ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 6

“சத்தியம் என்பது, மேதகு மன்னரே, தன்னொப்பில்லாத தனி ஒன்றாகும். மனிதன் ஒரு சத்தியத்திலிருந்து மற்றொன்றுக்குப் பயணம் செய்தபடி இருக்கிறான், ஒரு பிழையிலிருந்து சத்தியத்தை நோக்கி அல்ல”

–விவேகானந்தர், கேத்திரி மகாராஜா அஜீத்சிங் ‘சத்தியம் என்றால் என்ன?’ என்று கேட்டபோது.

நரேனின் சமயோசிதம்

இருந்தபோதே நரேன் விடுமுறை நாட்களில் மற்ற தோழர்களை எங்காவது அழைத்துச் செல்வது வழக்கம். இப்படித்தான் ஒரு நாள் ‘நவாப் மிருகக் காட்சி சாலை’க்குப் புறப்பட்டது வாண்டுகள் பட்டாளம். கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் இருந்த அதற்குப் போக ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது.

மாலையில் திரும்பி வரும்போது படகின் ஆட்டமோ, மதிய உணவின் வேலையோ தெரியவில்லை ஒரு பையனுக்கு வாந்தி எடுக்கத் தொடங்கியது. படகோட்டி கோபமடைந்தார். “வாந்தி எடுத்ததை நீங்கள்தான் சுத்தம் செய்யவேண்டும்” என்று வற்புறுத்தினார். “இல்லையென்றால் இரண்டு பங்கு கூலி கொடு” என்று மிரட்டினார்.

செய்ய மறுத்தனர் சிறுவர். கரை வந்தது. பிள்ளைகளை இறங்கவிடாமல் தடுத்ததோடு மிரட்டவும் செய்தார் படகோட்டி. இது நடந்துகொண்டிருக்கும்போதே திடீரென்று தண்ணீரில் குதித்துக் கரைக்கு நீந்தினான் நரேன்.

கரையில் இரண்டு வெள்ளைக்காரச் சிப்பாய்கள் இருந்தனர். தன்னுடைய ஓட்டை ஆங்கிலத்தில் அவர்களுக்கு நடந்ததை விவரிக்க அவர்கள் புரிந்துகொண்டனர். தனது சிறிய கையால் அவர்களது கையைப் பிடித்து இழுத்து வந்தான் நரேன். படகோட்டியைப் பார்த்துச் சிறுவர்களை உடனடியாக விடுவிக்கச் சொல்லினர் சிப்பாய்கள்.

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் – ஊர்ச்
சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்
துப்பாக்கி கொண்டு ஒருவன் – வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டில் ஒளிப்பார்

என்று பாரதி வர்ணித்தது நினைவிருக்கலாம். ஆகவே சிப்பாய்களைக் கண்டதும் நடுங்கினார் படகோட்டி. பறந்தனர் சிறுவர்கள். நரேனைப் பிடித்துவிட்டது சிப்பாய்களுக்கு. தாம் ஒரு நாடக அரங்குக்குச் செல்வதாகவும் உடன் வரலாம் என்று சொல்லி அழைத்தனர். அவர்களது உதவிக்கும் அழைப்புக்கும் நன்றி கூறி நண்பர்களோடு சென்றான் நரேன்.

நரேனின் சமயோசித புத்தி, அஞ்சாமை இவற்றோடு அவனுடைய நீச்சல் திறமையும் அவனுக்குக் கைகொடுத்தது இந்த நேரத்தில். ஒரு கண்காட்சியில் மல்யுத்தம் செய்து முதல்பரிசு வாங்கியதுண்டு. அவனுக்குச் சிலம்பம், கத்திச் சண்டை, படகு விடுதல், இசை, சமையல், கவிதை எழுதுதல் என்ற பலவற்றிலும் தேர்ச்சி இருந்தது.

நரேன் ஒரு சாதாரணப் பிறவியல்ல என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினார். சந்தேகமுண்டா?

முந்தைய பகுதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *