எழுமின் விழிமின் – 32

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

***

முந்தைய பகுதி

தொடர்ச்சி…

பூஜை அறையே எல்லாமாக ஆகிவிடக் கூடாது:

ஆனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.  பெரிய மகரிஷிகள் உலகத்துக்கு விசேஷச் செய்தியுடன் வருகிறார்களே தவிர, பெயர் புகழுக்காக அல்ல.  ஆனால், அவர்களைப் பின்பற்றுகிறவர்கள், அவர்களுடைய செய்திகளைத் தூக்கி எறிந்து விட்டு, அந்த மகான்களின் பெயரால் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.  உண்மையில் உலகத்தின் சரித்திரம் இப்படித் தான் உள்ளது.

Ramakrishnaமக்கள் அவருடைய (ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய) பெயரை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது பற்றி நான் கவனம் செலுத்தவில்லை.  ஆயின் அவரது உபதேச மொழிகள், அவரது வாழ்க்கை, அவரது செய்தி, உலகமெங்கும் பரவுவதற்காக உதவி பண்ணுவதில் எனது ஆயுள் முழுவதையும் அர்ப்பணிக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

நான் மிக அதிகமாக அஞ்சுவது இந்த பூஜை அறையைக் கண்டுதான்.  பூஜை அறை இருப்பதில் தவறில்லை.  ஆனால் அதையே முழு முதலாக, எல்லாமாக ஆக்கிவிட்டு, பழைய காலத்துக் கட்டுப்பெட்டித்தனத்தை மீண்டும் நிறுவக் கூடிய போக்கு சிலரிடம் காணப்படுகிறது.

இத்தகைய பழைய காலத்தைய, சிதைந்து குலைந்து போன சடங்குகளில் ஏன் இவர்கள் ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.  அவர்களது உணர்ச்சித் துடிப்பு வேலை வேண்டுமென்று தவிக்கிறது. ஆனால் அதற்காக வழிதுறை இல்லாமறல் போகவே இவர்கள் மணி அடிப்பதிலும் மற்றச் சடங்குகளிலும் சக்தியை வீணடிக்கிறார்கள்.

***

வெறும் மூடபக்தன் ஆகாதே:

பாரத தேசத்திலிருந்த ஒரு சந்நியாசி கூறினார்.  “என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று கூறுவாயானால் உன்னை நான் நம்புவேன்.  முதலையின் வாயிலிருந்து, அது என்னைக் கடிக்காத முறையில், பல்லைப் பிடுங்கி விடுவேன் என்றாலும் நம்பிவிடுவேன், ஆனால் குருட்டுத்தனமான வெறி பிடித்தவனை மாற்ற முடியுமென்று கூறுவாயானால் அதை மட்டும் நம்ப முடியாது” என்றார்,

மூடபக்தனின் கதை:

……துவைதிகளான, பாரத வைஷ்ணவர்கள், சகிப்புத்தன்மையற்ற ஒரு வகுப்பினராவர்.  சைவர்களில் துவைதக் கிளையில் ஒரு வகுப்பைச் சேர்ந்த கண்டாகர்ணன் (மணிக்காதன்) என்ற பக்தனைப் பற்றிய கதையன்று வழங்கி வருகிறது.  அவன் சிவ பெருமானிடத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள  பக்தனாதலால் வேறொரு தெய்வத்தின் பெயரைக் காதால் கேட்கவும் விரும்ப மாட்டான். அதனால் மற்றத் தெய்வங்களின் பெயர்களைக் கூறும் எந்தக் குரலையும் அமிழ்த்திவிடும் பொருட்டுத் தன் இரு காதுகளிலும் இரு மணிகShankaraNarayanளைத் தொங்க விட்டுக் கொண்டான்.

சிவபெருமானிடம் அவன் பேரன்பு பூண்டவனாதலால் அப்பெருமான் அவனுக்குச் சிவன்-விஷ்ணு என்னும் பேதமில்லை என்பதை அறிவிக்க வேண்டி அவன் முன் பாதி திருமாலாகவும், பாதி சிவன் வடிவாகவும் ஒரு நாள் காட்சி தந்தார்.  அவ்வமயம் அந்த பக்தன் அவர் முன் தூபங் காட்டினான்,  தூபத்தின் நறுமணம் திருமாலின் நாசியிற் புகுவதைக் கண்டபோது அதனுள் தனது விரலைப் புகுத்தி அக்கடவுள் அந்த நறுமணத்தை நுகரமுடியாதபடி தடுக்கலானான்.  கண்டாகர்ணனின் முழு மூடபக்தியின் வெறி அவ்வாறிருந்தது.

***

குருட்டு வெறியனாகாதே:

குருட்டு  வெறியர்களில் பல ரகம் உண்டு.  சிலர் மது வெறியர்கள்.  சிலர் புகை பிடிப்பதில் வெறியர்கள்.  மனிதர்கள் புகை  பிடிப்பதை நிறுத்தினால் யுகப்பிரளயம் வந்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள்…. சில வெறியர்கள், கணவனை இழந்த பெண்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் எல்லாத் தீமைகளும் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள் இது குருட்டு வெறியாகும்.

நான் சிறு பையனாக இருந்தபோது வேலை செய்வதற்குத் தேவையாக இந்தக் குருட்டு வெறி முக்கியமான அம்சமாகும் என நினைத்தேன்.  ஆனால் வயதாக ஆக அப்படி யல்ல என்று கண்டுபிடித்துவிட்டேன்.

…..ஒருவன் எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டு திரியலாம்; அவனை யாரும் நம்ப முடியாது; அவனிடம் எந்தப் பெண்ணும் பத்திரமாக இருக்க முடியாது.  ஆனால் ஒருவேளை இந்த அயோக்கியன் மது அருந்தாதவனாக இருக்கலாம்.  அப்படியிருந்தால் மது அருந்துகிறவன் மகா மோசம்; அவனிடம் நல்லது எதுவுமே இல்லையென்று அந்த அயோக்கியன் நினைக்கிறான்; தான் செய்கிற தீய செயல்களெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. இது மனிதனுக்கு இயல்பான சுயநலத் தன்மையாகும்; ஓரவஞ்சனைக் குணமாகும்.

Fundamentalist

இந்தக் குருட்டுப் பிடிவாத வெறியர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு  பேர்களுடைய ஈரல் கெட்டுப் போயிருக்கலாம்.  அஜீரணக்காரர்களாக இருக்கலாம்.  அல்லது ஏதாவது நோய் வாய்ப்பட்டவர்களாக இருக்கலாம்.  நாளடைவில் இந்த குருட்டு நம்பிக்கை வெறி கூட ஒருவகை வியாதி தான் என்று வைத்தியர்கள் கண்டுபிடிக்கக் கூடும்.  கடவுள் என்னை அதிலிருந்து காப்பாற்றட்டும்!

என்னுடைய அனுபவங்களின் முடிவாக நான் ஒன்று நினைக்கிறேன். பிடிவாதமாக,  மூடத்தனமான பலவிதச் சீர்திருத்தங்களைப் பண்ண முயலுவதை நிறுத்துவது நல்லது. அது ஒருவிதத்தில் புத்திசாலித்தனமாகும்.

உலகம் மெல்ல முன்னேறி வருகிறது.  அதை மெல்லவே முன்னேறும்படி விட்டு விடலாமே! நாம் ஏன் அவசரப்படவேண்டும்? நன்றாகத் தூங்குங்கள்; நரம்புகள் நல்ல நிலையிலிருக்கும்படி கவனித்துக் கொள்ளுங்கள்; சரியான உணவைச் சாப்பிடுங்கள்; உலகிடம் அனுதாபம் காட்டுங்கள். குருட்டு வெறியர்கள் தாம் வெறும்பை உண்டாக்குகிறார்கள்……

……இந்த முரட்டுப் பிடிவாதக்காரர்களின் கோஷ்டியிலிருந்து நீங்கள் வெளிவந்தால் உண்மையில் அன்பு காட்டுவதும் அனுதாபம் காட்டுவதும் எப்படியென்பதை நீங்கள் கற்றுக்கொள்ளக் கூடும்.  நீங்கள் அன்பு, அனுதாப நிலையை எய்தினால் இந்த எளிய ஜந்துக்களைக் கண்டிப்பதற்கு மனமின்றி உங்கள் கோபசக்தி குறைந்து போகும்; அவர்களது குறை கண்டு அனுதாபம் தான் கொள்வீர்கள் .

…..ஓர் அரசன் இருந்தான்.  அண்டை நாட்டு அரசகுமாரன் தன் தலைநகர் மீது படையெடுத்து, அதை முற்றுகையிட முன்னேறி வருவதாக அவன் கேள்விப்பட்டு,  தனது சபையைக் கூட்டினான். நாட்டை எதிரியிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்பதற்காக யோசனைகளைக் கூறும்படி மக்களைக் கேட்டுக்கொண்டான்.

பொறியாளர்கள் தலைநகரைச் சுற்றி உயரமான ஒரு மண்சுவர் கட்டி, வெளியில் ஓர் அகழி வெட்டி வைக்கவேண்டும் என்று யோசனை சொன்னார்கள்.  தச்சர்கள் மரச்சவர் எழுப்பச் சொன்னார்கள்.  அருந்ததியர்கள் “தோலுக்கு இணையாக எதுவுமே இல்லை; எனவே தோலால் சுவர் எழுப்பலாம்” என்றார்கள்.  ஆனால் இரும்புக் கொல்லர்கள், ” நீங்கள் கூறுவதெல்லாம் சுத்தப் பிசகு, சுவரை இரும்பால் தான் கட்டவேண்டும்” என்றனர்.

அடுத்ததாக வழக்கறிஞர்கள் முன்வந்து நாட்டைக் காப்பதற்கு மிகச்சிறந்த வழி, எதிரியிடம் போய் மற்றவர் சொத்துக்களைத் தம் வசப்படுத்துவது நீதிக்குப் புறம்பானது, தவறு என சட்ட ரீதியாக ச் சொல்லுவதே சிறந்த வழியென்று வாதாடினார்கள்.

Fanatics

கடைசியாகப் புரோகிதர்கள் வந்தார்கள்.  எல்லோரையும் துச்சமாக நோக்கிவிட்டு அவர்கள் வெறுப்புடன் நகைத்தார்கள்.  ” நீங்கள் எல்லாம் பைத்தியக்காரர்களைப் போல பேசுகிறீர்கள்.  முதல் முதலில் யாக யக்ஞங்களால் தேவதைகளைத் திருப்திப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் நம்மை யாதும் ஜயிக்க முடியாது” என்றார்கள்.

தமது நாட்டைக் காப்பதற்குப் பதிலாக அவர்கள் தமக்குள்ளே தர்க்கம் பண்ணிக் கொண்டு, தமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டார்கள்.  அதனிடையே  எதிரி முன்னேறி வந்து அந்த நகரத்தை தாக்கித் தகர்த்துவிட்டான்.  மனிதர்கள் இப்படித் தான் குருட்டுப் பிடிவாதத்துடன் வாழ்கிறார்கள்.

***

எல்லா பலவீனத்தையும் மூடநம்பிக்கையையும் கைவிடுக:

….நான்  உபதேசிக்கும், எல்லாவற்றிலும் முதல் தேவையாக ஒன்றைக் கூறுவேன்.  எது ஆத்மீகத்துக்கோ, அறிவுக்கோ, உடலுக்கோ பலவீனத்தை உண்டாக்குகிறதோ, அதை உங்கள் கால் கட்டை விரலால் கூடத் தொடாதீர்கள்.

சமயம் என்பது மனிதனிடத்தில் இயற்கையாக உள்ள வலிமையை  வெளிப்படுத்துவதாகும்.  எல்லையில்லாத சக்திபடைத்த ஒரு ‘ஸ்பிரிங்’ இந்தச் சிறிய உடலுக்குள்ளே சுருண்டு கிடக்கிறது. அந்த ஸ்பிரிங் மெல்ல விரிவடைந்து வருகிறது.  அது விரிந்துகொண்டே செல்லச் செல்ல, ஓர் உடலுக்குப் பிறகு மறு உடல் எடுத்து அவை ஒவ்வொன்றும் தகுதியற்றதாக ஆகும்பொழுது, அந்த உடலை எறிந்துவிட்டு, அதைவிட உயர்ந்த உடலை எடுத்துக் கொள்கிறது.  இது தான் மனிதனுடைய – சமயத்தினுடைய – நாகரிகத்தினுடைய வரலாறு ஆகும்.  இதுதான் முன்னேற்றம் எனப்படும்.

சோதிடம், ரகசிய வித்தைகள் இவற்றையெல்லாம் நாடுவது பொதுவாக பலவீனமான மனத்தின் அறிகுறி என்பது உங்களுக்குத் தெரியவரும்.  ஆகவே நமது மனத்தில் இவை முக்கியமானதாக ஆகும்பொழுது நாம் போய் ஒரு டாக்டரிடம் உடம்பைக் காட்டி, நல்ல உணவு சாப்பிட்டுவிட்டு,  ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சோதிடரைப் Janma Cycleபற்றிய பழைய கதை ஒன்று உண்டு.  ஒரு நாள் அந்த மனிதர் ஒரு அரசனிடம் போய், ” அரசே! நீங்கள் இன்னும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறீர்கள்” என்று சொன்னார்.  அரசர் நடுங்கிப் பயந்து போய், அப்பொழுதே அங்கேயே அச்சத்தால் உயிரை விட்டுவிடுவார் போலிருந்தது.

ஆனால் அவருடைய மந்திரி புத்திசாலி. இந்த சோதிடர்களெல்லாம் அறிவிலிகள் என்று மன்னனிடம் மந்திரி கூறினார்.  ஆனால் மன்னன் அவரை நம்பவில்லை.  மன்னனுக்கு  இந்த சோதிடர்கள் அறிவிலிகள் என்பதை நிரூபிக்க வேறெந்த வழியும் புலப்படாமல் போகவே அரண்மனைக்கு அந்தச் சோதிடரை மீண்டும் ஒருமுறை மந்திரி அழைத்தார்.

இரண்டாம் முறை வந்த போது நீங்கள் போட்ட கணக்குகளெல்லாம் சரிதானா? என்று சோதிடரை மந்திரி வினவினார்.  எவ்விதத் தவறும் அதில் இருக்க முடியாது என்று கூறிவிட்டு, எதற்கும் தம்மையே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக, முழுக் கணக்கையும் மீண்டும் ஒருமுறை போட்டு பார்த்துவிட்டுப் பிறகு தமது முடிவு முற்றிலும் சரிதான் என்று பதிலளித்தார்.

மன்னரின் முகம் வெளிறிப் போய்விட்டது.  மந்திரி சோதிடரைப் பார்த்து, “ஐயா, நீங்கள் எப்பொழுது மரணமடைவீர்கள்?” என்று கேட்டார், “பன்னிரண்டு ஆண்டுகளில்” என்று சோதிடர் பதிலளித்தார்.

அந்தக் கணமே மந்திரி தமது வாளை உருவி சோதிடரின் உடலிலிருந்து கழுத்தைத் துண்டித்து வீழ்த்தினார்.  பிறகு மன்னனை நோக்கி, “இந்தச் சோதிடன் பொய்யன் என்பது தெரிகிறதா? இந்தக் கணமே இவன் செத்துக் கிடக்கிறான், பாருங்கள்” என்றார்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

40 Replies to “எழுமின் விழிமின் – 32”

  1. விவேகானந்தரே இதை சொல்லி உளார். நாங்கெல்லாம் வெறியர்கள் போங்கள். பாரதத்தில் உள்ள வைணவர்கள் 🙂

    இதற்க்கு ஆசிரியர் குழு ஆயிரம் விளக்கம் அளிக்க முடியும் – சுவாமி ஜி சொன்னது இதை தான் அதை தான் என்று. இதை பிரசுரித்து விட்ட அதை கஷ்டப்பட்டு சொல்லித்தான் ஆகணுமா என்ன.

    வடக்கே வைணவ பக்தி மார்க்கம் செய்த உபகாரம் சுவாமிஜி காலம் வரை தழைத்து இருக்க வில்லை போலும். கபீர் தாஸ், துளசி தாஸ், ராமானந்தர், சைதன்ய பிரபு மதுசூதன சரஸ்வதி, சாயன மாதவர், விஜய நகர மன்னர்கள், இவர்களுடன் எண்ணற்ற சாமான்ய வைணவர்கள்.

    மணி அடிப்பதென்ன கேவலாமா. தீவட்டி தூக்குவது கேவலாமா. இதையும் கூட ஸ்வாமி-ஜி ஏன் தான் சொன்னாரோ. இந்த மணி அடித்து கொண்டிருந்த கும்பல் தான் பெரிய வேதாந்த ஆன்ம சாதனையையும் செய்தது. இந்த கும்ப அடுத்தவனை அடிக்காமல் மணி அடித்து புண்ணியமாவது தேடிக் கொண்டது. இன்று அவனவன் அடுத்தவனை அடிக்கிறான்.

    சுவாமிஜி இதை சொல்லி இருக்கலாம், இதை இங்கே பிரசுரித்து நீங்கள் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி விடப் போவதாக எனக்கு தெரியவில்லை. மற்றபடி வைனவர்களை, சைவர்களை, த்வைதிகளை திட்டியபடியால் சிலருக்கு சந்தோசம். சூபீ ஆதிகள் சந்தோசத்தில் ஆடுவர்.

    ஆனாலப்பட்ட சங்கர பகவத் பாதரே ஒரு பூர்வ பக்ஷினையும் சிறிதளவு கூட திட்டியதில்லை. திட்டினால் விழிப்புணர்வு வரும் என்று யார் சொன்னாரோ தெரியவில்லை.

  2. புத்தர்கள் கூட தான் மோனோஇஸ்டிக் தத்துவங்களை கொண்டவர்கள். அவர்கள் ஆடிய வெறியாட்டம் கொஞ்சமா? இன்று நாம் கிறிஸ்தவர்களை inculturisation செய்கிறார்கள் இரு சாடுகிறோம். இதை ஆரம்பித்ததே புத்தர்கள் தான். அவர்கள் விஷ்ணுவின் அவதாரங்களில் புத்தரை ஏற்ற, அதை கபீளிகரம் செய்யும் பொருட்டு ஒரிஸ்ஸா வைணவர்கள் புத்தோரையே ஒரு அவதாரமாக சேற்று விட்டார்கள். இதை எல்லாம் ஆராய்ச்சி செய்து புஸ்தகமாக கொண்டுவந்து விட்டார்கள் இப்பொழுது. சுவாமி ஜி இந்த ஒரிசாவை வைத்து வைணவர்களை மற்றொரு இடத்தில் சாடி உள்ளார்.

    பக்தி இல்லாத நெஞ்சில் எப்படி கருணை இருக்கும். வைணவர்களும் சைவர்களும் பக்தியை ஊற்றி வளர்த்தார்கள், எங்கு வெறும் மோனோஇசம் இருக்கிறதோ அந்து பக்திக்கு இடமில்லை. குணமே இல்லாத ஆன்மாவுக்கு எங்கிருந்து காருண்யம் பிறக்கும்?

  3. தூய பக்தியை நிந்தனை செய்வது போல உள்ளது இந்த கட்டுரை.
    சமுக / தேச பக்தி என்பது வேறு உள்ளார்ந்த இறை பக்தி என்பது வேறு. இரண்டும் வெவ்வேறு குறி கோள்களை கொண்டவை.

  4. சாரங் :

    கூறிய காலம் நேரம் அப்படி அதனால் இத்தகைய எளிதாக்கல் தேவை;

    இது இன்றைய பொருளாதார யுத்த காலத்தில் ரொம்ப சரியாக பொருந்துகிறதும் கூட;

    நன்றி
    சஹ்ரிதயன்

  5. நண்பர்களுக்கு,

    சுவாமி விவேகானந்தரின் உரைகள், எழுத்துக்கள்,கடிதங்கள் எல்லாம் தொகுக்கப் பட்டு 7 பகுதிகளாக Complete Works என்ற பெயரில் வந்துள்ளது.. ஒவ்வொரு பகுதியும் சுமார் 300 பக்கங்கள். அவரது கருத்துக்கள் பல்வேறு துறைகளையும் தழுவி பல தளங்களீல் சொல்லப் பட்டவை. இந்த மாபெரும் தொகுதிலியிருந்து அங்கங்கு சிறிய பகுதிகளை எடுத்துக் கோர்த்து ஏக்நாத் ரானடே ”எழிமின் விழிமின்” என்ற தொகுப்பை செய்திருக்கிறார். ஏக்நாத்ஜி மாபெரும் ஹிந்து சமூகத் தொண்டர். விவெகானந்த கேந்திரத்தை நிறுவியவர். அவர் சம்பிரதாய வாதி அல்லர்.

    பக்தி உணர்வோ, அதனால் விளையும் மானுட நேசமோ எதுவுமில்லாமல் மணிக்கணக்காக பூஜை என்ற சடங்குக்குள் மூழ்கி அதற்கு வெளியே எதுவும் யோசிக்காதவர்களையே சுவாமிஜி கண்டிக்கிறார். துவைதவாதிகளான வைஷ்ணவர்கள் சகிப்புத் தன்மையவற்றவர்கள் என்ற விமர்சனத்தைத் தொடர்ந்து உடனடியாக அவர் கூறும் கதை சிவபக்தனாக உள்ள ஒரு கருத்து வெறியனைப் பற்றியது என்பதைக் கவனிக்கவும்.. சுவாமிஜி வைஷ்ணவர்களையோ பூஜையையோ பழித்துரைக்கவில்லை.

    சுவாமிஜியின் உரைகளில் உணர்ச்சிகரமான பகுதிகளும், சில இடங்களீல் கடுமையான கண்டன மொழிகளும் இருப்பதைக் காண்கிறோம், அதற்குக் காரணம் அன்றைய காலகட்டமும் சூழலும். சுவாமிஜி இவற்றைப் பேசிய 1880 – 1902 காலகட்டத்தில் இந்து சமூகம் மிகப் பெரும் இருளில் மூழ்கியிருந்தது. பஞ்சத்தாலும் அறியாமையாலும் நோய்களாலும் சாகும் மக்களைப் பற்றீய எந்த பிரஞையும் இல்லாமல் சமயத் தலைவர்களும், நிறுவனங்களும் இயங்கின.. அப்போது இந்த அதிர்ச்சி வைத்தியம் எவ்வளவு தேவையானது என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். “தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாக எண்ணிக் கொள்ளும் மடாதிபதிகள்..” போன்ற வரிகளை மகாகவி பாரதியும் எழுதியிருக்கிறார்.

    சொல்லப் போனால், இன்றைக்கும் இந்த உபதேசத்திற்குத் தேவை இருக்கிறது.. சோதிடம் மீதான அதீத மூடநம்பிக்கைகள், குருட்டுத் தனமான சடங்குகள், உள்ளார்ந்த பக்தி உணர்வின்றி பகட்டும் போலித்தனமும் நிறைந்த பூஜைகள் – இவற்றை உருமாற்றி தூய பக்தியையும், ஆன்மீகத்தையும், எளிமையையும் சேவை உணர்வையும் வளர்த்தெடுக்க இந்த உபதேசம் உந்துதல் அளிக்கும்.

  6. கண்டாகர்ணனின் கதை இப்படிப்படித்ததாக ஞாபகம் . பெருமாள் தான் ஏற்றி வைத்த ஊதுபத்தி வாசனையை பிடிக்கிறாரே என்ற எரிச்சலில் முரட்டு பக்தன் அவர் மூக்கைப்பொத்த ,அவர் வெறும் கல்லல்ல என்ற அவனது அசையாத நம்பிக்கையை இது காட்டுவதாக பெருமாள் மகிழ்கிறார். உடனே தரிசனமும் தருகிறார்.

    முரட்டு பக்தி நம்பிக்கையோடு சேர்ந்து இருப்பதால் பக்தன் மேலேற முடிகிறது என்பதையே இது காட்டுகிறது. அவன் தவறு செய்யும் போது [ பேதங்களில் மூழ்கிஉள்ள போது] அவரே தன்னை உணரவும் வைக்கிறார்.

    ஆனால் சுவாமிஜியின் கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டால், பூஜை வேண்டாம் ஒன்றும் வேண்டாம், செய்பவர்களையும் கீழ் நிலை பக்தர்கள் என்று கிண்டலடிக்கலாம் என்ற நிலை நியோ தியான கும்பல்களில் உள்ளது.
    அருகிலிருந்து கண்ணால் பார்த்ததை சொல்கிறேன்.

    இன்றைய நிலையில் இது போன்ற கருத்துக்கள் வேண்டுமென்றே தவறாகவே புரிந்து கொள்ளப்படும்.
    ஏதடா சாக்கு பூஜை, கோயில் நடைமுறை, விரதங்கள் இவற்றை பற்றிய தாழ்வு மனப்பான்மையை உண்டாகலாம் என்று ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருக்கிறது. ப்ளீஸ் என்னைகுழப்புங்க என்று நம்மில் பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

    வீட்டில் விளக்கு ஏற்றுவது கூட தேவையில்லை. அதான் மின்விளக்கு உள்ளதே மனசு சுத்தமாக இருந்தால் போதும் என்று சொல்லி விட்டு மானாட மயிலாட பார்க்கும் பேர்கள் பெருகி வருகிறார்கள் . விளைவு சில நிமிடங்கள் கூட கண்மூடி பிரார்த்திக்கும் பழக்கமும் விட்டுப்போகிறது. இவர்கள் தான் தன நம்பிக்கை அல்லது இன்மை என்று இருப்பதில்லை. கூட இருப்பவர்களை குழப்பி , சீண்டி விட்டு பார்க்கிறார்கள் .

    ஏழு பகுதிகளையும் முழுக்க படித்து மனதில் விவாதம் செய்தாலே சுவாமிஜியின் கருத்துக்கள் நீங்கள் சொன்ன புரிதலுக்கு வரும் . மற்றபடி இன்றைய சூழலில் தவறாக புரிந்து கொள்ளப்படும் அபாயமே நிறைய உள்ளது.

    சாய்

  7. “சுவாமிஜியின் உரைகளில் உணர்ச்சிகரமான பகுதிகளும், சில இடங்களீல் கடுமையான கண்டன மொழிகளும் இருப்பதைக் காண்கிறோம், அதற்குக் காரணம் அன்றைய காலகட்டமும் சூழலும். சுவாமிஜி இவற்றைப் பேசிய 1880 – 1902 காலகட்டத்தில் இந்து சமூகம் மிகப் பெரும் இருளில் மூழ்கியிருந்தது. பஞ்சத்தாலும் அறியாமையாலும் நோய்களாலும் சாகும் மக்களைப் பற்றீய எந்த பிரஞையும் இல்லாமல் சமயத் தலைவர்களும், நிறுவனங்களும் இயங்கின..”
    அன்பு நண்பர்களே /
    இன்றும் அந்த நிலையில் பெரிய மாற்றம் இல்லை. மத மாற்றத்திற்கு நம் மன மாற்றம் இல்லாமையே முதன்மையான காரணம் அல்லவா ?

  8. இங்கே எழுத்தாளர் ஜடாயு அவர்கள் ஸ்வாமிஜீயின் கருத்துக்கள் பற்றி வெளியிட்டுள்ள செய்திகள் முக்கியமானவை…

    வீரத்துறவியான விவேகானந்தரின் வீரமுழக்கத்தை, அந்தக் காலத்தைக் கருத்தில் கொண்டு படிக்க வேண்டும்.. அதனை திரிபு படுத்திப் பேசுவது ஏற்கத்தக்கதன்று..

  9. //
    சுவாமிஜியின் உரைகளில் உணர்ச்சிகரமான பகுதிகளும், சில இடங்களீல் கடுமையான கண்டன மொழிகளும் இருப்பதைக் காண்கிறோம், அதற்குக் காரணம் அன்றைய காலகட்டமும் சூழலும். சுவாமிஜி இவற்றைப் பேசிய 1880 – 1902 காலகட்டத்தில் இந்து சமூகம் மிகப் பெரும் இருளில் மூழ்கியிருந்தது
    //

    //
    இன்றும் அந்த நிலையில் பெரிய மாற்றம் இல்லை. மத மாற்றத்திற்கு நம் மன மாற்றம் இல்லாமையே முதன்மையான காரணம் அல்லவா ?
    //

    ஆகா இப்படி திட்டி பிரயோஜனமில்லை. சுவாமி ஜி ஹிந்து ஜனங்களை திட்டவில்லை, த்வைதிகளை மட்டும் தான் இங்கு திட்டி உள்ளார், அதுவும் ரொம்ப மோசமாக.
    சுவாமிஜி இந்த திட்டை எதிலிருந்து ஆரம்பித்தாரோ அதிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யாமல், நமக்கு முக்கியமாக பட்ட இடத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்து இங்கு எழுடப்பட்டுள்ளது.

    அவர் எங்கிருந்து ஆரம்பிக்கிறார் என்று பார்த்தல் அவர் அன்றைய நிலையை மட்டும் சொல்லவில்லை என்று விளங்கும். அத்வைதம் தான் உண்மை, அதுவே சகிப்புத்தன்மை தரும் என்ற ஒரு ஆழமே இல்லாத மேம் போக்கு வாக்கியத்தை உதிர்த்துவிட்டு த்வைதைதிகளை சாட ஆரம்பிக்கிறார்.

    //
    . சுவாமிஜி வைஷ்ணவர்களையோ பூஜையையோ பழித்துரைக்கவில்லை.
    //

    இது உண்மையா என்று நீங்களே யோசித்துப பார்த்துக்கொள்ளுங்கள் ஜடாயு.

    சுவாமிஜியின் இந்த மற்றும் சில வைணவ ஏச்சுக்களால் தான் இன்றைக்கும் கூட பல வைஷ்ணவர்கள் சுவாமிஜி என்றாலே ஓடுகிறார்கள். இது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

    மேலும், இன்றைக்கு நமக்கு இது தேவையா. இன்றைய நமது குறிக்கோள் சுவாமிஜியின் எவ்வ்வளவோ கருத்துகளின் மூலம் நம்மை ஒன்று திரட்டுதல். அதற்க்கு அனுகூலமாகவ இந்த கட்டுரை உள்ளது. நிச்சயமாக இல்லை.

    அவர் சொன்னதால் யாரும் வருத்தப்பட்டு விடப் போவிதில்லை. எனக்கு எரிச்சலே, இதை இங்கே ஏன் போட்டு புழுதியை கிளப்ப வேண்டும் என்று தான்.

    இந்த கட்டுரையை படித்தி விட்டு, விவேகானந்தரின் காரியத்திற்காகத்தான் நானும் எனது இன்னொரு நண்பனும் ஊருக்கு கிளம்பி போய் அவரது சொன்ன காரியத்தை செய்திவிட்டு திரும்பினோம், அவர் எதோ திட்டினார் என்பதற்காக, அவர் சொன்ன மற்ற தெல்லாம் உண்மை இல்லை என்று சொல்லவரவில்லை, அவரை நாங்கள் புறம்தள்ளவும் இல்லை.

    சுவாமிஜியின் இந்த வாகு வெறும் அத்வைத சார்புடைமை (ரொம்ப மிருதுவாக சொல்ல வேண்டும்மென்றால் ).
    என்னை பொறுத்தவரையில் சுவாமிஜியின் இந்த மாதிரி குறிப்பிட்டு சொல்லும் பேச்சு தேவை அற்றதே, அது இன்று வரை பலனையும் அளிக்கவில்லை, அடஹையும் விட மேலாக, அதை இங்கு போட்டு சுவாமிஜிக்கு இப்படி ஒரு சேவையை நாம் செய்ய வேண்டாம். அவர் சொன்ன மற்ற அநேக கோடி நல்ல காரியங்களை இளைஞர்கள் செய்ய தடை ஏற்படுத்த வேண்டாம்.

    நீங்களே சொல்லுங்கள், இந்த கட்டுரையை படித்திவிட்டு யாராவது யாருக்காவது ஒரு மன மாற்றம் வருமா, வராது., அத தொனியில் தான் இருக்கிறது கட்டுரை. வரவேண்டுமென்றால் வேற மாதிரி சொல்ல வேண்டும்.

    மேலும், கண்டாகர்ணன் என்ன மத்தவனை அடித்து நொறுக்கி நீ அவரை கும்பிடாதே இவரை கும்பிடாதே என்றா சொல்லிக் கொண்டிருந்தார். அவரக்கு சிவபெருமானின் மேல் உள்ள அலாதி பக்தியினால் அவர் தன்னை வருத்திக் கொண்டு பக்தியை வெளிக்காட்டினார். இதை பார்த்துவிட்டு எல்லா சைவர்களும் காதில் மணியா கட்டிக் கொண்டார்கள்? இதை எல்லாம் அராபிய மதத்தோடு ஒப்பிடுவது போல சித்தரித்து வருவது கொஞ்சம் ஓவர்.

    அம்மனுக்கு ஆடு நேந்துவிடுவோருக்கு ஒரு நியாயம் கண்டாகர்ணனுக்கு ஒரு நியாயமா ?

    சுவாமிஜி யாகாதிகளையும் தான் எதிர்த்திருப்பார், ஆனால் இன்றைக்கு Australia காரன் அக்னி ஹோத்ரம் பண்றான் என்பதை படித்து நாம் புள்ளரிக்கிறோம்.

    அக்னி ஹோத்ரமும், ஔபாசனமும், சண்டீ ஹோமமும் இன்றைக்கு நமக்கு முக்கியம் தான். அவர் அவர்களை அவர் அவர் காரியம் செய்ய விட வேண்டும். எல்லோரும் எப்பொழுதும் எல்லாவற்றையும் விட்டு விட்டு தான் நினைப்பதையே செய்ய வேண்டும் என்ற எண்ணம் நடைமுறை சாத்தியமற்றது.

  10. //வீரத்துறவியான விவேகானந்தரின் வீரமுழக்கத்தை, அந்தக் காலத்தைக் கருத்தில் கொண்டு படிக்க வேண்டும்.. அதனை திரிபு படுத்திப் பேசுவது ஏற்கத்தக்கதன்று..
    //

    மற்றும் இதுபோலவே மறுமொழி இடும் அனைவருக்கும். இதில் தவறாக புரிந்து கொள்ள என்ன இருக்கிறது, ஏழு புத்தகத்தையும் படித்து விட்டு சர்ச்சை செய்தால் எல்லாம் புரிந்து விடுமா? அவர் என்ன சொன்னாரோ அது அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி பயனுள்ளதாகவே இருக்காது.

    சுவாமிஜி சொன்னதனாலேயே எல்லாமே சரி என்பது சரியான வாதம் அல்ல. இந்த மாதிரி ஒன்றும் சொல்லாமலேயே பூர்வ மிமாம்சத்திளிருந்து ஹிந்து தர்மத்தை சங்கராச்சாரியார் மீட்டெடுக்க வில்லையா?
    தாமிசீகத்திளிருந்து, பக்தி மார்கத்திற்கு ராமானுஜர்/மத்வர் மீட்டேடுகவில்லையா.

    இங்கே கட்டுரையில் கொடுக்கப்பட்டுள வரிகளை மட்டும் படித்து விட்டு சுவாமிஜி சொன்னது சரி என்றார் சொல்லான் என்ன செய்வது.

    இந்த “…..” ட்டை நிரப்பினால் சுவாமிஜி என்ன சொல்ல வருகிறார் என்று புரியும்.

    “……துவைதிகளான, பாரத வைஷ்ணவர்கள், சகிப்புத்தன்மையற்ற ஒரு வகுப்பினராவர். ”

    இந்த புள்ளிகள் நிரப்பி படியுங்கள்.

    “A real Vedantist must sympathise with all. Monism, or absolute oneness is the very soul of Vedanta. Dualists naturally tend to become intolerant, to think theirs as the only way. The Vaishnavas in India, who are dualists, are a most intolerant sect. ”

    சுவாமிஜி இதை “Monism, or absolute oneness is the very soul of Vedanta ” என்று இது thaan சரி என்று தானே சொல்லிவிட்டு “Dualists naturally tend to become intolerant” என்று உடனே சொல்வது எப்படி இருக்கிறது?

    இன்றைய காலகட்டத்தில் (அன்றைக்கும் கூட) இது தேயவயர்றது என்பதே நிதர்சன உண்மை.

    சுவாமிஜியின் மற்ற எண்ணங்கள் நிறை வேற வேண்டுமென்றால் இது போன்ற பேச்சுக்களையும், அதை பரப்புவதையும் நாம் தவிர்க்க வேண்டும்

  11. பொறுமையான மற்றும் ஆழ்ந்த விளக்கத்திற்கு நன்றி ஸ்ரீமான் ஜடாயு. பின்னும் சில எண்ணங்கள்.

    பூஜ்ய ஸ்வாமிஜி விவேகானந்த மஹராஜ் அவர்களது கருத்து பின்னொரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்ட கருத்து; அதை இக்காலக் கண்ணாடி கொண்டு புரிந்து கொள்ளல் தவறு என்பது சரிதான் ஆனால் மற்றைய அருளாளர்கள் கருத்து என்றால் ஐம்பது நூறு வருஷம் முன்பு சொல்லிய கருத்துக்களைக் கூட இன்றைய காலக்கண்ணாடி அணிந்து மட்டுமே பார்ப்போம் என்ற நிலையையும் நாம் தவிர்க்க முயலலாமே.

    எனக்கு அரியும் சிவனும் ஒண்ணு தான்.

    ஆனால் அரியாதவன் வாயிலே மண்ணு என்று அறவே சொல்ல மாட்டேன். அரி யாதவன் வாயிலே மண்ணு என்று வேணுமானால் சொல்லிக்கொள்வேன். அனன்ய சிவ பக்தர்கள் மற்றும் விஷ்ணு பக்தர்களின் ஏகாக்ரதையை( புறந்தொழாமையை) நான் குணமாகத் தான் பார்க்கிறேன். போற்றுகிறேன். தோஷமாக அல்ல.

    வீர சைவர்கள் மற்றும் தீர வைஷ்ணவர்களிடையே நமது தளத்தில் சில சமயம் கருத்து மாறுபாடுகள் எழுவதுண்டு. அப்போதெல்லாம் வீர சைவம் மற்றும் தீர வைஷ்ணவம் இரண்டும் தவறான போக்குகள் என பல அன்பர்கள் சொல்வதை பார்த்திருக்கிறேன். அது தவறான நிலைப்பாடு என்பதை அங்கெல்லாம் பதிவும் செய்துள்ளேன். மறுபடியும் பதிவு செய்கிறேன். எப்படி வேதாந்தம் அல்லது நவீன வேதாந்தம் என்பது பாரத தர்சனங்களில் முக்யமான அங்கமோ அதே போல் வீரசைவம் மற்றும் தீர வைஷ்ணவம் இரண்டும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டிய மிக முக்யமான அங்கங்கள். உள்ளது உள்ள படி.

    ஏகாக்ரதை (புறந்தொழாமை) = சகிப்பின்மை என்பது சரியல்ல என்பது என் புரிதல்.

    விவேக சூடாமணியில் ஆசார்ய சங்கரர் யாக யக்ஞாதிகளும் மற்றும் பூஜைகளும் முக்தி நல்கத் தக்கவையல்ல என்று சொல்கிறார். முக்தி என்பது அத்வைத வேதாந்திகளின் மற்றும் அன்ய வேதாந்திகளின் பரிபாஷையில் வெவ்வேறானவை. ஆயினும் சிஷ்டர்கள் யாருமே க்ரியைகளையும் பூஜைகளையும் தான் தோன்றித்தனமாக விட்டொழிக்கச் சொல்வதில்லை.

    \\\\சோதிடம் மீதான அதீத மூடநம்பிக்கைகள், குருட்டுத் தனமான சடங்குகள், உள்ளார்ந்த பக்தி உணர்வின்றி பகட்டும் போலித்தனமும் நிறைந்த பூஜைகள் \\\\

    மாற்றப்படவேண்டியவை தான். ஆனால் எது குருட்டுத்தனமான சடங்கு எது போலியான பூஜை என்பதை அவரவர் அலகீடுகளின் துலக்க முனைவதில் “throw the baby out with the bathwater” என்ற படிக்கு நிகழும் சாத்யம் உள்ளது என்பதையும் எண்ணிப்பார்க்கிறேன். சடங்கு மற்றும் பூஜை முறைகளை சடங்காளர்கள் மற்றும் சிவ, விஷ்ணு, சாக்த பூஜா துரந்தரர்கள் மாற்ற வல்லவர்கள். உதாரணம் விஷ்ணு ஆலயங்களில் பூஜா பத்ததிகளில் “ஹரி பக்தி விலாஸம்” போன்ற க்ரந்தங்களால் மாற்றம் கொணர்ந்த ஸ்ரீ ஸனாதன கோஸ்வாமி அவர்கள். அவர் சிவ பூஜையைப் பற்றியோ சக்தி பூஜையைப் பற்றியோ பேசவில்லை. அதே சமயம் பாஞ்சராத்ர மற்றும் வைகானஸ ஆகமோக்த ஆலயங்களில் அவரது வழிமுறைகளை பின்பற்றவும் இல்லை.

    ஆயினும் சடங்குகளாகட்டும் பூஜைகளாகட்டும் “survival of the fittest” என்ற படிக்கு தொடரவே செய்கின்றன என்பது மறுக்க முடியாத யதார்த்தம். அத்வைதாசார்யர், க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு போன்ற பெரியோர் கௌட தேசத்தில்(வங்காளம், ஒடிஸ்ஸா இத்யாதி ப்ரதேசங்கள்) வைஷ்ணவ ப்ரசாரம் செய்த பின்பு சமூஹத்தில் மிகப்பலபேர் பஞ்ச மகர யுக்த வாமாசார வழிபாடுகளில் இருந்து விலகினர். ஆயினும் கூட இன்னமும் முழு ஹிந்துஸ்தானத்தைப் பார்க்குங்கால் கௌடதேசத்தில் தான் மிக அதிக ம்ருகபலி மற்றும் வாமாசார வழிபாடு உள்ளது என்பது வெள்ளிடை மலை. காரணம் ஜீவகாருண்யம் என்பது ஹிந்து மதத்தில் எந்தளவுக்கு ஏற்கபட்டுள்ளதோ அதே அளவு வழிபாட்டுக்காகவும் மற்றும் உண்பதற்காகவும் ம்ருகபலி என்பது அறவே நிஷேதிக்கவும் பட்டதில்லை ( ஹிந்து மதம் ஒற்றை புஸ்தகத்தில் அடங்கும் சமாசாரம் இல்லையே) என்பதும் மறுக்க இயலா உண்மை.

    ஸ்ரீமான் ஜடாயு, whatever the source, presentation of certain facts in a certain manner is distasteful (that includes me too)

    \\\\\\தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாக எண்ணிக் கொள்ளும் மடாதிபதிகள்\\\\\மற்றபடி அத்வைதம் என்பது சர்க்கரைப் பொங்கலை விழுங்கி விட்டு புளிச்ச ஏப்பத்துடன் கொட்டகையில் உட்கார்ந்து கதைக்கும் வறட்டுப் பேச்சாகவும், (elitism-vs-animal-bali-a-short-story)\\\\

    இடக்கு மடக்காக பேசும் / நிறைவான தத்துவ விளக்கம் அளிக்க இயலா காஷாயம் தரித்த சில யதிகளை / நபர்களை புறக்கணிக்க அறைகூவல் விடுதல் சரிதான். தொந்தி வளர்வது, புளிச்சே ஏப்பம், சர்க்கரைப் பொங்கல் – இத்யாதி இத்யாதி – என்னைப்பொருத்தவரை புறந்தள்ளப்பட வேண்டிய விஷயங்கள். யார் என்ன சொன்னார்கள்; ஏற்கத்தகுந்தவை எவை மறுக்கத் தகுந்தவை எவை என்பது – என்பதே – நோக்கத் தகுந்தது. Negative description of physical anatomy of a human being may be helpful in giving a bad impression about a person but such descriptions are not required for a matured – point oriented – effective – writer to put forth his points strongly.

    ஜடபரதரையே கூட போட்டுத் தள்ளியது தானே சமூஹம். கபிலாஸ்ரமத்துக்குப் போய் ஆத்ம ஞானம் பெற விழைந்த ரஹூகணனும் ஜடபரதரின் வலிவான உடலைப் பார்த்து மதிமயங்கினான் என்பது நினைவுக்கு வருகிறது.

    உன்மத்த ஜட பதிர மூக இதி அபிபாஷ்யமாண: (பைத்தியம், மந்தம், செவிடு,ஊமை என்றெல்லாம் அழைக்கப்பட்டார்)

    வ்ருஷ இவ அனவ்ருதாங்க: பீன: ஸம்ஹனானங்க: ( சண்டிமாடு போன்று திற்ந்தமேனிக்கு த்ருடகாத்ரமான உடம்பு) என்று பார்க்கப்பட்டார்

    \\\\\அறிவியல் உண்மைகளுக்கும், ஒழுக்க விதிகளுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது (science deals with truths that are morally neutral). ஐன்ஸ்டைன் ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்ந்தார் என்று தீர்ப்பளிக்கப் பட்டு விட்டாலும், அவரது அறிவியல் கோட்பாடுகள் பொய்யாகி விடாது.\\\\\ஆன்மிக தொழில்நுட்பங்கள் அபோதபூர்வமானவை (objective). யார் வேண்டுமானாலும் அவற்றின் மூலம் ஆன்மிக சக்திகளைக் கையாளலாம். ஒழுக்கம் தன்னளவிலேயே அதிமுக்கியமானது. சித்திகளை அடைவதற்காக அல்ல, ஆனால் தெய்வத்துடன் நேர்மறையான உறவை நிலைத்திருக்கச் செய்வதற்காக.(what-should-nithyananda-do-now-rajiv-malhotra-1)\\\\\\\

    Fracis Cloony – ஆகவே இருக்கட்டுமே. ஒட்டு மொத்தமாக ஒரு நபர் க்றைஸ்தவ மதமாற்றத்துக்காகத் தான் ஹிந்து மத நூற்களை புரட்டு செய்து திரித்து எழுதுகிறார் என்று குற்றம் சாட்டுவது வேறு. அது விரல் சுட்டும் வேலையாக மட்டும் பார்க்கப்படும். அதே, எழுதிய விஷயங்களில் உள்ள ஓட்டைகளை பிறழ்தல்களை பட்டியலிட்டு மதமாற்ற மிஷநரிகளின் முகத்திறையை கிழிப்பது வேறு. அது கருத்து மறுப்பு சார்ந்த மதிப்பான விஷயமாக அவதானிக்கப்படும். அதே சமயம் மிஷநரியாகவே ஆனாலும் இருக்கட்டுமே சரியான விஷயங்களை க்ளூனியே சொன்னாலும் தவறாகவும் ஆகாதே.

    பார்த்து பங்க்சர் செய்தால் மிகப்பெரிய நீர்க்குமிழிகள் கூட க்ஷணப்பொழுதில் காணாமற் போகும். தொந்தி தொப்பை புளிச்ச ஏப்பம் இத்யாதிகளுக்கெல்லாம் அவசியமே இராது.

  12. அன்புள்ள சாரங், கிருஷ்ணகுருமார்,

    உங்களைப் பொறுத்த வரை மரபு/சம்பிரதாயம் மீதான சிறு விமர்சனத்தைக் கூட தாங்கிக் கொள்ளாத, அல்லது விமர்சிக்கப் பட்ட விஷயத்தை நியாயப் படுத்திப் பேசும் போக்கினைக் காண்கிறேன். இத்தனை வாரங்களாக வந்து கொண்டிருக்கும் இந்தத் தொடரில் உள்ள சுவாமிஜியின் 2-3 வாக்கியங்களை வைத்து இவ்வளவு தர்க்கம் அவசியமற்றது. உங்களுக்கு அந்த வாசகங்கள் ஏதோ ஒரு வகையில் உவப்பளிக்கவில்லை என்பதால், அதைப் “பரப்புவது அவசியமில்லை” என்று ஒருபக்கம் சொல்லி விட்டு, மீண்டும் அதையே பன்னிப் பன்னி விவாதிக்கிறீர்கள்! ஏக்நாத்ஜியின் தொகுப்பு அப்படியே புத்தகத்தில் உள்ளபடி பக்கத்துக்குப் பக்கம் இங்கு வெளியிடப் படுகிறது. இதில் தஹி “ஆசிரியர் குழு”வின் திரிசமன் எல்லாம் எதுவும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

    சுவாமிஜியை விட விசாலமாகவும், பரந்து பட்ட அளவிலும் இந்து மதத்தின் எல்லா தத்துவ, சமயப் பிரிவுகளையும் அரவணைத்து, ஏற்றுக் கொண்ட இன்னொரு நவீன இந்து ஆன்மீக ஆசாரியாரை முதலில் நீங்கள் காட்டுங்கள். பிறகு நாம் பேசலாம். சிகோகோ சர்வமத சபையில் எழுந்து நின்று “ஒவ்வொரு சமயப் பிரிவையும் சார்ந்த ஒவ்வொரு இந்துவின் சார்பாகவும், உலகின் மிகப் பழமை வாய்ந்த ரிஷிகளின் சார்பாகவும் நின்று பேசுகிறேன்” என்று ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துடனும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவர் சுவாமிஜி, நவீன இந்து அடையாளம் அதிலிருந்தே உருவாகி வந்தது.

    சார்ங், அத்வைதத்தின் மேன்மை பேசும் மேற்கோள் ஒன்றை நீங்கள் அளித்தீர்கள் அது ஒரு குறிப்பிட்ட உரையின் பகுதியாக வருவது. . தத்துவ அளவில் த்வைதத்திலிருந்து அத்வைதத்திற்கு செல்வதை ஒரு வித “பரிணாம வளர்ச்சியாக” அவர் கருதினார். ஆனால் சுவாமிஜி த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவப் பிரிவுகளை ஒருபோதும் மறுதலிக்கவில்லை, நிராகரிக்கவில்லை.. . நவீன காலகட்டம் என்ற Vantage pointல் நின்று கொண்டு அவர் இந்த மூன்று தத்துவப் பிரிவுகளையும் பார்க்கிறார். ஒவ்வொரு வேதாந்த பிரிவினரும் தங்களுக்கு உவப்பில்லாத உபநிஷத பகுதிகளை வலிந்து ஒட்டியும் வெட்டியும் திரித்தும் பொருள் கொள்வதையும் அது செயற்கையான தத்துவ சுவர்களை உண்டாக்குகிறது என்பதையும் சுவாமிஜி வேதாந்தம் குறித்த உரைகளில் கூறியுள்ளார். இந்த தத்துவப் பிரிவுகள் அனைத்திற்குமான வேர்களும் உபநிஷதங்களில் உள்ளது என்பதே அவரது கொள்கை.. நடைமுறை அளவிலும் கூட, இன்றூ சங்கர, ராமானுஜ, மத்வ ஜயந்திகள் மூன்றையும் கொண்டாடும் இந்து மடாலயம் என்றால் அது ஸ்ரீராமகிருஷ்ண மடம் மட்டும் தான். மூன்றூ ஆசாரியர்களையும் தத்துவப் பிரிவுகளையும் குறித்த நூல்களை வெளியிட்டுருப்பதும் அந்த மடம் தான் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

    சுவாமிஜி பிரகடனம் செய்த வேதாந்தம் என்பது இந்து மதத்துக்குள் இன்னொரு சமயப் பிரிவு (sect) அல்ல. வேதாந்தத்தின் தத்துவ செழுமை அனைத்தையும் திரட்டி அவற்றை சமன்வயப் படுத்தி (harmonizing) நவீன உலகிற்கும், மானுடத்தின் ஒட்டுமொத்த மறூமலர்ச்சிக்குமான திறவுகோலாக முன்வைத்ததே அவரது பங்களிப்பு. கீதாசாரியனான ஸ்ரீகிருஷ்ணனும், ஆதி சங்கரரும் ஆற்றிய அதே பணியைத் தான் நவீன காலகட்டத்தில் ஸ்ரீராமகிருஷ்ண-விவேகானந்த இயக்கம் ஆற்றியது. எனவே சுவாமிஜியின் ஒற்றைவரி மேற்கோள்களை மேதாவித்தனமாக கட்டுடைத்து அவருக்கு ஒரு sectarian முத்திரை அளிப்பது சரியானதும் அல்ல, நன்மை பயக்கக் கூடியதும் அல்ல.

  13. // சுவாமிஜியின் இந்த மற்றும் சில வைணவ ஏச்சுக்களால் தான் இன்றைக்கும் கூட பல வைஷ்ணவர்கள் சுவாமிஜி என்றாலே ஓடுகிறார்கள். இது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.//

    சுவாமிஜி குறித்த எதிர்மறை பிரசாரம் சில குறுமதி கொண்ட வைணவ அடிப்படைவாதிகளால் அவர்களது குறுங்குழுக்களுக்குள் செய்யப் படுகிறது, விசால மனம் கொண்ட இந்து என்று நான் எண்ணியிருந்த சாரங்கும் அதில் ஏதோ உண்மை இருப்பது போல இங்கு வந்து கூறுவது கடும் ஏமாற்றமளிக்கீறது. நல்லவேளை, பெரும்பான்மையான சைவ, வைணவ மற்றும் எல்லா சமயப் பிரிவுகளீன் இந்துக்களும் இந்தக் குறூங்குழுக்களின் கொள்கைகளை முழுமையாக மதிப்பதில்லை என்பது ஒரு ஆறுதல். ஸ்ரீவைஷ்ணவத்தில் தோய்ந்த ஸ்ரீரங்கம் மோகனரங்கன் போன்ற அறிஞர்கள் சுவாமிஜி குறித்து எழுதியிருப்பதை சாரங் படித்தாரா தெரியவில்லை.

    சுவாமிஜி வாழ்ந்த காலத்தில் அளசிங்கப் பெருமாள் போன்ற தீவிர வைணவர்கள் அவரது சீடராக இருந்தார்கள் என்பதை ஏன் மறந்து போகிறீர்கள் சாரங்? சுவாமி பிரம்மானந்தர் உருவாக்கிய ஏகாதசி தோறும் ராம நாம கீர்த்தனம் செய்ய வேண்டும் என்ற மரபு இன்று வரை எல்லா ரா.கி மடங்களிலும் உள்ளது, இது போன்று சிவ/சக்தி கீர்த்தனங்கள் கூட மாதாந்திரமாக செய்யப் படுவதில்லை. குருதேவரின் பெயரிலேயே ஸ்ரீராமனும் கிருஷ்ணனும் தானே இருக்கிறார்கள்? அத்தகைய ஒரு இயக்கத்தை நிறுவிய சுவாமிஜி, “வைணவ ஏச்சுகளில்” ஈடுபடுவதாகக் கூறூகிறீர்களே? எவ்வளவு மோசமான, பொய்யான அவதூறு இது? சுவாமிஜி வைணவத்தின் சில அம்சங்களை மட்டுமல்ல, வாமாசாரத்தையும் கஜுராஹோ சிற்பங்களையும் அதை விட மிகக் கடும் மொழிகளில் கண்டித்துள்ளார் என்பதைக் கவனித்தீர்களா? உடனே சாக்தத்தையும் சைவத்தையும் ஏசுகிறார் என்று சொல்லி விடலாமா? இந்து மனம் பலகீனமடைந்து நரம்பு தளர்ந்து பேடியைப் போல ஆகி விட்டிருந்த நேரத்தில் அதை மேலும் பலவீனம் நோக்கித் தள்ளக் கூடிய எல்லா மென் அம்சங்களையும் அவர் கண்டிக்கிறார். “யுக தர்மம்” என்ற வகையில் அது மிகச் சரி. ஆனால் வைஷ்ணவத்தின் தூய அன்பை அவர் எங்காவது எதிர்மறையாகப் பேசியுள்ளாரா? ஸ்ரீகிருஷ்ணனின் மகோன்னதத்தையும், கோபிகைகளின் பேரன்பையும், மீராவையும் சைதன்யரையும் பற்றி அவர் கூறியுள்ள உணர்ச்சி பொங்கும் வரிகளைப் படித்தவர் யாரேனும் இப்படி சொல்லத் துணிவாரா?

    சுவாமிஜியை “பல வைணவர்களுக்கு” பிடிப்பதில்லை என்று பொத்தாம்பொதுவாக இங்கு வந்து கூறுகிறீர்கள். நீங்களோ அல்லது நான் மேற்சொன்ன குறுங்குழுக்களோ வைணவத்தின் பிரதிநிதி என்று நான் ஏன் கொள்ள வேண்டும்? இந்த ரீதியில் “வைணவர்களுக்கு” அந்த வட்டத்திற்கு வெளீயே யாரைத் தான் பிடிக்கும்? ஸ்ரீஅரவிந்தர், பாரதி, காந்தி, சாவர்க்கர் என்று எல்லாரையுமே கண்டல்லவா நீங்கள் ஓட வேண்டியிருக்கும் ! தனது சம்பிரதாயம் மீதான மிகச் சிறு விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொள்ளாத மனப்பாங்கு ஆரோக்கியமானதா – அது கருத்தளவிலான தாலிபானியம்.

    ஆனால் யதார்த்தம் வேறு சாரங் அவர்களே. எனது நண்பர் வட்டங்களிலேயே வசுவாமிஜியை தெய்வமாக வணங்க கூடிய தீவிரமான இந்து இய்க்கத் தலைவர்கள், சமூகத் தொண்டர்களாக இருக்கீற வைணவர்கள் உள்ளனர். ராமானுஜரின் மானுட நேசத்தை விவேகானந்தரின் சமூகசேவையில் கண்டுணர்ந்த அனுபூதிமான்கள். அவர்களே உண்மை வைணவர்கள். என்றென்றும் நான் தாள்பணிந்து வணங்குதற்குரியவர்கள் அவர்களே.

  14. Dear Jatayu,
    All said and done, Vivekananda is an Advaita Sanyasi and it is idle to expect him to uphold Dvaita and Vishishtadvaita. He still remains the greatest HIndu reformer after Gandhi because he was among the first Hindu religious personalities who not only spoke about service to the suffering people but worked towards achieving it. Though his primary task was to advocate Vedanta of the advaita variety, he told our countrymen not to confine themselves to inward-looking activities. He asked whoever cared to listen to him to go out and solve the ordinary problems of the people.

    This is what he says and he is among the first Sanyasis to say so:
    “It is we who are responsible for all our degradation. Our aristocratic ancestors went on treading the common masses of our country underfoot, till they became helpless, till under this torment the poor people nearly forgot that they were human beings. They have been compelled to be merely hewers of wood and drawers of water for centuries. Feel, therefore, my would-be reformers, my would-be patriots! Do you feel? Do you feel that millions and millions of the descendants of gods and of sages have become next door neighbours to brutes? Do you feel that millions are starving today, and millions have been starving for ages? Do you feel that ignorance has come over the land as a dark cloud? Does it make you restless? Does it make you sleepless?”
    Thus a follower of Ramanuja or Madhvacharya may not accept Vivekananda as his spiritual leader but he or she should have no hesitation in accepting him as one of the greatest builders of Modern India. Even Marxists are including him in their pantheon!
    Best,
    P A Krishnan

  15. பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு, ஆம், நீங்கள் சொல்வது சமநிலையான, ஏற்கும்படியான கருத்து. விவேகானந்தரை ஆன்மீக குருவாக ஏற்பதில் தீவிர வைஷ்ணவர்கள் (மற்றும் தீவிர சைவர்கள் கூட) தயக்கம் காட்டலாம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர் வைணவத்தை அவதூறு செய்தார் என்று கருத முகாந்திரம் இல்லை.

    நீங்கள் இந்த இணையதளத்தையும், மறுமொழிகளையும் படிக்கிறீர்கள் என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

  16. அன்புள்ள ஸ்ரீமான் ஜடாயு,

    நீங்கள் இந்த விவாதத்தில் பல விஷயங்களைச் சரியாக அணுகவில்லை.

    விஷ்ணு வழிபாட்டை மடங்களில் நடத்துவது, ஏகாதசி அன்று ராம நாம கீர்த்தனைகள் செய்வது, மும்மத ஆச்சாரியார்களையும் பூசிப்பது இது ஒரு பக்கம். இதையெல்லாம் செய்பவருக்கு வைஷ்ணவத்தின் மீது சரியான புரிதலே இருக்கும் என்று கூற இயலாது.

    அதே சமயம் ஒரு தத்துவ தரிசனத்தையே (த்வைதம்/சைவம்/வைணவம்) ‘intolerant sect’ என்ற முத்திரை குத்துவதும், வைணவமே பௌத்த மதத்தின் எச்சம் என்றெல்லாம் கூறுவதும் இன்னொரு பக்கம். இதனால் விளையும் தவறான புரிதல்கள் சில:

    (1) “இன்றைய வைஷ்ணவத்தின் (முக்கியமாக, பல்லாயிரக்கணக்கான வைஷ்ணவர்களின் பேரபிமானத்திற்குப் பாத்திரமாகிய உபன்யாசகர்கள் மற்றும் மதத் தலைவர்களின்) நிலைப்பாடு பெரும்பாலும் அதன் ஸ்தாபகர்களாகிய ராமானுஜர், மத்வர், சைதன்யர் முதலானோரின் பேரைக் கெடுப்பதாகத் தான் உள்ளது. இந்தக் கூட்டங்கள் இவ்வாச்சாரியார்களைச் சொந்தம் கொண்டாடுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.”

    (2) ஆழ்வார்களின் உள்ளத்தைப் புரிந்துக் கொள்ளாமல் “அனன்ய பக்தி தாலிபானியத்திற்குச் சமம்.”. (இது இணையத்தில் (குறிப்பாகத் தமிழில்) ரவுண்டு அடித்துக்கொண்டு வந்துக்கொண்டே இருக்கும். “அவர் சடாரியை வாங்கிக் கொள்பவர்கள், அவர் சொன்னதை மட்டும் தலையில் வாங்கிக் கொள்ளவில்லை போலும்!” போன்ற நுனிப்புல் அறிவாளர்கள் கூறும் கிண்டலுக்கும் வழி வகுக்கும்.)

    இதைச் செய்வதெல்லாம் விவேகானந்தர் மீது பேரபிமானம் வைத்திருக்கும் இன்றைய தலைமுறை. இந்த அவலத்தை எல்லாம் கேட்டுச் சகிக்க ஒண்ணாத ஏகாந்த வைஷ்ணவ உள்ளங்கள் விலகுவதில் என்ன தவறு? இவர்களைப் போய் ‘ சில குறுமதி கொண்ட வைணவ அடிப்படை வாதிகள்’ என்று முத்திரை குத்துகிறீர்கள்! இதனால் இந்த உள்ளங்கள் மேலும் மேலும் விலகியே இருக்கும். நஷ்டப்படுவது இந்துத்துவ இயக்கம் தான்.

    ‘சம்பிரதாயங்களைப் பற்றிய சிறு விமர்சனத்தைக் கூட உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை’ என்று வருந்துகிறீர்கள். பிறகு ஏன் விவேகானந்தரைப் பற்றிய சிறு விமர்சனத்தை மட்டும் உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை? ஏன், அவர் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? மாற்றுக்கருத்து உள்ளவர்களை ‘சிற்றறிவு அடிப்படைவாதிகள்’ என்று எப்படி வேண்டுமானாலும் ஏசலாமா?

    ‘intolerant sect’ என்பது ‘சிறு விமர்சனம்’ தானா?

    அதென்ன தீவிர வைஷ்ணவம், தீவிரமில்லாத வைஷ்ணவம்? வைஷ்ணவம் வைஷ்ணவம் தான். ஒருவன் ஏகாந்த வைஷ்ணவ பக்தியையும் நாராயண சர்வோத்க்ருஷ்டத்தையும் ஏற்றால் மாத்திரம் வைஷ்ணவன், இல்லை என்றால் வைஷ்ணவன் அல்ல.

    அளசிங்கப் பெருமாளோ, ஸ்ரீரங்கம் மோகனரங்கனோ வைஷ்ணவத்தை எந்த அளவிற்குக் கடைபிடித்தார்கள்/கடைபிடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் ராமானுஜரின் ஏகாந்த வைஷ்ணவ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தையே வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர் என்றால் கண்டிப்பாக விவேகானந்தரது வைஷ்ணவம் பற்றிய புரிதலை நிராகரித்திருபர். அதைத் தான் சாரங்கும் நிராகரிக்கிறார்.

    இன்னும் ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியது-

    // இதில் தஹி “ஆசிரியர் குழு”வின் திரிசமன் எல்லாம் எதுவும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். //

    இது தஹி ஆசிரியர் குழு செய்யவில்லை என்றாலும்,

    “The Vaishnavas in India, who are dualists, are a most intolerant sect. Among the Shaivas, another dualistic sect, the story is told of a devotee by the name of Ghantâkarna” — https://en.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_7/Inspired_Talks/Wednesday,_July_3

    ஆங்கிலத்தில் இப்படியிருக்க, தமிழில் அதெப்படி “துவைதிகளான, பாரத வைஷ்ணவர்கள், சகிப்புத்தன்மையற்ற ஒரு வகுப்பினராவர்” என்று வைஷ்ணவர்கள் பரவலாக சகிப்புத்தன்மையற்றவர்களே நேரும், சைவத்தை பொருத்த வரையில் “சைவர்களில் துவைதக் கிளையில் ஒரு வகுப்பைச் சேர்ந்த” என்று சைவர்களில் சிலரே த்வைதிகள் என்றும், அந்த சில த்வைதிகளில் சிலரே சகிப்புத்தன்மையற்றவர்கள் போலும் மொழிபெயர்த்திருப்பது தகும்? வைஷ்ணவர்களை என்ன சொன்னாலும் பரவாயில்லை, சைவர்களை அப்படிச் சொல்லக் கூடாது என்றா? எனக்கு சிறு ஆர்வமே!

  17. திரு.ஜடாயு அவர்களின் கருத்து ஏற்புடையதே. பாரதத்தில் விவேகானந்தரைபோல் யாரும் பிராமிணரை போற்றி கூறவில்லை. அதேசமயம் அவர்களின் குறைபாடுகளையும் கடுமையாகவே சாடி உள்ளார். பிராமிணர்களை கடுமையாக சாடியதனால்தான் மேலோட்டமாக மற்ற இரு வர்ணத்தவரையும் சாடியுள்ளாரா?!!! இங்கே சில எடுத்துகாட்டுகள் – எனது கேள்வி – அதற்கான வாசகர் விளக்கம் தேவை.
    1. இந்த அக்கினி மந்திரத்தை உழைபாளர் முதல் அனைவருக்கும் கொடுங்கள். இதை நீங்கள் செய்யாவிட்டால் உங்கள் கல்வி நாசமாக போகவேண்டிய கல்விதான். (மற்ற வர்ணத்தவருக்கு அக்னி மந்திரம் தெரியாதா – தெரியாது என்றால் அதை தெரிந்துகொண்டு அவற்றை மற்றவருக்கு போதிப்பதை யார் தடுத்தார்கள்)
    2. அதைப்போல் பிராமிணர்கள் கல்வி அறிவை மற்றவர்களுக்கு போதிப்பதில்லை என்று பல இடங்களில் பலவாரக சாடியுள்ளார். (இப்படி போதிக்கவில்லை என்றால் உருவான 63 நாயன்மார்களில் 90 சதவிகிதம் பிராமிணர் அல்லாத மற்ற வர்ணத்தவர்தாம் அதிகம் – வியாசர், வால்மீகியிலிருந்து நமது வேத, இதிகாச, புரணா, உபநிடங்கள் வரை பெரும் பங்களித்தவர்கள் மற்ற வர்ணத்தவர்கள்தான். இவர்கள் அந்த கல்வி அறிவை மற்றவர்களுக்கு போதிப்பதை யார் தடுத்தார்கள்)
    3. மேலும் அவர் எல்லோரையும் பிராமிணனாக மாற்றுங்கள் அதையும் பிராமிணன்தான் செய்ய வேண்டும் என்கிறார். ( அது ஏன் ? மற்றவர்கள் பிராமிணனாக மாற முதலில் தயாராக உள்ளார்களா ? அவ்வாறென்றால் அதில் அவர்களின் பங்களிப்பே இல்லையா – உண்மையில் நடந்தது என்ன ? – இன்று பிராமிணன் என்பவன் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை – கெடுப்பதற்கு ஒரு தலைமுறை போதும் உருவாக்க பல தலைமுறைகள் ஆகும்)
    4. மாபெரும் சகாப்தத்தையே உருவாக்கியவர்களான சங்கராசாரியாரும் பிறரும் தான் ஜாதிகளை உருவாக்கியவர்கள் என்று ஒரிடத்திலும். சங்கரரின் அறிவு பெரியது ஆனால் அவரது இதயம் அவ்வளவு பரந்ததாக இல்லையோ என்று அஞ்சுகிறேன் என்றும், அடுத்த வரியிலேயே இதற்கு தகுந்த ஆதாரம் இல்லை என்றும் கூறுகிறார்.( இது எந்த அளவு உண்மை – இந்த மேற்கோள்களை பலர் தவறாக உபயோகிக்க தூண்டாதா)
    5. தலையே இல்லை – தலைவலி உள்ளது என்று அத்தகைய வர்ணாசிரமத்தை இங்கு உருவாக்குவதா உங்கள் விருப்பம். நான் இங்கே சூத்திரர்களையும் பிராமிணர்களையும் தான் பார்கிறேன். சத்திரிய, வைசியர் இருந்தால் அவர்கள் எங்கே. அவர்களுக்கு பூணூல் அணிவித்து வேதம் படிக்கவைப்பது பிராமிணர்களின் கடமை. சாஸ்திரபடி சூத்திரர்கள் மட்டுமே வாழும் நாட்டில் பிராமிணர்கள் வாழக்கூடாது. அதனால் எல்லோரையும் சூத்திரர் என்று சொல்லி இங்கே வாழ்வதைவிட உங்களை நீங்களே எரித்துக்கொள்வதே பிராயச்சித்தம் (சத்திரிய, வைசிய அடையாளங்களை துறந்ததற்கு எப்படி பிராமிணன் காரணமாவான் ?)
    6. பண்பாட்டையும் ஆண்மீக கருவூலத்தையும் பூட்டை உடைத்து அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். பிராமிணனே இதை முதலில் செய்யவேண்டும். பிராமிணன் செலுத்திய விஷத்தை பிராமின்னே உறிஞ்சவேண்டும் ( கடுமையான தாக்குதல் – எப்படி பார்பானையும் பாம்மையும் கண்டால் பாம்பை விடுத்து முதலில் பார்பானை அடி என்று சொன்ன சமூகத்திற்கா பகிர்தளிக்க வேண்டும்)

  18. பிராமிணர்கள் பல தவறுகளை செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதற்காக முன்னோர்கள் செய்த தவற்றிற்கு இன்றைய தலைமுறையை பழிகூறுவதும் ஒதுக்குவதும் எந்த விதத்தில் ஞாயம். எது எப்படியோ என்றுமே பிராமிணன் தன்னை சுய பரிசோதனைசெய்து கொள்வதிலும் தன்னை மாற்றிக் கொள்வதிலும் முனைபாகவே இருக்கிறார்கள். ஆனால் மற்ற வர்ணத்தாரிடம் இந்த மாற்றங்கள் மிகவும் குறைவாக உள்ளது. அவர்களும் மாறினால்தான் ஹிந்து சமூகம் நிமிர்ந்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் முன் உதாரணமாக திகழ்ந்தவர்தான் விவேகானந்தர்.
    பாரதி விவேகானந்தர் காந்தி அம்பேத்கர் இவர்களது கொள்கைகள் தான் இன்று நாட்டிற்கு தேவை. இவர்களிடமும் சில குறைகள் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இதில் முன்னவர் இருவறது குறைகளினால் சமூகத்தில் எந்த தாக்கமும் இல்லை என்பது உருதி(negative impact ). ஆனால் பின்னவர் இருவரில் ஒருவர் தேவையைமீறிய பாசத்தை பொழிந்து இஸ்லாமியர்களை கட்டி தழுவியவர் அடுத்தவர் தேவையைமீறிய குற்றங்களை ஹிந்துமதத்தில் மேல் சுமத்தி எட்டி உதைத்தவர் என்பதில் ஏதேனும் சந்தேகம் உண்டோ?

  19. கண்டாகர்ணனைப் பற்றி இணையத்தில் தேடிய போது அவனது அனன்ய பக்தி கடவுள் தரிசனம் மற்றும் உண்மை உணர்தலில் முடிகிறது . அவன் வேறு யார் காதிலும் மணி கட்டவில்லை . கழுத்தை வெட்டவில்லை. மற்றவர்கள் நம்பிக்கையை குழப்ப முயலவும் இல்லை.
    ஏகாக்ரஹா சிந்தையோடு மறந்தும் புறன்தொழாமை என்ற கோட்பாட்டை கடைப்பிடித்துள்ளான் . அதில் தவறேதும் இல்லை. இது போன்ற கதைகள் நிறைய சொல்லப்படுகின்றன.

    பொற்கொல்லன் ஒருவன் இதே போல் சிவ பக்தன், விட்டலர் இடுப்பிற்கு நகை செய்ய அவன் கண்களைக்கட்டி கொண்டு அவரை அளவெடுக்க, [ அவன் அறிந்த வரை தன மனதை ஒரு தெய்வ வடிவத்தில் ஒருமுகமாக்கவே இப்படி செய்துள்ளான். ] அவனுக்கு மான் தோல் உடுத்த இடுப்பு என்று தோன்றியிருக்கிறது. கண் திறந்தாலோ விட்டலர்.

    இந்த லீலையை நினைத்தாலே இனிக்கிறது. அவன் அன்பு எத்தனை உயர்ந்ததாக இருந்தால் பெருமான் அவனுடன் விளையாடியிருப்பார்?

    [என் சிற்றறிவிற்கு எட்டிய] வரை அத்வைதம் இறுதி லட்சியம் என்பது என் நம்பிக்கை. ஆனால் த்வைதப்பரபஞ்சத்தில் த்வைதம் மூலமாகவே தானே அங்கே செல்ல முடியும்?

    பரமஹம்சரே சொல்வது போல் மீன் உணவை ஒரு தாய் தனது எல்லா குழந்தைகளுக்கும் ஒரே போல பக்குவம் செய்து தர முடியாது. ஒன்று உயர்ந்தது ஒன்று தாழ்ந்தது என்று நினைக்க வேண்டியதில்லை. அனன்ய பக்தி செய்து உய்யவே சிலர் பிறக்கிறார்கள். அவர்களை நினைத்தால் பொறாமையாக கூட இருக்கிறது.

    இன்றைய இளைஞர்கள் பூஜைகள் , விரதங்கள் தாழ்மையானவை என்று எண்ணுகிறார்கள், நியோ த்யான வகுப்புகள் பல சுவாமிஜியின் உரைகளை இங்கும் அங்கும் உருவி இதை நிறுவ முயல்கின்றன . ஒரு நவீன பெண் குரு பிரார்த்தனை தவறு என்கிறார். கடவுளிடம் சலுகை கேட்ககூடாதாம் . பிஞ்சில் எதுவும் பழுக்க முடியாது. பழுத்தாலும் சாப்பிட முடியாது. இவர்களிடம் யார் சொல்வது?

    ஆனால் சுவாமிஜி பெயர் சொல்லும் மற்றொரு குழு பஜனை ஏற்பாடு செய்திருந்தது. நல்ல முறையில் பஜனை நடந்தது. இப்படியும் நடப்பதுண்டு.

    ரா கி மடம் பெரிய அளவில் சமூக மாற்றங்களை கொண்டு வந்துள்ளதை மறுக்க முடியாது. நான் அறிந்த ஒருவர் வீட்டு சூழ்நிலையில் நாத்திகராக , அதாவது ஹிந்துக்களை திட்டுபவராக ஆகியிருக்க வேண்டியவர்.திருப்பராய்துறை படிப்பு காரணமாக அவர் தெளிவான ஹிந்துவாக இருக்கிறார். சிலர் மதம் மாற சொல்லும் சூழ்நிலையிலும் எனக்கு சிவன் போதும் என்கிறார்.

    அதே நேரம் பாரம்பரிய மடங்களை பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்ய வேண்டியதும் இல்லை, அவர்கள் சமூக சேவை செய்யவில்லை என்று சொல்ல வேண்டியதும் இல்லை.அது நம் பொது நலனுக்கு உகந்தது அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

    இத்தனை வகை மடங்கள் இல்லா விட்டால் நாம் இன்று இங்கே பேசும் நிலையே இருக்காது. இத்தனை மடங்களும் கடந்த ஆயிரம் ஆண்டுகள் என்னென்னவெல்லாம் தாண்டி இன்றும் இருக்கின்றன என்பதை யோசிக்க வேண்டும்.

    சாய்

  20. “சங்கரரின் அறிவு பெரியது ஆனால் அவரது இதயம் அவ்வளவு பரந்ததாக இல்லையோ என்று அஞ்சுகிறேன் என்றும், அடுத்த வரியிலேயே இதற்கு தகுந்த ஆதாரம் இல்லை என்றும் கூறுகிறார்”

    நன்றி. இந்த கருத்தைப்படித்து நானும் பலவாறாக குழம்பி இருக்கிறேன். என் வீட்டு பூஜை அறையைப்போலவே என் இதய அறையிலும் ஹிந்து மத சன்யாசிகள் பலரின் படத்தை பூஜிப்பதால் இவர் சங்கரரை ப்பற்றி ஏன் இப்படி சொல்கிறார் என்று யோசித்திருக்கிறேன். அன்பில்லாதவரா [ சங்கரர்] உருகி உருகி இத்தனை எழுத்துக்களை விட்டு சென்றிருப்பார்?அன்பில்லாமல் அத்வைதம் போதிக்க முடியுமா? ஆரம்ப நிலை சாதகனுக்கு இது போன்ற சந்தேகங்கள் பெருத்த அதிர்ச்சியை தரும்.

    இன்றளவும் எனக்கு சிறு குழப்பம் தான் . ஆனால் சில சமயாம் யோசித்தால் சுவாமிஜி தான் வாழ்ந்த காலத்தை பிரதிபலித்திருக்கிறார் என்றும் தோன்றுகிறது.

    எல்லா சாரியும் [ sorry ] நான் தான் என்று ரேவதி ஒரு படத்தில் சொல்வரே அது போல் அந்த கால கட்டத்தில் வெள்ளைக்காரர்கள் பிரசாரத்தில் எல்லா சாரிக்கும் காரணம் பழமைவாதிகள் தான் என்ற கருத்து ஆழமாக இருந்திருக்கிறது போலும்.

    பல சமூக குழப்பங்களுக்கு காரணம் அதற்கு முந்தய ஆயிரமாண்டு நிலையில்லா திம்மி வாழ்க்கை -அது ஒரு மிக மிக முக்கியமான காரணம். ஏனோ அந்நிலையில் அதை அக்கால சிந்தனை சிம்ஹங்களே சரிவர புரிந்து கொள்ள வில்லை என்று தோன்றுகிறது.விளைவு இன்றைய குழப்பம். மன வேறுபாடுகள்.

    சாய்

  21. ஜடாயு அவர்களே

    ஏன் இவ்வளவு எழுதுகிறீர்கள். நான் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா? சுவாமி ஜீயை பார்த்து ஓடும் வைணவர்களை எனக்கும் தெரியும் அவரை அரவியாநிக்கும் வைணவர்களையும் தெரியும். எல்லா வைணவர்களும் ஓடுகிறார்கள் என்றா எழுதினேன். திரு மோகன ரங்கனின் கட்டுரைகளை படித்திருக்கிறேன்.

    இப்பொழுது இங்கு ஏன் இந்த கட்டுரையை ப்ர்சூரித்தீர்கள் என்றால் உடனே நான் சம்ப்ரதாயவாதி ஆகிவிடுவேனா?

    சுவாமிஜியின் ஒரு கருத்தை ஆக்ஷேபித்ததர்க்கு அதை இங்கே ப்ரசூரித்ததை பற்றி வருந்தியதற்கு எனக்கு ஏன் தனிப்பட்ட முத்திரைகளை சாத்துகிரீர்கள் .

    நாங்களும் சுவாமிஜியின் காரியத்தை தான் தெருத்தெருவாக ஊர் ஊராக அலைந்து செய்து கொண்டிருக்கிறோம். அதற்காக சுவாமிஜியின் இந்த என்னத்தை நான் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் என்ன இருக்கு.

    சுவாமிஜியின் இந்த வரிகளால் மற்றம் வருமா. அவர் அத்வைதத்தை தூக்கி நிறுத்து த்வைதத்தை மொத்தமாக சாடுகிறார். இது தான் ஏற்புடையதல்ல. அவரது இந்த எண்ணம் அவர் காலத்திற்கும் சரியாக இருந்திருக்காது. இப்பொழுதும் சரியாக இல்லை. இது மட்டுமே என் கருத்து. இதை மட்டும் பாருங்கள். விவாதம் இதை சுற்றி இருக்கட்டும்.

    என்னடுய வருத்தத்தின் சாறாம்சமே இதை ஏன் இப்பொழு கிளறினீர்கள் என்பது தான். இப்பொழுது அதுவும் இந்த வருடத்தில் ஐக்கியம் தானே நமக்கு முக்கியம். இதனால் இப்பொழு எழுச்சி வருமா. இதற்க்கு பதில் வேற ஏதாவது போட்டிருக்கலாமே என்பது தான்.

    இதை படித்து சிலர் நம்மை விட்டு செல்லலாமே என்ற பயம் தான். நம்மை விட்டு ஒருவன் சென்றால் எதிராளியில் ஒருவன் ஜாஸ்தி என்று சுவாமிஜி தானே சொன்னார்.

    பூஜை புனச்காரத்தை இன்று சாடி என்ன பிரயோஜனம். சாடிக் கொண்டே இருந்தால் இருக்கரதுயும் நம்மால் விட்டுருவான். அப்புறம் கன்வர்ஷனுக்கு வசதியா இருக்கும். பூஜை அளவிலாவது ஹிந்துவாக இருக்கிறானே என்று சந்தோஷப்படவேண்டிய நீறமாக ஆகிவிட்டது இன்று. பூஜையுடன் சேர்த்து டேஷ பக்தியை போதிப்பது தானே கடமை. இல்லை அவனை திட்டுவது நமது கடமையா.

    விவேகானண்டார் ஆயிரமாயிரம் எழுச்சி வசனங்களை சொல்லி இருக்கிறார். வேதாந்தியாக வாழ்ந்திருக்கிறார். அதற்காக அவர் சொன்ன எல்லாவற்றையும் நாம் இன்று பிரயோகம் செய்யும் பொது கொஞ்சம் பார்த்து தான் செய்ய வேண்டும் ஏன் என்றால் சுவாமி ஜி அப்படி.

    கடைசியாக சுவாமி ஜி வைஷ்ணவத்தை திட்டியதால் நான் வருத்தப்படவில்லை. அது அவர் இஷ்டம். அதை இப்பொழு ஏன் ஊதுகிறீர்கள் என்பது தான் எனது வருத்தம். இதை ப்ரசூரிப்பது உங்கள் இஷ்டம் வருத்தமும் கவலையும் பயமும் மட்டுமே எனது. நாங்களும் சுவாமிஜியை முன்னிட்டு இந்த வருடம் காரியத்தில் இறங்குங்கள் என்று சில வைஷ்ணவர்களையும் சேர்த்துள்ளோம், அவர்கள் ஒருவேளை இந்த கட்டுரையை படித்தால் ஆஹா என்று புலஹாஹிடம் அடைவார்களா? நீங்கள் பக்கம் பக்கமாக விளக்க உரை எழுதினாலும் ப்ராவ்ய்ஜனம் இல்லை. அவர்கள் ஓடுவார்கள், ஓடினவர்கள் ஓடினவர்கள் தான். இழப்பு நமக்கும் தான். அவர்கள் மேல் உண்மையான அன்பு நமக்கும் இருக்குமானால் அவன் ஓடட்டுமே என்று நினைக்க மாட்டோம், எப்படியாவது அவனையும் சேர்த்துக் கொள்ளவே நினைப்போம் இல்லையா

    இந்த வரிகள் இப்பொழுது நீங்கள் நிச்சயமாக பாடிகொண்டிருபீர்கள் உண்மையான பரவசத்திளிருப்பெர்கள் பலரை போல.

    தமோ மயம் ஜன ஜீவனமதுனா நிஷ்க்ரியதாலஸ்ய க்ரஸ்தம்
    ரஜோமயமிதம் கிம் வா பஹுதா க்ரோத மோத லோபாபி ஹதம்
    பக்தி ஞான கர்மநிஷ்டானை பவது சாத்விகோ த்யோதமயம்.
    சதா விவேகானந்தமயம்……
    பஜந்தி யே தே பஜந்து தேவம் ஸ்வ ஸ்வ நிஷ்டயா விமத்சரம்

    இப்போ கோபம் வேஸ்டுன்னு நான் மட்டும் சொல்லவில்லை….

    மற்றும் ஒருமுறை கடைசியாக இந்த கட்டுரை இப்பொழுது தமிழ் ஹிந்துவில் அவசியமில்லாதது, அகாலமானது.
    உங்கள் இஷ்டம்…..

    சதா விவேகானதமயம் …

  22. //
    பாரதி விவேகானந்தர் காந்தி அம்பேத்கர் இவர்களது கொள்கைகள் தான் இன்று நாட்டிற்கு தேவை. இவர்களிடமும் சில குறைகள் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இதில் முன்னவர் இருவறது குறைகளினால் சமூகத்தில் எந்த தாக்கமும் இல்லை என்பது உருதி(negative impact ). ஆனால் பின்னவர் இருவரில் ஒருவர் தேவையைமீறிய பாசத்தை பொழிந்து இஸ்லாமியர்களை கட்டி தழுவியவர் அடுத்தவர் தேவையைமீறிய குற்றங்களை ஹிந்துமதத்தில் மேல் சுமத்தி எட்டி உதைத்தவர் என்பதில் ஏதேனும் சந்தேகம் உண்டோ?
    //

    மிக சரி. இதையே தான் எங்களது வாதமும். இப்பொழுது தேவை இல்லாமல் இந்த கட்டுரை மூலம் negative impact கொண்டு வர வேண்டாமே என்பது தான் வேண்டுகோள்.

  23. \\\\\ மரபு/சம்பிரதாயம் மீதான சிறு விமர்சனத்தைக் கூட தாங்கிக் கொள்ளாத, அல்லது விமர்சிக்கப் பட்ட விஷயத்தை நியாயப் படுத்திப் பேசும் போக்கினைக் காண்கிறேன்.\\\

    க்ஷமிக்கவும் ஸ்ரீ ஜடாயு, என் தெளிவுக்கு எழுதுகிறேன். விவாதத்தை வளர்க்க அல்ல.

    ஸ்தாபகாய ச தர்மஸ்ய சர்வ தர்ம ஸ்வரூபிணே
    அவதார வரிஷ்டாய ராமக்ருஷ்ணாய தே நம:

    என்ற பூஜ்ய ஸ்வாமிஜி அவர்களின் ராம க்ருஷ்ண பரமஹம்சர் மீதான ச்லோகத்தை நெட்டுருப்போட்டுத் தானே வளர்ந்தோம்.

    மானனீய ஸ்ரீ சூரியநாராயண ராவ் ஜீ அவர்கள் நமது தொல் ஹிந்து மரபைப் பற்றிச் சொல்கையில் “சிர புராதன நித்ய நூதன” என்ற சொல்லாடலைச் சொல்வார். நமது தொல் மரபு பாதுகாக்கப்பட வேண்டியது; பேணப்பட வேண்டியது என்று தான் சங்கமும் சங்கத்துக்கு வெளியே உள்ள முன்னோர்களும் சொல்லிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

    விமர்சனத்தைத் தாங்கி உள்வாங்கி அதை சீர்தூக்கி சரி தவறு எது என்பதை பகுத்தாய்ந்து பேசுவதும் மரபே.

    அதனால் தான் பூர்வ மீமாம்சகர்களுக்கும் பௌத்தர்களுக்கும் ந்யாய வாதிகளுக்கும் அத்வைதிகளுக்கும் விசிஷ்டாத்வைதிகளுக்கும் த்வைதிகளுக்கும் இடையே இடையறாது சம்வாதம் நிகழ்ந்து வந்தது. நிகழ்கிறது.

    விமர்சிக்கப்பட்ட விஷயம் எனக்கு சரி என்று படவில்லையெனில் ஏன் சரி என்று படவில்லை என்பதை இயன்ற வரை பண்பான சம்பாஷணம் மூலம் பகிர்ந்து கொள்வதே கருத்துப் பரிவர்த்தனம்.

    விமர்சிக்கப்படும் விஷயத்தை கேழ்வி கேட்காது ஏற்றல் ஆப்ரஹாமியம்.

    \\\\உங்களுக்கு அந்த வாசகங்கள் ஏதோ ஒரு வகையில் உவப்பளிக்கவில்லை என்பதால், அதைப் “பரப்புவது அவசியமில்லை” என்று ஒருபக்கம் சொல்லி விட்டு, மீண்டும் அதையே பன்னிப் பன்னி விவாதிக்கிறீர்கள்! \\\\

    அன்பார்ந்த ஸ்ரீ ஜடாயு, எனக்கு ஏகாக்ரதை அறவே இல்லை. ஆனால் நான் ஏகாக்ரதையை குணமாகப் பார்க்கிறேன் எக்காரணம் கொண்டும் தோஷமாக அல்ல. ஏகாக்ரதை ஆன்மீகத்தில் நன்மை பயக்க வல்லது என பல சான்றோரும் பகிர்ந்துள்ளனர். ஏகாக்ரதை உள்ள சைவர், வைஷ்ணவர், சாக்தர், பௌத்தர், சீக்கியர் எல்லோருமே எனக்கு ஆதர்சமே. ஆகையால் அது மறுக்கப்படுகையில் விவாதிக்க நேர்கிறது. அதற்கு adjective சேர்த்து விடுவது உங்கள் விருப்பம்.

    \\\இதில் தஹி “ஆசிரியர் குழு”வின் திரிசமன் எல்லாம் எதுவும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.\\\\

    முருகா! நான் எங்கு அப்படி சொல்லியுள்ளேன். மாறாக மஹாத்மா காந்தியடிகளாகட்டும் ஸ்வாமிஜியாகட்டும் பாபா சாஹேப் அம்பேத்காராகட்டும் எல்லோருடைய கருத்துக்களையும் எல்லோரும் ஏற்றே ஆக வேண்டும் என்றும் ஏதும் இல்லையே.

    \\\\ஒவ்வொரு வேதாந்த பிரிவினரும் தங்களுக்கு உவப்பில்லாத உபநிஷத பகுதிகளை வலிந்து ஒட்டியும் வெட்டியும் திரித்தும் பொருள் கொள்வதையும் அது செயற்கையான தத்துவ சுவர்களை உண்டாக்குகிறது என்பதையும் சுவாமிஜி வேதாந்தம் குறித்த உரைகளில் கூறியுள்ளார்.\\\\

    நான் முறையாக முற்றுமாக பாஷ்ய பாடம் வாசித்ததில்லை தான். ஒவ்வொரு வேதாந்த பிரிவினரும் உபநிஷத பகுதிகளை உள்ளது உள்ள படி ஒட்டாது மற்றும் வெட்டாது பொருள் கொண்டனர் என்பது எனது நம்பிக்கை. அவ்வாறு ஒட்டாது வெட்டாது பொருள் கொண்டாலும் இயற்கையான தங்களது புரிதலின் பாற்பட்டு வ்யாக்யானங்கள் செய்கையில் வேதாந்தக் கொள்கைகளில் வேறுபாடுகள் காணக்கிட்டுகின்றன என்பது என் புரிதல். எனக்கு வேதாந்த பாட அரிச்சுவடி சொன்ன ஆசிரிய சொன்ன படிக்கு இது. தவறு என்றால் திருத்திக்கொள்கிறேன். ஆக செயற்கையான தத்துவ சுவர்கள் என்பதை ஏற்க இயலவில்லை. தத்துவார்த்த வேறுபாடுகள் என்பது சரியான ப்ரயோகம். விவித தர்சனங்களிடையே ஒற்றுமைகளும் இயற்கையாக இயல்பிலேயே உண்டு என்பதை இந்த தவறான சொல்லாக்கம் செயற்கையாக சிதைக்கிறது.

    \\\\சங்கர, ராமானுஜ, மத்வ ஜயந்திகள் மூன்றையும் கொண்டாடும் இந்து மடாலயம் என்றால் அது ஸ்ரீராமகிருஷ்ண மடம் மட்டும் தான். மூன்றூ ஆசாரியர்களையும் தத்துவப் பிரிவுகளையும் குறித்த நூல்களை வெளியிட்டுருப்பதும் அந்த மடம் தான் என்பதையும் நினைவில் கொள்ளவும்.\\\\

    பல தசாப்தங்களாக உபயுக்தமாக வேத பாடம் வாசிக்க விழைபவர் யாராயினும் ராமக்ருஷ்ண மடத்தின் வெளியீடுகளை வாங்கித் தான் தங்கள் பாடங்களை கற்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. த்ரிமதஸ்தர்களின் வேதாந்த புஸ்தகங்களை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிடல் என்பது ஹிந்து மதத்திற்கான பெரும் நற்கார்யம் என்பதில் சம்சயமேதுமில்லை. வாழ்க அவர்களது தொண்டு. ஹிந்து மதம் இந்த ஸ்தாபனத்திற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது என்றால் நிச்சயம் மிகையாகாது.

    ஆனால் மற்ற மடாலயங்கள் சக்கரைப்பொங்கல் தின்று புளியேப்பம் விட்டுக்கொண்டிருப்பவரின் கூடாரங்கள் என்பது இடிக்கிறதே.

    பற்பல வித்வத் சதஸுகளில் த்ரிமதஸ்தர்களும் கலந்து கொண்டு வேதாந்த விசாரம் செய்வது என்பது தொடரும் ஒரு போக்கே. வேதாந்த பாடம் படிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளோரின் சங்க்யையில் வளர்ச்சி என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. அங்கு பேசப்பட்ட வேதாந்த விளக்கங்கள் யாவை என்பவை அனைவருக்கும் பயனளிக்க வல்லவை. மற்ற படி சக்கரை பொங்கல் சாப்பிட்டனரா, அக்கார அடிசல் சாப்பிட்டனரா, ஜீர்ணம் ஆயிற்றா புளியேப்பம் விட்டனரா – தேவையா 🙂

    \\\\எனவே சுவாமிஜியின் ஒற்றைவரி மேற்கோள்களை மேதாவித்தனமாக கட்டுடைத்து அவருக்கு ஒரு sectarian முத்திரை அளிப்பது சரியானதும் அல்ல, நன்மை பயக்கக் கூடியதும் அல்ல.\\\\

    ஏற்கவொண்ணா விஷயங்களை மறுப்பது மேதாவித்தனத்தினால் தான் என்பது தவறு. தவறான புரிதலினாலும் கூட இருக்கலாமே. மாற்றுக்கருத்துக்களை முத்திரை குத்தி நசுக்குவதும் கூட தவறே.

    \\\\சுவாமிஜி பிரகடனம் செய்த வேதாந்தம் என்பது இந்து மதத்துக்குள் இன்னொரு சமயப் பிரிவு (sect) அல்ல.\\\\

    விக்கிபீடியா ராமக்ருஷ்ண மிஷன் காரர்கள் தாங்கள் ஹிந்துக்களே இல்லை என்று சொன்னதாகவும் உச்ச ந்யாயாலயம் அதை மறுதலித்ததாகவும் சொல்கிறது. இதை வெளியிலிருந்து மேதாவிகள் யாரும் செய்யவில்லையே. கம்யூனிஸ குண்டர்படையால் எந்த அளவுக்கு ஹிம்சிக்கப்பட்டு ஸ்ரீ ராமக்ருஷ்ணமடம் இது போன்ற ஒரு நிலையை எடுத்தது என்று நான் அனுதாபமே படுகிறேன். குத்திக்காட்டும் விஷயமாக இல்லை. ஆனாலும் சரித்ரத்தில் இதுவும் ஒரு முக்யமான நிகழ்வு என்பதை மறைப்பதில் பயனில்லை.

    ””””’In 1980, in an act that caused “considerable debate” within the order, the mission petitioned the courts to have their organization and movement declared a non-Hindu minority religion.[35] Many generations of monks and others have been of the view that the religion propounded and practiced by Ramakrishna and his disciples is very much different from that practiced by Hindu masses then. They held that the Ramakrishna’s “Neo-Vedanta” is a truer version of the ideals of Vedanta. ………….. While the Calcutta High Court accepted the mission’s pleas, The Supreme Court of India ruled against the mission in 1995.[36] The mission found it advisable to let the matter rest. Today it remains as a Hindu organization”””””

  24. இரண்டாயிரம் வருஷங்களாக யஹூதிகள் எந்தளவுக்கு ஹிம்சிக்கப்பட்டார்கள். இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்க எப்படியெல்லாம் போராட வேண்டியிருந்தது. இன்று வரைக்கும் ஜெருசலேமை தக்க வைத்துக்கொள்வதில் எவ்வளவு கஷ்டம் இஸ்ரேல் ராஜாங்கத்திற்கு உள்ளது என்பதெல்லாம் ஒரு பக்கம்.

    ஆசாரவாத யஹூதிகள் என்ன போடு போடுகிறார்கள் என்பது இன்னொரு பக்கம்.

    இஸ்ரேல் என்பது மனுஷ்யர்கள் தங்களுக்காக உருவாக்கிக்கொண்ட ராஜ்யம். சர்வேஸ்வரன் தானே யஹூதிகளுக்கு தங்களுடைய ராஜ்யத்தை மீட்டுத் தருவதாக வாக்குத் தத்தம் அளித்துள்ள படியால் இன்றைய இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம் என்று ஆகாத்யம் செய்கின்றனர் ஆசாரவாதி யஹூதிகள்.

    நாலா பக்கமும் பாலஸ்தீனம் ( இஸ்ரேல் சாப்பிட்டு புளியேப்பம் விட்டாகிவிட்ட நிலப்பரப்பு )ஜோர்டான், லெபனான், சிரியா, எகிப்து என்று ஊளையிடும் நரிகள் சூழ்ந்திருக்கையில் இப்படியெல்லாம் இடக்கு மடக்காகப் பேசினால் இவர்களை குறுமதி என்று சொல்வதா பெருமதி என்று சொல்வதா. யெஹோவாவுக்கே வெளிச்சம். ஆனால் இஸ்ரேலில் இவர்களும் பல்கிப் பெருகுகிறார்கள். இஸ்ரேலின் லிகுட் கட்சியை சார்ந்த ப்ரதம மந்த்ரி நெடான்யாஹு இந்த ஆகாத்ய ஆசாரவாதிகளுடன் சேர்ந்து தான் ஜெயிக்க முடிந்தது. இந்த ஆகாத்ய வாதிகள் ஏன் பின்னர் தேர்தலில் மூக்கை நுழைக்கிறார்கள் என்பதும் யெஹோவாவுக்கே வெளிச்சம். 🙂

    சமூஹம் என்பது கருத்து வேறுபாடுகள் பலவும் உள்ள பற்பல மக்களின் பூந்தோட்டம் என்பது மட்டும் நிதர்சனம். நமக்கு வேண்டாத கருத்துக்களைச் சொல்பவர்களை குறுமதியாளர்கள் கொடுமதியாளர்கள் வெறுப்பாளர்கள் என்றெல்லாம் நாமகரணம் செய்து மகிழலாம். ஆனால் அப்படிச் செய்வது தவறான பாங்கு என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

    \\\\அதென்ன தீவிர வைஷ்ணவம், தீவிரமில்லாத வைஷ்ணவம்? வைஷ்ணவம் வைஷ்ணவம் தான். \\\\\

    தீவிர ஹிந்துத்வா மிதவாத ஹிந்துத்வா என்று டிவி காரர்கள் குடைந்தெடுக்கும் போதெல்லாம் ஹிந்துத்வர்கள் நெளியும் தர்மசங்கடத்தைப் பார்த்திருக்கிறேன். ராம்சேனா, பீம்சேனா,சிவசேனா – இத்யாதியெல்லாம் வேண்டுமானால் அன்ய ஸ்தாபனங்கள். சங்க பரிவாரத்தை மிதவாதி தீவ்ரவாதி என்றெல்லாம் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? :`-(

    \\\மற்றும் ஒருமுறை கடைசியாக இந்த கட்டுரை இப்பொழுது தமிழ் ஹிந்துவில் அவசியமில்லாதது\\\

    ம்ஹும். Nothing wrong in publishing this article. பூஜ்ய ஸ்வாமிஜி ஏதோ காலத்தில் சொன்னதும் உண்மை. அவரது சில கூற்றுக்களில் நம்மில் சிலருக்கு கருத்து வேறுபாடு உள்ளது என்பதும் உண்மை. அவ்வளவே. Nothing need to be hidden beneath the blanket. அதனால் ஸ்வாமிஜி மீது நமக்கு என்ன மதிப்பு குறைந்தா போகிறது?

    ஸ்ரீ க்ருஷ்ணன் அவர்கள் சொல்லியது போல்,

    \\\Thus a follower of Ramanuja or Madhvacharya may not accept Vivekananda as his spiritual leader but he or she should have no hesitation in accepting him as one of the greatest builders of Modern India. Even Marxists are including him in their pantheon!\\\\

    Why, I wish to study advaita in a traditional platform with all its paraphernalia and not from the perspective of neo vedantins. Swamiji admired “Imitation of Christ”. Although, I am not interested in it, I admire “Jhulelal dum mast khalandar”. Whats wrong about it? ஸ்வாமிஜி அவர்கள் எல்லோராலும் மதிக்கப்படும் பெரும் ஆலவ்ருக்ஷம். தேசத்தை புனர் நிர்மாணம் செய்த சான்றோர்களில் மிக முக்யமானவர். அவர் சொல்லும் மிகப்பல கருத்துக்கள் எல்லோராலும் ஏற்கப்படுவது. சமய வேறுபாடுகளை மட்டும் கொடி பிடிக்காது சமய ஒற்றுமைகள் என்ற முக்யமான விஷயத்தையும் கருத்தில் கொண்டு ஹிந்துக்கள் ஒன்றாக தேசத்திற்குப் பாடு படுவதை பூஜ்ய ஸ்வாமிஜி சொல்வதாகப் புரிந்து கொள்கிறேன். இது தான் கால காலமாக ஹிந்துஸ்தானத்தில் நிகழ்ந்தது வந்தது. வருவது.

    ஸ்ரீ ஜடாயு அவர்களே சொல்லியுள்ளாரே:- %)

    \\\\விவேகானந்தரின் கருத்துக்களிலேயே கூட வெகுசில கருத்துக்கள் என்னாலோ அல்லது சுவாமிஜியை பெரிதும் மதிக்கும் மற்றொருவராலோ முழுதாக ஏற்றுக் கொள்ளப் படாமல் இருக்கலாம் அல்லவா? \\\\

    ஸ்ரீமான் ஜடாயு, சுட்டிக்காண்பிக்க வேண்டும் என்று அல்ல, ஆனால் மனிதர்கள் உரையாடுகையில் கருத்து வேறுபாடுகள் மட்டும் இருப்பதில்லை; கருத்துக்களில் சாம்யதையும் உண்டு என்பதையும் புரிந்துகொண்ட படிக்கு தங்களது முந்தைய கருத்தையும் இப்போதைய கருத்தையும் ஒப்பிடுகிறேன்.

    Quote :-

    \\\\\\\\சுவாமி விவேகானந்தரின் திருவுருவம் எங்கள் வீட்டுப் பூஜை அறையில் உள்ளது. ஆயினும் அவரது மொழிகள் ஒரு மாமனிதரின் குரலாக இருப்பதையே நான் விரும்புவேன், “தெய்வத்தின் குரலாக” அல்ல.

    ஆனால் ரா.கணபதிக்கும் உங்களுக்கு அப்படி அல்ல என்று தோன்றுகிறது. “கயிலாயத்திலே சிவபெருமான் உமையவளிடம் சொல்கிறார்: நான் அவதரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது…” – ரா.கணபதி அவர் எழுதிய விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்று நூலையே இப்படித் தான் ஆரம்பிக்கிறார் (அறிவுச்சுடரே அருட்புனலே). இது ஒரு பூரண வழிபாட்டு மனநிலை. ஆனால், விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள சுவாமிஜி பற்றிய எந்த நூலிலும் இது போன்ற ஒரு சித்தரிப்பை நீங்கள் பார்க்க முடியாது. குமரியிலுள்ள விவேகானந்தர் நினைவகத்தில் கூட பூஜை, புனஸ்காரம் எதுவும் கிடையாது என்பதைக் கவனித்திருப்பீர்கள்.\\\\\\\\

    Unquote :-

    \\\\ எனது நண்பர் வட்டங்களிலேயே வசுவாமிஜியை தெய்வமாக வணங்க கூடிய தீவிரமான இந்து இய்க்கத் தலைவர்கள், சமூகத் தொண்டர்களாக இருக்கீற வைணவர்கள் உள்ளனர்.\\\\\

    கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று சொன்ன அன்பர் ராமஸ்வாமி நாயக்கர் அவர்களையே தங்களை உத்தாரணம் செய்த பெரியார் என்று நம்பி கடவுளாக்கி சூடமேற்றுவது இந்த மண்ணின் மாண்பு. அப்படி இருக்கையில் உலக முழுதும் சஞ்சாரம் செய்து “த்வே ரூபே வாஸுதேவஸ்ய சரம் சாசரமேவ ச | சரம் சன்யாஸினம் ரூபமசரம் ப்ரதிமாதிகம் |” என்ற படிக்கு ச்ரேயஸ் வாய்ந்த யதிச்ரேஷ்டரை ஏதோ அல்பக்ஞனான நானும் பெறிய அறிஞரான அமரர் ரா கணபதியும் மட்டும் தான் பகவத் ஸ்வரூபமாக வணங்குகிறோமோ என்ற சம்சயத்திற்கு இன்று சம்சய விமோசனம். Still, you can disagree with me that you said so and so in a different context.

    பின்னும் தங்களுக்கு பூஜை, புனஸ்காரம் போன்ற விஷயங்களில் ஏற்பில்லாமையும் அதில் ஏதோ பூச்சாண்டி சமாசாரம் இருப்பதாக உணர்வதையும் பார்க்கிறேன். தவறானால் திருத்திக்கொள்கிறேன். “மாத்ருகா புஷ்ப மாலை கோலப்ர வாளபாதத்தில் அணிவேனோ” என பூஜை செய்வதில் எனக்கு விருப்பம் தான் என்பதில் எனக்கு சங்கோசம் ஏதுமில்லை.

    ஆயினும் ஸ்ரீ ராமக்ருஷ்ண மடங்களில் கர்ப்ப க்ருஹ ஸ்தானத்தில் பூஜ்ய ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர், விவேகானந்த ஸ்வாமிஜி, மற்றும் அன்னை சாரதை இவர்களது திருவுருவப்படங்கள் இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சாயங்கால ஹாரதி எல்லா பூஜை புனஸ்காரங்களுடன் இந்த திருவுருவப்படங்களுக்கு நிகழ்வது தினசரி நிகழ்ச்சி.

    கண்டன பவ பந்தன ஜக வந்தன வந்திதோ மாய்
    நீராஞ்சன நரரூபதர நிர்குண குணமய்

    என்று முப்பது நாற்பது வருஷங்கள் முன்பு கேட்ட ஹாரதி வரிகள் இன்னும் எனது மனதில் ஆழப்பதிந்தவை.

    விவேகானந்த யதிக்கு வந்தனங்கள்.

    ஸ்வாமியாகவே இருந்தாலும் தான் என்ன. மனதில் கருத்து வேறுபாடு இருந்தால் பளிச்செனப் பேசுவது தானே ஹிந்து மரபு.

    வந்தது இறையனாரேயாயினும் வந்தது இறையனார் என்று தெரிந்தும் தானே

    “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ”

    என்று நக்கீரனார் பாடினார்.

    ஆனால் நக்கீரனாருக்கு இறையனார் மீது எத்துணைக் காதல் என்பது உலகமறிந்ததே.

    கருத்து வேறுபாடு மேதாவிகளுக்கு மட்டும் தான் இருக்கலாம் என்றில்லையே என்னைப்போல் கிஞ்சித்க்ஞர்களுக்கும் இருக்கலாமே. என்ன அல்பக்ஞனான எனது கருத்தில் தவறு இருக்கலாம். சுட்டப்பட்டால் திருத்திக்கொள்கிறேன். அது தானே இந்தக் கருத்துப்பரிவர்த்தனங்களின் உத்தேசமே. =)

  25. அன்புள்ள கந்தர்வன்,

    விவேகானந்தரின் முழுமையான பார்வையையும், ராமகிருஷ்ண இயக்கம் விஷ்ணு பக்தியுடன் கொண்டுள்ள உறவையும் ஒட்டுமொத்தமாப் பார்க்கையில்ம் intolerant sect என்பது சிறு விமர்சனம் தான்… இங்கு கூட, சுவாமிஜி அந்த சமயப் பிரிவின் சகிப்புத் தன்மையை மட்டுமே விமர்சிக்கிறார்.. விஷ்ணு பற்றியோ, ஸ்ரீராமானுஜர் பற்றியோ அவதூறாக ஒரு சொல் கூறவில்லை. போற்றவே செய்கிறார். வைணவம் பொய்யானது என்று எங்காவது சுவாமிஜி கூறியிருக்கிறாரா?

    ஆனால், நீங்கள் இங்கு தூக்கிப் பிடிக்க எண்ணும் துவைத வைணவ தரப்பினர், தங்களது புத்தகங்களில் சிவபிரானை demi-god என்றும் துர்க்கை, காளீ ஆகிய சக்திகளை dangerous powers என்றும் சிவ வழிபாடு முழுவதையுமே இருளடைந்தது என்றும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுபவர்கள். ஸ்ரீராமகிருஷ்ணரையும், விவேகானந்தரையும் பற்றீய அவதூறுக்ளை இஸ்கான் பிரசுரங்களில் பார்த்துள்ளேன் – இதை அவர்கள் ஏன் செய்ய வேண்டும்? இது தான் “வைஷ்ணவ தர்மமா”? இதெல்லாம் intolerance இல்லாமல் வேறென்ன? இப்படி செய்யும் சமயப் பிரிவை ஆதரிப்பவர்களுக்கு சுவாமிஜியின் விமர்சனத்தில் குற்றம் காண எந்த தார்மீக நியாயமும் இல்லை.

    எல்லா இந்து சமயப் பிரிவுகளிலும் “தீவிரவாத” போக்குகள் உண்டு. மற்ற சமயப் பிரிவுகளின் மீதான விலக்கத்தின் அளவே அதைத் தீர்மானிக்கிறது. அந்த விலக்கமில்லாமல், தங்களது சமயப் பிரிவின் மரபுகளை ஈடுபாட்டுடன் அனுஷ்டித்து, அதே சமயம் மற்ற சமயப் பிரிவுகளின் செழுமைகளையும் ஒட்டுமொத்த இந்துப் பண்பாட்டையும் கற்று உணர்ந்து ஒருமை உணர்வுடன் பேசுபவர்கள் தீவிரவாத தன்மையில்லாதவர்கள் எனலாம். உதாரணமாக, ”பாரதியின் சாக்தம்” எழுதிய ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (வைணவர்). தொலைக்காட்சியில் திருவெம்பாவை விளக்கங்கள்ன் போதும் நம்மாழ்வார், ஆண்டாள், கம்பராமாயன்ண பாடல்களை மேற்கோள் காட்டும் பழ.பழனியப்பன் (சைவர்).

  26. சாரங், சாய், கிருஷ்ணகுமார், தங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    கிருஷ்ணகுமார், நான் பூஜை வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. அது குறித்த சுவாமிஜியின் விமர்சனத்தை அந்த சூழலுடன் பொருத்திப் பார்க்க வேண்டும் என்று தான் கூறீனேன். நான் பூஜைகளிலும், சடங்குகளிலும் விலக்கம் கொண்டவனல்ல. அவற்றை முடிந்த அளவு பக்தி/ சிரத்தை உணர்வோடு செய்துவருபவன் தான்.

    சாரங், சுவாமிஜியை படித்து சில “வைணவர்கள்” ”ஓடுகிறார்கள்” என்றால், அவர்களையும் கட்சியில் சேர்க்க சுவாமிஜியின் கருத்துக்களை நீர்த்துப் போக / மறைக்க வேண்டுமா என்ன? மாறாக, அவர்களிடம் உள்ள அத்தகைய கருப்பு / வெள்ளை மனப்பான்மையைக் களைவது தான் சமன்வயத்திற்கான வழி. காந்தியிடமும் விவேகானந்தரிடமும் முழுமையான விலக்கம் காணும் அளவுக்கு அவர்களது சமயத் தீவிரம் வழிவகுக்கீறது என்றால், அந்தத் தீவிரத்தை நெகிழ்த்த வேண்டும். அதுவே ஒட்டுமொத்த இந்து சமய/சமூக நலன்களுக்கு உகந்தது.

  27. அன்புள்ள ஜடாயு,

    கொஞ்சம் கடுமையான விமர்சனம் இது. பொறுமை காத்து படித்து யோசியுங்கள்.

    பல பல கட்டுரைகளையும் விவாதங்களையும் பார்த்துவிட்டு நீங்கள் ஏகாந்த பக்தி நிலையை இப்போது சரியாகப் புரிந்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். உங்களது அண்மைய மறுமொழியைப் படித்துவிட்டு ஏமாற்றமே கண்டேன்.

    அப்ராமாணிகர்களும் (ஆழ்ந்த பின்னணி அறிவு இல்லாதவர்கள்) அல்ப ச்ருதர்களும் (நுனிப்புல் மேய்ந்து விட்டு ‘இது தான் உறுதியான முடிவு’ என்று பிடிவாதம் பிடிப்பவர்கள்) எழுத வேண்டிய வார்த்தைகளை, பல மொழிகளில் நூல்களை ஆராய்ந்து மெத்த படிக்கும் உங்களிடமிருந்து பார்க்க துக்கமளிக்கிறது.

    தஹி ஆசிரியர் குழுவாகட்டும், வாசகர்களாகட்டும். ‘தீவிர’ வைஷ்ணவர்கள் அல்லாதாரின் தரப்பில் இங்கு சரியான புரிதலுடன் விவாதிப்பது திரு கிருஷ்ணகுமார் அவர்கள் மாத்திரமே.

    //மற்ற சமயப் பிரிவுகளின் மீதான விலக்கத்தின் அளவே அதைத் தீர்மானிக்கிறது. //

    எந்த வகையில் விலக்கம்? கூற முடியுமா?

    ஏன், நீங்களே “குறுமதி அடிப்படைவாதிகள்” என்று தூஷித்தது ஒரு வகை விலக்கம் இல்லையா?

    இஸ்கான் விவேகானந்தரையும், இராமகிருஷ்ணரையும், ஏன், ஆதி சங்கரரையும், இராமானுஜரையும் கூடத் தான் அவதூறாகக் கூறுகிறார்கள். அது தவறே. ஐயமில்லை. இதற்காக அவர்களுக்கு முன் கடுமையாக நான் வாதாடியிருக்கிறேன்.

    எனினும்…

    வைஷ்ணவ இறையியலில் பரமாத்மா, (பத்த/முக்த) ஜீவர்களாகிய தேவ கணம் இரண்டையும் வேறுபடுத்துவதற்கு வேறு வேறு சொல் வேண்டும். ஆங்கிலத்தில் பரமாத்மா God என்றால் மற்ற தேவர்கள் demi-god. இதில் ஒரு காழ்ப்புணர்ச்சியோ, அவதூறோ, சகிப்பின்மையோ இல்லை. ஆழ்வார்களாகட்டும் வைஷ்ணவ ஆச்சாரியார்களாகட்டும் அவர்களின் நிலையம் இதுவே.

    demi-god என்றால் சாத்தான் அல்ல. demi-god demon-god அல்ல. demi-god = மனிதர்களுக்கும் (demi) பரமாத்மாவுக்கும் (God) இடைப்பட்ட நிலையில் உள்ள ஆன்மாக்கள்.

    // துர்க்கை, காளீ ஆகிய சக்திகளை dangerous powers என்றும் //

    மேற்கண்ட இந்த வரி உங்களிடம் இருந்து வருவது வருத்தமளிக்கிறது. ஒரு தத்துவ தரிசனத்தின் நிலைப்பாட்டை (கவனக்குறைவால் கூட) அது எந்த இடத்தில் வருகிறது என்று தெரியாமல் திரித்து எழுதி, ‘அவர்களெல்லாம் கெட்டவங்க’ என்று போல எழுதுவது முறையாகாது.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரி ஸ்ரீ பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவத உரையில் உள்ளது. “śaktyā yukto vicarati ghorayā bhagavān bhavaḥ” என்ற மூலத்திற்கு (4.24.18) வரும் உரை இது. இதனால் அவர்கள் துர்கையையும், காளியையும் வெறுக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அதே இடத்தில் கூட,

    ‘Lord Siva is one of the twelve great personalities, as stated in Srimad-Bhagavatam (6.3.20)’ என்றும், ‘Herein it is mentioned that Lord Siva is always accompanied by his material energy (saktya ghoraya). Material energy — goddess Durga, or goddess Kali — is always under his control. Goddess Kali and Durga serve him by killing all the asuras, or demons.’ என்றும் உள்ளது. இதில் எங்காவது த்வேஷம் சிறிதளவாகிலும் உண்டா?

    ‘சிவவழிபாடு முழுவதுமே இருளடைந்தது’ – கண்டிப்பாக இப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள். எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்!

    கண்ணன் கூடத் தான் “மற்ற தெய்வங்களை வணங்குகிறவர்கள் அற்பமான பலன்களையே அடைகின்றனர்” என்று கீதையில் (7.23) பகர்ந்தான். கண்ணன் வெறியனா?

    ஸ்ரீவைஷ்ணவத்தில் வைஷ்ணவ சம்பந்தத்தை ஏற்க விரும்புபவர்கள் மற்ற தெய்வங்களைப் பூஜிப்பதில் இருந்து விலகுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். அதிலும், வேண்டுமென்றே மற்ற மதத்தலைவர்களையும் மடங்களையும் ஏசி வம்புக்கு இழுப்பதில்லை. இதையும் பொது மேடைகளில் செய்வதில்லை. அவர்கள் எழுதி வைத்ததைப் படித்து விட்டு, ‘இவன் என்ன நம்ம சாமியை இப்படி எழுதறான்?’ என்று பர்சனலாக எடுத்துக் கொள்வது தவறானது. ‘இவன் சொல்வதில் நியாயமும் எனக்கு விருப்பமும் இருந்தால் ஏற்றுக் கொள்வேன், இல்லை என்றால் அது அவன் இஷ்டம்’ என்று இருப்பதில் என்ன தவறு?

    இருப்பினும், இது ஒருபக்கம் இருக்க, உலகத்தில் உள்ள கோடானு கோடி வேத பாஹ்ய மார்க்கங்களைக் காட்டிலும், ஒருவன் வைஷ்ணவ நிலையை அடைவதில் சிவ வழிபாடு என்பது மிகவும் முதிர்ச்சியடைந்த கடைசிக் கட்டம் (according to Vaishnavas, being born as a devotee of Lord Shiva is the last preparatory step in attaining the highest spiritual bliss) – இப்படி ஒரு மத்ஸ்ய (கூர்ம?) புராண வசனமே உண்டு. இப்படி இருக்க, எந்த ‘தீவிர’ வைஷ்ணவனும் சிவ வழிபாட்டை முடங்கச் செய்ய நினைக்க மாட்டான். அவனைப் பொறுத்த வரை, ஒரு ஏணியில் உள்ள எல்லா படிகளும் உலகத்தின் உயிர்கள் உய்வதற்கு முக்கியமானவையே, அந்தந்த கட்டத்தில் உள்ள ஆன்மாக்களுக்கு அத்தியாவசியமாகின்றன. எனினும், ‘பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!’ என்ற படிக்கே பொது ஜனங்கள் கூடும் இடங்களிலும் பொது ஊடகங்களிலும் ஒழுகுவது. இதுவன்றோ சகிப்புத்தன்மை!

    இது எங்கே, ஒரு பக்கம் “நாங்கள் எல்லாரையும் அரவணைக்கிறவர்கள், எங்களுக்கே பரந்த உள்ளம்” என்று ஒரு பக்கமும், மறுபக்கம், “ஓ, நீ தீவிர வைஷ்ணவனா, சிவ வழிபாட்டில் கலந்துக் கொள்ள மாட்டாயா? அப்படியானால் நீ ஒரு வெறியன், ஆயிரமாண்டுக் காலத்திற்கு முன் உறைந்து போய் விட்ட டைனாசர்” என்றும் பொதுமேடைகளில் கூறுவது எங்கே? இத்தகைய மனநிலையில் உள்ள முரண்பாட்டை இன்னமுமா நீங்கள் உணரவில்லை??? வியப்பளிக்கிறது!

    ஒற்றுமை இருக்க வேண்டுமென்றால், எல்லாவற்றையும் வணங்க வேண்டும் என்று நினைப்பது சரியன்று. அப்படியொரு செயற்கையான ஒற்றுமை சாத்தியமில்லாதது. தத்துவ-இறையியல் ரீதியில் ஒற்றுமை இருந்தால் தான் பொது-சமூகத் தளத்தில் ஒற்றுமை பிறக்கும் என்பது மிகத் தவறான அணுகுமுறை. இது எத்தகைய குழப்பத்தை விளைவிக்கிறது என்று பாருங்கள்:

    //தங்களது சமயப் பிரிவின் மரபுகளை ஈடுபாட்டுடன் அனுஷ்டித்து, அதே சமயம் மற்ற சமயப் பிரிவுகளின் செழுமைகளையும் ஒட்டுமொத்த இந்துப் பண்பாட்டையும் கற்று உணர்ந்து ஒருமை உணர்வுடன் பேசுபவர்கள் தீவிரவாத தன்மையில்லாதவர்கள் எனலாம். //

    ஆக மொத்தம், ஒரு வைணவ ஆன்மிகச் சொற்பொழிவாளர் பொது மேடையில் தேவாரத்தை மேற்கோள் காட்டவில்லை என்றால் “அட ச்சே! இவர் என்ன நம்ம சாமிய பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறார்? ரொம்ப வெறியன் டா இவன்.” என்று மக்கள் கடுப்பாவார்கள். அவரே ‘தேவாரத்தில் மனித நேயமும் அறிவியல் வளர்ச்சியும்’ என்று சொற்பொழிவு நடத்தினால் அந்த மக்கள் புல்லரித்துப் புளகாங்கிதம் அடைவார்கள். ஆங்கிலத்தில் சொல்கிறேன் – the expectation that this places on the audience is that they be a bunch of immature intolerant cry-babies who will complain if a Vaishnavite talks about the greatness of his faith and does not say a word about other faiths in Hinduism. At the same time they will be roused if a positive mention (though the speaker may not really be interested in their cause) is made of their personal faith. ‘நம் இந்து சமூகம் இப்படி குழந்தைத்தனமானது’ என்பதை நீங்களே நிர்ணயித்து விட்டீர்கள் போலும்!

    தத்துவவியல், இறையியல் இதையெல்லாம் தாண்டி, ஹிந்துக்கள் அனைவருக்கும் பொதுவான சில குறிக்கோள்கள் கண்டிப்பாக உண்டு. பரம ஏகாந்த வைஷ்ணவர்களாகிய (அண்மையில் பரமபதித்த) சுதர்சனம் சுவாமியும், ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி ஐயங்காரும் பொது மேடைகளில் சைவர்களுடன் சேர்ந்து தமிழக அரசு நமது ஆலையங்களில் நடத்தும் அராஜகத்தை வீரமாக எதிர்த்து வந்திருக்கின்றனர். இந்த மஹான்களெல்லாம் தத்துவ-இறையியல் தளத்தில் உங்களிலிருந்து வேறுபட்டிருப்பதால் அவர்கள் இந்துத்துவத்திற்கு விரோதிகள் போலும்! இராமகிருஷ்ண மட / காந்திய சம்பந்தமல்லாததால் அவர்கள் செய்யும் பணி அற்பமாகிவிடும் போலும்!

    நீங்கள் சம்பிரதாயங்களை அறவே மறுத்து ஒழிக்கவில்லை, அரவணைத்துத் தான் வருகிறீர்கள் என்றாலும், அவை மீது ஒரு condescending attitude-ஐக் காண்கிறேன். ‘இவன் (சம்பிரதாயவாதி) என் பிள்ளை தான், ஆனால் அவ்வப்போது முரண்டு பிடிப்பான். அப்போதெல்லாம் நான் தான் திருத்த வெண்டும். அதுவும் விவாதித்து அல்ல, தலையில் குட்டியும் கண்டித்தும் தான். ஏனென்றால் இவனுக்கு எது நல்லது எது வேண்டாம் என்பதை நானே அறிவேன், நானே நிர்ணயிப்பேன்’ போன்ற high-handed மனநிலை இது. இது ஒரு முதிர்ச்சியடைந்த மனதிற்கு அழகல்ல.

  28. //
    ஆனால், நீங்கள் இங்கு தூக்கிப் பிடிக்க எண்ணும் துவைத வைணவ தரப்பினர், தங்களது புத்தகங்களில்
    //

    இன்று மட்டும் மீமாம்சகனோ, சான்க்யனோ இருந்தால் அவன் சன்கராசார்யரை intolerant என்று சொல்லி இருப்பன். ஏன் என்றால் சங்கராசார்யார் இவர்களை அவரது பாஷ்யத்தில் ரொம்பவே நிராகரிக்கிறார்.

    கடவுளே இல்லை என்று புத்திச்டு சொல்கிறான், வேதாந்தத்தை என்ன வாட்டு வாட்டினான். அவன் intolerant அப்படிதானே. எதற்காக புத்தத்தை ராமகிருஷ்ண மடத்தில் புத்தரை அரவணைக்கிறார்கள் ? அதுவும் இங்கு தோன்றிய ஞான மரபு என்று பக்கம் பக்கமாக தமிழ் ஹிந்துவிலேயே எழுதுகிறோம் ?

    பிற மதத்தை கண்டனம் செய்வது தான் சவ மத ஸ்தாபனம் செய்ய முடியும். எந்த ஆசார்யரும் போற வரவனை கையை பிடித்து நிர்பந்திக்க வில்லை. இல்லை ஆத்து சாமியார் போல தரை குறைவாக பேசவில்லை.

    பிற மத கண்டனம் செய்வதால் வைணவர்கள் intolerant என்றால் அத்வைதிகளும் தான். மேம்போகாகதான் எல்லாம் ஓகே கிட்ட சென்றால், பாசுபத மத கண்டனம், பாஞ்சாராத்ர கண்டனம், வைணவ கண்டன, சாக்த கண்டனம் வெகு விமர்சையாக நடக்கும். இதவும் intolerance போலும்.

    நாம் தாலிபானிசம் எது விசாரம் எது என்பதை மறந்து விட்டோம் போல. ரெண்டையும் சரளமாக மிக்ஸ் செய்கிறோம்.

    //
    சாரங், சுவாமிஜியை படித்து சில “வைணவர்கள்” ”ஓடுகிறார்கள்” என்றால், அவர்களையும் கட்சியில் சேர்க்க சுவாமிஜியின் கருத்துக்களை நீர்த்துப் போக / மறைக்க வேண்டுமா என்ன? மாறாக, அவர்களிடம் உள்ள அத்தகைய கருப்பு / வெள்ளை மனப்பான்மையைக் களைவது தான் சமன்வயத்திற்கான வழி. காந்தியிடமும் விவேகானந்தரிடமும் முழுமையான விலக்கம் காணும் அளவுக்கு அவர்களது சமயத் தீவிரம் வழிவகுக்கீறது என்றால், அந்தத் தீவிரத்தை நெகிழ்த்த வேண்டும். அதுவே ஒட்டுமொத்த இந்து சமய/சமூக நலன்களுக்கு உகந்தது.
    //

    ஜடாயு அவர்களே, இதை குரு ஜி முன்னாள் இதை உங்களால் சொல்ல முடியுமா. சுவாமிஜி பற்றி எல்லாத்தையும் நீங்கள் சொல்லிவிடுவீர்களா.

    குரு ஜி சொன்ன கதைகள் நிச்சயமாக படித்திருப்பீர்கள் – எட்டாம் கதை, எட்டாம் பக்கம் குஜராத் அரசன் கர்ணனை பற்றி உள்ளது. அதற்கும் இங்கு வரும் விஷயத்திற்கும் நேரடி சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இந்த கதை நீங்கள் இங்கு கொண்டிருக்கும் நிலைப்பாடு முழுவதும் தவறு என்று நிச்சயம் உணர்த்தும்.

    தீவரத்தை நெகுத்துவது என்பது சரியான முறையாக இருக்காது, அது ரெண்டும்கேட்டானாக போய், அவர்கள் ஹிந்துத்தவ போக்கையே விட்டு விடலாம்.

    நமது பணி நன்மையை சேர்ப்பது தான். தீமையை விலக்கு என்பது உபநிஷத் வழியல்ல. நன்மையை கூட்டு என்பது தான். அது ஒரு positive approach.

    உபநிஷத்திளிருந்து ஒரு பிட்டை உருவி, நான் தீமையை விளக்குகிறேன் பார் என்று இன்றைய புத்திச்டுகளும், முக்கியமாக ஜென் வகையினர் படும் அவஸ்தைகள் கண்கூடு

    நெகுழ்துதல் எங்கு முடியும் என்பதற்கு தீகாவின் யுக்தியே ஒரு உதாஹரணம். அது பாதி பலிக்கவில்லை, எங்கு பலித்ததோ அங்கு ஓட்டம் தான் மிஞ்சியது, ஹிந்துக்கள் ஹிந்து என்று கூறிக் கொள்ளவே கஷ்டப்படும் அளவிற்கு அது வந்து விட்டது.

  29. கருத்துப் பரிவர்த்தனம் எவ்வளவு தெளிவு கொடுக்கும் ( அல்லது தெளிவு கிடைத்ததாக ஒரு நிறைவு கொடுக்கும்) என்பது புரிகிறது.

    நல்ல வாழைமட்டையான எனக்கு என் வேதாந்த ஆசிரியர் ப்ரகரண க்ரந்தங்களை முதலில் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். அதில் பரிச்சயம் ஆனபின் பாஷ்ய பாடம் வாசிக்கலாம். உன் பாராயணாதிகளை செய்து வா என்றார். துக்குளியூண்டு விவேகசூடாமணி மற்றும் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் – இவை வாசித்த பிறகு – என் துர்பாக்யம் ஸ்தானாந்தரணம் ஆகி பரதேசியாய் அலையும் நிலை.

    கொஞ்ச கொஞ்சமாக விஷயத்தை (சரியாக?) க்ரஹிக்க முயல்வதில் Ignorance is Bliss என்பது எவ்வளவு சரி என்று புரிகிறது. நன்றி சர்வ ஸ்ரீமான் கள் சாரங்க், கந்தர்வன், ஜடாயு, சாய், வேதம்கோபால்.

    ஸ்ரீமான் சாரங்,

    ஆதிசங்கரரையும் அத்வைதத்தையும் எப்படியெல்லம் வைதுள்ளார்கள் என்று பராபரியாக கேழ்விப்பட்டிருக்கிறேன். பாஷ்யமெல்லாம் மண்டையில் சாமான்யத்தில் ஏறாது ஆனால் வம்பு கச்மலமெல்லாம் பளிச்சென மண்டையில் ஏறிவிடுகிறது.

    \\\\\ஆனாலப்பட்ட சங்கர பகவத் பாதரே ஒரு பூர்வ பக்ஷினையும் சிறிதளவு கூட திட்டியதில்லை. \\\\\

    ரொம்ப புளகாங்கிதம் அடைந்தேன். ஆகா சங்கரர் மட்டும் தான் யாரையும் திட்டவில்லை என்று. ஆனால் யதார்த்தம் கொஞ்சம் வேறு என்பதை நல்ல படியாக நாசூக்காக சொல்லி விட்டீர்கள்.

    \\\\\பிற மத கண்டனம் செய்வதால் வைணவர்கள் intolerant என்றால் அத்வைதிகளும் தான். மேம்போகாகதான் எல்லாம் ஓகே கிட்ட சென்றால், பாசுபத மத கண்டனம், பாஞ்சாராத்ர கண்டனம், வைணவ கண்டன, சாக்த கண்டனம் வெகு விமர்சையாக நடக்கும்.\\\\

    வையாசிக ந்யாய மாலை மூலமாக பத்யதிகரணம் மற்றும் உத்பத்யசம்பவாதிகரணம் என்ற இரண்டு ப்ரம்மசூத்ர அதிகரணங்கள் வாயிலாக சங்கரர் பாசுபத மற்றும் பாஞ்சராத்ர கண்டனம் செய்வதாய் கேட்டிருக்கிறேன்.

    என்ன பாஷையிலே வசவு மிக “ப்ரச்சன்ன” “தூஷணி” இத்யாதி ப்ரயோகமெல்லாம் இல்லாது இருக்கலாம் (என நினைக்கிறேன். பாஷ்யமெல்லாம் வாசித்ததில்லையே). ஆனால் அன்ய மதங்களில் உள்ள குறைபாடுகளை சொல்லாது அன்ய மதங்களை நிராகரணம் செய்யாது ஸ்வமதத்தை எப்படி நிர்தாரணம் செய்வது. அல்லது ஸ்வமதத்தை எப்படி வேறுபடுத்திக்காட்ட இயலும்.

    தன் மதம் (சித்தாந்தம்) வேறு அன்ய மதம் வேறு என்று சொல்வதில் —— Ultimate liberation இதில் தான் —– என்று தான் சொல்ல வருகிறதேயல்லாது, —— “பயலே இதை மட்டும் நீ ஏற்கவில்லையானால் மீளா நரகத்திலே எண்ணெய்க்கொப்பரையில் வதக்கி எடுக்கப்படுவாய்” ——– என பூச்சாண்டி காட்டும் பயங்கரங்கள் இல்லையே.

    \\\நாம் தாலிபானிசம் எது விசாரம் எது என்பதை மறந்து விட்டோம் போல. ரெண்டையும் சரளமாக மிக்ஸ் செய்கிறோம்.\\\

    இந்த பூச்சாண்டி வ்யவஹாரத்தைத் தான் “intolerance” என்று சொல்வது சரியாக இருக்கும் என்பது என் புரிதல். இந்த சமாசாரம் தான் ஆப்ரஹாமிய பூச்சாண்டி மதங்களிலிருந்து பாரதீய தர்சனங்களை வித்யாசமாகக் காண்பிக்கிறது அல்லவா. இந்த விஷயத்தை விட்டு விட்டால் ஒற்றுமைகள் ஒரு புறம் இருக்க வேற்றுமைகளையும் நிரம்பக் கொண்டவை தானே பாரதீய தர்சனங்கள். அதை உள்ளபடி ஏற்பதில் நமக்குத் தயக்கம் இருக்கலாகாது. அப்படியே ஒற்றுமையைக் காணத் தான் வேண்டும் என்றால் ஆப்ரஹாமியத்திலும் கூட ஆங்காங்கு காண இயலுமே.

    \\\\தீவரத்தை நெகுத்துவது என்பது சரியான முறையாக இருக்காது, \\\\\

    ரொம்ப சரி. எதை நெகிழ்த்தலாம் எதை விட்டு விடலாம் என்று பார்த்தால் நல்ல போட்டா போட்டி வந்து ஆகாசம் மட்டும் மிஞ்சும். மற்ற எல்லாமே யாருக்காவது சரியாக இருக்காது விட்டொழித்தால் சரி என்று தோணும். உள்ளது உள்ள படி. ஏற்பவர்கள் ஏற்கலாம். ஏற்காதவர்கள் விட்டு விடலாம். கத்தரிக்கோலை கையிலெடுக்காது இருப்பது சாலச்சிறந்தது. கத்தரிக்கோலை கையிலெடுக்காமலேயே சமன்வயத்திற்கு ப்ரயாசிக்கலாமே.

    அதெல்லாம் சரி,

    \\\\பிற மதத்தை கண்டனம் செய்வது தான் சவ மத ஸ்தாபனம் செய்ய முடியும். \\\\

    எகாதசி மரணம் த்வாதசி தஹனம் விசேஷம் என்று சொல்வார்கள் என ஞாபகம் வந்தது.

    ராம ராம ராம !!!!! ( இன்று ஏகாதசி; ராம நாமம் சொல்லி விட்டேன்) இப்படியெல்லாம் பயமுறுத்தினால் என்ன சொல்வது 🙂

    மண்டையில் நாலு தடவை குட்டிக்கொண்ட பின்னால் தான் ஒரு புள்ளி காயப் ஆனதை கண்டு பிடித்தேன். “ச்வ” என்று இருக்க வேண்டும் தானே. க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண – பயான் முச்யேத பீதஸ்து முச்யே தாபன்ன ஆபத!!!!

    நல்ல வேளை அன்பர் தமிழ் ( ஜோ, திருவாழ் மார்பன் இன்னும் இத்யாதி அஷ்டோத்ராலங்க்ருத / அசங்க்யேய நாமாலங்க்ருத) இதை வாசிக்கவில்லை. வாசித்திருந்தால் வறுத்தெடுத்திருப்பார் உங்களை (என்னையும்). சூஷாசமே சுதினஞ்சமே.

    ஸ்ரீமான் கந்தர்வன் :-

    \\\\‘தீவிர’ வைஷ்ணவர்கள் அல்லாதாரின் தரப்பில் இங்கு சரியான புரிதலுடன் விவாதிப்பது திரு கிருஷ்ணகுமார் அவர்கள் மாத்திரமே.\\\\

    தீர வைஷ்ணவர்கள் மட்டுமல்ல வீர சைவர்கள் – இருவர்களுடைய ஏகாக்ரதையும் எனக்கு மிகவும் ஆதர்சமான விஷயம்.

    அது சரியல்ல என்று கருத்துப் பதியப்படும் போது இரண்டும் சரிதான் என்பது மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கு இவை உள்ளது உள்ள படி போய்ச் சேர வேண்டுமே ஈஸ்வரா என்ற ஆதங்கமும் கூடவே உள்ளது. ஆனால் தமிழகம் வரும்போதும் தமிழ் பேசுபவர்களிடம் பழகும் போதும் என் தலைமுறையை விட எனக்கு அடுத்தடுத்த தலைமுறையில் உள்ளவர்களைப் பார்க்கும் போது அவர்களின் ஆர்ஜவத்தைப் பார்க்கும் போது மிகுந்த நிறைவு. எல்லாம் பகவத் கடாக்ஷம்.

    வாதம் விவாதம் எல்லாம் எனக்கு ரொம்ப தூரம். என்னுடைய புரிதலை பகிர்வதற்கு மட்டும் ப்ரயாசிக்கிறேன்.

    என்னுடைய புரிதல் சரியென்றால் சந்தோஷம். தப்பு என்று சொல்லி திருத்தி விட்டால் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

    ஸ்ரீமான் ஜடாயு :-

    \\\\நான் பூஜைகளிலும், சடங்குகளிலும் விலக்கம் கொண்டவனல்ல. அவற்றை முடிந்த அளவு பக்தி/ சிரத்தை உணர்வோடு செய்துவருபவன் தான்.\\\\

    வ்யாசங்களில் மற்றும் தொடரும் கருத்துப்பரிவர்த்தனங்களில் சடங்குகள் மற்றும் பக்தி இரண்டு விஷயங்களைச் சற்று மாற்றுக்குறைவாகவும் அதன் சாராம்சம் சாராது தவறாக பல அன்பர்களும் விமர்சிப்பதாக உணர்கிறேன். அதைச் சொல்ல வருகையில் ப்ரத்யேகமாக உங்களை கேழ்க்க நேர்ந்தது. க்ஷமிக்கவும், குற்றம் காண்பதாக தவறாக எண்ண வேண்டாம். கருத்துக்கள் பகிரப்படுவது அவசியம். தவறாக இருப்பினும் சரி. தவறுகளை களைவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளதே.

    ஸ்ரீமான் சாய் :-

    \\\\அதே நேரம் பாரம்பரிய மடங்களை பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்ய வேண்டியதும் இல்லை, அவர்கள் சமூக சேவை செய்யவில்லை என்று சொல்ல வேண்டியதும் இல்லை.அது நம் பொது நலனுக்கு உகந்தது அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

    இத்தனை வகை மடங்கள் இல்லா விட்டால் நாம் இன்று இங்கே பேசும் நிலையே இருக்காது. இத்தனை மடங்களும் கடந்த ஆயிரம் ஆண்டுகள் என்னென்னவெல்லாம் தாண்டி இன்றும் இருக்கின்றன என்பதை யோசிக்க வேண்டும்.\\\\

    ரொம்பவும் தெளிவான எளிமையான விளக்கம். நான் வள வளவென ப்ரயாசித்து சொல்ல விரும்பிய விஷயத்தை நறுக்குத் தெரித்தாற் போல சொல்லியுள்ளீர்கள்.

    ஸ்ரீமான் வேதம் கோபால் ஜீ :-

    \\\\\பாரதி விவேகானந்தர் காந்தி அம்பேத்கர் இவர்களது கொள்கைகள் தான் இன்று நாட்டிற்கு தேவை……….. \\\\\\

    மேற்கண்ட வாசகமும் அதைத் தொடர்ந்து தாங்கள் சொன்ன விஷயங்களையும் நான் நினைவில் இருத்துகிறேன்.

    பாரதி விவேகானந்தர் அம்பேத்கர் இவர்களது கொள்கைகள் இன்று நாட்டிற்கு மிகவும் தேவை.

    ஏகாதசியான இன்று நான் மிகவும் மதிக்கும் பூஜ்ய ஸ்ரீ மொராரி பாபு அவர்கள் போற்றும் மஹாத்மா காந்தி அவர்களுடைய ராம பக்தியை ஸ்மரிக்கிறேன்.

    மஹாமனா மாளவீயோ மஹாத்மா காந்திரேவச (ப்ராதஸ்மரணம்)

    சம்ஸ்ம்ருதா அகண்ட பாரத: (ப்ராதஸ்மரணம்)

  30. // இஸ்கான் விவேகானந்தரையும், இராமகிருஷ்ணரையும், ஏன், ஆதி சங்கரரையும், இராமானுஜரையும் கூடத் தான் அவதூறாகக் கூறுகிறார்கள். அது தவறே. ஐயமில்லை. இதற்காக அவர்களுக்கு முன் கடுமையாக நான் வாதாடியிருக்கிறேன்.//

    இந்தச் செயலே நீங்கள் நான் கூறூம் “தீவிரவாத” வரையறைக்கு வெளியில் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது கந்தர்வன் அவர்களே. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    // இந்த மஹான்களெல்லாம் தத்துவ-இறையியல் தளத்தில் உங்களிலிருந்து வேறுபட்டிருப்பதால் அவர்கள் இந்துத்துவத்திற்கு விரோதிகள் போலும்! இராமகிருஷ்ண மட / காந்திய சம்பந்தமல்லாததால் அவர்கள் செய்யும் பணி அற்பமாகிவிடும் போலும்! //

    சம்பந்தம் இருந்தே ஆக வேண்டும் என்று நான் கூறவில்லையே சுவாமி. ஆனால் விலக்கம் இருக்கக் கூடாது என்றே கூறினேன். இது முக்கியம். ஏனென்றால், தீவிர விலக்கம் ஒரு கட்டத்தில் வெறூப்பாகவும் துவேஷ பிரசாரமாகவும் உருமாறி விடும் தன்மை கொண்டது (மேற்கண்ட இஸ்கான் உதாரணம் போல).

    ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அவர்களது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் நான் உரையாற்றியுள்ளேன். அவரது பணிகளை நான் மிகவும் மதிக்கிறேன் என்றே பதிவு செய்துள்ளேன்.

  31. // நீங்கள் சம்பிரதாயங்களை அறவே மறுத்து ஒழிக்கவில்லை, அரவணைத்துத் தான் வருகிறீர்கள் என்றாலும், அவை மீது ஒரு condescending attitude-ஐக் காண்கிறேன்.//
    // இது ஒரு முதிர்ச்சியடைந்த மனதிற்கு அழகல்ல. //

    முதிர்ச்சியடைந்த மனமல்ல, அப்படி நான் கருதமில்லை. கொந்தளிக்கும், ஆர்ப்பரிக்கும், போராடும் மனம் தான். அதை வைத்துக் கொண்டு சத்தியத்தின் சில துளிகளைத் தீண்டிவிடமுடியுமா என்ற நப்பாசையே எனது தேடல்கள்.

    இங்கு ஆதுரத்துடன் மறூமொழியிடும் நண்பர்கள் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த விஷயத்தில் அதிகம் விவாதித்து பயனில்லை, நமது நிலைப்பாடுகள் மாறப் போவதில்லை.

    சம்பிரதாய அமைப்புகள், பாரம்பரியங்கள், மரபார்ந்த செயல்பாடுகள் இவை அனைத்தும் ஒரு பண்பாட்டின் நிலைச் சக்திகள் (conservative forces). அவற்றின் இயல்பு, முக்கிய செயல்பாடு என்பது தக்கவைத்தல் (conserve) என்பதே. ஆனால் ஒரு கட்டத்தில் இந்தக் காரணத்தாலேயே அவை தேங்கி விடும் அபாயம் உள்ளது.

    அழிப்பதற்காக அல்லாமல், ஆக்கபூர்வமாக செய்யப் படும் விமர்சனங்களும், சீர்திருத்தத்திற்கான அறைகூவல்களும், கண்டனங்களும் எல்லாம் அந்தப் பண்பாட்டின் இயங்கு சக்திகள் (dynamic forces). இவற்றின் இயல்பு மறுமலர்ச்சியும், புத்துருவாக்கமுமே அன்றி எல்லாவற்றையும் தக்கவைப்பது அல்ல… அவை ஏற்கனவே இருக்கும் நிலைப்பாடுகளுடன் மோதி, முரண்பட்டே இதைச் செய்யவேண்டும் என்பதால், இது எப்போதுமே எதிர்மறைத் தன்மை கொண்ட ஒரு செயல்பாடு.

    ஒரு ஆரோக்கியமான பண்பாட்டுக்கு இவை இரண்டுமே தேவை. இந்துப் பண்பாட்டின் வரலாறு முழுவதையும் எடுத்துப் பார்த்தால் இது நடந்து கொண்டே வந்திருப்பது உங்களுக்குத் தெரியும்.. இன்றைக்கு நிலைசக்தியின் பிம்பமாக உள்ள சங்கரரும், ராமானுஜரும் அவர்களது காலகட்டத்தில் மாபெரும் இயங்கு சக்திகளாக இருந்து பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார்கள். இத்தகைய விவாதங்களையும் கண்டனங்களையும் அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.

    // இவன் (சம்பிரதாயவாதி) என் பிள்ளை தான், ஆனால் அவ்வப்போது முரண்டு பிடிப்பான். அப்போதெல்லாம் நான் தான் திருத்த வெண்டும். அதுவும் விவாதித்து அல்ல, தலையில் குட்டியும் கண்டித்தும் தான். //

    ஆம். அதில் சந்தேகமே இல்லை :))) இது கடந்த நூறாண்டு கால வரலாற்றில் தெள்ளத் தெளிவாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டிருக்கீறது. உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, குழந்தைத் திருமணத்தை நிறுத்துதல், கோயில்களை தாழ்த்தப் பட்டவர்கள் உட்பட அனைத்து இந்துக்களுக்கும் திறந்து விடுதல், அனைத்து சாதியினருக்கும் இந்து புனித நூல்களை கற்பித்தல் – இதில் ஒரு விஷயத்தைக் கூட எந்த இந்து “சம்பிரதாய” அமைப்பும் தானாக முன்வந்து செய்யவில்லை. இந்த சீர்திருத்தங்கள் தொடங்கிய போது, அவற்றை தீவிரமாக எதிர்த்தன, தங்களது அதிகார செல்வாக்கை வைத்து முடக்க முயன்றன. பிறகு சட்டம் மூலமும், அரசாணைகள் மூலம் அவை நிறைவேற்றப் பட்டதும் வேறு வழியில்லாமல் அவர்கள் இதை *பொது சமூக அளவில்* ஏற்கும்படி ஆயிற்று.. ஆனால் இன்னும் கூட, தங்கள் சம்பிரதாய குறுங்குழுக்களீல், கருத்தளவில், ஏற்கவில்லை என்பதை கவனியுங்கள்.. நான் மேலே பட்டியலிட்ட எல்லா சமூக சீர்கேடுகளையும் நியாயப் படுத்தும் புத்தகங்கள், பிரசுரங்கள் இந்த 2012ம் ஆண்டிலும் சம்பிரதாய அமைப்புகளால் தொடர்ந்து வெளியிடப் படுகின்றன என்பதே தலையில் குட்டுவதற்கான தேவை உள்ளதைக் காட்டுகிறது.. என்ன, விவேகானந்தர் குட்டிய அளவு பலமாக இல்லாமல், மெதுவாக வேண்டுமானால் குட்டலாம் :))

    ”தீவிரத்தை நெகிழ்த்த வேண்டும்” என்றூ நான் கூறூவது ஒரு கருத்து அலையை உருவாக்குகிறது, அவ்வளவே. உடனே, எல்லா சமயப் பிரிவினரும் தங்கள் தீவிரத்தை விட்டுவிடுவார்களா என்ன? அதற்கு சாத்தியமே இல்லை. ஆனால், இந்தக் கருத்து அலையில் உள்ள தர்க்கத்தைப் புரிந்து கொண்டு சில விஷயங்களை சில தளங்களிலாவது அவர்கள் கடைப்பிடிக்க முன்வரலாம் (அயோத்தி ராமஜன்ம பூமி இயக்கத்திற்கு பல்வேறு சைவ மடங்களும் சேர்ந்து ஆதரவு அளித்தது போல.. தீண்டாமைக்கு எதிராக 1965 உடுப்பி வி.ஹி.ப மாநாட்டில் சம்பிரதாய மடங்கள் பிரகடனம் செய்தது போல).

    எனவே நாம் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து கொள்வோம், நம் தரப்புகளை முன்வைப்போம். விவாதிப்போம்..

  32. கிருஷ்ணகுமார் அவர்களே

    \\\\\ஆனாலப்பட்ட சங்கர பகவத் பாதரே ஒரு பூர்வ பக்ஷினையும் சிறிதளவு கூட திட்டியதில்லை. \\\\\

    சங்கரர் யாரையும் திட்டவில்லை என்பது உண்மை தான்.

    //
    ரொம்ப புளகாங்கிதம் அடைந்தேன். ஆகா சங்கரர் மட்டும் தான் யாரையும் திட்டவில்லை என்று. ஆனால் யதார்த்தம் கொஞ்சம் வேறு என்பதை நல்ல படியாக நாசூக்காக சொல்லி விட்டீர்கள்.
    //

    திட்டு (தர்ஜனம்) வேறு கண்டனம் வேறு இல்லையா?. நான் முன்னர் சொல்ல வந்தது சங்கரர் பிற மதங்களை கண்டனம் செய்திருப்பினும் யாரையும் திட்டவில்லை. ஆனால் இந்த கட்டுரையில் அது வருகிறது என்பதை தான்.

    ரெண்டும் வேற வேற சந்தர்பத்தில் சொன்னவை.

    மற்றபடி உங்களுக்கு வ்யன்ஜனம் நன்றாக வருகிறது, கும்பகோணம் பக்கம் வாசம் இருந்ததா

  33. \\\\\ஆனால் இந்த கட்டுரையில் அது வருகிறது என்பதை தான்.

    ரெண்டும் வேற வேற சந்தர்பத்தில் சொன்னவை.\\\\

    ஆம். ஸ்வமத நிர்த்தாரணத்திற்குக் கண்டனம் அவசியமே என்பதையும் பதிவும் செய்துள்ளேன்.

    \\\கும்பகோணம் பக்கம் வாசம் இருந்ததா\\\\

    பூர்விகமில்லை. ஆனால் வாசம் உண்டு. யத்ருச்சையாக இருப்பினும் என்னே எனது பாக்யம். விசாரிக்கப்படும் திவ்யதேசம் திருக்குடந்தை. விசாரிப்பவர் சார்ங்(கபாணி). தினம் த்வாதசி

    ஆராவமுதப் பெருமானும் கோமளவல்லித் தாயார் சன்னதியும் கோவிலில் நுழைகையில் பார்த்த திருவெழுகூற்றிருக்கையும் நினைவில் வருகிறது.

    கூடவே துளசிவனத்தில் உறையும் ஒப்பிலா அப்பனான என்னப்பன், பொன்னப்பன், முத்தப்பன், மணியப்பனும்.

    திருவெழுகூற்றிருக்கை என்று சொன்ன படி ஸ்வாமிநாத ஸ்வாமி கோவிலில் பார்த்த திருவெழுகூற்றிருக்கையும் ஆரா அமுதாக நினைவில் வருகிறது.

    இப்படி எல்லோரும் கூப்பிட்டு என்னை நினை நினை என்று கூறுகையில் மனது உருகாதா. உசிதமாக மனதில் வரும் திருப்புகழ்

    வாவாவென வாவென் றழைத்து
    வானோர் பரிதாபந் தவிர்த்த பெருமாளே.

    நீநானற வேறின்றி நிற்க நியமாக

    நீவாவென நீயிங் கழைத்து பாராவரவாநந்த சித்தி
    நேரேபர மாநந்த முத்தி தரவேணும்

    நீ நானற வேறின்றி அத்விதீயமான அத்வைத பரமானந்த முக்தியை எங்கள் வள்ளல் பெருமான் சொல்கிறாரே

    \\\\மற்றபடி உங்களுக்கு வ்யன்ஜனம் நன்றாக வருகிறது, \\\

    அமாமாம்.

    ஆனால் இப்படி ஆரா அமுதான வ்யன்ஜனம்

    நீங்கள் படைத்து எனக்குக் கண்டருளியது.

  34. ஸ்ரீ கிருஷ்ணகுமார் அவர்களுக்கு

    தினமும் எவ்வளவோ அக்கப்போர்களை இங்கே விவாதிக்கிறோம். களைத்தும் போகிறோம் .உதாரணம் இந்த சமீபத்திய ‘மகா கலைஞனின்” மகா சினிமா படம் போல.
    இதற்கிடையில் இங்குள்ளோருக்கு இனிய மறுமொழிகள் மூலம் பால் பாயசம் பரிமாற வேண்டும் என்று தங்களுக்கு தோன்றுவது தெய்வ சங்கல்பம் தான். வெள்ளிக்கிழமை விருந்துக்கு மிக்க நன்றி.
    தாங்கள் நேரம் கிடைக்கும் பொது திருப்புகழ் பற்றி மற்றும் மற்ற தமிழ் பக்தி இலக்கியங்கள் பற்றி இங்கே எழுதினால் நன்றாக இருக்கும்.

    சாய்

  35. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு சுவாமிவிவேகானந்தர் ;அக்காலத்தில் சேரிகளை தன் தலைமுடியால் கூட்டி சமூகப்புரட்சி செய்த குருதேவர் எனும் டைனமோ வழங்கிய மின்சாரம் சுவாமிஜி.புரட்சிக்காரர் வழங்கிய புரட்சிக்காரர் விவேகானந்தர்.உங்கள் விவாதங்களுக்கு நமஸ்காரங்கள்.வாழ்க சுவாமிஜி!
    சோமுசார்.

  36. மொத்தத்தில் அற்புதமான பட்டிமன்றம். அருமையான ஆக்கப்புா்வமான விவாதம். கலந்து கொண்ட அனைவரையும் பாராட்ட வேண்டும். இந்நாள் வரை எனது கவனத்தை இந்த அருமையான பகுதி எட்டாதது எனது துா்அதிா்ஷ்டமோ?
    பாரதியாா் இந்தியா்களை இந்துக்களை குறித்து சொல்லும் போது ” ஒட்டகத்திற்கு ஒரு பக்கமா கோணல் ” என்று கூறியுள்ளாா்.விவேகானந்தா் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு இந்து சமூகம் உருவாக வேண்டும் என்று விரும்பினாா்.ஆகவே உட்கட்சி குத்துக்களை சற்று கண்டித்தாா்.எனக்கு காஞ்சி பொியவா் மீது பொிய அபிமானம் இன்றும் உண்டு.ஆனால் அனைத்து சாதி மக்களுக்கும் திருக்கோவில்களை திறந்து விடுவதற்கு பொியவாள் எதிா்ப்பு தொிவித்தது காலத்தின் ஒட்டத்தை கணிப்பதில் பொியவருக்கு தோல்வி என்றே முடிவு செய்துள்ளேன். காயத்திாி மந்திரத்தை புணுால் அணிந்தவன் தான் ஜெபிக்க வேண்டும் என்று ஜெயேந்திரா் ஞானபுமிக்கு பேட்டி அளித்தபோது பொிதும் மனம் வருந்தினே். முறைான சமய கல்வி பயிற்சி இன்றும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு தேவார பாடல் கற்றவா்கள் எத்தனை போ்? பத்து நிமிடம் பத்மாசனத்தில் அமைதியாகவோ ஒரு மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கக் கூடியவா்கள்ட எத்தனைபோ்களள் ?இன்று கிறிஸ்தவா்களின் ஜனத்தொகை 3 கோடிக்கு மேல்.முஸ்லீம்களின் ஜனத்தொகை 17 கோடிக்கு மேல். இத்தனை சீரழிவுக்கும் இழப்பிற்கும் அன்று இருந்த சமயத் தலைவா்கள்தான் காரணம்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குனோிக்கு செல்லும் போதெல்லாம் உயா்ந்த கிறிஸ்தவ சா்ச் களை அங்கு பாா்க்கும் போது ஜியா் சுவாமிகள் மீது வருத்தம் வரத்தான் செய்கின்றது.குறை சொல்லி விமா்சனம் செய்து ஆறுதல் அடைந்ததுண்டு.இனி வருங்காலத்தில் அனைத்து மடங்களும் இந்து என்ற பொரு பண்பாட்டுத்தளத்திற்கு வரவேண்டும்.

    அது காலத்தின் அறைகூவல்.

    இன்று பிறாமணா்கள் திருமணத்திற்கு வரன் பாா்க்கும் போது பிறாமண பிாிவில் எந்த பிாிவாக இருந்தாலும் சம்மதம் என்று தொிவிப்பதைப் பாா்க்கும் போது தீவிர சைவ வைணவ உணா்வுகள் மாறி வருகின்றது என்பது விளங்குகின்றது. இன்று எல்லா சாதியிலும் உட்பிாிவுகள் மறைந்து விட்டன.மங்கி வருகின்றது.
    சைவ மதத்தின் முழு முதல் கடவுளை பாிவார தேவதை என்ற கருத்தை யாா் சொன்னாலும் என்னால் எற்க இயலாது.அதுபோல் விஷ்ணுவை குறித்த எந்த விமா்சனனத்தையும் நான் ஏற்பதில்லை.அதே வேளையில் வள்ளலாா் உருவாக்கிய அருட்.பெருஞ்சோதி அகவலையும் வழிபாட்டையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
    59 சிலைகளை வணங்கி பணத்தையும் மனித வளத்தையும் விரயமாக்கிக் கொண்டிருந்த ஈழவ மக்களை திருத்தி 58 சிலைகளை உடைக்க வைத்து ஒரு சிலை ஒரு விளக்கு ஒரு படையில் என்று ஈழக மக்களை உயா்த்திய ஸ்ரீநாராயணகுருவையும் நான் பொிதும் போற்றுகின்றேன்.

    இன்று ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் ”அந்தா் யோகம்” என்ற நிகழ்ச்சியை தொடா்ந்து நடத்தி மக்களை அறவழியயில் ஈடு படுத்தி வருவது எல்லா மடாதிபதிகளுக்கும் ஒரு முன் உதாரணம்.

    மாடாதிபதிகள் மக்கள் தங்களை கொண்டாட வேண்டும் வணங்கி புஜிக்க வேண்டும் என்ற நினைப்பில் பல சமூக பொறுப்புக்களை மறந்து விட்டாா்கள்.இந்து என்ற பொது உணா்வுக்கு ஒவ்வொருவரும் தங்களது சம்பிராதயம் சாா்ந்து சில விசயங்களை மாற்றிட விட்டுக் கொடுத்திட கண்டிப்பாக வந்தே தீர வேண்டும். இல்லையேல் செல்லாக்காசு ஆக சமூகம்தள்ளி விடும்.இன்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு இருக்கும் மாியாதை பல பாரம்பாிய மடங்களுக்கு இல்லை. தகுதி குறைந்து போனது.

  37. காஞசி சங்கராச்சாாிய சுவாமிகள் ” ஜகத்குரு ” என்று பட்டம் போட்டுக் கொள்ளக்கூடாது என்று சென்னை உயா் நீதி மன்றத்தில் திரு.ராஜேந்நிரன் என்ற வக்கில் வழக்கு தொடா்ந்தாா். திரு.ராஜேந்திரன் சிருங்கோி சங்கராச்சாிய சுவாமிகளின் பக்தா்.ஆதி சங்கரா் 4 மடங்களை மட்டும் உருவாக்கினாா். காஞ்சி மடத்தை சீடா்கள்தான் உருவாக்கினாா்கள். எனவே சீடா்களால் ஸ்தாபிக்கப்பட்ட காஞ்சி மடத்தின் தலைமை நிா்வாகிக்கு ஜகத்குருஎன்று பட்டம் போட்டுக் கொள்ள அதிகாரம் கிடையாதுஎன்று வழக்கு போட்டாா்.வழக்கு நீதியரசா் திரு.மோகன்ன அவா்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த 4 மடாதிபதிகளும் ராமகிருஷண மடத்துதுறவிகை தங்களுக்கு சமமானவா்களாக நடத்துவதில்லை.

  38. /*** காஞசி சங்கராச்சாாிய சுவாமிகள் ” ஜகத்குரு ” என்று பட்டம் போட்டுக் கொள்ளக்கூடாது***/
    ஒரு நேர்காணலில் ,ஜக்கி வாசுதேவ் ,தன்னை எல்லோரும் “ஜகத்குரு” என்று தான் அழைக்க வேண்டும் என அழிச்சாட்டியம் செய்தார் . யாரோ ஒரு கார்பொரேட் சாமியாரான ஜக்கியை “ஜகத்குரு” என்று அழைக்கலாம் ! !ஆனால் காஞ்சி ஸ்வாமிகளை “ஜகத்குரு” என்று அழைத்தால் என்ன கெடுதல் வந்துவிடும்.

    /***
    இந்த 4 மடாதிபதிகளும் ராமகிருஷண மடத்துதுறவிகை தங்களுக்கு சமமானவா்களாக நடத்துவதில்லை.
    ***/
    சங்கராச்சாரியர்கள் யாவருமே 7 வயதில் உபநயனம் செய்து பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திற்கு செல்கின்றனர் .

    உபநயனம் என்ற பூர்வாங்கத்திற்கும் ஸமாவர்த்தனம் என்கிற உத்தராங்கத்திற்கும் நடுவில் நான்கு வ்ரதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நம்முடைய தக்ஷிண தேசத்தில் பெரும்பாலும் அநுஷ்டானத்திலுள்ள க்ருஷ்ண யஜுர் வேதத்தை எடுத்துக் கொண்டால், அவை பிராஜபத்யம், ஸெளம்யம், ஆக்னேயம், வைச்வதேவம் என்பவை.

    12 வருட அத்யயனத்திற்கு பிறகு ஸமாவர்த்தனம் செய்துகொண்டு நைஷ்டிக ப்ரம்மச்சாரியாகி ,பின்பு நேராக சன்யாசி ஆகின்றனர் .

    இவர்களும் ராம க்ருஷ்ண மடம் அல்லது ராம க்ருஷ்ண தபோவன சன்யாசிகளும் ஒன்றா ?

    யார்வேண்டுமாயினும் காவி உடை உடுத்தலாம் .அதற்காக அவர்களும் ,12 வருடம் உபாகர்மா/உத்ஸர்ஜனம் செய்து ,தனது வேத சாகையையும், சதுர்தச வித்யைகளில், மற்றவற்றையும் பன்னிரண்டு வருஷ குருகுல வாஸத்தில் கற்றுத் தேறிய வைதீக சன்யாசிகளும் ஒன்றாகி விட முடியுமா ?

    நானும் வைஸ்ய குலத்தை சேர்ந்தவன் தான் .ஆனாலும் எனக்கு வைதீக ஸம்ஸ்காரங்களிலோ ,ப்ராம்மணர்களிடமோ எந்த துவேஷமும் இல்லை .நானும் க்ஷத்ரிய ,பிராம்மண குலத்தால் தீண்டத்தகாதவன் தான்.

    அதற்காக -“சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் ” என்னும் பகவத் கீதையையில் வரும் கண்ணனின் வரிகளையோ ,அல்லது “அர்திதோ மானுஷே லோகே ஐஞ்ஞே விஷ்ணு ஸநாதன: ” -அதாவது ஸநாதன தர்மமே விஷ்ணு ,அவனே ராமனாக அவதரித்தான் என்ற இராமாயண வரிகளையோ வெறுக்க முடியுமா .

    நான் பிறந்தது என் கர்ம மடியாலே தான் .

    தமிழ் இலக்கியத்திலே “அவையடக்கம் ” என்று ஒரு குணமுண்டு. அதையே நைச்சியாநுஸந்தானம் என்பர் சனாதனிகள். நாம் நமது குறைகளை சொல்லிக் கொள்ளலாமே ஒழிய ,நமது நிறைகளை பிறர்தான் சொல்ல வேண்டும்.

    கம்யூனிஸ்ட்களைப் போல உரிமைகளை பற்றி கூவுமுன் ,நமது கடமைகளை பற்றி சிந்திக்க தவறுகின்றோம்.
    நமது யோக்யதைகளை நினைக்க தவறுகின்றோம்.

    திருகுறுங்குடி கோயிலில் ,நம்பாடுவான் என்று ஒரு பக்தர். அவர் பாணர் இனத்தைச் சேர்ந்தவர் . அவர் கோயிலுக்கு உள்ளே சென்றது இல்லை . வெளியே இருந்தே திருப்பள்ளியெழுச்சி பாடுவது வழக்கம் . பகவான் அவருக்காக த்வஜ ஸ்தம்பத்தையும் ,பலி பீடத்தையும் தள்ளி இருக்கச் செய்தார். நானும் அடுத்த பிறவியில் பாணர் குலத்தில் பிறக்கிறேன் என்று வையுங்கள். அதற்காக நானும் நம்பாடுவான், ஆகி விடுவேனா ?

    அவர் எங்கே !! நான் எங்கே ? அவர் ஒரு EXCEPTION case. நான் GENERAL case.
    காஞ்சிபுரத்தில் வரதர் ,திருக்கச்சி நம்பிகளிடம் தினமும் பேசுவார்.
    நானும் அவர் குலம் தான் . அதற்காக என்னிடமும் , வரதர் பேசுவாரா? என் பக்தியின் அளவு (யோக்கியதை ) எனக்கு தெரியும் .
    வரதர் என்னிடம் கனவில் கூட பேச மாட்டார் .

    வைதீக ஸாஸ்த்ரங்களையும் ,வேதத்தையும் பரிகசிப்பதை முதலில் விடுங்கள் .
    அவைகளும் பகவானும் வேறு வேறு அல்ல.

    அது பகவத் அபச்சாரம் .ரிஷிகளையும் பெரியவர்களையும் பழிப்பது பாகவதாபசாரம் ஆகும் .

    ஸம்ஸ்காரங்கள் என்றால் (ஸம் = நன்றாக) +(க்ருத: =செய்யப்பட்டது).
    அதாவது இந்த ஆத்மா கடைத்தேறுவதற்காக செய்யப்படும் செயல்கள் .

    அவை நமது ஹிதத்திற்காக பகவானே ரிஷிகள் வழியாகச் சொன்னது .

    யாரோ பெரும்பாலானவர்கள் செய்யும் தவற்றிற்காக ஸாஸ்திரங்களை இகழ்வதா ?
    விரல் தவறுதலாக கண்ணைக் குத்தி விட்டால் ,கையை வெட்டுவதா ?

    இன்பம் -துன்பம் ,புகழ்ச்சி -இகழ்ச்சி ,வாழ்வு -தாழ்வு ,மழை -வெயில் இவையனைத்தும் உடலுக்கே/மனத்திற்கே .
    ஆத்மாவுக்கல்ல .

    இதை உணர்ந்தவன் மெய்ஞானி .

  39. கெனேசு ஐயா
    சங்கராச்சாரியா் உயா்ந்தவா் என்று ஒங்கி அறிவித்து தங்களது முட்டாள்தனத்தை பகிரங்கப்படுத்தியுள்ளீா்கள். கதிரவனுக்கு எந்த அறிவிலியும் சான்று கொடுத்து அது பிரகாசிப்பதில்லை.

    இராமகிருஷ“ண மடத்து துறவிகளுக்கு சமமாக சங்கர மடத்திலும் துறவிகள் துறவொழுக்கத்தில் சிறந்து விளங்கலாம் என்பதுதான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *