறது. அந்த ஆகாயம் ஓரிடத்தில் தொடங்கி மற்றோர் இடத்தில் முடிகிறது என்று சொல்ல முடியாது என்பதால் அதற்குப் பிறப்பும் இல்லை, அதனால் அதற்கு மரணமும் இல்லை என்று ஆகிறது.
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 14ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13
எப்போதும் எதையாவது எண்ணிக்கொண்டு இருப்பதுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அந்த எண்ணப்படி தன்னிலும் வேறு என்று ஒன்றைப் பார்ப்பதுதான் முதல் படி. அந்த நான்-நீ என்ற பாவனையால், எனது-உனது என்ற வேற்றுமைகள் வளர ஆரம்பிக்கின்றன. அதனால் ஒரு பொருளை “தனது” என்று அடைய விரும்புவதுதான் ஆசை. அது கிடைக்காதோ அல்லது தன்னிடம் தங்காதோ போய்விட்டால் வருவது துக்கம். அது தனக்குக் கிடைத்தும், அது ஒருவேளை தன்னைவிட்டுப் பிறரிடம் போய்விடுமோ என்று எண்ணுவது அச்சம். தன்னிடமிருந்து பிறர் அதை எடுத்துக் கொண்டுவிட்டால் வருவது கோபம். தன்னிடமே அது இருக்கவேண்டும் என்று எண்ணுவது பற்று. மற்றவர் அதைப் பெற்றுவிட்டால் அவரிடம் நமக்கு வருவது வெறுப்பு. இப்படியான வித விதமான உணர்ச்சிகளுக்குக் காரணம் நம் எண்ணங்கள்தான்.
அத்தகைய எண்ணங்களின் தொகுப்பே மனம், அந்த மனமே தன்னை ‘நான்’ என்று அபிமானிக்கிறது. அந்த மனம் போன்ற வர்க்கத்தைச் சேர்ந்ததே பிராணன் எனும் சூக்ஷ்ம சக்தியும். ஆக உடல் எனும் ஜடப்பொருள் அல்லாது, பிராணன், மனம் எனும் சூக்ஷ்ம தேக வர்க்கங்களும் அநித்தியமானவைகள். அதனால் அவைகளும் தள்ளப்பட வேண்டியவைகளே.
ஆனால் மற்ற விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாது எப்போது ஒருவன் “நான்” என்று தன்னிருப்பை மட்டும் உணர்ந்து தன்னிலே இன்புற்று இருப்பானோ, அப்போது அவனுக்கு மற்ற விஷயங்களில் நாட்டமும் இருப்பது இல்லை. அவை வந்தாலும் அதனால் இன்பமும் இல்லை, போய்விட்டால் அதனால் துன்பமும் இல்லை என்று ஆகிறது. மற்றவர்கள் என்று அவனுக்குத் தெரிந்தாலும், அவர்களும் தன்னைப் போலவே இருப்பவர்கள் என்றுதான் அவனுக்கு இருக்கும். ஆத்ம ஞானம் என்பது எவருடைய தனி அனுபவம் என்றாலும் அது எந்தத் தனி மனிதருடைய சொந்தச் சொத்து அல்ல. சொத்து என்று வந்துவிட்டாலே அதற்கு சொந்தக்காரன் என்றும், அதில் பன்மையும் வந்துவிடும். ஞானம் தொன்றுதொட்டு இருக்கும் அதீத அனுபவம் என்பதாலேயே அதன் துவக்கத்தை வேதத்தினின்று காணலாம் என்பதை உணர்த்தவே இங்கு வேத வாக்கியங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12
கயிற்றை ஒருவன் பாம்பாக எண்ணுவது போல, எங்கும் பரவியுள்ள ஆன்ம வடிவான தன்னை தனித்தே விடப்பட்ட ஜீவன் என எண்ணி பயப்படுகிறான். எப்போது அவன் தான் ஜீவனல்ல, பரமாத்ம சொரூபமே என்று அறிந்து தெளிகிறானோ, அப்போதே அவன் பயம் நீங்கியவனாக ஆகிறான்…. சட்டி, பானை, குடம் போன்ற ஜடப் பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு விளக்கு ஒன்று தேவையாவது போல, ஏக வடிவாய் இருக்கும் ஆத்மாதான் மனம், புத்தி, இந்திரியங்கள் முதலானவற்றைப் பிரகாசிக்கச் செய்யும். சுய பிரகாசமற்ற ஜடமாகிய அவைகளினால் தேஜோமயமான ஆத்மா ஒருபோதும் பிரகாசிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்துகொள்… “எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ” என குரு சொல்ல, “நான் அதுவே” என்கிறான் சீடன். அந்த “நான்” என்பது “எப்போதும் அறிவோடு கூடிய தன்மயமாக இருக்கும்” ஆன்மாவிலிருந்து பெறப்பட்ட உணர்வு என்பதால், அந்த சுயம் பிரகாசமான பேரறிவை அறிவதற்கு வேறு எந்த அறிவின் துணையும் தேவை இல்லை. வேறு எதுவும் அந்தப் பேரறிவுக்கு ஒளி தருவதாகவும் இல்லை என்பதே இங்கு விளக்கப்பட்டுள்ளது. அதனாலேயே எவரும் “நான் இருக்கிறேனா?” என்று கேட்பதில்லை. தான் இருக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே அனைவரும் மற்ற விஷயங்களை அறிகின்றனர், பேசுகின்றனர்…
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11
சூரியன் எழுவதால் உலகில் பல காரியங்கள் நடந்தாலும், அவைகளின் பயன் சூரியனை அடையாது என்று கண்டோம். அதைப் போலவே இங்கு கிட்டத்தட்ட அசையாது நிற்கும் நிலவையும், நீரில் அதன் பிம்பத்தின் அசைவையும் எடுத்துக்கொண்டு ஆத்மாவின் சன்னிதானத்தில் காரியங்கள் இயற்றப்பட்டாலும் ஆன்மா அதற்கு பொறுப்பாகாது என்று விளக்குகிறார். ஒவ்வொருவனும் தான் ஆன்ம சொரூபம் என்பதை அறிவால் மட்டும் தெரிந்துகொண்டு, தான் செய்யும் காரியங்களையும் அதனால் அடையும் அனுபவங்களையும் “நான் செய்கிறேன்”, “நான் அனுபவிக்கிறேன்” என்று எண்ணுவதாலும், தான் ஆன்ம வடிவம் என்பதை தெரிந்து கொண்டதாலும், இயற்றப்படும் காரியங்களையும் அடையப்பெறும் அனுபவங்களையும் தேக இந்திரியங்கள் தொடர்பானவை என்று புரிந்துகொள்ளாமல், ஆத்மாவினுடையது என்று தவறாக கணிக்கிறான். ஆன்மாவிற்கு எந்தச் செயலும் கிடையாது என்பதால், இந்தக் கணிப்பு தவறானது என்பதை அசையா நிலவின் அசைவுகள் என்ற இந்த உவமையால் சங்கரர் விளக்குகிறார்.
நீர் அசைவதால் தண்ணீரில் தெரியும் சந்திரன் அசைவதுபோல் தெரிகிறதே தவிர சந்திரனே அசைவதில்லை என்பதுபோல், தேக இந்திரியங்களின் இயக்கத்தால் நடைபெறுவதை ஆன்மாவினுடையது என்று கருதுவது தவறு. அதன் உண்மை புரிவதற்கு தண்ணீரையே பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனின் பார்வையை நிலவின் பக்கம் திருப்புதல் அவசியம். அப்போதுதான் அவனுடைய பிரமை விலகும்.
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1
வழிபாட்டு ரீதியாக அன்னிய மதத்தைக் கடைப்பிடித்தாலும், காலங்காலமாக ஹிந்துஸ்தானத்தை தாய்நாடாகக் கொண்ட பற்பல இஸ்லாமியச் சஹோதரர்கள் அதன் தேசியப் பண்பாட்டை மதித்துப் போற்றுவதைக் கண்டிருக்கிறேன். அவ்வாறு போற்றும் அன்பர்களை நினைவு கூர்வதன் மூலம் ஹிந்துத்வம்வெறும் கருத்தாக்கம் அல்லது கற்பனை அல்ல மாறாக நடைமுறை சாத்யம் என்பதை சித்தப்படுத்த இயலும்… ஆங்காங்கு முந்தைய இரவில் விழுந்த பனித்துளிகள். கோபாத்ரி பர்வதம் என்ற ஒரு சிறு குன்றின் மீது ஆலயம். காஷ்மீரத்தில் ஆதிசங்கரர் இக்கோவிலுக்கு வருகை தந்தமை பதியப்பட்டிருந்தது. அப்படியானால் அந்த ஸர்வக்ஞ பீட ஸ்தலம் எங்கிருக்க வேண்டும்?…. ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி என்ற இஸ்லாமியப்பெருந்தகை சாரதா பீடத்திற்குச் சென்று வர வேண்டும் எனத் தணியாத ஆசை கொண்டிருந்தார். அது நிறைவேறியது எப்படி எனபதை ஒரு அழகிய வ்யாசமாக எழுதியுள்ளார்…
View More மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10
எப்போது புத்தி அடங்கி உலகினைப் பற்றி அறிவிக்காது, நமது இருப்பைப் பற்றி மட்டுமே அறிய வைக்கிறதோ அப்போது உள்ள “நான்” எனும் உணர்வு அப்போது மட்டும் அல்லாது, எப்போதும் உள்ள தனது இயல்பே என்று உணர்ந்து, தனது எல்லா நிலைகளிலும் அப்படியே ஒருவன் இருப்பதுதான் ஞானம் அடைவது அல்லது முக்தி பெறுவது என்று சொல்வார்கள். அந்த நிலையில் ஒருவனுக்கு உலகம் என்று தனியாகத் தெரியாது; எல்லாம் தானே என்று உணரப்படும். அதனால் உலக காரியங்களில் ஈடுபடும்போதும் தனக்கே எல்லாம் செய்துகொள்வது போலவே உணரப்படும். அதனால் உலகமும், உலகில் உள்ளவைகளும் தெரிந்தாலும் அதை வேறாகப் பார்க்க மாட்டான். எப்போது உலகம் என்ற ஒன்று தனியாகத் தெரிகிறதோ அப்போது தன்னையும், தன்னைத் தவிர உலகில் உள்ள அனைத்தையும் வேறு வேறாகவேப் பார்க்கும் மனநிலை வளரும்…
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10